skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Monday, December 20, 2010

"முகத்தார்" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்


இலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் "முகத்தார்" எஸ்.ஜேசுரட்ணம்.

எனது பால்யகாலத்து நினைவிடுக்குகளில் ஆங்காங்கே எச்சமாக இருக்கும் நினைவுகளில் "முகத்தார் வீடு" வானொலி நாடகம் மறக்கமுடியாதது. வானொலி என்ற ஊடகத்தை தொலைக்காட்சி தின்று தீர்க்காத காலமது. அந்தக் காலத்தில் வானொலியே சகலதுமாகிப் போன பொழுதுபோக்கு ஊடகம். எங்கள் வீட்டு சன்யோ ரேப் ரெக்கோடர் காலையிலே இலங்கை வானொலியின் சைவ நற்சிந்தனையோடு ஆரம்பமாகி, சென்னை வானொலியின் தென்கச்சி சுவாமிநாதன் கொடுக்கும் "இன்று ஒரு தகவல்" நிகழ்ச்சியோடு ஓயும். மீண்டும் மாலை இந்த வானொலிப் பெட்டி உயிர்ப்பிப்பது "முகத்தார் வீடு" நாடகத்தின் மூலமாகத் தான். அது ஓயும் நேரம் "இரவின் மடியில்".

"முகத்தார் வீடு" நாடகம் வெறுமனே நகைச்சுவைச் சித்திரமாக அல்லாது குறித்த நாடக அங்கத்தின் முடிவில் விவசாயிகளுக்கான பயன்பாட்டுத் தகவல்களோடு சேர்ந்ததொரு படைப்பு. அந்தக் காலகட்டத்தில் என் வயசுக்கு நாடகத்தின் பம்பல் தான் முன்னுக்கு நிக்கும். முகத்தார் என்ற ஒரு குடும்பத் தலைவர் பாத்திரத்தில் ஜேசுரட்ணம் அவர்களின் மிடுக்கான குரல், கூடவே சரவணை என்ற அப்பாவியும் துடுக்குத் தனமும் நிறைந்த பையனாக எஸ். எழில்வேந்தன் அவர்கள். இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல பல நூறு அங்கங்களைக் கொண்ட வானொலி அங்கங்கள் அவை. எஸ்.ஜேசுரட்ணம் அவர்கள் பின்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழத்தலைப்பட்டாலும் கூட அவர் கலைத்தாகம் ஓயவில்லை, இறுதி மூச்சு வரை. ஈழத்துக் கலையுலக சாகித்யர்களை, அவர்களை ஒலிப்பேட்டி மூலம் அவர்தம் வாழ்வியல் அனுபவங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற என் முனைப்பை நிறைவேற்ற முன் இன்னொருவராக ஜேசுரட்ணம் அவர்களின் இறுதி மூச்சு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கடந்த நவம்பர் 27, 2010 ஆம் ஆண்டு முகத்தார் போய்விட்டார்.

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக "முகத்தார்" எஸ்.ஜேசுரட்ணம் அவர்களின் நினைவுப்பகிர்வை வழங்க, அவரோடு சரவணை என்ற பாத்திரத்தில் நடித்த திரு எஸ்.எழில்வேந்தன் அவர்களைத் தொடர்புகொண்ட போது அவர் வழங்கிய பகிர்வுகள் ஒலி வழியாகவும், எழுத்து வடிவிலும்.




முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் அவர்களோடு "முகத்தார் வீடு" என்ற நாடகத்தில் இணைந்து பல ஆண்டுகள், குறிப்பாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த நாடகம் தொடர்ச்சியாக ஒலிபரப்பானது. 268 அங்கங்கள் அந்த நாடகம் ஒலிபரப்பானது, 83 ஆம் ஆண்டு இனக்கலவர வேளை புதிய அங்கங்கள் ஒலிபரப்பாகாவிட்டாலும் பழைய அங்கங்களை மறு ஒலிபரப்புச் செய்திருந்தார்கள். அப்படிப் பார்க்கப்போனால் அவை இன்னும் அதிகமாக இருக்கும். அதில் ஒரு 225 அங்கங்காளாவது அவரோடு இணைந்து நான் நடித்திருப்பேன். அந்தவகையில் எங்கள் இருவருக்கும் பெரியதொரு நெருக்கம் இருந்தது.

ஆனால் அதற்கு முன்னதாகவே திரு ஜேசுரட்ணம் அவர்களை எனக்குத் தெரியும். நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குப் பணியாற்றச் சென்றது 83 ஆம் ஆண்டிலே. ஆனால் 76 ஆம் ஆண்டிலிருந்தே நான் ஒரு குரல் தேர்வுபெற்ற கலைஞனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு முறுக்கு மீசையுடன் ஒருவர் கம்பீரமாக நடந்து வருவார், நான் இவர் ஒரு பொலிஸ்காரராக இருக்கவேண்டும் என்று எண்ணியதுண்டு. பேச்சும் அப்படித்தான், ஒரு கம்பீரமான குரல் தொனியில் அவர் பேசுவார். அதன்பிறகு ஒருசில நாடகங்களிலும் சொற்சித்திரங்களிலும் அவரோடு இணைந்து பங்காற்றச் சென்றபோது தான், இவர் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்தவர் மார்க்கெட்டிங் டிப்பார்ட்மெண்ட் என்று சொல்லப்படுகின்ற சந்தைப்படுத்தல் திணைக்களத்திலே அவர் கணக்குப் பிரிவிலே அதாவது auditing பகுதியிலே இருந்தார். மிகச்சிறந்த உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசக்கூடிய புலமை அவரிடம் இருந்தது.

சில்லையூர் செல்வராசன் அவர்கள் எழுதிய "தணியாத தாகம்" என்ற திரைப்படப்பிரதியை மக்கள் வங்கி அனுசரணையுடன் ஒரு தொடர் நாடகமாக ஒலிபரப்பியபோது அதில் பணியாற்றிய வகையில் ஜேசுரட்ணம் அவர்களோடு எனக்கு நெருக்கம் அதிகமானது. அந்த நாடகத்திலே நான் ராஜன் என்ற ஒரு பாத்திரத்திலும் அவர் ஒரு மலேசியன் பென்ஷனியராகவும் நடித்தார். யாழ்ப்பாண மேற்தட்டு வர்க்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் அதில் நடித்தார்.

வானொலி நாடகங்களில் நடித்தது மட்டுமன்றி வானொலி நாடக எழுத்துப் பிரதிகளிலும் அவர் சிறப்பாகப் பணியாற்றினார் என்று சொல்வேன். குறிப்பாக நகைச்சுவை நாடகங்களை எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் தான். அந்தக் காலகட்டத்தில் கதம்பம் என்றதொரு நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் ஏழு அல்லது எட்டு நிமிடங்கள் கொண்ட சிறு சிறு நாடகங்கள் ஒலிபரப்பாகும். அந்தப் பகுதியில் ஜேசுரட்ணத்தின் ஒரு பிரதி நிச்சயமாக இருக்கும். அந்த கதம்பம் என்ற நிகழ்ச்சியை கே.எம்.வாசகர் தயாரித்தளித்திருந்தார். அந்த கதம்பம் நிகழ்ச்சியில் ஜேசுரட்ணத்தின் பங்களிப்பே பின்னர் இவர் முகத்தார் வீடு என்னும் முழு நீள நகைச்சுவை நாடக அங்கங்களை எழுத இவருக்குத் துணைபுரிந்திருக்க வேண்டும்.

வாடைக்காற்று திரைப்படத்திலே பொன்னுக்கிழவர் என்ற பாத்திரத்திலே நடித்திருந்தார். அந்த நடிப்புக்காக சிறந்த துணை நடிகர் என்ற ஜனாதிபதி விருதும் அவருக்குக் கிட்டியது.
ஜேசுரட்ணம் அவர்களது குணாதியசங்களிலே நகைச்சுவை தவிர்த்து, செய் நேர்த்தி என்னும் perfection அவரிடமிருந்தது. அந்த ஒரு விஷயத்தையும் தனது கற்பனையில் இருந்து எழுதாமல் அது எப்படியிருக்கும் என்பதைத் தேடிக்கண்டறிந்து எழுதுவார். ஒருமுறை வானொலிக்கலையகத்துக்கு வந்த போது சைனிஸ் ரெஸ்டாரெண்டின் மெனு கார்டை கொண்டு வந்திருந்தார். அப்போது நாங்கள் கேட்டோம் , "என்னத்துக்கு ஜேசு இதைக் கொண்டு வந்திருக்கிறீர்கள்" என்று. அப்போது அவர் சொன்னார் அடுத்த அங்கத்திலே நாடகத்தில் மகன் பாத்திரம் சொல்வழி கேட்காமல் குழப்படி பண்ணி பிறகு கப்பலில் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து கடைசியில் ஓரு இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுவான். பின்னர் அவன் சைனீஸ் ரெஸ்டோரண்ட் ஒன்றில் சாப்பிட்டு விட்டு என்ன சாப்பிட்டேன் என்று தந்தைக்குச் சொல்வதாகவும் பின்னர் தந்தையாகிய அவர் எமக்குச் சொல்வதாகவும் தான் நாடகத்தின் கதை. அந்த ரெஸ்டோரண்டின் உணவுப்பட்டியலை எல்லாம் வாங்கி வைத்து அவற்றைச் சரியாக உச்சரிப்புச் செய்யப் பயிற்சி எடுத்துக் கொண்டார். இப்படியாக ஜோதிடர், பரியாரி என்று ஒவ்வொரு அம்சங்களுக்கும் அவர் ஒரு செய் நேர்த்தியைக் கொண்டு வந்திருந்தார். நான், அவர், ஏ.எம்.சி.ஜெயஜோதி ஆகிய மூவரும் ஒவ்வொரு அங்கங்களிலும் வருவோம். இன்னொரு பாத்திரத்தில். இன்னொரு புதிய பத்திரம் ஒவ்வொரு நாளும் வந்து போகும், பரியாரியாக, கடைக்காரராக, விவசாயத் திணைக்கள அதிகாரியாக. பெரியத்தார் என்ற அவருக்கு கஷ்டங்கள் வரும்போது சரவணையாக நடித்த நான் நான் சிரிப்பேன், அதற்காக ஓவ்வொரு நாடகத்திலும் சரவணையாகிய என் பாத்திரத்துக்கு அவரின் அடி கிடைக்கும்.

விவசாயத் தகவல்களை வழங்குவதே இந்த நாடகத்தின் சாரம்சம், இந்த நாடகத்துக்கான நிதியை வழங்கியவர்கள் விவசாயத்திணைக்களத்தின் பண்ணை ஒலிபரப்புச் சேவையினர். அப்போது கரவெட்டியைச் சேர்ந்த திரு சிறீஸ்கந்தராஜா தான் பண்ணை ஒலிபரப்புச் சேவையின் பொறுப்பாளராக இருந்தார், அவரின் எண்ணம் தான் இந்த நாடகத்தின் கரு.

1993 ஆம் ஆண்டிலே பிரான்ஸ் நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் பாரிஸுக்கு சென்றிருந்தேன். அப்போது இங்கே ஒரு வானொலி நிலையம் இருக்கிறது, முகத்தார் வீடு நாடகத்தை அதற்காகச் செய்வோம் என்று அழைத்தார். அப்போது மணிமேகலை பிரசுரமாக 12 நாடகப்பிரதிகளைக் கொண்டதாக "முகத்தார் வீட்டுப்பொங்கல்" என்ற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகவும் தந்திருந்தார்.


ஜேசுரட்ணம் அவர்களோடு இரண்டு மேடை நாடகங்களிலும் நடித்திருக்கின்றேன். முகத்தார் வீடு நாடகத்தின் பிரபலத்தின் மூலம் புதுக்குடியிருப்பிலே அப்போது விவசாயத்திணைக்கள ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய மைதானத்திலே நான், ஜேசுரட்ணம் மற்றும் அப்போது விவசாயத்திணைக்களப் பொறுப்பதிகாரியாக இருந்த டேவிட் ராஜேந்திரன், இலங்கையின் பிரபல தொலைக்காட்சி, வானொலிக் கலைஞர் ராஜேஸ்வரன் (ஈழத்துத் திரைப்படமான டாக்சி ட்ரைவர் படத்தில் கதாநாயகனாக நடித்தவர்) ஆகியோருடன் மேடை நாடகமாக நடித்தோம்.

அதைப்போன்று தணியாத தாகம் புகழ்பெற்ற வேளை, யாழ்ப்பாணத்திலே வீரசிங்கம் மண்டபம், சுன்னாகம் இராமநாதன் இசைக்கல்லூரி, தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரி ஆகிய மூன்று அரங்கங்களிலே அந்த நாடகத்தை நடிக்கச் சென்றிருந்தோம்.

முகத்தார் வீடு நாடகம் வெற்றியடைந்த பின்னர் கே.எம்.வாசகர் , கிறீன்லாண்ட்ஸ் ஹோட்டலில் ஒரு பெரிய தேனீர் விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அபோது தமிழ்ச்சேவை பொறுப்பாளராக இருந்த கே.எஸ்.நடராஜா அவர்கள் விருதுகள் வழங்கிக் கெளரவித்தும் இருந்தார். அந்த நினைவுகள் எல்லாம் பசுமையாக இருக்கிறது.

எஸ்.ஜேசுரத்தினத்துக்கு தேசிய விருதைத் தேடிக்கொடுத்த வாடைக்காற்று திரைப்படத்தில் அவர் தோற்றம்




ஜேசுரட்ணம் அவர்கள் குறித்த வாழ்க்கைக் குறிப்புக்கள் (தமிழ் விக்கிப்பீடியா வழி)

டிசெம்பர் 26, 1931 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இளவாலையில் பிறந்த இவர் இளவாலை புனித ஹென்றீஸ் கல்லூரியில் பாடசாலையில் கல்வி கற்றார். இலங்கை சந்தைப்படுத்தல் திணைக்களத்தில் கணக்குப் பிரிவிலே பணியாற்றி 1984 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.

கொழும்பில் இவர் முப்பத்து மூன்று வருட காலம் பணியாற்றியுள்ளார். இக்கால கட்டங்களில்; இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களினால் ஐந்து தடவைகள் அகதியாக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருந்தார். இறுதியாக 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய ஆலயத்தில் அகதியாக்கப்பட்டு, பின்பு 1985ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகள் தமிழ் நாட்டில் திருச்சியிலும், சென்னையிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார். 1993 ஆம் ஆண்டில் பிரான்சிற்குப் புலம்பெயர்ந்து தான் இறக்கும் வரை தனது துணைவியார், ஐந்து பிள்ளைகளுடன் பிரான்சிலேயே வசித்து வந்தார்.

மேலதிக வாசிப்புக்கு


எஸ்.ஜேசுரட்ணம் குறித்து கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப்பகிர்வு வீரகேசரியில் வந்தது




நன்றி: ஒலிப்பகிர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்,
வீரகேசரி வழி திரு.கே.எஸ்.பாலச்சந்திரன்
புகைப்படம் நன்றி: தினகரன், வீரகேசரி வாரமலர்
Posted by கானா பிரபா at 7:27 PM 8 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, December 04, 2010

வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்

நேற்றுப் போல் இருக்கின்றது ஆனால் காலம் வெகுவேகமாக ஐந்து ஆண்டுகளைச் சுற்றி விட்டு நிற்கின்றது. டிசெம்பர் 5, 2005 இந்த நாளில் தான் என் வலைப்பதிவு ஓட்டம் ஆரம்பிக்கத் தொடங்கியது. அன்று தொடங்கிய ஓட்டம் மடத்துவாசல் பிள்ளையார் துணையோடு இன்னும் பயணித்துக் கொண்டிருகின்றது. இந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை அனுபவங்கள், இவை மட்டுமா? அந்தக் காலகட்டத்தில் செழுமையான பதிவுகளைத் தந்து கொண்டிருந்த பலர் இன்று ஏறக்குறைய வலைப்பதிவு உலகை விட்டு விலகிப்போன நிலை. இந்த வலையுலக அனுபவம் வழி, நண்பர்களாக ஒவ்வொரு திசைகளில் இருந்தும் எனக்குக் கிடைத்ததே ஒரு பெரும் பாக்யமாக எண்ணுகிறேன். அதே சமயம் திறமான படைப்பாளிகளாகக் காட்டிக் கொண்ட பலர் வலையுலக அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் விலகும் போது ஒரு வாசகனாகப் பெரும் ஏமாற்றத்தை எனக்குக் கொடுத்து வந்திருக்கின்றன.

இந்த ஆண்டு தாயகத்தை நோக்கிய என் பயணத்தின் தாக்கத்தைப் பெரும்பான்மைப் பதிவுகளில் பார்க்கக் கூடும். இப்படியான பசுமையான நினைவுகள் தான் என் வாழ்க்கை ஓட்டத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் நினைவுகள், அதனால் என் பயணப்பதிவுகள் இன்னொரு நாள் நானே மீண்டும் படித்து அந்த நினைவுகளில் மூழ்கிக்கொள்ளும் சமாச்சாரங்களாகவே இருக்கின்றன.

என் உலாத்தல் வலைப்பதிவின் வாசகராகவும், ஜேர்மனியில் இருந்து இணையம் மூலம் எனது வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதோடு கருத்துக்களையும் பரிமாறிய சகோதரி அல்போன்ஸா புற்று நோய் கண்டு சில மாதங்களுக்கு முன் இறந்ததும். எனது வானொலி நிகழ்ச்சிகளில் 273 வாரங்கள் அரங்கேறிய அறிவுக்களஞ்சியம் போட்டி நிகழ்ச்சியின் ஆரம்பப் போட்டியாளர் அகால மரணம் அடைந்ததும் தனிப்பட்ட துயரங்கள்.

எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில்

எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி

இவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக



ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.

பொது வாழ்க்கைக்கு வந்தால் கல்லடி படாமல் இருக்க முடியாது என்பதற்கு என் வானொலி வாழ்க்கையில் இருந்து வலையுலகம் வரை வியாபித்திருப்பதை விலக்கமுடியாத சவாலாகவே எதிர் கொள்கின்றேன். சொல்ல வந்த கருத்தைப் புரிந்து கொள்ளாமல் கருத்துத் திணிப்பை ஏற்படுத்திக் குளிர்காய்பவர்கள் ஒரு பக்கம், எல்லா இடத்திலும் தமது சுய இச்சையைத் தணிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம் போன்ற சவால்களைச் சந்தித்தலும் இவையெல்லாம் கடந்து, சொல்லும் சேதி புரிந்து மனதுக்கு நெருக்கமாகிப் போனவர்கள் பலர் இன்னும் வலையுலகச் சூழலில் இருப்பதால் என் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
www.kanapraba.com

வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்


2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

2009 ஆம் ஆண்டின் பதிவுகளில் பட்டியல்

88888888888888888888888888888888888888888888888888888888888

இந்த 2010 ஆம் ஆண்டில் எழுதிய பதிவுகளின் பார்வை

ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்

மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு "ஆகாசவாணி" கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை
"எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்".




அன்ரெனா திருப்பு...! தூரதர்ஷன் பார்க்க,

இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள்.







Balibo - "நிர்வாணப்படுத்தப்பட்ட சுதந்திரத்தின் கதை"

"வன்னியிலே தற்போது நடந்து வரும் சிறீலங்கா அரசின் மூர்க்கமான தாக்குதல்களுக்கு மத்தியில் இருந்து நான் உலகத்துக்கு இந்த அவலங்களை எடுத்து வருகின்றேன், எனக்கு பக்கத்தில் எல்லாம் குண்டுகளும், ஷெல்களும் விழுந்து வெடிக்கின்றன. நாளை என் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு நான் உங்களோடு பேசுகிறேன்" - வன்னிச் செய்தியாளர் அமரர் பு. சத்தியமூர்த்தி






ஈழத்தின் "தமிழ்க்கலைக்காவலன்" செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்

யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமான ஈழத்துக் கலைஞர் செல்லையா மெற்றாஸ்மயில் அவர்களுக்கு அஞ்சலிச் செய்தியாக அமைகின்றது.

பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளரும் பாரம்பரிய சைவ வல்லுநருமான கலாபூஷ ணம் செல்லையா மெற்றாஸ்மயில் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது-65.







"1999" - சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை

புலம்பெயர் வாழ்க்கைச் சூழலில் அன்பு என்னும் திசை மாறிய இளைஞனின் போக்கில் கதையை அமைத்து அதனூடே சொல்லும் நிஜங்கள் சுடுகின்றன. ஊரை இழந்து, உறவை இழந்து புலம்பெயர்ந்து போன நாம் அங்கே நிம்மதியான வாழ்வை எதிர்கொண்டோமா, நம் இனம் சபிக்கப்பட்ட இனமா என்ற ஆதங்கம் மனதில் பாரமாக ஒட்டிக்கொள்கின்றது. அதுவே "1999" படத்தின் உருவாக்கத்துக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.





சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ

இங்கிலாந்தின் லூசியம் பகுதி நண்பர்களால் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான "பூபாளம்" என்ற தமிழ் ரெகே பாடல்களாக வந்து தனித்துவமான படைப்பாக இன்றும் இருக்கின்றது. இந்தப் படைப்பு வந்து இருபது வருஷங்கள் கடந்தும் புலம்பெயர் வாழ்வியலின் இன்றைய சூழலை இது காட்டுவதும் கசப்பான உண்மை.






அருட்செல்வம் மாஸ்டர் வீடு

காதல் என்றால் என்ன என்று உணர்வுபூர்வமாக தெரியாத காலகட்டத்தையும், காதல் என்றால் என்ன, அதைத் தொலைத்த வலி இதையும் கூடக் காட்டியது அருட்செல்வம் மாஸ்டர் வீடு தான்.

நினைவு கலைந்து மீண்டும் நிகழ்காலம் , சாக்குப் பையில் போட்டு வச்ச கோலிக் குண்டுகளை உலுப்பியது போல ஒரே மாணவ வாண்டுகளின் இரைச்சல்.
இன்னொரு தலைமுறை கீற்றுக் கொட்டகை வகுப்பறைகளுக்குள் இருந்து பாடம் படிக்கிறது.
வகுப்பில் நின்று படிப்பித்துக் கொண்டு நின்ற அருட்செல்வம் மாஸ்டர் என்னைக் கண்டு விட்டார்.






வரியப்பிறப்பு வந்துட்டுது.....

நான்கு வருசங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பனி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காறனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்காத்து மூஞ்சையிலை அடிக்குது.
அன்று நாங்கள் நிறையச் சிரித்துக் கொண்டிருந்தோம்,மிச்சம் ஏதும் வைக்காமல்........






விதியைத் துரத்திய குட்டியானையின் கதை கேளுங்கோ

இப்பொதெல்லாம் தன் அண்ணன் Luk Chai போலவே தானும் சில விளையாட்டுக்களைச் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்படுகிறான். ஓடிப்பார்க்கிறான், உலாவி நடக்கிறான், தண்ணீர்த் தொட்டியில் மெல்ல ஒவ்வொரு காலாய் விட்டுப் பார்க்கிறான் ஆனால் முழுதாக இறங்கினால் மூழ்கிவிடுவோமோ என்று ஒரு கணம் தாமதித்து நிற்கிறான். பாழாய் போன பயம் மட்டும் வந்து தானாக ஒட்டிக்கொள்கிறது. Luk Chai வின் முகத்தை முகர்ந்து முட்டிப் பார்த்து நேசத்தோடு கதை பேசுகிறான்.







பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம் "தீட்சண்யம்"

புரிந்து கொள்ளுங்கள்! இது சிதையல்ல!
பட்டறிவுப் புத்தகம் பக்கம் புரண்டு கிடக்கிறது!

வேண்டுமென்றா செத்தேன்? இல்லை!
நாண்டு நின்று நல்லவரை நாசமாக்கும்
கொடுமைக்கு நானும் பலியானேன்!





வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

தலையைக் கவிழ்த்தபடி
தாம் தொலைத்த வாழ்க்கையினை
தேடுகிறார் தமிழர்கள்!
தென்னிலங்கைச் சோதரர்காள்,
இந்த மயானத்தில்
என்னத்தைத் தேடுகிறீர்?
வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

- கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப)





வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு


செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.






LP Records சுழற்றும் நினைவுகள்

இப்போதெல்லாம் எல்.பி.ரெக்கோர்ட்ஸை அருங்காட்சியகத்திலோ யாரோ ஒரு பழைய வெறிபிடித்த இசை ரசிகர் வீட்டிலோ தான் தேடலாம் கூடவே பழைய அந்தப் பெரிய இசைத்தட்டுக் கொண்டு வந்த அந்தப் பிரமிப்பான இசையையும் கூடத் தேடவேண்டியிருக்கின்றது.






ஈழத்துத் தமிழ்சினிமா மீது ஞாநி எறிந்த கல்

இவரே குறிப்பிட்ட 1983 ஆம் ஆண்டில் திரைப்படத் கூட்டுத்தாபனத்தில் இருந்த அதுவரை தயாரிக்கப்பட்ட 99 வீதமான ஈழத்துத் தமிழ் சினிமாக்களின் படச்சுருள்களின் ஒரே ஒரு பிரதியையும் சிங்களக்காடையர்கள் அழித்து ஒழித்தது இவருக்குத் தெரியுமோ என்னவோ. அப்படியென்றால் 1983 இற்கு முன் வந்த ஈழத்துத் தமிழ் சினிமாவை இலங்கைக்கு வந்து பார்த்துவிட்டு இது தரமில்லாதது, இது தரமானது என்ற முடிவை ஞாநி எடுத்திருப்பாரா?







ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் பேசுகிறார்

ஈழத்து மெல்லிசை மன்னன் எம்.பி.பரமேஷ் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வானலையில் சந்தித்தேன். ஈழத்தின் முக்கியமானதொரு இசைக்கலைஞனின் வாழ்வின் பெரும்பகுதியை வானலை வழியே பகிரும் வகையில் இரண்டு மணி நேரமாக அவரது வாழ்வியல் அனுபவங்களை எங்களுக்குத் தந்தார்.






3 idiots போதித்த பாடம்

அன்று என் வகுப்பறையின் எங்கோ ஒரு மூலையில் இருந்து, தன் சுயத்தைத் தேடி எங்கோ போய்த் தொலைந்து காணாமல் போன யாரோ ஒரு சகபாடியைத் தேடுகின்றேன், ராஞ்ஜோவின் நண்பர்கள் போல.......






யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் ஒன்று


மூன்றரை வருடங்களுக்குப் பின்னர் என் தாயகப் பயணம் இந்த மாதம் கைகூடியிருக்கின்றது. கொழும்பில் இறங்கி அடுத்த நாளே அம்பாள் எக்ஸ்பிரஸில் ஏறி சொந்த ஊர் நோக்கிப் பயணிக்கிறேன்.






யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் இரண்டு

எனது முந்திய பதிவில் "தயவு செய்து பாதணிகளோடு உட் செல்லாதீர்" என்று இன்ரநெற் கபே போன்ற இடங்களில் போட்டிருந்ததாகச் சொல்லியிருந்தேன். பதிவு போட்டு அடுத்த நாள் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் ஒரு கடையில் இப்படிப் போட்டிருந்ததைப் பார்த்தேன் "நீங்கள் பாதணிகளுடனும் உள்ளே வரலாம்" அவ்வ்வ் :-((((






செல்வச்சந்நிதி முருகனைச் சந்தித்தேன்

உள்ளூரில் இருக்கும் வைரவர் கோயில்கள் முதல் கிடுகுக் கொட்டிலில் இருந்த கோயில்கள் எல்லாம் டொலர்களாலும் யூரோக்களாலும் மாடமாளிகைகளாக எழுந்தருளி நிற்கையில் பழமையும் எளிமையும் கொண்டு அருள் பாலிக்கும் செல்வ சந்நிதியான் என் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றான்.





யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் மூன்று

ஆச்சரியமும் பெருமிதமும் கலக்க என்னைக் கட்டியணைக்கிறார்.
"என்னட்டைப் படிச்ச பிள்ளை இப்படி புத்தகம் எழுதுவதெல்லாம் எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு" என்னைக் கட்டியணைத்தார் அப்போது. எனக்கு லேசாகக் கண்களில் துளிர்க்க
"எனக்கும் இப்ப சந்தோஷமா இருக்கு சேர் "






நாவலர் றோட், நல்லூரில் இருக்கு நூதனசாலை

ஏதோ காயலான்கடைச் சரக்கு மாதிரி உதாசீனப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரலாற்று எச்சங்களைக் காண தென்னிலங்கை யாத்திரிகர்கள் படையெடுத்து வரும் போது, "இங்கே பாருங்கள் இப்படியெல்லாம் ஆண்ட சமூகம் இது" என்று காட்டக் கூட ஒரு முன்மாதிரியாக இவற்றை முறையாகப் பயன்படுத்தலாமே?

எஞ்சிய எம் வரலாற்று எச்சங்கள் கையேந்துகின்றன இன்றைய அரசியல் அநாதைகளான நம் தமிழரைப் போல.....





யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் நாலு

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கொடியேற்ற நாளில் கோயிலுக்குப் போய் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு தரிசித்தேன். அருச்சனை செய்ய இன்னும் 1 ரூபா தான். கோயில் சுற்றுப் புற வீதியில் செருப்பு, சப்பாத்தோடு திரிய முடியாது. பாதணிகள் பாதுகாப்பு றாக்கைகளை இரவோடிரவாக யாழ் மாநகர சபை செய்து வைத்திருக்கிறது. தென்னிலங்கையில் இருந்து கம்பாயம், சாரத்துடன் வரும் கூட்டம் நல்லூரில் எல்லாப் பக்கமும்.





இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு

என் தாயகப்பயணம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அமைந்தது. இந்த இடைவெளியில் வலைப்பதிவு எழுதும் இலங்கைப் பதிவர்கள், மற்றும் என் பதிவுகளை வாசிக்கும் உறவுகள் என்று நிறையப் பேரைச் சம்பாதித்தாலும் இந்தப் பயணத்தில் இவர்கள் எல்லோரையும் சந்திக்காதது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. அதற்காக மிகவும் வருந்துகின்றேன்.
கண்டிப்பாக என் அடுத்த பயணத்தில் நாம் சந்திக்க வேண்டும் என் சகோதரங்களே





யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை

பின்னேரம் மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போகிறேன். அங்கே நின்ற ஒரு பெடியன்
"அண்ணை என்ன உங்களைக் காலமை தியேட்டர் பக்கம் கண்டது போல இருக்கு"

யாழ்ப்பாணம் மாறவில்லை ;)






என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்

விருப்பமில்லாத பிள்ளையைப் பாலர் வகுப்புக்குத் துரத்தி அனுப்புமாற் போல மனம் உள்ளே மெளனமாகக் குமுற அம்பாள் பஸ்லில் ஏறுகிறேன். மீண்டும்
"உன்னை நினைத்து" படத்தைப் போட்டுச் சாவடிக்கிறார்கள்.
என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே!





"தெய்வம் தந்த கலைஞன்" ரகுநாதன்

இந்த ஆண்டு எமது ரகுநாதன் ஐயாவுக்கு பவள விழா ஆண்டு. கடந்த மாதம் அவர் வாழும் பாரீஸ் மண்ணில் விழா எடுத்துக் கெளரவித்திருக்கின்றார்கள் எம் உறவுகள்.
மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் தமிழ் சினிமாவின் படைப்பாளியாக, குறும்பட நடிகராக இன்றும் ஓயாது கலைப்பணி ஆற்றிவருகின்றார் எங்கள் ரகுநாதன் அவர்கள்.







the social network - தொலைந்த நட்பில்.....

பள்ளி நாட்களிலோ, கல்லூரி வாழ்வியலிலோ மனதில் எங்கோ தோன்றும் ஒரு பொறி தான் பெரு நெருப்பாய் எம் வாழ்க்கையைப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது. அப்படித் தான் இந்த இரண்டு நண்பர்களும் எதிர்பாராத வேளையில் சிறுபுள்ளியாய் உருவாக்கும் ஒரு திட்டம் உலகத்தின் கடைக்கோடி மனிதனையும் ஆட்கொள்ளுகின்றது. ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை? அதைத் தான் the social network சொல்லிப் போகின்றது.
Posted by கானா பிரபா at 8:13 PM 27 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Labels: ஆண்டுப் பகிர்வு

Monday, November 08, 2010

the social network - தொலைந்த நட்பில்.....


பதினேழு வருஷங்களுக்கு முன்னர் திடீரென்று விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் "இன்று மட்டும் இலங்கை அரச பகுதிகளுக்குச் செல்ல பாஸ் நடைமுறை விலக்கப்பட்டுள்ளது" என்ற அறிவிப்பை தட்டாதெருவில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியின் வாயில் இருந்து புலிகளின் குரல் வானொலி சொல்கின்றது. அன்றைய புலம்பெயர்ந்த என் உறவுகளில் ஒன்று இதுநாள் வரை தொடர்பறுந்து கிடந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் எதேச்சையாக Facebook தளத்தின் வழி friend request ஆக மீண்டும் சந்திக்கின்றது. இப்படி எப்போதோ, எங்கோ சிதறுண்டு போன மணிகளாய்ப் போன நட்புக்களும் சொந்தங்களும் மீண்டும் இணைய எதோ ஒருவகையில் Facebook தளம் பாலமாக அமைந்து விட்டது.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றேன். ரயில் நிலையத்தில் மாலை நேரத்தில் வைத்திருக்கப்படும் பத்திரிகையை எடுத்துப் பிரிக்கின்றேன். the social network படம் குறித்த ஒரு துணுக்குப் போடப்பட்டிருக்கின்றது. இந்த வாரமே படத்தைப் பார்த்து விடுவது என்று நினைத்துக் கொண்டேன். the social network பார்க்கும் போது கலவையாக உணர்வுகள், மீண்டும் அதை அசைபோடும் போது இதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை. கூடவே இப்படத்தின் மூலக்கதையாக அமைந்து விட்ட The Accidental Billionaires புத்தகத்தை வாங்கி வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.


பள்ளி நாட்களிலோ, கல்லூரி வாழ்வியலிலோ மனதில் எங்கோ தோன்றும் ஒரு பொறி தான் பெரு நெருப்பாய் எம் வாழ்க்கையைப் பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுகின்றது. அப்படித் தான் இந்த இரண்டு நண்பர்களும் எதிர்பாராத வேளையில் சிறுபுள்ளியாய் உருவாக்கும் ஒரு திட்டம் உலகத்தின் கடைக்கோடி மனிதனையும் ஆட்கொள்ளுகின்றது. ஆனால் அதற்கு அவர்கள் கொடுத்த விலை? அதைத் தான் the social network சொல்லிப் போகின்றது.


2003 ஆம் ஆண்டில் ஒரு நாள், தன் காதலியைப் பிரியும் Harvard University மாணவன் Mark Zuckerberg இன் வாழ்க்கை அதற்குப் பின்னர் தான் பல்வேறு சவால்களைச் சந்திக்கப் போகின்றது என்பதை அவன் அப்போது உணர்ந்திருப்பானோ தெரியவில்லை. அந்த நேரத்தில் அவனுக்குக் கிடைத்த Eduardo Saverin நட்பும் சேர்ந்து கொள்ள Mark Zuckerberg இவனைப் பயன்படுத்தி Harvard University மாணவிகளின் கணினிகளை ஊடறுத்து அவர்களின் புகைப்படங்களைக் களவாடி FaceMash என்ற தளத்தில் பதிந்து ஒப்பீட்டு விளையாட்டை ஆரம்பிக்கின்றான். இதனால் பல்கலைக்கழக் கணினிக் கட்டுப்பாட்டகம் செயல் இழப்பதோடு மாணவர் மத்தியில் Mark ஒரு கறுப்பு ஆடாக மாறிப்போகின்றான். கூடவே நன்னடத்தை வேண்டிப் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து எச்சரிக்கப்படுகின்றான். மாணவ சமூகத்தில் இவனுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும் அவனிடம் இருக்கும் இந்தத் திறமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள Cameron Winklevoss , Tyler Winklevoss இரட்டையர்களும் அவர்களோடு தொழிற்பங்காளியாக இருக்கும் Divya Narendra முனைகின்றார்கள். தமது Harvard Connection என்ற தளத்தின் ப்ரோக்ராமராக நியமனம் பெறுகின்றான் Mark.


மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஆன கதையாய் Mark, Thefacebook என்ற சமூக வலைத்தளத்தை Harvard University மாணவ சமூகத்தில் ஏற்படுத்த முனையும் தன் ஆசையைத் தன் நண்பன் Eduardo Saverin இடம் கூறுகின்றான். Eduardo மீண்டும் தன் நண்பனுக்குக் கைகொடுக்கின்றான். இம்முறை பண ரீதியாகவும் கூட, கூடவே இந்த இருவரும் உருவாக்கிய Thefacebook ஐ Eduardo பல்கலைக்கழக சமூகத்தின் பரவலான பார்வைக்குக் கொண்டுபோகின்றான். அதனால் Thefacebook, Harvard University இன் மாணவர்களிடையே பரபரப்புக்குரிய ஒரு தளமாக அமைந்து குறுகிய அந்தக் காலத்தில் புகழைச் சம்பாதிக்கின்றது.


மீண்டும் ஒரு எதிர்பாராத சந்திப்பு, இம்முறை Christy Lee என்ற சக மாணவி வழியாக, அந்தச் சந்திப்பே பின்னர் நண்பர்கள் இருவரும் Thefacebook என்ற குறுகிய சமூகத்தளத்தின் வலையமைப்பை விரிவாக்கும் நோக்கைத் தீவிரப்படுத்துகின்றது கடுமையாக உழைக்கின்றார்கள் Thefacebook தன் வலையமைப்பை விரிக்கும் போது Facebook ஆக மாறிப்போகின்றது. அது நாள்வரை இணைந்து செயற்பட்ட Mark Zuckerberg, Eduardo Saverin பிரிவுக்கு வழிகாலாய் அமைந்து விடுகின்றது இந்த facebook இன் செயற்பாட்டில் கவரப்பட்டு வர்த்தக ரீதியாக இந்தத் தளத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வந்த Sean Parker (Napster நிறுவன முன்னோடிகளில் ஒருவர்) இன் சந்திப்பு. facebook உலகம் எங்கும் நட்பு வலையைப் பரப்பிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நண்பர்கள் பிரிகின்றார்கள், திடீர் நண்பன் Sean Parker போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகின்றான். Harvard Connection தளத்தின் பங்காளர்கள் தமது தளத்தின் அடிப்படை இலக்கணங்களைத் திருடியே Mark , facebook தளத்தை உருவாக்கமுடிந்தது என்ற ரீதியில் வழக்குத் தொடர்கிறார்கள், சம காலத்தில் தனது எதிரியாகிப் போன நண்பன் தொடர்ந்த வழக்கை வேறு Mark சந்திக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகின்றான். இந்தச் சிக்கல்களின் நதிமூலத்தில் ஆரம்பித்துப் பயணிக்கின்றது the social network திரைப்படம்.

David Fincherஇன் இயக்கத்தில் ஒக்டோபர் 1, 2010 வெளிவந்த இப்படத்தில் (கவனிக்க, கதை நிகழத் தொடங்கிய அதே மாதம்), Jesse Eisenberg ஐ கதையின் முக்கிய பாத்திரமான Mark Zuckerberg ஆக நடித்திருக்கின்றார்.


Ben Mezrich எழுதிய The Accidental Billionaires என்ற உண்மையைத் தழுவிய நாவலை அடிப்படையாகக் கொண்டே the social network உருவாக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் கதை மாந்தர்களும் ( அவர்களின் பெயர்கள், காலங்கள் உட்பட) எல்லாமே நிஜவாழ்வில் சமீப வருஷங்களுக்கு முன்னால் தான் நடந்து போனவை. இப்படியான ஒரு சமகாலத்தின் முக்கியமான ஒரு நிகழ்வைத் திரைவடிவில் காட்டும் போது பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நிகழ்காலத்துக்கும் இறந்த காலத்துக்கும் சம்பந்தத்தோடு பாயும் காட்சியமைப்போடு நேர்த்தியான படத்தொகுப்பு, தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாத்திரங்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் நடிப்பு, கச்சிதமான திரைக்கதை என்று the social network மிகத்தரமான படைப்பாக எடுக்கப்பட்டிருக்கின்றது. ஒரு மேனாட்டுப் பல்கலைக்கழக வாழ்வியலின் கூறுகளை நுணுக்கமாக அனுபவித்த வகையில் இப்படம் காட்டும் களங்களும் மிகவும் நெருக்கமாக மனதில் இடம்பிடிக்கின்றன. படம் முழுவதுமே இருவேறு வழக்குகளைச் சந்திக்கும் கதைக்களனாக தர்க்க விவாதங்களோடு பயணித்தாலும் போரடிக்காமல் சொல்லியிருப்பதே இப்படத்திற்குப் பரவலான நல்ல விமர்சனங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கின்ரது.

The Accidental Billionaires நாவல் ஒக்டோபர் 2003 ஆம் ஆண்டில் இருந்து பயணப்பட ஆரம்பிக்கின்றது, மே 2008 இல் வந்து நிற்கின்றது. நிறைவில் இந்த நாவலில் பயணித்த முக்கியமான நிகழ் பாத்திரங்களின் இன்றைய நிலை குறித்தும் பகிரப்பட்டிருக்கின்றது. இந்த நாவலாசிரியர் Ben Mezrich நாவலை எழுதப்போந்த போது முக்கிய பக்கபலமாக நின்று செயற்பட்டவர் என்று Eduardo Saverin (Facebook co-founder) ஐ நன்றி பாராட்டும் அதேவேளை பலமுறை தொடர்பு கொண்டும் தன் வேண்டுகோளை Facebook நிறுவனர் Mark Zuckerberg தட்டிக் கழித்து விட்டார் என்று சொல்கின்றார். நாவலை முழுமையாகப் படிக்கும் போது the social network சொல்லாத பல சேதிகளைச் சொல்லி வைக்கும்.
Posted by கானா பிரபா at 8:46 PM 10 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, November 03, 2010

தீவாளி வருஷங்கள்

தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.

அப்பாவுக்கு இந்தக் காலத்து நாகரீகம் தெரியாது எண்டு என்ர அண்ணனுக்கு அப்பா எடுக்கும் துணி வகை பிடிக்காது. ரண்டு, மூண்டு கிழமைக்கு முந்தியே சித்தப்பாவைக் கொண்டு ரவுணிலை சேர்ட்டுத் துணியையும், காற்சட்டைத் துணியையும் எடுத்து விடுவோம். இணுவில் கந்தசுவாமிகோயிலடி வெங்காயச் சங்கத்துக்கு முன்னாலை இரு முஸ்லீம் ரெய்லர் கடை இருந்தது. அம்மா ரீச்சர் எண்டதாலபள்ளிக்கூடம் போற வழியில இருக்கிற அந்த ரெய்லரிட்டைத் தான் எப்பவும் சட்டை தைக்கக் குடுப்பம்.
"ரீச்சர்! தீபாவளி வருது தானே, நிறையச் சோலி இருக்கும், கொஞ்சம் சீக்கிரமாவே துணியைக் குடுத்திடுங்க" எண்டு அம்மா பள்ளிக்கூடம் போற நேரம் கடைக்குள்ளால எட்டிப்பார்த்து நினைப்பூட்டி விடுவார் ரெய்லர். துணிக்கு அளவெடுக்கிற போது ரெயிலர் மீற்றர் பட்டியை வைத்து கொலருக்கும், கையுக்கும் எண்டு அளவெடுத்து விட்டுக் என்ர காற்சட்டைக்கு அளவெடுக்கிற நேரம் பார்த்து
"ரெய்லர்! கொஞ்சம் கால் நீட்டா விட்டுத் தையுங்கோ, கன காலம் வச்சுப் போடலாம்" எண்டு அம்மா கட்டளை இடவும் , பல்லால் நெருவிக்கொண்டே அம்மாவை ஒரு முறை முறைப்பேன்.

தீவாளிக்கு உடுப்புத் தாறது வீட்டுக்காரர் மட்டுமில்லை, சித்தப்பாவின் முறையும் இருக்கு. சித்தப்பாவோட யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் உடுப்பெடுக்கிறதெண்டால் பெரிய புழுகம் தான். அதுக்கும் ரண்டு காரணம். ஒண்டு அவரின்ர பஜாஜ் ஸ்கூட்டரிலை போகலாம். இன்னொண்டு, ரவுணையும் பார்த்து விட்டு வரலாம்.


தீவாளித் தினத்துக்கு கொஞ்ச நாள் முன்னமே யாழ்ப்பாணம் ரவுண் புதுமாப்பிளை போல நல்ல சந்தோசமா இருக்கும். பஸ்ராண்டுக்கு நடுவில இருக்கிற மணிக்குரல் விளம்பர சேவையில் , நிமிடத்துக்கொரு புடவைக்கடை விளம்பரம் வரும். கொடி பறக்குது படத்திலை இருந்து "சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு" பாட்டோட சீமாட்டி ஜவுளி மாளிகை விளம்பரம் வரும். கொடி பறக்குது, ராஜாதி ராஜா சேலைகளும், நதியா சுரிதாரும் விளம்பரங்களில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

புடவைக் கடைத் தட்டிகளில் அமலாவும், அம்பிகாவும் சாறி கட்டினபடி சிரித்துக் கொண்டிருப்பதை ஆவெண்டு பாத்துகொண்டு சித்தப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டே சனத்திரளுக்குள்ளால நகர்வேன். சித்தப்பாவின் கால் சொல்லிவைத்தது போல் நியூமார்க்கட்டுக்குள்ளை இருக்கிற ஹப்பி ரெக்ஸ் கடைக்குத் தான் போகும். ஊர்க்காரற்றை கடை, ஏமாத்த மாட்டாங்கள் என்று நியாயம் கற்பிப்பார். ஹப்பி ரெக்ஸ் இல் சிங்கப்பூரால வந்த சேர்ட்டுக்கள் குவிஞ்சிருக்கும். எனக்கு டிராகன் படமும் பூவும் போட்ட சிங்கப்பூர் சேர்ட்டை சித்தப்பா வாங்கித் தரவேணும் எண்டு கெதியா கண்ணை மூடி ஒருக்கால் பிள்ளையாரை வேண்டிக் கொள்வேன். பெரும்பாலும் பிள்ளையார் வரம் குடுத்து விடுவார். அங்காலை ரியூசனுக்குப் போறதெண்டு சொல்லிப் போட்டு லுமாலாவிலை பஞ்சாபி சட்டை வாங்க வந்த அக்காமாரின் பேரம் பேசலும் மும்முரமாயிருக்கும்.



வசதி குறைந்தவர்களின் அல்லது ஏழைகளின் சொர்க்கமாக பேவ்மென்ற் பாதையோரக் கடைக்காரகளின் விற்பனை இருக்கும்.

புதுச்சட்டை எல்லாம் றெடி எண்டவுடனை, அம்மா பத்திரமாக அவற்றைச் சாமி அறையில இருக்கிற அலுமாரிக்குள்ளை வச்சுப் பூட்டிப் போடுவா. சத்தம் போடாமல், அம்மாவுக்குத் தெரியாமல் சாமியறை அலுமாரியைத் திறந்து மடிச்சு வச்சிருக்கிற சேர்ட்டை ஆசையோடு தடவி விட்டு ஒருக்கால் மணந்து பார்த்தால் வாசனைக்குப் போட்டு வச்ச பூச்சி முட்டை மணமும், புதுச் சட்டையின் வாசமும் கலந்த கலவையான மணம் நாசிக்குள் நிறைக்கும்.

எப்படா விடியும் எண்டு காத்திருந்த தீவாளி நாள் வரும்.

கே.கே.எஸ் றோட்டில, தாவடிசந்தி தாண்டிக் கொக்குவில் பக்கம் போகேக்கை ஒரு மதகு வரும். அந்த மதகுக்குப் பாலம் போட்டு அங்கால் காணியில் ஒரு இறைச்சிக் கடை இருந்தது. வழக்கமா இரண்டு முழு ஆடு தோல் உரிக்கப்பட்டுக் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். கே.கே.எஸ் றோட்டில ஆராவது இறச்சிக்கடைக்காரனுக்குத் தெரிஞ்ச வாடிக்கையாளர் போகேக்கை எட்டி
" அண்ணோய்! ஆட்டிறச்சி ஒரு ரண்டு கிலோ கட்டி வைய்யுங்கோ" என்று கட்டளை இட்டு விட்டுத் தம் வேலையைப் பார்க்கப் போயிடுவினம். மத்தியானம் வரைக்கும் போணியாகாத ஆட்டிறச்சியை எப்படியாவது ஒப்பேற்றி விற்று விடவேணும் எண்ட முனைப்பே இறைச்சிக்கடைக்காரனுக்கு இருக்கும்.

ஆனால் தீவாளி நாளில உதெல்லாம் நடவாது கண்டியளோ, காலமை ஆறு மணிக்கே மதகையும் தாண்டி தீவாளிக்கு இறைச்சி வாங்கவென ஒரு பெருங்கூட்டம் முண்டியடிக்கும்.
"எல்லாரும் வரிசையில நிண்டால் தான் இறைச்சி கிடைக்கும்" என்று புதுப்பணக்காரன் தோரணையில் இறைச்சிக்கடைக்காரன் மிதப்பான்.காலை எட்டுமணிக்கெல்லாம் முழு இறைச்சியும் விற்றுத் தீர்ந்து விடும்.

காலமையே முத்துலிங்க மாமாவின் உதவியில் எங்கட வீட்டுச் சாப்பாட்டுக்கான இறைச்சி வாங்கப்பட்டிருக்கும். சில ஆட்கள் ஒரு ஆட்டை வாங்கி உரித்து சொந்தக்காரருக்குள்ளையே பங்கு ஆடு இறைச்சி பிரிப்பதும் உண்டு. பனையோலையை வளைத்துச் செய்த பாத்திரத்தில் ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் தேவையான இறைச்சி பங்கிடப்படும்.


வெள்ளணக் கிணத்தடிப் பக்கம் போய் துலாவில் நீரிறைத்துக் குளியல் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு, பிள்ளையாரடிக்கு ஆறரைப் பூசை பார்க்கக் கிளம்புவோம்.

மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்.

நாலைஞ்சு சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் புதுச்சட்டையைக் காட்டி விட்டு, அவையள் தாற முறுக்கு, பயற்றம் உருண்டை, அரியதரம் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு பால் தேத்தண்ணி வாயுக்குள்ள இருக்கவே அடுத்த வீட்டுக்குப் பாய்வம். சொந்தக்காரர் வீடுகளுக்கு நடைராஜாவிலேயே பயணம் எண்டதால அவையள் தாற பலகாரச் சாப்பாடெல்லாம் பாதிவழியிலேயே செமிச்சுப் போயிடும். எல்லா வீடுகளுக்கும் ஒரு றவுண்ட் அடிச்சுப் போட்டு வீட்டை வர பகல் பன்னிரண்டை தாண்டி விடும்.

வீட்டுக்கு வரும் வழி நெடுகிலும் கடைக்கதவுகளில் பூட்டுக்கள் சிரித்துக் கொண்டிருக்கும். உள் ஒழுங்கைகளுக்காள் வரும் போது ஏற்கனவே மெண்டிஸ் சாராயவகையறாக்களை ஒரு கைபார்த்து விட்ட வயதான மது போதை மன்னர்கள் சிலர் ரோட்டோரமாகவோ, அல்லது கிடுகு வேலிகளின் கதியால் பக்கமாகவோ போதை தலைக்கேறிச் சுருண்டு படுத்திருப்பார்கள்.
"ஒளுதரும் என்னை ஒந்தும் கேட்கப் பிடாது" என்று பஞ்ச் டயலாக் வேற அவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும். ஊர்நாய்களோ, " மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போறியோ இல்லையோ?" என்ற தோரணையில் வாள் வாளென்று குரைப்பெடுத்துத் தர்ணாப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் புதினமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்வோம்.

வீட்டுக்குள் நுளையும் போது ஆரோ ஆக்கள் எங்கட வீட்டுக்குப் பலகாரம் சாப்பிட வந்திருப்பினம். "எட! சோக்கான சட்டையடா" எண்டு ஒருக்கால் சீண்டிப் பார்ப்பினம். மாப்பிளை பார்க்க வந்த பொம்பிளை மாதிரி வெக்கத்திலை கீழை குனிஞ்சு கொண்டே குசினிப்பக்கம் போயிடுவன். அடுப்படியில் இருக்கும் கறிச்சட்டியை மெல்லமாத் திறந்து பார்த்தால் காலையில் பச்சையாக இருந்த ஆட்டிறச்சி கறிச்சட்டிக்குள்ளை பொன்னிறத்தில நல்லா வதக்கிக் காய்ச்சியிருக்கும். இறைச்சிக்குப் போட்ட மசாலா நொடி வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைத்து விடும். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி விட்டு, அம்மா நேராகக் குசினிக்குள் வந்து விடுவா. அப்பாவுக்கும் சாப்பாட்டு நேரம் எண்டு விளங்கி விடும். குசினிக்குள்ள இருக்கிற பலகைக் கட்டையில் இருந்து அம்மா, கோப்பையில் போடும் குத்தரிசிச் சோறையும் எண்ணையாகத் திரண்ட கொழுப்பு ஆட்டம் போடும் ஆட்டிறச்சியைக் கலந்து வாயுக்குள்ளை திணித்தால் தேவாமிர்தம் தான்.

எங்கட நாட்டிலை தீபாவளி எண்டால் வெடிகளோ மத்தப்போ இல்லாத நாள் அது. தைப்பொங்கலுக்குத் தான் வெடி, மத்தாப்பு, பூந்திரி எல்லாம் இருக்கும். தீபாவளியை பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ எண்டு சொன்னால், புதுச்சட்டை போடுவம், பலகாரம் தின்னுவம், ஆட்டிறைச்சியை மூக்குப் பிடிக்க வெட்டுவம், இவை தான் முதலில் வரும். பிறகு தான் நரகாசுரனின் கதை எல்லாம்.

கொஞ்சம் வளர்ந்து விடலைப் பருவம் வந்தவுடன் நாங்களாகவே தீபாவளி உடுப்பு எடுக்க வேண்டிய பொறுப்பு வந்துவிடும். அப்பா தந்த காசில் உடுப்பு வாங்கவேண்டியது எங்கட பொறுப்பு. அந்த நாளிலை ரவுணுக்குப் போய் ஜீன்ஸ் துணி எடுத்து விட்டு, யார் நல்ல ஸ்ரைலாகத் தைப்பார்கள் எண்டு தேடுவதிலேயே பாதி உயிர் போய் விடும். நியூமார்க்கற் பேவ்மென்றையும் தாண்டிக் கொஞ்சம் சந்துக்குள்ளால் நடந்தால் முஸ்லீம் ரெய்லர்மார் நிறையப் பேர் இருப்பினம். எடுத்த ஜீன்ஸ் துணியில் எங்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கோடிட்டுக் காட்டினால் போதும் அவை ரோடே போட்டு விடுவினம். ஜீன்ஸ் இன் இரண்டு பொக்கற்றின் பக்கமும் விதவிதமான Pattern இல் சப்பறத்துக்குச் சோடிச்ச மாதிரி நூல் அலங்காரமும் டிசைனும் இருக்கும். காதலன் படத்திலை நீக்ரோ மாதிரி புதுசா நடிக்கவந்த பிரபுதேவா எண்டு ஆரோ கதாநாயகன் போட்ட மாதிரி தொள தொளவெண்டு ஜீன்ஸ் தச்சால் தான் பயோ (bioscience ) படிக்கிற பெட்டையளும், சுண்டுக்குளி வேம்படிப் பெட்டையளும் பார்ப்பினமாம். கட்டுப்பெட்டித் தனமா உடுப்புப் போட்டால் தமிழ்க்கலைவன் பாடசாலையும் ஏறெடுத்துப் பார்க்காது.

வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால "விக்ரம் ரெய்லர்" எண்டு ஒரு ஆள் கடை வச்சிருந்தவர். தொண்ணூறுகளில் அவர் தான் தனிக்காட்டு ராசா. கொஞ்சக் காலம் பின்னால் அந்தக் கடையைக் காணவில்லை.

"எடேய்! இப்பதான்ரா உன்ர ஆள் கோயிலுக்கு வந்து போட்டுப் போகுது" கோயிலுக்கு வரும் போதே ஏஷியா சைக்கிளில் ஊன்றி கொண்டிருக்கும் நண்பன் சொல்லவும், பிள்ளையாரைப் பிறகு பார்க்கலாம் எண்டு மனசு சமாதானப்படுத்த வந்த வழியே திரும்பிச்
சைக்கிள் வலிக்க, சுரிதார் அணிந்து லுமாலாவில் பறந்த கிளியைத் தேடிப் பறக்கும், அதுவரை அவ்ரோ பிளேன் கணக்காய் ஓடிய ஏஷியா அவளின் சைக்கிளை அண்மித்ததும் வேகம் தணிந்து கடைக்கண்ணால் ஏறெடுத்து அந்தப் புதுச்சட்டைக்கே பெருமை சேர்த்த பெருமாட்டியைப் பார்த்து முத்திப் பேறடையும் கணம், லுமாலாச் சைக்கிளே வெக்கத்தில் சிரிக்கும்.

தீவாளி வருஷங்களில் புதைந்த நினைவுகள் கலைய, எல்லாம் தொலைத்து எங்கோ தொலைவில் இருந்து கொண்டு , அந்த நாள் வாழ்வும் வந்திடாதோ என்று உலகப் படத்தில் சின்னப் புள்ளியாய் இருக்கும் இலங்கை போல் நம்பிக்கையின் எச்சம் மட்டும் எஞ்சி நிற்கின்றது.

படங்கள்: 2006 இல் எடுக்கப்பட்டவை
Posted by கானா பிரபா at 8:40 PM 17 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, October 25, 2010

"தெய்வம் தந்த கலைஞன்" ரகுநாதன்

எங்கள் ஊரில் துரை என்ற ஒரு பணக்காரர் வீட்டைக் கடந்து போகும் போதெல்லாம் சித்தி மகன் சொல்லுவார் "உந்த வீட்டில் தான் தெய்வம் தந்த வீடு" படம் எடுத்தவை என்று". வருஷங்கள் பல கழிந்த நிலையில் நான்கு வருஷங்களுக்கு முன் வானொலிப் பணியைச் செய்து கொண்டிருக்கும் வேளை, ஒரு வானொலி அன்பர் பாரிஸில் இருக்கும் ஈழத்து மூத்த கலைஞர் ரகுநாதனைப் பேட்டி எடுக்கலாமே என்று வேண்டுகோள் விடுத்ததோடு அவரின் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுத்தந்தார். சிறுவயதில் எங்களூரில் படமாக்கப்பட்ட தெய்வம் தந்த வீடு படத்தின் நாயகன் ரகுநாதன் அவர்களை வானலையில் சந்தித்தேன். அதற்குப் பின் அவரை அவர் நடித்த குறும்பட முயற்சிகளில் மட்டுமே தரிசிக்கின்றேன், நேரடித் தொடர்பில்லை.
இரண்டு வருடங்களுக்குப் பின் சிட்னிக்கு வருகின்றார் ரகுநாதன். அவரை வானொலி நிலையத்துக்கு அழைத்து வருகின்றார் உள்ளூர்க் கலைஞர் கருணாகரன்.
"எப்படித் தம்பி பிரபா, சுகமா இருக்கிறீரோ" ஞாபகம் வைத்திருந்து கேட்கின்றார். கையோடு கொண்டு வந்திருந்த தன் கலையுலக வாழ்வின் சாட்சியாக அமைந்திருக்கும் புகைப்பட ஆல்பங்களை விரித்துக் காட்டுகின்றார். அவற்றில் இருந்து ஆசையோடு சில படங்களைப் பிரதி எடுக்கின்றேன்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நேருக்கு நேராக மீண்டும் தன் பழைய ஞாபகங்களை அசை போடுகின்றார். பாடுகின்றார்.

இந்த ஆண்டு எமது ரகுநாதன் ஐயாவுக்கு பவள விழா ஆண்டு. கடந்த மாதம் அவர் வாழும் பாரீஸ் மண்ணில் விழா எடுத்துக் கெளரவித்திருக்கின்றார்கள் எம் உறவுகள்.
மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் தமிழ் சினிமாவின் படைப்பாளியாக, குறும்பட நடிகராக இன்றும் ஓயாது கலைப்பணி ஆற்றிவருகின்றார் எங்கள் ரகுநாதன் அவர்கள்.

இந்த நிலையில் அந்தக் கலைஞனைச் சிறப்பிக்கும் முகமாக ரகுநாதன் ஐயாவுடன் வானலையில் கடந்த நான்கு வருஷங்களுக்கு முன்னர் நான் கண்ட பேட்டி


வணக்கம் ரகுநாதன் ஐயா, உங்கள் நடிப்புலகப் பிரவேசத்தின் ஆரம்பம் பற்றிச் சொல்லுங்களேன்

1947 ஆம் ஆண்டு முதன்முதலில் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விகற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அப்போது நடந்த இல்லப் போட்டிகளில் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க வேண்டி வந்தது அது தான் என் ஆரம்பம்.

மானிப்பாய் இந்துக்கல்லூரியில் என் நண்பன் கனகரட்ணத்தின் வேண்டுகோளில் தான் நடிக்க ஆரம்பித்தேன். அதுகூட ஒரு சுவையான விடயம். அந்தக்காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் கலந்து படித்த காலமது. அப்பொழுது நாடகத்தில் வில்லனாக நடிப்பதற்கு யாருக்கும் பிடிக்காது காரணம் கூடப்படிக்கும் பெண்களுக்குப் பிடிக்காது என்று. நண்பன் கனகரட்ணமும் நானும் மலேசியாவில் பிறந்தவர்கள், தொடர்ந்த அந்த நட்பு மூலம் நான் புத்தகங்கள் வாங்கி வாசிப்பது வழக்கம். அந்த நட்பின் உரிமையில் அவன் விடுத்த அன்பு வேண்டுகோளுக்கமைய குறித்த நாடகத்தில் வில்லனாக நடித்தேன்.

அதைத்தொடர்ந்து ஈழத்தின் நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களின் நெறியாள்கையில் நடிக்க ஆரம்பித்தேன். அவர் போட்ட பிச்சை தான் என் இந்தக் கலைப்பணி என்று சொல்லுவேன்.

கலையரசு சொர்ணலிங்கம் ஐயா மூலம் இந்த நாடகப்பயிற்சியை நீங்கள் பெற்றிருந்தீர்கள்?

யாழ் நாடக மன்றம் என்ற நாடகப்பள்ளி மூலம் அவர் தேரோட்டி மகன் என்னும் நாடகத்தை நெறிப்படுத்தி எங்களுக்குப் பயிற்சியளித்தார். பயிற்சி என்றால் இன்றைய காலம் போலல்லாது ஆறுமாதங்களாகத் தினசரி பயிற்சியளித்து நாடகம் முழு நிறைவு பெற்றதன் பின்னர் தான் மேடையேற அனுமதிப்பார். அவ்வளவு ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடுகள் அமைந்த ஒரு மாபெரும் கலைஞர் அவர்.

அந்த நாற்பதுகள் காலகட்டம் ஒலிவாங்கிகள் எல்லாம் சரியாக இல்லாத காலங்கள், ஐயா எங்களுக்குப் பயிற்சியளிக்கும் போது ஹார்மோனியப்பெட்டியை வைத்துக் கொண்டு அஞ்சரைக்கட்டை சுருதியிலே வைத்துக் கொண்டு அதற்கு மேலாகப் பேச எங்களுக்குப் பயிற்சி எடுத்தார். அதாவது மைக் இல்லாமலேயே எங்களைப் பேசக்கூடிய தன்மையை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் சொல்லுவார் சொற்களை உச்சரிப்பதல்ல, எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்று. இப்பொழுது எனக்கு எழுபது வயதாகிவிட்டது. இருந்தாலும் அவர் கொடுத்த பயிற்சி இன்னமும் இருக்கிறது. முக்கியமாகச் சமஸ்கிருதச் சொற்கள் அந்தக்காலத்து நாடகங்களில் இருக்கும், அவற்றையெல்லாம் எம்மவர்கள் உச்சரிக்கக் கஷ்டப்படுவார்கள். அவற்றைக் கூட அவர் எழுத்தெழுத்தாகச் சொல்லிக் கொடுத்தார். உதாரணத்துக்கு தேரோட்டி மகன் நாடகத்தில் ஒரு வசனமொன்று
"சந்திர குல ஷத்திரியன் திருதராஷ்டிர சக்கரவர்த்தியின் மூத்த குமாரன் தக்க்ஷணாபுரத்துச் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு" என்றிருக்கும். இந்த வசன அமைப்பை இன்றைக்கும் என்னால் சொல்லக்கூடிய அளவுக்கு இருப்பதற்குரிய பெருமை அந்தப் பெருமகனாருக்கே போய்ச்சேரும்.



நாடகத்தைத் தவிர வேறு ஏதாவது கலை, இலக்கியப்படைப்புக்களில் உங்களுக்கு நாட்டம் இருந்ததா அப்போது?


நிறைய சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் என்று எழுதியிருக்கின்றேன் ஆனால் நாடகத்தில் தான் என் முழு நாட்டமும் இருந்திருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்த எஸ்.டி.அரசு, கொழும்பில் சுவைர் ஹமீட், லடீஸ் வீரமணி என்று அந்தக் காலத்தில் மிகச்சிறந்த நெறியாளர்கள் அத்தனை பேரின் நெறியாள்கையில் நான் நடித்திருக்கின்றேன். இப்பொழுது கூட இங்கே சுவிஸில் இருக்கும் அன்ரன் பொன்ராஜ், சுபாஷ் என்று பலருடைய நெறியாள்கையில் நடித்திருக்கின்றேன்.
பள்ளிக்கூட நாடகங்கள் பலவற்றுக்குப் பயிற்சி கொடுக்க சொர்ணலிங்கம் ஐயா என்னைத் தான் அனுப்புவார் என்பது எனக்குப் பெருமை. ஐயா எங்களுக்குச் சொல்லுவார்
"எங்கு நல்லதைக் காண்கிறாயோ அங்கே அதை மனம் திறந்து பாராட்டு" என்று அப்படிப் பாராட்டும் போது அதை நீ கற்றுக் கொண்டாய் என்று அர்த்தம். எங்கள் சமுதாயத்தின் பெரும் குறையே அதுதான், பெற்ற பிள்ளையைக் கூட மனம் திறந்து பாராட்ட மாட்டோம்.'

ஈழத்தின் திரைப்படப்பத்துறையில் உங்கள் பங்களிப்புக் குறித்துச் சொல்லுங்களேன்?

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு, கண்டி , மாத்தளை போன்ற இடங்களில் நாடகங்களை அரங்கேற்றியிருக்கின்றேன். நான் அரச பணியில் 24 வருடங்கள் கடமையாற்றியவன், விவசாயத்தில் நான் டிப்புளோமா செய்தவன். ஒரு நாள் ரயிலில் வந்து கொண்டிருக்கும் போது வேதநாயகம் என்னும் ஒரு சங்கீதக் கலைஞர் , பலாலி ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியின் விரிவுரையாளர் அவர் என்னைக் கண்டு "நான் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் நடிக்கிறீர்களா?" என்று கேட்டார்.
அப்படியாக கடமையின் எல்லை என்ற படம், இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஹம்லெட் என்ற நாடகத்தின் மொழி பெயர்ப்பு அது 1963 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட போது அதில் கதாநாயகனின் நண்பனாக நடித்தேன். அந்தப் படம் உரியமுறையில் சிறப்பாக எடுக்கப்பட்டது என்று சொல்லமுடியாது காரணம் அந்தப் படத்தின் நெறியாளர் புதியவர். ஆனால் படத்தில் நடித்த எனக்குப் பத்திரிகைகள் பாராட்டியிருந்தன. இலங்கையில் தயாரான ஒரே சரித்திரப்படம் அதுதான்.


கடமையின் எல்லையைத் தொடர்ந்து?

அந்தப் படத்தில் நடிக்கும் போது இந்தப் படத்தைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற மனக்கவலை இருந்தது. அந்த ஆதங்கத்தில் நானே ஒரு படத்தைச் செய்தால் என்னவென்று நினைத்து 1967 ஆம் ஆண்டு "நிர்மலா" என்ற படத்தை ஆரம்பித்து 1968 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் திகதி தயாரித்து வெளியிட்டேன். அந்தப் படத்தில் கதாநாயகியின் அண்ணனாக நடித்திருந்தேன். அந்தப்படம் இலங்கையின் சகல பத்திரிகைகளாலும் நம்பிக்கையூட்டும் படம் என்று பாராட்டப்பட்ட படம். அந்தப் படத்தை நெறிப்படுத்தியது அருமைநாயகம் என்னும் என் சகபாடி, மிகச்சிறந்த கலைஞன் அவன். அவர் இறந்து விட்டார். அவரும் கலையரசு ஐயாவுடைய மாணவன் தான்.

நிர்மலா படத்தில் வரும் "கண்மணி ஆடவா" என்ற பாடல் 10, 15 வருடங்களாக இலங்கை வானொலியில் ஒலிபரப்ப்பட்ட புகழ்பெற்ற பாடல் அது. பாடல்களுக்கான இசையை திருகோணமலை பத்மநாதன் என்பவர் தான் அமைத்திருந்தார்.

நிர்மலா படத்தில் வரும் "கண்மணி ஆடவா" பாடலைக் கேட்க


அந்தப் படத்தைத் தயாரிக்கும் போது இலங்கை முழுவதுமுள்ள கலைஞர்களை ஒன்று திரட்டிச் செய்தேன். கதாநாயகனாக நடித்தவர் மட்டக்களப்பு, இசையமைத்தவர் திருகோணமலை, ஒளிப்பதிவாளர் மன்னாரைச் சேர்ந்த கபூர், தயாரிப்பாளர் இயக்குனர் யாழ்ப்பாணம், கதாநாயகியாக நடித்தவர் கொழும்பு, தவிர மலையகத்தில் இருந்து விஸ்வநாதராஜா, சிலோன் சில்லையா என்று இரண்டு நடிகர்கள். இந்தப் படத்திற்குப் பாடல்கள் எழுதியவர்கள் இங்கையின் மிகச்சிறந்த கவிஞர்களாகக் கொள்ளப்படும் முருகையனும், சில்லையூர் செல்வராஜனும்.


அந்தப் படத்தைத் திரையிட முனையும் போது தென்னிந்தியப் படங்களோடு போட்டி போடவேண்டிய சிரமங்களுக்கும் உள்ளாகியிருப்பீர்கள் இல்லையா?

நிச்சயமாக. எங்கள் படம் திரையிட முன்னால் ஒரு பத்திரிகைக் காட்சி பாமன்கடை தியேட்டரில் பண்ணியிருந்தோம். அதற்கு நாம் எம் அரசியல் தலைவர்களை அழைத்திருந்தோம். அப்போது யூஎன்பி ஆட்சியில் இருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேனநாயக்கா, திருமதி பண்டாரநாயக்கா, கொம்யூனிஸ்ட் தலைவர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அழைப்பு விடுத்திருந்த எம் தமிழ் எம்பிக்கள் யாரும் வரவில்லை. ராஜதுரை கடிதம் அனுப்பியிருந்தார், எனக்கு நேரமில்லை என்று. நினைத்துப் பாருங்கள் எவ்வளவு மனவேதனையாக இருக்கும் என்று.
திருமதி பண்டாரநாயக்கா என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் "நாங்கள் ஒரு தமிழ்ப்படத்தைத்தானே பார்க்கப் போகிறோம்?" என்று.
"ஓம்" என்றேன்
"தமிழ் எம்பிமாரைக் கூப்பிடவில்லையா?" என்று கேட்டார்.
நான் அப்போது அவகாசம் இருந்ததால், கொள்ளுப்பிட்டி சென்று செல்வநாயகம் அவர்களை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு வந்தேன். பின்னர் திருமதி பொன்னம்பலமும் வந்து சேர்ந்தார்.
எங்கள் தமிழ்த்திரைப்படக்கலையை யாருமே ஊக்குவிக்கவில்லை, அதுதான் உண்மை.
எல்லாப் பத்திரிகைகளும் நம்பிக்கையூட்டும் படம் என்று எழுதிவிட்டன. அப்போது திரைப்பட விநியோகஸ்தர்களாக இருந்த நம் தமிழர்கள் இந்தியாவில் இருந்து அரசகட்டளை, பணமா பாசமா, நான் என்று நான்கு பெரும் வெள்ளிவிழாப்படங்களை ஒரு நாள் அவகாசத்தில் இறக்குமதி செய்து திரையிட்டு எங்கள் படத்தை ஓடவிடாமல் செய்தார்கள். இருந்தாலும் ஓரளவுக்கு எம் படத்தை ஓடச்செய்தவர்கள் அப்போது யாழ்ப்பாணத்தில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களும் தான் காப்பாற்றினார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்கள், இது எங்களுடைய படம் என்று சொல்லி குழந்தைகளை அழைத்து வந்து தியேட்டர்களை நிரப்பினார்கள். ஆனாலும் வர்த்தக ரீதியில் இந்தப் படம் எனக்குத் தோல்வியே.

நிர்மலா படத்தைத் தொடர்ந்து உங்கள் முயற்சிகள்?

இந்தப் படத்தைத் தொடர்ந்து வி.பி.கணேசன் நடித்த புதிய காற்று திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தேன். பின்னர் இலங்கையில் தயாரான முதல் சினிமாஸ்கோப் தமிழ்த் திரைப்படம் "தெய்வம் தந்த வீடு" . நாதஸ்வரக்கலையை முக்கியமான கருப்பொருளாக வைத்து நாதஸ்வரக்கலைஞன் என்.கே.பத்மநாதன் இசையில் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தேன். அந்தப் படத்தை இந்திய வம்சாவளித் தமிழர் ஹட்டனில் உள்ள வி.கே.டி.பொன்னுச்சாமி என்பவர் தயாரித்திருந்தார். அந்தப் படம் தான் நான் கதாநாயகனாக நடித்த ஒரே படம். இலங்கையில் தயாரான ஒரேயொரு சினிமாஸ்கோப் படமும் இதுதான்.


தெய்வம் தந்த வீடு திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எப்படி அமைந்திருந்தன?

விமர்சனங்கள் பெரிதாக நல்ல விதத்தில் அமையவில்லை என்பேன். காரணம் தமிழ்ப்படங்கள் போடும் தியேட்டர்களில் சினிமாஸ்கோப் படத்தைக் காண்பிக்கும் அமைப்பில் திரை அமைப்பு இருக்கவில்லை.
படம் பாதி திரையில் பாதி சுவரில் விழும் அளவுக்கு மோசமான நிலை. இலங்கையில் சினிமாஸ்கோப் படத்தை எடுக்கக் கூடிய ஒரேயொரு லென்ஸ் தான் இருந்தது. நிஹால் சிங்க, இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஆரம்பகாலத் தலைவராக இருந்தவர். அவருடைய அந்தக் கமரா மூலம் மிட் ஷொட் மூலம் மட்டுமே எடுக்க முடிந்தது. இசையை கண்ணன் அற்புதமாகப் பண்ணியிருந்தார். பாடல்களை காலம் சென்ற வீரமணி ஐயர் எழுதியிருந்தார். நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசை என்று எங்கள் மண்ணின் கலைஞர்களைக் கெளரவிக்கும் முகமாகச் செய்திருந்தேன். நாட்டுக்கூத்துக் கலைஞர் பூந்தான் ஜோசப்புவின் நாட்டுக்கூத்தையும் அதில் சேர்த்திருந்தேன். முதலில் நிர்மலா படத்தில் பெருங்கலைஞன் வி.வி.வைரமுத்து அவர்களையும், நாடகத்தந்தை கலையரசு சொர்ணலிங்கம் ஐயா அவர்களையும் நடிக்க வைத்துப் பதிவாக்கினேன். ஆனால் சிலோன் ஸ்டூடியோவில் இருந்த இந்த எல்லாப்படங்களுமே 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் எரிந்து சாம்பலாக்கப்பட்டு விட்டன. ஒரு நெகடிவ் கூட எஞ்சவில்லை.


திரைத்துறையில் வேறு அனுபவங்கள்?

நான் சிங்களத் திரைப்படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கின்றேன். காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்ரமசிங்க போன்றோருடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். உலக அரங்கில் புகழப்படும் இலங்கை நெறியாளர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசுடனும் பணியாற்றியிருக்கின்றேன்.

தற்போது நீங்கள் குறும்பட முயற்சிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றீர்கள், இந்த அனுபவம் எப்படியிருக்கின்றது?

நான் 1991 ஆம் ஆண்டு பாரிஸ் வந்தடைந்தேன். 1994 ஆம் ஆண்டில் ஒரு படத்தில் நடித்திருந்தேன்.
இலங்கையில் வாழ்ந்திருந்த காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு, கொழும்பில் மாத்திரமே திரையிடமுடிந்தது. அதாவது வியாபாரச் சந்தை எமக்கு இருக்கவில்லை. அந்த வகையில் குறும்படங்கள் எமக்குப் பெரும் வரப்பிரசாதம். ஐரோப்பா, கனடாவில் பெருமளவு குறும்பட முயற்சிகள் வந்திருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் நாம் பெரிய படங்களைச் செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

நான் முழுநேரமாக இந்த முயற்சிகளில் இருப்பதற்குரிய களம் இங்கே அமைந்திருக்கின்றது. அடிப்படையில் நான் விளையாட்டு வீரனாகவும், எந்தத் தீயபழக்கவழக்கங்களுக்கும் என்னை ஆட்படுத்தாத காரணத்தாலும் உடல் நலம் சீராக இருக்கின்றது. கலைத்துறையில் இரண்டு பணிகளைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றேன்.

ஒன்று, நான் இலங்கையில் 1947 ஆம் ஆண்டு முதல் நாட்டுக்கூத்து, இசை நாடகம், நவீன நாடகம் என்று வடிவங்களிலும் ஐந்து தலைமுறைக் கலைஞர்களுடனும் அதாவது 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கலையரசு ஐயா, 20 ஆம் நூற்றாண்டின் சம காலத்துக் கலைஞர்கள், 21 ஆம் நூற்றாண்டின் இன்றைய இளையோர் என்று எல்லோருடனும் நடித்திருக்கின்றேன். என்னுடைய அனுபவத்தையும், நான் கண்ட கலைஞர்கள் குறித்த ஒரு நூலையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.

இரண்டாவதாக, எம் மண்ணின் கலைஞர்கள் உலகம் முழுதும் பரவலாகச் சிதறிக்கிடக்கும் கலைஞர்களை ஒன்று திரட்டி ஒரு படமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கின்றேன்.

பாரிசில் செப்டெம்பர் 25, 2010 இல் கலைஞர் ரகுநாதன் அவர்களின் பவளவிழாக் காணொளி


நன்றி:
சிட்னி வந்த போது புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட ரகுநாதன் அவர்கள்
பவளவிழா சிறப்புக் காணொளியைத் தயாரித்தளித்த ஈழசினிமா
கண்மணி ஆடவா (நிர்மலா) பாடலை தன் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட கனக.சிறீதரன் அவர்கள்
Posted by கானா பிரபா at 8:07 PM 2 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ▼  2010 (29)
    • ▼  December 2010 (2)
      • "முகத்தார்" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்
      • வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்
    • ►  November 2010 (2)
      • the social network - தொலைந்த நட்பில்.....
      • தீவாளி வருஷங்கள்
    • ►  October 2010 (2)
      • "தெய்வம் தந்த கலைஞன்" ரகுநாதன்
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes