skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Wednesday, June 25, 2008

"எரியும் நினைவுகள்" உருவான கதை

தென்னாசியாவின் சிறந்த நூலகமாகப் போற்றப்பட்டுப் பேணிப்பாதுகாக்கப்பட்ட அந்த அறிவுக்களஞ்சியம் ஒரே இரவில் சாம்பல் மேடாகப் போகின்றது.கனத்த மெளனத்தைக் கலைக்க ஆரம்பிக்கின்றது "எரியும் நினைவுகள்" வழியே வரும் சாட்சியங்கள்.

தன் உறவுகளையும், ஊரையும் தொலைத்த அதே வகையான சோகத்தைத் தான் ஒவ்வொரு தமிழ்மகனும் இந்த நூலகத்தை இழந்த தவிப்பாகவும் தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றான். அந்த சாட்சியங்களே இந்த ஆவணப்படத்தின் கூட்டில் நின்று சாட்சியம் பகிர்கின்றன. தாம் சேர்த்து வைத்த அசையும், அசையா என்று எல்லாச் செல்வங்களையும் ஒரே நொடியில் தொலைக்கும் வாழ்க்கை தான் அன்றிலிருந்து இன்று வரை ஈழத்தமிழனுக்கு வாய்த்திருக்கின்றது. வெறும் வாய்வழியே சொல்லப்படும் சோகவரலாறுகள் தான் இன்று எமக்கான வரலாற்று ஆதாரங்கள். அந்தச் சோக வரலாறுகளில் ஒன்றான யாழ் பொது நூலகம் எரிப்பையும் அந்தக் காலகட்டத்தில் தம் உயிராகவும், ஊனாகவும் இதைப் பேசத் தொடங்குகின்றார்கள். "எரியும் நினைவுகள்" அவற்றை ஒளி வழி ஆவணப்படுத்துகின்றது.

கடந்த வாரம் தான் இந்த ஆவணப்படத்தை முழுமையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கின்றது. இந்த "எரியும் நினைவுகள்" ஆர்ப்பரிக்கும் சிந்தனைகளோடும், உணர்ச்சி வசப்படும் பேச்சுக்களோடும் அல்லாமல் மெதுவாக ஆனால் வீரியமாக அந்த அறிவுசால் ஆலமரம் வீழ்ந்த கதையைச் சொல்லி நிற்கின்றது. பொதுசனத்தொடர்பூடாகங்களில் நம் ஈழத்தவர் அதிக முனைப்புக் காட்டி வரும் வேளை ஆவணப்பட முயற்சிகள் மிக மிகக்குறைவாகவே இருக்கின்றது. நம் இருண்ட சோக வரலாறுகள் ஒளி ஆவணப்படுத்தல் வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலைமுறையும் தம்முள்ளே இவற்றைப் புதைத்து வைத்து அவை தொலைந்து போனதாகிவிடும். அந்த வகையில் "எரியும் நினைவுகள்" என்னும் இந்த ஆவணப்படம் உண்மையிலேயே நல்லதொரு விதையாக விழுந்திருக்கிறது.

இந்த ஆவணப்படத்திற்கான முழுமையான தரவுகளும், சாட்சியங்களும் சொந்த மண்ணில் இருந்தும், சிறீலங்காத் தலைநகரில் இருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை பிற்தயாரிப்பு முயற்சிகள் திரைத்துறைத் தொழில்நுட்பம் சிறப்பானதொரு இடத்தில் இருக்கும் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. யாழ் நகரின் அன்றைய மேயர் ராஜா விஸ்வநாதன் 1981 ஆம் ஆண்டு நூலக எரிப்பு நடந்த பின்னர் வெளியிட்ட கருத்து வீடியோ, இந்த நூலக எரிப்பை முதலில் கண்ணுற்ற யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் தகைநிலைப் பேராசியர் சிவத்தம்பி போன்ற கல்வியாளர்கள், நூகலர்கள், நூலகத்து வாசகர்கள் என்று பலரின் நினைவுக்கதவுகளை இந்த ஆவணப்படம் திறந்திருக்கிறது. நிகரி திரைப்பட வட்டம் சார்பில் தயாரிக்கப்பட்டு சி.சோமிதரனின் இயக்கத்திலும், தமிழகத்தின் தேர்ந்தெடுத்த திரைத் தொழில்நுட்பவியலாளர்களின் கூட்டிலும் இந்த ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் ஆகிய மொழிகளில் பேசும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த ஆவணப்படத்தைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கும், இந்த ஆவணப்படத்தைப் வாங்குவதற்கும்
http://burningmemories.org/

அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இவ் ஆவணப்பட இயக்குனர் செல்வன் சி.சோமிதரனை வானலை வழி சந்தித்திருந்தேன்.

ஊடகவியலாளரும், எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனருமான செல்வன் சோமிதரன் சொல்லும் " எரியும் நினைவுகள்" உருவான கதை




வணக்கம் சோமிதரன், நீங்கள் இலங்கையிலே இருந்த காலத்தில் ஊடகவியலாளராக உங்களை உருவாக்கிக் கொண்டீர்கள். அதனைத் தொடர்ந்து இப்பொழுது எரியும் நினைவுகள் என்கின்றஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். முதலில் உங்களுக்கு இந்த ஊடகத்துறையில் உங்களை வளப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி சொல்லுங்களேன்?

இலங்கை வானொலியிகள் மீதான ஈர்ப்பு தான் எனக்கு இந்த ஊடகத்துறையில் வரவேண்டும் என்கிறவிருப்பை உருவாக்கியது என்பேன். ஏனெனில் நான் அடிப்படையில் ஒரு கணிதத்துறை மாணவன். உயர்தர வகுப்புபடித்ததன் பிறகு கொழும்பில் இருந்த காலகட்டங்களில் இலங்கை வானொலியின் நெருக்கம், அவ்வானொலியின் நாடகங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு, இலங்கை வானொலியின் நாளைய சந்ததி என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பு இவையெல்லாமே இலங்கை வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளர் என்னும் இடத்தை நோக்கி எடுத்துச் சென்றது. நான் ஊடகத்துறையில் வந்தபொழுது பின்னாலுள்ள சமூகம் பற்றிய பார்வை வராத காலகட்டம் என்று சொல்லலாம்.
அதற்குப் பிறகு வானொலியில் இருந்து பத்திரிகைத் துறைக்கு வரவேண்டிய நிலமை வந்தது. ஏனெனில் வானொலியில் இருந்தோ, ஸ்ரூடியோவுக்குள் இருந்தோ எதையும் செய்யமுடியாத நிலமை. ஏனெனில் இலங்கை வானொலி வந்து ஒரு இருபது வருஷங்களுக்கு
முன்னாலையோ, அல்லது பதினைந்து வருஷங்களுக்கு முன்னாலையோ இருந்த நிலமையில் இருக்கவில்லை. நான் சின்ன வயசில் கேட்ட இலங்கை வானொலி இப்போது இல்லாமல் போச்சு.

இந்த மாதிரிச் சூழலில் நான் பத்திரிகைத் துறைக்குள் வந்தேன்.பத்திரிகைத் துறைக்குள் வந்த பிறகு தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு மறைந்த ஊடகவியலாளர் சிவராமினால் உருவாக்கப்பட்ட North eastern Herald என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றியிருந்தேன். திரு தராக்கி சிவராம் மற்றும் திரு சிவநாயகம் இருவருடனும் சேர்ந்து அந்தப் பத்திரிகையில் பணியற்றியிருந்தேன். அது ஒரு பெரிய கொடுப்பினையாக இருந்தது என்றே சொல்வேன்.நிறைய விஷயங்களை அதன் மூலம் சமாதான காலத்திலே, நிறையச் செய்திகளை, போர், அரசியல் என்பதற்கு அப்பாற்பட்டு தமிழர்களுடைய அபிவிருத்தி தொடர்பாக, எங்களுடைய வளங்கள், பண்பாடு தொடர்பாக, எங்களுக்குள் இருக்கக்கூடிய அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கட்டுரைகளை எழுதக்கூடிய வாய்ப்பை எனக்கு அது உருவாக்கியது.அந்தத் தொடர்ச்சி காரணமாக எனக்கு பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது.

நீங்கள் ஊடகத்துறையில் இருந்த காலகட்டத்தில் இருந்த ஊடகச் சூழல் எப்படி இருந்தது?

அதாவது 2002 ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தின் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்வதற்காகப் போகின்றேன். நான் பிறந்தது யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறையில், ஆனால் வளர்ந்தது முழுமையாக மட்டக்களப்பில். அதாவது தொண்ணூறுகளின் முழுமையான காலகட்டத்தில் என் வளர்ப்பு மட்டக்களப்பிலேயே இருந்தது. திரும்பவும் நான் 2002 ஆம் ஆண்டு யாழ் போகின்றேன். அதாவது A9 பாதை திறந்த காலகட்டத்தில் முதற்தொகுதி பயணிகளோடு போய் தினக்குரல் பத்திரிகையில் வேலை செய்தேன். பிறகு நாலைந்து மாதத்தில் மீண்டும் கொழும்புக்கு வந்துவிட்டேன். இந்தக் காலப்பகுதி எல்லாமே சமாதான காலப்பகுதி தான். சுதந்திரமாக நாங்கள் வேலை செய்யக் கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தலும் இருக்கவில்லை. எனவே நிறையத் தகவல்களையும், செய்திகளையும் நாங்கள் சொல்லக் கூடியதாகவும் இருந்தது. அதன் பின்னால் 2004 இல் நிலமை மோசமடையத் தொடங்கியது. அதாவது கிழக்குப் பகுதியில் முற்றுமுழுதாகப் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்ட நிலமை வந்தது. பிறகு ஏப்ரல் 28 ஆம் திகதி, 2005 இல் தராக்கி சிவராம் அவர்கள் கொல்லப்பட்டார். எனவே 2005 இற்குப் பிறகு எல்லோருக்குமே தெரிந்த விடயமாக இந்த ஊடக அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

உங்களுடைய ஆரம்பம் என்பது நீங்கள் குறிப்பிட்டது போன்று வானொலி பின்னர் பத்திரிகைத்துறை என்று மாறி தற்போது இன்னொரு ஊடக வடிவம் அதாவது ஆவணப்படங்களை எடுக்கும் முனைப்பு என்று தற்போது மாறியிருக்கின்றது. நம் சமூகத்தைப் பொறுத்தவரை ஏராளமான குறும்படங்கள் வந்திருக்கின்றன. அந்த முயற்சிகள் தாயகத்திலும், புலம்பெயர்ந்த சூழலிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் ஆவணப்பட முயற்சிகள் என்பது மிக மிக அரிதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் உங்களுக்கு இந்த ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு எப்படி வந்தது?

நான் முதலில் North eastern Herald இல் வேலை செய்த காலப்பகுதியில் நான் எழுதிய இரண்டு கட்டுரைகளை மையப்படுத்தி பி.பி.சி அந்தக் கட்டுரைகளுக்கு அமைவாக ஆவணப்படங்களை எடுத்தது. அதன் பொருட்டு அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். அப்போது தான் அதன் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு Visual Media வில் நுளைந்து அதன் மூலம் நிறையச் செய்யலாம் என்று என் மனதில் பட ஆரம்பித்தது. இந்தக் காலப்பகுதியில் நண்பர் சரிநிகர் சிவகுமார் அவர்கள் சொன்னார் நாங்கள் அடுத்தகட்டமாக Visual ஆக ஏதாவது செய்வோம் என்றார். இப்படியாக இலங்கையில் தொலைக்காட்சிப் படமோ அல்லது ஒரு ஆவணப்படமோ செய்வோம் என்று நாம் தீர்மானித்தோம். ஏனெனில் Visual revolution என்ற ஒன்று வந்திட்டுது.அச்சூடகத்துறையில் இருந்து Visual Media வின் ஆக்கிரமிப்பு இப்போது பரவலாக இருந்து வருகிறது. அத்தோடு அந்த ஊடகமும் மிகவும் இலகுவாக்கப்பட்டு, எமது கைக்கு அண்மையதாக வந்து விட்டது. ஆகவே இந்த ஊடகத்தை நான் பயன்படுத்தவேண்டும் என்ற முனைப்பில் நான் சென்னையில் லயோலா கல்லூரியில் Media Visual Communication கல்வி கற்றேன். எனவே இந்தக் காலப்பகுதியில் நாங்கள்
Visual Media வை கையில் எடுக்கவேண்டும் என்ற நிலமை உருவாயிற்று. அதிலும் குறிப்பாக ஆவணப்படங்களை எடுக்கவேண்டும் என்ர முடிவை எடுத்தோம்.

இதைப்பற்றி விரிவாகப் பேச ஆசைப்படுகின்றேன். சாதாரணமாக எங்களுக்கு வந்து படம், சினிமா, பிலிம் என்று பல்வகையாகச் சொல்லப்படுவது எங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தப்படுகின்றது என்றால் சாதாரணமாக தமிழகத்தில் இருந்து வரும் வியாபாரத்தனமான படங்களைத் தான் தமிழர்கள் நிறைய அனுபவிக்கின்றோம். அதிலும் குறிப்பாக் ஈழத்தமிழர்களுக்கு இந்தப் போர்ச்சூழலில் வேறு எந்தப் பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத சூழலில் எமக்கு கிடைக்கக்கூடிய ஒரே பொழுதுபோக்காக இருப்பது இந்த தமிழ் சினிமா. சதா சர்வகாலமும் தமிழ்சினிமாவை போட்டு போட்டு படமென்றால் தமிழ் சினிமா என்ற நிலமையில் இருந்து வந்தோம். இந்தச் சூழலில் அதற்கு மாற்றான ஒரு ஊடகத்தைத் தேடிக்கொண்டுவரவேண்டிய ஒரு தேவை இருந்தது. அதனால் தான் நாங்கள் ஆவணப்படங்களைத் தெரிவு செய்தோம். ஏனெனில் ஆவணப்படத்திற்கும், குறும்படத்திற்கும் வித்தியாசம் தெரியாத நிறையப் பேர் இருக்கிறார்கள். பொதுவாக தமிழ்ச்சூழலில் எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தமிழர்களை மட்டுமன்றி தமிழகத்திலும் இந்த ஆவணப்படம் வளர்ச்சி பெற்று வருவதாக இருக்கின்றதே தவிர முற்றாக வளர்ச்சி பெற்ற ஒன்றாக ஆவணப்படம் என்பது இருக்கவில்லை.

அதாவது இந்த ஊடகத்தில் நாம் கடக்கவேண்டிய படிகள் பல உள்ளன, இதற்கு முன் மாதிரியாக பல ஆவணப்படங்கள் வெளிவரவேண்டும். அந்தவகையில் நீங்கள் 27 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட அந்த அனர்த்தம் தாங்கிய ஆவணப்படமாக இந்த எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள். இந்த ஆவணப்படம் உருவான பின்னணியைச் சொல்லுங்களேன்?

நான் முன்னர் சொன்னது போல நானும் சிவகுமாரும் 2004 இல் தீர்மானித்ததன் அடிப்படையில் இங்கே, இலங்கையிலே நிறைய ஆவணப்படங்களை உருவாக்குவதென்று முடிவெடுத்தோம். ஏனெனில் தமிழ்சினிமாவுக்கு நிகராக ஒரு சினிமாவை எடுப்பது என்பது சாத்தியமற்ற விடயம். எங்களுக்கு இருந்த குறுகிய வசதிகளைப் பயன்படுத்தி எங்களிடம் இருக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவேண்டுமென்ற தேவை இருந்தது. எனெனில் எங்கட தமிழ்ச்சமூகத்தின் பெரிய குறைபாடு என்னவென்றால் நாங்கள் எதையுமே ஆவணப்படுத்துவதில்லை. இந்தச் சூழலில் நாங்கள் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்த விடயம் யாழ்ப்பாண பொது நூலகம். ஏனெனில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 27 வருஷமாயிற்று. இந்த இனப்போரின் முக்கியமான ஒரு விடயமாக இந்த யாழ் நூலக எரிப்பே இருக்கின்றது. இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு இந்த நூலகம் எப்போது எரிக்கப்பட்டது போன்ற விபரங்களே தெரியாது. எங்களைப் போன்ற அடுத்த சந்ததி எரிக்கப்பட்ட இந்த நூலகத்தின் சாம்பலில் பிறந்து, தவழ்ந்து , வளர்ந்து, நாடுகள் தேசங்கள் தாண்டி ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைமுறை. எனவே இந்தத் தலைமுறைக்கு வந்து எமக்கு முன்னான ஒரு தலைமுறை வந்து எவ்வளவு செளகரியமாக இருந்தது, எவ்வளவு வளங்களோடு இருந்தது, எவ்வளவு தன்னிறைவாக இருந்தது, பின்னர் அவையெல்லாம் எப்படி எப்படியெல்லாம் அழிக்கப்பட்டது. எப்படித் திட்டமிடப்பட்டு ஒரு இனவாதத்தினால் அழிக்கப்பட்டது என்பதைச் சொல்லவேண்டிய தேவை இருந்தது. அதனுடைய மிகச்சிறந்த குறியீடாக இந்த யாழ்ப்பாண நூலகம் விளங்குகின்றது.

நான் பிறந்து சரியாக 19 ஆம் நாள் இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. மே 31, 1981 ஆம் ஆண்டு இந்த நூலகம் எரிக்கப்படுகின்றது. அந்தச் சம்பவத்தின் பின்னர் தான் போர் உக்கிரமடைகின்றது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான ஆயுதப்போராட்டக் குழுக்கள் வருகின்றன. 83 இலே திரும்பவும் கலவரம் நடக்கின்றது. அதன் பின்னர் முழுமையாக ஆயுதப் போராட்டம் வெடிக்கின்றது.
இந்த 27 வருஷகால வரலாற்றை நூலகத்தை வைத்து பதிவுசெய்யவேண்டும் என்பதற்காக நூலகத்தினை ஆவணப்படமாக்கும் முயற்சியை நாங்கள் 2005 இல் ஆரம்பித்தோம். ஆனால் ஒரு ஆவணப்படம் என்பது மிகச்சாதாராண விடயம் அல்ல. அதற்கான வளங்கள், நிதித்தேவைகள் நிறைய இருந்தன. எனவே 2005 இலேயே அதை ஆரம்பிக்க முடியாமல் போயிற்று. 2006 ஆம் ஆண்டில் நூலகம் எரிக்கப்பட்ட 25 வருஷத்தில் நாங்கள் படப்பிடிப்புக்குத் தயாரானோம். 2006 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்துக்கான A9 பாதை மூடுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு வரை படப்பிடிப்பை நடத்தியிருந்தோம். யாழ்ப்பாணத்தில் அப்போது படப்பிடிப்பை நடத்துவது மிகச்சிரமமாக இருந்த சூழலாக இருந்தது. நான் இந்தப் படப்பிடிப்புக்கு யாழ்ப்பாணத்திற்கு யாரையுமே கொண்டுபோக முடியாத சூழலில் சந்திரன் என்கிற கார் ஓட்டுனரோடு மட்டுமே இருந்து எடுக்கவேண்டியிருந்தது. ஊடகவியலாளர்கள் பிஸ்கட் பெட்டிக்குள் கமராவை மறைத்துக் கொண்டுபோன காலம் அது.

இந்த யாழ்நூலகம் குறித்த ஆவணப்படம் குறித்த தேடல்கள் மேற்கொண்டபோது அந்தத் தேடல்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி அங்கேயே அமைந்திருந்தனவா அல்லது கொழும்பிலும் மேலதிக தேடல்களை மேற்கொண்டிருந்தீர்களா?

உண்மையைச் சொல்லப்போனால் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எதுவும் இருக்கவில்லை. யாழ்ப்பாண நூலகத்தில் கூட எந்தவிதமான ஆவணமும் இல்லை. ஏனெனில் சேர்த்துவைத்ததெல்லாமே காலம் காலமாக நடந்த குண்டுத்தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் எல்லாமே அழிந்து போயிற்று. எனவே யாழ்ப்பாணத்து மக்களிடமும் எதுவுமே இல்லை. எல்லோருமே ஒரு பெரும் இடப்பெயர்வைச் சந்தித்துத் திரும்பி வந்த சமூகம் அது. எனவே அங்கே வந்து எந்தப் பெரிய ஆவணமும் இல்லை. பழைய புகைப்படங்கள் கூட இல்லாத சூழல்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் நூலகம் தொடர்பானவர்களின் பேட்டிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. கொழும்பில் இருக்கும் இலங்கைத் தேசிய நூலகத்தில் பழைய பத்திரிகைகளை எடுக்கக்கூடியதாக இருந்தது. அதுவும் சிரமமான விடயம் தான். இலங்கை தேசிய நூலகம், இலங்கை தேசிய சுவடிகள் கூடம் போன்ற இடங்களுக்குச் சென்று இலஙகை இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை எடுப்பது மிகச்சிரமமான விடயம் தான். ஆனாலும் தேசிய நூலகத்தில் இருந்த அந்தக் காலத்தில் வந்த கிட்டத்தட்ட எல்லாப் பத்திரிகைகளின் பேட்டிகள், செய்திகள் எல்லாவற்றையும் எடுத்திருந்தோம். இதைத்தவிர வெளிநாட்டில் வாழ்வோர், தமிழகத்தில் இருப்போர் என்று பல்வேறு
யாழ் நூலகம் தொடர்பில் என்னென்ன தகவல்கள் இருக்குமோ அவற்றையெல்லாம் கடந்த மூன்று வருடமாகச் சேகரித்தோம். அதில் முதன்மையானது க.சி.குலரத்தினம் அவர்கள் எழுதிய "யாழ்ப்பாண நூலகம் ஓர் ஆவணம்" என்னும் புத்தகம். அந்தப் புத்தகம் தான் யாழ்ப்பாண நூலகம் குறித்த முழுக்கதையையுமே எனக்கு தீர்மானிக்க உதவியது.

தவிர யாழ்ப்பாண நூலகம் சார்ந்த ஆட்கள், அந்தக் காலப்பகுதியில் இருந்த மக்கள் இவர்களிடமும் தகவல்களைப் பெற்றேன். இப்படியாக கடந்த மூன்று வருடகாலமாக நிறையத் தேடிப் பெற்றுக்கொண்டோம். இன்னும் பலரிடமும் நிறையத்தகவல்கள் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த "எரியும் நினைவுகள்" என்ற ஆவணப்படம் மூலம் நீங்கள் சொல்ல நினைப்பது என்ன? இந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் என்று நீங்கள் யாரைத் தீர்மானித்திருக்கின்றீர்கள்?

குறிப்பாக சில ஆவணப்படங்களுக்கு ஒருவகையான பார்வையாளர்கள் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஆவணப்படத்தினுடைய பார்வையாளர்கள் பல்வேறு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள்.ஒன்று வந்து இந்த நூலகத்தின் எரிவு காலப்பகுதிக்கு முன்னர் நூலகத்தோடு மிகப்பரிச்சயமாக ஊடாடிய மக்கள், நூலகத்தை இழந்து நிற்பவர்கள். இன்னொன்று இந்த நூலகம் இருந்தது பற்றியும், அந்த நூலகம் குறித்த நேரடி அனுபவமும் இல்லாத எங்களுடைய தலைமுறையினர். இந்த இரண்டு தலைமுறையும் எங்கள் மத்தியில் இருப்பவர்கள். இன்னொன்று புலம்பெயர்ந்த எமது தமிழ் மண்ணை அறியாத இன்னொரு தலைமுறை. இப்படி எமது சமூகத்தின் எல்லாத் தலைமுறைக்கும் இது போய்ச்சேரவேண்டும் என்பதே எம் நோக்கம். இந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தாலும் எமது தமிழ்ச்சமூகத்தினுடைய அடையாளமாக இருக்கின்றது. எனவே இந்த அடையாளம் குறித்து எல்லாத் தமிழர்களும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே முக்கியமாக எமது தமிழ்ச்சமூகத்துக்குப் போக வேண்டும்.

இரண்டாவது வந்து இந்தத் தமிழ்ச்சமூகத்துக்கு வெளியில் இருக்கக்கூடியவர்கள். இந்த ஆவணப்படம் நான்கு மொழிகளில் வந்திருக்கின்றது. தமிழ் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜேர்மன் என்று. எங்களுடைய சமூகத்தின் பிரச்சனைய மற்றைய சமூகத்திற்கு தெளிவு படுத்தக்கூடிய தேவையும் இருக்கின்றது. இலங்கையில் நடந்த மிக மோசமான ஒரு வன்முறையை மற்றைய சமூகத்திற்கு சொல்லவேண்டிய தேவையாக இருக்கிறது. எனவே இந்த ஆவணப்படம் எங்கட சமூகத்துக்கும் சொல்லும் அதே வேளை எங்கட சமூகத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கும் இந்தச் சேதியைச் சொல்கின்றது.

இந்த நூலகம் சம்பந்தப்பட்ட மற்றும் வெளியாட்கள் என்று இந்த ஆவணப்படத்திற்கு யார் யாரெல்லாம் பயன்பட்டார்கள்?

இந்த நூலகத்தின் ஊழியர்களாக இருந்தவர்கள், இந்த நூலகம் எரிக்கப்படும் போது இருந்த நூலகர், அதற்குப் பிறகு வந்த சில நூலகர்கள் மற்றது இலங்கை அரச தரப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தவிர 1981 ஆம் ஆண்டிலும் 2006 இலும் யாழ் மாநகர ஆணையாளராக இருந்த திரு சி.வி.கே.சிவஞானம் அவர்கள், முதன் முதலில் இந்தச் சம்பவத்தைப் பார்த்தவர் அவர் தான். இப்படிப் பல்வேறுபட்டவர்கள். பழைய வீடியோ படங்களின் பகுதிகள், அதாவது 1981 ஆம் ஆண்டு யாழ் மாநகர முதல்வராக இருந்த திரு விஸ்வநாதன் அவர்கள் அப்போது கொடுத்திருந்த பேட்டி, மற்றும் பழைய வீடியோ காட்சிகள் என்று எல்லாமே சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அதாவது 49 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்திற்கான தயாரிப்பைச் செய்ய உங்களுக்கு மூன்று ஆண்டுகள் பிடித்தது என்று சொல்லியிருக்கிறீர்கள், அதாவது தகவல்களைத் திரட்டல், பின்னர் முறையாக ஒழுங்குபடுத்தல், பொருளாதார ரீதியாக இந்தத் திட்டத்திற்கு வலுப்படுத்தி இந்த முயற்சியில் இறங்குவது என்பதற்காக இவ்வளவு காலமும் பிடித்திருக்கிறது இல்லையா?

பொருளாதார ரீதியில் எங்கள் சமூகத்தில் வலுவான எந்த அமைப்புக்களும் கிடையாது. மற்றது அது பற்றிய கரிசனையும் எங்கள் மத்தியில் கிடையாது. எங்களிடம் இருக்கும் வளர்ச்சி, வாய்ப்புக்கள் இவையெல்லாம் நிறைய விடயங்களை ஆவணப்படுத்த முடியும். 27 வருஷத்துக்குப் பிறகு ஒரு விஷயத்தை ஆவணப்படுத்தவேண்டுமென்றோ, இந்த யாழ்ப்பாண நூலகத்தை மட்டும் தான் ஆவணப்படுத்த முடிஞ்சது என்பது மிகத்துரதிஷ்டவசமான ஒரு விஷயமாகும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக முன்னர் சமாதான காலத்தில் மிக அதிகமான விடயங்களை நாம் ஆவணப்படுத்தியிருக்க முடியும். ஆனால் நாம் செய்யவில்லை. ஆவணப்படுத்தல் ஊடாகத் தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கவும் இல்லை. இந்தக் காலப்பகுதியில் எங்கள் சொந்த முயற்சியாகவே, வேறு வேலைகள் மூலம் கிடைத்த பணத்தைப் போட்டு செய்யவேண்டிய நெருக்கடியான நிலமை இருந்தது. சிலர் கொடுத்த சிறு பண உதவிகள் இப்படியானவற்றின் மூலமே இதக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது.

இப்பேட்டியின் நிறைவாக நீங்கள் நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?

நான் சொல்ல விரும்புவது இது தான், நாங்கள் காலம் காலமாக எதையும் ஆவணப்படுத்தாமல் இருப்பதென்பது எங்களுக்கு பெரிய சாபக்கேடான விடயம். எனக்கு இந்த ஆவணப்படுத்தவேண்டும் என்ற முனைப்பு தென்றியது 2005 இல் கோவா திரைப்பட விழாவுக்கு சென்ற போது அங்கே ஒரு மணிப்பூர்காரர் இருந்தார். அவர் தன் மணிப்பூர் பற்றிய பிரச்சனையைச் சொல்வதற்கு அவரிடம் ஒரு ஆவணப்படம் இருக்கு. ஆனால் அப்போது என் நாட்டின் பிரச்சனையைச் சொல்ல ஒரு ஆவணப்படமும் என்னிடம் இருக்கவில்லை.
எனவே குறைந்த பட்சம் ஏதாவது ஒரு ஆவணப்படம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. இது எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனையும் கூட. எங்களுக்கு எங்கள் பிரச்சனையைச் சொல்வதற்கான ஆவணப்படம் வேண்டும். சரியான ஊடகம் அதுவாகத் தான் இருக்கும். ஒரு ஆவணப்படம் எல்லா மொழிகளையும், நாடுகளையும், வரையறைகளையும் எங்கெங்கு தாக்கம் செலுத்தவேண்டுமோ அதைச் சரியான முறையில் தாக்கம் செலுத்தக் கூடிய ஒன்றாக ஆவணப்படங்கள் இருக்கும். எங்கள் பிரச்சனை குறித்தும், மக்களுடைய அவலங்கள் குறித்தும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் மூலம் பதிவு செய்ய்யப்படவேண்டும் என்பதே என்பதே என் விருப்பம்.
Posted by கானா பிரபா at 7:53 PM 18 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, June 16, 2008

சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!

தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது பிறந்த இடமான தெல்லிப்பழையில் இன்று நடைபெற்று தெல்லிப்பழை கட்டுப்பிட்டி மயானத்தில் தகனக் கிரிகைகள் நடைபெற்றிருந்தது.

ஈழத்தில் பிறந்த எவருமே தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஆன்மீகச் செம்மலைத் தெரியாமல் வாழ்ந்திருக்க முடியாது. அவரது சொற்பொழிவுகளும், சைவ சமயப் பாடநூல்களிலும், ஆன்மீக இதழ்களிலும் கொடுத்த அவர் தம் கட்டுரைகளும் இன்னும் என்னைப் போன்ற பலர் நெஞ்சில் பசுமரத்தாணியாய் இருக்கும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.



இன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்பு அஞ்சலி நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் பங்கேற்று அஞ்சலிப் பகிர்வை வழங்கியோர்:

* ஆன்மீகப் பேச்சாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்,
* அபயகரம் ஆதரவற்றோர் உதவி அமைப்பின் நிறுவனர் திரு சிவானந்தன்,
* யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ்,
* சிட்னி வாழ் சைவத்தமிழ் அறிஞர் திரு.திருநந்தகுமார்,
* கம்பவாரிதி இ.ஜெயராஜ்,
* ஈழத்தமிழர் கழகம் அமைப்பின் தலைவர், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* வானொலி மாமா திரு மகேசன் அவர்கள்
* திருநெறிச்செல்வர், சிவத்தமிழ்ச்செல்வியின் வழிகாட்டலில் ஆன்மீக, அறப்பணி ஆற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்கள்


அந்த நிகழ்ச்சியின் ஒலித் தொகுப்பைக் கேட்க (அளவு: 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 31 செக்கன்)



தரவிறக்கிக் கேட்க

யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நிகழ்வின் தொகுப்பும், அஞ்சலிப்பகிர்வும்


துர்க்கா துரந்தரியின் ஆன்மீக, அறப்பணியின் வழி செயலாற்றும் சிவநெறிச் செல்வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்கள் வழங்கும் "சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நாட்களும் அஞ்சலிப்பகிர்வும்".


ஈழத்தின் ஆன்மீகச் செம்மல் வசந்தா வைத்திய நாதன் கொடுத்திருந்த அஞ்சலிப் பகிர்வு



அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் "கம்பவாரிதி" இ.ஜெயராஜின் அஞ்சலிப் பகிர்வு


ஈழத்தின் ஆன்மீகச் செம்மல் வசந்தா வைத்திய நாதன் நமது வானொலிக்குக் கொடுத்திருந்த அஞ்சலிப் பகிர்வின் எழுத்து வடிவம்

துர்க்காபுரம் துர்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவு யாழ்ப்பாண நாட்டுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஓர் பேரிழப்பு. மிகச்சிறந்த ஆளுமை மிக்க ஒரு பெண்மணி. ஆரம்பகாலத்திலே ஆசிரியராக இருந்து தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டவர். சொல்லையும் செயலையும் ஒருங்கு போல செயற்படுத்துபவர். அதுதான் அவருடைய திறமை. பலபேர் சொல்லுவார்கள், செய்ய மாட்டார்கள். ஆனால் சொல்லையும் செயலையும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக கொண்டவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவருடைய பல்வேறு பட்டங்களிலே "துர்க்கா துரந்தரி" என்ற பட்டம் அவருக்கு மிகப்பொருத்தமானது. துரந்தரர் என்ற சொல்லுக்கு பாரத்தை ஏற்றுக் கொண்டவர் என்பது பொருள். துர்க்கா துரந்தரி என்று சொன்னால் துர்க்கையினுடைய பாரத்தை ஏற்றுக் கொண்டவர். உண்மையிலேயே அந்த துர்க்கையினை இதயதெய்வமாகக் கொண்டு அந்த ஆலயம் மேம்படச் செய்தவர் அவர். அவருடைய சொல் அவருடைய செயல் இரண்டுமே மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. ஒரு ஆலயம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தெல்லிப்பழை துர்க்கை ஆலயம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பழைய காலங்களிலே கோயில்களிலேஅறங்காவலர்கள் ஆண்களாகவே இருந்தவர்கள். நானறிந்த வகையில் பெண்கள் அறங்காவலர்களாக எந்தக் கோயில்களிலும் இருந்ததில்லை.ஆனால் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தான் முதன்முதலாக தெல்லிப்பழையிலே அறங்காவலராகப் பணியேற்று அதைச் செம்மையாக நடாத்தியவர்.

ஆலயம் என்பது வெறும் வழிபாட்டு இடம் மட்டுமல்ல. அந்த ஆலயம் என்பது பலவேறு பணிகளுக்காக ஏற்பட்டது. நாக்கள் பழைய காலங்களிலே பார்க்கும் போது ஆலயங்கள் தேர்தல் களங்களாக இருந்தன, ஆதுலர்சாலைகளாக இருந்தன, சிறந்த நூலகங்களாக இருந்தன, வாழ்வர்றோருக்கு வதிவிடங்களாக இருந்தன, சிறந்த யாசக மண்டபங்களாக இருந்தன, நடனச் சாலைகளாக இருந்தன, நாடகச் சாலைகளாக இருந்தன, உணவு விடுதியாகவும் இருந்தது என்பது பழைய நூல்களில் இருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற செய்திகள். ஆனால் இப்பொழுது அதை நடைமுறைப்படுத்தியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அதுதான் நான் அவரிடம் மிகவும் வியந்த ஒன்று. அவர் அந்த ஆலயத்திலே வருகின்ற அந்த வருவாயை மிகச்செம்மையாகச் செம்மைப்படுத்தி எப்படிப் பயன்படுத்தவேண்டுமோ "வளர்வதன் பார்த்தியுள் நீர் சொரிந்தற்கு" என்று வள்ளுவர் சொல்லுவது போல அதை வளர்ச்சிக்கான பணிகளிலே ஈடுபடுத்தியவர். அவர் செய்த அறப்பணிகள் என்பது பட்டியலிட்டுக் கூற முடியாது. ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்தல், கைமை வாய்ந்த பெண்களுக்கு உதவி செய்தல், அதுமட்டுமல்ல உணவுச்சாலைகள், ஓவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு உணவளித்தல் என்று பலவகையான அறப்பணிகளை அவர் ஏற்படுத்தியவர். அதுமட்டுமல்ல அவர் தன் பிறந்த நாளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு, மருத்துவ நிலையங்களுக்கு, வளருகின்ற சிறார்களுக்கு என்று பலவிதத்திலும் உதவி செய்தவர்.

ஒரு ஆலயம் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு தெல்லிப்பழை ஆலயம் தான் ஒரு முன்மாதிரியாக இருந்தது. அதனைப் பல ஆலயங்களும் பின்பற்ற வேண்டும். இன்று தெல்லிப்பழை ஆலயம், தங்கம்மாவினுடைய பெயரைச் சொன்னால் நன்கொடைகள் வந்து குவிகின்றன. காரணம் என்ன, மக்கள் அவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை. தாங்கள் கொடுக்கின்ற அந்தப் பணமானது வீணாகாது, அது மிகவும் பயன்பாடுள்ள பணிகளுக்குச் சொல்லும் என்கின்ற நம்பிக்கை தான். இன்று உலகத்திலே எங்கெங்கோ இருக்கின்ற மக்கள் கூட அவர் கேட்டவுடன், அவருடைய பெயரைச் சொன்னவுடன் தயங்காமல் பண உதவி செய்கின்றார்கள். அதனை மிகச் சிறந்தமுறையிலே ஆற்றுப்படுத்துகின்ற தன்மை தங்கம்மா அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதை நான் துணிந்தே சொல்வேன்.

ஆறுமுக நாவலருக்குப் பிறகு சமயத்தையும் தமிழையும அதுமட்டுமல்ல சமயத்தையும், சமூகத்தையுமே தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டு சமயப் பணி செய்பவர்கள் சமூகப் பணி செய்வதில்லை என்ற குறைபாட்டை நீக்கியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். பழைய காலங்களிலே அப்பர் பெருமான், சம்பந்தர் பெருமான் ஆகியோர் ஆலயங்களிலே ஆன்மிக சமயப் பணிகளோடு சமூகப் பணிகளையும் செய்தார்கள் என்று நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் நிதர்சனமாக தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் தான் வாழ்ந்து காட்டியவர்கள். செயலிலே செய்து காட்டியவர். அப்படிப்பட்ட ஒரு பெருந்திருவாட்டி. அம்மா என்று சொன்னாலே தங்கம்மா தான். பெயரிலே மட்டும் தங்கவில்லை, அவருடைய செயல்கள், கல்வி, ஒழுக்கம், அவர் மற்றவர்களுக்குக் காட்டுகின்ற முன்மாதிரி, வாழ்ந்து காட்டிய பாதை எல்லாமே போற்றுதற்குரியது.

பெயரிலேயே தங்கத்தை அமைத்துக் கொண்ட அவர்கள் ஒரு சகாப்தம். எப்படி நாவலருடைய வாழ்க்கை ஒரு சகாப்தம் என்று சொல்லுகிறோமோ அது போல தங்கம்மா அவர்களுடைய வாழ்க்கையை ஒரு சகாப்தம் என்றே கொள்ளலாம். அப்படி வாழ்ந்து காட்டிய ஒரு பெரிய மலை இன்று நம்மிடமிருந்து இல்லாமல் போயிருக்கின்றது. எத்தனையோ ஆதரவற்ற கரங்களுக்கு ஆதரவளித்த கரமானது இன்று நழுவி விட்டது என்று நினைக்கும் பொழுது மனம் உருகுகின்றது.

இனி ஒரு தங்கம்மா கிடைப்பாளா? இனி ஒரு பெண்மணி பிறப்பாளா இந்த உலகத்திலே? கருவிலேயே திரு வாய்த்தவள் அவள். ஆகையினால் தான் மிக உயர்ந்த நிலையிலே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மற்றவர்களையும் வாழச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
அவருடைய இழப்பை வெறும் வார்த்தைகளினாலே நாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அந்த வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டவேண்டும். உண்மை, சத்தியம், நேர்மை, அஞ்சாத நெஞ்சம், எத்தனையோ இடுக்கண்கள் வந்த காலத்தில் எல்லாம் அந்த இடுக்கண்களுக்கெல்லாம் இடுக்கண்களை ஏற்படுத்தி நிமிர்ந்து நின்றவர்கள் அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம், ஏராளம். அப்படி வாழ்ந்த அந்தப் பெருந்திருமகளுக்கு, பெருந்திருவாட்டிக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.


டிசெம்பர் 1990 ஆம் ஆண்டு மல்லிகையின் அட்டைப்படக்கட்டுரையாக செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி கலாநிதி நா.சுப்ரமணியன் அவர்கள் வழங்கிய கட்டுரையில் சில மாற்றங்களோடு மீள்படைப்பாகத் தருகின்றேன்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

இது அறிமுகம் அல்ல.
இவருக்கு அறிமுகத்துக்கான அவசியமும் இல்லை.
தமது நாவன்மையால் நானிலம் அளந்த பெருமை இவருக்கு உண்டு.

செஞ்சொற் புலமையால் சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால், அனைத்துக்கும் பல்லாண்டுகட்கு முன்பே அறிமுகமாகிவிட்டவர் இவர். தெல்லிப்பழைத் "துர்க்கா தேவி" தேவஸ்தானத்தின் அறங்காவற் பணிக்கு இவர் சட்டபூர்வமான தலைவர். ஆனால் ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றின் அறங்காவற் பணிகளுக்கும் இவரே ஆதர்ச-மானசீகத் தலைவர்.

இவர் சொற்பெருக்காற்றிய மேடைகள் ஆயிரக்கணக்கில். இவர் முன்னின்று நிகழ்த்திய சமயப்பணிகள்-அறப்பணிகள் பல. இவர் எழுதியனவும்-இவரைப் பற்றி எழுதப்பட்டனவும் பலப்பல. இவரைக் கெளரவித்ததன் மூலம் தம்மைத் தாமே கெளரவித்துக் கொண்ட நிறுவனங்களும் பல.

சில பக்கங்களில் இவரை அறிமுகம் செய்து விடுவது உடன் சாத்தியமல்ல. இவரைப் பற்றியும், இவர் சார்ந்த பொது வாழ்வு பற்றியுமான சில எண்ணங்கள் இங்கே பதிவாகின்றன; அவ்வளவே.

தெல்லிப்பழைக் கிராமச் சூழலில், அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்கு, 1925-01-07 அன்று பிறந்தவர் 'தங்கம்மா'; சைவச்சூழல் இவரை வளர்த்தது. ஆசிரியப்பணி இவரை அழைத்தது. ஈழத்தின் பல பாகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பணியோடு தொடர்புடைய சமய-சமூக சேவைகளில் நாட்டம் கொண்டார்; செயற்பட்டார். இவை அவரது பொது வாழ்வின் முதல் நிலை.

தமிழையும் சைவத்தையும் தனிக்கவனம் செலுத்திக் கற்றார். இக் கல்வி அவருக்கு 'பண்டிதர்', 'சைவப்புலவர்' ஆகிய தகுதிகளை ஈட்டிக் கொடுத்தது. இப்புலமைத் திறன்களின் துணையுடன் அவர் சைவத்தின் உயிர் நிலையை உணரத் தலைப்பட்டார்; அவ்வாறு உணர்ந்தவற்றைச் சாதாரண பொதுமக்களும் உணரும் வண்ணம் விரித்துரைக்கும் ஆர்வத்தால் தூண்டப்பெற்றார். இவ்விரிவுரை முயற்சியில் அவர் எய்திய தேர்ச்சியே அவரது பொது வாழ்வின் இரண்டாவது கட்டத்துக்கு அடிப்படையாயிற்று. சொற்பொழிவாற்றல் அவரது ஆளுமையின் முதன்மை அம்சமாயிற்று. சமூகம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவர் அறியப்படலானார். ஈழத்தின் பல்வேறு பிரதேச ஆலயங்களும், சமய-சமூக நிறுவனங்களும் அவரை வாழ்த்தி, வணங்கி, வரவேற்று அவரது உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்தனர்; கெளரவங்கள் செய்து மனநிறைவடைந்தனர்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பொதுவாழ்வின் மூன்றாவது நிலை அறங்காவற்பணியாகும். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் அறங்காவற் குழுவிலே 1966இல் பொருளாளராகப் பணி தொடங்கிய இவர் 1977 இல் அக்குழுவின் தலைமைப் பொறுப்பெற்றார்; அவ்வாலயத்தை ஓர் அறச்சாலையாக, ஈழத்தின் முதன்மை நிலைக்குரிய சைவத் தெய்வ நிலையமாக வளர்த்தார்; அங்கிருந்தவாறே ஈழத்துச் சைவாலயங்கள் பலவற்றின் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் வளர்த்து வந்தார்; அனைத்துலக சைவத்தமிழ்ப்ப் பண்பாட்டுக்கும் ஓர் ஆதர்ச தலைவியாகவும் திகழ்ந்தார்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சொற்பொழிவாளர் என்ற வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மேடைகண்டவர். பாடசாலைப் பருவத்திலேயே மேடையேறத் தொடங்கிவிட்ட அவர் 1950-களின் ஆரம்ப ஆண்டுகளின் சமய-சமூக மேடைகளில் தனிச் சொற்பொழ்வுகளும், தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தத் தொடங்கி விட்டார். திருமுறைகள், ஏனைய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் என்பன இவரது சொற்சுவையோடிணைந்து சுவைஞர்களின் செவிநுகர் கனிகள் ஆயின. மேற்படி ஆக்கங்களின் உயிர் நிலைகளான தத்துவங்களும் உணர்வு நிலைகளான இலக்கியச் சுவைகளும், சராசரி ,மனித அநுபவங்களுக்கு இவரால் வழங்கப்பட்டன. இவற்றை அநுபவத்தவர்கள் இவம்மையாருக்கு வழங்கிய கெளரவ விருதுகள் பின்வருமாறு:

'செஞ்சொற் செம்மணி' - மதுரை ஆதீனம் (1966)
'சிவத்தமிழ் செல்வி' - காரைநகர் மணிவாசகர் சபை(1970)
'சித்தாந்த ஞான கரம்' - காஞ்சி மெய்கண்டான் ஆதீனம் (1971)
'சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி (1972)
'திருவாசகக் கொண்டல்' - சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம் (1972)
'திருமுறைச் செல்வி' - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் (1973)
'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் (1974)
'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம் (1974)
'துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம் (1974)
'செஞ்சொற்கொண்டல்'- மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் (1978)
'திருமொழி அரசி' - இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம் (1983)

இவரது சொற்சுவைக்கு இவற்றை விட விளக்கம் அவசியமில்லை. மேற்படி விருதுகளிற் 'சிவத்தமிழ்ச் செல்வி', 'துர்க்கா துரந்தரி' என்பவை அவரது இயற்பெயர் எனத் தக்கவகையில் நிலைத்த வாழ்வு பெற்றுள்ளன.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சொற்பொழிவாளராக உருவான காலப்பகுதியின் வரலாற்றில் ஈழத்துச் சைவாலயங்களில் நிகழத் தொடங்கிய குறிப்பிடத்தக்க மாற்றமொன்றினை இங்கு சுட்டுவது அவசியம். 1960 களின் முற்பகுதி வரை சைவாலயன் விழாக்களில் 'சின்ன மேளம்' எனப்படும் சதிர்க்கச்சேரி முக்கிய கலைநிகழ்வாக இடம்பெற்று வந்தது. தெய்வீகச் சூழலுக்கு மாறான உணர்வோட்டங்களை அது தூண்டி நின்றது. அந்நிகழ்ச்சியை முற்றாக அப்புறப்படுத்தி அதன் இடத்தில் ஆத்மீக விருந்தாகச் சமயச் சொற்பொழிவை முதன்மைப்படுத்தி வளர்த்தெடுக்கும் எண்ணப்பாங்கு சைவ உலகில் முளை விட்டது. இவ்வெண்ணப்பாங்கிற்குச் செயல் வடிவம் தந்தவகையில் முதன்மையாக வைத்துக் கணிக்கப்படத்தக்கது சிவத்தமிழ் செல்வி அவர்களின் சொற்பொழிவுப்பணி.

இவரது வழிநடத்தலிலே தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் பெளதீக நிலையில் பல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இராஜகோபுரம், தீர்த்தத் தடாகம், கல்யாண மண்டபம், எனப்பலவாக இவற்றின் பட்டியல் விரியும். ஆனால் ஆலயம் என்பது கட்டிடம், கோபுரம், மண்டபங்கள், தடாகங்கள் என்பன அல்ல; கிரியை முறைகள் என்பன கூட அதன் பிரதான அம்சங்கள் அல்ல. அவை யாவற்றுக்கும் அப்பாலான 'தெய்வ சாந்நித்தியம்' தான் ஆலயத்தின் அடிப்படை அம்சம். அத்தெய்வீகத்தை வெளிப்படுத்தும் துணைக்கூறுகளாகவே மேற்படி பெளதீக அம்சங்கள் அமைவன. தெய்வ சந்நிதனத்தின் உயிர் நிலையான கூறு அன்பு.
உயிர்களை நேசிக்கும் அன்பு. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பல்வேறு செயற்பாடுகளும் இந்த அன்பின் அடித்தளத்தில் அமைந்துள்ளன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்து குவியும் அத்தனை செல்வமும் பொதுநல நோக்கிலே உரிய வகையில் நிர்வகிக்கப்படுகின்றன. பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்புக்களாகின்றன. தேவஸ்தானம் தானே ஒரு 'மகளிர் இல்லத்தை' நிர்வகிக்கிறது. இத்தனைக்கும் வழி சமைத்து ஆலோசனை வழங்கி செயற்படுத்தி நின்ற தலைமை 'துர்க்கா துரந்தரி'யுடையது.

சிவத்தமிழ் செல்வியவர்கள் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் பல மாநாடுகளிற் பங்கு பற்றி உரை நிகழ்த்தியவர்; பல அரங்குகளுக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தவர்.

சமய சம்பந்தமாக எழும் பிரச்சனைகளிலே இவரின் கருத்துக்கள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.
'அம்மா என்ன சொல்கிறா' என்பது பொதுவாக எழும் வினா. தங்கம்மா அப்பாக்குட்டி சொன்னாற் சரி, இது சைவ மக்கள் அவரது கருத்துக்களுக்கு ஏகோபித்த அங்கீகாரம். இவை இந்த அறம் வளர்த்த அன்னையின் தலைமைத் தகுதிக்குச் சான்றுகள்.

நன்றி:
* சிவத்தமிழ்ச் செல்வியின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும்
* இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் உதவிய ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள்
* ஒலிபரப்பில் உதவிய ஈழத்தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* "சிவத்தமிழ் ஓசை" ஒலிவட்டு (கிருபா போட்டோ & றெக்கோடிங் சென்றர், மல்லாகம்)
* "மல்லிகை முகங்கள்", மல்லிகைப்பந்தல் வெளியீடு ஜனவரி 1996
* பிரத்தியோகப் படம் உதவி: வெண்காட்டான்





















Posted by கானா பிரபா at 6:06 PM 12 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, June 05, 2008

மேளச்சமா...!

"மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.

மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.

கடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று "ல" வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் "அப்பன்", "சொல்லு ராசா" எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை "மணி" அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.

தீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.

வசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.

அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி? என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா? என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.


"வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்" கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.

பக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.
சோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.

சுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், "அரோகரா! அரோகரா" எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

வானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.

மணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,

"என்ர பிள்ளையாரப்பு! எங்களையெல்லாம் காப்பாத்து"

000000000000000000000000000000000000000000000
கடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.


ஒலி வடிவில் கேட்க


தரவிறக்கிக் கேட்க

கேள்வி: இந்த கலையை அதாவது இந்த வாத்தியத்தை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

எம்.பி நாகேந்திரன்

பதில்: எனது தந்தையார்; புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர் கே.எம். பஞ்சாபிகேசன். தந்தையார் நாதஸ்வர கலைஞராக இருந்தமையால் எனக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட அதுதான் முதல் காரணமாயிருந்தது.

அதோடு என்னுடைய பேரனாரும் நான் இந்த கலையை பழக வேண்டும் என்று விரும்பினார். அதனால் எனது 15வது வயதிலே நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த கலையை நான் கற்க ஆரம்பித்து விட்டேன்.

ஆரம்பக் கல்வியை எனது தந்தையாரிடமே பயின்றேன். பின்பு அளவெட்டி எம்.பி பாலகிருஸ்ண நாதஸ்வர வித்துவான் அவர்களிடம் ஆறு வருடம் அவரின் வீட்டில் தங்கியிருந்து குருகுல முறைப்படி இந்த கலையைப் பயின்று பின் தொடர்ந்து அவரிடமே 4 வருடம் நாதஸ்வரம் வாசித்து வந்தேன். பின்பு இந்தியாவிற்கும் சென்றும் இந்த கலையைக் கற்றிருக்கிறேன்.


பி.எஸ் பாலமுருகன்

எனது அப்பா குப்புசாமிபிள்ளை அவரும் நாதஸ்வர வித்துவான். நாதஸ்வரம் கற்க வேண்டும் என்று அவரின் விருப்பப்படிதான் நானும் நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தந்தையாரிடம் நாஸ்வரம் கற்றேன். பின்னர் துரைராஜாவிடம் ஒரு வருடம் நாதஸ்வரம் கற்றேன். அதற்கு பின்னர் எம்.கே பத்மநாதனிடம் இரண்டு வருடம் நாதஸ்வரம் கற்றேன்.

பி.எஸ். செந்தில்நாதன்

பாலமுருகன் எனது சகோதரர் தான். நானும் தந்தையாரிடம் தான் ஆரம்பத்தில் நாதஸ்வரம் கற்று பின்னர் நாச்சிமார் கணேச பிள்ளையின் மகன் சிவகுமாரிடமும் நாதஸ்வரம் கற்றேன்.


ஆர்.வி.எஸ் சிறிகாந்த்

எனது தந்தையார் ஆர்.வி. செல்வராஜா அவரிடம் தான் எனது 13 வது வயதில் ஆரம்ப கல்வியை பயின்றேன். அதனைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பொன். முத்துக்குமாரசாமி அவரிடம் ஒரு வருடம் தவில் கற்றுக் கொண்டேன். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் தவில் வாசித்து வந்தேன். திருப்பி தாய்நாட்டிற்கு வரவேணும் என்ற ஆசை அதனால் நான் திரும்பி வந்துவிட்டேன்.

கேள்வி: நாகேந்திரன் அவர்களே ! இந்த கலையை எல்லோருமே உங்கள் தந்தையாரிடம் கற்று பின்னர் ஒரு குருவிடம் பயிற்சி எடுத்திருக்கிறீர்கள். அப்படி இல்லாமல் தனிபட்ட முறையில்; தாமாகவே பயிற்சிகளை எடுத்து ஒருவர் பிரசித்தமான கலைஞராக வர முடியாதா?

பதில்: அப்படி நடக்கிறது ரொம்பக் குறைவு. சாத்தியமில்லை. நிச்சயமாக எங்களுடைய கலையைப் பொறுத்த வரை குருகுல முறைப்படி ஒரு குருவிடம் முறைப்படி கற்று வந்தால் தான் பூரணமாக அதை நாங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இதே நிலைப்பாடு தான் எத்தனையோ காலமாக தொடர்ந்து நடந்து வருகின்றது.

இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.

அந்த நிலைப்பாடு இலங்கையில இல்லை. ஒருக்கா யாழ்ப்பாண துர்காதேவி தேவஸ்தானத்தில நாதஸ்வர தவில் கல்லூரி ஒன்றைத் தொடங்கினவை.
அது சரியான முறையில நடைபெறவில்லை. பல சிக்கல்கள் அதனை ஓழுங்கான முறையில் சொல்லிக் கொடுப்பதற்கான ஆசிரியர்மார் வருவதும் குறைவு.

எங்கள் நாட்டைப் பொறுத்த சூழலில அந்த பிள்ளைகளுக்கு ஒரு கச்சேரி என்று வந்து விட்டால் அந்த பழகிற பிள்ளைகளும் கச்சேரிக்கு போய்விடுவார்கள். ஒழுங்கா அந்த நேரத்திற்கு கிளாஸ்வர முடியாது. எனவே அது அப்படியே மங்கிப் போய்விட்டது. தொடர்ந்து நடத்த முடியா நாட்டுச் சூழ்நிலை.

இந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன்.


கேள்வி: உங்களுடைய வாத்தியத்தைப்பற்றி சில விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். எல்லோரும் அந்த இசையை ரசிக்கின்றோம். ஆனால் அந்த வாத்தியம் எப்படியிருக்கின்றது? என்ன மரத்தினால் செய்யப்பட்டது போன்ற விடயங்களைஅறிவதில்லை. அதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

பதில்: நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் 2 பகுதியாக பிரிக்க முடியும். அனஸ்சும் உழவும் இரண்டும் சேர்ந்தது தான் நாதஸ்வரம்.

அதற்கு போட்டு வாசிக்கக் கூடிய கருவியின் பெயர் தான் சீவாலி. சீவாலி இந்தியாவில் ஒரு புல்லிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இலங்கையில் இல்லை.

நாதஸ்வரத்தின் பிரதான பகுதி என குறிப்பிடப்படும் உழவு அந்த காலம் தொட்டு ஆச்சா மரத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.

ஆனா இப்ப சொற்ப காலமா ஒரு 10 வருடங்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரத்தை தயார் செய்து கொடுக்கின்ற ஒரு நிலை ஒன்று ஏற்பட்டிருக்கு.

அராலி என்ற ஊரில அமரசிங்க ஆச்சாரியார் நாதஸ்வரத்தை தயாரிக்கின்றார்.

அவரும் ஆச்சா மரதில தான் தயாரிக்கிறார்.ஆனால் இலங்கையில் வேறு பெயர் சடவக்கி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அதுவும் ஆச்சா மரத்தின்ர தன்மை தான். அது காட்டுப்பகுதிகளில தான் கூடுதலாக இருக்கும்.

இப்ப நிறையப் பேர் அதனையே பாவித்துக் கொண்டு வருகிறார்கள். நூற்றிற்கு தொண்ணூறு வீதத்தினர் அதனையே கையாள்கின்றனர்.

முக்கியமாக அது பராட்டப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயம். எத்தனையோ காலம் காலமாக யாழ்ப்பாணத்தில ஒருவரும் இதைப்பற்றி யோசிக்கவில்லை. கலை ஓங்கி வளர்ந்தளவிற்கு. இதை செய்ய வேண்டும் என்ற யோசனை யாருக்கும் தோன்றவில்லை. அவர் ஒராள் தான் சொந்த முயற்சியில எவ்வளவோ கஷ்ரப்பட்டு அந்த மரத்தைக் கண்டு பிடிப்பதற்கே எவ்வளவோ மிகவும் சிரமப்பட்டதாக அவர் என்னுடன் கதைத்த போது சொன்னார்.

இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட நாதஸ்வரம் அவர் தயாரித்த நாதஸ்வரம் இரண்டையும் வாசித்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

முன்னர் நாதஸ்வரத்திற்கு தட்டுப்பாடு இருந்தது. இந்தியாவிலிருந்து வந்தால் தான் வாசிக்கமுடியும் என்ற நிலையிருந்தது. ஆனால் எங்கட நாட்டிலயே அவர் தயாரிக்க தொடங்கிய பின்னர் எங்களுக்கு இலகுவாக பெற்று வாசிக்க கூடியதாகவிருந்தது. நாதஸ்வரம் இல்லை என்றால் உடன அராலிக்கு போய்விடுவம் நாதஸ்வரம் வாங்க.

கேள்வி: தவிலைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் வாத்தியங்களை அறிந்து கொள்வது மிக மிக குறைவு. இசையை ரசித்துவிட்டு போய்விடுவோம். கலைஞர்கள் எவ்வளவு கஷ்ரப்படுகின்றனர் எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன என்பதனை நாங்கள் பார்ப்பதில்லை. அதைப்பற்றியும் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன். அதாவது தவிலைப்பற்றி பார்க்கும் போது தவில் கட்டை அது பிரதான என்ன மரத்தினால் செய்யப்படுகிறது?

பதில்: பலாமரத்தினால் செய்யப்படுகிறது. இரண்டு மரங்கள்; மூன்று மரங்களில் செய்யலாம் என சொல்லுவாங்க. ஆனால் அவை கிடைக்கிறது மிகவும் கஷ்ரம். கொண்டல் மரத்தில செய்யலாம். வில்வம் மரத்திலும் செய்யலாம் என்று சொல்லுறாங்க. அவ்வளவு பெரிய மரத்தை நாங்கள் பார்த்ததே இல்லை.

கூடுதலாக எல்லோரும் பலா மரத்தில தான் செய்கிறாங்க ஏனென்றால் சவுண்டு நல்லா இருக்கும். எங்களுக்கு வாசிக்க இலகுவாகவும் இருக்கும்.

முன்னர் வார்போட்டு வாசித்தார்கள். இப்பொழுது வாரிற்கு பதிலாக இரும்பு போடப்படுகின்றது. முன்னர் வார் வேலையிருந்ததலா எங்களால தவில் வேலை செய்து கொண்டு வாசிக்க முடியாது. அதனை கழற்றுவதற்கு அரை மணி நேரம் வேணும் அதனை கோர்ப்பதற்கு அரை மணி நேரம் வேணும். இப்பொழுது வந்த சிஸ்ரம் வந்து ஒரு பக்கம் ஏதாவது பிரச்சினை என்றால் இன்னொரு பக்கத்தை கழற்றி மாற்றலாம்.முன்னர்ஒரு பிரச்சினை என்றால் எல்லாத்தையும் புள்ளா கழற்றி மாற்ற வேண்டியிருக்கும்.
இது தூக்கிறத்திற்கு பாரமாய் இருந்தாலும் எங்களுக்கு இலகுவாக இருக்கின்றது.

அதே வேளையில் வலம்திரைத் தட்டு தொப்பித் தட்டு என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதலில் வலந்திரை என்று எடுக்கப் போனால் முன்பு வார் தவிலுக்கு ஆட்டுத் தோல் பாவிச்சனாங்கள். இப்ப நாங்க இரும்பெல்லாம் பாவிக்கிறதால ஆட்டுத் தோலால் தாங்க முடியாது. ரைற் பண்ணி வைக்கும் போது சில நேரங்களில் வெடிச்சுப் போகும். அதனால நாங்கள் இப்ப வலந்தரைக்காக மாட்டுத் தோல் பாவிக்கிறம்.

ஒரு வலந்திரை தட்டு செய்கிறதிற்கு மூன்று நாள் வேணும். ரொம்ப கஷ்ரப்பட்டு தோல் எடுத்து தோல் அடித்து காய வைத்து அதைப் பதப்படுத்தி அந்த நிலைக்கு கொண்டு வாறதென்றால ரொம்ப கஷ்ரம். அதற்கே இரண்டு நாள் ஆகும். அதில மிக முக்கியமாக சொருகிறது என்று சொல்வாங்க அந்த வளையில வைத்து பசை போட்டு ரைற் பண்ணுவாங்க. வட்டவட்டமாக 11 ஓட்டைகள் இருக்கும். அதைப் போட்டு காயவைக்கிறதிற்கு அதற்கு மட்டும் ஒரு நாள் வேணும். அது ஊற வேண்டும். கண்ணுவிலக வேணும். இப்படி நிறையப்பிரச்சினைகள்.

அதே சமயம் தொப்பி தோல் அடிச்சு ஓருநாளில காய்ந்துவிடும். மறு நாள் தான் தோலை இழைக்கலாம் ஊறப்போட்டு காயப்போட்டு திருப்பி ஊறப்போட்டுத் தான் சுருங்க வேணும். அல்லது நல்ல சத்தம் கேட்காது. இருண்டால் பேஸ் சவுண் கிடைக்காது. அப்படி சில சில பிரச்சினைகள்.

தவில் தடி: அப்பவந்து திருவாத்தி மரங்கள் நிறையக் கிடைத்தது. இப்ப அதுகள் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்ரம். அது திருவாத்தி கருகாலி போன்ற வைரமான குச்சிகளால தான் வாசிப்பாங்க. இப்ப கிடைக்கிறது கஷ்ரமாக இருக்கிறதால இந்தியாவிலயிருந்து பம்மர் என்ற ஒரு மரம் வருகிறது. அதுவும் வாசிக்கிறதிற்கு இலகுவாக இருக்கும்.

கூடு என்று சொல்லுவாங்க கையில வலதரப்பக்கம் போட்டு வாசிக்கிறது. அதை இடியப்ப பசையில சுத்துறனாங்க. இப்ப சூழ்நிலைக்கு மாட்டுத் தோல் போடுகிறதனால அந்த கூட்டை இடியப்ப பசையில சுத்தி வாசிச்சா இரண்டு வாசிப்பிற்கே வீணாப் போயிடும். அதனால் அராட்ரைட் என்னும் பசையிருக்கு அதன் மூலமாக துணியை வைச்சு கையில சுத்துறனாங்க. என்னென்று சொன்னால் கைய மாதிரி கட்டை செய்து அந்த அளவிற்கு எடுத்து அதைச் சுற்றி காயப் போடுறனாங்க.

கேள்வி: நீங்கள் இப்பொழுது ஒரு வார் தொப்பி வலந்தரைத்தட்டு போடுவதற்கே கிட்டத் தட்ட ஒரு நாளிற்கு மேல் செல்லும் என்று சொல்லுகின்றீர்கள். அந்த தோலை பதப்படுத்துவதற்கு 3 நாள் செல்லும் என்று. அப்படியானால் நீங்கள் ஒரு தவில் வாத்தியத்தை நீங்கள் புதிதாகச் செய்வதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நாட்கள் செல்லும்.

பதில்: இன்றைய சூழ்நிலையில் எங்களுடைய கலை வளந்த மாதிரிக்கு சமான்களும் இப்ப இந்தியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு இடத்திலிருந்து கொண்டு வந்து விற்கிறாங்க.

ஒரு தவில் செய்ய வேணுமென்று சொன்னால் முன்னர் புது தவில் கட்டை வாங்கணும். அதை 3 மாதம் காய வைக்கணும். அப்படி சூழ்நிலைகள்.

இப்ப எங்க போனாலும் அவங்க அவங்க இந்தியாவிலிருந்து 20து 30து 40து என வலந்திரை தட்டுகளாகவே செய்து கொண்டு வந்து அவங்களுக்கு தேவையானதை வைச்சுக் கொள்ளுறாங்க.

அதனால ஒரே நாளில தவில் செய்திடலாம் என்ற நம்பிக்கை இருக்கு.

கேள்வி: செந்தில் நாதன் நீங்கள் தவில் வாசிக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு வாத்தியக்கருவி வைச்சிருப்பீங்க. அதற்கு பிரதியீடாக இன்னொரு வாத்தியக்கருவியும் வைச்சிருப்பீங்க. என நினைக்கின்றேன். கிட்டத்தட்ட எத்தனை வைத்திருப்பீர்கள்.

பதில்: நான்கு தவில் வைத்திருக்கின்றேன். வேறயா மாத்திறதிற்கு பாட்ஸ் பாட்ஸ்சா வலந்திரைத் தட்டு 10 தொப்பி 10 ஆணி அப்படி நிறைய வைத்திருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கு போகப் போகிறீர்கள் என்று வைத்தால் நீங்கள் அதற்கு தயார்படுத்துவதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நேரம் செல்லும். உங்களுடைய ஒரு தவிலையோ, நாதஸ்வரத்தையோ அவை சரியாக இருக்கின்றதா என்று அதனை பார்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கச்சேரிக்கு போனவுடனே கச்சேரியை ஆரம்பிக்க வேண்டி வரும். அதற்கு தயார் படுத்துவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்?

பதில்: முதல் நாளே நாங்கள் எல்லாம் பார்த்து வைச்சிடுவம். திடீரென போறதென்றால் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பார்த்து வைச்சிடுவம். சாதாரணமாக தவிலைப் பொறுத்தவரை திடீர் திடீர் என காலநிலை வித்தியாசத்தில் எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய ஒரு பொருள். நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினையில்லை. நாங்க ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னர் அதை பார்திட்டு வாசிச்சிடலாம்.

கேள்வி: நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள் சில நாடுகள் சரியான குளிரான நாடுகள் சில நாடுகள் சரியான வெயிலான நாடுகள். இந்த தோல் மரமோடு சம்மந்தப்பட்டதுகள் திடீரென வெடிக்க கூடியவை. ஒரு நாட்டுக்குச் செல்லும் போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர்பார்த்து செல்கிறீர்கள்?

பதில்: முன்னர் மாதிரி வார் என்றால் அஜஸ்ட்பண்ணிக் கொள்ளுவது கஷ்ரம். இப்ப இரும்பில வந்திருக்கு வார் மாதிரி போட்டிருக்காங்க. அது வேண்டிய நேரத்தில ரைற் பண்ணி பாவச்சுக் கொள்ளலாம். அஜஸட்; பண்ணிக் கொள்ளலாம். இப்ப குளிரென்றால் அதிகம் ரைற் பண்ணிக்க மாட்டாங்க. அதனால வாசிப்பதற்கும் சவ்கரியமாக இருக்கும். சவுண்டும் நல்லா இருக்கும். ஆனால் காலநிலை வித்தியாசத்தால அதை கொஞ்சம் குறைச்சுக் கொள்ளலாம்.


கேள்வி: அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மரத்தையும் தோலையும் கண்டால் அஜீரணம். எந்த வகையில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டதா?

பதில்: ஒவ்வொரு வருஷமும் இந்த பிரச்சினை நடந்து கொண்டேயிருக்கின்றது. நான் இது ஒன்பதாவது தடவை இந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கு வந்திருக்கிறன். எல்லா நாட்டிற்கும் போய் வந்திருக்கிறன்.

ஆனால் இந்த நாட்டில தான் இந்த தவிலுக்கு மட்டும் தனி மரியாதை.

வழமையாக நாங்க கண்டிப்பா எடுத்துக் கொண்டு போக வேணும் என்று ஏதோ சொல்ல, பதிந்து, ஒரு லெற்றர் கொண்டு வந்து, திருப்பி எத்தனையாம் திகதி நாங்க இந்த நாட்டை விட்டுப் போறமோ, எந்த ஊரிலிருந்து கிளம்பப் போறமோ, அந்த ஊரில கொண்டு போய்,; அவ்வளவு சமான்களையும் திருப்பி நாட்டிற்கு கொண்டு போறம் என்று காட்டி, அதனை உறுதிப்படுத்த வேண்டும். என்று சொல்லி ஒரு லெற்றர் தருவாங்க. அப்படித் தான் செய்து வந்தம்.

இந்த முறை சாயி மன்றம் எங்களுக்குச் சொல்லிச்சு இப்படி பல சிக்கல்.ஜேசுதாஸ் குறூப் வந்திருந்த பொழுது அவர்களுக்கு பெரிய சிரமம் கொடுத்திட்டாங்க. இந்த முறை கடுமையாக நிற்கிறாங்க என்று சொன்னதால,

நாங்க கொழும்பில வொறன்டிஸ் சேவிஸ் என்ற ஒன்றிருக்கு. அவங்களிட்ட எங்களுடைய இன்ஸ்ருமென்ட் எல்லாம் காட்டி அவங்களிட்ட அந்த சேட்பிக்கட்டையும் காட்டின போது எந்த பிரச்சினையும் இல்லை. கஸ்டம்ஸில் காட்டின உடன அவ்வளத்தையும் எந்த பிரச்சினையும் இல்லாம விட்டுட்டாங்க.

இந்த முறை அது ஒரு வழி என கண்டு பிடிச்சதால இனிமேல் இப்படியே செய்து கொண்டிருக்கலாம். எல்லா நாட்டிலையும் இது சம்மந்தமான நிறுவனம் இருக்கிறது. அவர்களிடம் அவ்வளத்தையும் கொண்டு போய் காட்டினா நாங்க எத்தனை பீஸஸ் கொண்டு போறம் என்று சொல்லி எழுத்து மூலம் அவங்க சேட்பிக்கேட் தர்றாங்க.

அங்கையும் சும்மா காட்டிட்டு எடுக்கிறது என்றில்லை. அவங்க அதை ஒரு நாள் றூமில வைச்சு ஏதோ கெமிக்கல் போட்டு ஏதோ புகையடிச்சு அதில கிருமி இல்லை என்று உறுதிப்படுத்தி சேட்பிக்கேட் லெற்றர் தந்தாப் பிறகு தான் இங்க எடுத்துக் கொண்டு வரலாம். அதை எடுத்துக் கொண்டு வந்ததால் இந்த முறை எந்த சிரமமும் இருக்கவில்லை.

கேள்வி: இப்படியாக நீங்கள் நாடுகளுக்கு வாத்தியங்களை கொண்டு சென்ற பொழுது ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதா? அதாவது காலநிலை காரணமாக அது வெடித்து அப்படி ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?

பதில்: எனக்கு நடந்திருக்கிறது. நான் கனடாவிற்கு போயிருந்த நேரம் குளிர். நாதஸ்வரம் ஒன்று உடைஞ்சு போயிட்டுது. அந்த நேரம் பார்த்து நான் இரண்டு நாதஸ்வரம் கொண்டு போயிருந்தேன். இந்த முறையெல்லாம் ஒன்று தான் கொண்டு வந்தேன். அன்று இரண்டு நாதஸ்வரம் கொண்டு போனதால டப்பென்று மற்றதை எடுத்து வாசிக்கக் கூடியதாக இருந்திச்சு.

கேள்வி: நாகேந்திரன் அவர்கள் நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள். நீங்கள் போகாத நாடே இல்லையென்று நினைக்கின்றேன். சீனாவையும் ஜப்பானையும் தவிர உங்களுக்கு அப்படி ஏதாவது ஏற்பட்டதா?

பதில்: எனக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஆண்டவன் அருள். நான் இப்ப வாசிக்கிற நாதஸ்வரம் வந்து 15 வருடங்களாக வாசிக்கிறன். எல்லோரும் வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒன்று என தான் வைச்சிருக்காங்க. ஏதோ கொடுத்து வைச்சனான் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக முதலும் ஒரு நாதஸ்வரம் வைச்சிருந்தனான் 18 வருஷமாக இப்ப மாற்றி 15வருடங்களாக வைச்சிருக்கன். பழைய நாதஸ்வரங்களில் அந்த பிரச்சினை வராது. புதுசு தான் எந்த நேரமும் எந்த காலநிலைக்கும் வெடித்துவிடலாம்.


கேள்வி: நீங்கள் ஆலயத்தில் தவிலை கிட்டத்தட்ட 4, 5 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய தோளிலே சுமந்த படி தான் வாசிக்கிறீர்கள். இந்த தவில் எவ்வளவு நிறையிருக்கும்?


பதில்: 21கிலோ தவிலின் நிறை. பழைய கட்டைகளாக இருந்தால் கொஞ்சம் வெயிற் குறைஞ்சு 18 கிலோ அப்படியிருக்கும்.

கேள்வி: நீங்கள் ஆலயத்தில் வாசிக்கும் பொழுது பல தடவை பார்த்திருக்கின்றேன் அதனை தூக்கித் தூக்கப் போடுவதை. ஏனெனில் நாதஸ்வர கலைஞருடன் ஈடு கொடுக்கவும் வேண்டும.; எடையை தூக்கிக் கொண்டும் வர வேண்டும். ஆக்களைப் பார்த்து சிரிக்கவும் வேண்டும். ஏனென்றால் நாதஸ்வர கலைஞர்கள் ஏன் இப்படி சிரிக்காமல் போகின்றார்கள் என்றும் பார்ப்பார்கள். அப்படியான ரசிகர்கள். மங்கள வாத்தியம் எனும் போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். எப்படிச் சமாளிக்கின்றீர்கள்?

பதில்: நான் 13 வயதிலிருந்து வாசிக்கிறன். அப்ப என்னை சின்ன தவிலைக் கொடுத்து பழக்கப்படுத்தினார்கள். 8 கிலோ அப்படியிருக்கும். அந்த பழக்கம் அப்படியே வளர்ந்து வளர்ந்து வர தவிலோட பாரம் தெரியல. வாசிக்கிறத மாத்திரம் தான் கவனிக்கிறது. மற்றப்படி அதை நினைக்கிறதில்லை. பாரத்தைப் பார்த்தா வாசிக்க முடியாது. என்னோடு குறிக்கோள் எல்லாம் வாசிக்கிறதில தான்; இருக்கும்.

கேள்வி: விரலிலே இந்த பட்டைப் போட்டு அடிக்கின்றீர்கள். நாங்கள் ஒரு பத்து நிமிடம் கையை ஏதாவது செய்து கொண்டிருந்தாலே கையெல்லாம் விறைத்து விடும். நீங்கள் ஒரு கச்சேரியில் 3, 4 மணித்தியாலங்கள் வாசிக்கின்றீர்கள். ஒரு கச்சேரி முடிந்தவுடன் உங்களுடைய விரல்களின் உணர்வு, எந்த வகையில் உங்களுக்கு அது தாக்கமாக இருக்கும்?

பதில்: எல்லாம் இரத்தம் கண்டிப்போய் தான் இருக்கும். எல்லாம் வெடிச்சு சரியான கஷ்ரமாகத் தான் இருக்கும். போட்டு கழட்டுவது என்றா கஷ்ரமாகத் தான் இருக்கும்.


சில நேரங்களில அந்த காயங்கள் வழமையாக வருவது தான். கச்சேரியில் வாசிக்கும் பொழுது கஷ்ரம் தெரியாது. வாசித்து முடிஞ்ச பிறகு தான் கஷ்ரம் தெரியும். காரணம் என்னென்றா நாங்க சரியா வாசிக்கல என்று சொன்னால் நாதஸ்வர காரர்களுக்கு கோபம் வந்திடும்.

கை வலிக்கிறது என்று பாஸ்ரைக் குறைத்தோ அல்லது அளவுப் பிரமாணமில்லாம வாசிச்சாலோ அவங்கட பார்வையிலயே திட்டிக் கொன்றுடுவாங்க. நாங்க அவங்களையும் பார்க்கணும், அவங்க வாசிக்கிறதையும் கேட்கணும், நாங்களும் சரியா வாசிக்கணும், மக்களையும் பார்த்து சிரிக்கணும், சந்தோசமாகவும் வாசிக்கணும்.

இந்த சூழ்நிலையில கையெல்லாம் வலிச்சாலும் எங்களால ஒன்றும் பண்ண முடியாது. வாசிக்கிறத மட்டும் வலன்ஸ் பண்ணிக்கொள்வம். கைவலி எல்லாத்தையும் வீட்ட போய் தான் பார்த்துக் கொள்வம். அதற்கப்புறம் தான் மருந்தெல்லாம் போட்டுக் கொள்வம்.

கேள்வி: ஒரு கச்சேரிக்கு நீங்கள் செல்லும் பொழுது நீங்கள் ஏதாவது ஒரு அனுமானம் அல்லது இப்படித்தான் கச்சேரியைக் கொண்டு செல்லப்போகின்றோம் என்ற ஒரு திட்டத்தோடு போவீர்களா அல்லது அங்கு ரசிகர்களின் இரசனையைப் பொறுத்து நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்வீர்களா?

பதில்: போகும் போது எங்களுக்கென்று ஒரு கச்சேரி என்று சொன்னா இப்படித்தான் வாசிக்க வேணும் என்ற திட்டத்தோடு தான் போறதுண்டு. ஆனால் அங்க போய் ரசிகர்களின் நிலைப்பாட்டைப் பார்த்து அவர்களின் விருப்பப்படி இதை வாசிங்க என்று ஒவ்வொரு துண்டுகள் அனுப்புவாங்க. அவர்களையும் திருப்திப் படுத்த வேண்டியிருக்கும்;.

சிலபேருக்கு கர்நாட்டிக் விருப்பம், சில பேருக்கு மெல்லிசை விருப்பம் சில பேருக்கு சினிமா சம்மந்தப்பட்ட பாட்டு விருப்பம். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. கச்சேரி என்று சொல்லுறப்போ கண்டிப்பா எல்லா தரப்பினரும் வருவினம். கூட்டத்தைப் பார்த்து கூடிய வகையில் எங்களால் முடிந்தளவு எல்லோரையும் திருப்திப்படுத்துகிற வகையில் தான் கச்சேரியை அமைச்சுக் கொள்வோம்.

கேள்வி: பாலமுருகன் நீங்கள் இப்ப பார்த்தீர்களானால் கிழமைக்கு ஒரு படம் வந்து கொண்டிருக்கிறது. அன்றைய கச்சேரியில் வாழமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை யாருமே விரும்பி கேட்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அதனைக்கூட யாரோ கேட்டு நீங்கள் வாசித்தீர்கள். அப்படியான பாடல்கள் வரும் பொழுது அந்த பாடல்கள் அனைத்தையும் அதாவது எல்லா பாடல்களையும் பயிற்சி எடுத்துக் கொள்வீர்களா அல்லது இந்த பாடல்களை ரசிகர்கள் கேட்பார்கள் என்று தெரிந்தெடுத்து பயிற்ச்சி எடுத்துக் கொள்வீர்களா எந்த வகையில் அதனை எடுத்துக் கொள்வீர்கள்? ஒரு பாடலை வாசிக்க எவ்வளவு நாள் செல்லும்?

பதில்: ஒரு நாளில வாசிச்சிடலாம்.

கூடுதலாக ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அப்படியான பாடல்களை பார்த்து தேர்ந்து எடுப்போம். அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்து தான் கூடுதலாக பாடமாக்கி வாசிக்கிறது.

கேள்வி: அந்த வகையில் இப்பொழுது நீங்கள் ஒரு பாடலை ஸ்வரத்திற்குத் தான் வாசித்துக் கொண்டு போகின்றீர்கள். அதேவேளையில் அந்த பாடல் எப்படி எழுதப்பட்டது என்ற அந்த சாகித்தியத்தையும் நீங்கள் உணர்ந்து கொண்டீர்களானால் அந்த வித்தியாசம் தெரியும். நீங்கள் வாசிக்கும் போது அது எவ்வளவு தூரம் முக்கியமான விடயமாவுள்ளது?

பதில்: சாகித்தியத்தை அறிந்து கொண்டு வாசித்தால் அதற்குரிய தன்மை வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் பாட்டின் எல்லா வசனமும் எங்களுக்கு பாடமில்லை. நாங்கள் மெட்டை மட்டும் கேட்டமென்றால் உடன வாசிக்க கூடிய தன்மையிருக்கு. உதாரணத்திற்கு சொன்னப் போனால் அன்றைக்கு சித்திரம் பேசுதடி பாட்டு கேட்டு வந்திச்சு. ஒரு நாளும் நான் வாசிச்சதில்லை. ஆனால் பாட்டு கேட்டு பாடமிருக்கு. அதனால் அன்றைக்கு உடன வாசிச்சனான். எங்களைப் பொறுத்தவரையில் பாட்டுக் கேட்டு எங்கட மனசில படிஞ்சிட்டென்றால் நாங்க வாசிச்சிடுவம்.

கேள்வி: நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை உங்களுடைய சுவாசம் அதேவேளை உங்களுடைய உதடு நாக்கு என்பன மிக முக்கியமானவை. அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு எந்த வகையில் பயிற்சி எடுக்க வேண்டும்?

பதில்: அதுதான் நாங்க ஆரம்பகால பயிற்ச்சியின் போது எவ்வளவு கஷ்ரப்பட்டோமோ அது தான் இப்ப எங்களுக்கு பிரயோசனப்படுது. அப்ப ஆரம்பத்தில சின்ன வயசில் அவ்வளவு கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.

ஊரில எங்கட வீடுகளில நீங்க பார்த்திருப்பீங்க, காலை 4 மணிக்கெல்லாம் நாங்க நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சிடுவம். 7மணி மட்டும் 3 மணி நேரம் பயிற்சி பெறுவது, சாயங்காலமும் அது மாதிரி, இப்படிப் பயிற்சி எடுத்தது தான், இப்ப 4, 5 மணி நேரங்கள் தொடர்ந்து வாசிக்கிறதிற்கு எங்களுக்கு சவ்கரியாக இருக்கு.

ஆனால் இப்பவும் வந்து ஒரு 10 நாள் வாசிக்கவில்லையென்றா அடுத்த முறை வாசிக்கும் பொழுது கஸ்ரமாக இருக்கும். உதடு பிடிக்கிறதெல்லாம் ரொம்ப பிரச்சினையாக இருக்கும்.

கச்சேரிகளில் வாசிச்சாலும் தினசரி பயிற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டும். எவ்வளவு நேரத்தை நாங்கள் செலவழிச்சாலும் அவ்வளவு நேரமும் எங்களுக்கு பிரயோசனம் தான்.

ஆனால் சில நாடுகளில அந்த சூழல் இல்லை. யாழ்ப்பாணத்தில பிரச்சினையில்லை. நான் 10 வருஷமாக கொழும்பில இருந்தனான். கொழும்பிலயும் அதை செய்யக்கூடிய வசதிகள் குறைவு.

கேள்வி: ஒரு நாதஸ்வர கலைஞரும் தவில் கலைஞரும் கோஷ்ரியாக இணைந்து வாசிப்பதுண்டு. நான் இங்கு வந்தவர்களைப்பற்றி பேசவில்லை. ஊரிலே நீங்கள் வாசிக்கும் போது கோஷ்ரியாகத் தான் வாசிப்பீர்கள். ஒரு நாதஸ்வர கலைஞருக்கோ அல்லது தவில் கலைஞருக்கோ மற்றவர் எந்த வகையில் அமைகின்றார். அவருடைய எதிர்பார்ப்புக்கள் எப்படி அமைகின்றது, அவர் எவ்வாறு வாசிப்பார் என்பதைப் பார்த்து தான் நீங்கள் கோஷ்டியை அமைக்க கூடியதாக இருக்கின்றதா. அதை எவ்வாறு நீங்கள் தெரிவு செய்கின்றீர்கள்.

பதில்: ரொம்பக் காலமாக யாழ்ப்பாணத்தில அந்த முறைப்படி தான் இருந்து வந்தது. அதாவது ஒரு கோஷ்ரி என்றால்அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன் இவர் தான் நாதஸ்வரத்திற்கு வருவார். இவர் தான் தவிலுக்கு வருவார். இன்னார் இன்னார் தான் வருவினம் என்பது முதலே தெரியும்.

ஆனால் இப்ப அந்த நிலமை 10 வருடங்களாக மாறிட்டு. இன்றையகால நாட்டு நிலமையால கனபேர் வெளியில போய்விட்டார்கள். முன்னர் 6 மாதத்திற்கு நல்ல சம்பளம் பேசி தவில் காரரையும் நாதஸ்வரக்காரரையும் கொன்றைக் பேசி ஒரு குழு அமைக்கிற லீடர் வந்து எல்லாரையும் புக் பண்ணி வைச்சிருப்பார்.

6 மாதத்திற்கும் கச்சேரி போனால் அதே குறூப்பாக தான் போவாங்க அப்படி எத்தனையோ வருஷங்களுக்கு தொடர்ந்து இருப்பாங்க. இப்ப அந்த நிலமை இல்லை. பழைய ஆட்கள் கொஞ்சப்பேர் இருக்கினம் தான். புதுசு புதுசா கிளம்பிறவங்க அப்படியில்லை. ஒரு கச்சேரிக்கு போகும் போது அன்றைக்கு அன்றைக்கு யார் யார் இணைந்து கொள்ளுகிறார்களோ அவர்கள் போக வேண்டியது தான்.

கேள்வி: இது உங்களுக்கு கஷ்ரமாக இருப்பதில்லையா?ஏனெனில் அவர் முதல் கூறினார் நாதஸ்வரகாரரின் பார்வையிலிருந்தே தெரியும் நான் இங்கே பிழைவிடுகின்றேன் என்று. அந்த பார்வையின் அர்த்தம் விளங்க வேண்டும் என்னத்திற்காக பார்க்கின்றார் என்று. அதனை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள். கஷ்டமாக இருப்பதில்லையா?

பதில்: கண்டிப்பா மிகவும் சிரமம் தான். வாசிக்கும் போது ஓரிடம் பார்ப்பதே பெரிய கஷ்ரம். நாலாபக்கமும் பார்த்து வாசிப்பது என்றால் கஷ்ரம் தான். பக்க வாத்தியம் தவிலாகிய நானா இருந்தாலும் சரி அல்லது வேற வாத்தியங்களாக இருந்தாலும் சரி பாடுறவங்களோ வாசிக்கிறவங்களோ யாரா இருந்தாலும் சரி அவர்களுடைய பார்வை எங்க மீது இருக்க வேணும். எங்களுடைய பார்வை அவர்கள் மீது இருக்க வேணும.;

ஏனென்றால் சில சில பரிமாற்றங்கள் அவர் என்ன செய்யப் போறார் என்று எனக்கு முன் கூட்டித் தெரியாது. செய்கிறதிற்கு முன்னாடி சின்னதொரு சிக்கனல் என்று சொல்லலாம். ஏதாவது செய்யப் போறார் என்றால் சின்னதொரு மாற்றம் முகத்தில தெரியும் . அதைப்பார்த்து அதற்கு தகுந்த மாதிரி சிலவேளை காலப்பிரமாணம் ஏற்றப் போறார் என்று சொன்னால் சிலவேளை காலை ஆட்டுவதுண்டு. அதைப்பற்றி எங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வு உண்டு. வாத்தியத்தை விட்டு நாங்கள் ஒன்றும் கதைக்க முடியாததால் இப்படித்தான் சைகையால் தான் காட்ட முடியும். ஏனெனில் அதுவும் மக்களுக்குத் தெரியக்கூடாது. எங்களுடைய பாசையில் நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம்.


கேள்வி: தனியாவர்த்தனம் அன்று நீங்கள் வாசித்த பொழுது நிச்சயமாக மற்றவர் என்ன வாசிக்கப் கோகிறார் என்பது உங்களுக்கத் தெரியாது. அதில் ஒரு போட்டியிருக்கும் அந்த போட்டியிலும் திறமை வெளிப்பாடாகத் தான் இருக்கும் அதைப்பற்றி சற்று கூற முடியுமா?

பதில்: என்னென்று சொன்னா கீர்த்தனைகளோ மற்றவைகளோ இல்லை . காலப்பிரமாணம் தான் நாங்கள் அமைக்கிறம். தனியாவர்த்தனம் என்பது அவரின் தனிப்பட்ட திறமை அந்த காலத்தில ஒரு தவில் வாசித்ததை இன்னொரு தவில் வாசித்துக் காட்ட வேண்டும். அப்படி ஒரு முறைகள் இருந்தது. தற்பொழுது அப்படியான சூழ்நிலை கிடையாது. என்ன காரணம் என்று கேட்டால் உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இருப்பது உங்களுக்குத் தெரியாது இப்படியான ஒரு சூழ்நிலையில் யார் யார் திறமையாக இருக்கிறாங்களோ அவங்களுக்குத் தெரிந்ததை வாசிக்கலாம். நல்ல படியாக வாசித்தா சரி.

கேள்வி: என்னென்று கேட்டா இன்றைய தினம் தனியாவர்த்தனத்தை நீங்கள் தான் வாசித்தீர்கள். நீங்கள் என்ன வாசித்தீர்களோ, அதனைத் தான் அவர் வாசித்தார். அப்படித்தான் போய் கொண்டிருக்கும் எல்லா தனியாவர்த்தனத்திலும் அப்படித்தான் பார்த்திருக்கிறன.; அது தான் முறை. இவர் வாசித்ததை உங்களால் ஏதோ ஒரு கட்டத்தில் வாசிக்க செய்ய முடியவில்லை என்று சொன்னால் செய்வீர்கள்?

பதில்: நல்ல கேள்வி கேட்டிங்க. அது தான் கச்சேரியிலுள்ள நிலைப்பாடு அவர் வாசித்ததை கண்டிப்பா மற்றவர் வாசிச்சா தான் நல்லது. அப்படி அதே மாதிரி வாசிக்க முடியாவிட்டால் அதே அமைப்பில தன்னுடைய திறமைக்கேற்ப ஒன்றை வாசிக்கலாம்.

கேள்வி: இன்னுமொரு விடயம் இந்த ஆலயத்திற்கு இந்திய கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள் இலங்கை கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் வாசிப்பில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா? ஏன் அந்த கேள்வியைக் கேட்கின்றேன் என்றால் நீங்கள் வசந்த மண்டபத்திலிருந்து சுவாமி வெளிக்கிட்டவுடன் நீங்கள் மல்லாரி வாசிக்கின்றீர்கள். அதே வேளையில் ரதோற்சவத்திற்கு தேர் மல்லாரியைத் தான் இலங்கை கலைஞர்கள் வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய கலைஞர்கள் அப்படியான நடைமுறையில் வாசிப்பதில்லை. அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்.

பதில்: இலங்கையிலுள்ள ஆலயங்களில் கிரியைகள் வித்தியாசமான முறையில் நடக்கின்றன. அடுத்தது என்ன செய்யப் போறாங்க. என்ன நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்களுக்கு தெரியாது. ஏனென்றால் குருக்கர்மாரைக் கேட்டா தெரியும் அங்கத்த முறைப்படி வேற மாதிரி இருக்கும். யாழ்ப்பாணத்தில நடக்கிற மாதிரி இந்தியாவில ஒரிடமும் நடப்பது இல்லை.

அதனால் தான் இன்னென்ன நேரம் இது நடக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. கொடியேற்றம் என்றால் பல தடவை நிற்பாட்ட வேண்டும். மணியடிக்கிற நேரம் தவில் தனிய வாசிக்கிறது. அப்படியான எங்கட நாட்டு முறையெல்லாம் அங்கில்லை. அது எங்களுக்குத் தெரியும்.

மற்றப்படி அவர்கள் எல்லாம் வாசிக்க கூடியவங்க. அவர்கள் வாசிப்பதில் எந்தவித வித்தியாசமும் இல்லை. மல்லாரி எல்லாம் வாசிப்பாங்க. எந்தெந்த கிரியைகளுக்கு என்னென்ன மல்லாரி வாசிக்க வேணும் என்ற முறை தெரியாது.

நாங்க சாமி கிளம்பின உடன தேர் மல்லாரி வாசிப்பம் வெளிவீதி வந்த உடன வெளி மல்லாரி வாசிப்பம். அதற்கப்புறம் இராகம் கீர்த்தனை முருகனுக்கேற்ற பாட்டுகள் என அப்படியான முறையில் நாங்க வாசிப்பம் அவ்வளவு தான்.

கேள்வி: பாலமுருகன் இன்று நீங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்துவானாக இருக்கின்றீர்கள். 41 வருடங்களுக்க மேலாக மறைந்த கலைஞர் எம.;கே. பத்மநாதன் தான் அங்க ஆஸ்தான நாதஸ்வர கலைஞராக இருந்தவர். ஆஸ்தான கலைஞர் வாசித்த இடத்தில் நீங்கள் இருந்து வாசிக்கும் பொழுது உங்கள் மனநிலையில் எவ்வாறு இருக்கும்.?

பதில்: நான் நினைக்கிறேன் அது எனக்கொரு வரப்பிரசாதம் என்று. எனது தநதையார் 30 வருடங்கள் நல்லூர் கந்தசுவாமி; கோயில ஆஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். அதற்கப்புறம் வயசாகிவிட்டதால அந்த கோயிலை விட்டுட்டார். அப்புறம் அவர் வாசித்த இடத்தில போய் நான் வாசிக்கிறதை எனக்கு அதை நினைச்சுப் பார்க்கவே முடியல. அதைச் சொல்லத் தெரியல.

கேள்வி: நல்லூர் கந்த சுவாமி கோயிலைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அதே வேளையில மங்கள வாத்தியத்தைப் சுற்றியே ஒரு ரசிகர் கூட்டம் அப்படியே வந்து கொண்டிருக்கும். அதை ரிவியில் கூட நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் சூழ்ந்திருக்கும் அந்த நிகழ்வு எந்தவகையில் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும், நீங்கள் ஒரு வாத்தியத்தை வாசித்துக் கொண்டு போகும் பொழுது அல்லது அவர்களுடைய அந்த பாட்டை வாசிக்க தொடங்கும்; பொழுது அவர்களுடைய அந்த அசைவு எந்த வகையில் உங்களை உற்சாகப்படுத்தும்?

பதில்: சபையில நாங்க பார்த்திடுவம். அவர்களுக்கு இது தான் பிடிக்குமென்று சொன்னால் அதை கூடுதலாக கையாளுகின்ற மாதிரியும். ஆனாலும் அதைக் கையாளுகிறது நல்லூர் கந்த சுவாமி கோயிலில் கொஞ்சம் குறைவு தான். அங்க வந்து வேற முறை தான். அங்க வந்து சினிமா ஸ்ரையில வாற பக்திப் பாட்டாக இருந்தாக் கூட்டி நாங்க அங்க வாசிக்க முடியாது. கீர்தனைகள் அப்படித் தான் வாசிப்பம் கடைசியாக பயும்ஸ் அப்படித் தான் வாசிக்கிறது. அதுவே சனத்திற்கு பெரிதாக இருக்கும். அந்த பயும்ஸ் வாசிக்கிறதே அங்க அரிது.

கேள்வி: நாதஸ்வரத்தை வாசிப்பவர்கள் நாதஸ்வரத்தைக் கற்க முன்னர் வாய்ப்பாட்டில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம் என்ற ஒரு கருத்திருக்கிறது. அது சரியான அனுமானமா? வாய்ப்பாட்டை அவர்கள் கற்றிருப்பது எந்த வகையில் அவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்?

பதில்: அந்த சாகித்திய முறை அந்த முறையில வாசிக்கும் பொழுது அதற்குண்டான ஒரு தனித் தன்மை ஒன்றிருக்கு. சாகித்திய முறைப்படி நாங்கள் தெரிந்து அதை வாசிப்பது. சங்கீதத்தை எடுத்துப்பார்த்தால் வாய்ப்பாட்டு முக்கியம். வயலின் காரர்கள் வீணை எல்லோருக்கும் அதே மாதிரி நாதஸ்வர காரர்களுக்கும் வாய்ப்பாட்டு முக்கியம் தான். எல்லா சங்கீத அடிப்படையும் அதில தான் இருக்கு.

கேள்வி: இப்பொழுது குறிப்பாக வெளிநாடுகளிலே இவற்றைப் பயில்பவர்கள் நாட்டியமாக இருக்கட்டும், வயலினாக இருக்கட்டும், மிருதங்கமாக இருக்கட்டும், அவர்கள் அதில் பாண்டித்தியம் பெற வேண்டும, நல்ல நிலமைக்கு வர வேண்டும், என்பதை விட எப்போது நான் மேடையேறுவேன் என்ற நோக்கம் தான் இருக்கின்றது. இப்ப நீங்கள் இந்த தவில் நாதஸ்வரம் எனும் போது அதனுடைய பயிற்சிகளை சொல்லும் போது நீண்;ட ஆழ்ந்த பயிற்சிகளினூடாகத் தான் ஒரு சிறந்த கலைஞனாக வர முடியும். அதனை நீங்கள் பார்க்கும் பொழுது அதாவது இப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த நாதஸ்வரம் தவிலை பயில்பவர்களைப் பொறுத்தமட்டில் எவ்வளவு ஒரு கஷ்டமான பணி?

பதில்: யாழ்ப்பாணத்தப் பொறுத்த வரை நாதஸ்வர தவில் கலைஞர்கள் ஆரம்பத்தில இந்த தொழிலைப் பழகின உடனேயே அவர்களுக்கு கட்டாயமாக சிலசில குடும்ப சூழ்நிலை காரணமாக தொழிலுக்கு போக வேண்டிய கட்டாயமிருக்கின்றது. கோயில் செபம் என்று சொல்லுவது. எல்லோரும் ஆரம்பத்தின் போது கோயில் அபிஷேகம் பூசை என்று செபத்திற்கு போய்க் கொண்டு வருவது. அது ஆரம்பத்தில எங்களுக்கு பயிற்சி போல தான். அப்படி வாசித்து நல்ல நிலைக்கு வந்தாப் பிறகு தான் ஒரு செற்றாச் சேர்ந்து செய்வார்கள்.

கேள்வி: மற்றைய கலைகளை பின்பற்றுவது போல் நாதஸ்வரம் தவிலை அரங்கேற்றம் செய்வதோ பயிற்;சி எடுப்பவர்களோ மிகமிகக் குறைவு அதற்கு காரணம் இப்படியான கடுமையான பயிற்சி என்று சொல்லலாமா? ஏனென்றால் இப்படியான பயிற்சி எடுப்பதானால் தான் அவர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றார்கள். ஏனெனில் இளம் கலைஞர்கள் என்று அதற்குள் இருந்து புதிதாக வருவது என்பது மிகக்குறைவு. பார்த்தோமானால் எமக்கு அறிந்த கலைஞர்கள் தான் தொடர்ச்சியாக இருக்கின்றார்கள். புது கலைஞர்கள் என்று வருவது மிக மிகக்குறைவாக இருக்கின்றது. பயிற்சி காரணமாக சற்று தயக்கம் காட்டுகிறார்களா?

பதில்: அப்படி என்று இல்லை இன்றைய நாட்டுச் சூழல் ஒரு காரணம். இதனால நிறையப் பேர் வெளியில போட்டாங்க . நல்ல நல்ல நாதஸ்வர கலைஞர்கள் எல்லாம் நல்ல நிலைக்கு வரக் கூடியவர்கள் எல்லாம் போட்டாங்க. நாதஸ்வர தவில் கலைஞர்கள் சில பேர் வந்து கொண்டு தானிருக்கிறாங்க. உதாரணமாக பால முருகன் செந்தில் நாதன் எல்லாம் யாழ்ப்பாணத்திலே இந்த கலையைக் கற்று இப்ப தொழிலுக்கு வந்து முன்னனியில நிற்கிற புது கலைஞர்கள் தான் . இப்படி நிறையப்பேர் யாழ்ப்பாணத்தில இருக்கினம். இல்லையென்று சொல்வதற்கில்லை.

கேள்வி: நீங்கள் முதலே குறிப்பிட்டிருந்தீர்கள் நாகேந்திரன் அவர்களே இலங்கையிலே நாதஸ்வரம் தவிலுக்கு கல்லூரி என்று இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று. அந்த குறை தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா? அல்லது யாராவது முன்வந்து இப்படியான கல்லூரிகளை ஆரம்பிப்பார்களா? ஏனெனில் அண்மையிலே ஒரு செவ்வியில் பார்த்தேன் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற ஒரு முனைப்பொன்று எடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இது அந்த கலை இன்னும் வளர்ச்சி அடைவதற்கு உதவி செய்யுமென்று எதிர்பார்க்கின்றீர்களா?


பதில்: முயற்சிகள் நடக்குது இன்னும் செயல்முறையில் வரவில்லை. அப்படி வர வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பமும். வடபகுதி சங்கீதசபையில எடுத்திருக்காங்க. பல்கலைக்கழகத்திற்கு இன்னும் போகல.

நிச்சயமாக அப்படி ஒரு நிலை வரும் போது இன்னும் பிள்ளைகளுக்கு ஆர்வம் கூடும். பல்கலைக்கழக மட்டத்தில வந்தவுடன அந்த கலையை நாங்க பழக வேண்டும் என்று பிள்ளைகளுக்கு ஆர்வம் இன்னும் கூடும்.

இலங்கையைப் பொறுத்த வரை நல்ல குரு இல்லாதது பெரிய ஒரு பிரச்சினை பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வெளியில் போய்விட்டார்கள்.

கேள்வி: அதேவேளையில் இந்த நாதஸ்வர தவில் துறைக்குள் பெண்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் அறிந்திருக்கிறேன் ஒரு சில பெண்கள் அப்படியிருந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது சமத்துவம் சம அந்தஸ்து வேண்டும் என்று கூறிக் கொள்பவர்கள் இந்த துறையில் சற்று தயக்கம் காட்டுகிறார்கள். அது ஏன்?
நாதஸ்வரத்தில் அறிந்திருக்கின்றேன் ஆனால் தவிலில் பெண்களை நான் அறியவே இல்லை?


பதில்: இப்பவும் 2, 3 பேர் இருக்கிறார்கள். அப்ப நீங்கள் பார்த்தவர்களின் பிள்ளைகள் 2பேர் வாசிக்கினம். குறைவு தான். நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இல்லை தான்.
கள்ளியங்காட்டில் 2 பேர்இருக்கிறார்கள். இப்பொழுது இளம் தலைமுறையில் இல்லைத் தான். பெண்கள் வந்து கஷ்டப்படுவது அவர்களுக்கு பிடிக்காது போல 21 கிலோ 22 தூக்கிறது என்று சொன்னால் அதனால இருக்கலாம்.


கேள்வி: நீங்கள் எத்தனையோ நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்.இப்பொழுது இலங்கையில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தான் கூடுதலாக இருக்கின்றார்கள் நீங்கள் அப்படிச் செல்லும் போது மற்ற நாடுகளில் அவர்களைச் சந்திக்கும் பொழுது இப்ப சிட்னி முருகன் கோயிலில் சுவாமி வெளிவீதி சுற்றி உள் வீதிக்கு வந்த பொழுது அரை மணித்தியாலயம் ஒரு கச்சேரியை வைப்பீர்கள் அந்த நேரத்தில் இசையை கேட்கும் பொழுது எங்களுடைய மன உணர்வு சந்தோஷமாக இருக்கும். அப்பொழுது உங்களுடைய உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது?

பதில்: நிச்சயாக எங்களுக்கும் சந்தோஷமான நிகழ்வு தான் வந்திருந்த அவ்வளவு கூட்டம் ஏனென்றால் சிட்னி முருகனைப் பொறுத்த மட்டில் ரொம்ப அதிகமான கூட்டம். அவ்வளவு கூட்டமும் கச்சேரியை இருந்து கேட்கும் பொழுது எங்களுக்கும் அதில வாசிக்கிறது ஆர்வமாக தான் இருக்கும். சந்தோசமாகவும் திருப்தியாக இருந்தது. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கிடைக்காதா என்று மனதிற்கு கஷ்ரமாக இருக்கும் .

நேரம் பற்றாக்குறை தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் 20 ,30 நிமிடங்கள இருக்கும். சாமி உள் வீதிக்கு வருவதைப் பொறுத்து தான். நல்லூர் மாதிரி எங்கட சிட்னி முருகன் கோயிலும் நேரத்தை கடைப்பிடிப்பதில் முக்கியத்துவமானவை. அதே நேரத்தில நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு வாறம்.

ஏனெனில் ஆலயத்திற்குள் உட்செல்லும் போது நல்லூர் ஆலயத்திற்குள் செல்வது போன்ற மன உணர்வு மனதிற்குள் ஏற்படும். அது எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த ஆலயத்தின் அமைப்போ என்னவோ தெரியவில்லை. உள்ளுக்குள் நுழையும் பொழுது அப்படியான உணர்விருக்கின்றது.

கேள்வி: அதேபோல் மற்றைய நாடுகளிலும் உங்களுக்கு எந்தவகையில் வரவேற்புக்கள் இருக்கின்றது?

பதில்: இதே மாதிரி தான் லண்டனிலும் விம்பிள்டன் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இங்க சாமியெல்லாம் உள்ள கொண்டுபோய் வசந்த மண்டபத்தில வைச்ச பிறகு தான். அங்க சாமி வடக்கு வீதியில வரும் பொழுதே. அங்க வந்து வடக்கு வீதி சின்னவீதி தான் அதற்குள்ளயும் அவ்வளவு கூட்டம் கூடுவாங்க. இதே மாதிரி கூட்டமில்லை. சிட்னி முருகன் பெரிய ஆலயம் அதற்குண்டான கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கும். ஆனா அங்க சின்ன இடம் தான் அதற்குள்ள கூட்டம் ரொம்ப சிறப்பா இருக்கும். நாங்க வாசிக்கிற அந்த நேரத்திற்கு சாமி வடக்குவீதியில நிற்பாட்டிட்டு அரை மணி நேரம் ஊரில நடக்கிற மாதிரி கச்சேரி தான்.

கேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கென்று வந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகும் இந்த நாட்டிற்கு வந்து திரும்பிப் போக. உங்களுடைய குடும்பம் பெற்றோர், பிள்ளைகள், மனைவி, எல்லோரையும் பிரிந்து நீங்கள் இங்குள்ள இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படியான சிரமங்களுக்குள் இருக்கின்றீர்கள். இது ஒரு நாடு இல்லை. இப்படி எத்தனையோ நாடுகளுக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டியிருக்கும். அது எந்த வகையில் உங்களுக்கு நான் உங்கள் ஒவ்வொருவரினதும் மனநிலையையும் அறிய விரும்புகின்றேன். எவ்வளவு கஷ்ரமானது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது என்பது மிக மிக கஷ்ரம் அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்?

நீங்க இங்க ஒரு மாதம் இப்படி வேற நாடுகளுக்கும் போகும் போது வருடத்தின் சில நாட்களை இப்படித்தான் கழிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் கேட்கின்றேன்.
எப்படியும் தொழில் என்று பார்த்தாலும் அதற்கப்பால் மனநிலை என்பது மிகவும் கஷ்ரம.; இசைக்கு அதுவும் முக்கியம் உங்களுடைய மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றதோ அதன் வெளிப்பாடு உங்களில் தெரியும் என்று நினைக்கின்றேன்.


பதில்: எனக்கு இரட்டிப்பு பிரச்சினை. எனது அப்பா அம்மா கொழும்பில இருக்கிறாங்க. நான் தற்சமயம் கனடாவில வதிவிட உரிமையை பெற்றிருக்கிறேன். எனது குடும்பம் எல்லாம் கனடாவில் தான் இருக்கின்றார்கள். இப்படியே கொமும்பில போய் இரண்டு மூன்று நாட்கள் அம்மா அப்பாவோடு நின்றுவிட்டு அப்படியே கனடாவிற்கு போறது. எல்லோருக்கும் அப்படியான சூழ்நிலை தான்.

கஷ்ரம் இருக்கும் தான். போன் பேசும் போதெல்லாம் ஆனால் நிகழ்ச்சிக்குபோய்விட்டா சரியாகிவிடும்.

கேள்வி: இப்பொழுது இந்த நாட்டில் வளர்ந்து வரும் கலைஞர்கள் அதாவது நாதஸ்வரம் தவில் கற்பதை பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு. சத்திய மூரத்தி அண்ணாவிடம் கூடி நான் இதைப்பற்றி; கேட்டிருந்தேன். அவர் கூறியிருக்கிறார் இங்கு பயிற்சி எடுக்க வருபவர்கள் ஏதோ இலகுவான பயிற்சி என்று நினைத்து தான் வருகின்றார்கள். இங்கு வந்த உடனேயே கொஞ்ச நாட்களில் நின்று விடுகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இந்த வெளிநாட்டிலுள்ள கலைஞர்கள் எல்லாக்கலைஞர்களையும் தான் கேட்கின்றேன் நீங்கள் அதிலே நீண்ட காலம் தேர்ச்சி பெற்ற புகழ்பூத்த கலைஞர்கள் என்ற முறையில் அவர்களுக்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

பதில்;: அவர்கள் இந்த தொழிலை மறக்காமல் இங்கயிருந்தும் பின்பற்றி வருவதற்கு ரொம்ப சந்தோஷப்படுறன். இத்தனை வருடகாலமா சத்தியமூர்த்தி வைத்திஸ் இந்த நாட்டில் இந்த கலையை மறக்காமல் உங்களுக்கு வழங்கி வருகிறார்கள். இங்க பெரிய பெரிய ஆலயங்கள் எல்லாம் வந்துவிட்டது. உண்மையில் இந்த நாதஸ்வரக்கலையை இங்க இப்படியானவர்கள் இருக்கிறபடியால தான் அந்த சேவை இப்பவும் இருந்து கொண்டே இருக்கு. இல்லையென்றா கஷ்ரம் தான் நெடுக எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதனால் அவர்கள் வேற தொழில் செய்தாலும் இதை மறக்கமல் இன்றும் அந்த தொழிலை காப்பாற்றிக் கொண்டு வருகினம். அதை நினைக்க ரொம்பத் சந்தோஷமாக இருக்கிறது. இங்க மட்டுமல்ல இப்படி பல நாடுகளிலும் இருக்கிறார்கள்.
பாலமுருகன்
நீங்க ரசிகர் இல்லாவிட்டால் இந்த கலையை வளர்க்க முடியாது. உங்களுடைய ரசிக்கிற தன்மையால தான் எங்களால இந்தளவிற்கு வாசிக்க முடியுது. அவங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியல. எங்கட மனதிற்குள்ள இந்த நாட்டிற்கு வந்து சிட்னி முருகனில வாசிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இது நீடிக்கணும் என்று கேட்டுக் கொள்கிறன்.

எல்லோரும் ரொம்ப இரசிச்சினம் அதனை நினைக்க எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.

ரொம்ப மகிழ்ச்சி வாசிச்சம் இன்னும் பத்து நாள் திருவிழா கூட நடக்காதா என்று இருந்திச்சு. நாங்க கேட்டனாங்க நல்லூர் மாதிரி 25 நாள் திருவிழா செய்யலாமே என்று. புகழுறதிற்காக நாங்க சொல்லல பல நாடுகளுக்கு போய் வந்திருக்கிறம. இங்க 12 நாளும் வாசித்து முடிச்ச பிறகு மனசிற்கு சந்தோஷமாக திருப்தியாக இருக்கு. நாட்டு காலநிலையும் அப்படியிருக்கு. மற்ற நாடுகளில பயங்கர குளிர் அப்படி பிரச்சினை இருக்கும். அன்று சயு மன்றத்தில் நடைபெற்ற 4 மணித்தியாலய கச்சேரியில் அவ்வளவு கூட்டம். அந்த நேரம் ஒரு ரசிகர் கூடி அசைகிற மாதிரி தெரியல. எவருமே 4 மணித்தியாலங்களும் எழும்பவேயில்லை. அவ்வளவிற்கு அவர்கள் ரசித்தார்கள்.


கேள்வி: அதேவேளையில் உங்களுடைய இந்த நாதஸ்வர தவில் இசை தொடர்பான சிடி இசைத்தட்டுகள் வெளிவருவது மிக மிக குறைவு. ஏன் அப்படி, யாருமே அந்த முயற்சிகளை எடுப்பதில்லையா அல்லது நீங்கள்? ஏன் அதனைக் கேட்கின்றேன் என்றால் நாங்கள் வாகனங்களிலே செல்லும் பொழுது சிடி யை போடும் போது அந்த இசை எங்களுடைய பிள்ளைகளின் காதில் போய் சேரும் பட்சத்தில் தான் அவர்கள் அதை ரசிப்பார்கள் ஏனென்றால் ஆலயத்திற்கு வரும் பொழுது அவர்களை ஒரிடத்தில் இருத்தி அதனை கேட்க வைப்பது மிகவும் கஷ்ரம். அப்படியானவர்களுக்கு வாகனத்தில் போகும் போது போட்டால் அவர்களுக்கு அங்கு வேறு எந்த சிந்தனைகளும் இருக்காது. அப்பொழுது அவர்கள் இசையைத் தான் அவர்கள் ரசிப்பார்கள். அந்த வகையில் கூடுதலாக எதிர்கால சந்ததியினருக்கும் எம்முடைய பாரம்பரிய கலை வடிவம் சென்றடைய வேண்டுமென்பதற்காகத் தான் இந்த கேள்வியை கேட்கின்றேன்.


பதில்: வெளியிட்டிருக்கிறம், இங்க கிடைப்பது சிரமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில 95 ஆம் ஆண்டில் நானும் என்னுடைய குருநாதரும் சேர்ந்து 2 சிடி சுவிஸ்லான்ட் நாட்டில வெளியிட்டனாங்க. அதற்கப்புறம் கொண்டாவிலில் பஞ்சமூர்த்தி அண்ணையும் நானும் சேர்ந்து ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதன் பின் பத்மநாதனும் நானும் சேர்ந்தும் வெளியிட்டிருக்கிறம். கடைசியாக நானும் எனது தந்தையாரும் சேர்ந்து இப்ப 2 வருஷத்திற்கு முதல் ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதைத் தான் ஆரம்பத்தில உங்கட ரேடியோவில போட்ட போது கேட்டிருக்கிறன. அப்படி பல சிடிகள் வெளியிட்டிருக்கிறன். பாலமுருகன் தான் ஒரு சிடியும் இன்னும் வெளியிடவில்லை. நாங்க எல்லோரும் சேர்ந்து செய்கிறதா ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் செய்யல காரணமென்னென்றால் நாங்க இப்படி எல்லா இடமும் போறபடியா சேர்ந்து எடிட்டிங் பண்ண முடியாம இருக்கு. அப்படி ஒரு சிந்தனை இருக்கு. விரைவில எதிர்பார்க்கலாம்.

புகைப்படங்கள் உதவி:
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் இணையத்தளம்,
சிட்னி முருகன் ஆலயம்.

நன்றி: சிறப்பானதொரு பேட்டியெடுத்து உதவிய அறிவிப்பாளர் திரு.நவரட்ணம்.ரகுராம்







Posted by கானா பிரபா at 8:22 PM 33 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ▼  June 2008 (3)
      • "எரியும் நினைவுகள்" உருவான கதை
      • சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!
      • மேளச்சமா...!
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes