skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Tuesday, December 30, 2014

கல்வியாளர் பொ.கனகசபாபதி நினைவில் பகிர்வாக....



ஈழத்தின் பெறுமதி மிக்க கல்வியாளராகவும், கனேடிய மண்ணில் சமூகச் செயற்பாட்டாளராகவும், எழுத்தாளராகவும் பன்முக ஆளுமை கொண்டு விளங்கிய திரு பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த டிசெம்பர் 24, 2014 ஆம் ஆண்டு தன் வாழ்வை நிறைவு செய்து கொண்டார்.
இந்த 2014 ஆம் ஆண்டில் ஈழத்தமிழ்க் கல்விச் சமூகத்தில் திரு செல்வா கனகநாயகம் அவர்களைத் தொடர்ந்தும், ஈழத்து இலக்கிய ஆளுமைகளில் திரு காவலூர் இராசதுரை, திரு எஸ்.பொ ஆகியோரைத் தொடர்ந்தும் இவரின் இழப்பு பேரிழப்பாகவே கருத வேண்டியுள்ளது.

விலங்கியல் ஆசிரியராகவும் யாழ் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூயிரின் அதிபராகவும் ஈழத்தில் இயங்கிய போது அவரின் வளர்ப்பில் உயர்ந்து கடல் கடந்தும் கல்விப் பெறும் பேற்றில் உயர் பதவிகளை அடைந்தோரும், நற்பிரசையானோரும் ஆகப் பலரை வளர்த்தெடுத்த பெருமை இவரைச் சாரும்.
தன்னுடைய கால் நூற்றாண்டுப் புலம்பெயர் வாழ்வைக் கனடா மண்ணில் தக்க வைத்த போது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இவர் முன்னெடுத்த பல சமூகச் செயற்பாடுகளின் அறுவடையை இன்றைய தலைமுறையும்  அனுபவிக்கின்றது.

கல்வியாளர் பொ.கனகசபாபதி அவர்கள் குறித்த நினைவுப் பகிர்வைக் கடந்த டிசெம்பர் 26 ஆம் திகதி, நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்கியிருந்தேன்.
நிகழ்ச்சி ஒருங்கமைப்பு திரு வை.ஈழலிங்கம் அவர்கள்.

இந்த நிகழ்ச்சியில்  ஈழத்தில் வெளிவந்த "முரசொலி"பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக இயங்கியவரும், தற்போது கனேடிய மண்ணில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் "தமிழர் தகவல்" இதழின் முதன்மை ஆசிரியருமான திரு.எஸ்.திருச்செல்வம் அவர்கள் நீண்டதொரு பெறுமதி மிக்க நினைவுப் பகிர்வை வழங்கியிருந்தார்.
புலம்பெயர் சூழலில் "பெற்றோரியம்" (Parenting) என்ற சொல்லைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தியதோடு கனடாவில் தமிழ்ப் பெற்றோர் சங்கம் உருவாகக் கால்கோள் இட்டவர் பொ.கனகசபாபதி அவர்கள்.
எஸ்.திருச்செல்வம் அவர்களின் பகிர்வில் மேற்குறிப்பிட்ட சமூகச் செயற்பாட்டோடு, அமரர் பொ.கனகசபாபதி அவர்கள்  எழுத ஆரம்பித்த கதையையும், அவரின் எழுத்துப் பணியையும் விலாவாரியாகப் பேசுகின்றார்.

 



Download பண்ணிக் கேட்க

http://radio.kanapraba.com/kanagscanada/Thiruchelvam.mp3


சிட்னி மண்ணில் வாழ்ந்து வரும் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கலாநிதி  ஆ.சி.கந்தராசா அவர்கள், அமரர் பொ.கனகசபாபதி அவர்களின் மாணவன். ஒரு ஆசிரியராக பொ.கனகசபாபதி அவர்களின் ஆளுமைத் திறன் குறித்துப் பேசுகின்றார் இந்த நினைவுப் பகிர்வில்.


 



Download பண்ணிக் கேட்க

http://radio.kanapraba.com/kanagscanada/kandaraja.mp3


நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் இயக்குநர்களில் ஒருவரும், அமரர் பொ.கனகசபாபதி அவர்களின் உறவினருமான திரு வை.ஈழலிங்கம் அவர்கள் வழங்கும் நினைவுப் பகிர்வு.

 



Download பண்ணிக் கேட்க

http://radio.kanapraba.com/kanagscanada/elalingam.mp3


 00000000000000000000000000000000000000000000000000000

கல்வியாளர் பொ. கனகசபாபதி அவர்களுடனான நேர்காணல்

கி.பி.அரவிந்தனின் வீட்டில் வைத்து 27-10-2012 அன்று இந்த நேர்காணல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. தொண்ணூறு நிமிடங்கள் கொண்டதான அந்த ஒலிப்பதிவை எழுத்துக்கு பெயர்த்தவர் டெல்லியில் வதியும் தோழர் ச.வீரமணி. நேர்கண்டவர் கி.பி.அரவிந்தன் உதவியுடன் க.முகுந்தன்.
 http://thoaranam.blogspot.fr/2013/06/blog-post_15.html

நன்றி தோரணம் இணையத்தளம், நண்பர் க.முகுந்தன்


000000000000000000000000000000000000000000000000000000000
 திருமதி.பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள் அதிபர் அவர்களுக்கு எழுதிய பதிவிலே  இவ்வாறு பகிர்ந்திருந்தார்.


"எம்மை வாழ வைத்தவர்கள்" 
கல்வி வரலாற்றில் எம்மை வாழ வைத்த இருபத்து மூன்று அதிபர்களின் மகோன்னத பணிகளைக் கூறும் நூல் இது, ஒவ்வொருவருடைய வரலாறும் சுவை மிகுந்த செய்திகளால் நிரம்பியுள்ளது. சுவாமி விபுலானந்தர், திரு.சபாரத்தினம், செல்வி.தில்லைஅம்பலம், தம்பு மாஸ்டர்,பூரணம்பிள்ளை, மாஸ்டர், REV J.T.அருளானந்தம், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், அருட்தந்தை லோங் அடிகளார் யாழ்ப்பாணக் கல்லூரி பிக்னெல் பாதிரியார்,  அதிபர் கந்தசாமி ஆகியோரின் கல்வித்தொண்டு,தம்பர் மாஸ்டர் Orator சுப்பிரமணியம் Handy பேரின்பநாயகம் போன்றோரின் Youth Congress செயற்பாடுகள், CW கனங்கராவின் இலவசக் கல்வி தாய்மொழிக்கல்விக்கொள்கை என்று இன்னும் பல செய்திகள்.

உங்களுடைய ஆராய்ச்சி பிரமிக்கவைக்கிறது - இப்படி எவ்வளவோ எழுதிக்கொண்டு போகலாம் ! நீங்கள் புகழும் இந்த இருபத்திமூன்று பெருந்தகைகளும் இருபத்திமூன்று தூண்களாக நின்று தமிழினத்தின் கல்விச் சாம்ராஜ்யத்தைத் தாங்கி இருக்கிறார்கள் !! தம்பர் மாஸ்டர் பற்றிய குறிப்புகளிலே  'தம்பர் என்பது ஒரு மனிதரைக் குறிக்கும் சொல் என்ற நிலை மாறி பல்வேறு நற்குணங்கள் ஒருங்கே குடிகொண்ட கொள்கலம் என்று 'கூறுவதே பொருத்தமானது ' என்று பண்டிதர் சச்சிதானந்தம் கூறியிருப்பது மிக ஆழமான கருத்து - பெரிய பெரிய மேதைகளாக விளங்கிய இந்த ஆளுமைகள் பழகுவதற்கு மிகவும் எளியவர்களாகவும் இருந்தது அதிசயமே !

கலாநிதி இரகுபதி தனது அணிந்துரையிலே கூறுவதுபோல ''இந்த அதிபர்களின் தலைமுறையினர் கல்வி வணிகமயமாக்கப்பட்ட காலத்திற்கு முந்தியவர்கள்' எந்தக் கைமாறும் கருதாத தருமசிந்தையும் பொதுநோக்கும் அர்ப்பணிப்பும் மனிதநேயமும் நிறைந்தவர்கள் ..மாணவர்களை ,படித்த காலத்திலும் அதற்குப் பின்பும் சொந்தப் பிள்ளைகளாகப் பார்த்தவர்கள் '' ''இந்த அணிந்துரை இந்த நூலுக்கு ஒரு மகுடம் ! அதிபர் கனகசபாபதியின் காலத்தில் மகாஜன கல்லூரி முன்னணியில் இருந்தது என்பதை எல்லோருமே அறிவோம் இன்றும் அந்த அதிபரோடு மாணவரும் மாணவரோடு அதிபரும் இணைந்து உலா வருவது கண்ணுக்கும் கருத்துக்கும் இனிய விருந்து கனடாவிலே உங்கள் பாடசாலை அனுபவம் எனது இந்திய வாழ்க்கையை நினைவூட்டியது இருபது வருடம் இந்தியாவிலே வாழ்ந்தகாலத்திலே பொருளாதாரப் பிரச்சினை இருந்தபோதும் அங்கே நான் ஆசிரியப்பணியை ஏற்றுக்கொள்ளமுடியாததற்கும் இதுவே காரணம் எங்களுடைய விழுமியங்கள் வேறு !

நீங்கள் எழுதிய சில தொடர்களை தினக்குரலில் வாசித்திருந்தேன் அவை ஏன் பின்னர் தொடரவில்லை என்றும் யோசித்தேன். நீங்கள் விளக்கம் தந்திருக்கிறீர்கள் உங்களுடைய ஆழ்ந்த அறிவும் எழுத்தாற்றலும் அனுபவமும் மனித நேயப் பண்பும் உங்கள் எழுத்தில் பிரகாசிப்பதுதான் உங்களுடைய பெரிய கொடை '' உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.'' ''அரசரோடு எம்மை சரியாசனம் வைத்த சான்றோருக்கு''' ---- ''எம்மை வாழ வைத்தவர்கள் ''என்று-சரியாகத்தான் பெயர் சூட்டிவிட்டீர்கள் !
உங்களிடம் ஒரு வேண்டுகோள் -இதற்கு ஒரு இரண்டாம் பாகமாக அல்லது மறுபதிப்பிலே மேலும் சில கல்விமான்களைப்பற்றியும் சேர்ப்பது காலத்தின் கட்டாயம். மிஸ் தம்பையா, மிஸ் ராமநாதன், மிஸ் காசிப்பிள்ளை போன்றோர் கல்வியையே தமது வாழ்வாக மாற்றிக்கொண்டவர்கள்  THEY WERE WEDDED TO EDUCATION இப்படி இன்னும் பலர் இலைமறைகாயாக தொண்டாற்றியிருப்பார்கள் இந்தத் தூண்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அதிபர்களின் நல்ல படங்களையும் இணைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது
குறை ஒன்றும் இல்லை.

***************************************************************
"மரம் மாந்தர் மிருகம் "
என்னை மிகவும் வசீகரித்த நூல்.
நிகழ்வுகள் யாவும் எமது வீட்டிலும் அயலிலும் ஊரிலும் அப்படியே நடந்தவைபோல மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன பெரிய காணி என்று சொல்ல முடியாவிட்டாலும் எங்களுடைய வீட்டிலும் வேப்பமரமும் மாமரமும் நாவல் பலா புளி இலுப்பை தென்னை பனை கறிவேப்பிலை முருங்கை பூவரசு கிணற்றடியில் கமுகும் -இருந்தன பக்கத்து வீட்டிலே ---எல்லோரும் ஒரே வீடுபோலப் பழகிய காலம் அன்று -- செம்பருத்தியும் வாழையும் விளாத்தியும் நெல்லியும் அன்னமுன்னாவும் ஈரப்பலாவும் -இப்படி எல்லாமுமே எங்கள் ஒவ்வொருவரோடும் பிரிக்கமுடியாதபடி இணைந்திருந்தன.
அரிக்கன் ஆடு பசுமாடு நாய் பூனை கோழி குயில் குருவி எலி புராணம் என்று நீங்கள் ஒன்றையுமே விடவில்லை ! ஆச்சரியம் என்னவென்றால் -துள்ளித் துள்ளித் தண்ணி அள்ளிய எனது தம்பி கிணற்றுக்குள் கொடியோடு போய்விட சத்தம் கேட்டு உங்கள் அம்மாவைப்போலவே நானும் ஓடிப்போய் அவனைத் துலாக்கொடியோடு இழுத்துக் காப்பாற்றிவிட்டேன் ஆனால் எங்கள் அம்மம்மா ஐயோ என்ர பிள்ளை என்றபடி அந்த மாரிக் கிணற்றுக்குள் குதித்துவிட்டா பிறகென்ன நாங்கள் போட்ட கூச்சலில் நல்ல மனிதர் ஒருவர் உடனே கிணற்றுக்குள் குதித்துக் காப்பாற்றிவிட்டார் இவற்றையெல்லாம் நேரிலே பார்த்ததுபோலவல்லவா எழுதியிருக்கிறீர்கள் !!!!!!!

சின்னமேளம் திருவிழா போட்டித் திருவிழா சாதீயம் மூடநம்பிகைக்குப் பின்னாலும் சில நல்ல கருத்து என்று எத்தனை எத்தனை விஷயம் ! (பாலுள்ள மரங்களிலேதான் நச்சுக்கொடியைக் கட்டுவார்கள் அப்பொழுதுதான் மடியிலே பால் சுரக்கும் என்பது நம்பிக்கை ! நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள் ---இது நான் அறிந்த செய்தி ) ''கட்டுரைகள் எல்லாம் வித்தியாசமானவையாகவே உள்ளனவென நான் உணர்கிறேன் தாவரவியல் கொஞ்சம் இலக்கியம் ஆங்காங்கே உடல்நலமருத்துவக்குறிப்புகள் இடையிடையே சுவாரஸ்யம் இருக்கவேண்டும் என்பதற்காக கதைபோல வசதிக்கேற்ற சிறு நிகழ்சிகளையும் சேர்த்துள்ளேன் அவை நிசமல்ல ''என்று நீங்கள் சொல்வதற்கு ஒரு திருத்தம் ------- அவை நிசமல்ல -என்று நீங்கள் சொன்னாலும் இவைதான் இந்நூலின் இலக்கிய பலம் --வளம் ! ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை --யதார்த்த வாழ்வு - அன்பு ஆதரவு கோபம் தாபம் காதல் காமம் நட்பு துரோகம் மானம் என்று எல்லாமுமே வருகிறது மனிதர்களிலேதான் எத்தனை வகையானவர்கள் !
உங்களுடைய கூர்ந்த அவதானிப்பை உங்கள் எழுத்தில் உணரமுடிகிறது தாவரம் பற்றிய குறிப்புகள் இலகுதமிழில் விளக்கமாக இருக்கின்றன. ஓவியங்கள் தத்ரூபமாக உள்ளன -வீட்டுக்கைவைத்தியம் எல்லோருக்கும் பரிச்சயமான கலை மீட்டுப்பார்ப்பதிலேதான் எவ்வளவு சுகம் !!!! -இலக்கியமேற்கோள்கள் பொருத்தமான இடங்களில் ஒன்றிவிடுகின்றன கோடாலிச்சாமியார் MILKWHITE கனகராசா என்னும் பண்பாளர் எல்லோரையும் அறிந்திருக்கிறோம்.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே"
 என்ற பாரதிபோல எங்களையும் ஏங்க வைத்துவிட்டது உங்கள் எழுத்து பெண் சாமர்த்தியசாலியாகவும் இருக்க வேண்டும் அதே வேளை மனிதநேயப் பண்போடும் வாழவேண்டும் என்பதற்கு உங்கள் அம்மா நல்லதொரு உதாரணம் அப்பாவும் மனைவியோடு புரிந்துணர்வோடு நடப்பவர் என்பது குடும்ப உறவுக்கு எவ்வளவு அவசியம் -- இவைதான் எங்கள் சொத்து - 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்று சும்மாவா பாடினான் கவிஞன் ! பேராசிரியர்கள் இரகுபதி சண்முகலிங்கன் சிவகடாட்சம் சிவயோகநாதன் மற்றும் சிவநாதன் போன்ற கல்விமான்கள் எழுதியதற்குமேல் எழுதுவதற்கு என்ன உள்ளது !
" BREATHES THERE THE MAN WITH SOUL SO DEAD WHO NEVER TO HIMSELF HATH SAID THIS IS MY OWN MY NATIVE LAND WHOSE HEART HATH NEVER WITHIN HIM BURNED FROM WANDERING ON A FOREIGN STRAND ........................"
என்று SIR WALTER SCOTT என்னும் கவிஞன் மண்பற்று அற்றவரைப்பற்றிக்கூறுவது நினைவுக்கு வருகிறது ஆனால் உங்களின் ஆழமான மண்பற்றோ எனில் எங்கள் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் அழியாச்சுடராக ஒளிவீசும்படி செய்து விட்டது -நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் !

0000000000000000000000000000000000000000000000000000000000000000000
அமரர் பொ.கனகசபாபதி அவர்களது ஆத்மா சாந்தியடைவதாக.

அமரர் பொ.கனகசபாபதி புகைப்படம் நன்றி: வல்லினம் இணைய சஞ்சிகை http://www.vallinam.com.my/
Posted by கானா பிரபா at 11:06 PM 0 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Tuesday, December 23, 2014

கனியும் கனிந்தால் கனியும்



கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை சூரியன் எஃப் எம் செய்தியறிக்கையைக் கேட்ட போது ஒரு தகவல் கிட்டியது. இந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வட பகுதியில் மாத்திரம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவு பழவகைகள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்த உற்பத்தி முந்திய ஆண்டுகளை விட அதிகம் என்றும் விவசாயத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. இவ்வாறான உற்பத்திப் பெருக்கம் ஏற்றுமதிச் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வல்லது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

எங்களூரைப் பொறுத்தவரை வானம் பார்த்த பூமி என்பார்கள். அதாவது மழையை நம்பியே பயிர்ச்செய்கை செய்ய வேண்டிய நிலை. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களை அண்டி ஏரிகளோ, ஆறுகளோ இல்லை.
ஆனாலும் இயற்கை இன்னொரு பக்கத்தால் அனுகூலம் விளைவித்திருக்கிறது. வடபகுதியில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற செம்பாட்டு மண் சார்ந்த நிலப்பரப்பு அதிகம். இதனால் புகையிலை போன்ற சீவனோபாய உற்பத்திகள் மட்டுமன்றி மா. பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள் செழித்தோங்கிக் கனி தரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. கிராமப்பகுதிகளான எங்களூரில் இருந்து யாழ்ப்பாண நகரப்பகுதி சொல்லும் போது, செம்பாட்டுக் கால் என்று கிண்டலடிக்கும் மரபு இருக்கின்றது.

ஒரு காலத்தில் எங்களூரில் சந்திக்குச் சந்தி பழக்கன்று விற்பனைக் கூடங்கள் இருக்கும். தாங்களே நட்டு விளைவித்த மரக்கன்றுகளை அங்கு விற்பனை செய்வர். 
எங்களின் உறவினர் முத்துலிங்க மாமாவின் முழு நேரத் தொழிலே பழமரங்களை உருவாக்கி விற்பனை செய்வது தான். எங்கள் வீட்டுக்குப் பக்கத்துக் காணி முழுதும் பாத்தி கட்டி பல்வேறு விதமான மாங்கன்றுகள் வரிசையாக அணி வகுத்து நிற்கும். பொலித்தீன் பைகளில் நிரையாக அடுக்கிவைக்கப்பட்ட மாங்கன்றுகளை நிதமும் பராமரித்துப் பசுமைப் புரட்சியைச் சத்தமில்லாமல் செய்துவந்தார். "ஒட்டுமா" என்பது ஈழத்தின் கிராமங்களில் பரவலாகப் புழங்கும் சொலவாடை.
எங்கள் முத்துலிங்கமாமா பரிசோதனை முயற்சியாக இவ்வாறு ஒரு மரத்தில் இன்னொரு பழவகையை உண்டாக்கி வளர்க்கும் ஒட்டு மாங்கன்றுகள் பலவற்றை உருவாக்கிச் சத்தமில்லாமல் சாதனை படைத்தவர்.  இது மட்டுமன்றி தோடை மரங்கள் (ஆரஞ்சு என்று இந்தியாவில் அழைப்பர்) உண்டாக்குவது, நாரத்தங்காய் மரத்தோடு எலுமிச்சை மரத்தைக் கலந்து உண்டாக்குவது போன்ற பல ஒட்டு வேலைகளைச் செய்து வெற்றிகரமாக ஒரே மரத்தில் இரண்டு காய்களை உருவாக்கி வளர்ப்பதில் அவர் விண்ணர்.
ஒட்டுமாங்காய் ருசி அதிகம் என்பார்கள். ஈழத்தின் எழுத்தாளர் சாந்தன் தமிழ் சிங்களக் காதலைப் பின்னணியாகக் கொண்டு சிரித்திரன் வெளியீடாக "ஒட்டுமா" என்ற நாவலையும் முன்னர் வெளிட்டவர்.
அந்த நூலை நூலகம் தளத்தில் படிக்க இங்கே அழுத்தவும் "ஒட்டுமா"
பரமலிங்கம் மாமாவின் வழியாகத் தான் எங்களுக்குத் முந்திரிகைப் பழம் (திராட்சை) என்ற ஒரு பழவகையே அப்போது தெரிந்தது. எண்பதுகளில் தன்னுடைய காணியில் அவர் முந்திரிகைத் தோட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார். நீண்ட தூண்களை உருவாக்கி அவற்றில் முள்ளுப் படுக்கையைப் போட்டுத் திராட்சைச் செடியை அதில் படர விட்டிருப்பார். பரந்து விரிந்த அந்தக் காணிக்குள் போனால் ஏதோ திராட்சை மரக்கொடியால் கட்டிய வீடு போல இருக்கும். பழைய தகரப்போத்தல்களை இறுகக் கட்டி ஒரு இடத்தில் கட்டிவிட்டு அதில் ஒரு கயிற்றைப் பிணைத்து விட்டு
படர்ந்த அந்தக் கொடி மரங்களுக்குக் கீழே ஒரமாக இருந்து கயிற்றின் மறுமுனையை அவ்வப்போது இழுப்பார். திராட்சைப் பழங்களைக் கவர்ந்து போக வரும் பறவைகள் அந்தச் சத்தம் கேட்டு விருக்கெனச் சிறகை விரித்து ஓடும். அந்தக் காணிக்குள் இருந்த தென்னம் பொந்துக்குள் ஒரு கிளி தன் குஞ்சை வளர்த்தது, அதை எட்டி நின்று பார்த்தது எல்லாம் நினைவுக்கு வருகுது. 
பரமலிங்கம் மாமாவின் காணியில் விளையும் முந்திரிகைப் பழங்கள் உள்ளூர்ச் சந்தைகளில் அப்போது விலை போகும். மா, பலா, வாழை மரங்கள் ஊரில் பெரும்பாலானோர் வீடுகளில் இருப்பதால் இவர் விற்கும் கொழுத்துத் திரண்ட கருப்பு முந்திரிகைப் (திராட்சை) பழங்களுக்குத் தான் மவுசு அதிகம்.
எங்கள் வீட்டில் மாமரங்களும், பலா மரங்களும் வீட்டின் முகப்புக் காணியிலும், பின் வளவில் வாழைத்தோட்டமுமாக இன்னமும் நிமிர்ந்து நிற்கின்றன.
 
 படத்தில்: எங்கள் வீட்டின் முகப்பில் உள்ள பலாமரம்

ஈழத்தில் தமிழ்ப் போராளி இயக்கங்கள் எண்பதுகளில் வீரியத்துடன் ஒரே களத்தில் இயங்கிய வேளை தென்னை மரத் தும்பினால் உருவாக்கிய தும்புத்தடி போன்றவற்றை வீடு வீடாக விற்றுப் பணம் சேர்த்தனர். அத்தோடு ஒரு படி மேல் போய் "அர்ச்சயா" பழரசம் என்று போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறு வகைகளையும் விற்பனை செய்ய ஆரம்பித்தனர். ஈழத்தின் பொருளாதாரம் அங்கு விளையும் உற்பத்திகளைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்த முயற்சிகள் அமைந்திருந்தன. பழரசம்  மற்றும் ஜாம் என்று சொல்லக்கூடிய பழக்களி போன்ற உற்பத்திகளைச் செய்து வந்த தொழிற்சாலை ஒன்று அப்போது வெற்றிகரமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தது.   பெயர் மறந்து விட்டது.

"தோலகட்டி நெல்லி ரசம்" என்பது உலகளாவிய தமிழர்கள் இன்றும் தத்தமது நாடுகளில் உள்ள இலங்கை மளிகைக் கடைகளில் தேடிவாங்கி அருந்தும் பானம். இந்தத் தோலகட்டி நெல்லிரசத்தின் வரலாற்றைத் தேடியபோது தோலகட்டி வண.தோமஸ் அடிகளாரின் 50 வது ஞாபகார்த்த தினம் இந்த ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி கொண்டாடப்பட்ட போது அவர் குறித்த சிறப்புக் கட்டுரையில் http://marikumar.blogspot.com.au/2014/01/50.html  பதிவாகி இருக்கின்றது.
வண.தோமஸ் அடிகளார்  மாபெரும் இறை பணிக்கு ஆறு இளைஞர்களை தேர்ந்தெடுத்து வசாவிளான் பகுதியிலுள்ள ''தோலகட்டி'' என்ற சிற்றூரில் இந்த தியான யோக துறவற சபையை 2.2.1928 இல் நிறுவினார்.

பல்வேறு கஷ்டங்கள் துன்பங்கள் அவரை அழுத்திக்கொண்டிருந்தன. சபையைத் தொடர்ந்து நடத்துவதற்கு தம்மோடு இணைந்திருப்பவர்களைப் பராமரிப்பதற்கும் அனைவரும் தங்குவதற்றும் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கு பணம், பொருள், ஆள்பலம் தேவையாக இருந்தது. இவர் ஏற்படுத்தியது ஒரு புதிய ஆன்மிக புரட்சியின் வாழ்வாக அமைந்ததால் பலரும் இதை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இவருடைய முயற்சிக்கு எதிர்ப்பையே காட்டினர்.

இவரின் வாழ்வு அதிக ஒறுத்தல் உபவாசமும் அமைதி, மௌனம் மிக்க வாழ்வாக இருந்தது. பல துன்பங்களினூடாக வாழ்ந்து வந்த வேளையில் இத்தகைய வாழ்வை அறிந்து பல அழைத்தல்கள் இந்தியாவிலிருந்து வரத்தொடங்கின. அதன் பின் சிறிது சிறிதாக தோலகட்டி ஆச்சிரமமானது தேவைகளுக்கேற்ப வளர்ச்சி காணத்தொடங்கியது. அவர்கள் தாங்களே உழைத்து வாழவேண்டிய நிலையிலிருந்தனர்.

எனவே இறைவனின் பராமரிப்பில் நெல்லிரசம் தயாரிக்கும் முறையைக்கண்டுபிடித்து அதை செய்தனர். அத்துடன் முந்திரிகை, மாதுளை, நாவல், தோடை, அன்னாசி, எலுமிச்சை போன்ற பழவகைகளிலிருந்தும் நன்னாரி போன்ற வேர் வகைகளிலிருந்தும் இனிய பானங்கள் தயாரித்தனர்.

அந்தப்பகுதிகளில் முதல் முதலாக திராட்சைப் பயிர்களைப் பயிரிட்டு நல்ல விளைச்சலைக் காட்டினர். அதன் வழியாக வசாவிளான், அச்சுவேலி, இளவாலை, உரும்பிராய் பகுதிகளில் மக்கள் திராட்சை பயிரிடத் தொடங்கினர். மேலும் எல்லா வகையான பழ மரங்கள் , கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் உள்ளிட்ட பலதும் பயிரிடப்பட்டு நல்ல விளைச்சலைப்பெற்றனர்.

எங்களூர்க் கடையில் அடுக்கி வைக்கப்பட்ட வாழை, பலா
என்னோடு உயர் வகுப்பில் படித்த நண்பன் ஒருவன் யாழ்ப்பாணத்தில் நவாலி என்ற ஊரில் இருக்கிறான். அவன் தன்னுடைய பகுதி நேரத் தொழிலாகத் தகரத்தில் அடைத்த பழவகைகளைத் தயாரித்து விற்பனை செய்யும் கூடம் ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாகப் பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றான்.
 அவுஸ்திரேலியாவிற்கு இறக்குமதியாக  பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில்  இருந்து தகரத்தில் அடைத்த உலர் மாம்பழத் துண்டுகள். பலாச்சுளைகள் எல்லாம் விற்பனைக்கு வரும். இவற்றின் சுவையை விட இலங்கையின் சீதோஷ்ண நிலையிலும், மண்ணிலும் வளரும் பழவகைகள் ஒப்பீட்டளவில் சுவை அதிகம் என்பது என் அபிப்பிராயம்.  
படத்தில்: எங்களூரின் பெரிய சந்தையாக விளங்கும் மருதனார் மடச் சந்தையில் பழக்கடை ஆச்சி

மீண்டும் முதல் பந்திக்கு வருகின்றேன்.  பணப்பயிராகக் கருதப்பட்ட புகையிலை யாழ்ப்பாணத்தில் உற்பத்தில் செய்யப்பட்டு ஒரு காலத்தில் தென்னிலங்கை எல்லாம் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தன்னிறைவு கண்டனர். அதன் பின் நீடித்த யுத்தத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வடபகுதிக்கும் இலங்கையின் மற்றைய பகுதிகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டே இருந்து வந்தது. 
இப்போது மீண்டும் போக்குவரத்து நிலமைகள் சீராகவும், வழித்தடங்களில் பயண நேரம் மிகக் குறுகியதாகவும் அமைந்திருக்கின்றது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையின் வடபகுதிப் பழச்செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை எடுத்துச் செல்லும் வழி வகைகளை ஆராய்தல் வேண்டும். அதோடு வெளிநாட்டில் வாழும் நம்மவர்களும் அந்தந்த நாடுகளில் இருந்து பழவகைகளைப் பேணிப் பாதுகாத்துச் சந்தைப்படுத்தும் முறைமை சார்ந்த அறிவைப் பெற்றும், அங்குள்ள தொழில்நுட்பம், இயந்திர சாதனங்களின் உதவியோடும் வடபகுதியில் பெரும் எடுப்பிலான முதலீடுகளைச் செய்தால் இலங்கையின் பிற பாகங்களில் மட்டுமல்ல, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புக்கும் பெரும் உதவியாக அமையும். இது இலங்கையில் இருக்கும் எமது உறவுகளுக்கான வாழ்வியல் ஆதாரமாக நீடித்து நிலைக்க வழிகோலும்.

திராட்சைப் பழக் குலைகள் படம் உதவி : http://www.vanakkamlondon.com/


Posted by கானா பிரபா at 8:25 PM 1 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Monday, December 08, 2014

வலைப்பதிவுப் பயணத்தில் நிறைவான என் ஒன்பது ஆண்டுகள்

கடந்த டிசெம்பர் 5 ஆம் திகதியுடன் எனது வலைப்பதிவு எழுத்துப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாவது ஆண்டில் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொருத்தவரை என்னுடைய வாழ்வியல் அனுபவங்களிலே அவை கசப்பானதாகவோ அன்றி உவப்பானதாகவோ எது இருப்பினும் எழுத்தில் பகிரும் போது ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொண்டே எழுத ஆரம்பிக்கிறேன். அந்தச் சுய பரிசோதனையில் இந்தப் பகிர்வினால் யாரேனும் ஒருவருக்கு ஏதேனும் ஆக்கபூர்வமான பயன் கிட்டுகிறதா என்பதே முதன்மை நோக்காக அமைந்திருக்கிறது.
எனது பதினேழு ஆண்டுகளைக் கடந்த வானொலிப் பணி போன்றே கழிந்த ஒன்பது ஆண்டுகளின் எழுத்தும் ஊதியம் இல்லாத ஆத்ம திருப்தியே நோக்காகக் கொண்டது.
நம்முடைய சிந்தனைகளையும், தேடிப் பெற்றுக் கொண்டவையையும் மற்றவர்களிடம் பகிர்வது கூட ஒருவகை தர்மம் தான். அது ஊடக தர்மத்தோடு அமைய வேண்டும் என்ற உறுதியோடு இயங்குகிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் என் எழுத்துக்குக் கிட்டும் அங்கீகாரங்களை இம்மாதிரி வருடாந்தக் குறிப்பிலே பகிர்ந்து வருகிறேன். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து வரும் "தமிழ் ஹிந்து"எனது "எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர்" என்ற பகிர்வைப் பிரசுரித்ததும், இரா.முருகன் போன்ற எழுத்துலக ஆளுமைகளால் கிட்டிய பாராட்டையும் இந்த வலைப்பதிவுப் பயணத்தின் வெற்றியாக எடுத்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் பாலித்தீவு சென்று அங்குள்ள வரலாற்றுத் தொன்மை மிக்க இடங்களையும், ஆலயங்களையும் சென்று பார்த்துத் தகவல் திரட்டும் போது அங்கிருக்கும் போதே இலங்கையின் சுடரொளி பத்திரிகையின் சார்பில் இந்தப் பயணத்தொடரைப் பத்திரிகைக்கு எழுதித் தருமாறு அன்பர் திரு ரவி வர்மா அவர்கள் கேட்டுக் கொண்டார். பாலித்தீவு தொடரை 12 வாரங்கள் எழுதினேன். எனது தாயகத்தில் இருந்து வரும் பத்திரிகையில் முதன் முதலாக ஒரு நெடிய தொடரை இந்த ஆண்டு எழுதும் பாக்கியம் கிட்டிய பெருமையைத் தவிர வேறென்ன வேண்டும் எனக்கு.

எனது வலையுலக வாழ்வில் பத்தாவது ஆண்டில் நிற்கும் இந்த வேளை இதன் அடுத்த பரிமாணமாக "மடத்துவாசல்"என்ற பதிப்பகத்தை ஏற்படுத்தியுள்ளேன்.
வரும் 2015 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தில் 
"பாலித்தீவு - இந்துத் தொன்மங்களைத் தேடி" 
என்ற முதல் நூலை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். தமிழில் பல பயண நூல்கள் வந்தாலும் Lonely Planet தரத்தில் உயர் அச்சுத்தாள், ஏராளம் புகைப்படங்கள், தகவல்கள் என்று ஒரு முன்னோடி முயற்சியாக இந்தப் பணியில் இறங்கியிருக்கிறேன். அதன் செலவீனத்தில் பெரும் பங்கை நானே பொறுப்பேற்று, வாசகர்களுக்குக் கிடைக்கத் தகுந்த விலையிலேயே இந்த நூலின் விற்பனைப் பெறுமதியைத் தீர்மானித்திருக்கிறேன். 

அதனைத் தொடர்ந்து என் வலைப்பதிவுகளில் திரட்டிய நேர்காணல்களின் தொகுப்பு நூலும் வரவிருக்கின்றது.

இந்த வலைப்பதிவுப் பயணத்தை உங்கள் ஆதரவோடு பத்தாவது ஆண்டிலும் தொடர்கிறேன்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வலைப்பதிவு உலகில் நான் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த சக வலைப்பதிவர்கள் ஏறக்குறையக் காணாமல் போய் விட்டார்கள். இன்னும் சிலர் கால மாற்றத்துக்கேற்ப ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று தாவிவிட்டார்கள். அங்கெல்லாம் நான் இருந்தாலும் என் தாய் வீடு இந்த வலைப்பதிவு உலகம் தான். அதனால் தான் என் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற மூல வலைப்பதிவில் மாதாந்தம் ஒரு இடுகையேனும் இட்டு என் இருப்பைக் காட்டி வருகின்றேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு இடைவெளி இருந்த என் சக வலைப்பதிவான உலாத்தல் பதிவில் அதிக முனைப்போடு எழுதி வருகின்றேன்.  அத்தோடு கூடவே இருக்கு என் இசைச்சிலாகிப்புக்கும்,ஒலிப்பகிர்வுகளுக்குமென றேடியோஸ்பதி



நேசம் கலந்த நட்புடன்
அன்பன்
கானா பிரபா
http://www.kanapraba.com/



வலைப்பதிவில் ஒரு வருஷம்
2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்
2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்
2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்

 2011 ஆம்  ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்


வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு

 2012 ஆம்  ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

 2013 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகள் இவை


மின்சாரக் கனவுகள்


90 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின் இரவுகள் குப்பி விளக்கிலும், பகலில் சூரிய விளக்கிலும் கழிந்த நாட்கள் அவை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எல்லாமே குப்பி விளக்கில் தான் படித்து முடித்தோம். ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கில் படித்துப் பட்டம் பெற்றதற்கு நிகரான பெருமை அது. இன்றைக்குப் புலம்பெயர்ந்த சூழலில் மின்சாரம் ஒரு நிமிடம் நின்றாலே அதிசயமாக இருக்கும் சூழலிலும், என் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரியாது, இந்த ஜாம்போத்தல் விளக்கு போதித்த பாடம் அது.


விஸ்வரூபமும் என் ரிஷிமூலமும்

"டீச்சர் இவன் ஒரு பயங்கரவாதி, எங்கள் நாட்டில் இருக்கும் எல்லோரையும் இவனின் சகோதரர்கள் அழிக்கிறார்கள்" குரல் வந்த திசையைப் பார்க்கிறேன், எங்களோடு கூட வந்த சிங்களப் பையன் லக்மால் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிச் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு அந்த இடத்தில் மரத்தில் கட்டிவிட்டுக் கட்டெறும்புகளை உடம்பெல்லாம் பரப்பிவிட்டது போல குறுகி நிற்கிறேன்.


டோண்டு சார்

ஏழு வருடங்களுக்கு முன்னர் வலைப்பதிவு உலகத்துக்கு வந்தபோது டோண்டு ராகவன் சார் மூலம்தான் இந்த இணையச்சூழலின் இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டேன் அது மிக அதிர்ச்சிகரமானதும் படிப்பினையையும் என் வலைப்பதிவு உலகின் ஆரம்பகாலத்தியே கொடுத்தது என்றவகையில் அவரை என்னால் மறக்கமுடியாது. என்னுடைய ஆரம்பப்பதிவுகளில் ஒன்றில் தன் பின்னூட்டம் வழியாக அறிமுகமானார் கூடவே "உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்" என்று அவர் சொல்லவும் 







உதிரம் குடிக்கும் தேயிலைத் தோட்டம் (பரதேசியை முன்வைத்து)

  பிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான உறுதியான தலைமைத்துவம் இல்லாமை, சோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின் நியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றான்.




வருசப்பிறப்பு வந்திட்டுது

புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார்.


சித்தெறும்பு என்னை கடிக்குது



 "அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது". கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.


யாழ்ப்பாண யாத்திரை

 வவுனியா பஸ் நிலையத்துக்கு வந்தாச்சு அங்கே வலப்பக்கமாக லைன் கட்டியிருக்கும் சிவப்புக் கலர் பஸ்கள் அரச பஸ்கள், இடப்பக்கம் இருப்பவை தனியார் பஸ்கள் என்று கைகாட்டிவிட்டு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். வவுனியாச் சூரியன் விட்டேனா பார் என்று தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் தொடர்ச்சியான பயணம், பசிக்களை வேறு.






ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி

 எங்கள் வீட்டில் மட்டுமல்ல அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பத்தலைவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது ஆகாசவாணி தான்.  "திருச்சீல விடு திருச்சீல விடு எண்டோண்ணை அவன் றேடியோவுக்குள்ளை திரிச்சீலையை (விளக்கு எரிக்கப்பயன்படும் துணி) விட்டுட்டான்" என்று அந்தக்கால அங்கதம் ஒன்று புழங்கியிருக்கிறது.



ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

வகுப்பறையில் வட்ட வடிமாகக் கதிரைகளை அடுக்கிவிட்டு நடுவில் நின்று ஆசிரியை ஒவ்வொரு அடியாகப் பாட,  சுற்றிவர நின்று சொல்லிவைத்தாற்போல மாணவர் கூட்டம் பலமாக ஒலியெழுப்பிப் பாடும் சின்ன வகுப்புக் காலம் நினைவுக்கு வருகிறது. ஆடி மாதம் முதலாம் நாள் பிறக்கும் தமிழ் ஆடி மாதப்பிறப்பினை வரவேற்றுப் பாடுவோம் அப்போது.




தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்

தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில்  பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார்.


கதிர்காமக் கந்தனிடம் போன கதை


கதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள் அப்பாவின் சந்ததியுடன் "இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே" என்ற செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.






இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல,

 அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர்  அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.



செல்போன் கணக்கு

 Cisco networking முதல் வகுப்பில் பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும் Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம். 
"அதிருக்கட்டும் முதலில் ஸ்விட்ச் ஐ போட்டீர்களா" என்று கேட்டார் ஆசிரியர்.

பிரச்சனையை பெரிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டோம் இப்போதெல்லாம்.
  


A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா 

 யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.
Posted by கானா பிரபா at 3:35 PM 5 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Thursday, November 27, 2014

வரலாற்றில் வாழும் ஈழத்து இலக்கிய ஆளுமை எஸ்.பொ நினைவில்

"என்னை ஈழத்து ஜெயகாந்தன் என்று அழைக்காதீர்கள், ஜெயகாந்தனை வேண்டுமானால் தமிழ்நாட்டின் எஸ்.பொ என்று அழைத்துக் கொள்ளுங்கள்"

இப்படி ஒரு மிடுக்கான பேச்சு மூலம் தான் எனக்கு எழுத்தாளர் எஸ்.பொ அவர்களை நேரே சந்திக்கும் வாய்ப்பு 17 வருடங்களுக்கு முன்னர் மெல்பர்னில் ஒரு இலக்கியச் சந்திப்பின் வழியாகக் கிட்டியது.

 "எனக்குப் புகழ் மாலை சூட்டியே நான் எழுதுறதை நிப்பாட்டிப் போட வச்சுடாதேங்கோ" இதுவும் அதே மேடையில் எஸ்.பொ. பேசியது.
ஈழத்தில் இருந்த காலத்தில் எஸ்.பொ வின் எழுத்துகளில் இருந்த நெருக்கம் பின்னாளில் சிட்னியில் அவரை நேரே சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
முதன் முதலில் நேரில் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திய போது ஏதோ பல நாள் பழகிய சினேகபூர்வமான பேச்சோடு "அம்மா (எஸ்.பொ மனைவி) எப்பவும் றேடியோவும் கையுமாத் தான் இருப்பா, வீட்டை வாரும் நேரம் கிடைக்கேக்க"
என்றார். எஸ்.பொ முன்மொழிந்தது போல சக தமிழ் அவுஸ்திரேலியனாக, அவர் வாழ்ந்த காலத்தில் இயங்கிய பெருமிதத்தோடு.

எஸ்.பொ வின் மேடைப் பேச்சை மெல்பர்ன், சிட்னி இலக்கிய மேடைகள் பலவற்றில் கேட்டிருக்கிறேன். சண்டித்தனமாக எதையும் வெளிப்படையாகப் போட்டு உடைத்து விட்டுப் போய்விடுவார் அதில் உறுதியோடும் நிற்பார். இவ்விதமான ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை ஆறுமுக நாவலர் குறித்து எஸ்.பொ பேசியதே என் நினைவில் அவரை நான் சந்தித்த இறுதியான பேச்சு.

 நேற்று நினைவெழுச்சி நாளுக்குச் சென்ற போது முதலில் எதிர்ப்பட்ட புத்தகக் கடையில் இருந்தது "மகாவம்ச" எஸ்.பொ எழுதிய மொழி பெயர்ப்பு நூல்.
இருந்த அந்த ஒரு பிரதியையும் தூக்கி வைத்துக் கொண்டேன்.
இதோடு ஐந்து புத்தகங்களைத் தந்து "வித்துத் தாங்கோ" என்று சொன்னார்,
கடைசிப் புத்தகத்தை நீங்கள் வாங்கிறியள், காசை வாங்கத் தான் எஸ்.பொ இல்லை"
என்றார் புத்தக விற்பனைக் கூடத்தில் இருந்த நண்பர்.

எஸ்.பொ வின் நினைவுப் பகிர்வைக் கடந்த ஒரு மணி நேரமாக, நான் இயங்கும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன  வானொலியில் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். நாளை அவரது இறுதி மரியாதையில் கலந்து கொள்ள வேண்டும்.

கிடைத்த ஒருநாள் அவகாசத்தில் எஸ்.பொ அவர்களின் நினைவுப் பகிர்வை வானொலியில் தயாரிக்கும் போது கலந்து சிறப்பித்தவர்கள் ஒவ்வொருவரும் எஸ்.பொ குறித்த பன்முகப் பார்வையைப் பகிர்ந்து கொண்டார்கள். இன்னும் பல ஒலிப்பகிர்வுகளின் வழியே எஸ்.பொ குறித்த பதிவுகளை எதிர்காலத்திலும் கொடுக்க எண்ணம் கொண்டிருக்கும் அளவுக்கு அவரைப் பற்றிப் பேசவும், எழுதவும் நிறைய உண்டு.

எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி அவர்களின் பகிர்வு தரவிறக்கிக் கேட்க தரவிறக்கிக் கேட்க


ஊடகர் திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களின் பகிர்வு தரவிறக்கிக் கேட்க


படைப்பாளி திரு.தருமன் தர்மகுலசிங்கம் அவர்களின் பகிர்வு தரவிறக்கிக் கேட்க


எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அவர்களின் பகிர்வு தரவிறக்கிக் கேட்க


ஊடகர் திரு.அப்துல் ஜபார் அவர்களின் பகிர்வு தரவிறக்கிக் கேட்க


"மாயினி" குறித்து எஸ்.பொ. பேசுகிறார்...!

  "அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது "மாயினி" நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்." - எஸ்.பொ மாயினி குறித்து

தமிழில் முயலப்பட்ட முதல் அரசியல் நாவலான "மாயினி"யின் நாவல் அரங்கு நேற்று பரீஸ் நகரத்தில் நடைபெற்றிருந்தது. தனது "மாயினி" குறித்து ஈழத்தின் மூத்த படைப்பாளி எஸ்.பொ என்ற எஸ்.பொன்னுத்துரை அவர்களை ஒலிப்பகிர்வு கண்டு அந்த நிகழ்வுக்காக அனுப்பியிருன்தேன். அவர் தன் உள்ளக்கிடக்கையைப் பகிரும் போது, இந்தப் பகிர்வு பலரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஒலியை தட்டச்சியும், ஒலிப்பகிர்வாகவும் இங்கே தருகின்றேன்.

 ஒலிப்பகிர்வைக் கேட்க



பரீஸ் நகரத்திலே 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாசம் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "மாயினி" நாவல் ஆய்வரங்கிற்கு வாழ்த்துச் செய்தி போன்று இந்தப் பேச்சினை நான் அனுப்பி வைத்தேன். தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் என்ற உரிமைகோரலுடன் மாயினி நாவல் என்னுடைய எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவிலே சென்னையில் வெளியிடப்பட்டது. அந்த நாவல் குறித்து சாதகமாகவும், பாதகமாகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று, மாயினி தான் தமிழில் முயலப்பட்ட முதலாவது அரசியல் நாவல் அல்ல, அதற்கு முன்னரும் அரசியல் சம்பந்தப்பட்ட நாவல்கள் தமிழில் முயலப்பட்டுள்ளன என்பது அதற்கு எதிராக முன்வைக்கப்படும் முதலாவது விமர்சனமாகும். என் உரிமைகோரலிலே ஒரு சத்தியம் உண்டு என்பதை தவிர்த்து, விமர்சிக்க வேண்டும், எதிர்க்கருத்தை முன்வைக்க வேண்டும் என்று முயலப்பட்டதாகவே அந்த விமர்சனத்தை நான் கருதுவேன். காரணம், மாயினி நாவல் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தமாக எழுந்த பிரச்சனைகளிலே தமிழ்த்தேசியம் எவ்வாறு தொலைந்தது என்ற மூலக்கருத்தினைப் பாடுபொருளாகக் கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் மாயினி ஆகும்.

அந்தப் பொறுப்பிலே பங்குபற்றிய அரசியல் நாயகர்கள் பலரைப்பற்றியும் நடுநிலமை தேடி ஆய்வு செய்வது மாயினியுடைய ஒரு நோக்கமாக இருந்தது. மாயினி ஏன் முதல் அரசியல் நாவல் என்று நான் உரிமை கோரினேன் என்றால், வரலாறு என்பது என்ன? இன்றைய அரசியல் நாளைய வரலாறு என்றும் நேற்றைய அரசியல் இன்றைய வரலாறு என்றும் ஒரு முகச் சுலபமான எளிமையான புரிதல் நிலைத்து வருகின்றது. மாயினி நாவல் வரலாற்றுச் சம்பவங்கள் ஊடாகச் செல்லும் பொழுது கூட அவற்றை வரலாற்றுச் சம்பவங்களாகத் தரிசிக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்கின்றது. உதாரணமாக கிறீஸ்துவுக்குப் பின் ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் மகா வம்சத்தின் புனைவு. மகாநாம தேரர் அந்த மகாவம்சத்தை இயற்றிய பொழுது அதில் ஊடாடி, உட்புகுத்தப்பட்ட ஒரு பிராமண மேலாதிக்கத்தைப் பற்றிய புனைவு அதில் வருகிறது. அது வரலாற்றில் சொல்லப்படாத ஒன்று. அது அரசியல் நிகழ்வாக ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகப் புனையப்படுகிறது. அதே போன்று தான் ஒளவையார் வாழ்ந்த காலத்துக்குள்ளாகவே நாங்கள் போகிறோமே ஒளிய, ஒளவையார் வாழ்ந்த ஒரு காலத்துக்குள் போகவில்லை. ஒளவையார் வாழும் காலம், அதே போன்று அப்பரும், திருஞான சம்பந்தரும் உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்தினூடாக, இன்று ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளும், நிகழ்காலத்தின் நிகழ்வுகளாகத் தரிசிக்க்கப்படுவதனாலும் நான் மாயினி முதலாவதாகப் புனையப்பட்ட தமிழின் அரசியல் நாவல் என்று உரிமை கோர விழைந்தேன். அண்மைக்காலங்களிலே ஈழநாட்டிலே நடைபெறக் கூடிய இனப்போராட்டம் அல்லது மண்மீட்புப் போராட்டம் அல்லாவிட்டால் விடுதலைப் புலிகளுடைய போராட்டம் அல்லது தமிழ் இனத்தினுடைய தாயக மீட்புப் போராட்டம் என்று சொன்னால் என்ன, அல்லது விடுதலைப் புலிகள் நடத்தக் கூடிய ஒரு பயங்கரவாதப் போராட்டத்துக்கு என்று விளங்கிக் கொண்டாலும் கூட நேரிய ஜனநாயக நீரோட்டத்துக்குள் செல்லப் போகின்றோம் என்று ஒரு கருத்தினை முன்வைத்து ஈழத்தில் நடைபெறக்கூடிய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினாலும் கூட அவையெல்லாம் அரசியல் நாவல்கள் என்று விதந்து ஏற்றுக் கொள்வதற்கு இந்தியாவில் ஒரு ஸ்தாபனம் இருக்கிறது. அந்த ஸ்தாபனம் என்னவென்றால் பிராமண ஆதிக்கம்.

இன்று இந்தியாவில் தமிழர் தேசியம் தொலைந்ததற்கு ஒரேயொரு காரணம் வட இந்திய இந்தி வெறியர்களுடைய எழுச்சி மட்டுமல்ல அது அரசியல் சார்ந்த ஒரு காரணம். ஆனால் அதிகார வர்க்கத்தில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடிய பிராமண ஆதிக்கம் இன்றும் தமிழர்களுக்கு எதிரான ஒன்று எழுதப்படும் பொழுது அதையே "ஆகா! உச்சம்" என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பார்ப்பனச் சூழல் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு. அந்தப் பார்ப்பனச் சூழலிலே தான் புலம்பெயர்ந்த நாடுகளிலே வாழக்கூடிய எழுத்தாளர்கள் சிலருடைய நாவல்களை இவை அரசியல் நாவல்கள் என்று பாராட்டும் ஒரு போக்கு இருக்கின்றது. தமிழர் தேசியத்தை மீட்டெடுத்துப் பார்ப்பது தான் மாயினியினுடைய தரிசனப்பயணம். அதுமட்டுமல்லாமல் தமிழர் தேசியத்தைப் பற்றிய ஒரு பார்வையிலே சிங்கள தேசிய இனத்தின் விரோதங்களைக் கக்குவதும், அதன் மீது ஆத்திரங்களையும், வெறுப்புகளையும் கக்குவது அல்ல நடுநிலமை. சிங்கள இனத்தவர்களுடைய செயற்பாடுகளிலே ஒரு விரோதம் ஏற்படுத்தாத ஒரு அறிவு நாகரிகத்தை "மாயினி" நாவல் சோதனை பூர்வமாக, அறிவுபூர்வமாகப் பின்பற்றியிருக்கின்றது என்பது முக்கியமான ஒரு விஷயம். உதாரணமாக எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் இலங்கையிலே ஏற்பட்ட தமிழர் சங்காரத்துக்கான பிள்ளையார் சுழியைப் போட்டார் என்ற வரலாறுமே இதுவரை காலமும் வேதமாகப் பயிலப்பட்டு வந்தது. அதுவே தமிழர்களுடைய எழுச்சியின் பாலமாகவும் குறியீடாகவும், அரசியல் பார்வையினுடைய திருப்புமுனையாகவும் அமைந்தது என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் இந்த பண்டாரநாயக்காவினுடைய காலத்திலே தான் தமிழர் தேசியத்தை மீண்டும் தமிழர்கள் கண்டார்கள். ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு, தமிழ் மூலமே எங்களுடைய அடையாளத்தைக் கண்டறிதல் வேண்டும் என்ற உணர்வு பண்டாரநாயக்காவால் ஏற்படுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தமிழர் சமுதாயத்திலே ஏற்றத்தாழ்வுகள் உண்டு, சிறுபான்மைத் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்படவில்லை, அவர்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட வேண்டும், என்று தமிழ்த்தலைவர்களுக்கு உரத்துச் சொன்ன ஒரு அரசியல் தலைவனாகவும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அமைகின்றார். எனவே பண்டாரநாயக்காவின் இருமுகங்களையும் அதாவது சிங்கள தேசிய இனத்தினுடைய உணர்வில் தேசிய இன உணர்வாக மாற்றிய ஒரு கொடுமைக்கு முன்னுதாரணமாக விளங்கிய போதிலும் கூட தமிழர்களுடைய தேசியத்தை அவர்கள் கண்டறிவதற்கு உபகாரியாக வாழ்ந்தவரும் பண்டாரநாயக்கா என்று "மாயினி" தரிசித்து செல்கின்றது.

1983 ஆம் ஆண்டு நடந்த யூலைக் கலவரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட எழுச்சிகளும், போராட்டங்களும் பற்றி நிறையவே "மாயினி" சொல்கின்றது. இது வரலாற்றில் கண்டறிந்த சில தகவல்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அந்த சம்பவங்களை கடந்தகாலச் சம்பவங்களாக நோக்காமல் நிகழ்காலச் சம்பவங்களாகத் தரிசிக்க முயல்கிறது. இன்றுவரையில் தமிழர் தேசியத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தார் அமிர்தலிங்கம் என்பது பற்றி ஒரு நேர்மையான, நடுநிலமையான ஆய்வு நூல் வெளிவரவில்லை. 1983 ஆம் ஆண்டில் நடந்த அந்த யூலை கலவரத்திற்குப் பின்னரும், தமிழர் தேசியத்தை ஜனநாயக முறையில் சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுக்க முடியும் என்றோ அல்லது இந்திய அமைதிகாப்புப் படையினர் சிங்களவர்களால் உதைக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் இந்திய தூதரகம் தமிழர்களுக்கு கொடுக்கவிருந்த உரிமைகள் குறித்து என்ன பேச்சுவார்த்தைகள் அவர் நடத்தினார் என்பதைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் இல்லை. "மாயினி" அந்தத் தகவல்களைத் தராவிட்டாலும் கூட அதற்கான சூசகங்கள் இங்கே எல்லாம் உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன, புதிய வரலாறுகள் அந்த இடங்களிலே நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. "மாயினி" உண்மையிலேயே ஒரு முழுமையான எனக்குத் திருப்தி தந்த ஒரு நாவல் என்று நான் சொல்லவில்லை. "மாயினி" தமிழ் வாசகர்களுக்காக எழுதப்பட்ட நாவலும் அல்ல. அந்த "மாயினி" நாவல் சிங்கள வாசகர்களையும், சர்வதேச வாசகர்களையும் சென்றடைதல் வேண்டும்.

இன்று ஒரு ஆண்டுகாலமாக "மாயினி" நாவலை நான் ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் புதிய நூலிலே "மாயினி" தமிழ் நாவலிலே வராத பல உண்மைகள் வருகின்றன. காரணம், மாயினி நாவல் எழுதப்பட்ட பிறகு தான் எவ்வாறு ராஜீவ் காந்தி காலத்திலே விடுதலைப்புலிகளுடைய தலைமைத்துவத்தை இராணுவ ரீதியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொல்லவேண்டும் என்ற சதிகள் நடத்தப்பட்டன என்பதைப் பற்றிய புதிய தகவல்கள் இந்திய நூலாக வெளிவந்திருக்கின்றது. அதை எழுதியவர் அக்காலத்திலே இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்தவர். இவ்வாறு புதிதாகக் கிடைக்கும் சம்பவங்களையும், அதில் சேர்க்க முனைந்துள்ளேன். அத்துடன் தமிழர் தேசியத்தைத் தொலைத்தது தனியே ஈழநாட்டில் மட்டும் வைத்துக்கொண்டு ஆராய்வது தவறு. தமிழர் தேசியம் இந்திய துணைக்கண்டத்தில் எவ்வாறு தொலைக்கப்பட்டது என்பதை ஒப்பு நோக்கு ரீதியில் "மாயினி" நாவலில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த தமிழர் தேசியத்தைத் தொலைத்ததும் திராவிடர் கழகம் அரசியல் நோக்கிலே தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிரிவினை கோஷத்தை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பது எல்லாம் அந்த தமிழர் தேசியம் தொலைந்த ஆய்விலே அக்கறைக்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விஷயங்கள். அதை "மாயினி" நாவலிலே தொடப்படவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் எழுதப்படும் "மாயினி" நாவலிலே இந்தக் குறைபாடுகள் திருத்தி அமைக்கப்படும் என்று நம்புகின்றேன். அரசியல் அதிகார மையங்களுக்கு எதிராக ஒரு எழுத்துப் போராளியாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சிந்திக்காது "மாயினி" நாவல் எழுதப்பட்டது. அதனுடைய வெற்றி, தோல்விகள் ஓர் இலக்கிய வெற்றி தோல்வியாக அல்லாமல் ஒரு இனத்தினுடைய சத்தியத்துக்கு ஏற்படக்கூடிய வெற்றி தோல்விகளூடாகத் தரிசித்து அதனை நான் எழுதியுள்ளேன்.

"மாயினி"யின் இலக்கிய வெற்றிகள், இலக்கிய மேன்மைகள், எனக்கு இலக்கியத்திலே அது சம்பாதித்துத் தரக்கூடிய இடம் ஆகியன பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் ஒரு அறுபது ஆண்டு காலம் தமிழ் எழுதுவதை என்னுடைய உயிரும் மூச்சுமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அரசியல் ரீதியாக எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளை, அரசியற் சிந்தனைகளாக அல்லாமல் ஒரு புதிய புனைவாக, ஒரு நாவலாக தமிழ் மக்கள் முன் வைக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் ஒரு படைப்பாகவே மாயினி உங்களுடைய விமர்சன அரங்குக்கு எடுக்கப்படுகின்றது. இறுதியாக பரீசில் கூடக்கூடிய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். என்னுடைய தமிழ் நாவலை நீங்கள் விமர்சியுங்கள். ஆனால் நீங்கள் சொல்லும் குறைபாடுகள், விமர்சனங்கள், எதிர்க்கட்டுக்கள் அனைத்தையும் தயவு செய்து என்னுடைய பார்வைக்கு அனுப்பி வையுங்கள். ஏனென்றால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இந்த தவறுகள் நிகழாமல் நீக்கி அதை கொண்டுவருவதற்கு எனக்கு உதவும் என்று நான் நம்புகின்றேன்.
Posted by கானா பிரபா at 10:23 PM 1 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Monday, November 24, 2014

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம்



ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.
இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள். 

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் போராட்டக் களத்தில் இருந்த அந்த எண்பதுகளில், எனது அண்ணன் முறையான ஒருவர் ரெலோ இயக்கத்தின் மீது மிகுந்த பற்றோடு இயங்கி வந்தவர். அப்போது தன்னுடைய வீட்டில் ஒரு ஒலிநாடாவை எடுத்து வந்து ஒலிபரப்பியபோது புதுமையாக இருந்தது. தமிழீழ விடுதலையை வேண்டிய பாடல்களின் தொகுப்பு அது.
தமிழ்த்திரையிசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு அப்போது அதைத் தாண்டிய ஜனரஞ்சக இசையாக "சின்ன மாமியே", "சுராங்கனி" போன்ற பொப்பிசைப் பாடல்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைச் செய்தி அறிக்கையோடு வரும் ஒரு சில மெல்லிசைப் பாடல்களும் தான் அறிமுகமாகியிருந்த வேளை இந்த எழுச்சிப் பாடல்களைக் கேட்டது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஈழ விடுதலையை வலியுறுத்தும் பிரச்சாரங்களுக்காப் பொதுமக்களை அணி திரள அழைக்கும் போது எல்லா இயக்கங்களுமே பொதுவில் சினிமாவில் வந்த  எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையும் வேறு சில புரட்சிகரப் பாடல்களையுமே ஒலிபெருக்கி வழியே கொடுத்து மக்களின் கவனத்தைக் குவிக்க வைத்தார்கள்.
"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்", "ஏமாற்றாதே ஏமாறாதே", "அச்சம் என்பது மடமையடா" போன்ற பாடல்களோடு அன்று விஜய்காந்த் நடித்த ஆரம்பகாலப் படங்களில் வந்த புரட்சிகரமான பாடல்களும், குறிப்பாக "எங்கள் தமிழினம் தூங்குவதோ", "தோல்வி நிலையென நினைத்தால்" போன்ற பாடல்களுமே பரவலான பிரச்சாரப் பாடல்களாக அறிமுகமாகியிருந்தன.

இதன் பின்னர் ஒரு இடைவெளி.

1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு "களத்தில் கேட்கும் கானங்கள்" பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல்முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த "களத்தில் கேட்கும் கானங்கள்" ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களுக்கும் முன்னர் கவிஞரின் அறிமுகமும் அதையொட்டிய அடி நாதத்தில் பாடல்களுமாக அமைந்திருக்கும்.

இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளை ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், பி,சுசீலா உள்ளிட்ட தமிழகத்து முன்னணிப் பாடகர்கள் பாடியிருந்தார்கள். "நடடா ராஜா மயிலைக் காளை நாளை விடியப் போகுது" என்று மலேசியா வாசுதேவனும், "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" என்ற பாடலை ஜெயச்சந்திரனும், "கண்மணியே கண்ணுறங்கு" என்று பி.சுசீலாவுமாகப் பாடிய பாடல்களோடு அந்த ஒலி நாடாவில் வந்த ஏனைய பாடல்களும் வெகுஜன அபிமானத்தைப் பெற்றுக் கொண்டன.
இன்னமும் "வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு" என்று வாணி ஜெயராமும் "தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்" என்று காதலர் தம் தாயக நிலையை உணர்ந்து களமாடப் போகும் ஜோடிப் பாடலும் கூட இதில் சேர்த்தி.

அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுப்பதில் அமரர் எல்.வைத்தியநாதன் (எழாவது மனிதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்), தேவேந்திரன் (வேதம் புதிது போன்ற படங்களின் இசையமைப்பாளர் போன்றோரின் பணி வெகு சிறப்பாக அடியெடுத்துக் கொடுத்தது.

இந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு விலகிய பின்னர், ஈழப்போராட்டக் களத்திலும் முன்னர் அவ்வளவாகப் பொதுமக்களோடு அந்நியோன்யம் பாராட்டாது இருந்த போராட்ட வடிவமும் முழுமையான மக்களை ஒன்றிணைத்த போராட்ட வடிவமாக மாற்றமடைய பிரச்சாரப் பிரிவின் முயற்சிகள் தீவிரமாக அமைந்திருந்தன. இதன் முன்னோடி முயற்சிகளாக 86, 87 ஆம் ஆண்டுகளில்  எங்களூர் சந்துபொந்தெல்லாம் ஒரு சிறு வாகனத்தில் தியாகி திலீபன் சிறு ஒலிபெருக்கியோடு பிரச்சாரப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது.
விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவு மற்றும் கலை பண்பாட்டுப் பிரிவு போன்றவற்றின் களப்பணிகளுக்கு ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன.

இந்திய இராணுவம் போன கையோடு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பெரும் எடுப்பிலான இசைக்கச்சேரி நடக்கிறது. அதில் தேனிசை செல்லப்பாவும், பாடகி சுவர்ணலதாவும் (இவர் தமிழ் சினிமாவின் பிரபல பாடகி ஸ்வர்ணலதா அல்ல) பங்கேற்றுச் சிறப்பித்திருந்தார்கள்.

எந்த அடக்குமுறை வாழ்விலும் சுயாதீன முயற்சி தீவிரமடையும் என்பது ஈழத்துப் போர்க்காலப் பாடல்களுக்கும் பொருத்தமாக அமைந்தது. தொண்ணூறுகளில் மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னும் வீரியம் பெற்று எழுகின்றன. ஆனால் இம்முறை ஈழத்தின் பாடகர்களை, இசையமைப்பாளர்களை, கவிஞர்களை ஒருங்கிணைத்து  அவை இன்னொரு புதிய வடிவில் மக்களை எட்டிப் பரவலான வெகுஜன அந்தஸ்தை அடைகின்றன.

பள்ளிக்காலத்தில்  யாழ்ப்பாணத்துக்குச் சைக்கிள் வலித்து டியூஷன் சென்ரர் நோக்கிய பயணத்தில் அப்போது கஸ்தூரியார் றோட்டில் இருந்த இசையருவி என்ற ஒலிப்பதிவுக் கூடத்தைக் கடக்கும் போது  ஏதோ ஏவி.எம் இன் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டுவது போல பிரமை இருக்கும். அந்த இடத்தில் தான் இப்போது லிங்கன் கூல்பார் சற்றுத் தள்ளி இருக்கிறது.

"மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். "கரும்புலிகள்" தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது. அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்." இப்படியாக முன்னர் எனக்களித்த பேட்டியில் அன்று எழுச்சிப் பாடல்களில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவரான வர்ண இராமேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில், அமரர் பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன்,  பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்  போன்றோருடன் மேஜர் சிட்டு போன்ற அப்போதைய போராளிகள், பின்னாளி மாவீரர்களாகிப் போனவர்களும் இணைந்து கொள்ள திரு.வர்ண இராமேஸ்வரன், திரு.பொன் சுந்தரலிங்கம்,  திரு எஸ்.ஜி.சாந்தன் போன்ற ஆண் பாடகருடன் பெண் பாடகிகளில் பார்வதி சிவபாதமும் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றுத் திகழ்ந்தனர். பின்னாளில் திருமலை சந்திரன், குட்டிக்கண்ணன் என்று இன்னும் பல்கிப் பெருகினர்.

"கடலினக்கரை போனோரே"  என்ற பாடலை அந்தக் காலத்து ஈழத்தவர்களும் சொந்தம் கொண்டாடி ரசித்தனர். அதற்குப் பின்னர் நெய்தல் நிலத்துப் பெருமையைக் கொண்டாடிய பாடல்களைத் தம் தலைமேல் சுமந்து போற்றிய தொகுப்பாக ' நெய்தல்" என்ற இசைத்தொகுப்பு வெளிவந்தது.

இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். "ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்", "கடலலையே கொஞ்சம் நில்லு", "முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா", "'நீலக்கடலே", "புதிய வரலாறு" "கடலதை நாங்கள்", "வெள்ளிநிலா விளக்கேற்றும்","நாம் சிந்திய குருதி", அலையே நீயும்" என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்.


இன்றும் நினைவிருக்கிறது தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து "நெய்தல்" கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் "நெய்தல்" பாடல்கள் தான் இடம்பிடித்தன.

என்னைப் பொறுத்தவரை " கடலினக்கரை போனோரே" என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய " கடலலையே கொஞ்சம் நில்லு" பாடலையும் சாந்தன் பாடிய "வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.


மேலே கழுகுக் கண்ணோடு சுற்றும் விமானங்களின் கண்ணில் அகப்படாமல் கொழும்புப் பயணத்துக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊரியான், கொம்படிப் பாதையால் மேடு, பள்ளம், நீர்க்குட்டை எல்லாம் தாண்டி இரவைக் கிழித்துக் கொண்டே கிளிநொச்சியால் பயணிக்கும் தனியார் பஸ்ஸில் எழுச்சிப் பாடல்கள் களை கட்டும். ஒரு விடிகாலை வேளையில் விசிலடித்துக் கொண்டே பாடும் ஒரு எழுச்சிப் பாடல் (பாடல் பெயர் மறந்து விட்டது) அந்த நேரத்தில் கொடுத்த இனிமை இன்றும் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் இனிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் வேடிக்கையான சில நிகழ்வுகளும் நடந்ததுண்டு. ஊரில் இருக்கும் சின்னன் சிறுசுகளுக்கும் எழுச்சிப் பாடல்கள் மனப்பாடம். குறிப்பாக "காகங்களே காகங்களே காட்டுக்குப் போனிங்களா" போன்ற மழலைக் குரலில் ஒலித்த பாடல்கள். ஒருமுறை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து வவுனியாவுக்கான பயணத்தில் தாண்டிக்குளத்தில் வைத்து இலங்கை இராணுவச் சோதனைச் சாவடி. அந்த நேரம் பயணித்தவர்களில் ஒரு இளம் தம்பதியும், ஒரு சிறுமியும். அப்போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தச் சிறுமியின் துறுதுறுப்பைக் கண்டு ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்க, அந்தப் பிள்ளை "எதிரிகளின் பாசறையைத் தேடிச் செல்கிறோம்" என்று பாடவும், நல்லவேளை அவன் ஏதோ சினிமாப்பாட்டு என்று விட்டுவிட்டான்.
 யாழ்ப்பாணத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கல்வி நோக்கில் தங்கி வாழ வரும் இளைஞர்கள்  ஒளித்து மறைத்து இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைச் சினிமாப்பாடல்கள் போலப் பதிவு பண்ணிக் கேட்ட சம்பவங்களை அனுபவித்ததுண்டு ;-)

புலிகளின் குரல் வானொலி பின்னர் தன் ஒலிபரப்பின் இன்னொரு பரிமாணமாக தமிழீழ வானொலியை உருவாக்கிய பின்னர்  இந்த எழுச்சிப் பாடல்கள் நேயர் விருப்பப் பாடல்களாகக் கேட்டு மகிழவும் வாய்ப்பை வழங்கியது.

"ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்" என்று பரணி பாடுவோம் பாடல் தொகுப்பிலிருந்து ஒலிபரப்பும் பாடல் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரசித்தமானவை.

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும். எனவே மின்சாரம் இல்லாது பாடல் கேட்கவும், செய்தி அறியவும் வக்கற்றவர்களுக்கு அது திசை காட்டும்.

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இரட்டையர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுச்சிப்பாடல்கள் நாதஸ்வர இசையாகவும் வாசிக்கப்பட்டு வெளியாயின. 

"செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் தமிழ் தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்" என்று நல்லூர்த் திருவிழாவின் போது கர்நாடக இசை மேடைகளுக்கு நிகராக "நல்லை முருகன் பாடல்கள்" வெளிவந்தன.  ஈழத்துச் சனத்தின் துன்பியல் தோய்ந்த போர்க்கால வாழ்வியலை நல்லூர் முருகனுக்கு ஒப்புவித்துப் பாடிய அந்தப் பாடல்களை புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுத வர்ண இராமேஸ்வரன் பாடியிருந்தார். நல்லூர்த் திருவிழாவின்இசைக்கச்சேரியாகவும் படைத்திருந்தார்கள்.
 "எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்" அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று  புதுவை இரத்தினதுரை அண்ணா ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், "நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்" என்று. எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது "இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது" என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன்" என்று இந்தப் பாடல்களின் உருவாக்கத்தை என்னோடு பகிர்ந்த வானொலிப்பேட்டியில் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

"இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்' என்று தொடங்கும் பாடலின் முதல் அடிகளைக் கொண்டு வெளிவந்த இந்த மண் எங்களின் சொந்த மண் இசைவட்டில் இடம்பிடித்த "ஏறுது பார் கொடி ஏறுது பார்" பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றத்தின் போது பாடப்படும் பாடலாக அமைந்து வருகின்றது. அதே இசைத்தட்டில் வெளியான "விண்வரும் மேகங்கள் பாடும்" பாடல் உள்ளிட்டவை பிரசித்தமானவை.

பின்னாளில் தேனிசை செல்லப்பாவால் பாடிப் பிரபலமான "அழகான அந்தப் பனைமரம்" உள்ளிட்ட பாடல்களோடு தமிழகத்தில் இருந்து மீண்டும் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், நித்யஶ்ரீ போன்ற பாடகர்களால் பாடி அளிக்கப்பட்ட தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து வெளிவந்த  போர்க்கால எழுச்சிப் பாடல்கள்  எண்பதுகளில் இருந்த சூழலை நினைவுபடுத்துகின்றன. அறிவுமதி போன்ற தமிழகத்துக் கவிஞர்களும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இணைந்து கொள்கின்றார்கள். இவர்களில் தேனிசை செல்லப்பாவே பரவலான கவனிப்பைப்பெற்ற பாடகராக தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து விளங்கினார்.

95 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசாங்கம் இயங்கிய போது ஈழத்துத் திரைப்படங்களோடு, போராளிக் கவிஞர்கள், போராளிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள் பரவலாக இந்தப் பாடல் வெளியீட்டு முயற்சிகளில் இயங்கினர். தமிழீழ இசைக்குழு வழியாக பாடல் இசைத்தட்டுகள் வெளியாயின. சமகாலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் ஈழத்துப் போர்க்காலப் பாடல்களின் இசைத் தொகுப்புகள் அந்தந்த நாடுகளில் இருந்தும் வீரியம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்தவை அதிகம். டென்மார்க்கில் இருந்து வெளி வந்த ஒரு சில இசைத்தட்டுகளும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தவை. மலேசியத் தமிழர்களால் வெளியிடப்பட்ட ஈழ விடுதலைக்கான உணர்வு பொருந்திய பாடல்கள் தனியே குறிப்பிடவேண்டியவை. 1995 ஆம் ஆண்டிலியிருந்து 2009 இறுதிக்கட்டப் போருக்கு முன்பாக வெளியான பாடல்கள் ஆயிரத்தைத் தாண்டும். 

இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் திரைப்படங்களின் பாடல்கள் என்ற வகையிலும் எழுச்சிப் பாடல்களின் கிளை தோன்றியது. ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் போராளிகளின் பங்கு, தமிழீழத் திரைப்படப் பாடல்கள், புலம்பெயர் சூழலில் பிறந்த ஈழ தேச நேசிப்பும், எழுச்சியும் மிகுந்த பாடல்கள் போன்றவை தனியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டியவை.

வெறுமனே போர்ப் பிரச்சாரங்கள் தாங்கிய பாடல்களாக அன்றி ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன.

"மீன்மகள் பாடுகிறாள்" போன்ற பாடல்களின் வழியே தமிழீழ மண்ணின் எழில் மீதான நேசிப்பும், "அழகான அந்தப் பனைமரம்" ஆகிய பாடல்கள் ஈழத்து வாழ்வியலின் நனவிடை தோய்தலாகவும், "கண்மணியே கண்ணுறங்கு" போர்க்காலத்தில் பிறந்த குழந்தைக்குரிய தாலாட்டாகவும், "படையணி நகரும்" போர்க்களத்தில் பெண் போராளிகளின் பங்கையும், "மாவீரர் யாரோ என்றால்", "மானம் என்றே வாழ்வெனக்கூறி மண்ணில் விழுந்தான் மாவீரன்" போன்ற பாடல்கள் சமர்க்களத்தில் களமாடி மடிந்த வீரர் பெருமையை எடுத்துரைப்பவையாகவும், "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்" போன்ற நல்லுதாரணங்கள் தொழிலாளர் சக்தியின் ஓசையாகவும், "செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்" பாடல்கள் வழியே போர்க்காலத்துப் பக்தி இசை வடிவமாகவும், "கிட்டடியில் இருக்குதடா விடுதலை", "பட்டினி கிடந்து" ஆகிய பாடல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்பவையாகவும், "என் இனமே என் சனமே" போன்ற பாடல்களால் போராளிக்கும் சமூகத்துக்குமான உறவின் வெளிப்பாடாகவும், "பூத்தகொடி பூவிழந்து" பாடல்களின் வழியே போரின் ரணத்தைப் பதிவு செய்தும், "காகங்களே காகங்களே" இன்ன பிற பாடல்களால் சிறுவரை இணைக்கும் போர்க்கால இசைப் பாடல்களாகவும், 
"பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" வழியாக தலைவனின் மாட்சிமையையும் காட்டி நிற்கும் பாடல்களாகவும் இந்த ஈழ எழுச்சிப் பாடல்களின் அடித்தளம் வெறுமனே பிரச்சாரப் பாடல்கள் அன்றிப் பரந்து விரிந்து பல்வேறுவிதமான பின்னணியோடு அமைந்திருப்பது அவற்றின் தனித்துவத்தைப் பறைசற்றுகின்றன. இன்னொருபுறம் தனியே மெல்லிசை என்ற கட்டுக்குள் நில்லாது சாஸ்திரிய இசையை அரவணைத்தும், பைலா போன்ற மேலைத்தேய இசைவடிவங்களைத் தொட்டும் (உதாரணம் அப்புஹாமி பெற்றெடுத்த) இந்தப் பாடல்களின் வடிவம் ஒரு கட்டுக்குள் நில்லாது அமையப்பெற்றிருக்கின்றன.

"ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடிக்க முனையும் பூனை" என்று வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் எழுதும் போது கம்பர் சொன்ன அவையடக்கம் போன்றது என்பதுகளின் இறுதி தொட்டு 2009 வரையான முப்பது ஆண்டுகளில் இயங்கிய ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைத் தொட்டுப் பேசுவது.
பல்கலைக் கழக மட்டத்தில் இன்னமும் விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு இசைப்பண்பாடு இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு.


Posted by கானா பிரபா at 6:34 PM 2 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook

Wednesday, October 15, 2014

காவலூர் ராசதுரை - ஈழத்து ஊடகத்துறை அடையாளம் ஒன்று உதிர்ந்தது

ஈழத்து இலக்கிய மற்றும் ஊடகத்துறை அடையாளங்களில் ஒருவராக விளங்கிய காவலூர் எஸ்.இராசதுரை அவர்கள் காலமாகிவிட்டார் என்ற  செய்தி சிலமணி நேரங்களுக்கு முன்னர் கிட்டியபோது வெறுமனே "மனவருத்தம் அளிக்கும் செய்தி" என்று வார்த்தைகளை உதிர்க்க முடியாத அளவுக்கு கவலையை ஏற்படுத்தி நிற்கிறது.
காவலூர் ராசதுரை அவர்கள் ஈழம் நன்கறிந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், விளம்பர நிறுவன நிர்வாகி, சிறுகதை, கட்டுரைப்படைப்பாளி ஆவார்.
என்னுடைய வானொலிப் பணியின் ஆரம்ப காலத்தில் 2000 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இவர் சிட்னிக்குத் தன் பிள்ளைகளைப் பார்க்கும் நோக்கில் வந்தபோது குறுகிய வானொலிப் பேட்டி ஒன்று எடுத்திருந்தேன். அப்போது "பொன்மணி" என்ற ஈழத்துத் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்ற அடையாளமே அவர் குறித்த அறிமுகமாக வெகுவாக என்னிடம் இருந்திருந்தது. பொன்மணி திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா இவர். பொன்மணி திரைப்படம் பல்வேறு விதமான விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தாலும் இந்தப் படம் செய்த ஒரு பெரும் பணி, படத்தில் நடித்த கலைஞர்களில் ஈழத்தின் அறிவுசால் மட்டத்தில் பெரிதும் போற்றப்படும்பேராசிரியர் சிவஞானசுந்தரம் (நந்தி), பேராசிரியை சித்ரலேகா மெளனகுரு உள்ளிட்டோர் நடித்த படம் அதுமட்டுமன்றி ஈழத்து வாழ்வியலின் ஆவணப்படமாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது.
 ஒலிப்பதிவு செய்யப்படாமல் நேரடியாக வானலையில் வந்த அந்தப்  பேட்டியின் போது "ஐயா" என்று நான் அவரை விளித்துக் கேள்விகளை ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் "என்னை ஐயா என்று கூப்பிடாதேங்கோ" என்று சங்கோஜப்பட்டார். எனக்கு அப்போது கொஞ்சம் கிலேசமாகவும் இருந்தது. ஒரு மூத்த ஆளுமைக்கான கெளரவ அடையாளமாகவே "ஐயா" என்ற பதத்தைப் பாவித்தேன். ஆனால் பின்னாளில் அவர் சிட்னியில் நிரந்தரமாகத் தங்கி நட்புப் பூண்டிருந்த காலத்தில் தான் அவரை முழுமையாக அறிந்து கொண்டு தெளிந்தேன்.  காவலூர் ராசதுரை அவர்கள் விளம்பதுறை குறித்த நீண்ட நெடிய அனுபவம் மிக்கவர்.  ஆனால் தன்னளவில் வீண் விளம்பரங்கள் ஒட்டாமல் பார்த்துக் கொண்ட அடக்கமான ஆளுமை அவர்.

"விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூலை எழுதியவர். ஈழத்தமிழ்ப் பதிப்புலகில் மட்டுமன்றி தமிழகத்திலும் கூட விளம்பரத்துறை குறித்த விரிவான எழுத்துகள் தமிழில் வந்ததில்லை. அந்த வகையில் குறித்த இந்த நூலை நான் படிக்கும் போது இவரின் பன்முகப்பட்ட அனுபவத்தை வியந்தவாறே படித்தேன்.

பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும் இந்த்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல அதன் சூட்சுமங்களையும் உணர்ந்து தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்தச் சிலருள் காவலூர் ராசதுரையும் ஒருவர். பத்திரிகைத் துறையாகட்டும், சிறுகதை, நாவல், இலக்கிய, விமர்சனமாகட்டும் ஒலிபரப்புத் துறையாகட்டும் ஏன் விளம்பரத்துறையாகட்டும் எதிலுமே தன் கைவரிசையைக் காட்டு வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை மெய்ப்பித்து வருபவர் காவலூர் ராசதுரை.

1978 இல் வானொலி உத்தியோகத்திலிருந்து விடுபட்டு தனிப்பட்ட முறையில் விளம்பரத் தாபனம் ஒன்றை நிறுவினார்.குறுகிய காலத்த்ல் முன்னணி விளம்பர நிறுவனங்களுடன் போட்டி போட்டு சர்வதேச நிறுவனங்கள் பலவற்றுக்கும் கூட விளம்பரப் பிரதிநிதி நிறுவனமாக வசீகரமாக அதனை நடத்து வருகிறார். (வீ.ஏ.திருஞானசுந்தரம் தினகரன் வாரமஞ்சரி ஏப்ரல் 13, 1986.)

110 பக்கங்களுடன், பத்திரிகை விளம்பரத்தின் பூர்வீகம், அமெரிக்க விளம்பரத்துறையின் ஆரம்பம், விளம்பர முகவர்களின் உதயம், விளம்பரத்தின் ஆற்றலும் ஆற்றாமையும், விளம்பரத்தைத் திட்டமிடல், சந்தை நிலை பற்றிய ஆய்வு, விளம்பர ஊடகங்களைத் தெரிவு செய்தல், விளம்பரத்தை அமைக்கும் முறைமை, விளம்பர வாசகத்தின் கட்டுக்கோப்பு, விளம்பரத்தின் வடிவமைப்பு, அச்சு ஊடகத்துக்கென விளம்பரம் அமைத்தல், இலங்கையில் விளம்பரத்துறையின் வரலாறு, இலங்கையில் வானொலி விளம்பரத் துறையின் வரலாறு, வானொலி விளம்பரங்கள், விளம்பர அறிவிப்பாளர்களின் தகைமைகள், வர்த்தக ஒலிபரப்பின் வீச்சும் சொல்வாக்கும், தொலைக்காட்சி விளம்பரங்கள், விளம்பரமும் சாதியமும், விளம்பரமும் பெண்ணியல் வாதமும், விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன் ஆகிய தலைப்புக்களில் ஒக்டோபர் 2001 வெளியிடப்பட்டது. வசீகர அட்வேட்டைசிங் வெளியிட்டது.

குழந்தை ஒரு தெய்வம் (சிறுகதைக் கோவை), வீடு யாருக்கு (குறுநாவல்), ஒரு வகை உறவு (சிறுகதைக் கோவை) போன்ற நூல்களையும் இவர் ஆக்கியளித்தார். (
மேற்கோளின் பத்திகள் நன்றி: காவலூர் ராசதுரை அவர்கள் எழுதிய "விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்"

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 இவரின் மறைவினையொட்டி நான் பணிபுரியும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களிடமிருந்து நினைவுப் பகிர்வைத் தற்போது எடுத்துக் கொண்டேன். இதோ அதன் ஒலிவடிவம் Download பண்ணிக் கேட்க 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை  ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச்  சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார். ஏனெனில் இந்த விஷயம் தெரிந்தால் ராசதுரை அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரியும். ஆனால் கலைஞர்களும் படைப்பாளிகளும் அவர்தம் வாழும் காலத்தில் கெளரவிக்கப்படவேண்டும் என்ற முனைப்போடு செயற்படும் திரு முருகபூபதி அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக அமைந்தது இந்த நிகழ்வு. பெருமதிப்புக்குரிய கவிஞர் அம்பி, மூத்த கலைஞர் திரு சிசு நாகேந்திரன், ஓவியர் ஞானம்,  இலங்கை ஒலிபரப்புத்துறை முன்னை நாள் பணிப்பாளர் திருமதி ஞானம் இரத்தினம், எழுத்தாளர் கலாநிதி ஆ.கந்தராசா, கவிஞர் திரு.செ.பாஸ்கரன், டாக்டர் பாரதி ஆகியோர் பங்கேற்று இந்த இலக்கியச் சந்திப்பையும் காவலூர் ராசதுரை அவர்களின் 75 வது பிறந்த நாள் கெளரவிப்பையும் பூரணத்துவப்படுத்தினார்கள்.

அந்த நிகழ்வில் பேசிய திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் காவலுர் ராசதுரை அவர்கள் இலங்கை வானொலியில் கொடுத்த பங்களிப்பின் அறியப்படாத பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கலைக்கோலம் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக இவர் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், இன்னொரு அறியாத தகவல் இலங்கை வானொலிக்கே தனித்துவமான "செய்தியின் பின்னணியில்" என்ற சமகால நாட்டு நடப்பு அலசல் நிகழ்ச்சியைக் கொண்டு வந்தவரும் காவலூர் ராசதுரை அவர்களே என்ற செய்தியை அப்போது சொல்லியிருந்தார்.

காவலூர் ராசதுரை அவர்களின் படைப்பான "காலங்கள்" அப்போது ரூபவாஹினியில் வந்த காலகட்டத்தையும் மறக்க முடியாது.  தோட்டத்தொழிலாளர் வாழ்வியலை இந்த நாடகம் பிரதிபலித்திருந்தது.

 

 எழுத்தாளர் திரு.லெ.முருகபூபதி அவர்கள் நிகழ்வைத் தலைமை தாங்கிப் பேசிய போது
 திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் திரு.காவலூர் ராசதுரை அவர்கள்இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்த போது
 கவிஞர் அம்பி அவர்கள் ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது
 கலாநிதி ஆ.கந்தராசா ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது
 ஓவியர் ஞானம் அவர்கள் ராசதுரை அவர்களைக் கெளரவித்த போது



 காவலூர் எஸ்.ராசதுரை அவர்களின் 75வது பிறந்த நாள் நிகழ்வைக் கொண்டாடிய போது

அந்த நிகழ்வின் காணொளி சிறுதுளியாக வீடியோவில் பகிர்கிறேன். இந்தக் காணொளியில் அமரர் ராசதுரை, எழுத்தாளர் முருகபூபதி, திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் இடம்பெறுகின்றார்கள்.



ஒக்டோபர் 7, 2007 ஆம் ஆண்டு சிட்னியில் இயங்கும் தமிழ் முழக்கம் வானொலியின் 15 வது ஆண்டு நிறைவு நிகழ்வில்  ஆம் ஆண்டு ஈழத்தின் புகழ் பூத்த நாடகக் கலைஞர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் அவர்களது "அண்ணை றைற்" என்னும் தனி நடிப்பு நாடகங்களின் தொகுதியை ஒலிவட்டை வெளியிட எண்ணினேன். அதற்குப் பொருத்தமானவர் திரு காவலூர் ராசதுரை அவர்களே என்று கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணரிடம் தெரிவித்த போது அவர் தொலைபேசி வழியாகக் காட்டிய குதூகலம் இன்னும் நினைப்பில் இருக்கிறது. அவ்வளவு தூரம் தான் வானொலியில் பணிபுரிந்த காலகட்டத்தில் காவலூர் ராசதுரை அவர்களின் மேல் பெரு மரியாதை வைத்திருந்தார். கே.எஸ்.பாலச்சந்திரனின் ஆரம்பகால நாடக வாழ்வியிலில் திரு காவலூர் இராசதுரை அவர்களின் ஊக்குவிப்பும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது என்று பாலா அண்ணர் அப்போது சொல்லியிருந்தார்.

"அண்ணை றைற்" தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டை பிரபல எழுத்தாளரும், இலங்கை வானொலியின் முன்னை நாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திரு காவலூர் இராசதுரை அவர்கள் வெளியிட, வானொலி மாமா திரு.மகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

 என்னளவில்  இந்த இரண்டு நிகழ்வுகளையும் இன்றும் நான் நினைத்துத் திருப்தியடையும் ஒரு பணியாகவே இதைப் பார்க்கிறேன்.

சிட்னியில் எனது வீட்டில் இருந்து ஒரு சில நிமிட நடை தூர நெருக்கம் மட்டுமல்ல காவலூர் இராசதுரை அங்கிள் என்று நான் தொலைபேசியிலும் நேரிலும் பேசும் போது பல்லாண்டு காலப் பந்தம் கொண்டவர் போல அந்த ஒரு சில வருடப் பழக்கத்தோடே என்னுடன் நட்புணர்வு பேணி வந்தவர்.
அவர் வாத நோயினால் முழுமையாகப் பாதிக்கப்பட முன்னர் கடைசியாக Parramatta என்ற நகரில் எதேச்சையாகச் சந்தித்தேன். "அங்கிள் ஒரு நிமிஷம், என்றுவிட்டு ஓடிப்போய் காருக்குள் இருந்த என்னுடைய "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" என்ற நூலை எடுத்து வந்து ஆசையோடு அவர் கையில் திணித்தேன். அப்போது அவரைப் பீடித்த நோயின் ஆரம்ப அறிகுறிகளை உணரமுடிந்தது. "என்னால முந்தியப் போல தொடர்ச்சியாகப் பேசமுடியாது" என்று இழுத்து இழுத்துப் பேசினார். "அங்கிள் உடம்பைக் கவனமாப் பார்த்துக் கொள்ளுங்கோ என்று விடைகொடுத்தேன். உடல் நலம் தேறிய பின்னர் அவரை வைத்து ஒரு நெடிய வானொலிப் பேட்டி செய்து அவரின் வாழ்வியல் அனுபவங்களைப் பதிவாக்க வேண்டும் என்ற அவா அப்போது இருந்தது. அவரும் செய்யலாம் என்றே சொல்லியிருந்தார். அந்த வாய்ப்பும் கிட்டாமல் போயிற்று. 

ராசதுரை அங்கிள்! உங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பேன், உங்களின் நினைவுகள் எம்மை விட்டு மறையாது நிலைத்திருக்கும். 


காவலூர் ராசதுரை அவர்களின் நூல்களைப் படிக்க http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D




Posted by கானா பிரபா at 1:38 PM 2 comments Email This BlogThis! Share to Twitter Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (34)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (3)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ▼  2014 (22)
    • ▼  December 2014 (3)
      • கல்வியாளர் பொ.கனகசபாபதி நினைவில் பகிர்வாக....
      • கனியும் கனிந்தால் கனியும்
      • வலைப்பதிவுப் பயணத்தில் நிறைவான என் ஒன்பது ஆண்டுகள்
    • ►  November 2014 (2)
      • வரலாற்றில் வாழும் ஈழத்து இலக்கிய ஆளுமை எஸ்.பொ நினை...
      • ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம்
    • ►  October 2014 (2)
      • காவலூர் ராசதுரை - ஈழத்து ஊடகத்துறை அடையாளம் ஒன்று ...
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes