skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Thursday, September 23, 2010

என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்

ஒரு சதுர்த்தி நாளில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சுவாமி வீதி வலம் வரும் போது

அண்ணைக்கு ஒரு கொத்து றொட்டி போடு!

தாவடிச் சந்திக் கொத்துறொட்டிக் கடை

"உன்னை எவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறன், செவிடு மாதிரி ஏனெண்டு கேளாமல் என்னடா பின்னுக்குச் செய்து கொண்டிருக்கிறாய்" தாவடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் றோட் பக்கம் போதும் திசையின் ஓரமாய் இருக்கும் கொத்துறொட்டிக் கடைக்குள் நான் நுழைந்ததும் அந்தக் கடைக்கார அம்மா தன் வேலையாளுக்குக் கொடுத்த வசவு தான் அது. ஊரில் முந்திய நாட்களில் வருஷம் 365 நாளில் 356 நாள் கோயில் திருவிழா விரதமிருக்கும் எங்கட வீட்டுக்காரருக்குத் தெரியாமால் கூட்டாளிமாரோட தஞ்சம் புகும் இடங்கள் தான் இந்தக் கொத்துறொட்டிக்கடைகள். கடைக்குள் நுழைந்து ஓடர் கொடுத்ததும் ஏதோ ட்ரம்ஸ் சிவமணி கணக்காய் கொத்து றொட்டி அடிக்கிற இரும்புத் தகட்டில் முட்டையை அடித்துப் போட்டு விட்டு, நறுக்கியிருந்த வெங்காயம் , பச்சை மிளகாய்க் குவியலை ஒரு கையால் எடுத்துத் துளாவி விட்டு , பரோட்டாவைக் கண்டம் துண்டமாய் வெட்டித்தள்ளும் கொத்துறொட்டி மாஸ்டரின் கோடாலியின் இரும்புத் துண்டு போல இருக்கும் ஆயுதம். சைட்டில் இருக்கும் மாட்டிறச்சிக் கறியும் அதில் சங்கமிக்க, மேலே கோழிக்குழம்பு தீர்த்தமாடும். பத்து நிமிஷத்தில் வெங்காயம், மிளகாய், பரோட்டா எல்லாம் திரண்ட கலவை திசூப் பேப்பரில் சுத்திய பிளாஸ்டிக் கோப்பையில் போடப்பட்டுப் பரிமாறப்படும்.
அந்தப் பழைய நினைப்பு மீண்டும் தலைதூக்க, தாவடிச் சந்திக் கடைக்குத் தனியே போய் உட்காருகிறேன். கொத்துறொட்டி வந்தது. பசியில்லை ஆனால் கொஞ்சமாவது சாப்பிட்டுப் பார்ப்போம் என்று ஒரு சில விள்ளல்களை வாயில் வைத்து விட்டுக் கை கழுவுகிறேன். அந்த நாளில் நண்பர்களோடு போய்ச் சாப்பிட்ட காலம் ஒரு தனிச்சுவை போல... அது சாப்பாட்டில் விளைந்ததா அல்லது நட்பில் சுவைத்ததா தெரியவில்லை.



மாடு கண்டு ஈண்டுட்டுது சிக் லீவ்

யாழ்ப்பாணத்து நண்பர்களை விட்டு விலகும் போது பள்ளிக்காலம், இப்போதோ அவர்களைக் காணும் போது உழைப்பாளிகள். ஒரு நண்பன் ஒரு சிற்றூரில் ஆசிரியராக இருக்கிறான். அவனோடு சேர்த்து ஒரு நாலு ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர் அவ்வளவு தான் அந்தப் பள்ளிக்கூடத்தின் கொள்மானம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தலைமை ஆசிரியருக்கு அடுத்து என் நண்பன் தான் சீனியராம் ;). ஒரு நாள் தலைமை ஆசிரியர் இவனைக் கூப்பிட்டு
"ஒருக்கால் வகுப்புகளைப் பார்த்துக் கொள்ளும் நான் கல்விக் கந்தோருக்குப் போட்டு வாறன்"
என்று விட்டுப் போய் விட்டார். தலைமை ஆசிரியர் போனபின் தான் இவனுக்கு உறைத்தது அன்று சொந்தக்காரர் கோயிலுக்குக் காவடி எடுக்கினம், போகவேண்டுமே என்று இவனும் கொஞ்ச நேரத்தில் சாப்பாட்டுக்குக் கிளம்பி விட்டான். காவடிச் சோறு பரமாறப்படப்போகுது. இவன் பந்தியில் உட்கார்கிறான். பக்கத்தில் யாரடா என்றால் சாட்சாத் தலைமை ஆசிரியரே தான்.
"உம்மை எல்லோ வகுப்பைப் பார்க்கச் சொன்னனான்" - தலைமை ஆசிரியர்
"சேர்! நீங்கள் இங்கை வருவீங்கள் எண்டா வந்திருக்க மாட்டன்" இது என் நண்பர்.

ஒரு அலுவலக நாளில் சொந்தக்காரர் வீடொன்றுக்குப் போனேன். அந்த வீட்டுக்காரரின் மகன் அன்றைக்கு வேலைக்குப் போகவில்லை, ஏனென்று ஆர்வக்கோளாறினேன் அதற்கு அவன்
"மாடு கண்டு ஈண்டுட்டுதண்ணை அதான் போகேல்லை"



கிழித்துப் படிக்கப்படும் புத்தகங்கள்




யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தடியில் வழக்கம் போலப் பூபாலசிங்கம் புத்தகசாலைக்குப் போய் நூல்களை மேய்ந்தேன். சுவாமி(?) நித்தியானந்தாவின் அருள்மொழிகளைத் தாங்கிய குண்டு குண்டான புத்தகங்களைக் கண்டபோது நக்கீரன் சொன்னது ஞாபகம் வந்தது. அட நான் சொல்லவந்தது நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே.
ஆனந்த விகடன், குமுதம் போன்றவற்றில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஏதாவது கட்டுரையோ, கார்ட்டூனோ வந்தால் அவை கிழிக்கப்பட்டுத் தான் இங்கு விற்பனைக்கு விடப்படுகின்றன. இதே ரீதியில் நக்கீரன் போன்ற சஞ்சிகைகளைக் கிழித்தால் விளம்பரப்பக்கம் தான் மிஞ்சுமோ என்றோ நக்கீரன் போன்ற பத்திரிகைகளுக்குத் தடா. பஸ் நிலையத்தில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலை சிறியது, வேறு பெரிய கடை உண்டா என்று கடையில் வேலை செய்த பெண்ணிடம் கேட்டேன். "வேம்படி றோட்டில் ஒண்டிருக்கு, போய்ப் பாருங்கோ"
அடுத்த நிமிடம் வேம்படி றோட் பூபாலசிங்கத்துக்கு லுமாலா பறந்தது.
அங்கே வேலையில் இருந்த பெண்ணை அழைத்து
"ஈழத்து எழுத்தாளர்கள் படைப்புக்கள் இருக்கா" - இது நான்
"புதுசா ரமணிச்சந்திரன், உமா பாலகுமாரின் புக்ஸ் இருக்கு, வேணுமா" - இது வேம்படி றோட் பூபாலசிங்கம், அங்கே இருந்த பெண்

என்னோடு யாழ்ப்ப்பாண உலாத்தலில் கூடவந்த லுமாலா சைக்கிள்

யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பும் நாள், நண்பர்கள் இணுவில் சந்தியால் வரும் கொழும்பு பஸ்ஸில் என்னை ஏற்ற நிற்கின்றார்கள். பேசாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு இங்கேயே இருப்போமா மனம் மாறி மாறி என்னைக் கூறு போடுகிறது. கொலைக்குற்றவாளியின் இறுதி விருப்பங்களை நிறைவேற்றிவ விட்டு தூக்குமேடைக்கு அனுப்பும் நிலை அது.
விருப்பமில்லாத பிள்ளையைப் பாலர் வகுப்புக்குத் துரத்தி அனுப்புமாற் போல மனம் உள்ளே மெளனமாகக் குமுற அம்பாள் பஸ்லில் ஏறுகிறேன். மீண்டும்
"உன்னை நினைத்து" படத்தைப் போட்டுச் சாவடிக்கிறார்கள்.
என் தாய் நிலத்தில் நிரந்தரமாக உண்டு உறங்கும் நாளை எனக்கு ஆண்டவன் அருள்பாலிக்க வேண்டி விடைபெறுகின்றேன், என் இனிய யாழ்ப்பாணமே!

அனுராதபுரத்தில் இந்த முஸ்லீம் கடையில் தான் எல்லா பஸ்களும் கொழும்பு - யாழ் பயணத்தின் இடைவேளை

முறிகண்டிப் பிள்ளையார்
Posted by கானா பிரபா at 9:33 PM 26 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, September 15, 2010

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை

எனது யாழ்ப்பாணப் பயணத்தில் திருத்தலங்களைத் தரிசிக்கும் நிகழ்ச்சி நிரலின் படி அன்றொரு நாள் லுமாலாக் குதிரையின் மீதேறி நான் சென்றது தியேட்டர் வலம். காங்கேசன் துறை வீதியில் முதலில் சந்தித்தது மனோகரா தியேட்டரை. அங்கு களவாணி படம் ஓடிக்கொண்டிருந்தது, ஏற்கனவே களவாணியை சிட்னியில் தரிசித்ததால் மனோகராவுக்குள் நுழையாமல் அடுத்ததாக சாந்தித் தியேட்டர் பக்கம் போவோம் என்று ஆஸ்பத்திரி வீதிக்குக் குறுக்கால் போகும் குச்சொழுங்கைக்குள் சைக்கிளை விட்டேன். முன்னர் அந்த மூத்திர நாத்தம் பிடிச்ச ஓடைக்குள் தான் ஹரன் தியேட்டர் இருந்ததாகச் சொல்லுவினம். ஹரன் தியேட்டரை நான் தரிசிக்கும் முன்னரேயே அது போர்ச் சூழலில் செத்து விட்டது. குச்சொழுங்கையின் அரைப்பங்கை நிரப்பிய நாற்றம் பிடித்த குப்பை மேடுகளைக் கடந்தால் அந்தா தெரியுது சாந்தி இல்லையில்லை நாதன்ஸ் இல்லையில்லை செல்லா சினிமா. என்ன குழம்பி விட்டீர்களா, ஒரு காலத்தில் சாந்தி ஆக இருந்து பின்னர் நாதன்ஸ் ஆகி இப்போது இந்தத் தியேட்டர் செல்லா சினிமா.

கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படம் ஓடிக்கொண்டிருப்பதாக வெளியில் இருந்த கட் அவுட் சொல்லியது. என்ன கொடுமை ஐயா கருணாஸ் ஹீரோவா நடித்த படமெல்லாம் தியேட்டருக்குப் போய்ப் பார்க்கும் அளவுக்கு யாழ்ப்பாணச் சனம் மீது ஒரு கலாச்சார வன்முறை கட்டவிழ்த்து விடுவதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா என்று மனதுக்குள் வெதும்பினேன். இந்த மனுசன் இதுக்குத் தான் இலங்கைக்கு விடாப்பிடியா வரவேணும் எண்டு கஷ்டப்பட்டவர் போல.

வின்சர் தியேட்டர் பக்கம் ஒரு மினி சினிமா
தற்போதைய வின்சர் தியேட்டர்
ராணி தியேட்டர் சயிக்கிள் பார்க்காக இருந்து இப்ப அதுவும் இல்லாமல் பூட்டிக் கிடக்க, லிடோ இருந்த சுவடே இல்லாமல் கட்டிட வளாகம் தோன்றி மறைக்க வெலிங்டன் தியேட்டர் வெறுங்காணிக்குள் கறள் பிடிச்ச இரும்புச் சாமான்களோடு நிரம்பியிருக்க, வின்சர் தியேட்டர் கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியமாக மாற, சிறீதர் தியேட்டர் ஈ..பி.டி.பி முகாம் ஆகிப் போனது.

அடுத்து எஞ்சிருயிருப்பது ராஜா தியேட்டர் தான். அந்தப்பக்கமாக லுமாலா பாய்ந்தது. "தில்லாலங்கடி" ஓடிக்கொண்டிருந்தது. சரி உள்ளே போய்ப் பார்ப்போமே என்று ராஜாவுக்குள் நுழைந்து சைக்கிள் பார்க்கில் லுமாலாவை ஓரங்கட்டி நிறுத்தினேன்.






ராஜா தியேட்டருக்குள் சுவரில் மாட்டியிருந்த படங்களைக் கமராவால் சுட்டேன்.

"அண்ணை! றிக்கற் எவ்வளவு" - இது நான்
"பல்கனி 200 ரூபா, சுப்பர் பல்கனி 240 ரூபா" என்றார் றிக்கற் விற்பவர். (ஏன் நான் கலரியில் இருக்க மாட்டேனோ?)
"சுப்பர் பல்கனி ஒரு ரிக்கற் தாங்கோ" ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் சுப்பர் பல்கனி என்றால் என்னவென்றே தெரியாமல் றிக்கற் வாங்கியாச்சு.

"மேல போங்கோ அண்ணை"

"டிங்கரிங்க ரிங் ஆ டிங்கரிங்க ரிங்" தில்லாலங்கடி பாட்டைப் பாடிக் கொண்டே இன்னொருபக்கம் படம் பார்க்க வந்த பெண் சிரசுகளைச் சைற் கொண்டே சொல்லுறார் அந்த ரிக்கற் கிழிக்கிற பெடியன்.

பல்கனிக்கும் மேலாக இன்னொரு வாசல் "சுப்பர் பல்கனி"க்கு. எட்டிப்பார்த்தால் சோடி சோடியாய் நாலு சோடி காதலர் குடி கொண்டிருக்கினம். நானோ தன்னந்தனியன் "அடக்கோதாரி இதுக்குப் பெயரா சுப்பர் பல்கனி, நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா" என்று மனதுக்குள் கறுவியவாறே மீண்டும் றிங்க றிங்க றிங் பெடியனிடம் வந்து,
"தம்பி! நான் சுப்பர் பல்கனிக்கு ரிக்கற் எடுத்தனான், ஆனா பல்கனியிலேயே இருந்து கொள்ளுறன்"
"சரியண்ணை" என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் அவன்.

முன்னர் 2006 இல் மெர்குரி பூக்கள் படம் பார்க்க வந்த போது படம் தொடங்கி ஒவ்வொரு 5, 10 நிமிஷத்துக்கு இடைவேளை வரும், பின்னை என்ன அப்போதிருந்த மின்சார நிலைமை அப்படி, ஆனா இந்த முறை அப்படியில்லை ஒரேயொரு இடைவேளை தான். முந்தின தியேட்டர் ஸ்கீரினில் ஒட்டுப் போட்டுப் பிச்சைக்காரனின் சட்டை மாதிரி இருக்கும் இப்ப நல்ல வெண்திரையில்.



2006 இல் பார்த்த ராஜா தியேட்டர் இதுதான், ஒருத்தர் ஹாயா காலைத் தூக்கி சீற்றுக்கு மேலை வச்சிருக்கிறார் பாருங்கோ

பள்ளி விடுமுறை என்பதால் சின்னனுகள் தாய் தேப்பனோட வந்து தில்லாலங்கடியில் கும்மி இருந்தனர். வடிவேலுவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு ரசிகர் சங்கமே இருக்குப் போல.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனியே தன்னந்தனியே படம் பார்த்து முடித்து வெளியே வந்தேன்.

பின்னேரம் மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போகிறேன். அங்கே நின்ற ஒரு பெடியன்
"அண்ணை என்ன உங்களைக் காலமை தியேட்டர் பக்கம் கண்டது போல இருக்கு"

யாழ்ப்பாணம் மாறவில்லை ;)


இந்த அனுபவத்தைச் சொல்லும் போது மார்ச் 15, 2006 இல் என் பதிவாகத் தந்த "சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்கள்" என்ற பதிவையும் இரைமீட்டி இங்கு பார்க்கிறேன்.

நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமாபரடைசோ” (Cinema Paradiso).

இத்தாலி நாட்டுத் திரைப்படமான இப்படம் இத்தாலிய மொழியில் Nuovo Cinema Paradiso ஆக 1989 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் இயக்குனர் Giuseppe Tornatore. 1990 ஆம் ஆண்டு சிறந்த வேற்றுமொழியில் வெளிவந்த படமாக ஒஸ்கார் விருதும், 11 ஒஸ்கார் விருதுப் பரிந்துரைகளுக்கும் அதே ஆண்டு தெரிவானது.தவிர ஜப்பானிய அக்கடமி விருது, கேன்ஸ் திரைப்படவிருது. ஐரோப்பியத்திரைப்பட விருது உட்படப் பல தொகை விருதுகளை அள்ளிக் குவித்தது இப்படம். பொதுவாகவே இப்படியான விருதை அள்ளிக் குவிக்கும் படங்கள் முழுமையான ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவது கடினம். ஆனால் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னொருமுறை பார்க்கத்தூண்டுவதும் அப்படி மீண்டும் பார்க்கும் போதும் முதல் முறை பார்க்கும் போது கிடைக்கும் அதே அனுபவத்தை ஏற்படுத்துவதும் தான் இப்பட இயக்குனருக்குக் கிடைக்கும் பெரிய விருது.

கதை இதுதான், ஒரு பிரபல சினிமா இயக்குனராக ரோம் நகரில் இருக்கும் சல்வடோர் (Salvatore) தான் முப்பது வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த இத்தாலிக்கிராமமான சிசிலி(Sicily)யில் சிறு பையனாக இருந்தபோது தன் நண்பனாக வழிகாட்டியாக இருந்தவரின் மரணச் செய்தி கிடைக்கின்றது. முப்பது வருடமாகத் தன் சொந்தக்கிராமத்தையே எட்டிப்பார்க்காத அவர் இந்த மரணச்சடங்கிற்காகச் செல்ல முடிவெடுக்கின்றார். தொடர்ந்துவரும் அவரின் நினைவுச் சுழல்கள் முப்பது வருடங்கள் பின்னோக்கியதாகப் பயணிகின்றது.
இத்தாலிய நாட்டின் நவீனம் புகாத ஒருகிராமம் அது. அங்கே உள்ள "சினிமா பரடைசோ" என்ற ஒரேயொரு தியேட்டர் தான் அவ்வூர் மக்களுக்கு இருக்கும் ஒரே களியாட்டக்களம். ஆடலும் பாடலும் சேட்டைகளும் சில்மிஷங்களுமாகப் படங்களைப் பார்த்து இரசிப்பதற்கும், தங்கள் கனவு நாயகர்கள் திரையில் தோன்றும் போது ஆரவாரிப்பதுக்குமான நிலைக்களன் தான் அந்தத் தியேட்டர்.
அந்த ஊரில் தன் தந்தையைப் போரில் பறிகொடுத்துவிட்டு இளம் தாயுடனும் தன் தங்கையுடனும் இருப்பவன் டோட்டொ என்ற சிறுவன். தன்னுடைய சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களுடன் வளர்கிறான் டோட்டோ. தாய்க்குத் தெரியாமல் கள்ளமாகத் தியேட்டரில் படம் பார்ப்பதும், திருட்டு தம் அடிப்பதும், ஏன் அந்தத் தியேட்டரே அவன் உலகமாகவும் எண்ணிக்கொள்கின்றான். சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டரில் படம் போடுபவராக (projectionist) இருப்பவர் அல்பிரடோ என்ற முதியவர்.
டோட்டோ தன் குறும்புத்தனங்களையும் படம் பார்க்கும் அவாவயும் தியேட்டருக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. நேராகப் படம் போடும் அறைக்குள் நுளைவதும் அல்பிரடோவின் ஏச்சுக்களை வாங்கிகட்டுவதும்,
படக்காட்சி பொருந்திய துண்டுகளை அடம்பிடித்து வாங்குவதும் அவன் வழக்கம். தன் பிள்ளை ஒரேயடியாக இப்படியாகத் தியேட்டரில் இருப்பதற்கு அல்பிரடோ தான் காரணம் என்று நினைத்து அவரைக் காணும் போது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவாள் டோட்டோவின் தாய்.
இதனால் மனவருத்தமடையும் அல்பிரடோ, டோட்டோ தன் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் அவனைத் துரத்துவார். ஆனால் அவனோ இவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவது போலவும், பரீட்சையில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி உதவியும் ( அல்பிரடோ தான் வயதாகியும் படிக்க ஆசைப்படுபவர்) தான் நினைப்பதைச் சாதித்துவிடுவான்.
இப்படித் தியேட்டரே தன் உலகமாக இருக்கும் டோட்டோ ஒருமுறை தியேட்டரில் ஏற்படும் தீவிபத்தில் அல்பிரடோவை காப்பற்றுகின்றான். அந்தவிபத்தில் இருந்து அல்பிரடோ இயங்கமுடியாது போனதும் டோட்டோ படம் போடுபவராக (projectionist)த் தேர்ந்தெடுக்கப்படுகின்றான். அல்பிரடோவே இவனின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மாறுகின்றார். மிகச்சிறுவயதிலேயே ஆக அமரும் டோட்டோ தன் வாலிபப் பருவத்தைத் தொட்டதும் ஒரு இளம் பெண்ணின் காதலில் வீழ்கின்றான். அந்தக் காதலிலிலும் தடைகள் வருகின்றன. கடமையா? காதலா? என்ற நிலை வரும் போது அவனின் வழிகாட்டி அல்பிரடோ சொல்கின்றார். " நீ இந்த ஊரில் இனி இருக்ககூடாது, திரும்பிப்பார்க்காது முன்னேறிக்கொண்டே போ".
டோட்டோ ரோம் நகருக்குப் பயணமாகின்றான். சல்வடோர் என்ற பிரபல இயக்குனராக மாறுகின்றான். முப்பது வருடங்கள் கழித்துத் தன் வழிகாட்டி அல்பிரடோவின் மரணச்சடங்கிற்கு வருகின்றான்.
சிறுவன் டோட்டோவின் குறும்புச் செயல்கள், அவன் இளைஞனாகும் போது வரும் காதல் உணர்வுகள், முப்பது வருடங்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு வரும் போது எழும் ஏக்கங்கள் எல்லாமே நம் ஈழத்து, இந்திய சமூகத்திலும் பொருந்திவரக்கூடிய நிகழ்வுகள். சிறுவனாக Salvator Cascio நடித்திருக்கும் தன் பங்கைத் திறம்படவே செய்திருக்கின்றான்.
தன் கிராமத்தின் அடையாளமாக இருந்த சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டர் காலமாற்றத்தில் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு வெம்புவதும், தன் பழைய காதலியைத் தேடியலைவதும், முன்பு கமராவில் எடுத்த அவளின் காட்சிகளைத் திரும்பப்போட்டுப் பார்ப்பதுமாக இருப்பதுமாக நிறைவான ஒரு பாத்திரத்தில் Jacques Perrin நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
டோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.

எல்லா மனிதருமே சராசரி வாழ்வியலோடு ஓடிக்கொண்டு போகும் போது தம்வாழ்க்கைப் பாதையில் மாறுபட்ட அனுபவங்களோ அல்லது நிகழ்வுகளோ வந்து சந்திக்கின்றன. நின்று நிதானித்து அந்த அனுபவங்களை உள்வாங்கி நடப்பவர்கள் தம் சராசரி வாழ்விலிருந்து விலகி முன்னேற்றப்பாதையில் செல்லத்தலைப்படுகின்றார்கள், அதோடு தமக்குரிய வழிகாட்டியையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். முன்னேறிய மனிதர்கள் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இப்படத்தைப் பார்க்கும் போதும் அதே உணர்வுதான் எனக்கு எற்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் தான் எமது நீண்ட வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றன.


என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.

படம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி "படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.
தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு " டண்டான் டாங், டண்டான் டாங்" என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.

அவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் " உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை" என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.

ரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் " புதுச்செருப்புக் கடிக்கும்".


நீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் " வயது வந்தவர்களுக்கு மட்டும்" (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.

தொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில "அக்னி நட்சத்திரம்" படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.


பிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில " ராஜாதி ராஜா"வும், லிடோவில " பூப்ப்பூவாப் பூத்திருக்கு" படமும், வெலிங்டனில "வருஷம் 16 " படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.
வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.
ராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.
வருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில "சம்சாரம் அது மின்சாரம்" ஒரு காட்சி கூட ஓடவில்லை.

யுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். என்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி " மதுரை வீரன்" என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.

யாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக " இது நம்ம ஆளு" படம் அதில வந்தது.


போனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.
சிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும்,
களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.
ரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.
Posted by கானா பிரபா at 7:53 PM 24 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, September 07, 2010

இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு

மேற்படம் காலிமுகத் திடலில் கொழும்புப் பதிவர்களுக்காக காத்திருக்கும் போது கமராவால் சுட்டது.

டிசெம்பர் 2005 இல் வலைப்பதிவுலகிற்கு வந்து ஐந்து ஆண்டுகளை எட்டிப் பிடிக்கும் இந்த வேளை இதுவரை வலைப்பதிவுச் சந்திப்புக்கள் என்று எடுத்துக் கொண்டால் முதன் முதலில் என் வலையுலகின் அருமை நண்பர் ஜி.ராகவன் தான் பெங்களூரில் வைத்து மார்ச் 30, 2006 ஆம் ஆண்டில் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அப்போது சிட்னியில் இருந்து பணி நிமித்தமான நான் அப்போது பணி புரிந்த Oracle நிறுவனத்துக்கு வந்த போது நிகழ்ந்தது. தொடர்ந்து அதே ஆண்டு ஈழப்பதிவர் நேசத்துக்குரிய நண்பர் ஈழநாதனைச் சந்திருந்தேன். பின்னர் மீண்டும் அதே ஆண்டு பெங்களூர் வருகையில் என்னை சித்தி பிள்ளை என்று முறை சொல்லி முதன் முதல் பின்னூட்டம் போட்ட சகோதரன் செந்தழல் ரவியைச் சந்தித்தேன். (ஈழத்தமிழர் என்றால் தமிழகத்தவருக்கு சித்தி முறை தானே என்ற அவர் விளக்கம் இன்றும் என்னை நெகிழ வைக்கும் நினைக்கும் போதெல்லாம்). இந்தச் சந்திப்புக்களை எல்லாம் நான் சந்தித்த வலைப்பதிவர்கள் என்ற பதிவில் இட்டிருக்கின்றேன்.

பின்னர் நியூசிலாந்தில் இருக்கும் என் பெரியம்மா பிள்ளைகள் (ஈழத்தமிழருக்கு தமிழகம் பெரியம்மா தானே ;-) துளசிம்மா, கொரியாவில் இருந்து நா.கண்ணன், நெல்லைக்கிறுக்கன் ஆகியோர் சிட்னி வந்தபோதும் இங்கேயுள்ள பதிவர்களோடு ஒரு சந்திப்பு அதை சிட்னி வலைப்பதிவர் சந்திப்புக்கள் என்ற பதிவில் இட்டிருக்கின்றேன்.

கடந்த ஆண்டு தாய்லாந்தில் நண்பர் மாயவரத்தானைச் சந்தித்தது பாங்கொக் மாரியம்மன் ஆலயத்தில் மாயவரத்தான் தரிசனம்

இரண்டு முறை சிங்கப்பூரில் பாசக்காரப் புள்ளைங்களோட சிங்கப்பூரில் எஞ்சிய நாட்கள்
சிங்கப்பூரில் நடந்த திடீர் பதிவர்சந்திப்புக்கள் மறக்கமுடியாத இனிப்பான நினைவுகள்.

இப்படி உலகம் சுற்றிப் பதிவர் சந்திப்பை நடத்தியிருந்தாலும் எம் தாயகத்தில் பதிவர் சந்திப்புக்கள் நடக்கு போதெல்லாம் வில்லன் பிரகாஷ்ராஜ் கணக்காய் மனசுக்குள் கறுவிக் கொண்டிருந்தேன் பெரும் ஆதங்கத்துடன். அந்த ஆதங்கம் ஓரளவு நிறைவேறும் வகையில் அமைந்தது இந்த ஆண்டு என் தாயகப்பயணத்தில்

கறுப்பியைக் கண்டேன்
ஒரு நாள் மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்குப் போய் காலைப்பூசை முடித்து வீட்டுக்கு வந்து என் செல்போனில் இருக்கும் ஒரு நம்பரை அழைக்கிறேன். நேரம் காலை 8 மணி இருக்கும்.
"ஹலோ கறுப்பி! என்ன செய்யுறீர்" இது நான்
"ஹலாஆஆஆவ் (கொட்டாவி) யார் பேசுறீங்க" இது நித்திரைப்பாயில் இருந்து கறுப்பி
"நான் கானா பிரபா, இப்ப யாழ்ப்பாணத்தில தான் நிக்கிறன்" - நான்
"என்ன விளையாடுறீங்களா? நீங்கள் யார் சொல்லுங்கோ மரியாதையா" இது தூக்கக் கலக்கத்தில் கறுப்பி
"யோவ்! நான் தானய்யா கானா பிரபா"
"போங்கண்ணன் விளையாடாதேங்கோ, நீங்களாவது யாழ்ப்பாணத்திலாவது"
"என்ன கொடுமை கறுப்பி, சந்தேகம் இருந்தால் நாளைக்கு யாழ்ப்பாணம் ரவுணில் சந்திப்போமா"
"சரி ஒகே" நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடு கறுப்பி. எனக்கும் இது கறுப்பியா அல்லது யாராவது கேஸ் ஆ என்றும் ஒரு சந்தேகம் பயத்தோடு.

அடுத்த நாளும் காலை வேளை அழைக்கிறேன்.
"அண்ணன் நான் பருத்தித்துறையில் இருந்து பஸ்ஸில் வாறன் எனக்கு 1 மணித்தியாலம் தாங்கோ"
சரியென்று விட்டு லுமாலா குதிரையில் ஏறு யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறேன். கறுப்பி சொன்ன நேரக்கணக்கு வரும்போது யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு அருகே இருக்கும் பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருக்கும் புத்தகங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் தான் அருகில் நிற்பதாகச் சொல்லி போனில் அழைத்தார். தூரத்தில் இருந்து சிம்பு ரேஞ்சில் ஒரு பையன் வந்து கொண்டிருந்தார். (கறுப்பி, நீர் சொன்னது போல உயர்த்திச் சொல்லிட்டன் ஓகே தானே ;)
அதுதான் கறுப்பி என்று ஒரு ஊகத்தில் நான் சிரிக்க அவரும் சிரிக்க.. கைகுலுக்கிக் குசலம் விசாரித்தேன்.

கறுப்பியின் ஒரு கவர்ச்சிகரமான தோற்றம்


"அண்ணன், நீங்கள் அப்பிடியே தான் இருக்கிறியள்" ஏதோ 10 வருசம் பழகினவை மாதிரி கறுப்பி சொன்னார். சிரித்துக் கொண்டே "கொசி ரெஸ்டோரண்ட் போவோமா ஓடர் குடுத்து 1 மணித்தியாலம் கழிச்சுத் தான் சாப்பாடு வருமாம் அந்த இடைவெளியில் கதைக்கலாம் " என்று நான் சொல்லவும் கறுப்பி தலையாட்டினார். பஸ் நிலையத்தில் இருந்து சிறீதர் தியேட்டர் எல்லாம் தாண்டி அந்த வேகாத வெயிலில் கறுப்பி நடக்க நான் சைக்கிளில் எத்தி எத்திப் பாய்ந்து கொசி உணவகம் போனோம்.

கொசி உரிமையாளர் சுந்தர் அந்த நாளிலை எங்களோட ஒளிச்சுப் பிடிச்சு எல்லாம் விளையாடின காய் இப்ப பெரும் பிசினஸ் புள்ளி. எனவே பழைய ஞாபகங்களை இறுக்கி உள்ளே வைத்து விட்டு சுந்தரைக் கண்டு மரியாதையான சிரிப்பை உதிர்த்துவிட்டு உணவகத்திற்குள் பாய்ந்தோம்.

ஆயில்யன் தொடங்கி அண்டம் வரை கிட்டத்தட்ட 2 மணி நேரமாக நிறையப் பேசினோம். தான் வலையுலகிற்கு வந்த கதையில் இருந்து நவீன இலக்கியம், புனைவு (இதைப் பற்றி நிறையவே) எல்லாம் பேசினார் கறுப்பி. கறுப்பி என்ற பதிவராக மட்டுமன்றி உடன்பிறவாச் சகோதரனாக அவரைச் சந்தித்தது பேசியது எல்லாமே இனிமையான கணங்கள். கொசியில் சாப்பிட்டு விட்டு இருபது நிமிடங்கள் வரை மீண்டும் பஸ் நிலையம் நோக்கி நடந்தோம். வழியில் சிறீதர் தியேட்டரில் சென்றியில் இருந்த ஆமிக்காறன் என் சைக்கிளுக்குக் கல் எறிந்து பழகினான். "நேரம்டா" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வெளியே அசட்டுச் சிரிபோடு நானும் கறுப்பியும் நடையைத் தொடர்ந்தோம். கடைத்தெருக்களில் உலாவிய பின்னர்
"அண்ணன், கொழும்பில் பதிவர்களைச் சந்திக்கிறீர்களா, எப்ப எண்டு சொல்லுங்கோ உங்களோட துணையா நானும் வாறன்" இது கறுப்பி விடைபெறும் போது.


கொழும்பில் நடந்த அமைதிச் சந்திப்பு

எனது தாயகப்பயணம் திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டுக் குறுகிய காலமாக இருந்ததால் கொழும்பில் இருக்கும் பதிவர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனால் கொழும்பு வந்ததும் இருக்கும் 2 நாட்களில் ஒரு சிலரையாவது சந்திப்போம் என்று எனது மின்னஞ்சல் தொடர்பில் உள்ள ஆதிரை, லோஷனுக்கு மெயில் போட்டேன். "எல்லோரையும் அழைத்து ஒரு சந்திப்பை நடத்துவோமா?" என்று லோஷன் மயிலை அனுப்பினார். "இந்த முறை வேண்டாம் அடுத்த முறை வைத்துக் கொள்வோமா" என்ற என் கோரிக்கையைச் செவிமடுத்து ஞாயிற்றுக் கிழமை காலிமுகத்திடலில் சந்திக்க ஏற்பாடானது. அங்கே தான் சனிபகவான் உள்ளூரச் சிரித்துக் கொண்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை எழில்வேந்தன் அண்ணாவைச் சந்தித்தேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு. அவரின் காரில் இருந்து கொண்டே கார் கொழும்பு வீதிகளை எல்லாம் அலைந்து திரிய நம் பேச்சுக்கச்சேரியை நடத்தினோம். எழில் அண்ணாவை வைத்துக் கொண்டு தான் என் வானொலி வாழ்க்கையில் பல காரியங்களைச் செய்து முடித்தேன். அந்த வகையில் இவரின் சந்திப்பு அவசியமானதாகப்பட்டது. இலக்கிய நிகழ்வுகள் குறித்தும் குறிப்பாக எமது ஈழத்தின் இலக்கிய ஆளுமை கவிஞர் நீலாவணனின் கவிதைகளை முழுமையானதொரு தொகுதியாகக் கொண்டு வருவதன் மூலம் பல்கலைக்கழக மட்டத்தில் எமது அடுத்த தலைமுறை தன் ஆராய்ச்சிப் பணிகள் செய்யவும் மற்றும் சாகாவரம் பெற்ற படைப்பாகப் பேணிப்பாதுகாக்க முடியும் என்ற அவர் கருத்தோடு முழுமையாக் உடன்பட்டுக் கொண்டேன். "நீலாவணன் அறக்கட்டளை" என்ற ஒன்றை நிறுவி நம் உறவுகள் சிறுகச் சிறுக உதவினாலே இதை வெகு விரைவாகச் செய்ய முடியும் என்று முடிவு கட்டினோம். இந்தப் பணி இப்போது நம் எல்லோர் கைகளிலும். கார் எம் சந்திப்பைச் சொகுசாக்கி முடிவில் பம்பலப்பிட்டியில் நிறுத்தியதது.

காலையிலேயே எழில் அண்ணா சொன்னவர் "கோல்பேசிலா பதிவர் சந்திப்பு, உருப்பட்ட மாதிரித்தான் ஞாயிற்றுக்கிழமை வேற" என்ற அவர் கூற்றைச் சனீஸ்வரன் மெய்ப்பித்தான்.
ஐந்து மணிக்கு காலிமுகத்திடலுக்கு வருவதாக இருந்த லோஷன் குழுவைக் காணவில்லை. கோல்பேசில் கூட்டம் கும்மியது. பிலாக்கொட்டைப் பொரியலை வாங்கிக் கொறித்துக் கொண்டே போறவாற சனத்தையும், கடலையும், பட்டத்தையும் படம் எடுத்துப் பொழுதைப் போக்கினேன்.
"பிரபா அண்ணா! பார்க்கிங் பிரச்சனையா இருக்கு கோல் றோட்டில் நிற்கிறம், வேறை எங்கையாவது போவமா" என்று லோஷன் கேட்க
"சரி அங்கேயே நில்லுங்கோ வாறன்"
வெள்ளை வானில் (!) லோஷனும், கூடவே கடலேறி ஆதிரையும், இன்னொரு சிரிப்புத் தம்பி அவர் தான் கன்கொன்.
"விகாரமாதேவி பூங்கா போவோமா" - ஆதிரை
இவர் என்ன தொட்டதுக்கெல்லாம் விகாரமாதேவி பூங்கா போவோமா எண்டு கேக்கிறார் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே
"ஐயோ இன்னொரு பார்க்கா, வேண்டாமய்யா வெள்ளவத்தையில் இருக்கும் கொசி றெஸ்டோரண்ட் போவோமா" - இது நான். (ஏண்டா யாழிலும் கொசி கொழும்பிலும் கொசியா எண்டு அலுக்காதேங்கோ)
லோஷனும் ஆமோதிக்க, வெள்ளவத்தை ஸ்ரேசன் ரோட் இல் இருக்கும் கொசிக்கு வான் பயணித்தது.
இந்த வேளை யூகேயில் இருந்து எமது வந்தியத்தேவன் லோஷனின் மொபைலுக்கு அழைத்தார். வந்தியுடன் முதன் முதலில் போனில் பேசுகிறேன், நிறையப் பேசினோம். எனது வலையுலக வாழ்வில் முதல் இலங்கை வாசகர், என் மாம்பழப்பதிவுக்காக கறுத்தக்கொழும்பான் மாம்பழத்தைத் தேடிப்பிடித்துப் படம் எடுத்து அனுப்பியவர். அன்றிலிருந்து இன்று வரை வந்தி மீதான என் நேசம் குறையவில்லை என்றாலும் சமீபத்தில் அவரது எந்திரன் படப்பாடல்கள் குறித்த விமர்சனம் அவரின் இலங்கை வாசக மட்டத்தில் சுனாமியாகத் தாக்கிக் கொண்டிருப்பதை அங்கிருக்கும் போது கேட்டு மனம் வெதும்பினேன் ;) நம்புங்க வந்தி நம்புங்க

சூப் குடித்துக் கொண்டே எம் பதிவர் சந்திப்பு நடந்தது.
லோஷன் வானொலிப் பணிக்கு வந்த காலம் தொட்டே அவரை நான் அறிந்து வைத்திருக்கிறேன். எம் ஊர்க்காரர் என்ற பெருமை வேறு. ஆனால் இது தான் முதல் சந்திப்பு. இவரின் பதிவுகள் போலவே ஆளும் நேரில் கல கல. கிறிக்கெற் இல்லாவிட்டால் ஆளின் மூச்சு நின்று விடும் என்பதை சந்திப்பில் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டேன்.

கடலேறி பதிவுக்குச் சொந்தக்காரர் ஆதிரை தம்பி, இவர் பதிவில் நிறையப் பேசினாலும் நேரே கூச்சமோ என்னவோ கேட்ட கேள்விக்கு மட்டும் இமிகிறேஷன் இன்ரவியூ மாதிரிப் பேசினார். பின்னர் சந்திப்பு சூடு பிடிக்கவோ அல்லது சூப் தந்த தெம்போ மெல்ல மெல்ல பேச்சுக்கச்சேரியில் முழுமையாக ஐக்கியமானார்.

கன்கொன் இவரை "ஆம்பிளை சினேகா" என்று சொல்லப் போறன். அதற்காக முதலில் மன்னிப்புக் கோருகிறேன். பின்னை என்ன, வந்த நேரம் தொடங்கி ஒரே புன்னகை புன்னகை புன்னகை புன்னகையைத் தவிர இவரிடம் ஒரு கேள்விக்குப் பதில் வாங்குவதற்குள் சீவன் போய்விடும் பாருங்கோ. தம்பி கன்கொன் அடுத்த முறை சந்திப்பிலாவது நீங்கள் நிறையக் கதைக்க வேணும் சொல்லிப்போட்டன்.

கறுப்பி இந்தச் சந்திப்புக்கு வரமுடியவில்லை என்று மனம் வருந்தி யாழில் இருந்து மெயில் அனுப்பினார்.

என் தாயகப்பயணம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அமைந்தது. இந்த இடைவெளியில் வலைப்பதிவு எழுதும் இலங்கைப் பதிவர்கள், மற்றும் என் பதிவுகளை வாசிக்கும் உறவுகள் (ரவீந்திரன் அண்ணர் உட்பட) என்று நிறையப் பேரைச் சம்பாதித்தாலும் இந்தப் பயணத்தில் இவர்கள் எல்லோரையும் சந்திக்காதது மிகவும் மனதுக்குக் கஷ்டமாக இருக்கின்றது. அதற்காக மிகவும் வருந்துகின்றேன்.
கண்டிப்பாக என் அடுத்த பயணத்தில் நாம் சந்திக்க வேண்டும் என் சகோதரங்களே

இன்னொரு யாழ்ப்பாணத்துப் புதினமும் இருக்கு , பிறகு சந்திக்கிறன்
Posted by கானா பிரபா at 8:39 PM 31 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, September 05, 2010

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் நாலு


நல்லூர்ப் பக்கம் உலாத்தல்

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கொடியேற்ற நாளில் கோயிலுக்குப் போய் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு தரிசித்தேன். அருச்சனை செய்ய இன்னும் 1 ரூபா தான். கோயில் சுற்றுப் புற வீதியில் செருப்பு, சப்பாத்தோடு திரிய முடியாது. பாதணிகள் பாதுகாப்பு றாக்கைகளை இரவோடிரவாக யாழ் மாநகர சபை செய்து வைத்திருக்கிறது. தென்னிலங்கையில் இருந்து கம்பாயம், சாரத்துடன் வரும் கூட்டம் நல்லூரில் எல்லாப் பக்கமும். களு தொதல் வியாபாரியும் வந்து விட்டார். சேலை, வேட்டி கட்டிக் கொண்டு தான் பக்தர்கள் வரவேண்டும் என்ற நல்லூர்க் கந்தன் ஆலய அறிவிப்பைக் கண்டித்து சில முற்போக்கு இணையத்தளங்கள் கிழித்துக் காயப்போட்டிருந்தன. ஆனால் கந்தனின் அந்த அறிவிப்பு கம்பாயத்தையும் சாரத்தையும் தடுக்கவே அன்றி வேறொன்றுமில்லை என்று கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.



நல்லூர் வீதியைச் சுற்றிக் கொண்டிருக்கையில் பிரான்சில் இருந்து வந்திருந்த T.R.T வானொலி இயக்குனர் குகநாதனை முன்னர் இணையத்தளங்களில் கண்ட புகைப்பட அடையாளத்தை வைத்து இனங்கண்டு பேச்சுக் கொடுத்தேன்.
"நீங்கள் தானே குகநாதன்?"
"ஓம் தம்பி, நீங்கள்...."
"நான் அவுஸ்திரேலியாவில் இருக்கிறனான் விடுமுறையில் வந்திருக்கிறேன்"
"என்னை எப்படித் தெரியும்"
"நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது ரஜினி பதிப்பகம் வெளியிட்ட நாளில் இருந்து தெரியும்"
ஆச்சரியத்தோடு பக்கத்தில் நின்ற நண்பரோடு அவர் பார்த்துக் கொண்டிருக்க,
"சரியண்ணை வாறன்" என்று விட்டு நடையைக் கட்டினேன்.


நல்லைக்கந்தன் ஆலயம் அருகே இருக்கும் வீரமாகாளி அம்மன்


வலம்புரி இருக்கு உதயன் இல்லை

சிட்னியில் இருக்கும் போது காலை ஏழுமணிக்கெல்லாம் மொபைல் போன் அலாரம் அலறியடித்துக் கொண்டு "எழும்பு மேனை எழும்பு மேனை" என்று தலையணிக்கு கீழிருந்து கத்தினாலும் அதை அழுத்தி விட்டு குறட்டைக்கச்சேரி நடத்துபவன் யாழ்ப்பாணம் போன நாள் தொடங்கி காலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி அள்ளிக் குளித்து விட்டு மடத்துவாசல் பிள்ளையாரடிக்குப் போய் முதல் பூசை ஆறரைக்குப் பார்த்து விடும் பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது. அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. வீட்டுக்குச் சமீபமாக உள்ள காளி கோயிலில் காலை ஐந்து மணிக்கெல்லாம் கே.பி.சுந்தராம்பாள் எழும்பி லவுட்ஸ்பீக்கரில் இருந்து கொண்டு "தக தகவென ஆடவா" என்று கத்திக் கொண்டிருந்தால் அவவுக்கு முந்தியே என்ரை அம்மா நாலரைக்கு எழும்பிக் குசினியில் பாத்திரங்களைத் துயில் எழுப்பும் சத்தமும் கேட்க ஆரம்பித்து விடும். அம்மா ஆசிரியையாக இருந்த காலத்தில் எல்லாம் காலையில் பிட்டு அவிச்சு, மத்தியானத்துக்கான சோறு, கறிகளையும் ஆக்கும் அந்தத் தொட்டில் பழக்கம் அவர் ஆசிரியைப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் தொடர்கிறது. அப்பாவும் ஒருபக்கத்தால் யோகர்சுவாமிகளின் நற்சிந்தனையோடு சுவாமி அறைக்குள் ஐக்கியமாகி விடுவார்.

காலைப்பூசை பார்த்துவிட்டு என் லுமாலாக் குதிரை வெங்காயச் சங்கப் பக்கமாக இருக்கும் கடைக்குப் போகும். சொன்னாப்போலை இந்த வெங்காயச் சங்கம் எண்ட பெயர் எப்படி வந்தது என்று நீங்கள் பேந்தப் பேந்த முழிக்கலாம். எங்கள் இணுவில் பகுதியில் விளையும் வெங்காயச் சாகுபடிகள் எல்லாம் மொத்தமாகக் கொண்டுவரப்பட்டு இங்கே உள்ள வெங்காயச் சங்கத்தில் தான் களஞ்சியப்படுத்தப்படும். சரி மீண்டும் விஷயத்துக்கு வாறன். அந்தக் கடைக்கு காலை ஆறேமுக்கால் வாக்கில்போய்
"அண்ணை! உதயன் பேப்பர் இருக்கா" என்று கேட்டால் "இல்லைத்தம்பி வலம்புரி தான் இருக்கு, உதயன் முடிஞ்சு போச்சு" என்று ட்ரேட் மார்க் பதில் வரும்.
வலம்புரியை வாங்கிக் கொண்டு , கூடவே மானிப்பாய் தினேஷ் பேக்கரியில் இருந்து இறக்குமதியாகும் கொம்பு பணிஸ் ஒன்றும், கிறீம் பணீஸ் ( இரண்டு பணிசுக்கு நடுவில் ஒருவிதக் களி போன்ற இனிப்புத் திடப்பொருள்) வாங்கிக் கொண்டு கிளம்புவேன். அந்தக் கடை மாத்திரமல்ல பக்கத்துக் கடைகளிலும் இதே புராணம் தான். என்னடா கொடுமையா இருக்கு இந்த அதிகாலை வேளையிலேயே உதயன் பேப்பர் தீர்ந்து போய்விடுகிறதா யாழ்ப்பாணச் சனம் நான்கு மணிக்கே கடைப்பக்கம் வருகுதோ அல்லது வலம்புரிக்கு இவர்கள் செய்யும் தார்மீக ஆதரவோ என்று நினைத்துக் கொள்வேன். உண்மையில் வலம்புரி பத்திரிகை யாழ்ப்பாண மக்களின் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதற்குரிய சமாச்சாரங்கள் அந்தப் பத்திரிகையில் நிறையவே இருப்பதைக் கண்டு கொண்டேன். சாம்பிளுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வந்த செய்தி இது,
"சனீஸ்வரன் தலைமையில் இலங்கை வந்த தமிழக எம்.பிக்கள் குழு – யாழ்.வலம்புரி நாளிதழ்"
பொருள் விளக்கம் : சனீஸ்வரன் = டி.ஆர்.பாலு



ஈ ஓட்டும் இந்தியன் வங்கிகள்

சொந்த நாட்டிலேயே ஈ ஓட்டும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் முந்திரிக் கொட்டைக்கணக்காய் யாழ்ப்பாணத்தில் கிளை பரப்பி யாழ்ப்பாணத்து ஈ ஓட்டுவதைப் பற்றிச் சொல்லி நண்பர் ஒருவர் விசனப்பட்டார். இந்தியாவின் ஆசீர்வாதத்துடன் வன்னியில் கடந்த வருஷம் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை யாழ்ப்பாணத்துச் சனம் இதயத்துக்கு நெருக்கமாக வைத்துக்கொண்டு இன்னும் இருக்கிறார்கள். இதனால் தான் மேற்கண்ட விமர்சனம் போன்ற விசனங்களைப் பல சந்தர்ப்பங்களில் அங்கிருக்கும் போது கண்டேன்.
தேடி வந்து வாள் கொடுத்துச் சாத்வீகத்தை நிலை நாட்டியதன் பலனாக வன்னியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட சமூகம் ஒன்று அநாதரவாக யாழ் வீதிகளில் அலைந்து திரிகையில் யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைத்தும் , பலாலி சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் முழுமையான பங்களிப்பை வழங்கத் தயாராக இருக்கும் இந்தியாவை ரோம் நகரத்து நீரோ மன்னன் ரேஞ்சில் யாழ்ப்பாணப் பொது ஜனம் ஒப்பிட்டு மன நிறைவு கொள்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, கொழும்பில் கூடக் கண்டறியாத இன்சூரன்ஸ் கம்பனிகள், வங்கிகள் என்று ஒருபக்கத்தால் முளைத்திருக்கின்றன. ஹற்றன் நஷனல் வங்கி ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்திருப்பதைக் காண முடிகிறது. இலங்கை வங்கி ஒரு பிரயாண முகவர் நிலையத்தையும் ஆரம்பித்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இன்னும் 2 நாள் நிற்போமே என்ற ஆசையில் என் விமானப்பயணத்தைத் தள்ளிப் போடுவதற்காக இலங்கை வங்கியின் பிரயாண முகவர் நிலையத்தின் கதவைத் தட்டினேன். 500 ரூபா சேவைக் கட்டணத்தோடு 2 நிமிடத்தில் காரியத்தை முடித்து என்னை வீட்டுக்கு அனுப்பிய துரித வேகம் கண்டு பிரமித்தேன்.

15 வருசத்துக்குப் பின் என் யாழ் மண்ணில் உறவினரின் வீட்டுக் கல்யாணத்தை கண்டு சாப்பாடும் கழித்தேன் ;)
Posted by கானா பிரபா at 7:31 PM 24 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ▼  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ▼  September 2010 (4)
      • என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்
      • யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை
      • இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு
      • யாழ்ப்பாணத்துப் புதினங்கள் - கோள் மூட்டல் நாலு
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes