"No other profession calls on its practitioners to lay down their lives for their art save the armed forces and, in Sri Lanka, journalism.... Electronic and print-media institutions have been burnt, bombed, sealed and coerced. Countless journalists have been harassed, threatened and killed. It has been my honour to belong to all those categories and now especially the last" - Lasantha Wickrematunge (former editor of Sunday Leader) (இவர் எழுதிய கடைசி ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து மேற்கண்டது)
"வன்னியிலே தற்போது நடந்து வரும் சிறீலங்கா அரசின் மூர்க்கமான தாக்குதல்களுக்கு மத்தியில் இருந்து நான் உலகத்துக்கு இந்த அவலங்களை எடுத்து வருகின்றேன், எனக்கு பக்கத்தில் எல்லாம் குண்டுகளும், ஷெல்களும் விழுந்து வெடிக்கின்றன. நாளை என் உயிருக்குக் கூட உத்தரவாதமில்லாத ஒரு சூழ்நிலையில் இருந்து கொண்டு நான் உங்களோடு பேசுகிறேன்" - வன்னிச் செய்தியாளர் அமரர் பு. சத்தியமூர்த்தி (இந்தச் செய்தியை வழங்கிய ஒரு சில தினங்களுக்குள் அவரும் குண்டு வீச்சில் பலியாகின்றார்)
Balibo திரைப்படத்தின் டிவிடியை இன்று வாங்கித் திரையில் ஓட விடுகின்றேன். ஜீலியானா என்ற மங்கை Timor-Leste Commission for Reception, Truth and Reconciliation என்ற ஆணைக்குழுவின் முன்னால் பேசத் தொடங்குகிறாள். அவள் ஒன்பது வயதுப் பெண்ணாக இருந்த அந்த 1975ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கண்முன் நடந்த காட்சிகள் விரிகின்றன.
"இந்தோனோசியத் துருப்புக்கள் எமது கிழக்கு தீமோரின் தலைநகர் டிலிக்குள் ஊடுருவப் போகின்றன. எனவே எங்களை எல்லாம் இங்கிருந்து வேறு இடத்துக்குப் போகச் சொல்லி என் அப்பா பலவந்தப்படுத்தி அனுப்ப எத்தனிக்கிறார். Hotel Turismo என்ற என் அப்பாவின் ஹோட்டலில் தங்கியிருந்த Roger East என்ற அவுஸ்திரேலிய செய்தியாளருக்குக்கு நடந்த கொடூரத்தை நான் என் கண் முன்னே பார்க்கின்றேன்" குமுறலோடு வெளிப்பாட்ட ஜீலியானாவின் வார்த்தைகள் ஆணைக்குழுவிடம் கண்ணீருடன் சாட்சியமாக.
படம் தொடர்ந்து Roger East என்ற அந்தச் செய்தியாளரின் பயணமாக ஆரம்பிக்கின்றது. Australian Associated Press என்ற அவுஸ்திரேலிய செய்திஸ்தாபனத்துக்கு ஒரு சுதந்திர செய்தியாளனாகத் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட Roger East ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்ட கிழக்குத் தீமோரின் வெளியுறவு அமைச்ச்சர் Jose Ramos-Horta ஐ சந்திக்கின்றார். கிழக்குத் தீமோரின் செய்திஸ்தாபனத்துக்கு Roger East தலைமையேற்று நடத்தவேண்டும், இந்தோனோசியா தம் நாட்டின் மீது கொண்டிருக்கும் வல்லாதிக்கத்தை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்பதே Jose Ramos-Horta இன் விருப்பாக அமைகின்றது. ஆனால் அவுஸ்திரேலியாவில் இருந்து செய்தியாளர்களாகப் பயணப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்கள் கிழக்குத் தீமோர் - இந்தோனோசிய எல்லையில் இருக்கும் Balibo என்ற இடத்தில் வைத்துக் காணாமற் போன செய்தி என்ற ஒன்று மட்டுமே Roger East இந்த நாட்டுக்குப் பயணப்பட வைக்கும் ஒரே காரணியாக அமைகின்றது. Roger East கிழக்குத் தீமோர் வருகின்றார், எத்தனையோ போர் அவலங்களைச் சந்திக்கின்றார், அனுபவப்படுகின்றார், தான் தேடி வந்த அந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு நடந்த கோர நிகழ்வு கண்டு வெதும்புகிறார். தொடர்ந்து என்ன நடக்கிறது அதைத் தான் Balibo என்ற இப்படம் பேசுகின்றது.
ஜீலியானா என்ற சாட்சியத்தின் குரலாக ஆரம்பிக்கும் இப்படம், பின்னர் Roger East என்ற செய்தியாளன் ஐந்து ஊடகவியலாளர்களைத் தேடும் பயணமாக அமையும் காட்சிகள், இன்னொரு புறம் குறித்த ஐந்து ஊடகவியலாளர்கள் கிழக்குத் தீமோரில் ஒவ்வொரு இடங்களாகப் பயணப்பட்டு போரவலங்களைச் செய்திகளாகத் திரட்டும் சூழ்நிலையும் மாறி மாறிக் காண்பிக்கப்பட்டு Balibo பகுதியில் நடக்கும் கோரத்தாண்டவத்தோடு பார்வையாளனுக்குச் சொல்ல வந்த செய்தி பாரமாக ஏற்றி வைக்கப்படுகின்றது.
1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிழக்குத் தீமோர் வரலாற்றில் மறக்க முடியாத ஓர் ஆண்டு. மனிதப் பேரவலம் ஒன்று இந்தோனேசியாவால் கோரத்தாண்டவமாக கிழக்குத் தீமோரில் அரங்கேற்றிய ஆண்டு தான் அது. போர்த்துக்கீச தீமோர் என்று அது நாள் வரை போர்த்துக்கல் நாட்டின் காலணித்துவமாக இருந்த கிழக்குத் தீமோரை இந்த 1975 தன் பிடியை விடவும், தன்னைச் சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆனால் தொடர்ந்த இந்தோனோசியாவின் வல்லாதிக்கத்தினால் மீண்டும் அடிமைச் சிறைக்குள் புகுந்து கொண்டது.
ஏன் எமக்கு இந்த நிலைமை? உங்கள் நாடு ஏதாவது செய்யக் கூடாதா? தன்னுடைய படையை அனுப்பி வைக்கக் கூடாதா? எமக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை குறைந்த பட்சம் ஐ.நா சபையிலாவது எடுத்துக் கொண்டு போய் உலகத்தின் கவனத்தை எம்மீது திசை திருப்பலாமே? ஜப்பான் உங்கள் நாட்டுக்குப் படையெடுக்கும் போதெல்லாம் எங்கள் ஆட்களை உங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து உயிர்த்தியாகம் செய்ய வைத்தோமே? எங்களுக்கு உங்கள் நாடு ஏதாவது செய்யலாமே? நிர்க்கதி நிலையில் இந்தோனோசியாவின் வல்லாதிக்கப் போர்ச் சூழலில் இருக்கும் கிழக்குத் தீமோர் அபலைகள் அந்த அவுஸ்திரேலியச் செய்தியாளர்களிடம் கேட்கிறார்கள். "என்னிடம் இதற்குப் பதில் இல்லை" என்ற வாறே சானல் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் Greg Shackleton பெயர் தெரியாத அந்தக் கிராமத்தில் நின்று கொண்டு வீடியோ கமராவின் முன்னால் பேசுகிறார். இந்தோனோசியப் படைகள் அந்த இடத்தை நோக்கி நகர்கின்றார்களாம். அவசரமாக இன்னோர் இடத்துக்கு நகர்கின்றார்கள்.
Balibo பகுதி இப்போது இந்தோனோசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது, பெரும் ஆபத்து நிறைந்த அந்தப் பகுதிக்குப் போய் உன்னால் செய்ய செய்ய முடியும்? Roger East ஐ கிழக்குத் தீமோருக்கு அழைத்து வந்து Jose Ramos-Horta அவரைப் பார்த்துக் கேட்கிறார்.
உண்மைகள வெளியே வரவேண்டும், அந்த ஐந்து செய்தியாளருக்கும் என்ன நடந்தது என்ற உண்மையை நான் வெளியுலகுக்குக் கொண்டு வருவேன், அதன் மூலம் இந்தோனோசிய அரசின் வல்லாதிக்கத்தைக் காட்ட ஒரு வாய்ப்பும் கிட்டும் - இது Roger East.
"முட்டாள்தனமாகப் பேசாதே, இத்தனை ஆயிரம் எம் கிழக்குத் தீமோர் மக்கள் கொல்லப்படும் போது உங்கள் உலகத்தால் என்ன செய்ய முடிந்தது? ஐந்து வெள்ளையர்களை வைத்துத் தான் மனிதாபிமானம் பார்ப்பார்களா?" Jose Ramos-Horta .
படம் முழுவதும் கிழக்குத் தீமோர், இந்தோனோசியா மெல்ல மெல்லத் தன் ஆதிக்கத்தை பெரும் போர் கொண்டு நடத்திய அந்த நாட்களில் ஓட்டு மொத்த உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்த வலிக்கும் நிஜங்களைக் காட்சிப்படுத்துகின்றது. அன்றைய அவுஸ்திரேலியப் பிரதமராக இருந்த Malcolm Fraser மற்றும் அமெரிக்க அரசாங்கமும் இந்தோனோசியா கிழக்குத் தீமோரைக் கைப்பற்றி (அப்போது போர்த்துக்கீச தீமோர்) தன் 27 ஆவது மாகாணமாக அமைக்க முழுமையான ஆசி வழங்கியதை இப்படம் சொல்லிவைப்பதோடு இந்த வரலாற்றுத் தவறுக்குக் குட்டும் வைக்கின்றது.
சானல் 7 என்ற அவுஸ்திரேலியத் தொலைக்காட்சியின் சார்பில் Greg Shackleton (செய்தியாளர்), Tony Stewart (ஒலிப்பதிவாளர்), Gary Cunningham (படப்பிடிப்பாளர்), மற்றும் இன்னொரு அவுஸ்திரேலிய தொலைக்காட்சி சானல் 9 சார்பில் Brian Peters (படப்பிடிப்பாளர்), Malcolm Rennie (செய்தியாளர்) ஆகிய ஐந்து பேரும் கிழக்குத் தீமோரில் அப்போது நடந்த பேரவலத்தை போர்க்களத்தில் நின்று செய்தி திரட்டி வெளியுலகுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்டதையும் அதற்கு அவர்கள் கொடுத்த விலையும் கூடவே இந்தச் செய்தியாளர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தேடிப் போகும் Roger East சந்திக்கும் அனுபவங்கள் சொல்லும் செய்திகள் அன்று அடிமைப்பட்டுப் போகின்ற ஒரு சமுதாயத்தின் இறுதிக் கணங்களை வேதனையோடு சொல்லி மாய்கின்றது. மனதில் பெரும் பாரம் ஒட்டிக் கொள்கின்றது.
Jill Jolliffe என்ற அவுஸ்திரேலியச் செய்தியாளர் 1975 ஆம் ஆண்டில் இதே போர்ச்சூழலில் இருந்த போது ஐநது ஊடகவியலாளர்களுக்கும் நடந்த கோர முடிவை Cover-Up என்ற தனது நூலில் கொண்டு வந்திருக்கிறார். இந்த நூலை அடிப்படையாக வைத்தே Balibo என்ற இப்படம் Robert Connolly இயக்கத்தில் David Williamson திரைக்கதை அமைப்பில் 2009 இல் வெளிவந்திருக்கின்றது. Anthony M. LaPaglia என்ற அவுஸ்திரேலிய நடிகர் முக்கிய பாத்திரம் ஏற்றிருக்கின்றார். Melbourne International Film Festival இல் திரையிடப்பட்ட இப்படம் இதுவரை உலகத்தின் பெரும் கவனத்தை ஈர்க்காதது பெரும் குறை. இதையே ஹொலிவூட் நடிகர்கள் Morgan Freeman போன்றோர் நடித்தால் ஆஹா, ஓகோ என்றிருப்பார்களோ தெரியவில்லை. கிழக்குத் தீமோர் சந்தித்த பேரவல வாழ்வியலின் ஆரம்ப கட்டமான 1975 இல் நடக்கும் கதை அந்த உலகத்துக்கே எம்மை அழைத்துச் சென்று இந்தக் கொடூரமான போரின் பக்கங்களைக் காட்டுகின்றது. படத்தின் நிறைவில் சுதந்திர பூமியாக 1999 ஆம் ஆண்டில் மலர்ந்த கிழக்குத் தீமோரில் Jose Ramos-Horta என்ற போராளி 24 வருடங்களுக்குப் பின் தன் சுதந்திர பூமியில் காலடி வைத்துத் தன் மக்களோடு சுதந்திரக் களிப்பில் இருப்பதோடு நிறைவடைகின்றது. கொல்லப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்களுக்கும், கூடவே அவர்களைத் தேடிச் சென்ற Roger East இற்கும் நீதி இன்னும் கிடைக்கவில்லை என்ற உண்மையை சிகரெட் நெருப்பாகச் சுடவைத்து நிறுத்தி ஓய்கிறது இப்படம்.
ஒரு ஊடகவியலாளனாகப் போர்ச் சூழலை முகம் கொடுக்கும் விதம், அந்த வெளிநாட்டு ஊடகவியலாளனை ஏதோ அரச பிரதிநிதி போலக் கையேந்தி நிற்கும் விதம் Jose Ramos-Horta என்ற போராளி இறுதி வரை தன் இலட்சிய வேட்கைக்காகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் விதம் என்று ஓராயிரம் செய்திகளை வெகு யதார்த்தமாகச் சொல்லி வைக்கும் இப்படம் கிழக்குத் தீமோரின் போரியல் வரலாற்றையும், அது சுதந்திரத்தை நாடிய விதத்தையும் ஒரு வெட்டு முகமாகக் காட்டி நிற்கின்றது. டிவிடியோடு இணைத்த மேலதிக டிவிடி ஒன்றிலும் விடுபட்ட செய்திகள் ஆவணங்களாகக் காண்பிக்கப்படுகின்றன்.
(Just days before his death, Greg Shackleton paints "Australia" on a shop wall in Balibo in East Timor in 1975.photo courtesy: The Age Newspaper)
தாம் Balibo வில் தங்கியிருக்கின்ற Chinese house இன் முன் சுவரில் Australia என்று சிவப்பு மையினால் எழுதி வைத்தால் எங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கும் Greg Shackleton (சானல் 7 செய்தியாளர்), பின்னர் இந்தோனோசிய இராணுவம் ஊடகவியலாளர்களை நடாத்திய கொடூரமும், பின்னர் அதைச் சாதாரணமாக "இராணுவம் முன்னேறிய போது தவறுதலாகச் சுடப்பட்டார்கள்" என்று இந்தோனோசிய அரசு சொல்லிய சப்பைக் கட்டை இன்று வரை ஏற்கும் உலகமும் என்று முழுமையான வலி தாங்கிய உண்மைச் சம்பவங்களின் கோர்வையாகத் தான் இந்தப் படம் அமைந்திருக்கின்றது.
கொல்லப்பட்ட செய்தியாளர் Greg Shackleton இன் மனைவி பின்னாளில் கிழக்குத் தீமோர் சுதந்திரத்துக்காகத் தீவிரமான போராட்டக்காரராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தோனோசியா தந்த கொடுந்துயரில் பாதிக்கப்பட்ட 8000 கிழக்குத் தீமோர் அபலைகளின் வாக்குமூலங்களைத் தான் ஜீலியானா என்ற பாத்திரத்தின் வாயிலாகப் பேசுகிறது Balibo.
படம் நிறைவை நாடும் கணங்கள் வருகின்றன. மீண்டும் ஜீலியானாவின் சாட்சியத்தைக் காட்சி பகர்கின்றது.
நாளை உன்னுடைய மிச்ச அனுபவங்களைச் சொல்வாயா? - ஆணைக்குழு அதிகாரி ஜீலியானாவைப் பார்த்துக் கேட்கிறார்.
கடந்த 24 வருச கொடும் போர்ச் சூழலில் நான் சந்தித்த எல்லா அவலங்களையும் கேட்க உங்களுக்கு நேரம் கிட்டுமா? எத்தனை நாட்கள் உங்களால் இதற்காக ஒதுக்க முடியும்? எந்த அவலத்தை நான் சொல்லாமல் விடுவது? சொல்லுங்கள்? ஜீலியானா குமுறிக் கொண்டே கேட்கிறாள் அந்த அதிகாரியைப் பார்த்து.
அந்தக் குரல் முப்பது வருஷங்களுக்கு மேலாக இன்னும் ஓய்வில்லாத அடிமைச் சூழலில், முள் வேலிகளுக்குள் இருக்கும் அபலைகள், சிறைச்சாலைகளுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள், அரச பயங்கரவாதத்தை வெளியுலகுக்குக் காட்ட முனைந்து தம் உயிரை அதே பயங்கரவாதத்துக்குப் பறி கொடுத்த ஊடகவியலாளர்கள், சொந்த நாட்டில் இருந்து உயிரை மட்டும் பிடித்தால் போதும் போதும் என்று உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கின்ற ஏதிலிகள் என்று ஈழத்தின் ஒட்டு மொத்த வலிகளையும் பொருத்திப் பார்த்து வேதனைப்பட்டு நிற்க முடிகின்றது.
ஆண்டாண்டு காலமாகப் வெறும் பட்டியல் போட்டு வைக்க முடிகின்றது எம்மவர் அவலங்களை. "Who is Lasantha" என்று கேட்கும் கோத்தபய ராஜபக்க்ஷேக்களை கைகுலுக்கி வைக்கிறது உலகம்.
வானொலியில் பணி புரியும் காலத்தில் ஈழத்தில் இருந்து செய்திகளை மறுமுனையில் கொடுத்த ஊடகவியலாளர்கள் நிலையும் இப்படம் காட்டிய அதே நிலைதான்.
புலம்பெயர்ந்த சூழலில், கிழக்குத் தீமோர் மக்கள் ஈழத்து அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததை அனுபவ ரீதியாகப் பல எழுச்சி நிகழ்வுகளில் கண்டிருக்கின்றேன். அவர்களின் பிரதிநிதி ஒருமுறை எங்கள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதியிடம் சொன்னாராம், "எங்களுக்கு முன் உங்கள் நாட்டின் விடுதலை தான் கிட்டியிருக்கும்" என்று நினைத்தேன் என்று. அவருக்குத் தெரிந்திருக்காது ஒற்றுமை இல்லாத எம் சமூகம் கொடுத்த பெரிய விலை இது என்று.
அன்று தொட்டு இன்று வரை உலகம் கண்மூடி நிற்கின்றது, ஐ.நாவில் உதடு ஒட்டாது ஜனநாயகம் பேசப்படுகின்றது, எங்கோ ஒரு மூலையில் சுதந்திரம் நிர்வாணப்படுத்தப்படுகின்றது.
தகவல் குறிப்புக்கள் நன்றி:
Balibo திரைப்பட இணையம்
Balibo உசாத்துணை டிவிடி
விக்கிபீடியா
Scribe Publications
Sunday, January 24, 2010
Thursday, January 07, 2010
அன்ரெனா திருப்பு...! தூரதர்ஷன் பார்க்க,
"என்ன தெரியுதா..இன்னும் திருப்ப வேணுமோ?"
"இன்னும் கொஞ்சம்...கொஞ்சம்...ஆ இப்ப சரி படம் வருகுது"
கூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.
இதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை "ஒலியும் ஒளியும்" தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.
"உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.
தொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.
மெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (அன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து "காயனா" என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், "கோப்பிக் கடே" என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.
ஆனால் சென்னைத் தொலைக்காட்சி மேல் அந்தக் காலத்தில் இருந்த வெறிபிடித்த ஆசையை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கின்றது. கலர்ப்படங்கள் வந்த காலத்திலும் பிடிவாதமாக கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்துத் தள்ளிய பாலசந்தர் ரகமாய் தூரதர்ஷனும் தன்னுடைய ஒளிபரப்பை அந்த எண்பதுகளிலும் கறுப்பு வெள்ளையாய் சில காலம் இருந்து வந்தது. அதனால் தான் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற் போலத் தெளிவாக வரும் ஒளிபரப்புக்கு மத்தியில் பாயாச மழையாய் காட்சி தரும் ரீவியில் "கிளியரா வரப் பண்ணுறன் பாருங்கோ" என்று சின்ன அண்ணா அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டு வீட்டுக் கூரையில் ஏறிப் போய் அன்ரெனாவை ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப ஆரம்பிப்பார். அதிலும் ஒரு ரெக்னிக் இருக்கு. கீழ்க் குழாயில் செருகியிருக்கும் மேல்த்துண்டை மெல்ல நிமிர்த்தி லாவகமாக, மெதுவாகத் திருப்ப வேணும். கொஞ்சம் அதிகப்படியாகத் திருப்பினால் போச்சு "உள்ளதும் பேச்சேடா நொள்ளைக் கண்ணா" என்று திட்டு வாங்க வேண்டியது தான்.
சின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.
எப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.
"அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்" என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் "இயற்கை என்னும் இளைய கன்னி" சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் "காதோடு தான் நான் பேசுவேன்" என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.
புதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரியசாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன?
எண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.
ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் "மஹாபாரத்" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், "தடங்கலுக்கு வருந்துகிறோம்" அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, "ரயில் சினேகம் ரயில் சினேகம்" என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த "ரயில் சினேகம்", ஓவ்வொரு
விதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய "பெண்", எஸ்.வி.சேகர் இயக்கிய "வண்ணக்கோலங்கள்" என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் சுஜாதா எழுதிய "டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு" நாடகமும் தனித்து நின்றது.
தேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்
இருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில் வரும் "சிறுபொன்மணி அசையும்" ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.
"இன்னும் கொஞ்சம்...கொஞ்சம்...ஆ இப்ப சரி படம் வருகுது"
கூரையில் இருந்த அன்ரெனாவின் கழுத்தை மத்தாகத் திருகிக் கைவலித்த சின்ன அண்ணன் கீழே ஓடி வருகிறார். வீட்டுக்குள் இருந்து ரீவியின் காதைத் திருகித் திருகிப் படம் வரப் பண்ணி ஓரளவு ஆடி அசையும் முகங்களைக் கண்ட சந்தோசத்தில் நான்.
இதெல்லாம் ஒரு காலத்தில் எங்களூர் வீடுகளில் பெரும்பாலும் காணும் நிகழ்வுகள் தான். எதற்காக இந்தப் பகீரதப் பிரயத்தனம் என்றால் அது வெள்ளிக்கிழமை "ஒலியும் ஒளியும்" தூரதர்ஷனில் பார்க்க வேண்டுமே.
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை என்பது போல என்னதான் இலங்கை வானொலியும், ரூபவாஹினி தொலைக்காட்சியும் இருந்தாலும், திருச்சி வானொலியைக் கேட்பதும், தூரதர்ஷனைப் பார்ப்பதும் எங்களுக்கு அலாதியான விஷயங்கள். எண்பதுகளின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் எங்களூர் பணக்காரர் வீட்டுச் சொந்தங்களாக மட்டுமே இருந்தன. அப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டியைக் காணாத சனம் சில புரளியையும் கிளப்பிவிட்டிருக்கும்.
"உந்தப் பெட்டியிலை இருக்கிற அன்ரெனாவை ராஜா தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை ஓடுற படம் வருமாம், சிறீதர் தியேட்டர் பக்கம் வச்சால் அங்கை போடுற படம் காட்டுமாம்" இப்படி தேவிமாமியின் தாய்க்கிழவி ஒரு புரளியைச் சந்தடி சாக்கில் போட்டு விட்டுப் போயிருந்தா.
தொலைக்காட்சிப் பெட்டிகளின் அறிமுகத்தை எங்களூர் வாசிகசாலைகள் செய்த கதையை முந்தி ஒரு பதிவில் சொல்லியும் இருக்கின்றேன்.
மெல்ல மெல்ல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்ட ஒவ்வொரு வீட்டுக் கூரையிலும் கொம்பு (அன்ரெனா) முளைத்தது. அப்போதெல்லாம் ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாள் முதலே கலர் திரையில் தமது ஒளிபரப்பைத் தந்தாலும் அதைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ அதிகம் எமக்கு வரவில்லை. சின்னப் பிள்ளைகளை வைத்து "காயனா" என்ற பெயரில் ஒரு பாட்டு நிகழ்ச்சியும், "கோப்பிக் கடே" என்ற நாடகமும் , காதம்பரி, ஒரு சில ஈழத்துத் திரைப்படங்களைப் பாகம் பாகமாகக் காட்டியது என சொற்பமான சில நினைவுகளையுமே நினைவுகளையுமே ரூபவாஹினி விட்டுச் சென்றிருக்கிறது.
ஆனால் சென்னைத் தொலைக்காட்சி மேல் அந்தக் காலத்தில் இருந்த வெறிபிடித்த ஆசையை நினைத்தால் இன்றும் வியப்பாக இருக்கின்றது. கலர்ப்படங்கள் வந்த காலத்திலும் பிடிவாதமாக கறுப்பு வெள்ளைப் படங்களை எடுத்துத் தள்ளிய பாலசந்தர் ரகமாய் தூரதர்ஷனும் தன்னுடைய ஒளிபரப்பை அந்த எண்பதுகளிலும் கறுப்பு வெள்ளையாய் சில காலம் இருந்து வந்தது. அதனால் தான் ஒரு வேடிக்கையும் நிகழ்ந்தது. எப்போதாவது அத்தி பூத்தாற் போலத் தெளிவாக வரும் ஒளிபரப்புக்கு மத்தியில் பாயாச மழையாய் காட்சி தரும் ரீவியில் "கிளியரா வரப் பண்ணுறன் பாருங்கோ" என்று சின்ன அண்ணா அம்மாவிடம் கெஞ்சிக் கேட்டு வீட்டுக் கூரையில் ஏறிப் போய் அன்ரெனாவை ஒவ்வொரு பக்கமாகத் திருப்ப ஆரம்பிப்பார். அதிலும் ஒரு ரெக்னிக் இருக்கு. கீழ்க் குழாயில் செருகியிருக்கும் மேல்த்துண்டை மெல்ல நிமிர்த்தி லாவகமாக, மெதுவாகத் திருப்ப வேணும். கொஞ்சம் அதிகப்படியாகத் திருப்பினால் போச்சு "உள்ளதும் பேச்சேடா நொள்ளைக் கண்ணா" என்று திட்டு வாங்க வேண்டியது தான்.
சின்ன அண்ணரின் இந்த முயற்சிக்குக் கண்காணிப்பாளராக நான். வீட்டுக்குள் பாய்ந்து ரீவியை எட்டிப் பார்ப்பதும் வெளியில் ஓடி வந்து கத்துவதுமாக இருக்கும். சில வேளை திரையில் தோன்றும் பாயாச மழையைப் பார்த்து ஏதோ சனக்கூட்டம் தெரிவது மாதிரி இருக்கு என்று நானே முடிவுகட்டிப் பின்னர் டோஸ் வாங்கியதும் உண்டு.
எப்படா வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும் பார்க்கலாம் என்று காத்திருந்தால் அந்த நிகழ்ச்சி வருவதற்கு முன்னால் தமிழ்ப்பாடமெடுக்கும் பேராசிரியர் நன்னன் எல்லாம் தெளிவாகத் தெரிவார். ஏழரைக்கு ஒலியும் ஒளியும் என்று கடிகாரத்தின் நாடி பிடிக்கும் நேரம் பார்த்து ரீவித்திரை கழுத்தறுத்து விடும். சிலவேளை எங்கள் அன்ரெனா திருப்பும் படலம் ஒலியும் ஒளியும் ஆரம்பிப்பதற்கு முன்னிருந்து அந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த நேரம் வரை கடந்து அலுத்துப் போவோம். தப்பித் தவறி நல்ல தெளிவான காட்சியா ரீவியும் குழப்படி இல்லாமல் வேலை செய்தால் ஆற அமர உட்கார்ந்து பார்ப்போம்.
"அரை மணித்தியாலத்தில் அஞ்சு பாட்டுப் போடலாமே, ஏன் உவங்கள் மூண்டோட நிப்பாட்டிட்டாங்கள்" என்றும் சில வேளை கடுப்பை ஏற்படுத்தும் தூரதர்ஷன். கோவா கலரில் "இயற்கை என்னும் இளைய கன்னி" சாந்தி நிலையம் பாட்டு, கறுப்பு வெள்ளையில் "காதோடு தான் நான் பேசுவேன்" என்று இன்றும் அருமையாகப் பெருமையாகப் பார்த்த பாட்டுக்கள் நினைப்பில் இருக்கு,.
புதிதாக வரும் ஐ.ஆர் ரக அரிசி விளக்கத்தோடு ஒருவர் "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு சீரியசாகப் பாடமெடுப்பார். செய்திகளைத் தொடர்ந்து வரும் காணாமற் போனோர் அறிவிப்பை விநோதமாகப் பார்ப்போம். தூரதர்ஷன் தவிர இந்தக் காணாமற் போனருக்கு முக்கியத்துவம் கொடுத்த தொலைக்காட்சி உண்டா என்ன?
எண்பதுகளின் இறுதிப் பகுதியில் தூரதர்ஷன் சிக்கல் இல்லாமல் ஓரளவு ஒளித்தரத்தில் தன்னைக் காட்ட எங்களுக்கும் அடிக்கடி அன்ரெனா திருப்பும் வேலையும் அதிகம் இருக்கவில்லை.
ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன் வளையமாகச் சுழன்று எழுப்பும் அந்த ஒலியை நாமும் வேடிக்கையாக வாயில் ரியூன் போட்டு ரசிப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை ஒளிபரப்பில் "மஹாபாரத்" என்ற கணீர்க் குரலோடு வரும் பாடலோடு ராமானந்த் சாகரின் மகாபாரதம் பார்த்த காலமும் உண்டு. இரண்டரை மணி நேரப் படத்தில் ஆயிரத்தெட்டு இடைவேளைகளும், "தடங்கலுக்கு வருந்துகிறோம்" அறிவிப்பும் வந்து போகும். ஒரு நாற்காலியும் பேப்பரும் பின்னால் திரையும் அமைந்த செட் அமைத்து அரங்கேற்றிய இழுவை தொலைக்காட்சி நாடகங்கள் கழிந்து, மெல்ல மெல்ல நிகழ்ச்சிகள் மெருகேறி, "ரயில் சினேகம் ரயில் சினேகம்" என்று ஜேசுதாஸ் பாட பாலசந்தரின் இயக்கத்தில் நிழல்கள் ரவி நடிப்பில் வந்த "ரயில் சினேகம்", ஓவ்வொரு
விதமான பெண் பாத்திரங்களை எடுத்து பார்த்திபன் போன்ற ஹீரோக்களை இணைத்து சுஹாசினி இயக்கிய "பெண்", எஸ்.வி.சேகர் இயக்கிய "வண்ணக்கோலங்கள்" என்று வரிசை கட்டி வந்த நாடகங்களைப் பார்த்த ஞாபகமும் உண்டு. இவற்றுக்கு மத்தியில் சுஜாதா எழுதிய "டாக்டர் நரேந்திராவின் விநோத வழக்கு" நாடகமும் தனித்து நின்றது.
தேசிய ஒளிபரப்பில் என்றோ பார்த்த, அமிதாப்பச்சன் கூலிங் கிளாசுடன் வில்லன் கோஷ்டிகளுக்கு மத்தியில் மறைந்து பாடும் அந்த ஹிந்திப் பாடலின் முகவரி தெரியாமல் அந்த மெட்டை மட்டும் இன்னும் முணுமுணுத்துத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
ஷோபனா ரவி, வரதராஜன் குரல்களில் வந்த செய்திகளின் தரமே தனி தான், அதெல்லாம் ஒரு காலம்
இருபது வருஷ இடைவெளியில் கடந்த சில வாரங்களாக கடல்கடந்து பொதிகையாய் என் வீட்டுத் தொலைக்காட்சியில் தெரிகிறது இப்போது. தேசியத் தொலைக்காட்சிகளாக மற்றைய நாடுகளில் இருக்கும் சேவைகள் தொழில்நுட்ப ரீதியிலும் நிகழ்ச்சித் தரத்திலும் எங்கோ உச்சத்துக்குப் போய் விட , பொதிகையின் ஒலித்தரமோ லவுட்ஸ்பீக்கரில் வரும் "சிறுபொன்மணி அசையும்" ரகமாக இருக்கின்றது. அதே காணாமல் போனோர் அறிவிப்புக்களும் செய்திகளைத் தொடர்ந்து வருகின்றன. வயலும் வாழ்வும் பெயர் மாறி வேறோர் பெயரில் வருகின்றது. நிழல்கள் ரவியும் ஏதோ ஒரு சீரியலில் போலீஸ் கதாநாயகன் வேஷம் கட்டி நடிக்கிறார். தனியார் தொலைக்காட்சிகள் சுவீகரிக்கமுன் உள்ள காலத்தில் வந்த உரிமம் வாங்கிய படங்களைப் போடுகின்றது. ஒரு காலத்து நினைவுகளை நெஞ்சுக்குள் புதைத்து வைத்த அதே திருப்தியோடு, அது மட்டும் போதும் என்று பொதிகை நினைக்கிறதோ.