skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Thursday, December 24, 2009

ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்

1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக்கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.

தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான். அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.
அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.

"என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று", பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு "தாயே....தாயே" என்று புலம்புகிறான்.

எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.

ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.

தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.

மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு "ஆகாசவாணி" கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை
"எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்".

00000000000000000000000000000000000000000000000000000000
ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.

தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்" நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.
அது ஆங்கிலத்திலும் MGR, the man and the myth ஆக வந்திருந்தது.

0000000000000000000000000000000000000000000000000000
ஈழத்தில் எழுச்சிப் பாடல்கள் என்ற வடிவம் முளை விடுவதற்கு முன்னும் சரி, பின்னும் சரி எம்.ஜி.ஆரின் "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" போன்ற தத்துவப்பாடல்கள் போருக்கு அழைக்கும் பரணிப் பாடல்களாக அமைந்திருக்கின்றன.
வடமாகாணத்தின் மினிபஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பொன்.மதிமுகராசா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கழகத்தை ஆரம்பித்து அந்தக் கழகத்தின் 1991 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு நாளினை எங்கள் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடத்திய அன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தினை அழைத்துச் சிறப்புரை ஆற்றச் செய்திருந்தார். அப்போது கூட்டத்தோடு கூட்டமாக இருந்து நிகழ்வைப் பார்த்த எமக்கு, எம்.ஜி.ஆர் தலைவர் பிரபாகரனோடு நட்புப் பாராட்டிய காலங்கள், ஆரம்ப கால உதவிகளைச் சொல்லிக் கொண்டு போக அப்போது எமக்கெல்லாம் விழிகளை விரித்த வியப்பு வந்தது.

0000000000000000000000000000000000000000000000000
இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.

எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.

இன்று எம்ஜிஆரின் 22 ஆவது நினைவு நாள்
Posted by கானா பிரபா at 9:24 PM 17 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, December 14, 2009

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

"திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகிறேன்" என்று சொல்லுவார் முதுபெரும் ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா.

என்னைப் பொறுத்தவரை என்னைப் பாதித்த விஷயங்களை, அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி என் மனதில் பட்டதைப் பகிர்ந்து கொள்ளவே நான் ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். இது என் 11 ஆண்டுகால வானொலிப் பணிக்கும் பொருந்தும், இந்த மாதத்தோடு நான்காவது ஆண்டு முடிந்து ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் வலைப்பதிவு ஊடகத்துக்கும் இது பொருந்தும். என்னை நான் சமரசம் செய்து கொள்ளாத எந்த விடயத்திலும் என்னை நான் ஆழம் பார்ப்பதும் இல்லை, மற்றவர்களின் மேல் திணிப்பதும் இல்லை. ஆனால் எனக்குத் தோன்றியதை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதில் நான் எந்த வித சமரசமும் செய்து கொள்வதேயில்லை.


ஒருமுறை சகவலையுலக நண்பர் கேட்டார், எப்படி உங்களால் இவ்வளவு காலமும் சிக்கலுக்குள் மாட்டுப்படாமல் வலையுலகில் இருக்க முடிகின்றது என்று. உண்மையைச் சொல்லப் போனால், அந்த அரசியல் என்னையும் தாக்கியிருக்கின்றது. ஆனால் என்னை நான் சுலபமாக விடுவித்துக் கொண்டேன், கொள்கிறேன், கொள்வேன்.
வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன். ஏனென்றால் அதை நானும் அனுபவித்தவன் தானே. சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடிகை ரேவதி அவுஸ்திரேலியா வந்த போது அவரின் வானொலிப் பேட்டி நடக்கிறது. பேட்டியில் நேயர் ஒருவர் வந்து "ஈழப்போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?" என்று கேட்கிறார். அன்று வானொலியைக் கேட்டு விலா நோகச் சிரித்த அதே மனநிலையோடு தான் இன்றும் இருக்கின்றேன். சும்மாவா சொன்னான் பாரதி "வாய்ச் சொல்லில் வீரரடி" என்று.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் சிட்னியின் ஒரு பிசியான உணவகத்தில் Take Away
கியூவில் நானும் நிற்கிறேன். எனக்கு முன்னால் "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" நூலைத் தன் முகத்துக்கு நேரே பார்த்த படி ஒருவர்.

சில வாரங்களுக்கு முன் சிட்னி நகரப் புகையிரத நிலையத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப ரயில் பிடிக்கக் காத்திருக்கின்றேன். என்னைக் கடந்து ஒருவர் வேகமாகப் போகிறார், கையில்
"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி".

கழிந்த நான்காவது வருஷ வலையுலகப் பங்களிப்பில் என்னாலும் ஏதோ செய்ய முடிந்ததே என்று சொல்லிக் கொள்ளும் விதமாக அமைந்தது என் கம்போடியப் பயணம் குறித்த வடலி வெளியீடான "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி". மேலே சொன்ன அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் உண்மையிலேயே ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் பேரானாந்தத்தைக் கொண்டு வந்தவை. கம்போடியா நூலை இன்னும் விரிவாக கலர் கலராக பெரும் புத்தகமாக ஆங்கிலப் பயண இலக்கியத்துக்கு நிகராகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. வெளிநாட்டு வாழ்க்கையில் டொலரில் உழைத்து சொகுசுப் பயணம் என்று யாரோ ஒருவர் சொன்ன ஆற்றாமைப் பின்னூட்டம் எல்லாம் வலிக்கவில்லை, நகைப்பாக இருக்கிறது. ஏனென்றால் என் உலாத்தல்கள் அனைத்துமே தேடல்களாக, தேடல்களைப் பதிப்பித்தல்களாக மட்டுமே இருந்தன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன.

இது நாள் வரை எமது மண்ணின் மைந்தர்களை, அவர்கள் எழுத்தாளர்கள், நாடக, இசைக் கலைஞர்கள் என்று காட்டக் கூடியவர்களைச் சந்தித்த ஒலிப்பகிர்வுகளை நூலாகக் கொண்டு வரவேண்டும், கூடவே அந்த நூலோடு இணைப்பாக குறித்த ஒலி இறுவட்டுக்களை இணைக்க வேண்டும் என்பதே என் அடுத்த முனைப்பு.

என் மண்ணின் பகிர்வுகளுக்கு இன்னொரு களமாக அமைந்தது இந்த ஆண்டு ஆரம்பித்த குழுமப்பதிவு "ஈழத்து முற்றம்". கூடவே ட்விட்டர் என்ற குறும்பதிவிலும் என் நாளாந்த எண்ணங்களைப் பகிர ஆரம்பித்திருக்கிறேன்.

"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது" . என்றோ என் புலம்பெயர் வாழ்வின் தனிமையைப் போக்கிய சுரேஷ் சக்ரவர்த்தி என்ற கலைஞனை இந்த ஆண்டு வானொலிப் பேட்டி மூலம் சந்தித்ததும் என் வாழ்வில் மறக்க முடியாததொன்று.

மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்த்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
ஈழத்துப் பிரதேச வழக்குகள் சார்ந்த கூட்டு வலைப்பதிவான ஈழத்து முற்றம்
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் இன்னும் சில வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)


எல்லாப் பதிவுகளையும் ஒரே கூரையின் கீழ் திரட்டவெண்ணி "கானா பிரபா பக்கங்கள்" என்ற தனித்தளத்தையும் தொடர்ந்து இயக்கிவருகிறேன். இவையெல்லாவற்றையும் விட எனக்கு இன்னும் பெருமிதத்தைத் தருபவை உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது. அந்தப் பெருமிதம் தான் என் நாளாந்த வாழ்வின் ஒரு பகுதி சந்தோஷத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றது. மறக்க மாட்டேன் உங்களை.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா


வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்


2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

00000000000000000000000000000000000000000000000000

கடந்த 2009 ஆண்டின் என் பதிவுகளின் தொகுப்பு

Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்

தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.




ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.








ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்

இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.








"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்

ஈழத்தின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய இளையவர் த.அகிலன். அவரது சீரிய எழுத்துக்கள் கவிதைகள், நனவிடை தோய்தல்கள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்களாக அமைந்திருப்பதோடு கட்புல ஊடகம் வழியும் எதிர்காலத்தில் தடம்பதிக்கத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.







Hunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்

அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார்.




Death on a Full Moon Day - நாளை வருவான் என் பிள்ளை

வன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.






புகைப்பட அல்பம் கிளப்பிய ஞாபகம்

பிறகு தானே எல்லாம் மாறிப் போச்சு, ஆளாளுக்கு திக்குத் திக்கா தேச எல்லைகளைக் கடந்தவர்கள் ஒரு பக்கம், குண்டுவீச்சில் செத்துப் போனவை ஒருபக்கம், இதுகளை எல்லாம் பார்த்து வருத்தம் வந்து திடீர் திடீரெண்டு மேலை போனவை ஒருபக்கம், இண்டைக்கும் நடைப்பிணமாய் எஞ்சிய வாழ்வை கடனே என்று கழிக்கும் சிலர் ஒருபக்கம் எண்டு அந்தக் கூடு கலைஞ்சு போச்சு.






தமிழகம் - புலம்- சிறீலங்கா: இங்கிருந்து எங்கே?


இன்றைய சூழ்நிலையில் என் மனதுக்குள் உழன்று கொண்டிருக்கும் விஷயங்களைப் பேசா மடந்தையாக வெறுமனே விட்டுவிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து சில விஷயங்களைச் சொல்லலாம் என்றிருக்கின்றேன். இந்தக் கருத்துக்கள் என் சுய எண்ணத்தில் தோன்றியவை மட்டுமே ஆய்வு/வாய்வு பகுதியில் அடக்க எனக்கு உடன்பாடில்லை.








என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை

நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன்.






அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!

"ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி" மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.







புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.



ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை.....

சாதியம் சொல்லி கோயில் கிணற்றிலேயே தண்ணி அள்ள விடாமல் தடுக்கும் சமூகம், ஆராவது கோயில் படி மிதிச்சால் காலை முறிச்சுப் போடுவோம் என்று ஒரு பகுதி மக்களை தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம், மூட நம்பிக்கையிலும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள். இனி மெல்ல மெல்ல எல்லாம் விட்டதில் இருந்து தொடங்கும். சாதீயத்திமிரும், பிற்போக்குத் தனமும் கொண்ட எம் சமூகத்துக்குப் படிப்பினைகள் போதாது போல.



கவிஞர் இ.முருகையன் நினைவில்...!

ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும் நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.










நடிகமணி வி.வி.வைரமுத்து 20 ஆம் ஆண்டு நினைவு இன்று

நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் மறைந்து இன்றோடு 20 ஆண்டுகள் கடந்திருக்கின்றது.













கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்

கவிஞர் முருகையனின் அஞ்சலி நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேராவையால் கடந்த 06.07.2009 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களும், கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒலி வடிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.









ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு

கழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது.




"இன்னமும் வாழும்" மாவை வரோதயன்"

"ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் "ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில்.







"கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்

"தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. "
( கே டானியல் 15-12-83, "கே.டானியல் கடிதங்கள் )










கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது.




"தொப்புள் கொடி" தந்து தொலைந்த "நித்தியகீர்த்தி"

தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.






"வானொலி மாமா" சரவணமுத்து நினைவாக

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.









"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை" - போக முன்

இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)



16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில் பிடிக்க


"மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா" அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.




தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்

கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.
Posted by கானா பிரபா at 7:44 PM 36 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Labels: ஆண்டுப் பகிர்வு

Tuesday, November 24, 2009

தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்

கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.

சிங்கள அரச பயங்கரவாதம் தமிழினத்தின் மீதான அடக்குமுறையின் ஆரம்பமாக கல்வித் தரப்படுத்தல் முறைமையைக் கொண்டு வந்திருந்த வேளை தமிழ் மாணவர் பேரவை என்னும் அமைப்பை சத்தியசீலன் அவர்களோடு சக மாணவர்கள் ஆரம்பித்த அந்த இயக்கமே ஈழத்தின் போராட்ட வரலாற்றின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி ஆரம்பித்த போராட்டமாக அமைந்தது.

பேட்டியின் ஒலிவடிவைக் கேட்க



திரு சத்திய சீலன் அவர்களின் பேட்டியில் இருந்து சில துளிகள்

ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தமிழ் இளைஞர் ஒன்றயம் என்ற அமைப்பு தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பித்தோம். இதற்கு அன்றைய அரசியல் சூழ்நிலைகளே காரணமாக இருந்தன.

1965 ஆம் ஆண்டு திருச்செல்வத்தை மந்திரியாக நியமிப்பதன் மூலம் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலையில் இருந்து விலகிப் போவதை இளைஞர்களாகிய நாங்கள் அன்று உணர்ந்திருந்தோம். அதன் அடிப்படையிலேயே தமிழர் இளைஞர் ஒன்றயம் என்ற அமைப்பு தோற்றம் பெற்றது.

1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்காவால் தரப்படுத்தல் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் மாணவர்களை ஒன்று திரட்டி 1970 ஆம் நவம்பர் 23 ஆம் திகதி தமிழ் மாணவர் பேரவை தனது முதலாவது அரச எதிர்ப்பு ஊர்வலத்தை யாழ் முற்றவெளியில் நடத்தியது.

நாம், சிவகுமாரன் உட்பட பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரங்களை நடத்தினோம். இவ்வாறு டிசம்பர் 7, 1970 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு சென்றபோது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தேவையை உணர்த்தினோம். அந்தக் கூட்டத்தில் சந்தித்தேன் சின்னப்பையனாக இருந்த "பிரபாகரனை". தமிழ் மாணவர் பேரவையில் தானும் இணைந்து பங்களிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அங்கேயே ஒரு ரூபா அங்கத்துவப் பணத்துடன் தமிழ் மாணவர் பேரவையில் அவரை இணைத்துக் கொண்டேன்.

1971 ஆம் ஆண்டு யூன் மாதம் தமிழீழத்தில் இருக்க முடியாத அரசியல் நெருக்கடியால் தமிழகம் சென்றேன். திருச்சியில் ஈ.வே.ரா பெரியாரை ஆகஸ்டில் சந்திக்கிறேன். எமது மாணவர் போராட்டத்தைப் பற்றி விளக்கி உங்கள் ஆதரவை எமக்குத் தாருங்கள் என்று கேட்டேன். அப்பொழுது
"இவையெல்லாம் சாத்தியப்படுமா?" என்று அவர் தனது பாணியிலேயே கேட்டார்.
"அவர்கள் பெரிய டாங்கிகளையும் துப்பாக்கிகளையும் வைத்து உங்கள் எல்லோரையும் அழித்துப் போடுவார்களே" என்றும் சொன்னார்.
"இல்லை அதை எதிர்த்து எங்களால் போராட முடியும், அந்த மனவலிமை எங்களுக்கு இருக்கிறது, உங்களுடைய ஆசி தான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டேன்.
"சரி, நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத்து வடிவில் தாருங்கள் விடுதலை பத்திரிகையில் அதைப் பதிவாக்குகிறேன்" என்றார். அதைப் பதிவாக்கினார்.

ஜி.டிநாயுடு என்ற அன்றைய பிரபல விஞ்ஞானி, அவரிடம் சென்று எங்களுக்கான வாக்கி டாக்கி (walkie talkie) என்ற கருவியைச் செய்து தரும்படி கேட்டிருந்தோம். அவரும் உங்களுக்கான ஆதரவைச் சேருங்கள் என்று ஊக்குவித்தார்.

உரும்பிராயில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவையின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ விடிவிற்காய் களப்பலியாகியவருமான தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவுத் தூபி


1972 டிசம்பருக்கு மீண்டும் ஈழம் வந்தோம். அப்போது அமுல்ப்படுத்த இருந்த அரசியல் யாப்புக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்தோம். அந்தக் காலகட்டத்தில் பாடசாலைச் சிறுவனாக இருந்த தம்பி பிரபாகரன் அடிக்கடி வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்.

படங்கள் நன்றி:
http://tamilmakkalkural.blogspot.com
www.tamilnation.org/
Posted by கானா பிரபா at 9:57 PM 6 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, November 18, 2009

16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில் பிடிக்க

ஏப்ரல் 10 ஆம் திகதி, வருஷம் 2015 காலை 6.15

வாடகைக் கார் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பவ்யமாக வந்து நின்றது. கார் ஓய்ந்த வேகத்தில் குட்டித்தூக்கத்தில் இருந்த பிரசாத் விழித்துக் கொண்டான். கூடவே வந்த தம்பிராசா கார் எப்படா நிற்கும் என்று ஏங்கியிருந்தவன் போல அவுக்கென்று கார்க்கதவைத் திறந்து வெளியில் வந்து தன் கோடுபோட்ட கிப்ஸ் மார்க் சாரத்தை இரண்டுபக்கமும் துலாவிவிட்டுக் இடுப்பில் நிறுத்தினான். முன் சீட்டில் இருந்த பிரசாத்தும் மெல்ல எழும்பி வெளியே வந்து இரண்டு கைகளையும் மேலே நோக்கி உயர்த்தி ஒரு குறும் உடற்பயிற்சி செய்து அலுப்பை நீக்கி விட்டு தம்பிராசாவைப் பார்த்துச் சிரித்தான்.

"தம்பி! நீங்கள் இங்கேயே நில்லுங்கோ, நான் போய் ரிக்கட் எடுத்திட்டு வாறன்" பிரசாத்தின் பதிலுக்குக் காத்திரமால் கோட்டை புகையிரத நிலைய ரிக்கட் கவுண்டரை நோக்கிப் பாய்ந்தான்.
வாடகைக்கார்க்காரருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக பேவ்மன்ற் பக்கமாக நின்றான் பிரசாத்.

"தம்பி! சொல்லு வழி கேட்டுப்பழகு மோனை, அந்த நாளையை மாதிரி இல்லை இப்ப உலகம், நீயும் 20 வருஷமா பிடிவாதமா ஊருக்கு வாராமல் இருந்து விட்டு இப்ப வாறாய், கட்டுநாயககாவிலை பிளேன் எடுத்தா அடுத்த இருபது நிமிஷத்திலை பலாலியிலை நிப்பாய், உனக்கேன் இந்தக் றெயில் பயணமெல்லாம்?" யாழ்ப்பாணத்தில் இருந்து பிரசாத்தின் தாய் தங்கம்மா முதல் நாள் வரை தொலைபேசியில் இறைஞ்சியும் கேட்டால் தானே.

"அம்மா! கனகாலத்துக்குப் பிறகு வாறன், யாழ்தேவி எப்பிடி இருக்குதெண்டும் பார்க்காவேண்டாமோணை?"

ஒருமாதிரி தன் பிடிவாதத்தைக் காட்டி இன்று அதைச் சாதித்தும் காட்டும் முனைப்பில் கோட்டைப் புகையிரத நிலையம் முன் நிற்கிறான் இவன். தம்பிராசா ரிக்கட் எடுத்து வருவது தெரிகிறது.

"தம்பிராசா! இந்தப் பத்து நாளும் திக்குத் தெரியாமல் மாறியிருக்கிற கொழும்பிலை நீயும் இல்லையெண்டா என்பாடு கஷ்டமாயிருந்திருக்கும்" தன் நன்றியறிதலை காட்டும் தருணமிது என்று பிரசாத் ஆரம்பித்தான்.

"சும்மா போங்கோ அண்ணை, இதெல்லாம் என்ன பெரிய உதவியோ, உங்கட அப்பா எவ்வளவு தங்கமானவர், சுறுட்டுக் கொட்டிலுக்குள்ள இருந்த என்னை கொழும்பு காண வச்சு இப்ப நான் பேர் சொல்லுறது மாதிரி இருக்க அவர் தானே காரணம்" தம்பிராசா சாகும் வரைக்கும் கடன் கழிப்பான் போல.

பிரசாத்தின் தகப்பன் கனகசபை தமிழ் வாத்தியாராக இருந்தவர், கூடவே தோட்டவேலையும். வெள்ளன நாலு மணிக்கே தோட்டப்பக்கம் போய் இறைப்பு முடிச்சு பிறகு வீடு வந்து தாவடிப்பள்ளிக்கூடம் போய் பிறகு பின்னேரம் பள்ளிக்கூடம் முடிச்சதுக்குப் பிறகு மீண்டும் தோட்டத்தை எட்டி ஒருக்கால் பார்த்து விட்டு இணுவில் கந்தசுவாமி கோயிலுக்குப் போய் அங்கே இருக்கிற மடத்தடியில் இருந்து உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியலைப் பேசிவிட்டு இரவு ஒன்பது மணிச் செய்தியைக் கேட்டு விட்டுப் படுக்கைக்குப் போகும் சுழற்சி முறை வாழ்க்கையைக் கொண்டவர்.

"உந்தப் பொயிலையால (புகையிலை) என்ன கோதாரி லாபம் கிடைக்குது, உணர்த்திப் போட்ட பொயிலை எல்ல்லாம் பிறகு நாட்கணக்கில் கிடந்து இழுபடும், முந்தியெண்டா சிங்கள நாட்டுக்கும்
போகும், இப்ப தண்டவாளமே இல்லாம சல்லிக்கல்லு குவிஞ்சிருக்கு, உது உங்களுக்குத் தேவையோ?" பிரசாத்தின் தாய் என்னதான் சொன்னாலும் அவர் கேட்டால் தானே.

"இஞ்சை பாரப்பா! என்ர அப்புவின்ர காலத்திலை இருந்து செய்யிற தோட்டம், பணத்தை நம்பியே நான் செய்யிறனான்? தோட்டத்துக்குள்ளை இறங்காட்டி எனக்கு சீவன் போனது மாதிரி" பிடி கொடாமல் கனகசபையர் கதைப்பார்.

இனிமேல் பணப்பயிர்களை உற்பத்தி செய்வதை நிறுத்தி சீவனோபாய உற்பத்தியை பெருக்க வேணும் என்று விடுதலைப்புலிகளின் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் தமீழீழமெங்கும் சொன்ன காலத்திலை மட்டும் பக்கத்திலை இருந்த மாமியாட்களின் காணியிலை தக்காளி போட்டு காலம் தள்ளினார். இதெல்லாம் தொண்ணூறாம் ஆண்டுகளிலை.

கனகசபையரோடு தோட்டத்தில் கூட மாட வேலை செய்து , இறைப்புக்கு வந்து, புகையிலை வேளாண்மை முடிந்து கோடா போடும் வரை துணையாய் இருந்தவன் மாரிமுத்து. மாரிமுத்தன் தான் உவரின்ர பி.ஏ என்று பிரசாத்தின் அம்மா கிண்டலடிப்பார். மாரிமுத்துவின் மகன் தான் இந்த தம்பிராசா. அதிகம் படிக்காத தம்பிராசா சுருட்டுக் கொட்டிலுக்குள் தான் வாழ்க்கையைத் தேடப்போனான். ஆனால் கனகசபையர் தன்னுடைய சொந்தக்காரரின் வெள்ளவத்தைக் கடைக்கு அவனை அனுப்பி வைத்தார். படிக்காக விட்டாலும் தம்பிராசா நல்ல விசயகாரன் பத்து வருசத்துக்குள்ளை பம்பலப்பிட்டியில் ஒரு சின்ன பலசரக்குக் கடை போடுமளவுக்கு முதலாளி ஆகி விட்டான்.

பிரசாத் இருபது வருஷங்கள் கழித்து நாட்டுக்கு வருகின்றான் என்று அறிந்த நாள் முதல் அவனுக்கு தேவையான தங்குமிட வசதியெல்லாம் ஏற்படுத்திக் கொடுத்ததோடு தேவை ஏற்படும் போதெல்லாம் பிரசாத்தோடு ஒட்டிக்கொண்டு இடங்களைக் காட்டவும் போய்த் திரிந்தான். இந்த இருபது வருஷங்களில் கொழும்பு அடியோடு மாறி விட்டது. ஏதோ ஒரு வீறாப்பிலை இருந்திட்டன் என்று நினைத்துக் கொண்டான் பிரசாத்.

"யாழ்ப்பாணம் போவதற்கான ரயில் தயாராகி விட்டது" சிங்களத்தைத் தொடர்ந்து தமிழில் அறிவிப்பு கேட்டது. யாழ்தேவியை காணும் போது சொந்தக்காரரைக் காணும் சந்தோஷம். தாவி ஏறினான் பிரசாத். கூடவே தம்பிராசா பெட்டிகளோடு. இரண்டாம் வகுப்புப் பெட்டியில் யன்னல் ஓரமாக இடம் பிடித்துக் கொண்டான்.
"சரியண்ணை, அப்ப நான் வரப்போறன், சுகமாப் போட்டு வாங்கோ" தம்பிராசா பிரசாத்தின் கைகளை இறுகப்பற்றி விடை கொடுத்தான்.

சித்திரை வருஷப்பிறப்புக்கு ஊருக்குப் போற கூட்டம் பெரிதாக வரும் என்று நினைத்தான் பிரசாத். ஆனால் இப்பதானே சொகுசு பஸ், பிளேன் என்று இருப்பதால் சனத்துக்கு நிறைய சொய்ஸ், என்று முன்னால் இருந்த வெறும் சீட் ஒன்றைப் பார்த்து முணுமுணுத்தான்.

வவுனியா பல்கலைக் கல்லூரியில் கொஞ்சக் காலம் படித்த காலத்தில் வெள்ளி இரவு யாழ்தேவி எடுத்து வந்து கொழும்பில் சீமா (CIMA) கிளாசுக்கு சனிக்கிழமை போய் விட்டு பிறகு ஞாயிறு கொன்கோர்ட், ஈரோஸ் பக்கம் படம் பார்க்க ஒதுங்கி விட்டு பிறகு மீண்டும் வவுனியாவுக்கு ரயில் எடுத்த காலம் நினைவில் வந்து மோதியது. யாழ்தேவியின் டீசல் கலந்த ஒரு நச்சு மணமே பெர்பியூம் போல நாசிக்குள் நிறைந்திருந்தது.

தன் முதுகில் சுமந்து உப்பு மூட்டை காவுவது போல மெல்ல மெல்ல யாழ்தேவி தாள லயத்தோடு பயணிக்க ஆரம்பித்தாள். யன்னல் பக்கமாக குவிய வைத்த பிரசாத்தின் முகத்தை குப்பென்று காற்று அடித்து விட்டுப் போனது.

"இதயம் படத்திலை வாற முரளி மாதிரித் தான் இவர் யாழ் தேவியில போனா கற்பனை லோகத்துக்குப் போயிடுவார்" பிரசாத்தைப் பார்த்து கிண்டலடித்த வாசன் பக்கத்தில் இருப்பது போலப் பிரமை. அவனும் இவனோடு கூடவே சீமா கிளாசுக்கு கொழும்புக்கு வாற கூட்டாளி. கடைசியாக எப்ப நான் அவனைப் பார்த்தேன்.

"மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா" அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.
Posted by கானா பிரபா at 7:15 PM 9 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, November 13, 2009

"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை" - போக முன்

இன்று உலகளாவிய ரீதியில் இணையம் அறிமுகப்படுத்திய நாள் (நவம்பர் 13, 1990)சுபயோக சுப தினத்தில் ஒரு தொடரை ஆரம்பிக்கலாமே என்று முனைப்போடு வந்திருக்கிறேன். இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)

1993 ஆண்டில் இதே மாதிரி ஒரு நாள் மதிய நேரம். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் (பல்கலைக்கழக நுழைவு) படித்துக் கொண்டிருக்கின்றேன். இந்து நாகரீக பாடம் ஆரம்பமாகும் நேரமது. சற்று முன்னர் இடைவேளை மணி நேரம் முடிந்தாலும் ஃபாதரின் கன்ரீனை விட்டு விலகி வரவிரும்பாமல் கூட்டாளிமார் ராசனும் விக்கியும் அங்கேயே நிக்கிறாங்கள் போல. நான் வகுப்பின் மொனிட்டர் ஆச்சே, விரும்பியோ விரும்பாமலோ வந்து வாங்கில் குந்தி இருக்க வேண்டிய நிலையில் என் கதிரையில் போய் இருக்கின்றேன். பக்கத்துக் கதிரையில் இருந்து ஒரு இயக்கம் சம்பந்தமான ஏதோ ஒரு நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றான் பேரின்பன். இவன் விடுதலைப் புலிகளின் மூதூர் பிராந்திய தளபதியாக எண்பதுகளில் இருநது வீரச்சாவடைந்த மேஜர் கணேஷ் இன் தம்பி. திருகோணமலையில் இருந்து மேல் வகுப்புப் படிப்புக்காக யாழ்ப்பாணம் வந்திருக்கின்றான். முஸ்லீம் மகாவித்தியாலயம் பக்கமாக இருக்கும் ஒரு வீட்டில் தான் தங்கி இருந்து படிக்கின்றான். பொதுவாக யாரோடும் அதிகம் பேசமாட்டான். கேணல் குமரப்பா மாதிரி இருக்கும் தடித்த மீசை ஆனால் செக்க சிவந்த மலையாளி போல கன்ன உச்சி பிரித்து வாரப்பட்ட தலையுமாக அவனே ஒரு போராளியின் மிடுக்கில் இருப்பான்.அவனையும் ரியூசன் வகுப்பில் ஒருத்தி துரத்தித் துரத்திக் காதலித்தாள், ஆள் மசிந்தால் தானே.
ஏனோ தெரியவில்லை மற்ற நண்பர்களை விட என்னோடு மட்டும் உரிமையெடுத்துப் பழகுவான். வாசிப்புக்கு கம்பெனி கொடுக்கும் தோழன் அவன்.

"என்ன மச்சான் பிரபு எழுதிக்கொண்டிருக்கிறாய்" என்னைப் பார்த்துக் கேட்கின்றான். (பிரபு என் செல்லப் பெயர்). இந்து நாகரீகம் எடுக்கும் ரீச்சர் திருமதி நாகேஸ்வரன் வரும்வரைக்கும் எழுதிக் கொண்டிருந்த அந்த எழுத்துப் பதிவைக் காட்டுகின்றேன் அவனுக்கு. அந்தக் கதை அப்போது என்னைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வைத்து எழுதிய ஒரு கதையின் கால் பங்கு. "தொடர்ந்து எழுது மச்சான் நான் ரைப் பண்ணித் தாறன்
என்று சொன்ன பேரின்பன் ஆர்வமாக அதைப் படிக்கத் தொடங்கினான்.

எனது கல்லூரிப் படிப்பு முடியும் தறுவாயில் ஓய்ந்தது அந்தக் காதல் கதை எழுதும் படலம். அவனும் ஒவ்வொரு அத்தியாயமாக ரைப் பண்ணிக் கொண்டு வந்து காட்டுவான். அப்போதெல்லாம் கணினியே இல்லாத காலம். ரைப்ரைட்டர் மூலமாகவே அவன் தட்டச்சிக் கொண்டு வந்தான். கற்பனையும் நிஜமும் கலந்த அந்தக் கதை முடிந்த போது அதை பைண்ட் பண்ணி எனக்குப் பரிசாகவே தந்தான். அப்போது அதற்கு நான் சூட்டிய பெயர் "மண்ணில் இந்தக் காதல் இன்றி" (கேளடி கண்மணி படம் வந்தபோது ஏற்பட்ட பாதிப்பு ;-)

மேற்படம் : பேரின்பன் அப்போது ரைப்ரைட்டரில் தட்டாச்சித் தந்த ஒரு அத்தியாயம்

மூன்று வருஷங்களுக்கு முன்னர் நான் தாயகம் போனபோது அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரே மக்கு வாசனை வீசிய அந்தப் புத்தக அறையைத் திறந்து "மண்ணில் இந்தக் காதலின்றி" என்ற அந்த காதல் கதையைத் தேடினேன். பலத்த தேடலில் லேசான மழை ஒழுக்கு ஓரமாக ஒட்டியிருந்த சுவடோடு பேரின்பன் அன்று எனக்கு பைண்ட் பண்ணித் தந்த என் காதல் கதைப் பதிவு கிட்டியது. எத்தனையோ இடப்பெயர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்களுக்கும் அப்பால் தப்பியிருந்த அந்த பைண்ட் பண்ணப்பட்ட புத்தகம் இப்போது என் பக்கத்தில் இருக்கு.
ஆனால் பேரின்பன் என்னவாகியிருப்பான், இயக்கத்துக் போயிருப்பானா, கல்யாணம் முடிச்சு நாலைந்து பிள்ளைகளுக்குத் தகப்பனாகியிருப்பானா? தெரியவில்லை :(

"மண்ணில் இந்தக் காதலின்றி" என்று அன்று எழுதி வைத்த கதையை ஆசையோடு புரட்டிப் பார்த்து மேலதிகமாக சில சம்பவங்களைச் சேர்த்து எழுத ஆரம்பிக்கின்றேன்
"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை" என்று......

பிற்குறிப்பு:
இந்தத் தொடருக்காக முகப்புப் படம் செய்ய பல நாட்கள் என்னிடம் கஷ்டப்பட்ட ஆயில்யனுக்கு சிறப்பு நன்றிகள்
Posted by கானா பிரபா at 8:41 PM 34 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, October 31, 2009

"வானொலி மாமா" சரவணமுத்து நினைவாக

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.

ஈழத்துத் தமிழ் ஒலிபரப்புக்களின் முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் என்பதோடு இவர் ஆரம்பித்து வைத்த சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சி பல்லாண்டுகாலமாக நீடித்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதோடு, "வானொலி மாமா" என்ற கெளரவ அடைமொழியை இவரைத் தொடர்ந்து வந்த பல நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பின்னாளில் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. வானொலி ஒலிபரப்புக் கலையின் தனித்துவங்களான திரு சோ.சிவபாதசுந்தரம், மரைக்கார் ராம்தாஸ் போன்ற கலைஞர்களின் அறிமுகத்துக்குத் துணை புரிந்ததோடு, ஆங்கிலேயர் இலங்கை வானொலியை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழில் நிகழ்ச்சிகள் வரவேண்டும் என்று முனைப்பு எடுத்துச் செயற்பட்டதோடு நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் திரு.சோ.நடராஜாவுடன் இணைந்து நிகழ்ச்சிகளைப் படைத்திருந்தார். இலங்கையர்கோனின் "விதானையார் வீடு" என்ற நாடகத்திலும் ஈழத்தின் முக்கியமான கலைஞர்களோடு இவர் நடித்திருந்தத குறிப்பிடத்தக்கது.

வானொலி மாமா ச.சரவணமுத்து குறித்த நினைவுப்பகிர்வை வழங்க ஈழத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர், வானொலிப் படைப்பாளி திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களை வானலையில் அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வைத் தொடர்ந்து கேட்கலாம். ஒலிப்பகிர்வின் முழுமையான எழுத்து வடிவைப் பின்னர் தருகின்றேன்.



இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி ஆலோசகராக விளங்கி வரும் வானொலி மாமா திரு.நா.மகேசன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வினைத் தொடர்ந்து தருகின்றேன்.

நான் அறிந்த வானொலி மாமா
அமரர் திரு. ச. சரவணமுத்து


இலங்கை வானொலியில் மிகவும் புகழ்வாய்ந்த நிகழ்ச்சி “சிறுவர் மலர்” என்னும் சிறுவர் நியழ்ச்சி. எட்டுவயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களைக் கொண்டு தயாரித்து, ஞாயிறுதோறும் காலையில் 45 நிமிடங்கள் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் மட்டுமல்ல வளர்ந்தவர்களும் கேட்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் ஞாயிறு எப்போ வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, முதலாவது “வானொலி மாமா” என்ற கற்பனைப் பாத்திரமாக நிகழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டு நடத்தியவர் மதிப்புக்குரிய திரு. எஸ். சிவபாதசுந்தரம் என்று அறிகக் கிடக்கிறது. பெயர் ஒலிபரப்பாகாத இந்தக் கற்பனைப் பாத்திரத்தை பலர் ஏற்று நிகழ்ச்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்.

இந்த வானொலி மாமாக்களிலே நான் அறிந்த பலர் இருப்பினும், “வானொலி மாமா” என்ற அடைமொழியை நெடுங்காலம் தாங்கி நின்றவர் அமரர் திரு. ச. சரவணமுத்து அவர்கள். இவர் நெடுங்காலமாக கொழும்பில் வெள்ளவத்தையில் வசித்து வந்தார். நானும் வெள்ளவத்தையில் நெடுங்காலமாக வசித்து வந்தபடியால், அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நான் வெளிநாடு வருவதற்குமுன் கிட்டியது. பின்னரும் இலங்கை சென்ற போதெல்லாம் “மாமா” வைச் சந்திக்காது வருவதில்லை. இன்று புலம் பெயர்ந்து வாழும் பல வானொலிக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை, சரவணமுத்து மாமாவைச் சாரும் என்றால் அது மிகையாகாது. அன்னார் பழகுவதற்கு மிகவும் இனியவர். உயர்ந் குணங்கள் உடையவர். உயர்ந்து வளர்ந்த தோற்றம் உடையவர். இன்சொல் அன்றி வன்சொல் பேசாதவர். அவர் தனித் தன்மையோடு சிறுவர் மலர் சிகழ்ச்சியை தயாரித்து வழங்கிவந்தார். சிறுவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, இயற்கையாக நடிக்க வகை செய்தவர்களிலே இவர் ஒரு முன்னோடி.

சென்ற 29. 10. 2009 அன்று இவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயர் எய்தினேன். அமரர் சரவணமுத்து அவர்க்ள் ஒரு வானொலி நிலையக் கலைஞர் என்றுதான் பலர் கருதுவார்கள். அன்னார் இலங்கை வொனொலின் அழைப்பை ஏற்றுச் சென்ற ஒரு தயாரிப்பாளர். (guest Producer) ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராழுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சரவணமுத்து மாமா கலைத்துறையில மட்டுமல்லாது, சமய, சமூகப் பணிகளிலும் நெடுங்காலமாகச் சேவை செய்த பெரும் தொண்டன். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்த ஒரு பெரியார்.

திருக் கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு நெடுங்காலம் தொண்டாற்றியவர். கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராக இருந்து பல பணிகளில் ஈடுபட்டவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றித் தமிழ்த் தொணடு செய்தார். அன்னாரின் மறைவு, இலங்கைத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் மக்களக்கும்; உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் செய்த பணிகளும், தொண்டுகளும் அன்னாரைத் தக்கோன் எனக் காட்டி நிற்கின்றன.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.”


நா. மகேசன்
சிட்னி, அவுஸ்திரேலியா
1. 11. 2009


( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).

கொழும்பு தமிழ்ச்சங்கம் விடுத்த இரங்கல் அறிக்கை

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்களின் மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி இலங்கையில் முதன்முதல் சிறுவர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்திய “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்கள் தனது 94ஆவது அகவையில் 30.10.2009 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரது மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது. அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் (1966ஃ1972) துணைத் தலைவராகவும் (1976ஃ1980) பல ஆண்டுகள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து சங்கத்தின் கலை, இலக்கிய செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர். அவரது சேவையினைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்தாகப தின விழாவில் “சங்கச் சான்றோர் - 2006’ விருது அளித்துக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது. முதுமையெய்தியும் தள்ளாதவயதிலும் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார். 13.09.2009ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் 67ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் இலக்கிய ஆளுமையும் நிரம்பியவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் கொழும்பு விவோகானந்த சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபை (சரஸ்வதி மண்டபம்) உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை ஆகிய அமைபப்புக்களிலும் அங்கம் வகித்து ஆற்றிய சேவைகள் அளப்பரியன. அரசகருமமொழித் திணைக்களத்தில் அதிகாரியாகவும், பாராளுமன்றத்தில் மொழி பெயர்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். வானொலியில் சைவநற்சிந்தனைகள், பௌத்த நற்சிந்தனைகள் இரண்டையும் நடாத்தினார். அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி: நினைவுப்பகர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்
Posted by கானா பிரபா at 12:27 PM 3 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, October 17, 2009

"தொப்புள் கொடி" தந்து தொலைந்த "நித்தியகீர்த்தி"

தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.

நித்திய கீர்த்தி என்ற மனிதர் வெறும் படைப்பாளியாக அறியப்படவில்லை, அந்நியப்படவில்லை. எமது மக்களின் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்த கருணை உள்ளம் கொண்ட மனிதராக திகழ்ந்தவர் என்பதை நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் வாழ்ந்த காலத்தில் செயலாற்றிய பங்களிப்புக்கள் மூலம் பலரும் நன்கறிவர். நாடகப்பிரதி எழுத்தாளனாக, புனைகதை ஆசிரியனாகத் தன்னைப் படைப்பாளியாகக் காட்டியதோடு, அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தின் ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவராகவும், தொண்டராகவும் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழ்ச்சமூகம் சொல்லெணா நெருக்கடியைச் சந்திக்கும் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகத்தொண்டனின் பிரிவும் பேரிழப்பாக அமைந்து விடுகின்ற சூழ்நிலையில் அமரர் நித்தியகீர்த்தி அவர்களின் மறைவும் அவ்வமயம் பொருத்திப் பார்க்க வேண்டிய கவலையோடு ஒரு வெறுமையும் சூழ்ந்து கொள்கின்றது.

நித்தியகீர்த்தி அவர்களின் புகைப்படத்தினை இணையத்தில் தேடியபோது அவரைப் பற்றிய இன்னொரு புதிய தகவலும் கிட்டியது. அம்மா என்ற பெயரில் யூன் 2005 இல் வலைப்பதிவு ஒன்றைக் கூட ஆரம்பித்து எழுதியிருக்கின்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மன ஓசை வெளியீடாக நூலுருக்கண்ட தனது "தொப்புள் கொடி" என்ற நாவலைக் கூடத் தன் ஈழ நேசத்தின் பிரதிபலிப்பாகத் தான் எழுதி வெளியிட்டார் என்பதை அந்த நாவலுக்கான சிறப்புக் குறிப்புக்கள் காட்டி நிற்கும். இந்த நாவல் வெளியீட்டின் அரங்கத்தைக் காணாது நிரந்தர உறக்கத்திற்குப் போய்விட்டார் இப்போது.

இன்றிரவு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாயிலாக , விக்டோரியா ஈழத்தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் , படைப்பாளி "பாடுமீன்" சிறீஸ்கந்தராசா அவர்களை அமரர் நித்திய கீர்த்தி நினைவுப் பகிர்வை வழங்க அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.



விக்கிபீடியா தளத்தில் நித்தியகீர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள்

தெ. நித்தியகீர்த்தி (மார்ச் 4, 1947 - ஒக்டோபர் 15, 2009, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி, இலங்கை). அவுஸ்திரேலிய, ஈழத்து எழுத்தாளர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.

இவர் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வந்தார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.

இவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

* மீட்டாத வீணை (புதினம்), கமலா வெளியீடு, முதற் பதிப்பு - மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்
* தொப்புள் கொடி (நாவல்) மனஓசை வெளியீடு, முதற் பதிப்பு - சித்திரை 2009, சுவடி, இந்தியா


ஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:

* தங்கப் பதக்கம்
* தங்கம் என் தங்கை
* நீதி பிறக்குமா?
* பாட்டாளி
* பிணம்
* மரகதநாட்டு மன்னன்
* வாழ்வு மலருமா

நியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:

* கூடு தேடும் பறவைகள்
* மரணத்தில் சாகாதவன்

அவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:

* பறந்து செல்லும் பறவைகள்
* ஊருக்குத் தெரியாது
* வேங்கை நாட்டு வேந்தன்

இவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.

நூலகத் திட்டத்தில் இவரது "மீட்டாத வீணை" நாவல்

வடலி இணையம் மூலமாக இவரின் புதிய நாவலான "தொப்புள் கொடி" இணைப்பு

நன்றி:

அஞ்சலியைப் பகிர்ந்து கொண்ட பாடுமீன் சிறீஸ்கந்தராஜா
அமரர் நித்தியகீர்த்தியின் வாழ்க்கைக்குறிப்பைப் பகிர்ந்த விக்கிப்பீடியா
மன ஓசை கூகிள் குழுமம்
வடலி இணையம்
Posted by கானா பிரபா at 1:57 AM 4 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, October 01, 2009

கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. அதனையொட்டி திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் "ஈழத்து முற்றம்" நிகழ்ச்சிக்காக அவரை நான் வானலையில் சந்தித்த பேட்டியை இங்கே தருகின்றேன்.

ஒலி வடிவில்


வணக்கம் திரு.கே.எஸ்.பாலசந்திரன் அவர்களே

வணக்கம்

ஆரம்பத்திலே தனிநடிப்புத் துறை, பின்னர் வானொலி தொலைக்காட்சி நடிகர் அத்தோடு ஈழத்து திரைப்பட நடிகர் என்று பல முகங்களிலே உங்களுடைய நடிப்புத்திறனை ஒரு கலைஞராக நீங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இவற்றைத் தவிர எழுத்துத்துறையிலே ஆரம்பகாலத்தில் இருந்து உங்களுடைய முயற்சிகள் எப்படி இருந்தன என்பது பற்றிச் சொல்லுங்களேன்.

நான் இளைஞனாக இருந்தபோது ஆரம்பத்தில் சிரித்திரன் சஞ்சிகையிலே சிரிப்புக்கதைகள் அதைச் "சிரி கதைகள்" என்று சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் சொல்லுவார், அப்படிச் சிரிகதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். அதன் பிறகு சிறுகதைகளை அவ்வப்போது இலங்கையின் பிரபல தினசரிகளின் வாரப்பதிப்புக்களிலே எழுதியிருக்கிறேன்.

இவற்றை விட எழுத்துத்துறை என்று சொன்னால் இலங்கை வானொலியில் எனது நகைச்சுவை நாடகங்களும் அதே போல சமூக நாடகங்களும் குணசித்திர பாத்திரங்கள் நிரம்பிய சோகமயமான நாடகங்கள் கூட ஒலிபரப்பாகியிருக்கின்றன. அவற்றை நான் எழுதியிருக்கிறேன். "கிராமத்துக் கனவுகள்" என்பற தொடர் நாடகம் அவற்றுள் ஒன்று.

கிராமத்துக் கனவுகள் போன்ற நாடகப் பிரதிகள் போன்றவற்றையும், சிரிகதைகளையும் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இவற்றை சிரித்திரன் தவிர்ந்த மற்றைய பத்திரிகைகள் மூலமாக வந்திருக்கும் உங்கள் எழுத்தாக்கங்கள் பற்றி?

நான் எழுதிய சிறுகதைகள் "மலர் மணாளன்" என்ற எனது புனைபெயரிலே வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. அவற்றை விட நிறைய கலை சம்பந்தமான கட்டுரைகளை இலங்கையின் தினசரிகளான தினபதி, தினகரன், வீரகேசரி போன்றவற்றின் வாரப்பதிப்புகளிலே நிறையக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.

ஆரம்பகாலகட்டத்திலே ஈழத்து சினிமாவின் ஒரு மைல் கல் அல்லது ஒரு மகுடமாகத் திகழ்கின்ற திரைப்படமான "வாடைக்காற்று" என்ற ஒரு திரைப்படத்திலே ஒரு அருமையான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தீர்கள். இப்பொழுது உங்களின் ஒரு புதிய முயற்சியாக "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற கிட்டத்தட்ட வாடைக்காற்று நாவல் போன்ற கடலோரத்து வாழ்வியலைப் பிரதிபலிக்கக் கூடிய நாவல் ஒன்றை உருவாக்கியிருக்கின்றீர்கள்.
உங்களின் இந்த "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் பற்றிச் சொல்லுங்களேன்.


"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற இந்த நாவல் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று கடலோடிகளின் கதை சொல்லும் ஒரு நாவல். எனக்கு எப்பொழுதுமே இந்தக் கடலோடிகள் மீது மிகுந்த பற்று, விருப்பம் இருக்கிறது. காரணம் இந்த நாவலின் என்னுரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். கடலில் தினமும் அலைகளோடு ஜீவமரணப் போராட்டம் நடாத்தி மீளும் அல்லது தோற்றுப் போகும் சமூகத்திடம் எனக்குள்ள நியாமான மதிப்பும், இரக்கமும் தான் இந்த நாவலை எழுதத் தூண்டியிருக்கின்றது என்று.

நீங்கள் குறிப்பிட்ட இந்த வாடைக்காற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அந்தத் திரைப்படத்திலே நடித்த நடிகர், உதவி இயக்குனர் என்ற வகையிலே அங்குள்ள அந்த மக்களின் வாழ்வியலை அன்றாட வாழ்க்கையை அவதானித்து என் மனதில் புடம் போட்டு அதன் அடிப்படையிலே எழுதியது தான் இந்த நாவல்.

அப்படியென்றால் "வாடைக்காற்று" காலத்தில் இருந்தே இந்த நாவல் குறித்த கரு உங்கள் அடிமனதிலே தங்கியிருக்கின்றது, அப்படித்தானே?

ஆமாம், அந்தக் களம் வேறு. நான் பாவித்த இந்த நாவலுக்கான கதைக்களம் வேறென்றாலும் கூட அந்தக் கருவை நான் நீங்கள் சொன்னது போல வாடைக்காற்றுத் திரைப்படக் காலத்தின் போது தான் நான் மனதில் உருவகித்து காலம் செல்ல விரிவு படுத்தி 306 பக்கங்கள் உள்ள ஒரு நாவலாக எழுதினேன்.

அப்படியென்றால் 33 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த நாவலின் கரு இப்போது நூல் வடிவிலே பிரசவமாகியிருக்கின்றது. இந்த வேளை "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" என்ற நாவலை எழுதி நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த போது பதிப்பாக்கம் என்ற வகையிலே நீங்கள் எடுத்த முயற்சி பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்.

உண்மையில் இந்த நாவலை நூல் வடிவில் காணவேண்டுமென்ற ஆசை நீங்கள் சொன்னது போல நீண்ட காலமாக இருந்தது. இந்தக் கதையின் பின்னணி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காலப்பகுதி. இதை நூல்வடிவிலே கொண்டு வருவதற்காக நான் பல பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டேன். ஏதோ பிற காரணிகளினால் அது தடைப்பட்டுப் போன பின்னர் நீங்கள் எழுதிய கம்போடியப் பயணம் பற்றிய "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" என்ற அந்த நூலை வெளியிட்ட வடலி பதிப்பகம் இதற்குப் பொருத்தமானவர்கள் என்று நீங்கள் வழிகாட்டி விட அதையொட்டித்தான் நான் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

மிகுந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், வடலிப்பதிப்பகத்தைச் சார்ந்த அகிலன் அவர் ஒரு படைப்பாளி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர். அதே போன்று சயந்தன், இருவரும் இணைந்து மிகவும் உற்சாகமாக எனது நாவலை வெளியிடுவதற்கு உதவி புரிந்தார்கள். மிகவும் சிரமப்பட்டார்கள். உங்களுக்குத் தெரியும் 306 பக்கமான ஒரு நாவல் பிரதியை வெளியிடும் போது அதில் பல தவறுகள், எழுத்துப் பிழைகள் எழலாம். அவற்றை எல்லாம் திருத்துவதற்கு அவர்கள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக நாங்கள் ஈ மெயில் மூலமாக எத்தனையோ பிழைகளைக் கண்டு திருத்தி பிழைகளற்ற ஒரு நாவலாக வெளியிடுவதற்கு அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அந்த வடலிப்பதிப்பகம் நம்மவர்கள் சார்ந்த பதிப்பகம் என்ற வகையிலே எமது படைப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றவர்களாகவும், எமது படைப்பாளிகளை மதிக்கின்றவர்களாகவும் நான் அவதானித்தேன். அந்த வகையிலே அந்தப் பதிப்பகம் பக்கம் கைகாட்டி விட்ட உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றியும். இந்த நாவலை நான் நூல் வடிவில் கொண்டு வருவதற்கு என்னை விட அவர்கள் அதிகம் சிரமப்பட்டார்கள்.


பொதுவாக ஒரு நாவலுடைய முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடியது அதன் அட்டைப்படம், அப்படியானதொரு அட்டைப்படத்தை நீங்கள் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்த பொழுது எந்த ஓவியர் இந்த நாவலுக்கு பொருத்தமானவர் என்று நினைத்தீர்கள்?

சயந்தன் ஏற்கனவே ஒரு இணையத்தளத்திலே குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கதை, கதைக்களம் எங்கள் யாழ்ப்பாண மண். இவற்றுக்குப் பொருத்தமான ஒரு ஓவியர் ஏறக்குறைய அந்தக் காலகட்டத்திலே வாழ்ந்த, அப்படியான நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியராக இருக்கவேண்டும். ஏனென்றால் எங்கள் மண்ணின் முகங்களை அவர் சிறப்பாக வரைந்து தருவார் என்ற நம்பிக்கையை சயந்தனும் எனக்குத் தந்தார். எனவே தான் நான் இந்திய ஓவியர்களைப் பயன்படுத்தியிருக்கலாம், அது
சுலபமான காரியமாக முடிந்திருக்கும். இருந்தாலும் கூட இந்த நாவலுக்கு குறிப்பாக எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவர் வரைவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, எனக்கு நண்பராக ஒரு காலத்திலே இருந்த, தொடர்பு அற்றுப் போய் விட்ட சிறந்த ஓவியர் ரமணி அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து இப்படியான ஒரு நாவலுக்கு நீங்கள் தான் அட்டைப்படம் வரைய வேண்டும் என்று கேட்டு, இந்த நாவலின் கதையை அவருக்கு அனுப்பி வைத்து அதைக் கொண்டு அவர் இந்த நாவலுக்கான சிறப்பான ஓவியத்தை
வரைந்து தந்தார். உண்மையிலேயே யாழ்ப்பாணம் ரமணி அவர்களுடைய ஓவியம் இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் சிறப்பாக நான் அதைக் கருதுகிறேன்.

நிச்சயமாக இந்த "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலின் அறிமுகம் இணையத்தளங்களிலே வெளியிடப்பட்ட போது இந்த அட்டைப்படத்தைப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உண்மையிலேயே புலம்பெயர்ந்த எமது படைப்பாளிகள் தமது எழுத்துக்களை வெளிக்கொணரும் போது ரமணி போன்ற எமது தாயக மண்ணின் பிரதிபலிப்பைக் காட்டக் கூடிய ஓவியர்களை இதுவரை தேர்ந்தெடுத்ததில்லை என்று தான் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை எண்ணுகின்றேன். உண்மையிலேயே உங்களுடைய நாவலுக்கு ரமணியின் அட்டைப்படம் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.

இந்த கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நாவல் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கின்ற கதையா, அல்லது முழுமையான அந்த கடலோர வாழ்வியலைப் பிரதிபலித்து அதிலே வருகின்ற பாத்திரங்கள் எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா?


உண்மையில் இந்தக் கதையில் ஒரு பிரதான பாத்திரம், அவரைச் சுற்றிய சம்பவங்கள் என்று இருந்தாலும் கூட அவர் சார்ந்த மற்றைய பாத்திரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டேன். வழக்கமாக இந்த முரண்பாடுகளை வைத்துத்தான் அனேகமான படைப்புக்கள் வருவதுண்டு. அதாவது பாத்திரங்களுக்கிடையே, உறவுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், முதலாளி - தொழிலாளி பேதங்கள் இப்படிப் பலவிதமான பிரச்சனைகளைத்தான் ஆதாரமாகக் கொண்டு நாவல்களை அமைப்பதுண்டு. அப்படியில்லாமல் யதார்த்தமாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நான் அப்படியே வழங்க முயற்சித்திருக்கின்றேன். இதில் வில்லன் பாத்திரம் என்று யாரும் இல்லை. ஆனால் எல்லோருமே கதாநாயகர்களாக இருக்கிறார்கள்.

இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் வகையிலே நாவல் குறித்த விதந்துரையைப் பகிர்ந்தவர் யார் என்று குறிப்பிடுங்களேன்

இந்த நாவலுக்கான முன்னுரையை எழுதியவர் தமிழ் கூறும் நல்லுலககெங்கும் அறியப்பட்ட ஒரு சிறந்த அறிவிப்பாளரும், கலையுலகின் ஒரு சிறப்பான கலைஞனும் என்னுடைய சமகாலக் கலைஞனுமான பி.எச்.அப்துல்ஹமீத் தான் இந்த நாவலுக்கான முன்னுரையை, என்னைப் பற்றிய அறிமுக உரையை இணைத்து வழங்கியிருக்கின்றார்.

நான் அவரை அணுகியதற்குக் காரணம் அவருடைய ரசனை எப்படியென்று எனக்குத் தெரியும். எமது நாடகங்களிலே நாங்கள் நடிக்கும் பொழுது அவர் பல நாடகங்களை இயக்கியிருக்கின்றார். அவரை அறிவிப்பாளராக அறிந்தவர்கள் ஒருபுறமிருக்க அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளராக, ஒரு பாடலாசிரியராக, இறைதாசன் என்ற பெயரிலே நிறையப் மெல்லிசைப் பாடல்களை எழுதியிருகின்றார். அப்படி அவருக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவருக்குக் கலை மீது மாத்திரமல்ல எழுத்துத்துறையின் மீதும் அக்கறையும், திறனும் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும் என்ற அதே ஆவலுடன் என் கலையுலகத்தைப் பற்றி, என் வாழ்வைப் பற்றி மிகவும் அறிந்த அந்த நண்பரே என் நாவலுக்கும் முன்னுரை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.


"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் நூல் வெளியீடு குறித்த விபரங்களைத் தாருங்களேன்


என்னுடைய நாவல் கனடாவிலே ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Agincourt Community Centre என்ற இடத்திலே வெளியிடப்பட இருக்கின்றது. அதைப்போல மற்றைய இடங்களிலே விழா என்ற ரீதியில் நடைபெற முடியாவிடினும் நிச்சயமாக அறிமுகப்படுத்தப்படும், அறிமுக விழாக்களிலே அதுவும் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. வெளிநாடுகளிலே வாழுகின்ற அன்பர்கள் இந்த நாவலை வடலி பதிப்பகத்தின் இணையத்தளத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எமது வாழ்வியலின் பிரதிபலிப்பாக இருக்கும் இந்த நாவல் உலகளாவிய ரீதியிலே பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையோடு நிறைவாக நீங்கள் உங்கள் ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?

ஒரு நீண்ட காலக் கலை வாழ்க்கையிலே பலவிதமான சந்தோஷங்களை, வெற்றிகளை, தோல்விகளைக் கூட சம்பாதித்திருந்தாலும் அவ்வப்போது ஏதோவொரு நிகழ்வு என் நெஞ்சில் பதியும் வகையிலே சிறப்பாக அமைவதுண்டு. அந்த வகையிலே வானொலி நாடகங்களிலே தணியாத தாகமும், திரைப்படங்களிலே வாடைக்காற்றும், தனி நபர் நடிப்பு என்ற வகையிலே அண்ணை றைற்றும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற வகையிலே வை.ரி.லிங்கம் ஷோவும் இப்படிப் பல வெற்றிகள் என்னை அணுகிய போதும் எழுத்துத் துறையிலே எனக்கு மிகுந்த ஒரு வெற்றியைத் தரக்கூடிய ஒரு படைப்பாக "கரையத் தேடும் கட்டுமரங்கள்" என்ற நாவல் மீது நான் அபரீதமான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நிச்சயமாக உலகளாவிய ரீதியில் வாழும் என்னை நேசிக்கும் ரசிகர்கள், எனது இன்னொரு முகத்தைத் தரிசிக்கும் வகையிலே எனது நாவலுக்கும் ஆதரவுக்கரம் நீட்டு அதே வேளை நாவல் பற்றிய விமர்சனங்களை என்னோடு பங்கிட்டுக் கொள்வார்கள். என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களே ! மீண்டும் எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இப்போது உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றோம்

இந்த நேர்காணலை அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கும் வகையிலே ஒலிபரப்புச் செய்யும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் என்னை நேர்காணல் செய்த அன்புச் சகோதரன் கானா பிரபாவிற்கும் அனைத்து நேய நெஞ்சங்களுக்கும் எனது அன்பான, பணிவான வணக்கங்களைக் கூறி விடைபெறுகின்றேன்.

Posted by கானா பிரபா at 6:13 PM 9 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, September 21, 2009

"கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்

"தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. "

( கே டானியல் 15-12-83, "கே.டானியல் கடிதங்கள் )


வெற்றுத்தாள் எடுத்து ஊற்றுப் பேனாவை ஒரு தடவை உதறிவிட்டு எழுதத் தொடங்கினால் மடை திறந்த வெள்ளம் போல தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்து எழுதி முடிப்பது கடிதங்கள் கொடுக்கும் உபகாரம். ஒருவரின் எழுத்தின் போக்கை வைத்துக்
கொண்டே அவர் என்ன சொல்லவருகின்றார், அவருடைய மன நிலை எப்படி இருக்கின்றது என்பதைக் கடிதங்களில் பொதிந்திருக்கும்
வரி வடிவங்களே சாட்சியம் பகரும். இன்றைய மின்னஞ்சல் தொழில்நுட்பம் என்ற வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருப்பது
இம்மாதிரி மனம் விட்டுக் காகிதத் தாளில் பகிரப்படும் கடிதம் என்னும் கலையை. மேலை நாட்டு அறிஞர்களால் தமது இலக்கிய, வாழ்வியல் பகிர்வுகளைப் பெருமளவு கொட்டித் தீர்ப்பதற்கு இக் கடிதக்கலையே ஒரு வடிவமாகச் செயற்பட்டது. தமிழிலும் கூட மு.வரதராசனார், பேராசிரியர் நந்தி உட்பட்ட எழுத்தாளர் பெருமக்களால் கடிதவடிவிலேயே இலக்கியங்கள் சமைக்கப்பட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவ்விதமான கே.டானியலின் இளையமகளின் கணவர் மூலம் ஒரு கடித இலக்கியம் என் கை வந்து சேர்ந்தது. அது தான் "கே.டானியலின் கடிதங்கள்". இந்தக் கடித இலக்கியத்தினைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார் அ.மார்க்ஸ் அவர்கள்.
"அடையாளம்" என்ற அமைப்பின் வெளியீடாக டிசெம்பர் 2003 இல் இந்த நூல் 192 பக்கங்களுடன் வெளிவந்திருக்கின்றது.

என் வாசிப்புப் பழக்கம் கால மாற்றத்துக்கேற்ப மாறி வருகின்றது என்பதற்கு இந்த நூலை முழுமூச்சில் வாசித்து முடிக்கக் கொடுத்த வாசிப்பனுபவமே உதாரணம் காட்டியது. இப்போதெல்லாம் சிறுகதைகளையும், நாவல்களையும் தேடிப்பிடித்து வாசிக்கும் ஆர்வம் ஏனோ எனக்குக் குறைந்து, தமது வாழ்வனுபவங்களோடு காட்டும் இலக்கிய மற்றும் சமூக சிந்தனைகளை சமீபகாலத்தில் கட்டுரை வடிவில் தரும் படைப்புக்களைத் தான் தீவிரமாக வாசிக்கத் தூண்டுகின்றது. கற்பனை உலகை விட நிஜ உலகில் படிக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்பதற்கு இவ்வகையான பதிவுகள் ஒரு எடுத்துக்காட்டு என்பதும் ஒரு காரணம்.

"கே.டானியலின் கடிதங்கள்" என்ற நூலை எடுத்துப் பக்கங்களை விரிக்கும் போது கண் முன்னே கே.டானியலும் அ.மார்க்சும் உட்கார்ந்து விடுகின்றார்கள். தொடர்ந்து இறுதிப் பக்கம் வரை டானியலே பேச ஆரம்பிக்கின்றார். 1982 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1986 ஆம் ஆண்டு வரை தேதிவாரியாக இலங்கையில் நடைபெறும் சமூக, அரசியல், இலக்கிய நிகழ்வுகளைத் தன் பாணி விமர்சனத்தோடு மார்க்சுக்குச் சொல்லுக் கொண்டே போகின்றார். முறையாக நாள் குறித்து ஒரு வார சஞ்சிகைக்கு எழுதப்படும் சமுதாய விமர்சனப்பதிவுகளோடு ஒப்பிடும் போது கே.டானியலின் இந்தக் கடித எழுத்துக்களில் உள்ள நேர்மை ஒரு படி உச்சமாகவே இருக்கின்றது. காரணம் இந்தக் கடிதங்கள் இப்படியான நூலுருப் பெறும் என்று அப்போது கடிதம் எழுதிய டானியலோ அல்லது பெறுனர் அ.மார்க்சோ நினைத்திருக்கமாட்டார்கள்.

தான் வாழும் சமூகம் குறித்த அங்கலாய்ப்புக்களை இன்னொரு தேசத்தில் இருக்கும் ஒருவருக்குக் கடித வடிவில் காட்டிப் போன டானியலுக்கு கடிதங்களை எழுதும் போது எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களையோ, சமரசங்களையோ அல்லது பயத்தையோ காட்டவேண்ட்டிய அவசியம் இல்லை. அதை விட இன்னொரு காரணம் இவையெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட மனிதர் இவர் என்பதும் ஒரு நியாயம்.

இந்நூலில் பின்னட்டையில் குறிப்பிடுமாற் போல தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான கே.டானியல் 1982 - 1986 காலகட்டத்தில் அ.மார்க்சுக்கும் அவரது தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள். தனி நபர் சார்ந்த வெறும் கருத்துப் பரிமாற்றங்கள் என்ற நிலைமையைத் தாண்டிய இக்கடிதங்கள் தலித் இலக்கியம், சாதியம், தேசிய இனப்பிரச்சனை குறித்த ஒரு தலித்தியப் பார்வை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சிறந்த ஆவணமாக இத் தொகுப்பு அமைகின்றது.
தோழர் அ.மார்க்ஸ் அவர்களுக்கும், அவரது நண்பர்களும் காலப்பகுதியில் தஞ்சையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது பஞ்சமர் தொகுதியை வெளியிட வந்த எழுத்தாளர் கே.டானியலின் அறிமுகம் கிடைக்கின்றது. பின்னர் கே.டானியல் தஞ்சையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றது முதல் (ஜூன் 1982) இரண்டாம் முறையாக அங்கே யாழில் இருந்து வருவதற்காகப் புறப்படும் காலப்பகுதி (சனவரி 1986) வரை அ.மார்க்சுக்கும் அவரது நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இது. ஆனால் பெருமளவு ஆக்கிரமிப்பது கே.டானியல் எழுதி அ.மார்க்சுக்கு அனுப்பப்பட்டவையே.
கடிதங்களை வாசித்த கணமே கிழித்துப் போடும் பண்பைக் கொண்ட மார்க்ஸ் இடமிருந்து தப்பிப் பிழைத்தவை தான் இக்கடிதங்கள். அதுவும் தன் மனைவி கே.டானியலின் கடிதங்களைப் எப்படியோ பத்திரப்படுத்த வேண்டும் என்று நினைத்துப் பாதுகாத்ததால் தான் இவை இப்போது நூலில் வருமளவு வழியேற்பட்டது என்கின்றார் மார்க்ஸ்.

இக்கடிதப் போக்குவரத்து நிகழ்ந்த காலகட்டத்தில் அ.மார்க்சின் வயது 33, டானியலுக்கோ 54. நூலின் தொகுப்புரையில் மார்க்ஸ் குறிப்பிடுவது போன்று இவரின் தந்தை வயதினையொத்த டானியல் எந்த விதமான வயது வேறுபாடுகளுமின்றி ஈழத்துச் சாதியச் சூழல், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள், இலக்கிய முயற்சிகள், அன்றைய கால்கட்டத்து ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலை இயக்கங்கள் குறித்த பார்வை, அரச அடக்குமுறைகள் என்பன இந்தக் கடிதப் பேச்சுக்களில் அடங்கியிருக்கின்றன. வெறும் மூன்றாண்டுப் பழக்கத்திலேயே மார்க்சையும் அவரது தோழர்களையும் தன்னுடைய நேசிப்புக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு தூரம் இவர்கள்பால் டானியல் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.

தனது படைப்புக்கள் குறித்துக் கடிதங்களில் சம்பாஷிக்கும் போது,
அ.மார்க்சோடு சம்பாஷிக்கும் கடிதங்களில், கே.டானியல் தனது நூல்களை அச்சாக்குவதில் வடிவமைப்பில் இருந்து, அவற்றை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவது வரையான விபரங்களையும் அடக்கியிருக்கின்றார். ஒரு கட்டத்தில் ஈழத்து மொழி வழக்கில் அமைந்த தனது நாவலின் எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்க மார்க்சையே தேர்ந்தெடுக்கின்றார்.

யூன் 82 இல் தனது பஞ்சமர் நாவல் வெளியீட்டை பொருத்தமற்ற ஒரு சூழ்நிலையில் நடத்தியதைச் சொல்கின்றார். பஞ்சமர் வெளியீட்டைத் தொடந்து யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தர்க்கவாதங்களையும், பத்திரிகை விமர்சங்களையும் காட்டுகின்றார்.

கோவிந்தன் நாவலின் முகப்புப் படம் எப்படி அமையவேண்டும் என்பதில் இருந்து அந்த நாவல் அச்சாவது வரையான கவனமும் தென்படுகின்றது.1889 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான 200 பக்கங்கள் கொண்ட "அடிமைகள்" நாவலை எழுதும் போது தன் உடம்பில் இருந்த நோய் நாவலை எழுதும் போது பயங்கொள்ள வைத்ததையும் குறிப்பிடுகின்றார்.

தோழர் மூர்த்தி யாழ்ப்பாணத்திற்கு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல், இலக்கிய நிகழ்வுகளையும் காட்டும் அதே வேளை கே.டானியலின் அன்றைய காலகட்டத்துப் படைப்புக்கள் (கானல், கோவிந்தன், அடிமைகள், ) எவ்வளவு நிதி ரீதியான நெருக்கடிகளைச் சந்தித்தன என்பதையும் கடிதங்கள் சொல்லிச் செல்கின்றன. தஞ்சாவூர் பல்கலைக்கழகம் அப்போது சிறந்த படைப்புக்கு ஒரு லட்சம் பணப்பரிசை வழங்கும் அறிவிப்பைச் செவியுற்று மார்க்சிடம் பழுதாகாத நல்ல பிரதியாக பஞ்சமர் நாவலை எடுத்து லமினேட் செய்து
அனுப்பும் படியும் பரிசு வந்தால் அதை மார்க்சே வைத்திருந்து எதிர்கால அச்சிடல்களுக்குப் பயன்படுத்துமாறு டானியல் கேட்கின்றார். பல இடங்களில் தனது நூல்கள் தமிழகத்தில் அச்சேறும் காலத்தில் மார்க்ஸ் எதிர்நோக்கும் இடையூறுகளுக்கு மன்னிப்பும் கேட்கின்றார். ஆனால் எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாராகித் தனது நூல்கள் வேண்டப்படாதவர்களால் அச்சிடப்படக்கூடாது என்பதில் கே.டானியலின் முரட்டுப் பிடிவாதமும் பல ஆதாரங்களுடன் கிடைக்கின்றன.

மார்க்சியம் குறித்த பார்வையில் " 'எதையும் , எப்போது மாக்சியப் பார்வைக்குள் வைத்து அளவு செய்ய வேண்டும் என்பதற்கு உலகில் எதுவுமே விதிவிலக்காக இருக்க முடியாது' என்ற கருத்தை யார் மறுக்கின்றார்களோ அவர்கள் பயந்தாங்கொள்ளிகள் - கோழைகள் என்று தான் நான் கருதுவேன்" என்கின்றார்.

டொமினிக் ஜீவா போன்றோர் மீதான விமர்சனக் கருத்துக்கள் மிகவும் காட்டமாகவே கடிதங்களில் தென்படுகின்றன, அதே வேளை பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் அ.கைலாசபதி, பேராசிரியர் சண்முகதாஸ், போன்றோரோடு நட்புணர்வோடு டானியல் செயற்பட்டத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எழுத்தாளர் செ.யோகநாதன் இந்தியா செல்லும் வேளை (6/5/84) அவர் குறித்த டானியலின் வெளிப்பாடும் காட்டப்படுகின்றது.

பேராசிரியர் கைலாசபதியின் இறுதி நாட்களை வருத்தம் தோய்ந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பதோடு நோயுற்று மறைந்த இவரின் நினைவஞ்சலிக் கூட்டத்தை ஜனவரி 3, 1983 இல் நடத்திய நிகழ்வுகளும் கடிதங்களில் காணப்படுகின்றன. 24/0//83 இல் எழுதிய கடிதத்தில் " அமரர் கைலாசபதிக்கான அனுதாபக் கூட்டங்கள் இங்கு பல நிகழ்ந்து விட்டன - நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பல பல விதமானவர்கள் பல பல விதமாகப் பேசித் தள்ளுகின்றன. பூசை புனஸ்காரங்கள் கூட நடக்கின்றன. அப்படிப்பட்ட கூட்டமொன்றில் சண்முகலிங்கம் என்னும் ஒருவர் என் மனதைத் தொடும்படியாகப் பேசிய பேச்சு ஒன்றில் "கைலாசபதியைத் தெய்வம் ஆக்காதீர்கள்; தமிழர்கள் தமிழைத் தெய்வமாக்கியதனால் தான் தமிழ் வைத்த இடத்திலேயே வைத்தபடி இருக்கின்றது. இத்துரதிஷ்ட கெதி கைலாசபதிக்கும் ஏற்பட்டு விடக்கூடாது" என்று சொன்னதாகக் குறிப்பிடுகின்றார்.

வெறும் வெற்றுத் தாள் போராளியாக இல்லாது சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான களங்களில் ஒலித்த டானியலின் குரலையும் பலகடிதச்சாட்சியங்கள் காட்டுகின்றன. கொடிகாமத்தில் நிகழ்ந்த சாதிக்கலவரம் உட்பட்ட பல உதாரணங்கள் இங்கே உள்ளன.

தனது அன்றைய கால அரசியல் பார்வைகளில்,
"நம்மவர்கள் உறவு கொண்டிருக்கும் திரிபுவாதப் பிரிவினர் உலகரீதியில் நம்மவர்களை விடப் பலம் உள்ளவர்கள். நான் முன்னர் குறிப்பிட்டது போல காலக்கிரமத்தில் நாம் விழுங்கப்படலாம். உலகத்தைப் பங்குபோடுவதற்கான போட்டியில் இருமுனைகளில் நிற்பவர்களுக்கு நடுவே விட்டுக்கொடுப்பு அல்லது தாராள மனப்பான்மை என்பது மிகவும் பிழையான முடிவையே தரும். " (5/3/83)

ஈழம், தனி நாடு போன்ற கருத்துக்களில் டானியலின் பார்வை வேறுபட்டு நிற்கின்றது. அதற்கு அன்றைய காலகட்டது ஆரம்ப கால அரசியல் களமும், அண்மையில் ஒரு செவ்வியில் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொன்னது போல் பத்துப் பேர் சேந்தால் ஒரு போராளி இயக்கம் என்று பெருக்கெடுத்த பல இயக்கங்களின் தோற்றமும், அவற்றின் செயற்பாடும் காரணமாக இருந்திருக்கலாம்.

யூலை 83 கலவரத்தினைத் தொடர்ந்த கடிதத்தில்,
"மனிதாபிமானம்" என்ற வரம்புக்குள் நின்று பார்க்கும் போது தமிழர்களுக்கு நேர்ந்த இழப்புக்கள் மிகவும் வருத்தத்திற்கும் கவலைக்குமுரியவைகளே. ஆனால் மாக்சியப் பார்வைக்குள் நோக்கும் போது அவை பேரினவாதத்தின் இயல்பான செயல்வடிவங்களே என்றும், இந்நாட்டின் பொருளாதார இக்கட்டுக்களில் இருந்து பெரும்பான்மைச் சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் செயல்பாடுகளே இவை என்பதோடு , ஆயுத வல்லரசுகளின் போட்ட போட்டியில் நாட்டை ஒரு பக்கத்தில் சேர்த்துவிடுவதற்கான எத்தனிப்புக்களிலும் இவை அடங்கும் என்று அன்று சொன்ன டானியலின் கூற்று, இன்று வெள்ளிடை மலையாகவே நம் எல்லோருக்கும் புரிகின்றது.
இந்திரா காந்தியின் ஈழப்பிரச்சனை தொடர்பான அணுகுமுறை, பார்த்தசாரதியின் வரவில் ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, ஈழப்பிரச்சனையில் மார்க்சிற்கும் டானியலுக்கும் இடையிலான மாறுபட்ட கருத்துக்களில் எழும் தர்க்க ரீதியான வாதங்கள், இந்திரா காந்தியின் மரணம் அப்போது ஈழத்தில் விளைவித்த தாக்கம், தொடர்ந்த பிரச்சனையில் இந்திய அரசின் தலையீடுகள் என்று டானியல் தன் கடிதங்களில் தன் விமர்சனப் பாங்கோடே எழுதிச் செல்கின்றார்.

மார்ச் 23, 1986 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள தங்க சாரதா மருத்துவமனையில் கே.டானியல் உயிர் பிரிகின்றது. "தோழமை" அமைப்பின் சார்பில் செங்கொடி போர்த்தி அவர் உடல் வடவாற்றங்கரை ராஜாகோரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட இறுதி நிகழ்வு அடங்கிய அ.மார்க்சின் கடிதமும் (மார்ச் 25, 1986) , டானியலின் இறப்பு தாங்கிய செய்தியோடு யாழ் சென்ற வி.ரி.இளங்கோவனின் கடிதத்தில் டானியலின் வீட்டுக்காரரின் துயர் நிலை, அப்போது நிகழ்ந்த டானியலின் நினைவஞ்சலிக் கூட்டங்கள் அடங்கிய செய்தி பதிவாகியிருக்கின்றது. "டானியலின் எதிரிகள், துரோகமிழைத்தவர்கள் (அரசியலில்) அவரில் பழிப்பதில் இன்பம் கண்டவர்கள் கூட அஞ்சலி உரையாற்றுகின்றார்கள்" வி.ரி.இளங்கோவன் 16/4/1986

இக்கடிதத் தொகுப்பின் நிறைவில் கே.டானியல் மகன் டா.புரட்சிதாசன் 8-4-1986 இல் அ.மார்க்ஸ் இற்கு எழுதிய கடிதத்தோடு நிறைவு பெறுகின்றது. பிற்சேர்க்கையாக அ.மார்க்ஸ், ஜூன் 1982 இல் கே.டானியல் உடன் நிகழ்த்திய விரிவான நேர்காணலும், சிறுப்பிட்டி மேற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும், பஞ்சமர், கோவிந்தன் நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வெட்டிக் கொலை செய்யப்பட்ட வெள்ளையன் அண்ணாசாமியின் புகைப்படமும் வெளியாகியிருக்கின்றது.

"அறைக்குத் திரும்பி படுக்கையில் விழுகிறோம். அடுத்த நாள் பிரிவை எண்ணி இதயம் கனக்க, இமைகள் மூட மறுக்கின்றன.
இரவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது."


கே.டானியலுடன் முதன் முதலில் சந்திப்பு ஏற்பட்டு அடுத்த நாள் அவர் தாயகம் திரும்பு முன் உள்ள நினைவை இப்படிப் பகிர்ந்து முடிக்கின்றார் அ.மார்க்ஸ். நூலை வாசித்து முடித்ததும், போராடி வாழ்ந்து மடிந்த ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் மனக்குமுறல்களின் வெளிப்பாடு சுமையாக மனதில் ஏறிக்கொள்கின்றது.

பி.கு- பெப்ரவரி 2008 இல் மேற்கண்ட பதிவை எழுதி பரணில் (ட்ராப்டில்) போட்டிருந்தேன், இன்று தான் இதை வெளியிட வேளை வாய்த்தது
Posted by கானா பிரபா at 4:52 PM 7 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ▼  2009 (28)
    • ▼  December 2009 (2)
      • ஈழத்தமிழர் எம் நெஞ்சில் உறங்கும் எம்.ஜி.ஆர்
      • வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்
    • ►  November 2009 (3)
      • தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்
      • 16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில...
      • "16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை" - போக முன்
    • ►  October 2009 (3)
      • "வானொலி மாமா" சரவணமுத்து நினைவாக
      • "தொப்புள் கொடி" தந்து தொலைந்த "நித்தியகீர்த்தி"
      • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    • ►  September 2009 (1)
      • "கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளி...
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes