skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, December 20, 2015

ஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கானா பிரபா


எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்றுக் காலை எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இன்று காலை சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன். 
சிட்னி விமான நிலையம் நோக்கி விடிகாலை ஐந்து மணிக்கு எனது காரை முடுக்கி விட்டு கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணைய ஒலிபரப்பை மொபைல் போனில் தட்டினேன். சத்யசாயி பாபாவின் பாடல் ஒன்றை P..சுசீலா பாடிக் கொண்டிருந்தார். விஜயராணி அக்காவின் ஆன்மிகத் தேடலுக்கு சாயி பஜன் தான் வழிகாட்டி. அவரின் இறுதிப் பயணம் காணப் போய்க் கொண்டிருக்கும் எனக்கு சாயி பாடல் ஒலித்தது ஏனோ அந்த நேரம் இடம், பொருள், ஏவல் கண்டு ஒலித்ததாகப் பட்டது.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் அருண் விஜயராணி அக்காவின் தொடர்பில் இருந்திருக்கிறேன். எத்தனையோ நண்பர்களோடும், கூடப் பிறந்த சகோதரரோடும் கூட முரண் பட்டிருக்கிறேன். ஆனால் விஜயராணி அக்கா எது சொன்னாலும் தட்டாமல் கேட்டிருக்கிறேன், நடந்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் இடையில் வந்து வழிகாட்டி விட்டுப் போயிருக்கிறார் என்று அவரின் இறந்த நாள் அன்று என் மனைவிடம் சொல்லி நொந்தது ஏனோ மீண்டும் நினைப்புக்கு வந்தது.

வழக்கமாக அழுது வடியும் மெல்பர்ன்  காலநிலை சூரியன் உச்ச ஸ்தாயியில் எறிக்க அனல் கக்கியது. 

அவுஸ்திரேலியாவில் என் முதல் வாழ்வகமாக ஐந்து ஆண்டுகள் மெல்பர்ன் தந்த சுகத்தை பரபரப்பான 15 வருட சிட்னி வாழ்வு தரவில்லை என்று நினைத்துக் கொண்டே மெல்பர்ன் விமான நிலையத்தில் இறங்கி Taxi க்காகை காத்திருந்தேன்.

Taxi க்காரருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே பயணிப்பது என் வழக்கம். 
சையத், ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்,  மெல்பர்னில் குடியேறியவராம். முக விலாசங்களை இருவரும் பரிமாறிக் கொண்ட போது சொன்னார்.
நானும் என் ஊர் நிலவரங்களைச் சொல்லிவிட்டு
 "அடிக்கடி ஊருக்குப் போவீர்களா" என்று சையத் ஐக் கேட்டேன்.

"கடந்த ஆகஸ்டில் போயிருந்தேன் அது ஒரு துர் பயணம் உங்களுக்குக் கேட்கக் கஷ்டமாய் இருந்தால் நான் சொல்லவில்லை" என்றார். விடுமுறைக்கான பயணத்தில் வந்தவருக்கு ஏன் தன் கவலையைச் சொல்லுவான் என்று நினைத்திருப்பார் போல. அதன் விளைவே அந்த ஆதங்கம்.
"இல்லைப் பரவாயில்லைச் சொல்லுங்கள்" என்றேன்.

"சிட்னியில் இருந்து தாயகத்துக்குப் பயணப்பட்ட என்னை அங்கு விமான நிலையத்தில் அழைத்துப் போக வந்த என் தம்பியின் கார் பெரும் விபத்தில் சிக்கிச் செத்துப் போனார். விடுமுறைக்காக ஒரு மாதம் என்ற கணக்கில் போன நான் மூன்று மாதங்கள் அங்கே நடைப் பிணமாகத் திரிந்தேன்.
சிட்னிக்கு வந்த பின்பும் Taxi ஓடப் பிடிக்காமல் மூன்று மாதங்கள் அழுது கொண்டே கிடந்தேன், என்னை ஒரு பைத்தியக்காரன் என்றே குடும்பத்தவர் நினைக்கும் அளவுக்கு. 
நேற்றுத் தான் மீண்டும் Taxi வேலைக்குத் திரும்பினேன். இப்படியே கிடந்தால் அவன் நினைப்பில் என் கவலைகள் கூடும்"
சையத் உடைந்து போய்ச் சொன்னார்.

"என் தம்பிக்கு நான் என்றால் உயிர் சின்ன வயதில் அவனோடு கூடி விளையாடியது தான் நினைவுக்கு வருகுது" சொல்லிக் கொண்டே வந்த சையத் இன்னொன்றும் சொன்னார்.
"ஒன்று தெரியுமா நேற்று ஆரம்பித்த Taxi  வேலையை நான் இன்னும் முடிக்கவில்லை 
26 வது மணி நேரமாகத் தொடர்கிறேன் இன்னும் வீட்டுக்கே போகவில்லை" திரும்பிப் பார்த்துச் சிரித்தார். பக்கத்திம் இருந்த Energy Drink இன் வாயைத் தன் ஒரு கையால் அழுத்தி உடைத்துக் குடித்தார்.

மரணச் சடங்கில் கலந்து கொள்ளவே மெல்பர்ன் வந்திருப்பதாக அப்போது தான் அவருக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன். வழக்கமாக அழுது வடியும் காலநிலை சூரியன் உச்ச ஸ்தாயியில் எறிக்க அனல் கக்கியது. 

அவுஸ்திரேலியாவில் என் முதல் வாழ்வகமாக ஐந்து ஆண்டுகள் மெல்பர்ன் தந்த சுகத்தை பரபரப்பான 15 வருட சிட்னி வாழ்வு தரவில்லை என்று நினைத்துக் கொண்டே மெல்பர்ன் விமான நிலையத்தில் இறங்கி Taxi க்காகை காத்திருந்தேன்.

Taxi க்காரருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே பயணிப்பது என் வழக்கம். 
சையத், ஆப்கானிஸ்தானில் பிறந்தவர்,  மெல்பர்னில் குடியேறியவராம். முக விலாசங்களை இருவரும் பரிமாறிக் கொண்ட போது சொன்னார்.
நானும் என் ஊர் நிலவரங்களைச் சொல்லிவிட்டு
 "அடிக்கடி ஊருக்குப் போவீர்களா" என்று சையத் ஐக் கேட்டேன்.

"கடந்த ஆகஸ்டில் போயிருந்தேன் அது ஒரு துர் பயணம் உங்களுக்குக் கேட்கக் கஷ்டமாய் இருந்தால் நான் சொல்லவில்லை" என்றார். பயணத்தில் வந்தவருக்கு ஏன் தன் கவலையைச் சொல்லுவான் என்ற ஆதங்கம் அவருக்கு வந்தது போல.
"இல்லைப் பரவாயில்லைச் சொல்லுங்கள்" என்றேன்.
"சிட்னியில் இருந்து தாயகத்துக்குப் பயணப்பட்ட என்னை விமான நிலையத்தில் அழைத்துப் போக வந்த 
என் தம்பி வழியில் கார் விபத்தில் சிக்கிச் செத்துப் போனார். விடுமுறைக்காக ஒரு மாதம் போன நான் மூன்று மாதங்கள் அங்கே நடைப் பிணமாகத் திரிந்தேன்.
சிட்னிக்கு வந்த பின்பும் Taxi ஓடப் பிடிக்காமல் மூன்று மாதங்கள் அழுது கொண்டே கிடந்தேன், என்னை ஒரு பைத்தியக்காரன் என்றே குடும்பத்தவர் நினைக்கும் அளவுக்கு. 
நேற்றுத் தான் மீண்டும் Taxi வேலைக்குத் திரும்பினேன். இப்படியே கிடந்தால் அவன் நினைப்பில் என் கவலைகள் கூடும்"
சையத் உடைந்து போய்ச் சொன்னார்.

"என் தம்பிக்கு நான் என்றால் உயிர் சின்ன வயதில் அவனோடு கூடி விளையாடியது தான் நினைவுக்கு வருகுது" சொல்லிக் கொண்டே வந்த சையத் இன்னொன்றும் சொன்னார்.
"ஒன்று தெரியுமா நேற்று ஆரம்பித்த Taxi  வேலையை நான் இன்னும் முடிக்கவில்லை 
26 வது மணி நேரமாகத் தொடர்கிறேன் இன்னும் வீட்டுக்கே போகவில்லை" திரும்பிப் பார்த்துச் சிரித்தார். பக்கத்திம் இருந்த Energy Drink இன் வாயைத் தன் ஒரு கையால் அழுத்தி உடைத்துக் குடித்தார்.

மரணச் சடங்கில் கலந்து கொள்ளவே மெல்பர்ன் வந்திருப்பதாக அப்போது தான் அவருக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.
Posted by கானா பிரபா at 8:36 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, December 16, 2015

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்

டிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.


ஈழத்தில் நானும் (நாமும்) வாழ்ந்து கழித்த அந்த நாட்களின் "கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்" மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற என் முதல் குழந்தை வலைப்பதிவினூடாகப் பதிவேற வேண்டும் என்ற முனைப்பில் அப்போது எழுத ஆரம்பித்தேன். மடத்துவாசல் பிள்ளையார் எங்கள் கிராமத்துக் கோயில் அந்த ஆலயத்தின் வாசல் படிகளில் எனது நண்பர் குழாமுடன் பேசிக் கழித்த் இளமை நாட்களின் நீட்சியே இந்த இணைய உலகப் பதிவு.

அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் (எழுத்து, நாடகம், சினிமா, மரபுவழிக் கூத்து) குறித்த விரிவான பகிர்வுகளைக் குறித்த ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டி செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரெண்ணமும் எழவே அவற்றையும் சேர்த்துக் கொண்டேன். ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் குறித்து தமிழகத்து நண்பர்களோடு ஈழத்தின் இன்றைய தலைமுறையும் அவற்றைப் பயன்படுத்தி வருவதைக் கண்டு இந்தப் பணியில் நிறைவை உண்டு பண்ணியிருக்கிறது.
குறிப்பாக நவீன நாடக மரபை ஈழத்தமிழ் தமிழ் உலகிற்குச் செய்து காட்டிய திரு தாசீசியஸ், ஈழத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூலம் தமிழ் உலகை ஒன்றிணைத்த தனிநாயகம் அடிகளார் போன்றோர் குறித்த விரிவான ஒலி மற்றும் எழுத்து ஆவணப் பதிவுகள் எதிர்கால இணையத் தேடல்களில் புதையல்களாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

மாதத்துக்குக் குறைந்தது ஒரு இடுகை என்ற ரீதியில் இந்தப் பத்தாண்டுப் பயணத்தைத் தொடர்கிறேன்.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் "மடத்துவாசல் பதிப்பகம்" என்றதொரு பதிப்பகம் வழியாக எனது "பாலித் தீவு - இந்துத் தொன்மங்களை நோக்கி" என்ற நூலை வெளியிட்டது இந்தப் பத்தாண்டுப் பயணத்தின் இன்னொரு பரிமாணம். கிட்டத்தட்ட நாலாயிரம் அவுஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் செலவு செய்து, புத்தக வெளியீட்டில் கிடைத்த பணத்தை "சிவபூமி" சிறுவர் மனவளர்ச்சிப் பாடசாலைக்கு அளித்தேன். பூபாலசிங்கம் புத்தகசாலை உள்ளிட்ட ஈழத்துப் புத்தகசாலை வழியாக விற்ற தொகையை அங்குள்ள ஆதரவற்ற உறவுகளுக்குக் கொடுக்கச் சொல்லி விட்டேன். தமிழகத்தில் ஏக விநியோகஸ்தராக ஆபத்பாந்தவனாக உதவிய நண்பர் வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த இந்தியப் பயணத்தில் அவரைச் சந்தித்த போது  "புத்தகம் விற்ற கணக்கைப் பார்ப்போமா" என்று அவராகவே ஆரம்பித்தார். என்னடா இப்படியும் ஒரு மனுஷரா என்று என் மனசு நெகிழ்ந்தது. "இருக்கட்டும்க சாவகாசமா எடுத்துக் கொள்ளலாம்" என்றேன். அவரிடமும் நான் பணத்தை வாங்கப் போவதில்லை. ஆதரவற்ற உள்ளங்கள் யாராவது அவர் வழியாகப் பயன் பெறட்டும்.
எனது "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", "பாலித்தீவு" நூல்கள் அந்த நாடுகளுக்கான தமது பயணத்துக்குச் சிறப்பான வழிகாட்டலாக இருக்கின்ற என்று சொல்லும் அன்பர்களுக்கு என்னளவில் வழிகாட்டியாக இந்துத் தொன்மங்களைக் காட்ட வழி செய்திருக்கிறேன் என்ற மன நிறைவே போதும்.

இந்தப் பத்தாண்டுப் பயணத்தில் தொடர் வாசகர்களாக இருந்த 
போராளிச் சகோதரன் மிகுதன் 
http://www.madathuvaasal.com/2008/11/blog-post.html

ஈழத்துத் தனி நடிப்பு மேதை கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணை
http://www.madathuvaasal.com/2014/02/blog-post_27.html

இந்த வாரம் மறைந்த எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்கா
http://www.madathuvaasal.com/2015/12/blog-post.html

போன்றோரை இழந்தது எனக்குப் பேரிழப்பு.
அருண் விஜயராணி அக்கா இருந்திருந்தால் என்னை விட மிகவும் சந்தோஷப்பட்டிருப்பா.

எனது சக வலைப்பதிவுகளில் தமிழ்த் திரையிசையின் பல்வேறு பகிர்வுகளையும் கொடுக்க எண்ணி ஆரம்பித்த றேடியோஸ்பதி http://www.radiospathy.com/ வழியாக ஏராளமான தமிழ்த் திரை ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டியையும் கண்டு சேமித்திருக்கிறேன். குறிப்பாக எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் ஆபாவாணன், இயக்குநர் பாண்டியராஜன், பாடகி ஜென்ஸி, இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன், பாடகர் அருண்மொழி, எழுத்தாளர் ராஜேஷ்குமார் போன்றோரில் பலருக்கு முதல் ஒலிப் பேட்டியாகவும் அமைந்திருக்கிறது.

"உலாத்தல்" http://ulaathal.blogspot.com
எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு என்று என் அம்மா எனக்கிட்ட புகழாரத்தை 😀 மகுட வாக்கியமாக்கி எனது பயணப் பகிர்வுகளை கேரளாவில் பயணத்தில் இருந்த போதே இந்த வலைப்பதிவை உருவாக்கித் தொடர்கிறேன்.

ஈழத்து முற்றம் http://eelamlife.blogspot.com.au/ என்ற வலைப்பதிவினூடாக "ஈழத்தின் பிரதேச வழக்குகள் பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவை ஆரம்பித்து நண்பர்களை இணைத்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பங்களிப்பாளர்கள் திரண்ட குழும வலைப்பதிவாக விளங்கியது. ஆரம்பத்தில் இருந்த தீவிரம் இந்த வலைப்பதிவில் இல்லாதது ஒரு குறை. நண்பர்கள் தமது பகிர்வுகளாக் கை கொடுத்தால் மீண்டு(ம்) வரலாம். 

இந்தப் பத்தாண்டு எழுத்துலகப் பயணம் என்னளவில் ஒரு வைராக்கியமான முயற்சி. என் குணாதிசியத்துக்குப் பொருந்தாதது எந்த முயற்சியையும் தொடர்ச்சியாக செய்வது. ஆனால் இந்த வலைப்பதிவு முயற்சி வழியாக நிறையத் தேடல்களில் இறங்கியிருக்கிறேன். எப்பேர்ப்பட்ட இலக்கிய கர்த்தாக்கள், படைப்புலக ஆளுமைகள் என்று பல ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது என்னை நானே சுய மதிப்பீடு செய்திருக்கிறேன். 

வலைப்பதிவு ஆரம்பித்த் போது நூற்றுக்கணக்கான சக வலைப்பதிவர் நண்பர்களோடு இயங்கிய என் உலகம், இன்று  ஒரு பக்கம் எழுத்தாளராக ஒரு கூட்டம் ஒதுங்கிப் போக, இன்னொரு பக்கம் இதை விட வேறு வேலை செய்யலாம் என்று ஒதுங்கிப் போனோர் இருக்க தொடர்கிறேன், தொடர்வேன் எழுத்துப் பயணத்தை என் தேடல் வற்றும் வரை.


நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
Posted by கானா பிரபா at 12:55 PM 8 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, December 13, 2015

"விஜயா அக்கா கதைக்கிறன்" என்ற குரல் இனிக் கேளாது


 "அருண் விஜயராணி அக்காவுக்குக் கடுமையாம், எந்த நேரமும் அவர் நம்மை விட்டுப் பிரியலாமாம்"
செய்தியை நண்பர் எடுத்து வந்த போதே கடவுளே இதையும் அவ கடந்து வர வேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொண்டேன். இன்று மாலை அவர் நம்மை விட்டுப் பிரிந்த செய்தி கேட்டு இந்த நிமிஷம் இதை எழுதிக் கொண்டிருக்கும் வரை இதையெல்லாம் மாயமோ என்ற நிலையில் இறுகிப் போயிருக்கிறேன். இதே நிலை தான் கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்த போதும்.

இலக்கிய உலகில் பேரிழப்பு என்ற வார்த்தைகளில் சம்பிரதாயம் இல்லை. அவுஸ்திரேலிய மண்ணின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கியவர் என்ற இலட்சணத்தை வெறுமனே இந்த ஒற்றை வார்த்தைகளால் கடக்க முடியாது.

மெல்பர்னில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலக்கிய நிகழ்வொன்றுக்குப் போயிருந்தேன். அந்த நிகழ்வில் ஓவியர் அமரர் திரு.செல்லத்துரை அவர்களது ஓவியக் கண்காட்சியும் இருந்தது. சிவயோக சுவாமிகளின் திருவுருவத்தை வரைந்த வகையில் அவரின் தனித்துவமான ஒரு ஈழத்து ஓவியர். அவரின் மகள் தான் எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி என்ற செய்தியை அறிந்து கொண்டேன்.

அதன் பின் "கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்" படத்தினை சிலாகித்து நான் வானொலியில் பகிர்ந்த போது என்னைத் தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்பு, இந்தப் படம் Sense and Sensibility இன் தழுவல் என்ற செய்தியோடு இந்தப் படம் குறித்த மாறுபட்ட விமர்சனப் பார்வையை முன்வைத்தார் ஒரு பெண்மணி. வானொலியை இப்போது தான் கேட்க ஆரம்பித்திருக்கிறேன் என்ற செய்தியோடு வந்த அவர் வேறு யாருமல்ல அருண் விஜயராணியே தான்.
அதன் பின்னர் வானொலியில் நான் வழங்கும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கு அவரது விமர்சனமும், பாராட்டுதல்களும் வரத் தொடங்கின. தொலைபேசியில் வாரம் ஒருமுறை அவரின் அழைப்போ என் அழைப்போ இருக்கும்.
இலங்கை வானொலியின் தன் எழுத்துப் பிரதிகள் பலவற்றை வழங்கிச் சிறப்பித்தவர், அவுஸ்திரேலியாவின் விரல் விட்டு எண்ணத்தகு எழுத்தாளர்களில் ஒருவர். குறிப்பாகப் பெண்ணியம் என்றால் என்ன என்பதை அதன் வரையறைகளோடு வாழ்விலும் எழுத்திலும் பதித்தவர். என்னுடைய வானொலிப்படைப்புகள் பலவற்றுக்குத் தன்னுடைய ஆக்கங்களை எழுதி அனுப்பி வைத்து உரமேற்றி வைத்த போது அந்த நிலை எனக்கு வானொலிப் படைப்புலகில் கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக நினைத்துக் கொண்டேன்.

தமிழ் சினிமாப் பாடல்களை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நின்று கொண்டு பார்க்காமல் இன்றைய பாடல்கள் வரை துறை போகத் தெரிந்தவர். எழுத்தாளர் நிலையில் இருந்து ஜனரஞ்சக சினிமா உலகைப் பார்ப்பதெல்லாம் கெளரவக் குறைச்சலாக இருக்கும் எழுத்தாளர்களில் இவரின் இன்னொரு முகம் தனித்துவமாக அடையாளப்படுத்தியது. "தங்கமான எங்கள் ஊர்" என்ற ஈழத்து ஊர்கள் பற்றிய பகிர்வில் தன் பிறந்தகமான உரும்பராயைப் பற்றி எழுதி அனுப்பி வைத்தார். இன்னும் எத்தனையோ ஆக்கங்கள் தமிழ் இலக்கியங்களோடு தமிழ்த் திரையிசைப் பாடல்களை ஒப்புவமை செய்து பகிர்ப்பட்ட கட்டுரைகள் எல்லாம் அவர் கைப்பட எழுதி எனக்கு அனுப்பியவை இன்னும் பத்திரமாக இருக்கிறது. ஒருமுறை இதை நான் சொன்ன போது வியந்து போய் "அட இதையெல்லாம் எறிஞ்சிருப்பீங்கள் என்று நினைத்தேன் வீட்டில ஒரு பெரிய பரண் இருக்கும் போல" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நள தமயந்தி படத்தின் மூலக்கதை அவருடைய சிறுகதையில் இருந்து உரிமை பெறாமல் எடுத்தாளப்பட்டதைச் சிரிப்போடு கடந்து போனார்.

முனியப்பதாசன் கதைகள் தொடங்கி ஒரு குவியல் புத்தகங்களை அனுப்பிவிட்டுச் சொன்னார் "பிரபா இது உங்களிடம் இருக்க வேண்டியவை" என்று.

"அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா ஆகாசப் பார்வை ஏன் சொல்லு ராசா" என்ற உன்னால் முடியும் தம்பி படப் பாடலை அடிக்கடி கேட்பார். அவருக்காக அல்ல இறந்து போன அவரின் அப்பாவுக்காக. அவ்வளவு நேசம் அவர் மேல். தந்தையாரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் உடைந்து அழுது விடுவார்.

தனது வானொலிப் படைப்புகள் ஒலி வடிவில் இறுவட்டாக வரவேண்டும் என்பது தான் இறுதி வரை அவரின் நிறைவேறாத ஆசை.

நல்ல இலக்கியம், நல்ல சினிமா என்று எங்கள் வாராந்த சம்பாஷணைகள் இருந்து ஒரு நிலையில் எனக்கு உடன்பிறவாச் சகோதரி என்ற நிலைக்கு மாறினார். எனது திருமண அழைப்பிதழை முதன் முதலில் கொடுத்தது அவருக்குத் தான். இதை நான் சொன்னபோது அவர் அப்போது நெகிழ்ந்த கணம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. அப்போது சொன்னேன் நான்
"அருண் அண்ணா எவ்வளவு தூரம் உங்கள் இலக்கிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து உங்களோடு மனமொத்த கணவராக இருக்கிறாரோ அதே போன்ற ஆசீர்வாதம் தான் என் மண வாழ்க்கைக்கும் இருக்க வேண்டும் அக்கா"

திருமணத்தின் பின் முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து எங்களோடு வளர்க்க வேண்டும் என்று நான் சொன்ன போது அவர் சொன்னார், "முதலில் உங்களுக்கு ஒரு குழந்தைச் செல்வம் கிடைக்கட்டும் பிரபா அதுக்குப் பிறகு இதை நீங்கள் செய்யுங்கள்".


எங்களுக்கு நீண்ட வருடங்களாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாத போது எனக்காகக் கந்த சஷ்டி விரதம் பிடித்தார். தன்னுடைய சிகிச்சைக்காக இந்தியா போன போது எனக்காக மாங்காடு அம்மனிடம் நேர்த்தி வைத்தார்.
இலக்கியா பிறந்த போது எங்கள் அளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்பார் விஜயராணி அக்கா என்பதை மறுமுனைத் தொலைபேசியில் அவரின் குரலில் தொனித்த நெகிழ்வில் உணர்ந்தேன்.
கடந்த எனது இந்தியப் பயணத்தில் அவர் மாங்காடு அம்மனிடம் எங்கள் குழந்தைப் பாக்கியத்துக்கான நேர்த்தி வைத்ததைச் செய்து முடித்ததையும் நிறைவோடு ஏற்றுக் கொண்டார்.

"ஏன் பிரபா எடுக்கேல்லை அக்காவோட கோவமோ?" என்று கேட்கும் அளவுக்கு அருண் விஜயராணி அக்காவின் உரிமையான நேசம் இருந்தது.
என்னைக் கட்டுப்படுத்தி, நல்வழிப்படுத்தியவர்களில் அருண் விஜயராணி அக்காவின் பங்கு பெரும் பங்கு.

எங்களுக்குப் பிடித்தமானவர்கள் ஏன் திடீரென்று செத்துப் போய் விடுகிறார்கள் என்ற கேள்வியை என் மனச்சாட்சி அழுது கொண்டே மீண்டும் கேட்கிறது. சொல்வதற்கு என்னிடம் பதில் இல்லை :-(

 விக்கிபீடியாவில் அருண் விஜயராணி அவர்கள் குறித்த பகிர்வு

அருண் விஜயராணி (16 மார்ச் 1954 - 13 டிசம்பர் 2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர்.

பொருளடக்கம்

  • 1 வாழ்க்கைக் குறிப்பு
  • 2 இலக்கிய உலகில்
  • 3 விருதுகள்
  • 4 வெளிவந்த நூல்கள்
  • 5 ஆதாரங்கள்

வாழ்க்கைக் குறிப்பு

அருண் விஜயராணி யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகளிலும் இங்கிலாந்திலும் சில காலம் வசித்திருக்கும் அருண். விஜயராணி 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் வசித்து வந்தார். இவரது தந்தையார் பிரபல ஓவியர் செல்லத்துரை. விஜயராணி செல்லத்துரை என்ற பெயரிலேயே இவரது ஆக்கங்கள் முன்பு வெளியாகின. அருணகிரி என்பவரை மணந்ததன் பின்னர், அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வந்தார்.

இலக்கிய உலகில்

1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.
இலங்கை வானொலியில் சிறுகதைகள், சிந்தனைக்கட்டுரைகள், இசையும் கதையும், நாடகங்கள், தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன" என்ற இவரது வானொலி நாடகம், துணை என்ற பெயரில் ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக பி. விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.
அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலி, இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

விருதுகள்

மெல்பன் தமிழ்ச்சங்கம் இவரது பணிகளைப்பாராட்டி 2005 ஆம் ஆண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வெளிவந்த நூல்கள்

  • கன்னிகா தானங்கள் (சிறுகதைத் தொகுதி) தமிழ்ப்புத்தகாலயம், 1990, சென்னை

 

 தமிழ்முரசு அவுஸ்திரேலியா இணைய சஞ்சிகையில் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய பகிர்வு

திரும்பிப்பார்க்கின்றேன். அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் முருகபூபதி

.
கன்னிகளின்  குரலாக  தனது  எழுத்தூழியத்தை தொடர்ந்த   அருண். விஜயராணியின்  வாழ்வும் பணிகளும்
இலங்கை   வானொலி  ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில்   ஆற்றிய  பங்களிப்பு
" வணக்கம்....  பாருங்கோ.... என்னத்தைச் சொன்னாலும்  பாருங்கோ, உங்கடை   விசாலாட்சிப்பாட்டியின்ர  கதையைப்போல  ஒருத்தரும் சொல்லேலாது.    இந்தக்குடுகுடு  வயதிலையும்  அந்தப்பாட்டி  கதைக்கிற கதையளைக்   கேட்டால்  பாருங்கோ.... வயதுப்பிள்ளைகளுக்கும்  ஒரு நப்பாசை    தோன்றுது.    என்ன  இருந்தாலும்  திங்கட்கிழமை  எண்டால் பாட்டியின்ர   நினைவு   தன்னால  வருகுது.   அதனால  சில திங்கட்கிழமையில  அவவுக்கு  தொண்டை  கட்டிப்போறதோ  இல்லை... வேற  ஏதேன்  கோளாறோ    தெரியாது.   இவ  வரவே  மாட்டா..... பாவம் கிழவிக்கு  என்னாச்சும்  நேந்து போச்சோ   எண்டு  ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை    எண்ணிக்கை  எத்தனை   எண்டு  உங்களுக்குத்தெரியுமே...?
அதனாலை  ஒண்டு  சொல்லுறன்  கோவியாதையுங்கோ...  பாட்டியின்ர பிரதியளை   இரண்டு  மூண்டா  முன்னுக்கே  அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி    பிழைச்சுப்போகும்.   தடவித் தடவி   வாசிக்கிற  பாட்டிக்கு  நீங்கள் இந்த  உதவியை   எண்டாலும்  செய்து  குடுங்கோ "


இக்கடிதம்    இலங்கை  வானொலி  கலையகத்திலிருந்து  08-11-1976  ஆம் திகதி    நிகழ்ச்சித் தயாரிப்பாளர்  திரு. விவியன்  நமசிவாயம் அவர்களிடமிருந்து  ஒரு  பெண்   எழுத்தாளருக்கு  எழுதப்பட்டது. அந்தப்பெண்தான்  விசாலாட்சிப்பாட்டி  தொடரை   எழுதியவர்.
அந்தப்பெண்    அப்பொழுது  பாட்டியல்ல.   இளம்  யுவதி.   அவர்தான் அன்றைய    விஜயராணி  செல்வத்துரை,   இன்றைய  படைப்பாளி  அருண். விஜயராணி.    இவரது  விசாலாட்சிப்பாட்டி  வானொலித் தொடர்  சுமார்  25 வாரங்கள்    வானொலியில்  ஒலிபரப்பாகியது.
அக்காலத்தில்   பல  வானொலி  நாடகங்கள்  யாழ்ப்பாண  பேச்சு உச்சரிப்பில்    ஒலிபரப்பாகின.   விசாலாட்சிப்பாட்டிக்குரிய  வசனங்களை  அந்த    உச்சரிப்பிலேயே  விஜயராணி  எழுதினார்.
சமூகம்  குறித்த  அங்கதம்  அதில்  வெளிப்பட்டது.   அங்கதம்  சமூக சீர்திருத்தம்   சார்ந்தது.   அதனை   அக்கால  கட்டத்தின்  நடைமுறை வாழ்வுடன்   அவர்  வானொலி  நேயர்களுக்கு  நயமுடன்  வழங்கினார்.
வடக்கில்    உரும்பராயைச் சேர்ந்த  விஜயராணியின்  முதலாவது   சிறுகதை  ' அவன்  வரும்வரை '  இந்து  மாணவன்  என்ற  பாடசாலை மலரில்  1972   இல்  வெளியானது.
தவறுகள்  வீட்டில்  ஆரம்பிக்கின்றன  என்ற   இவர்  எழுதிய  மற்றும்  ஒரு வானொலி   நாடகத்தை  பின்னாளில்  துணை   என்ற   பெயரில் தொலைக்காட்சி  நாடகமாக  இயக்கித் தயாரித்து  ரூபவாஹினியில் விக்னேஸ்வரன்  ஒளிபரப்பினார்.
தொலைக்காட்சியின்   வருகைக்கு  முன்னர்  மக்களிடம்  வலிமையான ஊடகமாக   செல்வாக்கு  செலுத்தியிருந்தது   வானொலி.    அதிலும்  இலங்கை    ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்  தேசிய  சேவையும்  வர்த்தக சேவையும்    இலங்கைத்  தமிழ்  நேயர்களுக்கு  மாத்திரமின்றி   இந்தியாவில்     தமிழ்  நேயர்களுக்கும்  பெரும்  வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது.
அதற்கான  காரணம்:   ஒலிபரப்பின்  தரம்.   ஒலிபரப்பப்படும்  நிகழ்ச்சிகள். ஒலிபரப்பாளர்களின்    குரல்  வளம்.   வானொலிகள்  இருந்த  அனைத்து  தமிழ்   - முஸ்லிம்  இல்லங்களிலும்  காலை   முதல்  இரவு  வரையில் ஒலித்துக்கொண்டிருந்த   இலங்கை  வானொலி  நிகழ்ச்சிகள்  அனைத்து தலைமுறையினரையும்   கவர்ந்தது.   அந்த  நிகழ்ச்சிகளின்  பெயர்ப்பட்டியலே    நீளமானது.
இதில்   தமிழ் - முஸ்லிம்  எழுத்தாளர்களை   மிகவும்  ஆகர்சித்த  நிகழ்ச்சிகள், வானொலி  நாடகங்கள்,   இசையும்  கதையும்,   மாதர்  மற்றும்  கிராம சஞ்சிகை,    இளைஞர்களுக்கான  சங்கநாதம்,   சிறுவர்களுக்கான  சிறுவர்மலர்.   இவற்றில்  ஏராளமான  நாடக  எழுத்தாளர்கள்,  வானொலி கதாசிரியர்கள்,    சிறுவர்  இலக்கியம்  ,  சிறுவர்  நாடகம்,   நேயர் கடிதம்    எழுதுபர்கள்  அறிமுகமானார்கள்.    அவ்வாறு  வானொலி  நேயர்களுக்கு   அறிமுகமாகியவர்  விஜயராணி.
கொழும்பில்    தெகிவளையில்  தமது  பெற்றோர்  சகோதரங்களுடன்  வாழ்ந்த    காலப்பகுதியில்   -  இலங்கை   வானொலி  தமிழ்  நேயர்களினால் வரவேற்பை பெற்றிருந்த    சில  நிகழ்ச்சிகளுடன்  சம்பந்தப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலியாவில்    கால்நூற்றாண்டுக்கு  மேற்பட்ட  காலம்  முதல் வாழும்   திருமதி  அருண். விஜயராணி   மெல்பனிலிருந்து  அந்த வசந்தகாலத்தை   நினைத்து  நனவிடை   தோய்ந்துகொண்டிருக்கிறார்.
படைப்பாளியிடம்    எழுதிக்கேட்டு  ஆக்கங்களை   ஊடகங்களில்  ஒலிபரப்பிய    வானொலியும் -  பிரசுரித்த  பத்திரிகைகளும்  இன்றைய  நவீன   யுகத்தில்  அந்த  மரபை   கைவிட்டமைக்கு  இன்றைய  நவீன தொழில்   நுட்பம்தான்  அதிலும்   கணினி  -  மின்னஞ்சல்  யுகம்தான்   பிரதான   காரணம்.
வீரகேசரி   வாரவெளியீட்டின்  பொறுப்பாசிரியராக  பணியாற்றிய  பொன். ராஜகோபால்    ஈழத்து    எழுத்தாளர்களை    ஊக்குவித்தவர்.   1970 - 1980 காலப்பகுதியில்   அவர்  சில  பரீட்சார்த்த  முயற்சிகளையும் வாரவெளியீட்டில்   மேற்கொண்டார்.
ஏற்கனவே    படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை,    குறமகள்  வள்ளிநாயகி, இ.நாகராஜன்,    கனகசெந்தி  நாதன்  ஆகியோர்  இணைந்து  எழுதிய  மத்தாப்பு  புதினத்தை    படித்திருந்த  அவர்,  அதுபோன்றதொரு  தொடரை வீரகேசரி    வாரவெளியீட்டிலும்  வெளியிட  விரும்பினார்.
நாளைய  சூரியன்  என்ற    தலைப்பில்  ஐந்து  பெண்   எழுத்தாளர்கள் இணைந்து    எழுதும்  தொடர்  வெளியானது.    முதல்  அங்கத்தை   அருண். விஜயராணி    எழுதியிருந்தார்.    தொடர்ந்து  மண்டூர்  அசோக்கா, தமிழ்ப்பிரியா,   தாமரைச்செல்வி,    தேவமனோகரி  ஆகியோர்  எழுதினர்.   இது   போன்ற  பரீட்சார்த்த  முயற்சிகள்  பற்றி  முன்பொரு  தடவை எழுதியிருக்கின்றேன்.
ஆயினும் -  இலங்கையில்  இருந்தகாலத்தில்  நான்  இவரை சந்திக்கவில்லை.    குறிப்பிட்ட  நாளைய  சூரியன்  தொடரை  ஒப்புநோக்கும் (Proof Reading)  பொழுதே   படித்திருந்தேன்.   அக்கால கட்டத்தில்  நாளைய சூரியன்   வாசகர்களிடமும்  விமர்சகர்களிடமும்  வரவேற்பை பெற்றிருந்தமைக்குக்காரணம்  அந்தக்கதையின்  கருப்பொருள்.  ஹிப்பிக் கோலத்தில்  அலையும்  ஒரு   பாத்திரம்  பற்றிய  கதை.   ஈழத்து இலக்கியத்தில்   அதனை   பெண்   எழுத்தாளர்கள்  எழுதியமையினால்  துணிகர  முயற்சி  என்றும்  சில  விமர்சகர்கள்  சொன்னார்கள்.
இலங்கை  வானொலியில்  விஜயராணி   எழுதிய   சில  இசையும்  கதையும் மற்றும்   சில  சிறுகதைகள்,   நாடகங்களை    கேட்டிருக்கின்றேன்.   வீரகேசரி, மல்லிகையில்  அவருடைய  கதைகளை   வாசித்திருக்கின்றேன்.
எமது   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கம்  1980  இல்  கொழும்பு கொள்ளுப்பிட்டியில்   அமைந்த  கல்விக் கூட்டுறவு  மண்டபத்தில்  இரண்டு நாட்கள்   நடத்திய  அதன்  வெள்ளிவிழா  கருத்தரங்கில்  ஒரு நாள்  மாலை நிகழ்ச்சிக்கு   அவர்  வந்ததாகவும்  அறிந்தேன்.   ஆனால் சந்திக்கக்கிடைக்கவில்லை.
பின்னர்   சிறிதுகாலம்  விஜயராணியின்  எழுத்துக்களை  பத்திரிகையிலும் காணவில்லை.   வானொலியிலும்  அவரது  படைப்புகள் ஒலிபரப்பாகவில்லை.
வீரகேசரியில்   விஜயராணியின்  உறவினர்  சோமசுந்தரம்  ராமேஸ்வரன் பத்திரிகையாளராக   பணியிலிருந்த  எனது  நண்பர்  . அவர்தான்  விஜயராணி   திருமணம்  முடித்து  மத்திய கிழக்கில்  ஒரு  நாட்டிற்கு கணவருடன்    சென்றுவிட்ட  தகவலை  தெரிவித்தார்.
காலங்கள்   சக்கரம்  பூட்டியது.  விரைந்துவிடும்.
நான்  அவுஸ்திரேலியாவுக்கு  1987  இல்    வந்ததும்,  எனது   நிரந்தர  வதிப்பிட அனுமதி   தொடர்பான  விண்ணப்பங்களை   தயாரித்துத்  தந்து  என்னுடன் பலதடவைகள்   மெல்பன்  குடிவரவு  திணைக்களத்திற்கு  வந்த சட்டத்தரணி   செல்வத்துரை   ரவீந்திரன்,   ஒருநாள் " எழுத்தாளர்  விஜயராணி செல்வத்துரையை  உமக்குத் தெரியுமா ....?" -  என்று  கேட்டார்.
நான்    உடனே  எனக்கு  அருண். விஜயராணி   என்ற  எழுத்தாளர்  பெயர்தான் தெரியும்  என்றேன்.   அவர்  தனது  தங்கை  என்றார்  ரவீந்திரன்.   தங்கை தற்பொழுது   லண்டனில்  இருப்பதாகவும்  விரைவில்  மெல்பனுக்கு குடும்பத்துடன்    வந்துவிடுவார்  என்றும்  அவர்  சொன்னார்.
1988    இல்  மெல்பனில்   சில  நண்பரகள்  இணைந்து  நடத்திய  மக்கள்  குரல் என்ற    கலை,  இலக்கிய  அரசியல்  விமர்சன  கையெழுத்து  பத்திரிகை போட்டோ   கொப்பி    இயந்திரத்தில்  பதிவுசெய்யப்பட்டு  மெல்பன் - சிட்னியில்   பரபரப்பையே  ஏற்படுத்தியிருந்தது.
அதன்   முதலாவது  ஆண்டு  நிறைவுக்கூட்டம்  கருத்தரங்காக  மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ.   மண்டபத்தில்  நடந்தபொழுது  லண்டனிலிருந்து  வருகை    தந்திருந்த  அருண். விஜயராணியையும்,  ரவீந்திரன்  அழைத்து வந்திருந்தார்.    அன்றுதான்  அவரை    முதல்  முதலில்  சந்தித்தேன்.
விஜயராணியின்  குடும்பத்தினர்  கலை,   இலக்கியம்,   இசை,  நடனம் முதலான   துறைகளில்  ஆர்வம்  மிக்கவர்கள்.   விஜயராணியின்  தந்தையார்    இலங்கையின்  மூத்த  ஓவியர்.   யோகர் சுவாமியின் அபிமனாத்துக்குரிய   சீடர்.    இன்றும்  நாம்  பார்க்கும்  நாவலியூர் சோமசுந்தரப்புலவரின்   படத்தை   தமது  ஒளிப்படக்கருவியால்  எடுத்த கமரா   கலைஞருமாவார்.    அவர்பற்றிய  பதிவை  எற்கனவே எழுதியிருக்கின்றேன்.
அவருடைய    தங்கையின்  மகன்தான்  ஈழத்தின்  மூத்த  எழுத்தாளர் முனியப்பதாசன்.    விஜயராணியின்  அக்காமார்  ,   அண்ணன்மாரின் பிள்ளைகள்   நடன,  இசை  அரங்கேற்றம்  கண்டவர்கள்.   சட்டத்தரணி ரவீந்திரன்  கலை,   இலக்கிய  ஆர்வலர்.   அத்துடன்  லண்டனில்  தமிழ் தகவல்  நிலையம்,    இலங்கையில்  தமிழ்  அகதிகள்  புனர்வாழ்வுக்கழகத்தின்   ஸ்தாபகர்  கந்தசாமியுடன்  இணைந்து  பல சமூகப்பணிகளை    மேற்கொண்டவர்.
இவ்வாறு    கலை,  இலக்கிய,  சமூகப்பார்வையுடன்  வாழ்ந்த குடும்பத்திலிருந்து    வந்த  விஜயராணியின்  கணவர்  அருணகிரி  ஒரு பொறியியலாளர்.    பெரும்பாலான   பெண்   இலக்கியவாதிகளின்  கணவர்கள் போன்று   அவருக்கு  இந்தத்துறையில்  நாட்டம்  இல்லையாயினும்  தமது மனைவியின்    எழுத்துப்பணிகளுக்கு  உற்றதுணையாக  விளங்குபவர்.
அதனாலும்   விஜயராணி  செல்வத்துரை  என்ற  முன்னர்  நாம் அறிந்திருந்தவர்   பின்னாளில்  இலக்கிய  உலகில்  அருண். விஜயராணி என்று   அறியப்பட்டார்.
அருண். விஜயராணி   எழுதத் தொடங்கியகாலம்  முதல்  பல  நாடகங்களை சிறுகதைகளை,    வானொலிச்சித்திரங்ளை   எழுதியிருந்தபோதிலும்  தமது நூல்களை    வெளியிடுவதில்  ஆர்வம்  கொண்டிருக்கவில்லை.
அவர்   மெல்பன்  வந்தபின்னர்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள்  நூலின்    வெளியீட்டு  விழாவை   25-06-1989  ஆம்  திகதி மெல்பன்  வை. டபிள்யூ. சி. ஏ.   மண்டபத்தில்  நடத்தியபொழுது  அருண். விஜயராணியும்  உரையாற்றினார்.   சிட்னியிலிருந்து  மூத்த  எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும்    வருகைதந்து  உரையாற்றினார்.   இருவரும் அவுஸ்திரேலியாவில்    ஏறிய  முதல்  மேடையாக  அந்த  இலக்கிய நிகழ்வு   அமைந்தது.
தாம்  பலவருடங்கள்  இலங்கையிலும்  லண்டனிலும்  இருந்தும்கூட   தமது ஒரு    நூலைத்தன்னும்  வெளியிட  முடியாதிருந்த  இயலாமையை  அன்று அவர்  மேடையில்  சொல்லி,  அந்த  நிகழ்வு  தனக்கு   முன்மாதிரியாக இருப்பதாக   குறிப்பிட்டதுடன்,    வீரகேசரி  வாரவெளியீட்டில்  அந்த  நிகழ்வு பற்றிய   கட்டுரையையும்  பின்னர்  எழுதியிருந்தார்.
1990  ஆம்  ஆண்டு  நான்  சென்னைக்கு  புறப்படுவதற்கு  முதல்நாள்  மாலை   தமது  கணவருடன்  எனது  வீட்டிற்கு  வந்த  அவர்,  என்னிடம்  ஒரு   கோவையை    கையளித்து,    அதில்  தனது  சிறுகதைகள் இருப்பதாகவும்   அதனை   சென்னை   தமிழ்ப்புத்தகாலயம்  அகிலன் கண்ணனிடம்   சேர்ப்பித்து  அச்சிடுவதற்கு  வழிவகை  செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்றைய   உரையாடலில்  அதற்கு  தூண்டுகோலாக  இருந்தவர் அவருடைய    கணவர்தான்   என்பதையும்    அறியமுடிந்தது.
விமானத்திலேயே   அந்தக்  கதைகளின்  மூலப்பிரதிகளை  படித்தேன். தமிழகத்தின்    பிரபல  ஓவியர்  மணியம்  செல்வன்  வரைந்த முகப்போவியத்துடன்  அந்தநூல்  கன்னிகா  தானங்கள்  என்ற  பெயரில் சென்னை   தமிழ்ப்புத்தகாலய  வெளியீடாக  வந்தது.
21-04-1991 ஆம்  திகதி  கன்னிகாதானங்கள்  மெல்பனில்  அதே வை. டபிள்யூ. சி. ஏ.    மண்டபத்தில்  பேராதனை  பல்கலைக்கழக  முன்னாள் விரிவுரையாளர்  கலாநிதி  காசிநாதர்  தலைமையில்  நடந்தது.  இலங்கை வானொலியின்   முன்னாள்  தமிழ்ச் சேவைப்பணிப்பாளர்  திருமதி பொன்மணி  குலசிங்கம்  வருகைதந்து  வாழ்த்துரை   வழங்கியபொழுது அருண். விஜயராணியின்  வானொலி  நிகழ்ச்சிப்பங்களிப்புகளை நினைவுபடுத்தினார்.
குறிப்பிட்ட  கன்னிகா  தானங்கள்  நூலை   தமிழகத்தில்  வாசித்த  சுஜாத்தா ராணி   என்பவர் Indian Express Weekend  இதழில்   நல்லதொரு  விமர்சனம்   எழுதியிருந்தார்.   அதனையும்  தினகரன்  வாரமஞ்சரியில் அந்தனி ஜீவா   -  தேவமலர்  என்ற  புனைபெயரில்  எழுதிய பெண்பிரம்மாக்கள்   என்ற  தொடரில்  அருண். விஜயராணி   பற்றி எழுதியிருந்த    குறிப்புகளையும்  சிட்னியிலிருந்து  கவிஞர்  பாஸ்கரன், எஸ்.பொன்னுத்துரை,    மாத்தளை  சோமு  இலங்கையிலிருந்து  பொன். ராஜகோபால்,   சுடர்  இதழ்  ஆசிரியராகவிருந்த  கனகசிங்கம்  (பொன்னரி) மெல்பனிலிருந்து   ரேணுகா  தனஸ்கந்தா,  முருகபூபதி குவின்ஸ்லாந்திலிருந்து    வானொலிக்  கலைஞர்  சண்முகநாதன்   வாசுதேவன்   ஆகியோர்  எழுதிய  குறிப்புகளையும்  தொகுத்திருந்த    சிறிய பிரசுரமும்   அன்றையதினம்  வெளியிடப்பட்டது.
அருண். விஜயராணியின்    மெல்பன்  வருகையின்  பின்னர்  இங்கும்  சில கலை, இலக்கிய   மாற்றங்கள்  தோன்றின.   1990  தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியா   தமிழர்  ஒன்றியத்தின்  கலாசார  செயலாளராக  அவர் அங்கம்    வகித்ததுடன்  சங்கத்தின்  வெளியீடான  அவுஸ்திரேலியா முரசுவின்    ஆசிரியராகவும்  பணியாற்றினார்.   சிட்னி - மெல்பன் குவின்ஸ்லாந்து  தமிழ்   வானொலிகளிலும்  இவருடைய  பல  படைப்புகள்  ஒலிபரப்பாயின.    கவியரசு  கண்ணதாசனின்  திரைப்படப்பாடல்களில் இழையோடிய    தத்துவக்கருத்துக்களையும்,   சமூகம்,   மொழி,  பெண்கள் தொடர்பான  சிந்தனைகளையும்  தொகுத்து  தொடர்ச்சியாக உரைச்சித்திரங்களை   எழுதி  வான்  அலைகளில்  பரப்பினார்.
மல்லிகை   அவுஸ்திரேலியா  சிறப்பு  மலரை  நாம்  2000  ஆம்   ஆண்டு இறுதியில்  வெளியிட்டபொழுது,  அந்த  முயற்சிக்கு  பக்கபலமாக  இருந்தார்.    அதில்  இவர்  எழுதிய  தொத்து வியாதிகள்  என்ற சிறுகதையை   ஆங்கிலத்தில்  மொழிபெயர்ந்த  தமிழக  கவிஞி   தமிழச்சி சுமதி  தங்கபாண்டியன்  தாம்  விரிவுரையாளராக   பணியாற்றிய   சென்னை  இராணி   மேரி  மகளிர்  கல்லூரியில்  நடந்த  கருத்தரங்கொன்றில்  விமர்சித்திருக்கிறார்.
அருண். விஜயராணியின்   கன்னிகா தானங்கள்  தொகுப்பில்  இருக்கும் சிறுகதைகளை    கனடாவில்  வதியும்    சியாமளா  நவரத்தினம் ஆங்கிலத்தில்    மொழிபெயர்த்துள்ளார்.   ஆயினும்  ஆங்கில  வெளியீடு வெளிவருவதில்    தொடர்ந்தும்  தாமதம்  நீடிக்கிறது.
அருண். விஜயராணி    எமது  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்    -    இலங்கை  மாணவர்  கல்வி    நிதியம் முதலானவற்றிலும்    அங்கம் வகித்து  இவற்றின்  வளர்ச்சிக்கு  ஆதரவு வழங்கியவர்.    அத்துடன்  இந்த  அமைப்புகளின்  தலைவியாகவும்  சில வருடங்கள்  பணியாற்றினார்.    நாம்  தொடர்ந்து  நடத்திவரும்  தமிழ் எழுத்தாளர்   விழாக்களிலும்  அவரது  ஆதரவு  தொடர்ந்தது.
ஒருவிழாவில்   இவருடைய  முயற்சியினால்  வெளியான  மறைந்த எழுத்தாள ர் முனியப்பதாசனின்  சிறுகதைத்தொகுதி  இலங்கையில் அச்சிடப்பட்டு    அறிமுகப்படுத்தப்பட்டது.   அதனை   மல்லிகைப்பந்தல்  ஊடாக  வெளியிட்டிருந்தார்.    முனியப்பதாசனின்  கதைகளை  தேடி  எடுத்து தொகுத்தவர்  செங்கை ஆழியான்.
இவர்களும்  மல்லிகைப்பந்தலும்  இல்லையேல்  அந்தத் தொகுப்பு வெளிவந்தே  இருக்காது.    முனியப்பதாசனை  ஈழத்து  இலக்கிய  உலகம் மறந்திருந்த  வேளையில்,  அவரை  நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக  அந்த  நூல்  அமைந்தது.
சமீபத்தில்  சில   தமிழ்  இணையத்தளங்களில்   நிறைவடைந்த  விழுதல் என்பது  எழுகையே  என்ற   மெகா   தொடர்கதைத் தொடரை   புகலிட நாடுகளிலிருந்து    பல   படைப்பாளிகள்  எழுதினர்.   அதிலும்  அருண். விஜயராணியின்   ஒரு  அத்தியாயம்  இடம்பெற்றது.
சுமார்  35   ஆண்டுகளுக்கு    முன்னர்  வீரகேசரியில்  நாளைய  சூரியன் தொடர்கதையில்    சம்பந்தப்பட்டிருந்த  அருண். விஜயராணி , மீண்டும்  எழுதி அங்கம்வகித்த    தொடர்  சர்வதேச  பார்வையுடன்  நிறைவுபெற்றது.
படைப்பாளிகளின்    படைப்புமொழி  மாறிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுச்சாதனங்களும்  ஊடகங்களின்  வடிவங்களும்  காலத்துடன் மாறிக்கொண்டிருக்கின்றன.
இந்த    மாற்றங்களுக்கு  மத்தியில்  அருண். விஜயராணி,  தமிழ்  இலக்கிய பரப்பில்  பலதரப்பட்ட  காலகட்டங்களில்  எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய   குரல்  பாதிக்கப்பட்டவர்கள்  சார்ந்து,  குறிப்பாக  பெண்கள் சார்ந்தே    ஒலித்துக்கொண்டிருக்கிறது.
Posted by கானா பிரபா at 9:06 PM 4 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ▼  2015 (20)
    • ▼  December 2015 (3)
      • ஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கானா பிரபா
      • வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்
      • "விஜயா அக்கா கதைக்கிறன்" என்ற குரல் இனிக் கேளாது
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes