skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Friday, August 31, 2007

நல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா

நல்லை நகர்க் கந்தனைப் பற்றிச் சொல்லும் போது நல்லை நகர் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து எழுதமுடியாத அளவிற்கு இவரின் பந்தம் இருக்கின்றது. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணக்க அவர் விரும்பினார்.

ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டில்
யாழ்ப்பாணத்துச் சைவசமயிகளே என்று விளித்து எழுதப்பட்ட குறிப்புக்களில் சில பாகங்களின் முக்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகின்றேன்.

குறிப்பு 4. இவ்யாழ்ப்பாணத்திலே முக்கியமாகிய கோயில் நல்லூர்க்கந்தசுவாமி கோயிலிலே நீங்கள் உங்கள் வழிபாட்டை அங்கே செய்கின்றீர்கள். உங்கள் பொருளை மிகுதியாக அங்கே செலவழிக்கின்றீர்கள். அக்கோயிலும், அங்கே நடக்கும் பூசை திருவிழா முதலியனவும் சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் முழு விரோதம். அவ்வாகம விரோதங்களையே மற்றைய கோயில்களுக்கும் நீங்கள் பிரமாணமாகக் கொள்ளுகின்றீர்கள்.

குறிப்பு 7
இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயில். இங்கிருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை வேலாயுதம்.
கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா?
அது அவர் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை அவ்வுண்மை.

குறிப்பு 10
எந்தக் கோயிலுக்கும் சண்டேசுரர் கோயில் வேண்டுமே இங்கே சண்டேசுரர் கோயில் இருக்கின்றதா?

குறிப்பு 11
வைரவர் கோயில் இருக்க வேண்டிய தானம் எது? வைரவர் எந்தத் திக்குமுகமாகப் பிரதிஷ்டை செய்யப்படல் வேண்டும்? வைரவர் பொருட்டு விக்கிரகம் தாபியாது சூலாயுதந் தாபிக்க விதி என்னை?

குறிப்பு 12
இக்கோயிலார் விக்னேசுர விக்கிரகம் தாபித்தது என்னையோ?
சுப்பிரமணியர் பொருட்டு அவர்கை வேலாயுதமும், வைரவர் பொருட்டு அவர்கைச் சூலாயுதமும் தாபித்துவிட்ட தம்முன்னோர் கருத்துக்கொப்ப, இவரும் விக்னேசுரர் பொருட்டு அவர் கைத்தோட்டு தாபித்து விடலாமே?

குறிப்பு 14
சுப்பிரமணிய சுவாமிக்கு மகோற்சவம் மூன்று நாள், ஐந்து நாள், ஏழு நாள், ஒன்பது நாள், பன்னிரண்டு நாள் நடத்துக என்று குமார தந்திரம் விதித்திருக்க இங்கே இருபத்து நான்கு நாள் மகோறசவம் நடத்துவதென்னையோ?

இவ்வாறாகத் தன் முதற்பத்திரிகை வேண்டுகோளை ஆறுமுக நாவலர், யுக வருசம் ஆடிமாதம் 1875 ஆம் ஆண்டு முன் வைக்கின்றார்.

தொடர்ந்து இவரால் நல்லூர்க் கந்தசாமி கோயில் குறித்து இரண்டாம் பத்திரிகையும் முப்பத்தேழு குறிப்புக்களுடன் வெளியிடப்படுகின்றது.

கி.பி 1873 இல் கந்தையா மாப்பாணர் அதிகாரியாக இருந்த காலத்தில் ஆறுமுக நாவலர் அவர்கள் அக்கோயிற் திருப்பணியைக் கருங்கல்லாற் கட்டும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு 6000 வரையில் பணமும் கையொப்பமுஞ் சேர்த்தார். ரூ 3000 வரைடயிற் செலவு செய்து கருங்கற்களும் எடுக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து முருகன், வள்ளி, தெய்வயானை விக்கிரகங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் இடையில் நடந்த மாற்றங்களால் அவ்விக்கிரகங்கள் நல்லையில் இடம்பெறாமல், தென்மராட்சி விடற்றற்பளை வயற்கரைக் கந்தசுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மேலும் தேர்திருவிழாவுக்கு முதல்நாள் செய்து வரும் ஆட்டுக் கொலையைச் செய்யமாட்டோம் என்ற வாக்கினை மீறிச் செயற்பட்டமையால் 1876 ஆம் ஆண்டு அம்மேலதிகாரியை விலக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. அது விளக்கத்துக்கு வருமுன் நாவலரவர்கள் தேவகவியோகமாயினார்.

இந்தக் குறிப்புக்களின் பிரகாரம் நாவலருக்கும் மாப்பாணர்களுக்கும் விரோதம் இருந்துள்ளதை அறியமுடிகின்றது. ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருடகாலம் நாவலர் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்திருக்கின்றார்.

கி.பி 1248 ஆம் ஆண்டிற் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில், சைவ மக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ்மக்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பல நூறு ஆண்டுகளாக விளங்கி வருகின்றது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாயிரமாண்டுகள் நீண்டபாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.

வரலாற்றுக் குறிப்புக்கள் மூலம்:
1. "ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு", மூன்றாம் பதிபின் மீள் பிரசுரம் மார்கழி 1996 - தொகுப்பாசிரியர் நல்லூர் த.கைலாசபிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

புகைப்பட உதவி: http://www.vajee4u.com/
Posted by கானா பிரபா at 7:17 AM 8 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, August 30, 2007

பிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா

இலங்கையில் பெரும்பாகங்களில் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி ஒல்லாந்தர் ஆளுகை நடாத்தி வருகையில் 1795 ஆம் ஆண்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேசாதிபதியாகவிருந்த Lord Oobart என்பவர் Genaral Steward என்ற சேனாதிபதியை இலங்கைக்கு அனுப்பினார். படைகளுடன் சென்ற ஜெனரல் ஸ்துவார்ட் திருகோணமலையை வளைந்து மூன்று வாரமாகக் காவல் செய்து ஈற்றில் கைப்பற்றினான். அடுத்த 1796 ஆம் ஆண்டு நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களும் பிரித்தானியர் ஆளுகைக்குச் செல்கின்றது.

இவ்வாறே ஒல்லாந்தர் 138 வருடமாகக் கட்டியாண்டு வந்த கரைத்துறை நாடுகள் எல்லாம் ஒருங்கே ஆங்கிலேயர் கைக்கு மாறுகின்றது.

அப்பால் அவன் Genaral Steward ஒரு படையோடு யாழ்ப்பாணம் சென்று அதனையும் எதிர்ப்பாராருமின்றிக் கவர்ந்தான்.

குடிகளும் தத்தமது வருணாசாரத்தையும், சமயாசாரத்தையும் சுயேற்சையாகக் கைக்கொண்டு ஒழுகும் சுயாதீனம் ஆங்கிலவரசால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முன்னர் போலல்லாது கொட்டில் போல இலைமறைவிற் கிடந்த கோயில்களெல்லாம் வெளிப்படத் தொடங்கின.

அக்காலவேளையில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் அர்ச்சகராக, கிருஷ்ணையர் சுப்பையரின் பேரர் சுப்பையர் என்ற வால சுப்பிரமணிய ஐயர் இருந்தார். ஆலயத் தர்மகர்த்தாவாக ஆறுமுக மாப்பாண முதலியார் இருந்தார்.

கந்தசுவாமி கோயில் ஆலய நிர்வாகத்தில், பிரதம அர்ச்சகர் சுப்பையருக்கும், தர்மகர்த்தா ஆறுமுக மாப்பாணருக்கும் இடையில் பிரச்சனைகள் முதன்முதலாகத் தோன்றின. ஆலய நிதியைத் தனது சுயதேவைகளுக்காக ஆறுமுக மாப்பாணர் பயன்படுத்துவதாக வழக்கு ஒன்று சுப்பையரால் தாக்கல் செய்யப்பட்டது. பிரதம நீதியரசர் சேர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரன் என்பவர் விசாரித்துத் தனது தீர்ப்பில் "ஆலய நிர்வாகத்தை இருவரும் இணைந்தே நிர்வகிக்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பு ஆறுமுக மாப்பாண முதலியாருக்குத் திருப்தியைக் கொடுக்காது போகவே 1809 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்குப் பெட்டிசம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அப்பெட்டிசம் 1811 ஆம் ஆண்டு கறிங்டன் யாழ்ப்பாணக் கலெக்டரால் விசாரணை செய்யப்பட்டு, மாப்பாண முதலியாரின் தகப்பனாரே இக்கோயிலைக் கட்ட முக்கிய காரணராகவிருந்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்டு குருக்களிடம் இருந்த பண்டகசாலையின் ஒரு திறப்பு மீளப்பெறப்பட்டு மாப்பாணரிடம் கையளிக்கப்பட்டது. எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உரிமையை இழந்தனர். மாப்பாண குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றனர்.

இன்றைய மந்திரி மனைக்குள் கறையான் புற்று


உசாவ உதவியது:
ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
புகைப்படம்:
1. கறுப்பு வெள்ளை: www.postmancard.net

2. மந்திரிமனைக்குள் கறையான் புற்று: ஊடகவியலாளர் துஷ்யந்தி கனகசபாபதிப் பிள்ளை
Posted by கானா பிரபா at 8:35 PM 4 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, August 29, 2007

குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா


சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் முதன் மந்திரியாகவிருந்த புவனேகபாகு முதன் முதலில் அமைத்த கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் மீளவும் ஆலயம் அமைக்க கிருஷ்ண சுப்பையர் விண்ணப்பித்தார். அதற்கு ஒல்லாந்தர் ஆட்சிககாலத்தில் சிறாப்பராகவிருந்த தொன்யுவான் மாப்பாண முதலியார் தமது பதவி காரணமான செல்வாக்கைப் பயன்படுத்தி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீண்டும் கட்டுவதற்கு உத்தரவு பெற்றார் என்று குலசபாநாதன் தனது நூலில் குறிப்பிடுகின்றார். ஒல்லாந்த ஆட்சியாளர்களை இதனை அனுமதிக்க இரண்டு காரணங்கள் இருந்துள்ளன என ஊகிக்கலாம்.
ஒன்று,
கிறீஸ்தவ தேவாலயத்துக்கு அருகிலிருக்கும் கந்த மடாலயத்தை அவ்விடத்தினின்றும் அகற்றும் நோக்கம்
இரண்டு,
தமது வர்த்தகப் போட்டியாளராகவிருந்த முஸ்லீம்களைக் குருக்கள் வளவிலிருந்தும் அகற்றும் நோக்கம்.


நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை மீள நிறுவுவதில் கிருஷ்ண சுப்பையரும் இரகுநாத மாப்பாண முதலியாரும் முனைப்பாகவிருந்து ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டினர். கோயிலை மீள அமைப்பதற்குரிய குருக்கள் வளவில் முஸ்லீம்கள் அப்போது குடியிருந்தார்கள்.

அந்நிலத்திற்குப் பெரும் விலை தருவதாகச் சொல்லி முஸ்லீம்களை இறஞ்சியபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்றுவிட்டு, நாவாந்துறைக்குக் கிழக்கேயுள்ள இடத்தை வாங்கிக்கொண்டு அங்கே குடியேறினார்கள் என்று ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை தன் யாழ்ப்பாணச் சரித்திரத்தில் குறிப்பிடுகின்றார்.


Origin/Meaning:
The arms show the very typical Palmyra palm, an important tree for the local economy at the time. A Tamil poem describes the 801 uses of the tree... The helmet was also used by the city of Jaffna and indicates that these cities were of high importance to the colony (after Colombo).
When the above arms were adopted is not known. The above image dates from a manuscript dating from 1717/1720.

இந்த டச்சுக்காலத்து (ஒல்லாந்து) இலட்சணையின் தமிழ் விளக்கம் யாதெனில்
இது யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முக்கிய உள்நாட்டு வருவாயைத் தரக்கூடிய பனைமரம் தாங்கியது. ஒரு தமிழ்ப்பாடலின் படி இந்த மரத்தின் மூலம் 801 வகையான பயன்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விலட்சணையில் பொருந்தியிருக்கும் தலைப்பாகை, கொழும்புப் பிரதேசத்துக்கு ( கோட்டை இராச்சியம்) அடுத்து யாழ்ப்ப்பாணப் பிரதேசம் காலணித்துவ ஆட்சியில் முக்கியமானதொரு இடத்தை வகித்திருப்பதைக் குறிக்கின்றது. இவ்விலட்சணையின் பகுதிகள் எப்போது அறிமுகப்படுப்படுத்தப்பட்டது என்ற விளக்கம் அறியப்படவில்லை. இவ்விலட்சணை 1717/1720 காலப்பகுதியில் பதியப்பட்ட எழுத்துப் பிரதியில் எடுக்கப்பட்டது.

நான்காவது தடவையாக அமைக்கப்பட்ட ஆலயம் அவ்விடத்தில் அமைந்திருந்த யோகியாரின் சமாதிக்கு அருகில் நிறுவப்பட்டது. யோகியாரின் பெயர் சிக்கிந்தர் என்பர், இவரை அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும் போற்றினர். இரு மத மக்களும் அவரை வழிபட்டனர். போர்த்துக்கேயருக்கும், தமிழ்ப்படை வீரர்களுக்கும் குருக்கள் வளவில் நிகழ்ந்த யுத்தத்தில் இவர் இறக்க நேர்ந்தது. குருக்கள் வளவுச் சுற்றாடலில் அக்காலத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் அந்த யோகியாருக்கு ஒரு சமாதி கட்டி வழிபட்டனர். மீள அமைக்கப்பட்ட கோயிலின் உள்வீதியில் இச்சமாதி அகப்பட்டபடியால் சமாதியை வழிபட முஸ்லீம்கள் அனுமதி கேட்டார்கள். அவர்கள் கலகம் செய்யாதிருக்கக் கோயிலின் மேற்கு வீதியில் வாயில் வைத்து அவர்கள் வணங்கிவர இடம் கொடுத்தனர்.இதற்குச் சாட்சியாக இவ்வாயிற் கதவு இன்றுமுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியில் ஆலயத் திருப்பணி நிறைவேற்றப்பட்டு இரகுநாத மாப்பாண முதலியாரின் நிர்வாகத்தில் கிருஷ்ணையர் சுப்பரே அக்கோயிலின் முதற் பூசகராகவிருந்து ஆலயக் கிரியைகளை ஆச்சாரத்தோடு நடாத்திவந்தார்கள்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.

திருவிழாக்காலங்களில், கந்தசுவாமி கோயிலின் ஒரு தாபகராகிய புவனேகபாகுவின் பெயரை முன்னும், இக்கோயிற் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியாரைப் பின்னும் கட்டியத்தில் கூறிவருகின்றார்கள்.

"சிறீமான் மகாராஜாதிராஜ
அகண்ட பூமண்டல
ரத்தியதிகிந்த விஸ்ராந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகா வல்லி
ஸமேத சிறீ சுப்ரிமண்ய
பாதாரவிந்த ஜாந்திருட
சிவகோத்திரேற்பவஹா
இரகுநாத மாப்பாண
முதலியார் சமூகா"

உசாவியது: "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம்
Posted by கானா பிரபா at 7:56 AM 15 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, August 28, 2007

கந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா


From "Peninsula Indiae citra Gangem, hoc est Orae Celeberrimae Malabar & Coromandel. Cum Adjacente Insula non Minus Celebratissima Ceylon," by Homann Heirs, 1733

முத்திரைச் சந்தியில் சிறீ சங்கபோதி புவனேகபாகுவினால் குருக்கள் வளவில் அழிக்கப்பட்டு முத்திரைச் சந்தையில் அமைத்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின் 1621 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி, இருந்தவிடம் தெரியாமல் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டு, கத்தோலிக்க கிறீஸ்தவ தேவாலயம் நிறுவப்படுகின்றது.

போர்த்துக்கேயரின் ஆட்சி இலங்கையில் நிலவி வரும் காலத்தில் ஒல்லாந்தரின் வருகை இவர்களுக்குக் கேடுகாலமாகின்றது. இலங்கை அரசனோடு ஒப்பந்தம் செய்து கொட்டியாரத்தில் ஒல்லாந்தர் கோட்டை கட்டப்படுகின்றது.
பின்னர் மட்டக்களப்புக் கோட்டையை 1639 ஆம் ஆண்டில் வெஸ்தர்வால்டு என்ற ஒல்லாந்துத் தளபதி கைப்பற்றிக் கண்டியரசனோடு துணை உடன்படிக்கை செய்துகொண்டான்.
பின்னர் திருகோணமலை, காலி, நீர்கொழும்பு என்று இவர்களின் நிலக் கைப்பற்றல் தொடர்ந்தது. பின்னர் 1656 இல் ஒல்லாந்தர் கொழும்புக் கோட்டையைக் கைப்பற்றி, பின்னர் தொடர்ந்து மன்னார், ஊர்காவற்துறையையும் பிடிக்கின்றார்கள்.

பின்னர் 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டையையும் மூன்றரை மாசம் மதிலிடைத்து வளைத்திருந்து யூன் மாதம் 22 ஆம் நாள் யாழ்ப்பாண இராச்சியம் ஒல்லாந்தர் வசமாகின்றது. அவர்கள் தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதில் தீவிரமாகவிருந்தனர். முன்பிருந்த கத்தோலிக்க கோயில்களை இடித்தும், சிலவிடத்தில் புதுக்கியுந்திருத்தியும் தமது மதத் தேவாலயங்களை ஆக்கினர்.

ஒல்லாந்தர் ஆட்சியின் போது முன்பிருந்த போர்த்துக்கேயர் போல் அல்லாது பிறசமயங்களின் மீது தமது வன் கண்மையைக் குறைத்துக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. முந்திய நல்லூர்க் கோயிலின் அர்ச்சக சந்ததியின் வழித் தோன்றலாக இருந்த கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணர், புராதன கந்தசுவாமி கோயில் இருந்த இடத்துக்கு அண்மையில் மடாலயம் ஒன்றினை நிறுவி வேலினைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டியற்றக் காரணமாகவிருந்தார். இது கந்தபுராணம் படிக்கும் மடமாகவே பெரிதும் பயன்பட்டது.

பெரிய கோபுரம் தூபி முதலியனவிருந்தால் ஒல்லாந்தர் அதனை மீண்டும் தரைமட்டமாக்கிவிடக்கூடும் என்றெண்ணி அமைதியான வழிபாட்டிடமாக இதனை ஆக்கினர் என்று கொள்ள இடமுண்டு.

உசாவ உதவியவை:

1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

டச்சு (ஒல்லாந்து) இலட்சணை : International Civic Heraldry தளம

சித்திரம்:
Map by Homann Heirs- Columbia University வரலாற்றுத் தளம்
Posted by கானா பிரபா at 7:18 PM 4 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, August 27, 2007

மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....!


"இன்று மஞ்சத்திருவிழா! முத்துக்குமார சுவாமி திருவுலா வரும் நாள்!!!(இந்த முத்துக்குமரனில் எனக்கு மாறாப் பிரியம்; அழகொழுகும் சிலை)
இந்த நாளில் முதல் முதல் தங்கரதம் இழுத்த அன்று;( ஆண்டு நினைவில்லை.) சுவாமி வெளி வீதி சுற்றி வந்து , தேர் முட்டியடியில் திரும்பிக் கோவிலைப் பார்த்துக் கொண்டு ;தேரில் இருந்து இறங்கத் தயார் நிலையில் நிற்கும் போது; இன்குழல் வேந்தன் என்.கே. பத்மநாதன் குழலில் இருந்து பீறிட்டு வந்தது.


கலைக் கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற பாலமுரளி கிருஸ்ணா பாடிய "தங்கரதம் வந்தது நேரிலிலே.. என்ற பாடல் . எல்லோர் முகமும் ஓரத்தே ஒதுங்கி நின்று சகலதையும் அவதானிக்கும் கோவில் அறக்காவலர் குகதாஸ் மாப்பாண முதலியார் பக்கமே திரும்பியது. அவர் முகத்திலோ சிறு குறு நகை... திரையிசைப் பாடலுக்கே இடமில்லாத (பக்திப் பாடலெனினும்)நல்லூர்க் கந்தனாலயத்தில்; வித்துவான் மறுப்புச் சொல்லமுடியாவண்ணம் சந்தர்ப்பத்துக்கு ஏற்பவாசித்து விட்டாரே; சட்டத்தையே தகர்த்து; விதி விலக்கு அளிக்க வைத்துவிட்டாரே என்பதாக நினைத்தாரோ!! யாரறிவார்.

வித்துவானுமோ சுரப் பிரயோகங்களுடன் அழகு சேர்த்து மிக விஸ்தாரமாக வாசித்து; இசை ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த நாள் நான் வாழ்வில் மறக்கமுடியாதநாள்.
இத்தருணத்தில் அதை நினைவு கூர்வதில் மகிழ்கிறேன்.
என் விருப்பமாக இப்பாடலையும் இப்பதிவில் சேர்க்கவும்.
மேலும் கந்தன் சரித்திரம்...எத்தனை இன்னலைக் கண்டுள்ளான். எம் கந்தன் என எண்ண வைக்கிறது.


இன்றைய பத்தாந் திருவிழாவுக்கான பதிவை எழுதிப் போட்டுவிட்டு வேறு வேலையாக இருக்கிறேன். மேலே வந்த வரிகளைத் தாங்கிய பின்னூட்டம் யோகன் அண்ணாவின் நினைவுச் சிதறலாக வந்து விழுகின்றது.

எல்லாம் வல்ல எம்பெருமான் தன் கருணை மழையைப் பொழியட்டும் என இறைஞ்சி, சங்கீத மழையைப் பரவ விடுகின்றேன்.

தங்க ரதம் வந்தது வீதியிலே.....!

Get this widget Share Track details


படங்கள் நன்றி: தமிழ் நெற் மற்றும் ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
Posted by கானா பிரபா at 9:56 PM 4 comments Email This BlogThis! Share to X Share to Facebook

கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா

தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயம் பழைய இடத்தில் கட்டப்பட்டிருப்பதாகக் கூறமுடியாது. அவ்வாறு கூறக்கூடிய அளவிற்கு இலக்கிய ஆதாரங்களோ அன்றித் தொல்லியற் சான்றுகளோ காணப்படவில்லை. நல்லூரில் இருந்த இதன் ஆரம்ப கால ஆலயமும் ஏனய ஆலயங்களைப் போல் போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்டதாகும்.

இது பற்றிக் குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
"யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போர்த்துக்கேயத் தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 ஆம் ஆண்டிலே நல்லூருக்குச் சென்றான். அங்கிருந்த பெரிய கோயிலிலே (கந்தசாமி கோயில்) கிறீஸ்தவர்கள் அல்லாதவர் (சைவர்) மிக்க ஈடுபாடு உடையவர்கள். அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும், அவனுக்கு வீடு கட்டித் தருவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர். ஆனால் அவன் மதப்பற்று மிக்க கத்தோலிக்கன் ஆகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அழிக்க அவன் கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது. எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்". இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலையும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வாறு போர்த்துக் கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசாமி கோயிலானது தற்போது முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறீஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளதென்பதற்குச் சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. இப்பகுதியில் பல அத்திவாரங்களின் அழிபாடுகள் கிறீஸ்தவ ஆலயத்தைச் சுற்றியும் அதன் கீழாகவும் செல்வதையும் அவதானிக்கலாம். இக்கட்டிட அழிபாடுகளுக்கு வடக்கே புனித யமுனா ஏரி அமைந்துள்ளது இக்கருத்தினை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இப்பழைய அத்திவாரமுள்ள இடத்திலே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது ஆரம்பத்தில் களிமண்ணாலான கிறீஸ்தவ தேவாலயம் இருந்ததாக அக்காலத்தில் கிறீஸ்தவ சமயப் பணி புரிந்து வந்த போல்டேயஸ் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக கத்தோலிக்க மதம் பரப்பிய போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இடித்து அந்த அமைவிடங்களில் அல்லது அவற்றுக்கு அருகிலேயே தமது தேவாலயஙகளை அமைத்திருக்கின்றன. அதே போல் கந்தசாமி ஆலயம் இருந்த இடத்தில் அக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றையும் அமைத்தனர். அக்கிறீஸ்தவ தேவாலயம் இன்றும் அதேயிடத்தில் இருந்துவருகின்றது.

தற்போதைய மந்திரி மனைக்குள் சில மந்திகளின் வேலை

இராசதானியில் இருந்த நான்கு எல்லைக் கோயில்களுக்கு இக்கந்தசுவாமி கோயில் மையக் கோயிலாகவும் பெருங்கோயிலாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அக்கோயில் இருந்த இடத்தை அடுத்து அரச அரண்களுக்குரிய சான்றுகள் காணப்படுவதால் இதை ஓர் அரச கோயிலாகவும் கருதுகின்றனர்.

போர்த்துக்கேயர் இக்கோயிலை இடிப்பதற்கு முன்னர் சிலகாலம் தமது பாதுகாப்பு அரணாகவும் இதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சுவாமி ஞானப் பிரகாசர் " போர்த்துக் கேயருடனான போரில் தோல்வியுற்ற செகராசசேகரன் என்னும் மன்னன் அரண்மனைத் திரவியங்களை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டு விட்டு ஓடிய பின் போர்த்துக்கேயர் எரிந்த அரணையும் கைப்பற்றிய ஆலயத்தையும் சுத்தம் செய்து அவற்றிலோர் ஸ்தோத்திர பூஜை செய்து மகிழ்ந்தனர்" எனக்கூறுகின்றார்.

இக்கோயிலைத் தமது கட்டுப்பாட்டில் போர்த்துக்கேயர் வைத்திருக்கும் காலத்தில் தஞ்சாவூரில் இருந்து படையெடுப்புக்கள் இரண்டை எதிர்கொண்டதாகவும் , மூன்றாம் தடவை மேற்கொண்ட படையெடுப்பில் அப்படைத்தலைவனுக்கு இக்கோயிலில் வைத்தே தண்டனை கொடுத்ததாகவும் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுகின்றார். இவ்வாறு சில காலம் அரணாகப் பயன்படுத்தப்பட்ட இக்கோயில் 2.2.1621 இல் அழிக்கப்பட்டதாக குவேறோஸ் கூறுகின்றார்.

உசாவ உதவியவை:

1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

மந்திரி மனை பட உதவி: ஊடகவியலாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
Posted by கானா பிரபா at 7:30 PM 6 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, August 26, 2007

சங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா


பரராஜசேகர மன்னனின் அவைக்கு வந்த சுபதிருஷ்டிமுனிவர் சொன்ன ஆரூடத்தினை மெய்ப்பிக்கும் வண்ணம் தொடர்ந்து வரலாற்றில் மிக மோசமான பக்கங்கள் எழுதப்படலாயின.

சிங்கைப் பரராஜசேகரனுக்கு சிங்கவாகு, பண்டாரம், பரநிருபசிங்கம், சங்கிலி என நாங்கு ஆண்மக்களும், ஒரு பெண்ணுமாக ஐந்துகுழந்தைகள் இருந்தனர். சங்கிலி தன் துஷ்டதுணைவரோடு சேர்ந்து சூழ்ச்சி செய்து பரராஜசேகரனின் மூத்த மகனாகிய சிங்கவாகுவை நஞ்சூட்டிக் கொன்றார். சங்கிலியின் செய்கை இதுவென யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பரராஜசேகரன் தன் இளையகுமாரனாகிய பண்டாரத்தை இளவரசனாக்கி அவனிடத்தில் அரசை ஒப்புவித்துவிட்டுத் தன் புத்திரத் துயர் ஆற்ற கும்பகோணத்திற்குத் தீர்த்த யாத்திரை செல்கின்றான். தந்தையோடு கூடவே சென்ற சங்கிலி, "அங்கு எதிர்ப்பட்ட சோழமன்னனுக்கு உரிய மரியாதை கொடுக்காது அவமதிக்கின்றார். இதனால் சினங்கொண்ட சோழமன்னன், பரராஜசேகரனையும் சங்கிலியையும் சிறைப்பிடிக்கின்றார்.

அது கேட்டு, பரராஜசேகரனின் அடுத்த மகன் பரநிருபசிங்கன் தான் கொண்டு சென்ற படையைத் திரட்டிச் சோழமன்னனை வென்று தன் தந்தையையும், சகோதரனையும் சிறைமீட்கின்றான்.

பரராஜசேகரன் நல்லூருக்கு மீண்டவுடன் தன் மகன் பரநிருபசிங்கனின் வீரபராக்கிரமத்தை மெச்சி, அவனுக்குக் கள்ளியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம், என்னும் ஏழு கிராமங்களையும், தாமிர சாசனமுங் கொடுத்து அக்கிராமங்களுக்கு அதிபதியாக்கினான். அது சங்கிலியின் மனதில் ஆறாத் தீயை உண்டு பண்ணியது.

ஒருமுறை தன் சகோதரன் பண்டாரம் பூந்தோட்டத்தில் உலா வரும்போது நிராயுதபாணியாக அவன் நிற்பதைக் கண்டு ஓடி அவனை வெட்டிகொன்றான் சங்கிலி. முதுமை காரணமாகத் தளர்ந்திருந்த பரராஜசேகரனும் பேசாதிருந்தான். பரநிருபசிங்கன் கண்டி சென்றிருந்த சமயம் தனது தந்தையின் எதிர்ப்பையும் புறக்கணித்து விட்டு கி.பி 1517 ல் யாழ்ப்பாண இராச்சியத்தின் அரியணை ஏறினான் சங்கிலி. மன்னன் பரராஜசேகரனையும் ச்ங்கிலியே கொன்று, செகராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான் எனப் போர்த்துக்கேய ஆதாரங்கள் கூறும். பரநிருபசிங்கன், சங்கிலியின் வலிமைக்கு அஞ்சிப் பேசாதிருந்தான்.

சங்கிலியன் தோப்பு இன்று

கி.பி 1519 ஆம் ஆண்டளவிலே சங்கிலி யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். தமிழ் மக்களிடையே மிக நினைவு கொள்ளப்படும் மன்னனாக சங்கிலி விளங்கி வருகின்றான். பரராஜ சேகரரின் பட்டத்து இராணியல்லாத ஒருத்திக்கு மகனாகப் பிறந்து, பட்டத்துக்கு உரித்தான மூத்த சகோதரர்களை அழித்து யாழ்ப்பாண இராச்சியத்தின் சிம்மாசனம் ஏறினான் இவன். 1505 ஆம் ஆண்டே கோட்டே இராசதானிக்குப் போர்த்துக்கேயர் வந்தபோதும் அவர்கள் யாழ்ப்பாணத்துடனான தொடர்பை 1543 ஆம் ஆண்டிலேயே கொள்ளமுடிந்தமைக்குக் சங்கிலி மன்னனின் எதிர்ப்பே காரணமாகக் கொள்ளப்படுகின்றது. போர்த்துக்கேய நூல்கள் சங்கிலி மன்னனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கப்படுவதற்குக் காரணம் இல்லாமலில்லை.

இவன் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு அவர்களோடு தொடர்புகொண்டோரைத் தண்டிப்பதிலும் முனைப்பாக இருந்தான். உண்மையில் சங்கிலி ஓர் ஆளுமை மிக்க மன்னனாகவும், நாட்டுணர்வு மிக்க தலைவனாகவும் தீர்க்கதரிசனமும் கடும்போக்கும் கொண்ட ஓர் ஆட்சியாளனாகவும் நடந்து கொண்டான் எனத் தெரிகின்றது.

வினிய தாபிரபேனியா (Vinea Tabrobonea) என்ற சரித்திர நூலின் பிரகாரம் பறங்கிகள் 1590 இல் யாழ்ப்பாணத்திலே படையேற்றிச் சென்று சங்கிலி மன்னனோடு யுத்தம் செய்து அரசைக் கைப்பற்றினர் என்று கூறுகின்றது. பரநிருபசிங்கனும் பறங்கிகளும் செய்த ஒப்பந்தப் பிரகாரம் பரநிருபசிங்கனைத் திறையரசனாக்கி அவன் மகன் பரராசசிங்கனை அவனுக்குக் கீழ் ஏழுரதிபன் ஆக்கினார்கள்.

பரநிருபசிங்கன் ஒன்பது வருசம் அரசு செய்து இறந்தான். அவன் இருக்கும் வரையிலும் பறங்கிகள் சமய விஷயத்திலும், பொருள் விஷயத்திலும் கொடுங்கோல் செலுத்தாது ஒருவாறு அதிகாரம் செலுத்தி வந்தனர். பரநிருபசிங்கன் இறந்தபின்னர் அவன் மகன் பரராசசிங்கனைப் பறங்கிகள் முதன்மந்திரியாகினார்கள்.

பரராசன் இறக்கும் வரை அவன் பொருட்டு கீரிமலை திருத்தம்பலேஸ்வரன் கோயிலையும் நல்லூர்க் கந்தசாமி கோயிலையும் மாத்திரம் இடியாது விட்டிருந்தனர். அவன் இறந்த பின்னர் அவற்றையும் இடித்தொழித்தார்கள். அவர்கள் நல்லூர்க் கந்தசாமி இடிக்கும் முன்னே அதன் மெய்க்காப்பாளனாக இருந்த சங்கிலி என்பவன் அக்கோயில் விதானங்கள் வரையப்பெற்ற செப்பேடு, செப்பாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சில விக்கிரகங்களை அக்கோயிற் குருக்கள்மார் புதராயர் கோயிலுக்குச் சமீபத்தேயுள்ள குளத்திலே புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர். தொடர்ந்து நல்லைக் கந்தன் ஆலயம் தரைமட்டமாகியது.

உசாத்துணை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

புகைப்படம்:
1. சங்கிலி மன்னன் சிலை மற்றும் சங்கிலியன் தோப்பு - பத்திரிகையாளர் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை
Posted by கானா பிரபா at 8:04 PM 2 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, August 25, 2007

போர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா

A map by *MUNSTER*, c.1588

கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகு என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். போர்த்துக்கேயரைப் பறங்கியர் என்பது அக்காலம் தொட்ட வழக்கு.

துருக்கியப்படை ஒன்று அப்போது சிலாபம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தோற்றுப் போனது. பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய கோட்டையை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர்.
பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கிய மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர்.

தம் எண்ணம் போலத் தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர்.

போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம்

கனக சூரிய சிங்கையாரியான் இழந்த தன் மகுடத்தை மீண்டும் சூட்டிக் கொண்டு யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த பின் அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன்.

சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் அழிவுற்ற ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.

பரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்
"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.

புருஷோத்தம, நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியின் மாயவலைக்குட்பட்டு அரசை அவன் கையிற் கொடுத்திடுவான். சங்கிலி கொடுங்கோலோச்சித் தன்னரசை அந்நிய தேசவாசிகளான பறங்கியர் கையிற் கொடுத்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு ஒரு காலத்திலும் மீள்வதில்லை" என்றார்.

இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி
"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".

சுபதிருஷ்டிமுனிவர் குறி சொன்ன அந்தக் கொடிய நிகழ்வுகள் அடுத்த பதிவுகளில் தொடர்கின்றன.

உசாவ உதவியவை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
3. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

சித்திரம்:
1. map by *MUNSTER*, c.1588 (ebastian Münster (1488-1552) was a German cartographer, cosmographer) - Columbia University வரலாற்றுத் தளம்
2.போர்த்துக்கீசர் தீட்டிய சிலோன் வரைபடம் - Library of congress an illustrated guide
Posted by கானா பிரபா at 2:17 PM 8 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, August 24, 2007

உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா

கி.பி 1248 ஆம் ஆண்டு புவனேகபாகு எனும் அமைச்சரால் முதன்முதலாகக் கட்டப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கி.பி 1450 ஆம் ஆண்டு, சப்புமல் குமரயாவின் படையெடுப்பால் தகர்த்தழிக்கப்பட்டது. தான் புரிந்த பாவத்துக்குப் பரிகாரம் தேடுவான் போன்று குருக்கள் வளவு என்ற இடத்தில் அழிக்கப்பட்ட நல்லூர்க் கோயிலை மீண்டும் புதிதாகக் கட்டுவித்தான்.

படையெடுப்பின் போது அழிந்துபோன தேவாலயம் இருந்த இடத்தில் மீள ஆலயத்தைக் கட்டாது புதியதொரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமைப்பித்தான். அரண்மனை அரசமாளிகைகள் என்பன அமைந்திருந்த பண்டார வளவு, சங்கிலித் தோப்பு (பின்னர் வந்த பெயர்) என்பவற்றுக்கு அருகில் இக்கோயிலுக்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவ்விடம் முத்திரைச் சந்தியில் இன்று கிறீஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடமாகும்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலே திருவிழாக் காலங்களில் கூறப்படும் சமஸ்கிருதக் கட்டியம் (புகழ் மாலை) இக் கோவிலை சிறீ சங்கபோதி புவனேக பாகு கட்டினான் எனக் கூறப்படுகின்றது. இது கல்வெட்டாக இல்லாவிடினும் மரபு வழியாக நிலவி வந்துள்ளது. இப்புவனேக பாகு தான் ஆறாவது பராக்கிரம பாகு சார்பிலே யாழ்ப்பாணத்தை வென்று சிறிது காலம் (கி.பி 1450 - 1467) நிர்வாகம் செய்த சபுமால்குமாரய (தமிழில் செண்பகப் பெருமாள்) எனவும, இவனே பின்னர் கோட்டை அரசனாக ஆறாம் புவனேக பாகு எனும் பெயருடன் விளங்கினான் எனவும் பொதுவாகக் கொள்ளப்படுகின்றது.

ஏற்கனவே முன்னைய தமிழரசரால் அமைக்கப்பட்டுப் போரின் போது பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படாத கோயிலை இவன் மேலும் திருத்தியமைத்தமையால் அல்லது விசாலித்தமையால் இவன் பெயர் கோயிற் கட்டிடயத்தில் இடம் பெற்றிருக்கலாம். மேலும் சிலர் இப் புவனேகபாகு தமிழரசனின் மந்திரி என்பர். வரலாற்றிலே ஒரு நிறுவனத்தை நிறுவியவனின் மங்கிப் பின்னர் அதனைத் திருத்தியவனின் பெயர் நிலைபெறுதலுமுண்டு.

கஜவல்லி, மகாவல்லி சமேதராகிய சுப்பிரமணியர் மீது செண்பகப் பெருமாள் மிகுந்த பக்தியுடையவனென்றும், பதினாறு மகாதானங்களையும் புரிந்த சிறப்புடையவன் என்றும் கட்டியம் அவனைப் புகழ்ந்துரைக்கின்றது.
ஆறாம் பராக்கிரமபாகு தன் ஆட்சியின் முடிவிலே முடி துறந்து தன் மகள் வழிப் பேரனும் உலகுடைய தேவியின் மகனுமாகிய ஜய்வீர பராக்கிரமபாகு என்னும் இளைஞனைக் கோட்டை இராச்சியத்தின் அரசனாக முடிசூட்டிவிட்டு கி.பி 1467 இல் இறந்தான். இவற்றை அறிந்த செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலுள்ள தன் படைகளை அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்று அங்கு போர் புரிந்து அதன் விளைவாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சிறீ சங்கபூதி புவனேகபாகு என்னும் பட்டப்பெயரோடு அங்கு ஆட்சி புரிந்தான்.


அவனுடைய அதிகாரத்தை ஒப்புக்கொள்ளாத சிங்களப் பிரதானிகள் மலைநாட்டிலும் கீழ்நாட்டிலும் கலகம் விளைவித்தார்கள். கீழ் நாட்டில் ஏற்பட்ட கலகத்தைச் சிங்கள நூல்கள் சீஹள சங்கே (சிங்களக் கலகம்) என வர்ணிக்கின்றன. ஆயினும், தனது தம்பியான அம்புலாகல குமாரனின் ஆதாரவுடன் புவனேக பாகு அக்கலகங்களை அடக்கி விட்டான்.
செண்பகப்பெருமாள் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கித் தென்னிலங்கைக்குப் போனபின் கனகசூரிய சிங்கையாரியான் தமிழகத்திலுள்ள அரசர்களின் உதவி பெற்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டான். யாழ்ப்பாண இராச்சியமானது கோட்டை அரசனின் மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
உசாத்துணை:
"ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
Posted by கானா பிரபா at 7:41 PM 6 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, August 23, 2007

யார் இந்த செண்பகப் பெருமாள்? - ஆறாந் திருவிழா

ஆறாம் பராக்கிரமபாகு கோட்டையில் கி.பி 1415 இல் அரசனாகிய பொழுது பல நூற்றாண்டுகளாகப் பலவீனமுற்றிருந்த சிங்கள இராச்சியம் மீண்டும் வலுப்பெற்றது. மலைப் பிரதேசத்தையும் வன்னிகள் பலவற்றையும் கைப்பற்றிக் கொண்ட பின் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது கவனஞ் செலுத்தினான். அக்காலத்திலே கனக சூரிய சிங்கையாரியானின் ஆட்சி யாழ்ப்பாண இராச்சியத்திலே விளங்கி வந்தது.

மலையாள தேசத்துப் பணிக்கன் ஒருவனுடைய மகனும் பராக்கிரமபாகுவின் வளர்ப்பு மகனுமாகிய செண்பகப் பெருமாள் என்னும் சப்புமல் குமாரய யாழ்ப்பாணத்துக்கு எதிரான படையெடுப்புக்குத் தலைமை தாங்கினான்.
முதலாவது தடவையாகப் படையெடுத்தபோது செண்பகப் பெருமாள் எல்லைக் கிராமங்கள் சிலவற்றைத் தாக்கி விட்டுத் திரும்பினான். பின்பு, மீண்டுமொருமுறை அவன் வட இலங்கையை நோக்கிப் படையெடுத்துச் சென்று பெரு வெற்றி பெற்றான்.

கனக சூரிய சிங்கையாரியான் இயலுமானவரை போர் புரிந்து விட்டு நிலமையைச் சமாளிக்க முடியாத நிலையிலே தன் மனைவி மக்களுடன் தென்னிந்தியாவிற்குத் தப்பியோடிவிட்டான். கி.பி 1450 ஆம் ஆண்டளவிலே எழுதப் பெற்ற முன்னேஸ்வரம் சாசனம் பராக்கிரமபாகுவைப் "பரராஜசேகர புஜங்க" என்று வர்ணிப்பதால், அக்காலகட்டத்திலேயே செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருக்கவேண்டும்.

ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாண இராச்சியத்திலே ஆட்சி செலுத்துவதற்கென, செண்பகப் பெருமாளை அரசப் பிரதிநிதியாக நியமித்தான். செண்பகப் பெருமாள் ஆரியச் சக்கரவர்த்திகளின் சிம்மாசனத்திலே வீற்றிருந்து யாழ்ப்பாணத்துப் பிரதானிகளை அரச சபையிற் கூட்டி அவர்களுடைய ஆதரவுடன் ஆட்சிபுரிந்தான். செண்பகப் பெருமாளைப் பற்றிய தனிச் செய்யுளொன்று கையாலமாலையிலே காணப்படுகின்றது.

அது பின்வருமாறு அமைந்துள்ளது.

" இலகிய சகாப்த மெண்ணூற்
றெழுபதாஅ மாண்ட தெல்லை
அலர் பொலி மாலை மார்ப
னாம்புவ னேக வாகு
நலம் மிகு யாழ்ப்பாணத்து
நகரிகட் டுவித்து நல்லைக்
குலவிய கந்த வேட்குக்
கோயிலும் கட்டுவித்தானே"

வரலாற்று நூல்கள் சிலவற்றின் பிரகாரம் புவனேகபாகு என்பது செண்பகப் பெருமாள் அரசனாகிய போது சூடிக்கொண்ட பட்டப் பெயராகும். செண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்த காலத்திலே அரசனொருவனுக்குரிய சின்னங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தான். என்று கருத இடமுண்டு. அவனாலேயே யாழ்ப்பாண நகரும், நல்லூர்க் கந்தசுவாமி கோயிலும் கட்டப்பட்டதாக இச்செய்யுள் வாயிலாக அறியப்படும் செய்திகளாகும்.

உசாத்துணை:
1. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
2. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா
3. "நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா
4. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
சித்திரம்:
The University of Chicago Magazine December 1995
Posted by கானா பிரபா at 7:13 PM 2 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, August 22, 2007

நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா


நல்லை நகர் கந்தனுக்கு முதலில் கோயில் கட்டப்பட்டது கி.பி.948 ஆம் ஆண்டிலா அல்லது கி.பி 1248 ஆம் ஆண்டிலா என்பது முடிவு செய்யப்படவேண்டியதொன்றாகும். முதலாவது ஆலயம் கி.பி 948 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதெனக் கொண்டால் அது இராசப் பிரதிநிதியாக விளங்கிய புவனேகபாகுவினால் பூநகரி நல்லூரிலே கட்டப்பட்டதாகும். அவ்வாறன்றி முதலாவது ஆலயம் கி.பி.1248 ஆம் ஆண்டு காலிங்க ஆரியச் சக்கரவர்த்தியின் மந்திரியாகவிருந்த புவனேகபாகுவினால் கட்டப்பட்டதாயின் யாழ்ப்பாண நல்லூரிலே அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இவ்விரு கருத்துக்களிலே பின்னதே சாத்தியமானதும் ஏற்றதுமாகவுள்ளது. இந்த ஆலயம் இருந்த இடத்திலேயே தற்போதுள்ள நல்லைக்கந்தன் ஆலயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றனர்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை முதன்முதலாகக் கட்டிய புவனேகபாகு என்ற பெயர் கொண்டவர் யார்?
கல்வெட்டாதாரங்களும், செப்பேட்டாதாரங்களும் இவர் குறித்துக் கிடையாவிடினும், நூலாதாரங்களும் பதிவேட்டுக் குறிப்பாதாரங்களும் உள்ளன. அவை:

"சிங்கையாரியன் சந்தோஷத்திடனிசைந்து கலைவல்ல சிகாமணியாகிய புவனேகவாகு வென்னும் மந்திரியையும் காசி நகர்க் குலோத்துங்கனாகிய கெங்காதர ஐயரெனுங் குருவையும் அழைத்துக் கொண்டு, தனது பரிவாரங்களுடன் யாழ்ப்பாணம் வந்திறங்கினான்" என்று யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலில் ஜோன் கூறுகிறார். (ஜோன் எஸ் 1882)
சிங்கையாரிய மகாராசன் இப்படியே அரசாட்சியைக் கைப்பற்றி நடாத்தி வருகையில் புறமதில் வேலையுங் கந்தசுவாமி கோயிலையும் சாலிவாகன சகாப்தம் 870 ஆம் வருஷத்தில் புவனேகவாகு என்னும் மந்திரி நிறைவேற்றினான்" என யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூல் கூறுகின்றது. (வைபவ மாலை 1949)

"சிறீமான் மஹாராஜாதிராஜ
அகண்ட பூமண்டலப்ர
தியதிகந்தர விச்றாந்த கீர்த்தி
சிறீ கஜவல்லி மகாவல்லி
சமேத சுப்பிரமண்ய
பாதார விந்த ஜநாதிருட சோடக
மகாதான சூர்யகுல
வம்சோத்பவ சிறீசங்க
போதி புவனேகவாகு"

நல்லூர்க் கோயிலைக் கட்டிய புவனேக பாகு கோயிற் கட்டியத்தில் இன்றும் இவ்வாறு போற்றப்படுகின்றார். இக்கட்டியத்தின் அர்த்தம் வருமாறு:
திருவருட் சக்திகளான வள்ளியம்மனும், தெய்வயானையம்மனும் ஒருங்கே பொருந்த வீற்றிருக்கும் சுப்பிரமணியப் பெருமானின் திருவடித் தாமரைகளை வணங்குபவனும், மன்னர்களுள் மன்னனும், செல்வங்களை உடையவனும், மிகப் பரந்த பூமியடங்கலுமுள்ள
திசைகள் எல்லாவற்றிலும் பரவிய புகழுடையவனும், மக்களுடைய தலைவனும், முதலாம் பெரிய தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்திலே தோன்றியவனும், சிறீ சங்கபோதி என்னும் விருதுப் பெயர் தரித்தவனுமாகிய புவனேகவாகு.

யாழ்ப்பாணக் கச்சேரியில் 1882 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சைவசமயக் கோயில்கள் பதிவேட்டில் பின்வருமாறு காணப்படுகின்றது.

"கந்தசுவாமி கோயில், குருக்கள் வளவு என்ற காணியிற் கட்டப்பெற்றுள்ளது. இது தமிழ் அரசன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகவாகரால் 884 ஆம் ஆண்டளவிற் கட்டப்பெற்றது. (குலசபாநாதன் 1971) நல்லூர்க் கந்தசுவாமி கோயில் பிரதம குருக்களாகவிருந்த சுப்பையா என்பார் 1811 இல் ஆள்வோருக்கு அழுதிய முறைப்பாடு ஒன்றில், கோயிலைக் கட்டியவர் பெயர் புவனேகன்கோ (Pooveneageangoo) எனக் குறிப்பிட்டுள்ளார். (Jhonson Alexander - 1916/17)

தகவற் குறிப்புக்கள் ஆதாரம்:
"ஈழத்தவர் வரலாறு"
இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000
ஆக்கியோன்- கலாநிதி க.குணராசா
புகைப்பட உதவி:
Virutal tourist சுற்றுலாத் தளம்
Posted by கானா பிரபா at 7:00 PM 12 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, August 21, 2007

அழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா

யாழ்ப்பாண இராசதானியின் தலைநகராக விளங்கிய நல்லூரைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இங்கிருந்த கோட்டையையும், ஆலயங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. ஆ.முத்துத் தம்பிப் பிள்ளை தமது யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலில் நல்லூர் இராசதானிக்குரிய கற்சாசனங்களும், கற்றூண்களும் யாழ்ப்பாணக் கோட்டையில் வைத்துக் கட்டியிருப்பதாகச் சொல்கின்றார். கோட்டையின் மேற்குப் பாகத்தில் வெளிப்புறங்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ள கற்றூண்கள் பல நல்லூர் இராசதானிக்குரியவை என்பதை அடையாளம் காட்டுக்கின்றன. இவற்றில் ஒரு தூணில் உள்ள நேர்த்தியான தாமரைச் சிற்பம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஆதாரமாக வரும் யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் கூற்று மேலும் ஆதாரமாக அமைகின்றது.

"பறங்கிகள் ஆட்சியினை ஒப்புக்கொண்டு
நல்லூரிற்குள்ளே குடியிருந்து கொண்டு
தங்கள் கருமங்களை நடத்திப் புறக்
கோட்டை மதில்களை இடிப்பித்து அக்
கற்களைக் கொண்டு போய்க் கடல்
ஓரத்திலே சங்கிலியரசன் இடிப்பித்துப்
பரவிவிட்ட தங்கள் கோட்டையை மறுபடி
கோட்டையாகக் கட்டி அதன் கீழ்ப்
புறத்திலே வீடுகளையும் அரசாட்சி
மண்டபங்களையும் கட்டுவித்துக் குடிக:
சமீபத்தில் வீடுகட்டி வந்திருக்கும் படி
வசதி பண்ணினார்கள்".

தற்போதய நல்லூர்ப் பிராந்தியத்தில் யாழ்ப்பாண மன்னர் காலக் கட்டடங்கள் எவையும் முழுமையாக இல்லாவிட்டாலும், அங்குள்ள மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற பெயர்களும், இவ்விடங்களில் அழிந்த நிலையில் உள்ள கட்டிடச் சிதைவுகளும் அக்கால நல்லூர் இராசதானியை நினைவுபடுத்துவனவாக உள்ளன.

விரிவான வரலாறு அம்சங்களைத் தொடந்து வரும் பதிவுகளில் நோக்குவோம்

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.
Posted by கானா பிரபா at 7:46 PM 9 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, August 20, 2007

நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா


யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீரா நல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடைய நல்லூர், சிங்க நல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத்தகைய இடமொன்றிலிருந்து இங்கு வந்தோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூடியிருப்பர். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே பூநகிரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் நல்லூர் என்ற பெயர் தாங்கிய ஊர் உண்டு.நல்லூரிலே உள்ள பழைய பிரதான சிவாலயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திருஞான சம்பந்தர், முத்துத் தாண்டவர் முதலியோர் பிறந்த சீர்காழியிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.

இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது. இவ்வரசு இலங்கையிலுள்ள வட பிராந்தியத்திலுள்ள அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அல்லது அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறியக் கூடிய அளவிற்குத் தொல்லியற் சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக்கும் போது இவ்விராசதானி தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்றுவட்டத்தினுள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழமை வாய்ந்த கொழும்புத் துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன.
இதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போர்த்துக்கீச ஆசிரியர்களின் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன.

இவ்விராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் வர்ணனை இப்படிச் சொல்கின்றது.

"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு
வித்து மாடமாளிகையும் , கூட கோபுரங்களையும்,
பூங்காவையும் பூங்காவன நடுவிலே
ஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண்
டாக்கி அக்கூபத்தில் ஜமுனா நதித் தீர்த்தமும்
அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம்
யானைப் பந்தி , குதிரை லயம், சேனா வீரரிருப்பிடம்
முதலியன கட்டுவித்து - கீழ் திசை வெயிலுகந்த
பிள்ளையார் கோயிலையும் தென் திசைக்குக்
கயிலாய பிள்ளையார் கோயிலையும், வட திசைக்குச்
சட்ட நாதர் கோயில் தையல் நாயகி
அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்
அமைப்பித்தனர்"

நல்லூர் இராசதானி குறித்த சுருக்கமான அறிமுகமாக இப்பதிவு விளங்குகின்றது. தொடர்ந்து வரும் பிந்திய பகுதிகள் ஆழ அகலமாக இது பற்றி நோக்கவிருக்கின்றன.

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.
Posted by கானா பிரபா at 6:40 PM 26 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, August 19, 2007

கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா

"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்திடும் உன் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்

பாசமுடன் நான் அழைக்க நல்ல வழி காட்டு - உந்தன்
பத்தினிகளோடெனக்கு வந்து முகம் காட்டு
வாசலெங்கும் எரியுதையா உந்தன் விழி காட்டு
இப்போ வள்ளி தெய்வயானையுடன் என்ன விளையாட்டு

நீயிருக்கும் வீதியிலே பேய்கள் இருக்காது
நல்லூர் வீடு தொழுவோர்களுக்கு துன்பம் இருக்காது
வாயிருக்கும் வரையுனையே பாடி ஆடுவேன் -தினம்
வாசலிலே வந்திருந்து உன்னை தேடுவேன்

சந்நிதியில் உந்தனது தேரை எரித்தார்கள் -தமிழ்
தந்தவனே எங்களுக்கு சாவை விதைத்தார்கள்
விண்ணதிரக் குண்டு மழை இன்று பொழிவார்கள் -எங்கள்
வேலவனே அன்னவர்கள் என்று விழுவார்கள்?

செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் - தமிழ்
தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்
சிந்தி வரும் புன்னகையைக் கண்டு ரசித்தேன்
நல்லைத் தேரடியில் வந்துனது காலில் விழுந்தேன்"

பாடலை இயற்றியவர்: புதுவை இரத்தினதுரை
பாடியவர்: வர்ணராமேஸ்வரன்
இசை: இசைவாணர் கண்ணன்

Get this widget | Share | Track details


யாழ்ப்பாணத்துக் கலாச்சாரத்தைக் கந்தபுராணக் கலாச்சாரம் என்பார் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை.அவரின் கூற்றுக்கமைய, யாழ்ப்பாணத்தின் எல்லாத் திசைகளிலும் முருகன் ஆலயங்கள் பல பழமைச் சிறப்பும்,பக்திச் சிறப்பும் ஒருங்கே கொண்டவை. கந்த சஷ்டி என்னும் முருக விரதத்தை மிகவும் அனுட்டானத்துடன் நம் ஈழத்தவர்
வெகு சிரத்தையோடு ஓவ்வோர் ஆண்டும் கைக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. செல்வச்சந்நிதி முருகனை "அன்னதானக் கந்தன்",என்றும் நல்லூர் முருகனை " அலங்காரக் கந்தன்" என்றும் சிறப்பித்துப் போற்றி நாம் வணங்கி வருகின்றோம்.

தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் இருந்து புலம் பெயர் வாழ்வில் இருந்து வரும் எனக்கு அதற்கு முற்பட்ட காலத்தில் கலந்து கொண்ட நல்லூர்த் திருவிழாக் காலங்கள் இன்னும் பசுமரத்தாணி போல் இருக்கின்றன. காரணம் இந்த ஆலய மகோற்சவம் என்பது
எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் வெறும் ஆன்மீகத் தேடலுக்கான நிலைக்களனாக மட்டுமன்றி வருஷா வருஷம் நிகழும் பெரும் எடுப்பிலான சமூக ஒன்றுகூடலாகவே அமைகின்றது.

என் சின்னஞ்சிறு வயதில் அயலட்டை உறவினர் சகிதம் அம்மாவின் கைப்பிடித்துக் கோண்டாவில் பஸ் பிடித்துத் தட்டாதெருச் சந்தி இறங்கித் தொடர்ந்து நடை ராஜாவில் நல்லூர்க் கந்தனைக் கண்டது ஒரு காலம்.

அப்பாவின் சைக்கிளின் முன் பாரில் ஏறி, பெடலை வலித்துக் கொண்டே அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டே பரமேஸ்வராச் சந்தி வழியாகப் போய் எம் பெருமானை வழிபட்டது ஒரு காலம்.

பதின்ம வயதுகளில் கூட்டாளிமாருடன் காதல் கதைகள் பேசி நல்லூரைக் கடந்து யாழ்ப்பாண நகர் வரை சென்று பின் திரும்ப நல்லூருக்கு வந்து கோயிலுக்குப் போன நீண்ட சுற்றுப் பயணத்துக்கும் காரணம் இருக்கின்றது.

இவையில்லாம் தொலைத்து இப்போது கணினித் திரைக்கு முன் என் மனத்திரையில் நிழலாக ஓடும் காட்சிகளைப் பதிவாக்க முனைகின்றேன். என் நினைவுச் சுழல் எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் போகின்றது.


1986 ஆவணி மாதம் ஒரு நல்லூர்த் திருவிழாக் காலம் அது

முதல் கிழமையே என் அம்மா குசினிப் (அடுக்களை) பக்கம் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் குதித்து விட்டார். காஸ் அடுப்புக்களோ, மின்சார அடுப்புக்களோ எங்கள் வீட்டில் இல்லை. சூட்டடுப்புக்களை இணைத்துச் செம்மண்ணால் ஒன்றிணைத்த அடுப்படி அது. அந்தச் செம்மண் அடுப்புப் பகுதிக்கு மாட்டுச் சாணத்தைக் கரைத்து அப்பி நன்றாக வருடி விட்டுப் புது மெருகைக் கொடுக்கின்றார். வீட்டுக்குள் இருந்த அசைவப் பாத்திரங்கள், அவை மச்சப் பார்த்திரங்கள் சாம்பல் கொண்டு கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு கொல்லையில் இருக்கும் காம்பரா என்று சொல்லப்படும் அறைக்குள் நகர்கின்றன. (என் பெற்றோர் மலையகப் பகுதியில் ஆசிரியர்களாக இருந்த காலத்தில் அந்த மலையகப் பகுதிக்குத் தனித்துவமாக சொல்லான "காம்பரா" வையும் யாழ்ப்பாணத்துக்குக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். காம்பரா என்றால் தேயிலைத் தேட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் குடியிருக்கும் தொடர் குடியிருப்புக்கள். அவை ஒன்றாக இணைந்திருந்தாலும் தனித்தனிக் குடும்பங்களுக்கான குடியிருப்பாக இருக்கும்.)

வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து கிணற்றடியில் பெரிய வாளி கட்டி முக்குளித்து அள்ளிய தண்ணீரை அப்பா கொண்டு வரவும், ஓவ்வொரு அறையாகக் குளிப்பாட்டிப் பெருக்கி நீரை வளித்துத் துடைப்பதும் அண்ணனின் வேலை.கூடவே அணில் போல் என் பங்கும்
இருக்கும். வீடே சுத்தமான சைவப்பழமாக மாறிவிட்டது. இனி ஒரு மாதத்திற்கு அசைவச் சாப்பாட்டுக்கும் தடா அல்லது பொடா. மீன் விற்கும் மணி அண்ணனுக்கு ஒரு மாத உழைப்புப் படுத்து விடும்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நல்லூர்த் திருவிழா வந்துவிட்டது.
அதிகாலையில் வழக்கம் போல் துயில் எழுந்து தலை முழுகிச் சுவாமி அறையில் தேவாரம் பாடி முடித்து, யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைகளை அப்பா பாடவும், நானும் எழுந்து கோயிலுக்கு அப்பாவுடன் போக ஆயத்தமாகவும் சரியாக இருக்கின்றது.

அம்மா, பக்கத்து வீட்டு மாமி மாருடன் மினி பஸ் மூலம் வரப் போகிறார். அண்ணன் தன் கூட்டாளிமாருடன் கோயிலுக்குப் போய்விடுவார். வெறும் மேலும் வெள்ளைச் வேட்டியும், கழுத்தைச் சுற்றிய சால்வையுமாக வெளியே வந்த அப்பா ஓரமாக நிறுத்தியிருந்த பி.எஸ்.ஏ (BSA) சைக்கிளை நகர்த்தி, நடுமுற்றத்துக் கொண்டு வருகின்றார். இணுவில் கந்தசுவாமி கோயில் கடாய் வாகனம் போல பெரிய சைக்கிள் அது. "ஐம்பதுகளில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினது, பார் இன்னும் உழைக்குது" என்று பெருமை பட அப்பா தன் தேரைப் பற்றி அடிக்கடி தானே புகழ்ந்து கொள்வார். அரைக்காற்சட்டைப் பையனான நான் அப்பாவின் சைக்கிள் ஏறி முன் பாரில் அமர்ந்து கொள்கின்றேன். ஒடுக்கமான ஒழுங்கைக்குள்ளால் சைக்கிள் ஊர்கின்றது.

கொஞ்ச தூரம் சென்றதும் பயணக் களைப்புத் தெரியாமல் இருக்க எனக்குக் கதை சொல்ல ஆரம்பிப்பார் அப்பா என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் நானே முந்திக் கொண்டு,
"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.

தன் சைக்கிளோட்டத்தை நிதானப்படுத்தியவாறே, ஒரு செருமலை உதிர்த்துவிட்டு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்ல ஆரம்பிக்கின்றார் அப்பா.
Posted by கானா பிரபா at 7:13 PM 14 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, August 18, 2007

நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்...!


நல்லூர்க் கந்தசாமி கோவிலின் மஹோற்சவம் இன்று 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 25 தினங்கள் திருவிழா நடைபெறும்.
யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை சுவாமி வெளிவீதியில் இடம்பெறாது. இரவுத் திருவிழாவும் மாலை 5மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

வருடாந்த மஹோற்சவத்தை சிவ சிறீ யோகீஸ்வரக் குருக்கள் தலைமை வகித்து நடத்தி வைப்பார். இம்மாதம் 27 ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் அடுத்தமாதம் 9 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 10 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்த திருவிழாவும்
12 ஆம் திகதி பூங்காவனம் இடம்பெறும்.

உற்சவ தினங்களில் வழமைபோல் அடி யார்கள் பக்திபூர்வமாக கலந்து முருகப் பெருமானை வழிபடுவதுடன் அங்கபிரதட்சை செய்வதும் அடி அழித்தும் கற்பூரச் சட்டி எடுத்தும் தூக்குகாவடி, ஆட்டக்காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறை வேற்றுவார்கள். வழமைபோல் இம்முறையும் உற்சவ தினங்களில் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக் கான அடியார்கள் ஆலயத்துக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வருஷம் நல்லூர்த் திருவிழா வேளையில் சிறப்பாக ஒரு பதிவை இடலாம் என்று நான் எண்ணிடயிருந்த வேளை யுத்தமேகங்கள் முழுவதுமாகக் கருக்கட்டி தாயகத்தில் முழு அளவிலான யுத்தம் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்தது. A9 பாதை மூடல் என்று பொருளாதார ரீதியிலும் , செஞ்சோலைப் படுகொலைகள் என்று இன அழிப்பு ரீதியிலும் அங்கே எம் உறவுகள் சிறீலங்கன் பாஸ்போர்ட்டை தொலைத்துக் கொண்டிருக்கும் வேளை திருவிழா பற்றிய பதிவை மறக்கடித்து விட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கின்றது. இருப்பினும் சோகங்கள் தொடர்கதையாகிப்போன நம்மவர் வாழ்வில் இறையருள் கைகூடவேண்டும் என்று இறைஞ்சி, இன்று ஆரம்பித்த நல்லைக் கந்தன் மகோற்சவ காலத்தில் தொடர்ச்சியாக 25 நாட்கள் நல்லைக் கந்தன் ஆலயச் சிறப்பையும், இந்தத் திருவிழா நம் தாயகத்து மக்களுக்கு ஒரு ஆன்மீக மற்றும் சமூக ஒன்று கூடலுக்கான நிகழ்வாக இருந்து வருவதையும் வரலாற்று மற்றும் நனவிடை தோய்தல் மூலம் பதிவுகளாக்க முயல்கின்றேன்.

மாதத்துக்கு இரண்டு பதிவுகள் மட்டுமே எழுதும் எனக்கு 25 நாட்கள் தொடர்ந்து 25 பதிவுகள் இடுவது என்பது கொஞ்சம் அதிகப்படியானது.ஆனாலும் துணிந்து இறங்கி விட்டேன்.இப்பதிவுகள் மூலம் நம் ஆன்மீக நிலைக்களனைக் குறித்த விபரங்களை நம் தமிழகச் சகோதரர்களுக்கும், தெரியாத தகவல்களை அறியாத ஈழத்து உறவுகளுக்குமாக, நல்லை நகர் மற்றும் நல்லூர்க் கந்தன் ஆலய வரலாறு, பாடல்கள், புகைப்படங்கள், கழிந்த நம் திருவிழாக் கால நினைவுகளாகக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

என்னுடைய இப்பதிவுகளுக்கு உசத்துணை உதவியாக இருந்து உதவும் நூல்கள்
1. "யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு", ஐப்பசி 1993 - கலாநிதி சி.க.சிற்றம்பலம்

2. "யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்து நிலை" ஆவணி 2000 - கார்த்திகேசு சிவத்தம்பி

3. "யாழ்ப்பாணச் சரித்திரம்", நான்காம் பதிப்பு: மாசி 2000,மூலப்பதிப்பு யூலை 1912 - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை

4. "ஈழத்தவர் வரலாறு" இரண்டாம் பதிப்பு: கார்த்திகை 2000 - கலாநிதி க.குணராசா

5. "நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் (வரலாறு)", ஆடி 2005 - கலாநிதி க.குணராசா

6. "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்

இப்பதிவுகளை எழுதும் போது மேலும் சில உசாத்துணை உதவிகள் பெறப்படும் போது அவை இங்கே பதியப்படும்.

"பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே!
ஆறுமுகன் தஞ்சமெடி" - யோகர் சுவாமிகள்
Posted by கானா பிரபா at 8:25 PM 17 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, August 09, 2007

பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!



ஈழத்து நாடக உலகில் தனி நடிப்புத் துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களைப் பற்றி ஏற்கனவே இரண்டு இடுகைகளைத் தந்திருந்தேன்.
கடந்த 2006 ஆம் ஆண்டோடு இவர் கலைத்துறைக்கு வந்து நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையில், கனேடிய தமிழ் கலைஞர்கள் கழகம்
பாரதி புறொடக்சன்ஸ் வழங்கும் கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்”
முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டு விழா வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை)
மாலை 5.30க்கு, Scarborough Civic Centre மண்டபத்தில் (150 Borough Drive
(North-west corner of McCowan Road and Ellesmere Road))இடம்பெறவிருக்கின்றது.
தொடர்புகளுக்கு: (416)529-2821

அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.

வாத்தியார் வீட்டில்

வேலாயுதச் சட்டம்பியார், தனது மனைவி செல்லம்மா, மகன் வசீ, மகள் உமாவுடன் உங்களைச் சந்திக்க வருகின்றார்.














பங்கு கொள்ளும் கலைஞர்கள்
கே.எஸ்.பாலச்சந்திரன்.ஏ.எம்.சி.ஜெயஜோதி, கலிஸ்டா திருச்செல்வம், ஆர் யோகராஜா.



கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் கலைத் துறைக்கு வந்த பின்னணி குறித்த ஒலிப் பேட்டியையும் அதன் எழுத்து வடிவையும் இப்போது தருகின்றேன். ஏப்ரல் மாதம் 2005 ஆம் ஆண்டு நான் எடுத்திருந்த இவ்வொலிப் பேட்டி மூலம் பாலச்சந்திரன் அவர்களது குரலியேயே தன் நடிப்புத் துறை ஆரம்பம் மற்றும் அனுபவங்களின் பகிர்வைக் கேட்கலாம்.



வணக்கம் திரு பாலச்சந்திரன் அவர்களே!
ஈழத்து நாடகப் படைப்புக்கள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் உங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருக்கும்,அந்த வகையில் இந்த நாடக உலகில் உங்களுக்கு ஈடுபாடு எப்படி வந்தது என்று சொல்லுங்களேன்?


எனது சொந்தக் கிராமம் கரவெட்டி, அந்தக் கிராமத்தில் ஆரம்பத்திலே நான் கல்லூரி மாணவனாகப் படித்துக்கொண்டிருக்கும் போதே
நாடகத் துறையில் நான் ஈடுபடத் துவங்கினேன். அதற்குப் பிறகு நான் வேலை நிமித்தம் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பின்னர்
அங்கு என்னோடு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலே பணியாற்றிய திரு கணேசபிள்ளை என்ற நாடகக் கலைஞரே என்னை நாடகத் துறையிலே ஈடுபடுத்தினார். அதன் பிறகு நான் நாடகத்துறையிலே என் காலைப் பதிக்கத் துவங்கினேன்.

நீங்களே தயாரித்து நெறியாள்கை செய்த முதல் நாடகம் பற்றி?

மேடையில் என்பதை விட, நான் எழுதிய நாடகங்கள் வானொலியில் தான் முதன்முதலில் அரங்கேறின. ஆனால் மேடையில் என்பதில் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏறக்குறைய எழுபதுகளிலே இலங்கை ஆயுர்வேதக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாடகம் போடவேண்டும் என்று ஆசைப்பட்ட போது நகைச்சுவை நாடகம் ஒன்றை எழுதி "வாத்தியார் வீட்டில்" என்று நினைக்கிறேன், அந்த நகைச்சுவை நாடகத்தை அவர்கள் மேடையேற்றி நடித்தார்கள். அதுவே நான் எழுதி இயக்கிய மேடை நாடகம்.

அந்த "வாத்தியார் வீட்டில்" என்ற நாடகத் தொடர் பின்னர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஒலியிழைப்பேழைகளில் வெளிவந்தது இல்லையா?

ஆமாம், இலங்கை வானொலியிலே நான் தொடந்து அந்தப் பாத்திரங்களையே முக்கியமாக வைத்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் ஞாயிறு தோறும் ஒலிபரப்பாகிய அந்த நாடகங்களை எழுதி அதில் முக்கிய பாத்திரத்திலும் நடித்தேன். அதன் பின்னரே நீங்கள் சொன்னது போல ஒலியிழை நாடாக்களாக வெளிவந்தன.

அதே போல உங்களுடைய நாடகத் தயாரிப்புக்கள் அனைத்துமே உங்களுடைய சொந்தக் கற்பனையிலே உதித்தவையா அல்லது மற்றைய படைப்பாளிகளின் நாடகப் பிரதிகளையும் பயன்படுத்திக்கொண்டீர்களா?

அனேகமாக தொண்ணூறு வீதம் அல்ல அல்லது அதற்குச் சற்று அதிகமானவை எனது சொந்தப் படைப்புக்கள் தான் எனது நாடகங்களாக வானொலியிலும், மேடையிலும், தொலைக்காட்சியிலும் பின்னர் அவை திரைவடிவம் பெற்றுத் திரைப்படங்களாகவும் வெளிவந்தன.
இரண்டொன்று நான் மேடையேற்றியவை மொழிபெயர்ப்பு நாடகங்கள். அந்த வகையில் பார்த்தால் கூட எனது படைப்புக்கள் தான் அரங்கேறியிருக்கின்றன.

"அண்ணை றைற்" மூலம் தனிநடிப்புத்துறையில் உங்கள் முத்திரையைப் பதித்திருக்கின்றீர்கள், அந்தப் படைப்பு உருவானது பற்றி?

எழுபதுகளிலே என்று நினைக்கின்றேன். இலங்கை வானொலியிலே மக்கள் முன்னிலையிலே ஒலிப்பதிவு செய்யப்படுகின்ற ஒரு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் வந்திருந்தார்கள். இலங்கை வானொலியிலே சானா என்பவர் தான் அப்போது தயாரிப்பாளர்.
தயாரிப்பாளர், நடிகர்கள் நாங்கள் எல்லோரும் தயாராக இருந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக அன்று நாங்கள் நடிக்க இருந்த பிரதிகள் அனைத்துமே தரமானவையாக இருக்கவில்லை. சுவையானவையாகப் படவில்லை. எனவே தயாரிப்பாளர் எங்களை அழைத்து உங்களுக்கு ஒரு மணித்தியால அவகாசம் தருகின்றேன். அதற்கிடையில் நீங்கள் எல்லோரும் உங்கள் உங்கள் இடங்களுக்குச் சென்று தனியிடங்களில் இருந்து கொண்டு ஏதாவது யோசித்துப் பிரதிகளை ஆயத்தப்படுத்திச் செய்யுங்கள் என்றார். நான் கலையகக் கன்ரீனிலே இருந்து கொண்டு இந்தப் பிரதியை எழுதி மேடையேற்றினேன். மேடையேற்றினேன் என்று நான் சொல்வதற்குக் காரணம் மேடையிலே ரசிகர்கள் முன்னிலையிலே ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதுதான் இந்த நிகழ்ச்சி. இவ்வாறாக "அண்ணை றைற்" என்ற தனிநடிப்பை நான் வானொலி மூலமாக ரசிகர்களிடம் எடுத்துச் சென்றேன். இது இலங்கையின் பல பாகங்களிலும், உலகத்தின் பல நகரங்களிலும் இந்த நிகழ்ச்சியை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அதே போல உங்களுடைய நாடகங்களை எடுத்துக் கொண்டால் நகைச்சுவை அம்சம் பொருந்தியவையாகவே இருக்கும், இப்படியான நகைச்சுவைக் கருப்பொருளை மையப்படுத்தி இவற்றை நிகழ்த்தியமைக்கு ஏதாவது காரணம்?

நகைச்சுவை என்பது மக்களைச் சென்றடைவது சாத்தியம் அதிகம். மக்களைக் கவர்வது என்பதில் நகைச்சுவை முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகின்றது. அதேவேளையில் மக்களைச் சிரிக்கவைப்பது என்பது சந்தோஷமான விடயம் தானே? ஏனென்றால் சோகங்களைச் சொந்தங்களைச் சுமந்து கொண்டிருக்கும் எங்கள் மக்கள் கொஞ்ச நேரமாவது சிரிக்க வைக்க முயற்சிப்பது என்பது சந்தோஷமான ஒரு அனுபவம். அந்த வகையில் நான் ஒரு நகைச்சுவைக் கலைஞனாக இனங்காணப்படுவது பெரிய வெற்றி என்று நினைக்கின்றேன்.

ஈழத்துத் திரைப்படங்கள் பலவற்றிலே உங்கள் பங்களிப்பு இருந்திருக்கின்றது, அதைப் பற்றியும் சொல்லுங்களேன்?

ஈழத்துத் திரைப்படங்களின் வரலாற்றிலே முக்கியமான ஒரு திருப்புமுனையாக எங்களது மண்வாசனை வீசும் படைப்பாக வெளிவந்த வாடைக்காற்று என்ற திரைப்படத்திலே ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த வாடைக்காற்றுத் திரைப்படம், செங்கை ஆழியான் எழுதிய ஒரு நாவலைத் தான் படமாக எடுக்கப்பட்டது. எழுபத்து எட்டு என்று நினைக்கிறேன், அந்த நாட்களிலே இந்தியப் பாணியில் அமைந்த ஈழத்துத் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. விதிவிலக்காக எங்கள் மொழி வழக்கு வேண்டி, யாழ்ப்பாண மொழி வழக்குப் பேசும் ஒரு திரைப்படமாக வெளிவந்த போது "விருத்தாசலம்" என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்ததோடு, அந்தத் திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் பணியாற்தறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது மிகவும் மனதுக்கு இதமான ஒரு அனுபவம்.

அந்த வாடைக்காற்று என்ற நாவலைத் திரைக்கதையாக்கும் போது கே.எம்.வாசகர் என்ற வானொலிக் கலைஞரின் பங்களிப்பு இருந்தது இல்லையா?

கே.எம்.வாசகர் அவர்கள் அப்பொழுது இலங்கை வானொலியிலே நாடகத் தயாரிப்பாளராக இருந்தார். செங்கை ஆழியான் அவர்கள் எழுதிய அந்த நாவலைத் ஒரு திரைப்படப் பிரதியாக எழுதுவதில் செம்பியன் செல்வன் என்ற ஒரு எழுத்தாளரின் பங்கும் இருந்தது. இருந்தாலும் கூட அதைத் திரைக்கதையாக எழுதியதில் முக்கியமான பங்கு திரு.கே.எம்.வாசகர் அவர்களுக்கே உரித்தானது.

அதே போல வேறு எந்தெந்த ஈழத்துத் திரைப்படங்களிலே நீங்கள் நடித்திருக்கின்றீர்கள்?

இலங்கையில் வெளிவந்த "அவள் ஒரு ஜீவநதி", "நாடு போற்ற வாழ்க", "ஷார்மிளாவின் இதய ராகம்" போன்ற தமிழ்ப்படங்களிலும், Blendings என்ற இலங்கையில் தயாரான கூட்டுத்தயாரிப்பான ஒரு ஆங்கிலத் திரைப்படத்திலும் நான் நடித்தேன்.



நாடகம், திரைப்படம் என்பவற்றைத் தவிர உங்களுடைய கலை பற்றியதான ஈடுபாடு வேறு எந்தெந்தத் துறைகளிலே இருக்கின்றது?


தொலைக்காட்சி நாடகங்களிலே ஏராளமாக இலங்கையிலும், தற்போது கனடாவிலும் நிறையத் தொலைக்காட்சிப் படைப்புக்களை உருவாக்கிக் கொண்டு வருகின்றேன். எனவே எனது முயற்சிகள் பல்வேறு துறைகளைத் தொட்டுச் செல்லும் முயற்சிகளாகவே எனக்குப் படுகின்றன.

"தெனாலி" என்ற தமிழ்த்திரைப்படத்திற்காக நடிகர் கமலஹாசன் உங்கள் நாடகங்களை வசனப்பயிற்சிக்காகப் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகின்றது. அந்தப் பயிற்சியின் போது அவர் உங்களை அணுகியிருந்தாரா?

உண்மையில் என்னுடைய நாடக ஒலி நாடாக்களை எனது நண்பர் பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள் கமலஹாசனிடம் கொடுத்து, யாழ்ப்பாணத் தமிழ் பேசுவதானால் இவற்றைப் பயன்படுத்திப் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தாராம். அவர் அதனைப் பயிற்சி செய்து நடித்ததன் பின்னர் கனடாவிற்கு வந்த பொழுது தற்செயலாக நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டோம்.
அப்பொழுது தான் இருவரும் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். என்னோடு கமலஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் பங்கெடுத்தபோது "பாலச்சந்திரனின் ஒலி நாடாக்களைக் கேட்டுத்தான் நடித்தேன்" என்று மக்களுக்குச் சொன்னார்.

பெருமையாக இருந்தது, காரணம் என்னவென்றால் கமலஹாசன் என்னால் மதிக்கப்படும் ஒரு தரமான நல்ல கலைஞன். அவரிடம் தேடல் இருக்கின்றது, நிறைய விஷயங்களை அறியவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. புதிதாக ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. அந்த வகையிலே யாழ்ப்பாணத் தமிழை முயன்று ஓரளவாவது சரியாகப் பேசவேண்டும் என்று அவர் முயன்றிருக்கின்றார்.
எவ்வளவு தூரம் வெற்றி கண்டிருக்கின்றார் என்பது மற்றவருடைய அபிப்பிராயம் எப்படியோ தெரியாது . இருந்தாலும் கூட நான் நினைகிறேன், அவர் முயன்றிருக்கின்றார்.

தற்பொழுது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வருகின்றீர்கள், அங்கே நீங்கள் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்து?

கனடாவிலே நான் கனேடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் என்ற ஒரு அமைப்பை நிறுவி ஏராளமான கலைஞர்களை என்னால் இயன்ற வகையில் பயிற்றுவித்து அவர்களைக் கொண்டு ஏராளமான மேடை நாடகங்களை நான் மேடையேற்றியிருக்கின்றேன். புதிய புதிய நாடகங்களை எழுதி மேடையேற்றியிருக்கிறேன். தொடர்ந்து அந்த நாடகளில் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்துத் திரைப்படங்களாக அதாவது Tele films என்று சொல்லக்கூடிய வடிவில் ஆனால் திரையரங்கில் திரையிடக்கூடிய "எங்கோ தொலைவில்", "மென்மையான வைரங்கள், "உயிரே உயிரே" போன்ற திரைப்படங்களையும் வெளியிட்டு , மூன்று திரைப்படங்கள் இப்பொழுதும் தயாரிப்பில் இருக்கின்றன. வானொலித் துறையிலே எனது பங்களிப்புச் சற்றுக் குறைவு. இருந்தாலும் கூட இந்த வகையிலே என் முயற்சிகள் தொடர்கின்றன.

நீங்கள் எதிர்காலத்திலே ஒரு திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டும் என்ற முயற்சியிலே இருக்கின்றீர்களா? அதாவது குறித்த ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் எங்கின்ற முனைப்பு இருக்கின்றதா?

என்னைப் பொறுத்தவரையிலே படைப்புத் துறை என்ற வகையிலே நாடகத்துறையில் தான் என்னால் இயன்றவரையில் நிறையச் சாதித்திருக்கின்றேன். அவற்றை எழுத்து வடிவிலே ஒரு பதிவாகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கின்றது. இதை விட நாடகத்தைத் தவிர சிறுகதைகள், நாவல் போன்றவற்றையும் எழுதியிருகின்றேன். அவை கூட வெகு விரைவில் புத்தக வடிவில் வெளிவர இருக்கின்றன. அதை விட இந்தக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களிடம் எனது பணியைக் கையளித்து அவர்கள் தொடர்ந்தும் இந்த நாடகத்துறையில், சினிமாத்துறையில் என்னால் முடிந்தவரை ஈடுபட என்னால் இயன்ற வகையில் துணை புரிய வேண்டும். ஒரு வழிகாட்டியாக ஓரளவுக்காவது இயங்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.


கலைத்துறையில் நீங்கள் வெள்ளிவிழா ஆண்டைத் தாண்டிவிட்டீர்கள் இல்லையா?


தொண்ணூறுகளில் கொழும்பிலே எனது வெள்ளிவிழாவை ராமதாஸ், ராஜகோபால், பி.எஸ்.அப்துல்ஹமீத், செல்வசேகரன் ஆகியோர் சேர்ந்து பிரமாண்டமாக நடாத்தினார்கள். இப்போது வெள்ளிவிழாவைக் கடந்து அடுத்த ஆண்டு (2006) நாற்பது ஆண்டுகள் கலைத்துறையில் கடக்கவிருக்கின்றேன்.

எம் உறவுகளே! இவ்வளவு தூரம் நாட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்தாலும் கூட ஜெயபாலன் என்ற கவிஞன் சொல்லுவார்

"யாழ் நகரில் என் பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினிலே
தமிழ் நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்பேட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்
ஒஸ்லோவில்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில்
விதிக்குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?”

என்று பரந்து வாழ்கின்றோம், வாழ்ந்தாலும் கூட எம்மொழியை மறக்காமல், எங்கள் பண்பாடுகள், கலைவடிவங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணை புரிய வேண்டும் அதற்கு உங்களுக்கு இறைவனின் ஆசி கிடைக்கவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

புகைப்படங்கள் உதவி: கே.எஸ்.பாலச்சந்திரனின் பிரத்தியோகத் தளம்
Posted by கானா பிரபா at 9:57 PM 17 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ▼  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ▼  August 2007 (16)
      • நல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா
      • பிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திரு...
      • குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண...
      • கந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா
      • மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....!
      • கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா
      • சங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா
      • போர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா
      • உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா
      • யார் இந்த செண்பகப் பெருமாள்? - ஆறாந் திருவிழா
      • நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா
      • அழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா
      • நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா
      • கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா
      • நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்...!
      • பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes