![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/1.0.jpg)
இப்பதிவில் நான் சொல்லப்போகும் அனைத்து நிகழ்வுகளும் கலப்படமில்லாத உண்மை.
கடந்த மாதம் பெங்களூரிற்கு வேலைத்திட்டம் காரணமாகச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். இப்படியான கடந்த என் பெங்களூர்ப் பயணங்களிலும் வார இறுதிநாட்களைச் சென்னையில் தான் செலவிட்டேன். நமது சொந்த ஊருக்குப் போன அனுபவம் கிடைக்கும் என்பது முதற் காரணம்.
அது போலவே இம்முறையும் வார இறுதி நாட்களைச் சென்னையில் கழிப்பதாக உத்தேசித்துக்கொண்டேன். என்னோடு வேலைபார்க்கும் இரு சீனப்பெண்களும் சென்னையைப் பார்ப்பதற்காக என்னோடு ஊர்சுற்ற வந்தார்கள்.
சனிக்கிழமையன்று நாங்கள் ஒழுங்கு செய்த வாடகைக்கார் மூலம் மகாபலிபுரம் செல்வதாக ஏற்பாடு. காலையில் சீக்கிரமாகவே கிளம்பி எங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு காரில் பயணித்தோம். வாடகைக்கார் சாரதி மது மிகவும் நட்புடன் தன் வாழ்வியல் அனுபவங்களையும் நடப்பு தேர்தல் நிலவரங்களையும் பகிர்ந்துகொண்டே வண்டியை ஓட்டினார்.
"சார் மகாபலிபுரத்தை நாம சீக்கிரமாவே போயிடலாம், நிறைய நேரமிருக்கு, உங்களுக்கு ஆட்சேபணை இல்லேண்ணா நாம சிதம்பரம் போய் வரலாம்" இப்படியாகப் பயண இடைவழியில் மது கேட்டார்.
எனக்கும் அது சரியாகப்பட்டது. சீனத்தோழிகளிடம் சிதம்பரம் நடராஜர் கோயில் பற்றி நான் விளக்கியபோது சந்தோஷத்துடன் இதற்கு ஆமோதித்தார்கள். எமது பயணம் சிதம்பரம் நோக்கிப்போனது.
"மதியம் நடை சாத்துறத்துக்கு முன்னாலயே போயிடலாம் சார்" என்று சொல்லிக்கொண்டே காரின் வேகத்தைக் கூட்டினார் மது.
ஒருவழியாகச் சிதம்பரம் வந்து சேர்ந்தோம். கார்க் கதவைத்திறக்கும் போது தன் கைக்குழந்தையோடு "ஐயா...சாமீ! பிச்சை போடுங்கையா" என்ற ஈனசுரதுடன் ஒரு இளம் பிச்சைக்காரி.
"வரும்போது பார்க்கலாம்" என்று நான் சொல்லிக்கொண்டே நடக்கும் போது ஒருவர் பலராகி எம் நடைப் பயணத்தின் பின்னால் யாசித்துக்கொண்டே வந்தார்கள்.
பாதணிகளை ஒரு கடையில் வைத்துவிட்டுத் திரும்பும் போது மது சொன்னார், " ஜாக்கிரதை சார், கண்டபடி யார்கிட்டையும் பேச்சுக்கொடுக்காதீங்க".
நானும் மற்றய இரண்டு சீன நண்பிகளும் கோயிலை நோக்கி நகரும்போது
"சார்..சார்.. நான் கைடு சார்..." என்றவாறே நைந்துபோன வேஷ்டியும் புழுதி சாப்பிட்ட வெள்ளைச்சட்டையுமாக ஒரு முதியவர்.
"வேணாம் சார், அதெல்லாம் நாம பாத்துக்கிறோம்" இது நான்.
அவரோ விடுவதாக இல்லை, தனக்குத் தெரிந்த ஆங்கில மொழியில் கோயில் வரலாற்றைச் சொல்லிக்கொண்டே வந்தார். எமது கவனம் அவர்பால் இல்லை என்று தெரிந்ததும் தன் வழியே திரும்பிச்சென்றார். இவையெல்லாம் நான் எதிர்பார்த்தவை தான், எனவே எனக்கு அதிகம் அவை அசெளகரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் கோயிலுக்குள் நுழைந்தபோது நடந்தது தான் இன்னும் என்னால் மறக்கமுடியாத சினத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக மாறிவிட்டது.
கோயிற்பிரகாரங்களைச் சுற்றி வரும் போது சீனப்பெண்களுக்கு ஒவ்வொன்றாக விளக்கியவாறே தரிசனை செய்துகொண்டு வந்தேன். ஒரு பிரகாரத்திலும் இப்படி நாம் வரும் போது திடீரென ஒரு குரல், "
Madam! You have to sign this visitor book " இப்படி ஒரு கட்டளை ஒரு அர்ச்சகரிடமிருந்து வந்தது. இவர்களை மட்டும் கேட்பதன் மர்மம் என்ன என்று மனதுக்குள் நினைத்து, சீன நண்பிகளைத் தடுத்துவிட்டு நான் என்ன அந்தப் பதிவேட்டைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் சடுதியாகக் கண்டுவிட்டேன்.
" நாங்க தரிசனம் முடிச்சாப்புறம், வந்து பதிவைப் போட்டுர்ரோம்" இப்படி நான் அந்த அர்ச்சகருக்கு பதிலளிக்கும் போது
" அதெல்லாம் முடியாது, அவுங்களை இதில எழுதச்சொல்லுங்கோ" என்ற அந்தக் குரல் வந்த திக்கைப் பார்த்தேன். இளம் அர்ச்சகர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்த திக்கில் இருந்து வந்த ஒரு அர்ச்சகரின் குரல் தான் அது.
"இல்லீங்க, நாங்க திரும்ப வந்துடறோம்" என்று சொல்லி விட்டு என்னோடு வந்த சீனப் பெண்களிடம் ஒன்றும் செய்யாமல் வாருங்கள் என்று இரகசியமாகக் கட்டளையிட்டுவிட்டுத் திரும்பும் போது
அதே இளம் அர்ச்சகர் எம்முன்னால்.
"இப்ப நீங்க இதில எழுதாமப்போனாப் பெரிய பிரச்சனையாயிடும்" என்றவாறே தன் வேட்டியை சற்றுமேலாக வரித்துக்கட்டிகொண்டே எம்மை நோக்கி வந்தார். நான் நிற்பது சரித்திரப் பிரசித்திபெற்ற கோயிலா என்று ஒருகணம் திகைத்தேன், ஆனாலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டே
" எதுக்கு இப்படி டார்ச்சர் பண்றீங்க" என்று என்குரலில் கடுமையை ஏற்றிக்கொண்டேன்.
" இது நம்ம ஆலயத்தோட வழக்கம், ஆலய முகப்பில கூட எழுதியிருக்கு" இது அந்த ஐயர்.
நான்:சரி வாங்க பார்க்கலாம், எங்க எழுதியிருக்குன்னு
ஐயர்:அதெல்லாம் காட்டமுடியாது, இவங்க இப்ப sign பண்ணீட்டுத்தான் போகணும். "
நான்: ரொம்ப பிரச்சனை பண்ணாதீங்க அப்புறம் போலீஸ் போகவேண்டியிருக்கும். நாந்தானே சொல்றேன், வரும் போது பார்த்துக்கலாம்னு.
பக்தர்கள் எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் தம் தொழுகையைத் தொடர்ந்தனர்.
அந்த இளம் ஐயர் கொஞ்சம் பின்வாங்கி " ஆலயதர்சனம் முடிஞ்சதும் இங்க வந்துடணும்" என்று உறுமிவிட்டுத் தன் சகாக்களுடன் போய் இருந்தார். அவர்கள் ஏதோ பேசிச்சிரிப்பது கேட்டது.
என்னுடன் வந்த சீனப் பெண்களுக்கு நிலைமையின் விபரீதம் விளங்கியதும் முகம் வெளிறிவிட்டது.
என்னோடு வந்த சீனபெண்களில் ஒருத்தி என்கைகளை இறுகப்பற்றி "let's go Praba" என்றாள். வேண்டாவெறுப்பாக நான் அவர்களை அழைத்துக்கொண்டு பிரகாரச்சுற்றலில் மீண்டும் இறங்கியபோது கையை ஆட்டிக்கொண்டே ஒரு முதியவர் வந்தார். "அவுங்க அப்பிடித் தான், நீங்க ஓண்ணும் செய்யாதீங்க" என்று என்னருகில் வந்து இரகசியமாகக் கிசுகிசுத்தார்.
வரும் பிரகாரங்கள் ஒவ்வொன்றும் அர்ச்சகர்கள், அவர்கள் கண்களுக்கு உள்ளூர்வாசிகளைவிட எம்மைத் தான் தெரிந்தது போலும், "வாங்க சார், வந்து பிரசாதம் வாங்கிக்கோங்க" என்று எம்மை இலக்கு வைத்தார்கள்.ஆலயதரிசனத்தில் மனம் ஒன்றவில்லை.
என்னதான் நான் அந்த இளம் ஐயரோடு முரண்டு பிடித்தாலும் அந்நியப் பிரதேசத்தில் இருக்கிறோமே என்ற பய உணர்வும் வந்தது.
இருள்கவ்விய உட்பிரகாரத்தில் சுற்றிவந்த பக்தர்களைத் திரும்பத்திரும்பப் பயத்துடன் பார்த்தவாறே
நாங்கள் எவ்வளவு விரைவாகக் கடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நடையின் வேகத்தைக் கூட்டி ஆலய முகப்புப் பகுதிக்கு வந்தோம். "சார், நீங்க பணம் கட்டீட்டுப் போங்க நாம பிரசாதத்தை மெயில்ல அனுப்பிச்சுர்ரோம்" மூலஸ்தானத்திலிருந்து வெளிப்பட்ட இன்னொரு ஐயரின் குரல் அது. "இல்லீங்க, அப்புறம் வர்ரோம்" என்றவாறே சீன நண்பிகளை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியில் வந்தேன்.
வெளியில் எங்களுக்காகக் காத்திருப்பதுபோல் நின்ற ஒரு தம்பதி தங்களைத் தென்னாபிரிக்கா வாழ் இந்திய வம்சாவளி என்றும், தங்களையும் இப்படி எமக்குச்சொன்னதுபோல் செய்யச் சொன்னதாகவும் பிறகு ஆளுக்கு 100 அமெரிக்கன் டொலர் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் அந்தப் பெண் கவலையுடனும் பயத்துடனும் கூறினார்.
நான் சடுதியாக அந்தப் பதிவேட்டைப் பார்த்தபோது அதில் ஆட்களின் பெயர்களும் அவர்கள் தம்கைப்பட எழுதிய பணத்தொகையும் இருந்ததை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தினேன்.
"என்ன சார், தெப்பக்குளம் பார்த்தீங்களா? எல்லாப் பிரகாரங்களும் போனீங்களா?" வாசலில் நின்ற மது கேட்டார்.
" அடப்போங்க சார்" என்றவாறே சினத்தோடு நடந்தவற்றைக்கூறினேன்.
"இப்பெல்லாம், தனியாளுங்க தான் ஆலயத்தோட நிர்வாகம், எல்லாமே தலைகீழ்" என்று செருப்புக் காவல் வைத்த கடைக்காரர் சொன்னர்.
எம்மை மனக்கிலேசத்திற்கு உட்படுத்திய அந்த இளம் அந்தணருக்கு இந்தத்திருக்குறள் சமர்ப்பணம்.
"அந்தணர் அன்போர் அறவோர் மற்றெவுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுகலான்"(எல்லா உயிரினங்கள் மேல் தயை உள்ளம், தர்மத்திலே ஈடுபாடு, விரதங்களிலே பற்று இவைகளையெல்லம் கொண்ட துறவிகளே அந்தணர்கள் எனச்சொல்லப்படுகிறார்கள்.)
தம்வாழ்க்கைச் செலவினங்களுக்காக ஆலயத்தைப் பராமரிப்பவர்கள் கோயிலை வைத்து வருமானம் பார்ப்பதில் தப்பில்லை அதற்காக இப்படியான மிரட்டல் வழிகள் ஒருபுனிதமான ஆலயத்தின் சிறப்பையும் கெடுத்து, வழிபடவருவோரிற்கும் மனச்சுமையை ஏற்படுத்தும்.
"சோழ பாண்டிய மன்னர்களால் கட்டிக்காப்பற்றப்பட்ட சிதம்பரம் ஆடல்தெய்வம் நடராஜரின் சிறப்பு மிகு ஆலயம், பொற்கூரை வேயப்பட்ட கர்ப்பக்கிருகமும் தெப்பக்குளமும் அணி செய்யச் சைவமத்தின் நிலைக்களனாக விளங்குகின்றது"
"நந்தனாருக்கு சுவாமி தரினம் தரத் தில்லை நடராஜப்பெருமானே "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்று நந்திக்குக் கட்டளையிட்டு விலகச்செய்ததும், தில்லை நடராஜரின் ஆனந்தத் தாண்டவத் தரிசனமும், தில்லை மூவாயிரவர் என்று ஆண்டவனைத் தோத்தரித்த அந்தணர்கள் என இதன் வரலாற்றுப்பெருமையை இன்னும் நீட்டும்.
பாலா மாஸ்டர் இந்துநாகரிகம் வகுப்பில் படிப்பிக்கும் போது கற்பனையுலகில் அதைஉருவகித்து வியந்தது ஒருகாலம்,
கண்முன்னே எம்மதத்தவரே அதைச் சீர்க்கெடுப்பது நிகழ்காலம்.
வெளியில் வந்தபோது நின்ற பிச்சைக்கரர்கள் கண்ணியமானவர்களாத் தெரிந்தார்கள்.
மனநிறைவு ஏற்படாத என் சிதம்பர ஆலயதரிசனத்தைத் தாயகம் சென்று ஈடுகட்டுவது என்று நினைத்துக்கொண்டேன். திருமூலரால் சிவபூமி என்றி சிறப்பிக்கப்பட்டது நம் ஈழவளநாடு.
வடக்கே திருக்கேதீஸ்வரம், வடமேற்கே முன்னேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம்,தெற்கே பொன்னம்பலவாணேஸ்வரம், தென்மேற்கே காலிநகர்ச்சிவன்கோவில் என்று ஐந்து திக்குகளிலும் சிவ ஆலயங்களால் சூழப்பட்டது இலங்கைத்தீவு. சிறப்பாக "ஈழத்துச்சிதம்பரம்" என்று சிறப்பிக்கப்படுவது காரைநகர்ச்சிவன்கோவில்.
இம்முறை யாழ்ப்பாணம் சென்றபோது காரைநகர்ச்சிவன்கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைத்தும் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/2.jpg)
கொழும்பு வந்தபோது பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு எப்படியாவது போவது என்று தீர்மானித்துக்கொண்டேன். வெள்ளவத்தையில் வைத்துப் புறக்கோட்டைக்குப் போகும் பஸ்ஸில் தாவிப் புறக்கோட்டை வந்தேன். ஆட்டோ மூலம் கோயிலுக்குப் போகலாம் என்று நினைத்து ஒரு ஆட்டோவை அழைத்தேன். சாரதி ஒரு சிங்களவன் என்பதால் நான் கேட்ட "பொன்னம்பலவாணேஸ்வரம்" தெரியாது திருகத் திருக முழித்தான்.
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/pon%20003.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/3.1.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/2a.jpg)
சட்டென்று யோசனை வந்து "கொட்டகேனா சிவன் கோயில்" என்றதும் தலையாட்டிக்கொண்டே போகலாம் என்றான். நான் சொன்ன கொட்டகேனா சிவன்கோயில் பொன்னம்பலவாணேச்வரர் கோயிலாக இருக்கக்கடவது என்று பிரார்த்தித்துக்கொண்டேன். நல்லவேளை ஓட்டோவும் பொன்னம்பலவாணேஸ்வரத்தில் தான் வந்து நின்றது. எனக்கு நினைவு தெரியாத நாளில் சிறுவயதில் நான் வந்த கோயில்.
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/pon%20006.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/1a.1.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/pon%20006.0.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/5.0.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/6.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/4.0.jpg)
சிற்பங்களில் கை போடாதீர் என்றும் அறிவுறுத்தப்படுகின்றன. எந்தவித இடையூறும் இன்றி மனச்சாந்தியோடு எம்பெருமான் சன்னிதியை வலம் வந்தேன். மனதில் பாரம் சற்றுக்குறைந்தது போலத்தோன்றியது எனக்கு.
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/9.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/10.2.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/8.0.jpg)
![](http://photos1.blogger.com/blogger/2746/1940/320/7.1.jpg)
(முதற்படம் தவிர்ந்த அனைத்தும் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் எடுக்கப்பட்டவை)
60 comments:
இது போலத்தான் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் அர்ச்சகர்கள் தொல்லை தாங்க முடிவதில்லை. கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையில் அவர்கள் யார்?
உண்மையில் நான் சாமி கும்பிடச் செல்லவில்லை. அலைகள் அதிகம் வரும் கடலில் குளிப்பது ஒரு ஆனந்தம். என் எண்ணம் அதுதான். அது சிறப்பாக நிறைவேறியதில் மகிழ்ச்சி.
நந்தனாரை உயிருடன் கொளுத்திய பின்பு அதை திரித்து எழுதியவர்களின் வம்சாவளிகள் என்றால் சும்மாவா.
பிரபா!
வந்தாயிற்றா? சிதம்பரம் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தலம். அங்கே அர்ச்சகர்களின் அடாவடித்தனம் சகிக்க முடியாதது. மூன்று வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் இதே அனுபவம் எனக்கும் கிடைத்தது. திருமுறைகளைத் தில்லைவாழ் அந்தணர்கள் பூட்டிவைத்தார்கள் என வரலாறு கூறும். அப்போது எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால் நேரில் பார்த்தபோது, வரலாறு பொய்யல்ல என்பது புலனாகியது. நான்போன கோவில்களில் நிம்மதியாக தரிசனம் செய்யமுடியாத ஒரு தலமாக சிதம்பரம் அமைந்ததது ஒரு கசப்பான உண்மை.
தமிழ் நாட்டில் அங்கு மட்டுமல்ல பெரும்பாலான கோவில்களில் இப்படித்தான் நடக்கிறது. சுவாமி தரிசனம் செய்கிறோமோ இல்லையோ அதற்கு முன் பணம் பறிப்பதிலேயேதான் குறியாக இருக்கிறார்கள்
நடையுடை பாவனைகளில்(இந்தியராகவே இருந்தாலும்) வெளி நாட்டுக்காரர்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களிடம் மட்டும்தான்
இப்படி நடந்து கொள்கிறார்கள். இங்குள்ள மலேசியத் தமிழர்கள் நிறையப் பேர் என்னிடம் கூறியிருக்கிறார்கள் 'கோவிலுக்கு போனால் பணம் பணம்னு அலையிராங்க ஏன் இப்படி இருக்காங்க என்று கேட்கும் போது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்.இதை யாரிடம் போய் முறையிடுவது?
\\ மனநிறைவு ஏற்படாத என் சிதம்பர ஆலயதரிசனத்தைத் தாயகம் சென்று ஈடுகட்டுவது என்று நினைத்துக்கொண்டேன். திருமூலரால் சிவபூமி என்றி சிறப்பிக்கப்பட்டது நம் ஈழவளநாடு.
வடக்கே திருக்கேதீஸ்வரம், வடமேற்கே முன்னேஸ்வரம், கிழக்கே திருக்கோணேஸ்வரம்,தெற்கே பொன்னம்பலவாணேஸ்வரம், தென்மேற்கே காலிநகர்ச்சிவன்கோவில் ஐந்து திக்குகளிலும் சிவ ஆலயங்களால் சூழப்பட்டது இலங்கைத்தீவு. சிறப்பாக "ஈழத்துச்சிதம்பரம்" என்று சிறப்பிக்கப்படுவது காரைநகர்ச்சிவன்கோவில். \\
படிக்கும் போது இதற்காகவே ஒருமுறை எங்களின் முன்னோர்கள் கொண்டு வித்த அந்த கொழும்பு
விற்கு சென்று வர ஆவல் உதிக்கிறது!
நல்லதொரு பதிவை இட்டிருக்கிறீர்கள்
அன்பு
மீனா.
சிதம்பரம், திருச்செந்தூரில் மட்டுமல்ல. எல்லா கோவில்களிலும் இதே பணம் புடுங்கி நிலைதான் உள்ளது.
காசு கேட்பது, பெண்களிடம் சில்மிஷம் செய்வது, போதை வஸ்துகள் , சாராயம், எல்லாமே அத்துபடி.
1950 களில் பராசக்தியின் வசனம்: " கோவில் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது."
இவங்கல்லாம் ஒசியிலேயே சுகம் கண்டவங்க. திருந்த மாட்டாங்க.
பின்னூட்டமிட்ட மகேஸ், அநாமோதய நண்பர், மலைநாடான், மீனா, பால்ராஜ்
உஙளுக்கு என் நன்றிகள். எமது சமயத்தவர்கள் என்றாலும் இப்படியான அடாவடித்தனக்களைச் சகிக்கமுடியாத காரணத்தால் தான் என் அனுபவத்தைப் பகிர்ந்தேன். நீங்கள் குறிப்பிடுவது போலப் பல புண்ணியஸ்தலங்களில் இப்படிப் பல அனுபவங்களைச் சென்றுபார்த்தவர்கள் சொல்லிவருகிறார்கள்.
மீனா
நீங்கள் நிச்சயம் ஈழம் சென்றுவரவேண்டும், மேலதிக உதவி தேவைப்பட்டால் தனிமடல் இடுங்கள்.
உங்கள் பதிவைப் பார்த்தவும் எனக்கு போலி டோண்டு மீது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.
Anonymous has left a new comment
"உங்கள் பதிவைப் பார்த்தவும் எனக்கு போலி டோண்டு மீது தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. "
:-)
கோயில் எவ்வளவுக்குப் பிரபலமோ அவ்வளவுக்குப் பிடுங்கல்கள்.
எனக்கும் ச்சீ என்னு போச்சு.
That is why Paavendhar Bharathidasan said," Illai Enban Naanada,Thillai Sendru Thanada". Though I do not agree with him we have to accept that the torture given by the Dikshidars might have made him to say so.
துளசியம்மா!
உங்களுக்குமா? :-)
இப்படிப் பணம் புடுங்கிகளுக்கெல்லாம் போலி டோன்டு சார்தான் லாயக்கு ( எதுக்கும் மரியாதையா சொல்லில் வைக்கிறது நல்லது).
அநாமோதய நண்பரே!
நீங்கள் குறிப்பிட்ட பாரதிதாசனின் எடுகோளுடன் நானும் உடன்படுகின்றேன்.
தமிழ்நாட்டில் உங்களுக்கு நடந்த அவமரியாதைக்கு தமிழ்நாட்டு குடிமகன் என்கிற முறையில் மன்னிப்புகோருகிறேன். இதை பொருளாதார ரீதியில் அனுகுவதா அல்லது ஒரு குறிப்பிட்ட சாராரே தமிழ்நாட்டின் கோவில்களை ஆக்கிரமித்துள்ள நிலையைப்பற்றி ஆராய்வதா என்று தெரியவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டின் எந்த அரசும் இத்தகைய நிலை குறித்து கண்டுகொண்டதாக தெரியவில்லை,அதே நேரத்தில தனியாரால் நடத்தப்படும் மேல்மருவத்தூர் கோவில் சமத்துவத்தோடு விளங்குவதையும் நாம் தவிர்க்க இயலவில்லை.
விளிம்புகளின் ஆண்டவனாய் திகழ்ந்த பழனி முருகன் கோவிலிலும் இவர்கள் உட்புகுந்து கொண்டு அதை மேட்டுக்குடி தெய்வமாக்கியதை விமர்சிக்கும் தோழர்களின் கருத்தையும் நாம் விலக்கமுடியாது.இது குறித்து "தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை - நுங்கம்பாக்கம்,சென்னை" என்கிற முகவரிக்கு நீங்கள் முழுதான ஒரு முறைப்பாடு, அஞ்சலில் அனுப்பினால் இனி இது போன்ற தவறுகள் நிகழாவன்னம் தடுக்க வாய்ப்புள்ளது
வணக்கம் தம்பியுடையான்
மன்னிப்பு போன்ற பெரியவார்த்தைகளைத் தயவுசெய்து உபயோகிக்காதீர்கள். அதோடு பிரதேசரீதியான காழ்ப்புணர்ச்சியிலும் இப்பதிவை நான் கொண்டு வரவில்லை. ஒரு இந்து மதத்தினன் என்ற வகையில் என்னுள் எழுந்த ஆதங்கமே இப்பதிவு.
தங்களின் ஆலோசனையை நிச்சயம் பின்பற்றுகின்றேன், எப்படியான பதில் வருகின்றது என்று பார்ப்போம்.
i had the same experience in tanjore. bakthiyai vida erichal dhan adhigam vandhadhu.
ஆதிரை!
தங்கள் வருகைக்கு நன்றி
The same practice by the priests in India have been spread to US too. Priests are demanding money from everybody (including the students who are studying in scholarships) in hindu temples in US.
உந்த சிதம்பரம்....கோயிலுக்கும்.....யாழ்ப்பாணத்தருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குது...... ..இந்த கோயிலுக்கு காணி எழுதிப்போட்டு செத்த கன பேர் இருக்கினம்..... இப்ப இருக்கிற நெல்லியடி பஸ் ஸ்ராண்ட் இருக்கிற காணியும் முந்தி யாரோ சிதம்பரத்துக்கு எழுதினதாக கேள்வி......இன்றைக்கும்...யாழ்ப்பாணத்திரின் மடமொன்று நல்ல நிதி வசதியுடன் இன்றைக்கும் யாழ்ப்பாணத்தரால் சிதம்பரத்தில் பராமரிக்கபடுகிறது...... என்ரை பாட்டி ஒன்றும் சாக முந்தி சிதம்பரம் போகணோம்...அல்லாட்டி முத்தி கிடைக்காது என்று சொல்லி க்கொண்டிருந்தது .....ஆனால் பார்க்காமால் மண்டையை போட்டுது
கானபிரபா சொல்ற கதையை பார்த்தால் .............கிழவி அதிர்ஸ்டக்கட்டை தான்......நன்றிகள் நல்ல பதிவுக்கு
வணக்கம் தெய்வா
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
வணக்கம் சின்னக்குட்டி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
சிதம்பரம் கோயிலுக்குக் ஒரு உருவச்சிலை ஒன்றை சேர்.பொன்.இராமநாதன் கொடுக்கமுனைந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவமே அவர் பின்னர் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலின் மீள் நிர்மாணத்தில் முனைப்பாக இருந்ததன் காரணம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.
முழு விபரங்களும் எனக்குத்தெரியவில்லை.
70களில் சிதம்பரம் போயிருந்தேன். அன்றும் இதே நிலைமை தான் இருந்தது.
உங்கள் தரிசனம் "சிதம்பரம் போகாமல் இருப்பேனோ சென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ" என்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது.
தங்கள் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் சுற்றுலா அருமை. ஒருக்கா நானே சுற்றி வந்தது போலிருந்தது. அரோகரா.
//ஆலயம் அன்று போல் இன்றும் தன்சிறப்புக்கெடாது பராமரிக்கப்படுகின்றது//
கோயில்களைப் பராமரிப்பதற்கு ஈழத்தவர்களுக்கு நிகர் வேறு யாருமில்லை எனத் துணிந்து சொல்லலாம். உங்கள் பதிவுக்கு நன்றி. மேலும் உங்கள் அனுபவங்களை பதியுங்கள்.
கோயில்களுக்கு செல்வதே
மனதில் உள்ள பாரங்களை
ஆண்டவனிடம் இறக்கி வைத்து விட்டு வரவேண்டுமென்ற எண்ணத்தில்தான்...........
ஆனால்
காசேதான் கடவுளடா என
பலர் கோயில்களை நிர்வகிப்பதால்
போனதை விட மனப்பாரத்தோடு
பக்தர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது..........
இதில்
திருப்பதி வெங்கடாசலபதி
கோயில் பரவாயில்லை........
நாமாக ஏதாவது கொடுத்தாலன்றி
யாரும் பறிப்பதில்லை என்றே கருதுகிறேன்.
நான் இந்தியா போனால்
மன அமைதிக்காக
இரு நாட்கள் திருப்பதியில் தங்குவேன்........
ஒரு நாள் தரிசனம்
அடுத்த நாளில் திருப்பதியை சுற்றியிருக்கும்
கோயில்களை ஒரு வாகனத்தை
வாடைக்கு அமர்த்திக் கொண்டு
தரிசிக்கச் செல்வேன்....
கொஞ்சம் ரம்யமாகவும்
மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கும்.
500 ரூபாய்வரைதான் அரை நாள் வாகனத்துக்கான வாடகை.
அஞ்ச வேண்டியதுமில்லை. இவர்கள் தெலுங்காக இருப்பினும் தமிழ் பேசுவார்கள்.
தெலுங்கு தேசத்தில் நக்சலைட்டுகளின் பிரச்சனைகள் இருப்பதால்
கீழ் திருப்பதியில் இருந்து
மேல் திருப்பதிக்கு போகும் போதே
பாதுகாப்பு படை போவோரை சோதனையிடுகிறது.
அதில் கூட பெரிதாக கடுமையை பார்க்க முடியாது.
மற்ற இடங்களை விட
இங்கு நிர்வாகம் மட்டுமல்ல
பாதுகாப்பு - சுத்தம் - உணவு .........
இப்படி எத்தனையோ சிறப்புகளைக் காணலாம்.
தெலுங்கு தேசம் நன்றாகவே கோயிலை பராமரிக்கிறது.
திருப்பதி பற்றி அறிந்து கொள்ள:-
http://www.tirumala.org/
கானப்பிரபாவின் ஆக்கத்துக்கு நன்றி.....
அன்போடு
அஜீவன்
சுவிஸ்
வணக்கம் சிறீ அண்ணா
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள், உங்களை மனதில் வைத்துத்தான் சேர்.பொன்.இராமநாதன் அவர்களின் புகைப்படத்தையும் படம் பிடித்தேன்.
வணக்கம் அஜீவன்
தங்கள் வருகையோடு சுவையான திருப்பதி அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்.
இந்தப் பதிவைப் போட்ட புண்ணியத்தில் 15 வருடங்களுக்குப் முன் பிரிந்த பால்யகால நண்பரின் தொடர்பு கிடைத்திருக்கிருக்கிறது.
அவர் இந்தத் தலைப்பை சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி இலிருந்து மாற்றி "சீனப்பெண்களும் ஒரு ஈனப்பையனும்" என்று கூட மாற்றலாம் என்று பரிந்துரைத்தார். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்:-)
வெளி நாரு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான குணம் இந்தியாவில் நிலவும் சாதாரண நிகழ்வுகளையும் பூதாகரமாக பெரிது படுத்தி கேட்போரை உச் கொட்ட வைப்பது.சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிகழ்ந்ததும் அப்படியே....இத்தனை தூரம் வலைபதிவில் எழுதுவதற்கு அங்கு உள்ள கோவில் நிர்வாக அதிகரியிடம் ஒரு புகார் தந்து அது பலன் அளிக்கிறதா இல்லையா என்று பார்த்து இருக்கலாம்.இலங்கைல் நிலவும் சூழல்கு இந்தியா எத்தணையோ பரவயிலை...ஆனால் இங்கு பயந்ததாக சொல்லி உள்ளார்.ஒரு இலங்கை தமிழர் அதனை சொல்வதை கேட்டால் சிரிப்பு தான் வருகிரது.
வணக்கம் வவ்வால்
இதை எழுதி உச் கொட்ட வைப்பதால் எந்தவித ஆதாயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாறாக இனிமேல் இப்படியான ஸ்தலங்களுக்குச் செல்பவர்களுக்கு ஒரு முன் எச்சரிக்கைக்காகத்தான் எழுதப்ப்பட்டது. இல்லாவிட்டால் அந்தத் தென் ஆபிரிக்கத்தம்பதிக்கு ஏற்பட்ட கதி தான் ஏற்படும்.
அந்த அர்ச்சகர்கள் நடந்து கொண்ட முறையும் பிரமாண்டமான ஆலயச் சூழலும் பயத்தை ஏற்படுத்தியது முற்றிலும் உண்மை இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்.
அன்றைய சூழலில் கோயில் அதிகாரியைத் தேடிப்பிடித்துப் புகார் கொடுக்கும் மன நிலையில் நாம் இல்லை. (அது எவ்வளவு தூரம் பயனளிக்கின்றது என்பது வேறு விடயம்)
இலங்கைத் தமிழர் மட்டுமல்ல ஒட்டும்மொத்தத் தமிழருக்கும் கூட இவ்வனுபவம் ஏற்படலாம் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இப்படிச் சென்றால்.
கொஞ்சம் சிந்தியுங்கள் என்னோடு வந்த சீனதேசத்தவர்களுக்கு எப்படியான அனுபவம் இருக்கும் என்று?
இலங்கையில் நிலவும் சூழல் என்று எதை மனதில் வைத்துக் குறிப்பிட்டீர்களோ தெரியவில்லை ஆனால் அங்கு இப்படி ஆலயங்களில் கறப்பதாக வரலாறு இல்லை. மாறாக பெளத்த மதத்தைத் ஆயுதமாக எடுக்கும் மதவெறியர்களின் இன அழிப்புத்தான் நடக்கின்றது.
வவ்வால் கூறிய கருத்து குறித்து - தலைகீழாகத் தொங்கும் வௌவாலுக்குக் கண்முன் நிகழ்வதும் தலைகீழாகத்தான் தெரியும். 1997ல் சிதம்பரம் கோவிலுக்குச் சென்றிருந்தபோது குடும்பத்தினருக்குத் திருநீறு குங்குமம் கொடுப்பதற்கு முன் தட்டில் துட்டை வை என்று சிடுசிடுத்து உயிரை எடுத்த அர்ச்சகர்களை பக்கா தமிழ்நாட்டவனான நானும் பார்த்திருக்கிறேன், எனக்கும் இதே ரீதியிலான எரிச்சல் வந்திருக்கிறது. இதில் வெளிநாட்டுக்காரர்கள் உச்சுக்கொட்டவைக்க கதைவிடுகிறார்கள் என்று சொல்லும் காமெடியை என்ன செய்வது!!
வணக்கம் கானா பிரபா,
இதனை விவாதப் பொருள் ஆக்க வேண்டும் என்று கூறவில்லை,இந்தியாவில் உள்ள கோவில்களில் இது போன்று பணம் பண்ண எத்தனிக்கிறார்கள் என்பது உண்மையே! ஆனால் நீங்கள் சொன்னது போல் மிரட்டி,அச்சுறுத்தி அல்ல,நைச்சியமாக பேசி,பரிகாரம்,சிறப்பு வழி பாடு,சிறப்பு தரிசனம் என்ற பெயரிலோ,வழமையான கட்டணம் விட கூடுதலாக வாங்க அனைத்து கதைகளூம், சொல்வார்கள்!
/தன் வேட்டியை சற்றுமேலாக வரித்துக்கட்டிகொண்டே எம்மை நோக்கி வந்தார். /
வரிந்து கட்டுவது என்றால் என்ன என்று தெரியாமல் கூறியதாகவே படுகின்றது.சாதாரணமாக வேட்டியை மடித்து கட்டியதற்கு ஒரு வன்முறை சாயம் !
/என்னதான் நான் அந்த இளம் ஐயரோடு முரண்டு பிடித்தாலும் அந்நியப் பிரதேசத்தில் இருக்கிறோமே என்ற பய உணர்வும் வந்தது.
இருள்கவ்விய உட்பிரகாரத்தில் சுற்றிவந்த பக்தர்களைத் திரும்பத்திரும்பப் பயத்துடன் பார்த்தவாறே
நாங்கள் எவ்வளவு விரைவாகக் கடக்கமுடியுமோ அவ்வளவு விரைவாக நடையின் வேகத்தைக் கூட்டி ஆலய முகப்புப் பகுதிக்கு வந்தோம்./
இதற்கு தான் நான் இலங்கைல் நிலவும் சூழல் போல் அல்ல இங்கு என்று சொல்ல வந்தேன். இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மிகவும் நட்புரவுடன் பேசும் மக்களே அதிகம்..நீங்கள் குறிப்பிட்டதை படித்தால் ஏதோ கொலைவெறி தாக்குதலில் இருந்து நீங்கள் தப்பி வந்தது போல மிகைப் படுத்தி உள்ளீர்கள்...அதற்கும் சிலர் ஆமாம் ...ஆமாம்..எங்களுக்கும் அனுபவம் உண்டு என்று பின் பாட்டு வேறு...நகைப்பிற்கிடமான கோமாளித்தனமான பாமர மக்கள் என்று தான் என்ன தோன்றுகிறது! தங்கள் தேசத்தின் மானத்தை தாங்கலே அற்ப காரியத்திற்காக ஏலம் போடுகிறார்கள்!
இந்த பின்னூட்டம் இடுவது அந்த அர்ச்சகர்களின் பணம் பறிக்கும் செயலை நியாயப்படுத்தி அல்ல ..அவர்களின் செயல் பாடுக் கண்டனத்துகுரியதே! ஆனால் உங்கள் வலைப் பதிவை படிக்கும் யாரும் தமிழக கோவில்களில் வன்முறை தாண்டவம் ஆடுகிறது என்று தவறாக நினைக்க வைக்கும் வண்ணம் உள்ளாதால் இதனை சொல்கிறேன். நான் ஆலயங்கள வரலாற்று சின்னங்களாகத் தான் பார்த்து வருகிறேன்.. வழிபடும் தலங்களாக அல்ல! இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதே என் சித்தாந்தம்!
சிதம்பரம் கோயிலில் நிர்வாக அதிகாரியே கிடையாது. தமிழ்நாட்டில், அக்கோயில் மட்டும் அறநிலையத்துறையின் கீழோ தொல்லியல் துறையின் கீழோ வருவதில்லை. அங்குள்ள தீட்சிதர்கள் மட்டுமே நிர்வாகம் செய்கின்றனர். வேலியே பயிரை மேயும்போது என்ன செய்ய முடியும்?
//இந்தியாவில் நிலவும் சாதாரண நிகழ்வுகளையும் பூதாகரமாக பெரிது படுத்தி கேட்போரை உச் கொட்ட வைப்பது.சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நிகழ்ந்ததும் அப்படியே//
ஆமாம், கோயிலில் குடிகொண்டிருக்கும் வவ்வால்களுக்கு இது ஒரு சாதாரண நிகழ்வுதான். அன்றாடம் காண்பது தானே:)
வணக்கம் கானா பிரபா!
தம்பியுடையான் என்பவரின் பின்னூட்டத்தில் சிதம்பரம் கோவில் சம்பவம் பற்றி இங்கு புகார் அளிக்க சொல்லியுள்ளார்.....
"/தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை - நுங்கம்பாக்கம்,சென்னை" என்கிற முகவரிக்கு நீங்கள் முழுதான ஒரு முறைப்பாடு, அஞ்சலில் அனுப்பினால் இனி இது போன்ற தவறுகள் நிகழாவன்னம் தடுக்க வாய்ப்புள்ளது/
அவர் தமிழ் நாட்டில் இருந்தும்(அப்படி தான் நினைக்கிறேன்) சிதம்பரம் நடராஜர் ஆலயம் தனி தன்மை அறியாமல் உள்ளார் அந்த ஆலயம் இந்து சமய அற நிலையத்துறை கீழ் வருவதில்லை... முழுக்க முழுக்க சிதம்பரம் தீட்சதர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி பெற்ற ஆலயம்.நீங்கள் புகார் அளிப்பதாயின் ஆலயத்திலேயே உள்ள நிர்வாக அதிகாரி/தலைமை குருக்கள்(அவரும் ஒரு தீட்சதரே )
ஆகியோரிடம் தான் அளித்திருக்க வேண்டும் .ஏதேனும் பரிகாரம் கிட்டி இருக்கலாம்.வழிப்படு தலங்கள் தற்போது சுற்றுலா தலங்கலாக மாறியதன் விளைவே அனைத்தும் வணிக மயமாக மாறியமைக்கு காரணம்!
அந்தச் சூழ்நினையில் வேஷ்டியை வரிந்து கட்டிகொண்டு மிரட்டும் தொனியில் வந்த அந்தணரின் நிலை எந்த விதமானது என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்ற விவாதக்களமல்ல இது, அந்த சூழ்நிலையில் நான் ஒரு அந்நியனாகவே உணரபபட்டேன். என்னுடைய சொந்த அனுபவம் மிகைப்படுதல் என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்? பக்கத்தில் இருந்து பார்த்தவர் போலப் பேசுகிறீர்கள்.
உங்களைப் போலவே இந்த வரலாற்றுச்சின்னங்களைப் பார்த்துவருபவன் நான். இந்து என்ற ரீதியில் இவற்றின் பெருமையை நாம் காப்பது அனைவரின் கடமையும் கூட.
மற்றவர்களும் தங்களின் ஆதங்கத்தைத்தான் குறிப்பிட்டார்கள். உங்களுடைய கருத்தைக் கொடுப்பதில் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரமோ அது போலத் தான் அவர்களுக்கும்.
அனுபவங்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம், தமிழகத்தில் இருந்து வரும் சஞ்சிகைகளும் இப்படியான விஷயங்கலை எழுதித் தீர்வுகளைப் பெறுவதும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் எங்கு புகார் அனுப்பவேண்டும் என்ற விலாசத்தை முறையாகத் தந்தால் விரைவாக இதை நான் அனுப்பிவைப்பேன்.
வணக்கம் கானா பிரபா!
தம்பியுடையான் என்பவரின் பின்னூட்டத்தில் சிதம்பரம் கோவில் சம்பவம் பற்றி இங்கு புகார் அளிக்க சொல்லியுள்ளார்.....
"/தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை - நுங்கம்பாக்கம்,சென்னை" என்கிற முகவரிக்கு நீங்கள் முழுதான ஒரு முறைப்பாடு, அஞ்சலில் அனுப்பினால் இனி இது போன்ற தவறுகள் நிகழாவன்னம் தடுக்க வாய்ப்புள்ளது/
அவர் தமிழ் நாட்டில் இருந்தும்(அப்படி தான் நினைக்கிறேன்) சிதம்பரம் நடராஜர் ஆலயம் தனி தன்மை அறியாமல் உள்ளார் அந்த ஆலயம் இந்து சமய அற நிலையத்துறை கீழ் வருவதில்லை... முழுக்க முழுக்க சிதம்பரம் தீட்சதர்களால் நிர்வகிக்கப்படும் ஒரு தன்னாட்சி பெற்ற ஆலயம்.நீங்கள் புகார் அளிப்பதாயின் ஆலயத்திலேயே உள்ள நிர்வாக அதிகாரி/தலைமை குருக்கள்(அவரும் ஒரு தீட்சதரே )
ஆகியோரிடம் தான் அளித்திருக்க வேண்டும் .ஏதேனும் பரிகாரம் கிட்டி இருக்கலாம்.வழிப்படு தலங்கள் தற்போது சுற்றுலா தலங்கலாக மாறியதன் விளைவே அனைத்தும் வணிக மயமாக மாறியமைக்கு காரணம்! //
வணக்கம் வவ்வால் ! தவறான தகவலுக்கு வருந்துகிறேன். எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை, அதனால் பெரும்பாலான கோயில்களுக்கு சென்றதில்லை.
கானா பிரபா,
உங்களுக்கு எற்பட்ட அனுபவத்திற்காக மிகவும் வருந்துகிறேன். தமிழ்நாட்டில் பல கோவில்களில் இத்தகைய தொல்லைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. சில கோவில்களில் மகிழ்ச்சியற்ற அனுபவங்களால் மனநிறைவற்றே திரும்ப நேரிடும். ஆனால் சிதம்பரத்தில் நடக்கும் அட்டூழியத்தை மிஞ்ச உலகில் யாராலேயும் முடியாது. இதைப் போன்ற மனிதர்களை சந்திக்க ஏன் நேர்கிறது என்ற எண்ணம் வரும் அளவிற்கு பணம் பறிக்கும் நோக்கத்துடன் தில்லைவாழ் அந்தணர்கள் இருக்கிறார்கள்.
வவ்வால் சொன்னது பொதுவாக தமிநாட்டு மக்களைப் பற்றி உண்மைதான். ஆனால் தில்லையில் நடப்பது அநியாத்தின் உச்சம்.
நடராஜன்.
வணக்கம் நடராஜன்
தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள். இப்பதிவின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டிருக்கின்றேன், அதாவது இந்த விடயத்தை எழுதுவது எவ்வளவு பொருந்தும் என்று?
ஆனாலும் பல பக்தர்களுக்கு இது போன்ற வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டாலும் மனதுக்குள் புதைத்து வைத்திருப்பார்கள், அதனால் தவறுகள் சரிசெய்யப்படாமல் போய்விடுகின்றன.
உங்களால் இயலுமானால் தகுந்த முகவரியை அளித்தால் இப்புகாரை நான் அனுப்பமுடியும்.
ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டு உறவுகளை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
ஈழத்தமிழன்/தமிழ்நாட்டுத்தமிழன்/
மலேசியத்தமிழன் என்பதைக் கடந்து நாம் நிறையச்சாதிக்கலாம்.
இது என் நேரடி அனுபவமென்றாலும் நான் இதுகுறித்து ஏதும் செய்ய்வில்லை என்று நினைக்கும்போது கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. ஆனால் தில்லையைப் பொருத்தவரை நான் விசாரித்ததில் அது தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் வராததால் அந்த கோவிலில் மட்டுமே முறையிட முடியும் என்று தெரிய வந்தது. இது குறித்து சிதம்பரத்தை சொந்த ஊராகக் கொண்டவர்கள் மேல் விவரங்கள் கூறலாம். சிதம்பர ஆலய நிர்வாகம் குறித்து தெளிவாக அறிந்தோமானால் அடுத்து என்னசெய்யலாமென்பது புரியவரும்.
நடராஜன்
அனானிமஸ் அவர்களே
/வவ்வால் கூறிய கருத்து குறித்து - தலைகீழாகத் தொங்கும் வௌவாலுக்குக் கண்முன் நிகழ்வதும் தலைகீழாகத்தான் தெரியும்/
வவ்வால் தான் எழுப்பும் மீ ஒலியின் எதிரொலியை திரும்ப வாங்கியே தன் பயணத்தை தொடறும்,எனவே பதிலுரைக்கிறேன் தலை கீழாய் இருந்து பார்த்தால் தலை கீழாய் தெரியும் என்று பாராளுமன்றத்தில் சொன்ன முதல் அறிவாளி நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதற்காக இந்த தேர்தல் மேடைகளில் பலமாக வாங்கி கட்டி கொண்டதை இந்த அனானிமஸ் அறிவு கொழுந்து பார்க்கவில்லை போலும்! எப்படி பார்க்கினும் நேராகவெ தெரியும் சந்தேகம் இருப்பின் சிரசாசனம் செய்து பார்க்கவும்(முதுகு சுளுக்கினால் நான் பொறுப்பல்ல)
மேலும் நன்றி கானா ப்ரபா,முரண்பட்ட கருத்தாயினும் முழுதும் முகம் சுளிக்காமலும்,கத்தரி போடாமலும் வெளியிட்டமைக்கு!
வணக்கம் வவ்வால்
கருத்துக்கள் முரண்படும்போது தான் சிந்தனைகள் பிறக்கும், நாகரிகமான முறையில் வரும் கருத்துக்களுக்குக் கத்தரி தேவையில்லை.
தங்களின் வருகைக்கும் நன்றிகள், சொந்த நாட்டை விட்டுக் கொடுக்காத தங்கள் நாட்டுப்பற்றிற்கும் ஒரு சல்யூட்.
இன்னும் எனது புகாரை அனுப்புவதற்கான தகுந்த முகவரியை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
முடிந்தாற் தாருங்கள்.
அன்பு பிரபா!
தில்லை நடராசனைத் தரிசிக்கச் சென்று தொல்லைப்பட்டுள்ளீர்கள்; இந்த அனுபவங்கள் எனக்கும் 2004ல் ஏற்ப்பட்டது. சமாளித்துவிட்டேன்.காளி காலைத்தூக்கி ஆடும் சன்னிதியில்;அசாதாரணமான வகையில்;பூசகர் விளக்கம் தரமுற்ப்பட்டது.சந்தேகத்தைத் தந்தது. அத்துடன் " தமிழ்நாட்டுக்கு" கோவிலும் பார்க்கப் போனால் "பூசகர்கள் கவனம்" என்ற நண்பர்களின் அறிவுறுத்தல் காதிலொலிக்க, நழுவிவிட்டோம்.
திருச்செந்தூரில் ஒரு போலியோவால் பாதிக்கப்பட்ட 10 வயதுச் சகோதரியை தன் இடுப்பில் காவிவந்த 13 வயதுப் பெண்ணுடன் விபரம் கேட்டு பணம் கொடுத்த பொழுது ,ஒரு கூட்டமே என்னைத் திக்குமுக்காட வைக்க, அவர்களுடன் சத்தம் போடும் படியானது."அவளுக்குக் கொடுத்தாய் எங்களுக்கும் தா" நான் விடவில்லை. நீங்கள் எல்லோரும் நடக்குறீர்கள்;நன்றாக இருக்குறீர்கள் எனக் கூறிவிட்டேன்.கோவிலுள் பார்க்குமிடமெங்கும் நீக்கமற பூசகர்களே நிறைந்திருந்தார்கள்;எனினும் மிக அதிகம்.அர்ச்சனைத் தட்டை வாயிலிலே வாங்கி வீபூதியைப் போட்டுத் தந்தார்கள். என் மனைவிக்கு அச் செய்கை இன்று கூடக் கசப்பான அனுபவமாகவே கருதுகிறார்.
மதுரை; ஒரு வழிகாட்டி, கோவிலைச் சுற்றிக்காட்டி விளக்குவதாகக் கூறினார். நானே விளங்கிக் கொள்கிறேன். என்றேன் ,வயிற்றைத் தடவிக் காட்டினார். தொட்டது மனதை- கொடுத்தேன் ;அக்கம் பக்கம் பார்த்து- செந்தூர் அனுபவம்.
தஞ்சாவூர்- பெரிய பிச்சல் பிடுங்கலில்லை. சாதாரண தரிசனத்துக்கு சுமார் 1 மணி வரிசையில் நின்று தரிசனம் கிடைத்தது.
தமிழ் நாடு செல்லும் போது இருந்த கோவில் ஆர்வம்; பூசகர்களின் பிடுங்கலால் வெகுவாகக் குறைத்தது.என்பதே உண்மை!!!
மிகத் திருப்தி தந்த இறையகம்; அன்னை வேளாங்கன்னி தேவாலயம்,சுத்தம்;அமைதி; ஒழுங்கு; மிக மெச்சத்தக்க வகையில் இருந்தது.இது கிருஸ்தவ தேவாலயங்களில் காணும் சிறப்பம்சம்.அங்கு மிக மிளிர்கிறது. நிர்வகிப்போர் அனைவரையும் பாராட்டுக்குரியவர்கள்.
காசு செலவு செய்து பிரயாணம் செய்து கிட்டாத நிம்மதி; சென்னையில் உள்ள சிறு கோவில்களில் கிடைத்தது.
ஈழம் சென்று; நல்லூர்க் கந்தன்;நயினை நாகபூசணி;திருக்கேதீஸ்வரம்; திருமலைக் கோணேஸ்வரம்;தம்பலகாமம் சிவன் சுகதர்சனம் கிட்டியது. கோவிலை எப்படி நடத்த வேண்டுமென்பது, இக்கோவில்களில் கற்க்க வேண்டும். இந்தியச் சகோதரர்கள் ஒத்துக் கொள்ளுவார்களோ! தெரியாது. அன்றும் இன்றும்- நல்லூரில் ஒரு ரூபாய் அர்ச்சனை;அதே பூவரசமிலையில் திருநீறு; மணம் கமழும் சந்தணம். மறக்க முடியாதவை.
தென்னிந்தியப் பூசகர்கள் ;தமது நடத்தையால் பாரம்பரியம் மிக்க நாட்டின் பெயர் கெடுகிறது; என்பதைச் சிந்திக்கவேண்டும்;கழுத்தில் போட்டிருக்கும்;உருத்திராட்சம் கொட்டைக்குக் கூடப் பொற்பூண் போட்டிருப்பவர்கள்.;தங்களை எல்லோரிலும் மேலான பிறவியெனக் கருதுபவர்கள்; இப்படி இரப்பதோ;வழிப்பறிகாரர் போல் ஈடுபடுவது அழகல்ல!!!; அவர்கள் தலைவர்கள் என்போர் இவர்களைத் திருத்த வேண்டும்
என் நோக்கமும் ,என்னனுபவம் பற்றி கூறுவதே! எவரையும் நோகடிப்பதில்லை.
யோகன்
பாரிஸ்
வணக்கம் யோகன் அண்ணா
தங்களின் அனுபவங்களை விரிவாகத் தந்தமைக்கு என் நன்றிகள்.
எமது வரலாற்றுக் களஞ்சியங்கள் முறையாக நிர்வகிக்கப்பட்டுக் காப்பாற்றப்படவேண்டும்.
மேற்குலகத்தவரின் முற்றுகையால் அழிந்த எம்நிலைக்களன்கள் எம்மவர்களால் மீண்டும் அழிவைச் சந்திக்கும் நிலை வரக்கூடாது.
பிரபா!
இந்தப் பூனைக்கு மணிகட்டுவது யார்?, அதிகாரம் இருப்பவர் கையில் ஆர்வமில்லை,ஆர்வமுள்ளவர்கள் கையிலோ! எதுவுமே இல்லை.
நம் கலை கலாச்சாரம்" தங்க முட்டை போடும் வாத்து"க்கிணையான நிலையிலே உள்ளது.
வேதனையே!
எத்தனையோ விடயம்கள்" இது மேல் நாட்டான் கையில் இருந்தால்" என்று ;எண்ண வைத்த நிலையிலேயே இதுவும் உள்ளது.
யோகன்
பாரிஸ்
பிரபா, உங்கள் இந்தக் கட்டுரை லண்டன் ஒரு பேப்பரிலும் கொழும்பு தினக்குரலிலும் மறுபிரசுரம் செய்யப்பட்டிருப்பதனை அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழத்துக்கள்.
யோகன் அண்ணா
நீங்கள் கூருவது முற்றிலும் உண்மை.
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சிறீ அண்ணா
இப் பதிவு குறித்து வரும் மறு கருத்துக்களைத் தமிழக நண்பர்கள், பிழையாக விளங்கிக் கொள்ள மாட்டார்கள் என நம்புவோமாக.
யோகன்!
நீங்கள் குறிப்பிட்ட கோவில்களில் தஞ்சை பெரிய கோயில் மத்திய அரசின் சுற்றுலாத்துறைக்குள் வந்துவிட்டது என நினைக்கின்றேன். அதனால் அங்கு பிடுங்கல்கள் குறைவு. ஆனால் வேறு சில சீரழிவுகள் வந்துள்ளன. குறிப்பாக சினிமா படப்பிடிப்புத்தளமாக பாவிக்கப்படுதல் போன்று வேறும் உள. இந்தச்சிக்கலுக்குள் திருவண்ணாமலையும் வரக்கூடிய சூழ்நிலை இருந்தது.
இதை விட தமிழக அரச அறநிலைத்துறைக்குள்ளான கோவில்களிலும் பணவசூலிப்பு இருந்தது. திருச்சி மலைக்கோட்டைப்பிள்ளையார் கோவிலில் அன்னதானத்திட்டத்திற்கு பணம் செலுத்தும்படி என்னிடம்கேட்க்கப்பட்டது.
இவை தவிர்த்து, திருச்சி ஐயப்பன் கோவில், கேரள அன்பர்களால் நிர்வகிக்கப்படுகிறது என நினைக்கின்றேன். அங்கே அன்னைவேளாங்கன்னி ஆலயத்திற்கு நிகரான அமைதியையும், தூய்மையையும், அழகையும், காணலாம். ஆண்மீக அமைதி தேடுபவர்கள் கண்டிப்பாக இவ்வாலயத்திற்கு ஒருதடவை செல்லுங்கள்.
இதைவிடவும், கும்பகோணப்பகுதியில் உள்ள நவதிருப்பதி எனும் ஒன்பது ஆலயங்களை, டீ.வி.எஸ் நிறுவனம் பொறுப்பெடுத்து நிர்வகிக்கிறது. தொன்மையான ஆலயங்களை, தூய்மையாகவும் அழகாகவும், ஊழியர்களைச்சிறப்பாகவும், பராமரித்துப் பேணுகின்றார்கள்.
ஆனால் சிதம்பரம் முழுக்க முழுக்க தில்லைத் தீட்சிதர்களால், நிர்வகிக்கப்படுவதாகவே அறிந்தேன். பிரபா அதிகப்படியாக எதையும் குறிப்பிட்டிருப்பதாக என்னால் எண்ணமுடியவில்லை. கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அங்கு நடைபெறும் அடாவடித்தனங்களைச் செய்யும் அந்தனர்கள் பலர் மிக இளவயதுக்காரர்கள்.
அரவிந்தனின் சிதம்பரம் திரைப்படத்தின் முடிவுக்காட்சி யில் கமெரா, சிதம்பரம் கோயில் கோபுரத்தினூடாக வானில் சென்று முடியும். அந்தப்படிமத்தின் நினைவோடு சிதம்பரம் சென்ற எனக்குக் கிடைத்தது ஏமாற்றமே.
"//சில கோவில்களில் மகிழ்ச்சியற்ற அனுபவங்களால் மனநிறைவற்றே திரும்ப நேரிடும்//".
அன்பு நண்பர்களே!தமிழகத்தின் ஆட்சிமாற்றமும்,தகுதி உள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர்
ஆகலாம் எனும் புதிய சட்டமும் சில மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்ப்போம்.
அன்புடன்,
துபாய் ராஜா.
நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம் துபாய் ராஜா
எங்க அய்யா சிதம்பரத்தில காவல்துறை அதிகாரியா இருந்தப்ப
(1996 என்று நியாபகம் - நான் +2 படித்தேன்)
இதே போல டூரிஸ்ட் வந்தவங்க கிட்ட பிரச்சினை செய்த ஒரு அய்யரை பிரிச்சி மேஞ்சிட்டாரு...அதாவது அடி வெளுத்துட்டாரு...நான் அப்போ அவர் கூட இருந்ததால தெரியும் இந்த விஷயம்...அது இப்ப நியாபகம் வந்து தொலையுது...
செந்தழல் ரவி said...
//பிரிச்சி மேஞ்சிட்டாரு...அதாவது அடி வெளுத்துட்டாரு...//
உங்க அய்யா ரொம்பப் பொல்லாதவரா இருப்பார் போலிருக்கே:-)
பிரபா, இதைவாசியுங்கோ. பிரியோசினமா இருக்கும்.
மறவன் புலவு சத்திதானந்தன் அவர்களால் எழுதப்பட்டது.
ஆஹா, தேவையானதொரு கட்டுரை முயற்சி இது.
இணைப்பை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் வசந்தன்.
http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html
பிரபா, வசந்தன்!
சச்சிதானந்தன் அண்ணாவின் பதிவுத் தகவலுக்கு ;மிக நன்றி.படிக்க மனம் நெகிழ்ந்து;மகிழ்ந்தது.
யோகன் பாரிஸ்
திருப்பதியைத்தவிர எல்லாம் அப்படித்தான் இருக்கும் போல பழனியும் அப்படித்தான் வெட்கம்
அதுதான் வேதனையான உண்மை Ennar
வணக்கம் தம்பி ஜெயந்தன்
என் அனுபவத்தைப் படித்ததற்கும், உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள்.
தமிழ்நாட்டில் அனைத்து பிரபல தலங்களிலும் இந்த அனுபவம் தவறாமல் கிட்டும்! இதற்கு அரசு ஏதாவது வழி செய்ய வேண்டும்.
அதிக பிரபலமில்லாத கோவில்களில்தான் சற்றாவது நிம்மதி கிட்டும்.
பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலை படங்களுடன் அழகாக எங்களுக்கு தருவித்தற்கு மிக்க நன்றிகள்!
வணக்கம் ஜீவா
வாசித்த்த் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமை குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.
இது பழைய பதிவு தான் என்றாலும் இப்போது பார்த்ததால் இப்போது கமெண்ட் பண்ணுகிறேன். சிதம்பரம் மட்டும் தான் இப்படி மற்றய கோவில்கள் எல்லாம் தார்மீக போக்கில் இருக்கின்றன என்று சொல்வது வியப்பை தருகிறது. சிதம்பரம் கோவில் தீட்ஷிதர்களின் நிர்வாகத்தில் இருக்கிறது.ஆனால் ஏனைய கோவில்களில் அரச நிர்வாகம். அங்கே பல கசப்பான நிகழ்வுகள் நடந்தன. எல்லா இடத்திலும் ஏதோ ஒரு விதத்தில் காசு பிடிங்குகிறார்கள்.அரசு பிடுங்கினால் நாம் கண்டு கொள்வது இல்லை.ஆனால் கோவில் வருமானத்தையே நம்பி இருக்கும் அர்ச்சகர் காசு கேட்டால் முறைக்கிறோம். தீட்ஷிதர்களுக்குள்ளேயே இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.அவர்கள் அடாவடி பற்றி அவர்களே குறைகூறுகிறார்கள்.
ஆனால் ஏனைய கோவிலில் சாதாரண தரிசனம் ஸ்பெஷல் தரிசனம் என்று என்று காசு பறிக்கிறார்கள்.தஞ்சை பெரிய கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி பார்த்த எங்களுக்கு விபூதி பிரசாதம் தரப்போன அர்ச்சகரை தடுத்து மறித்தார் பக்கத்தில் நின்ற அறங்காவலர். 10 ரூபா கட்டி பற்றுச்சீட்டு காட்டினால் தான் பிரசாதம்.இல்லை என்றால் இல்லை.என்கிறார்.
ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு போனபோது அம்பாளுக்கு அபிஷேகம் முடிந்து அலங்காரம் நடந்து கொண்டு இருந்தது.ரொம்ப தூரம் போகணும் என்பதால் எத்தனை மணிக்கு நடை திறப்பீர்கள் என்று அறங்காவலரை கேட்டோம்.அவர் நாங்கள் வெளியூர்காரர் என்று தெரிந்து கொண்டு நடை திறக்க ஒரு மணிநேரம் ஆகும்.ஆனா நீங்க 50 ரூபா கட்டினால் பின்வாசல் வழியாக அம்பாளை இப்போதே தரிசிக்கலாம் என்கிறார்.சமய சம்பிரதாயப்படி திரைச்சீலை போட்டு நடக்கும் அம்பாள் அலங்காரத்தை பின்வழியால் பார்ப்பது என்பது ஒரு பெண் ஆடை உடுத்திக்கொண்டு இருக்கும் போது அவளை ரகசியமாக பார்ப்பதற்கு சமமான கேவலம் என்று தெரியாதா அந்த அறங்காவலருக்கு?அந்த அவமானத்தை அம்பாளுக்கு அளித்து பாவத்தைக் கட்டிக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. இல்லை வேண்டாம் என்று விட்டோம். இவற்றுடன் ஒப்பிடும் போது சிதம்பரம் எவ்வளவோ மேல்.
ஒவ்வொரு இடத்துக்கும் போக ஒவ்வொரு வழிமுறை இருக்கிறது.அதை பின்பற்றினால் சரி.சிதம்பரம் போக வேண்டும் என்றால் யாராவது தீட்ஷிதர் ஐ அணுகி அவர்கள் மூலம் போகவேண்டும். நான் அப்படித்தான் போனேன். எனக்கு இப்படி பயன்கள் எதுவும் வரவில்லை. எல்லோரும் மரியாதையுடன் நடத்தினார்கள். உண்மையை சொன்னால் சிதம்பரத்தில் தான் எங்களூரில் தெய்வ தரிசனம் செய்தது போல் மனநிறைவுடன் தரிசனம் செய்ய முடிந்தது.ஏனைய இடங்களில் கால்கடுக்க வரிசையில் நின்று சாமிக்கு கிட்ட போனதுமே அங்கிருந்து போக சொல்லி ஒருவர் எங்களை பிடித்து தள்ளிக்கொண்டே இருப்பார். மியூசியத்தை பார்வையிடப் போனால் கூட கொஞ்ச நேரம் ஒவ்வொரு காட்ச்சிப்பொருள் முன்னாலும் நிக்கலாம் ஆனால் சாமி சன்னிதானத்தில் நிதானமாக சுவாமியை ஏறெடுத்து பார்க்கக்கூட விட மாட்டார்கள்.அவ்வளவு வேகமாக நகர்ந்து செல்ல சொல்லுவார்கள்.இல்லையேல் ஸ்பெஷல் தரிசனம் என்றார் காசு கட்டினால் ஒரு 5 நிமிஷம் விடுவார்கள்.ஒரு பெண்மணியை விளக்கிப் போக சொல்ல அந்த பெண்மணி யோவ் நான் 100 ரூபா கட்டிட்டு நிக்கிறேன் என்று சண்டை பிடித்தார்.
ஆக சிதம்பரம் போனால் தீட்ஷிதரை அணுகி போகணும் ஏனைய கோவில்களுக்கு காசு கட்டி போகணும். அடாவடி செய்யாத அமைதியான தீட்ஷிதராக பார்த்து அவரை அணுகி அவரோடு போய் பாருங்கள். சிதம்பரம் கோவில் அழகாய் தெரியும்.
Post a Comment