பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பில் இரண்டரை தசாப்தங்களாக (1966 - 1991 ) இயங்கி வந்த சங்கரமுர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.
இந்த வேளை பி.பி.சி சங்கரண்ணா குறித்த மறைவுச் செய்தியை பி.பி.சி தமிழோசை தளத்தில் இருந்து பகிர்வதோடு, அவரின் குரல் ஒலிப்பகிர்வையும், அகவை எழுபதை பி.பி.சி தமிழோசை கண்டபோது நான் கொடுத்திருந்த பகிர்வையும் மீள் இடுகையாகத் தருகின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.
மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.
00000000000000000000000000000000000000000000000000000000
அகவை எழுபதில் பி.பி.சி தமிழோசை - மீள் இடுகை

இன்றைக்கு உலகத்தில் தமிழன் பெருகிப் போயிருக்கும் இடமெல்லாம் ஒன்றோ, இரண்டோ பலதோ பத்தோ என்று 24 மணி நேர வானொலிகள் வியாபித்து விட்டன. ஆனால் வானொலி நிகழ்ச்சிகளின் தரமும், பகிர்வும் "பூசக் கொஞ்சம் சந்தனம் கிடைத்தால்" என்ற நிலையில் தான். ஆனால் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியிலேயே நச்சென்று ஒரு நாளில் புரட்டிப்போட்ட சமாச்சாரங்களை அடக்கி வானொலி ரசிகர் மனதில் ஆள்வதென்பது அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல எழுபது ஆண்டுகள் என்பது தமிழ் ஊடகத்துறையில் தமிழோசையின் தவிர்க்கமுடியாத ஆளுமை எனலாம். தானும் பயணித்துக் கூடவே உலக வானொலிகள் பலவற்றிலும் தவிர்க்கமுடியாது இருக்கும் அங்கமாக மாறிவிட்ட BBC தமிழோசையின் எழுபதாவது அகவையில் ஒரு சிறப்பு வானொலிப் படையலையும் எழுத்து ஊடகப் பகிர்வையும் கொடுக்க விழைந்தேன்.
அகவை எழுபதில் இந்த ஆண்டு தடம்பதிக்கும் BBC தமிழோசை குறித்த சிறப்பு வானொலிப் பகிர்வை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கிய சிறப்புப் பகிர்வு
ஒலிவடிவில்


