
நான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டில் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன. 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போன போது எழுத்தாளர் வரதரைச் சந்தித்து அவரை ஒலி ஆவணப் பேட்டி காண இணக்க வைத்து விட்டால் நாடு தலைகீழாய்ப் போய் அந்தக் காரியம் கைகூடாமல் தள்ளிப் போய் கடந்த ஆண்டு டிசம்பரில் சிக்கன் குன்யாவால் வரதர் அவர்கள் நிரந்தரமாகவே தொடர்பற்றுப் போனது தான் என் இரண்டாம் ஆண்டு பதிவுகளுக்கு முதல் பதிவான சோகமும் ஆயிற்று.
துரித கதியில் காலம் தாழ்த்தாது ஆவணப்பணியை என்னால் முடிந்த அளவு திரட்ட எண்ணி, திரு.கே.எஸ்.பாலசந்திரன், திரு.தாஸீசியஸ், திரு.பாலமனோகரன், பேராசிரியர் சிவத்தம்பி என்று இயன்றவரை நம்மவர்களைக் குறித்த விபரங்களைப் பதிவாக்கினேன். கூடவே மறைந்த திரு. எருவில் மூர்த்தி, கல்லடி வேலுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், எல்.வைத்யநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்றோர் குறித்தும் பதிவுகளை ஆக்கி வைத்தேன்.
நல்லைக்கந்தன் ஆலயத்தின் 25 நாள் மகோற்சவ காலத்தில் 25 நாளும் பதிவுகளை இட்டேன். கூடவே என் நனைவிடை தோய்தலோடு, நல்ல மலையாள சினிமாக்களும் பட்டியலில் இடம் பிடித்தது.
தினக்குரல், வீரகேசரியின் மெட்ரோ பத்திரிகை, ஈழத்தின் புது வரவு "இருக்கிறம்" சஞ்சிகை, ஈழமுரசு, ஒரு பேப்பர், உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் இப்பதிவுகள் இடம்பிடித்ததோடு ஈழத்தின் நெடியதொரு பாரம்பரியமிக்க "மல்லிகை" சஞ்சிகையில் திரு. மேமன் கவி எனது வலைப்பதிவு குறித்த அவர் கருத்தும் யாழ்ப்பாணத்து வாசிகசாலைகள் என்ற ஆக்கமும் வெளிவந்திருந்தது. அத்தோடு கனடாவில் இருந்து ஜெப்ரி வழங்கும் "கலசம்" என்ற கணினி நிகழ்ச்சியிலும் என் வலைப்பதிவு குறித்த அறிமுகத்தையும் வழங்கியிருந்தார். இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்வதை விட என் எழுத்துக்கான அங்கீகாரமாகச் சொல்லிப் பெருமிதமடைகின்றேன். "இருக்கிறம்" சஞ்சிகை தொடர்ந்தும் என் படைப்புக்களை வெளியிட்டு உற்சாகம் தருகின்றது. ஆனால் என்னுடன் எந்த விதமான தொடர்பாடலும் இன்றி சில தளங்களில் ( ஐரோப்பாவில் இயங்கும் ஒரு தமிழ் சங்கம் உட்பட) இப்பதிவுகளை தமது சொந்தப் பதிவாக தமது தளத்தில் இட்டிருப்பது குறித்து மிகவும் கவலையடைகின்றேன். கட்டற்ற வலைப்பதிவில் சங்கடங்களில் இதுவும் ஒன்று.
என் பதிவுகளில் ஒன்றான "அண்ணை றைற்" என்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் தனி நடிப்பு ஒலி மற்றும் எழுத்துப் பதிவு தான் அதிகம் பார்க்கப்பட்ட பின்னூட்டப்பட்ட பதிவு. அத்துடன் "அண்ணை றைற்" நாடகம் உட்பட்ட தனி நடிப்பு நாடகங்கள் இந்த ஆண்டு முதன் முதலில் இறுவட்டாகவும் வந்தது ரசிகனாக எனக்கு உரிமையோடு உவப்பை அளிக்கின்றது.

மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)
தற்போது தனியாக ஒரு தளமாக கானா பிரபா பக்கங்கள் என்ற திரட்டியையும் ஆரம்பித்திருக்கின்றேன்.
இன்றுவரை என் மனதின் ஓரமாய் வலிக்கும் இழப்பு , கடந்த மாதம் விமானக் குண்டு வீச்சினால் வீரச்சாவடைந்த போராளி மிகுதனின் இழப்பு. ஓராண்டுக்கும் மேலாக என் வலைப்பதிவின் வாசகனாக இருந்து அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் தந்தவன் சொல்லாமல் போய் விட்டான். மிகுதன் என்ற போராளி இறந்ததாக செய்தி வந்ததும் அவனுக்கு மின்னஞ்சல் போட்டு சுகம் விசாரித்தேன், அவனா என்று. இன்று வரை எனக்குப் பதில் இல்லை. வெளியே சிரித்து உள்ளுக்குள் அழும் வேஷதாரி வாழ்க்கை தான் நமக்கு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வலையுலக அரசியல், எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது, எத்தனை தரம் பின்னூட்ட வேண்டும் என்று கட்டளை போடும் வலையுலக நாட்டாமைகளையும், புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.
2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்:
வலைப்பதிவில் ஒரு வருஷம்

2007 ஆம் ஆண்டில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது
வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது

வரதரின் படைப்புலகம்

மாட்டுவண்டிச் சவாரிகள்...!

பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று

யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்

காற்றின் மொழி.....!

மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
"அண்ணை றைற்"

மனசினக்கரே - முதுமையின் பயணம்

"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்."
அந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
எங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில.
கல்லடி வேலரின் வாழ்வில்...!

மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு நினைவில்

கடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் சோகமாகவும் மனசை அப்பிக்கொள்கின்றது.
உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்

எல்.வைத்யநாதன் - ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்

அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.
தாசீசியஸ் பேசுகிறார்...!

யாழ்ப்பாணத்துச் சமையல்

"ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது" இது என் அம்மா.
"என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை".
விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்

என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
"விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்" என்று.வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.
விபுலாநந்த விலாசம்

பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!

நிறைவான நல்லூர்ப் பயணம்

நிலக்கிளி" தந்த அ.பாலமனோகரன்

பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்

தீவாளி வருஷங்கள்....!

எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி
