skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Wednesday, December 14, 2011

ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்

ஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார்.
Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன. தவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களிலும் பல எழில் மிகு, கட்டிடக்கலை நுணுக்க வேலைப்பாடுகளோடு அமைந்த கட்டிடங்களை அமைப்பதிலும் இவரது பங்கு இருந்திருக்கின்றது. ஈழத்து திரைப்படமான குத்துவிளக்கு இவரது தயாரிப்பிலேயே வெளிவந்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.அமரர் வி.எஸ்.துரைராஜா அவர்களோடு பழகக் கூடிய வாய்ப்புக் கிட்டிய பெருமிதத்தில் இருந்தேன். அவரின் குத்துவிளக்கு திரைப்படப்பிரதியும், அப்படம் குறித்து அன்றைய காலகட்டத்தில் வெளியான நாளிதழ்களின் பார்வைகள் உள்ளிட்ட கோப்புக்களை முன்னர் எனக்கு அன்போடு அளித்திருந்தார். இவற்றை வைத்து ஒரு ஆவணப்பதிவும் தயாரிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அந்தப் பணி கைகூட முன்னர் வி.எஸ்.துரைராஜா அவர்களின் மறைவுச் செய்தி எட்டியது குறித்து வருந்துகின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். திரு.வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் வெளியிடப்பட்ட போது நான் வழங்கியிருந்த அனுபவப் பகிர்வை மீள இங்கு பகிர்கின்றேன்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஜனவரி 19, 2007 சிட்னி, அவுஸ்திரேலியா
ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் சிட்னியில் உள்ள Strathfield நகர மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. உயர் தர வழவழப்பான தாள் கொண்டு 96 பக்கங்களை நிறைத்த ஒரு ஆவணமாக இந்நூல் படங்களோடும், யாழ் பொது நூலகத்து வரலாற்றோடும் ஆங்கில மொழியில் அமைந்து மித்ர வெளியீடாக மலர்ந்துள்ளது.

1981 ஆம் ஆண்டு அழித்தொழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு கொடிய செயலின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா.

1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. ஓரளவு நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின.

பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க நினைத்தார்கள். இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர். அன்றிருந்த கட்டிடம் போலவே மீள அமைக்கப்பட்டது.

பெரியதொரு கனமான நூலாக வந்திருக்கும் "The Jaffna Public Library Rises From Its Ashes" ஐ ஆவலோடு வாங்கி இதழ்களைப் பிரிக்கும் போது, இந்நூல் கொண்டிருக்கும் வரலாற்று ஆவணங்களும், அரிய பல புகைப்படங்களும் இயல்பாகவே வியப்பால் விழிகளை விரியச் செய்கின்றன.

இந்த நூலில் இடம்பெறும் புகைப்பட ஆவணங்களைப் பார்த்தோமேயானால் புதிதாக அமையப்பெற்ற நூல் நிலையத்தின் தோற்றம் முதற் புகைப்படமாகவும் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் குறுக்கும் நெடுக்குமான வரைபடங்களும் இருக்கின்றன. பின்னர் யாழ் நூலகத்தின் இரு வேறு தோற்றங்கள் தூரக் காட்சியில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

1936 ஆம் ஆண்டில் அமையப்பெற்று பின்னர் 1985 இல் முற்றாக அழியப்பெர்ற யாழ் உள்ளூராட்சி சபை, மாநகர சபை (1949 இல்) இன் மூலத் தோற்றம், அழிவதற்கு முன்னிருந்த சுப்பிரமணியம் பூங்காவின் மூலத் தோற்றம், 1956 ஆம் ஆண்டில் கட்டிடக்கலைஞரால் வரையப்பெற்ற யாழ் நூலக வரைபடங்கள் நான்கும் காணக் கிடைக்கின்றன.

துரையப்பா விளையாட்டரங்கம், அழிந்த சுப்பிரமணியம் பூங்கா, 1982 ஆம் ஆண்டில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நிகழ்த்திய "Jaffna Public Library Week" இன் பல்வேறு புகைப்படங்கள், மற்றும் மீள நிறுவப்பட்ட யாழ் நூலகத்தின் முழுமையான கட்டிட வரைபடத்தொகுதிகள், மற்றும் மீள நிறுவப்பட்ட நூலகத்தின் பல்வேறு கட்டிட அமைப்புக்கள், காட்சிகள் எனப் புகைப்படங்கள் விரிகின்றன.

1981 இல் அழிந்து இடிபாடுகளோடு இருக்கும் யாழ் நூலகம் பல்வேறு அழிவுத் தோற்றப்படங்களுடனும் பல்வேறு புகைப்படத் தொகுதிகளாக அழிவின் சுவடுகளாகப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.

இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளை எடுத்துக் கொண்டால் முன்னாள் யாழ் மேயரின் முகவுரையோடு ஆரம்பித்து, முன்னாள் யாழ் மாநகர சபை ஆணையாளர் சி.வி.கே சிவஞானத்தின் செய்திக் குறிப்பும், நூலாசிரியரின் முன்னுரை, யாழ் பொது நூலகத்தின் ஆதி வரலாறு தாங்கிய கட்டுரைகள், 1956 ஆம் ஆண்டில் அமையப்பெற்ற நூலகத்தின் இருந்த சகல கட்டிட அமைப்புக்கள் குறித்த முழுமையான கட்டுரை என விரிகின்றன.

தாவீது அடிகளாரின் திடீர் மரணம் உள்ளிட்ட பொது நூலகம் அழியப் பெற்ற கோர வடுக்கள் ஆங்கிலத்தில் வடித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. Who Burnt the precious Books? என்ற தலைப்பில் வரும் ஆக்கத்தில் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வெளிவந்த நூலக எரிப்பின் சூத்திரதாரிகள் குறித்த சாட்சியங்களாக அமைகின்றன. சிறீலங்கா அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த வேளை அவர்களின் தூண்டுதலின் பேரில் காடையர்கள் நிகழ்த்திய தென்னாசியாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலக அழிவை ஆதரங்களோடு அவை மெய்ப்பிக்கின்றன.

அழிந்தொழிந்த நூலகத்தினை நிர்மாணிக்க எப்படியான முயற்சிகள் ஈழத்தமிழின உணர்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டன, பின்னர் எப்படியான வகையில் இந்த நூலகம் மீள எழுந்தது தொடர்பிலும் சில கட்டுரைகள் அமைந்து காணப்படுகின்றன.

எனவே இந்த "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற இந்த வரலாற்று நூல் ஓவ்வோர் ஈழத்தமிழன் வீட்டிலும் இருக்கவேண்டிய, மற்றைய சமூகத்தினருக்கும் எம் இனத்திற்கு ஏற்பட்ட இன்னலின் சாட்சியமாகக் காட்ட வேண்டிய ஒரு ஆவணமாகும். சரி இனி இந்த நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற நிகழ்வுகளைப் பார்ப்போம்.
மாலை ஆறு மணிக்கு, அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் Strathfield நகர மண்டபத்தில் கிட்டத்தட்ட 300 பேர் கலந்து கொள்ள ஆரம்பமானது. மங்கல விளக்கேர்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தவர், அன்று யாழ் பொது நூலகம் எரிந்த போது யாழ் நகர மேயராக இருந்த திரு.ராஜா விஸ்வநாதன் அவர்கள்.
இந்த நிகழ்வு இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு நூல் ஆய்வு ஆங்கில அமர்வு, தமிழ் அமர்வு என்ற வகையில் நிகழ்ந்தன. வைத்திய கலாநிதி மனோமோகன் நூல் வெளியீட்டின் அவைத்தலைவராக அமர்ந்து கொண்டார். திரு. வி.எஸ்.துரைராஜா அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, நூலகம் தொடர்பான வரலாற்றுப் புகைப்படங்கள் பெரும் திரையில் காண்பிக்கப்பட்டன.

ஆங்கில அமர்வில் முதலில் நூலாய்வை நிகழ்த்தியவர் பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் அவர்கள். இந்த நூலை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாய் யாழ் பொது நூலகத்தில் அரிய ஆவணங்களைத் திரட்டிப் பேணிப் பாதுகாக்கும் நுண் படங்கள் (Micro films) தொழில்நுட்ப வசதிக்காகக் கையளிக்கப்பட இருக்கின்றது. ஆனால் அழிந்த நூலகத்தோடு போன அரிய நூல்களை இன்றும் ஒரு பிரதியாயினும் பெறமுடியாத நிலை இருக்கின்றது. ஏராளமான மூல ஏட்டுச் சுவடிகள் அழிந்தது அழிந்தது தான். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் முதல் மாணவர் ஒருவரின் அனைத்து நூல்களும் இந்த நூலகத்துக்கு முன்னர் அன்பளிப்பு செய்யப்பட்டன. அவையும் சாம்பலாகிப் போயின என்று ஆதங்கத்தோடு பொன்.பூலோகசிங்கம் பழைய நினைவுகளைத் தன் பேச்சில் மீளக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து பேசவந்த அ.பரராஜசிங்கம் அவர்கள் யாழ் பொது நூலகத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு என்பவறைக் கொண்டு தனது பேச்சில் பயணித்து, இந்த நூல் நயத்திலும் பின்னர் இணைத்துக்கொண்டார். நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தன் பேச்சை நிறைவு செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மேதகு Virginia Judge அவர்கள் நூல் வெளியீட்டுப் பேச்சை வழங்கிய பின்னர் முதற்பிரதிகளை சிட்னி வாழ் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினார்.
Virginia Judge ஏற்கனவே வன்னி சென்று எம்மக்களின் வாழ்வியலை அறிந்து கொண்டவர். இன்று வரை தொடர்ந்து தனது ஈழத்தமிழர் மீதான கரிசனையைக் காட்டி வருபவர். தனது பேச்சில் ஈழத்தமிழரின் போராட்டத்தை ஐரிஸ் போராட்டத்தோடு தொடர்புபடுத்தியதோடு, Schindler's Ark என்ற நாவலை (பின்னர் Schindler's List என்று படமாக வந்தது) எழுதிய Thomas Keneally என்ற அவுஸ்திரேலிய எழுத்தாளரின் The Great Shame என்ற நாவலை எடுத்து வந்து அதில் உள்ள அம்சங்களைத் தொட்டு, எமது மக்களின் சுதந்திர வேட்கை தொடர்பான தன் கரிசனையைத் தன் பேச்சில் கொண்டு வந்தார்.

இடைவேளையின் பின்னர் இந்நூல் ஆய்வின் தமிழ் அரங்காக அமைந்தது.
"யாழ் நூலகம் எம்மினத்திற்கோர் வெள்ளை மாளிகை, ஆனால் இது அழிவுக்குத் துணை போன வெள்ளை மாளிகை அல்ல, அறிவு சால் ஆக்கத்துக்குத் துணை போன வெள்ளை மாளிகை" என்று ஆரம்பித்து, தான் இளைஞராக இருந்த காலத்தில் நிகழ்ந்த அனர்த்ததை தன் பேச்சில் கொண்டு வந்தார் தமிழறிஞர் திரு.திருநந்தகுமார் அவர்கள். 1981 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நூலக அனர்த்ததை 2001 ஆம் ஆண்டில் தான் அரச சார்பு ஆங்கில நாளேடு Daily News தன் ஆசிரியர் தலையங்கத்தில் கண்டித்த வேடிக்கையும், இந்நூலில் காணப்படும், பிரேமதாச ஒக்டோபர் 1991 ஆம் ஆண்டு புத்தளம் முஸ்லீம் கல்லூரியில் நிகழ்த்திய சொற்பொழிவில் காமினி திசாநாயக்கா கூட்டணியினர் தான் இந்த நூலக எரிப்புக்கான காரணகர்த்தாக்கள் என்று சொன்ன குற்றச்சாட்டையும் திருநந்தகுமார் அவர்கள் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் திருமதி கலையரசி சின்னையா அவர்கள், தாம் பேராதனையில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்து யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக வந்த காலகட்டத்தில் , ஈழத்து இலக்கிய முயற்சிகளை இன்னும் பெருக்க வேண்டிய அவசியத்தை பல்கலைக்கழகமட்டதினூடாக பேராசிரியர்கள் செயற்படுத்த முனைந்த வேளை யாழ் பொது நூலகம் தந்த பாரிய உசாத்துணையைக் காட்டி "நூலகமும் சமூகத் தொடர்பும்" என்ற பேச்சில் கொண்டு வந்தார்.
பல்கலைக்கழகமாக ஆகுவதற்கு முன் இருந்த பரமேஸ்வராக் கல்லூரி, மற்றும் ஹாட்லி கல்லூரியின் பாரிய, அரிய நூற் தொகுதிகள் அழிவதற்கு முன்னிருந்த நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டதாகவும் அவை யாவும் அழித்தெரிக்கப்பட்டன என்று கவலையோடு தெரிவித்தார். நீங்கள் எல்லோருமே உங்களிடம் ஒரு பிரதியோ கூட இருக்கும் அரிய நூல்களை இந்த புதிய நூலகத்தின் Micro film வடிவச் சேமிப்புக்கு கொடுத்துதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நூலாய்வின் தமிழ் அமர்வில் நிறைவாக திரு எம்.தனபாலசிங்கம் அவர்களின் "ஒரு மக்களின் பாரம்பரியத்தின் கருமூலமே நூலகங்கள்" என்ற அரியதொரு ஆய்வுப் பேச்சை வழங்கிச் சிறப்பித்தார். ' எங்கு புத்தகங்களை தீக்கிரையாக்குகிறார்களோ அங்கு முடிவில் மனிதர்களையும் தீயில் பொசுக்குவர் "

"ஒரு மக்களின் பாரம்பரியங்களின் கருவூலமே நூல்நிலையங்களாகும்,
" Where they have burned books, they will end in burning human beings " –Heinrich Heine (1797-1856)
என புகழ் பெற்ற ஜெர்மன் வீறுணர்ச்சிக் கவிஞரான ஹெயின்றிச் ஹெயின் என்பார் அவரது படைப்பான அல்மன்சொர் (Almansor -1821) என்னும் நாடகத்தில் குறிப்பிட்டமை சிரஞ்சீவித்தன்மை பெற்ற வாக்காக இன்றும் கூறப்படுகின்றது.1500 ஆம் ஆண்டளவில் ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய கலாசாரம் அதன் கொடுமுடியை தொட்டுநின்றபோது அங்கு படையெடுத்த கிறீஸ்தவர்கள் அம் மக்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தனர். அதன்போது அவர்களின் கருவூலமான குர்ரானை தீயில் பொசுக்கியதை இந்த நாடகத்தில் வரும் ஒரு இஸ்லாமியர் குறிப்பிட்டபோது இன்னொரு இஸ்லாமியர் கூறிய வார்த்தைகளே இவை. " the burning is but a prologue: where books are burned, people in the end are burned too " என அப் பாத்திரத்தின் வாயிலாகப் பார்வையாளர்களுக்கு தன் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடுமைகளை ஹெயின் நினைவூட்டினார் என்பர் என்று தன் பொருள் பொதிந்த பேச்சினை ஆரம்பித்துத் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்தாண்டு, இறுதியில் எம் மக்களின் சுதந்திர வேட்கையையும் தொடர்புபடுத்தி நிறைவான ஒரு விழாவை நிறைவாக்கினார் மா.தனபாலசிங்கம் அவர்கள்.

நன்றியுரையை நூலாசிரியரின் பேரன் ரிஷ்யன் வழங்க, இந்நூல் வெளியிடு இனிதே நிறைவேறியது.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

யாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்

1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்க வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.

1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.

1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.

2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.


உசாத்துணை:1. "யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்", மூதறிஞர் க.சி.குலரத்தினம்,
மித்ர வெளியீடு, 1997

2. "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.


புகைப்படங்கள்:
1. என் புகைப்படத் தொகுப்பு
2. "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.
3. http://www.lines-magazine.org
Posted by கானா பிரபா at 11:17 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, December 11, 2011

வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்

"நான் எப்போதும் நானாகத் தான் இருக்கிறேன், மற்றவர்கள் தான் என்னில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்", சமீபத்தில் ட்விட்டரில் நான் இட்ட கருத்து ஒன்று. சிறுவயதில் இருந்து தீவிர வாசிப்புப் பழக்கமும், அவ்வப்போது சிறுவர் கதை, கட்டுரை என்று எழுதி பள்ளிக்கூடக் கையெழுத்துப் பத்திரிகைகளில் இருந்து, ஈழநாடு, அர்ச்சுனா போன்ற இதழ்களில் வந்தது ஒரு சில என்றால் அனுப்பியும் அச்சில் வராத எழுத்துக்கள் ஓரு நூறு பெறும். கடந்த ஆறுவருஷ வலைப்பதிவு அனுபவம் எனக்கான எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டதாகத் தான் எண்ணத் தோன்றுகின்றது.

நேற்றுப் போல இருக்கின்றது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பதிவு உலகில் நானும் ஒரு பங்காளியாக மாறி எழுத வந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில். அன்றைய சூழலில் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பல சீரிய பல பதிவர்கள் இயங்கிவந்த சூழல். அப்போதெல்லாம் தமிழ்மணம் தளத்தில் ஒவ்வொரு பதிவுகளுமே தனித்துவமான படைப்புக்களாக இருந்திருந்தன. காலமாற்றத்தில் வலைப்பதிவு மோகம் மெல்ல மெல்லக் குறைந்து தனித்தளங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டோரும், அப்படியே ஓய்ந்து போனோருமாக, இன்று என்னுடய சமகாலத்திலும், அதற்கு முன்பும் தீவிரமாக இயங்கிய வலைப்பதிவர்களில் இன்று ஒரு சிலரை, அதுவும் அவ்வப்போது வலைபதிபவர்களாகத் தான் பார்க்க முடிகின்றது. இது நல்லதா என்றால், வலைப்பதிவுலகின் வாசகன் என்றவகையில் இல்லை என்பேன். எத்தனை எத்தனை நல்ல எழுத்துக்களை இனம் காட்டியது இந்தப் பதிவுலகம், இன்றோ தேடியோ, யாராவது பரிந்துரை கொடுத்தாலோ மட்டுமே எட்டிப்பார்க்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தின் அவலம் மிகுந்த நாட்களுக்குப் பின்னர் அப்படியே கொத்தாக ஒரு தொகை பதிவர்களை இழந்ததைக் காண்கின்றேன். நாடே போய்விட்டது இனி என்ன என்று சொன்னார் என் சக வலைப்பதிவர். எல்லாம் இழந்த வெறுமையில் இனிமேல் இந்தச் சூழலில் இருந்து ஒதுங்கித் தமக்கான தண்டனையாக நினைத்துக் கொண்டோரால் வாசக உலகம் தான் இழந்தது சீரிய எழுத்துக்களை.

மடத்துவாசல் பிள்ளையாரடி, எங்களூர்க் கோயில். அந்தக்காலத்து எம் நினைவுகளின் எச்சங்களை இன்னும் தாங்கிப்பிடித்திருக்கும் சூழல். எப்போது மடத்துவாசல் பிள்ளையாரடி மண்ணை மிதித்தாலும் அந்தக் கனவுலகத்தில் என்னைப் புதைத்து நிற்பேன். அதனால் தான் எம் ஊர் பற்றிய சிந்தனை வரும் போது நினைவுகளுக்கு வடிகாலாய் நான் இந்த மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதத் தொடங்குவேன். இந்தப் பதிவில் இருந்து கிளைகளாகப் பல வலைப்பதிவுகளைத் தொட்டாலும், இன்னும் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் மாதம் ஒன்றாவது பதிவைக் கொடுத்து நன்றிக்கடனைக் கழிக்கின்றேன்.

"நினைவு நல்லது வேண்டும்" என்று சொன்ன பாரதி போல, என் எழுத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைத்தேன், க்கிறேன். இது தொடரும்.


எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி

இவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற கூட்டுவலைப்பதிவில் எழுதி வந்தேன். தொடர்ந்து இந்த வலைப்பதிவில் பங்களிப்பாளர்கள் வெறுமையான சூழலில், என் சொந்த வலைப்பதிவான உலாத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த முனைந்திருக்கின்றேன். இனிமேல் இந்த வலைப்பதிவில் என் புதிய இடுகைகள் வராது.

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவில் இயங்கி வந்தேன். ஏற்கனவே பல தளங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தக் கூட்டுவலைப்பதிவிலும் நான் தொடர்ந்து பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே.

இவற்றோடு இந்த ஆண்டில் றேடியோஸ்பதி இணைய வானொலியையும் ஆரம்பித்திருக்கின்றேன். இந்த வானொலி எதிர்காலத்தில் உலகெங்கும் பரந்துவாழும் வலைப்பதிவர்களில் வானொலி ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கான களமாக அமையும். றேடியோஸ்பதி 24 மணி நேர இணைய வானொலி அகப்பக்கம் இங்கே http://radiospathy.wordpress.com/

மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப்படைப்பாளிகள் குறித்த ஆவணப்பதிவுகளை 2012 இல் இன்னும் முனைப்போடு செயற்படுத்த எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகளை இவ்வேளை பகிர்ந்து கொள்கின்றேன்.


நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
www.kanapraba.com



வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்


2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்

2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

2011 ஆம் ஆண்டில் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் இட்ட பதிவுகள்

"முகத்தார்" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்

இலங்கை வானொலி என்னும் ஆலமரம் தன் விழுதுகளாகப் பல கலைஞர்களை நிலைநிறுத்தியிருக்கின்றது. வானொலிக் கலைஞராக வருமுன்னேயே பலர் கலைத்துறையில் மேடை வெளிப்பாடுகளின் மூலம் தம்மை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இலங்கை வானொலி வழி அத்தகைய கலைஞர்களின் பரிமாணத்தை பரந்ததொரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியிருந்தது. அப்படியொரு கலைஞன் தான் "முகத்தார்" எஸ்.ஜேசுரட்ணம்.




1.1.11 - "கத தொடருன்னு"


1.1.11 பிறந்திருக்கின்றது. வழக்கம் போல புதிய ஆண்டு பிறக்கும் போது நாளை மற்றுமொரு நாளே என்ற எண்ணம் இல்லாத உணர்வாகத் தான் இன்றைய விடியலையும் ஆரம்பித்து வைத்தேன். காலையில் சிட்னி முருகன் கோயில் போனேன், பின்னர் ஒரு மணி நேரப் பயணத்தில் நேராக மல்கோவா மாதா ஆலயம் சென்று தரிசிக்கின்றேன்.





"இராவண்ணன்" படைத்த சுஜித் ஜி

"வான்மீகி வரைந்த இராமாயணத்தால்
ஆரியன் இராமன் ஆண்டவனானான்
அயலவன் வாலி குரங்கானான் - என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்துக்கு நான் இராவண்ணன்"




காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ

இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.

காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)






ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்

ஈழத்தமிழர் உணர்வுகளைத் தன் கவிதைகளால் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மவர் வ.ஐ.ச.ஜெயபாலன் அண்ணர் இப்போது தமிழகத்தவர்களால் ஒரு சிறந்ததொரு திரைக்கலைஞர் என்றதொரு அவதாரம் எடுத்திருக்கின்றார். தேர்ந்தெடுத்த புதிய களம் குறித்த அனுபவங்களை நேற்று வானொலிச் செவ்வியாக எடுத்திருந்தேன்.








முரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்

தமிழ் இணையப்பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கும் மலேசியா வாழ் கணினியியலாளர் திரு.முத்து நெடுமாறன் அவர்களை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்தித்தேன். இந்தப் பேட்டியின் வாயிலாக முத்து நெடுமாறன் அவர்களது தமிழ் கணிய முயற்சிகளின் ஆரம்பம் முதல் இன்றுவரையான அவரின் மனப்பதிவுகளைப் பகிர ஒரு வாய்ப்பாக அமைந்தது.








கும்பிடப் போன தெய்வம்

எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)








ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்

கே.எஸ் சிவகுமார் அவர்கள் 1936ஆம் ஆண்டில் மட்டக்களப்பில் பிறந்து கொழும்பை வாழ்விடமாக கொண்டவர். திரைப்படம் இலக்கியம் விமர்சனம் என்று கடந்த 45 வருடங்களுக்கு மேலாக இலங்கையை மையமாகக் கொண்டு எழுதி வருபவர். கடந்த மாதம் அவுஸ்திரேலியா வந்த பொழுது அவரை நான் எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் சந்தித்தேன்.








"சத்யசாயி சென்ரர்" மானிப்பாய் வீதி, தாவடி

அது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது.






அகவை எழுபதில் BBC தமிழோசை


"தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று.





விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்

கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் சென்றபோதே எனது நண்பர்கள் அடுத்தமுறையாவது ஊர்க்கோயிற் திருவிழாவுக்கு நிக்குமாற்போல வந்துவிடு என்று அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள். ஊர்க்கோயில் என்பது எனது வலைத்தளத்தைத் தாங்கும் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற பரராசசேகரப்பிள்ளையார் கோவில் தான் அது. ஊரில் இருக்கும் பெற்றோரையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன்.



யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்

"தம்பி! நீர் இன்னாற்ற மேன் தானே"
ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.

காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்


"சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ"
எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.

மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை


சின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், "முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்"என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம்.







இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை

இணுவிலில் இருந்து லுமாலாவில் மிதித்த களைப்பு நீங்க கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் பக்கமாக உள்ள கோயிலின் தேர்முட்டிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்கின்றேன். இங்கு வைத்துத் தான் பதிவர்/டிவிட்டர் நிரூஜா மற்றும் சுபாங்கன் ஆகியோரைச் சந்திக்கப் போகிறேன். தொண்ணூறுகளில் ஒருநாள் ஏ/எல் ரிசல்ட்ஸ் வரப்போகுது என்று தெரிந்ததும் பதைபதைப்போடு இந்தத் தேர்முட்டியடியில் நண்பர்களோடு கூடியிருந்த நினைவுகள் மீண்டும் மனசுக்குள் தூசிப்படலம் போலத் தெரிந்தது.


"சிவபூமி" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்


சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார்.


பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.

ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள்.

வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்


நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.

தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை

இந்த வீடு போலத் தான் ஏறக்குறைய எல்லாவீடுகளுமே மொட்டையடிக்கப்பட்டு மரங்கள் முளைத்த புதர்களாக அனாதரவாக, தனித்து விடப்பட்டவை வீடுகள் மட்டுமல்ல அரசியல் அநாதைகளாகிவிட்ட எம்மவர்களும் தான் என்று மீண்டும் ஒருமுறை என் மனதில் நினைத்துக்கொள்ளப் பெருமூச்சு அதை வெளிக்காட்டிக்கொண்டது.
ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

திருநந்தீஸ்வரம் கண்டேன்

ஈழத்தின் புகழ்பூத்த ஐந்து ஈஸ்வரங்கள் என்று கொள்ளப்படுபவை வடக்கே மன்னார் மாதோட்டையில் விளங்கும் திருக்கேதீஸ்வரம், கிழக்கே திருகோணமலையில் அமைந்திருக்கும் திருக்கோணேஸ்வரர் ஆலயம், வடக்கே கீரிமலையில் உறைந்திருக்கும் நகுலேஸ்வரர் ஆலயம், தெற்கே விளங்கிய தொண்டீஸ்வரம் சிலாபத்திலே முன்னேஸ்வரம், ஆகியவை வரலாற்றுத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்து விளங்குபவை.




Steve Jobs படைத்த Apple உலகில் நான்

கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன்.





படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு


ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன்.









மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்
இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன்.

தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி

ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.

Posted by கானா பிரபா at 8:29 PM 19 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, December 08, 2011

தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி



ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ள முனைவர் சீதாலட்சுமி ராமசாமி அவர்கள் கடந்த மாதம் சிட்னிக்கு வந்திருந்தார்.
தமிழகத்தின் திருச்சிப் பிரதேசத்தில் பிறந்த இவர் ஆகாசவாணியின் "இளைய பாரதம்" மூலமாகத் தன் ஊடகப் பங்களிப்பையும் வழங்கிருந்தார்.
நியூசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றுக்காக வந்திருந்த அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானொலி நேர்காணல் கண்டிருந்தேன்.

இந்தப் பேட்டியின் வாயிலாக சிங்கப்பூரின் தமிழ் இயங்கும் சூழல்,மற்றும் தன் ஆய்வுப்பணி அனுபவங்களை விரிவாகவும் சிறப்பாகவும் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் சீதாலட்சுமி இராமசாமி அவர்கள்.

தரவிறக்கிக் கேட்க

நேரடியாகக் கேட்க

Posted by கானா பிரபா at 9:15 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, November 15, 2011

மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்

இந்தத் தடவை என் தாயகப் பயணத்தில் இதுவரை பார்க்காத யாழ்ப்பாணத்தின் மூலை முடுக்கெல்லாம் பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு கூடவே என் பால்யகாலத்தில் நான் வளர்ந்த மலையகப் பிரதேசத்துக்கும் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று நினைத்து வைத்திருந்தேன். எழுபதுகளிலே என் அப்பாவும், அம்மாவும் ஆசிரிய கலாச்சாலையில் தமது கற்கை நெறி முடிந்து, முதற்கட்ட ஆசிரியப்பணிக்காக அனுப்பப்பட்ட ஊர் மலையகப் பிரதேசமான ஹற்றன். அந்தக் காலத்தில் என் மூத்த அண்ணாவும், இளைய அண்ணாவும் யாழ்ப்பாணத்திலேயே சித்தி வீட்டாரின் வளர்ப்பில்.அப்போதுதான் பிறந்த எனக்கோ அடித்தது யோகம் அப்பா, அம்மாவுடன் கைக்குழந்தையாகக் கூடவே ஹற்றனில் வாழவேண்டிய பாக்கியம் கிட்டியது. ஆனால் என்னுடைய ஆறுவயதுக்குட்பட்ட அந்தக் காலம் இன்னும் மங்கலாகத் தான் நினைவில். எண்பதுகளிலே அப்பாவும் அம்மாவும் மாற்றலாகி சொந்த ஊரான யாழ்ப்பாணம் திரும்பிவிட, என் நினைவு தெரிந்த நாள் எல்லாமே மலையகம் பற்றி வெறும் வானொலி, பத்திரிகை சார்ந்த செய்தி என்ற எல்லைக்குள்ளேயே இருந்து விட்டது. தொண்ணூறுக்கு முந்திய ஓரளவு சகஜமான நிலையில், ஹற்றனில் இருந்து காளிமுத்து, ராசு எல்லாம் வருவார்கள், கூடவே வீரகேசரி பேப்பரால் சுற்றி நூலால் இறுக்கிக் கட்டிய தேயிலைத்தூள் பொட்டலம்.
காளிமுத்து, ராசு எல்லாருமே என் அப்பா அம்மாவிடம் படித்தவர்களாம். கைக்குழந்தையாக இருந்த என்னைப் பராக்கு காட்டுவதில் இருந்து, நித்திரையாக்குவது, சாப்பாடு கொடுக்கும் போது விளையாட்டுக் காட்டுவது எல்லாமே அவர்கள் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.
"அம்மா! பிரபுத்தம்பி எவ்வளவு பெரிசா வளந்துட்டார்ங்கம்மா" ஆசையோடு இராசு என் முகவாயைத் தடவுவார். விடைபெறும் போது அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டே
"போய்ட்டு வர்ரேன் சார்" என்று சொல்லும் காளிமுத்து ஒவ்வொரு பிரியாவிடையிலும் கண்ணீர் பெருக, புறங்கையால் விசுக்கென்று துடைக்க, அப்பா அவரின் முதுகைத் தடவி ஆறுதல் கொடுப்பதை விநோதமாகப் பார்த்திருக்கிறேன்.




எப்போதாவது ஏதோவொரு கனவிலே மலைமுகடுகளைக் குடைந்த சாலைகளில் அப்பா அம்மாவின் கைப்பிடித்து நடப்பது போலவெல்லாம் கண்டிருக்கிறேன். அது தானாக வந்த கனவா அல்லது அம்மா அந்தப் பழைய நினைவுகளை அடிக்கடி சொன்னதன் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை.

இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம். பிரிட்டிஷ்காரன் வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து தம் தேயிலைத் தோட்டங்களிலும், இறப்பர் காடுகளிலும் வேலை வாங்கி இரத்தத்தை உறிஞ்சும் மலை அட்டைகளை விடத் தம் உடல் உழைப்பில் இரத்தம் சிந்தி வாழும் ஒரு சமுதாயம். கடந்த நூற்றாண்டில் பிரஜா உரிமை மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்ட இவர்களை மெல்ல மெல்ல நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கான வாழ்வுரிமை என்பது எழுத்தில் அரங்கேறினாலும் இன்றளவும் கைக்கெட்டாத பேதுறுதாலகால மலையின் உச்சியில் இருப்பது போல. கல்வி, பொருளாதாரத்தில் பின்மலையகப் பிரதேசங்களில் தான் தமது முதற்கட்ட ஆசிரியப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பது இலங்கையின் கல்வி அமைப்பின் ஒரு விதி. இதனால் இலங்கையின் ஏனைய பாகங்களில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து ஆசிரியப்பணிக்காக மலையகப் பிரதேசங்களுக்குப் போவார்கள். ஆனால் என் நினைவுக்கு எட்டிய காலங்களில் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் பலர் ஆசிரியப்பணிக்காக மலையகத்தில் இருக்கும் நாட்களை விட, லீவு எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணத்தில் டியூஷன் கொடுத்துப் பிழைப்பு நடத்தியதையும் கண்டிருக்கிறேன். மலையகப் பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியே ஏனோ தானோவென்ற நிலையில் தான் கொண்டு நடத்தப்பட்டிருக்கின்றது. இளைய சமுதாயமும் தேயிலைக் கொழுந்தைக் கையில் ஏந்த வேண்டிய நிலைக்குத் தானாகவே போகவேண்டிய அமைப்பில் தான் காலச்சக்கரம் இயங்கும் அமைப்பு. ஐம்பதாயிரம் வீடு கட்டித் தருகிறோம் என்று சொல்லும் பூர்வீக பூமியான அயல் தேசமும், தமது உழைப்பையே நாட்டின் மூலதனமாகக் கொண்டியங்கும் அரசாங்கமும், முதலாளிமாருமே உதவ முன்வராத நிலையில் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்று தெரியாமலோ, அல்லது தெரிந்தும் எதுவும் செய்யாத முடியாத நிலையில் மலையகத் தமிழர்கள். ஆனால் தங்களால் கொடுக்கக் கூடியது அளவற்ற அன்பு என்பதன் வடிவங்களாக இராசுவும், காளிமுத்து, இவர்கள் போல இன்னும் பலர்.

முப்பது வருஷங்களுக்கு முன்னர் நான் ஓடியாடித் திரிந்த அந்த மலைப் பிரதேசத்துப் புழுதி அளைய ஆசை இந்த ஆண்டில் கைகூடவேண்டும் என்ற நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக என்னோடு பயணிக்கும் நிலையில் அம்மாவோ, அப்பவோ இல்லை. எனவே தனியாகவே பயணிக்க வேண்டிய நிலை எனக்கு.

வெள்ளவத்தைக் கடற்கரைப் பக்கமாக மாலை நடைப்பயிற்சி செய்து கொண்டே போகும் போது, தீடீரென்று ஒரு யோசனை உதிக்க வெள்ளவத்தைப் புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறேன். அங்கே ஸ்டேஷன் மாஸ்டராக இருப்பவரைப் பார்த்தால் தமிழராக இருக்கிறார் என்று நான் நினைப்பதற்குள், பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக் கொண்டே தன் செல்போனில் உரக்கத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார். கூட்டம் குறையும்வரை காத்திருக்கும் என்னை விநோத ஜந்துவாக அவர் பார்க்க, மலையகம் போகும் விஷயத்தை மெல்ல அவிழ்க்கிறேன்.
"அதுக்கு நீங்கள் உடரட்ட மெனிக்கே ரயில் எடுக்கோணும், கோட்டை ஸ்ரேசன் போய்த்தான் புக் பண்ணோணும். நல்ல சுப்பறான ட்ரெயின், கண்ணாடிக் கிளாசுக்கிளால மலை எல்லாம் பார்த்துக் கொண்டு போகலாம், இப்பவே புக் பண்ணுங்கோ, இப்ப ஓவ் சீசன் எண்டதால ஹோட்டல் எல்லாம் எடுக்கலாம் பிரச்சனை இல்லை".

கொழும்பு வந்து கோட்டே புகையிரத நிலையத்திற்குச் செல்கிறேன். அங்கே தான் மலையகம் பயணிக்க வேண்டிய ரயிலுக்கு ஆசன முற்பதிவு செய்யவேண்டும். முன்பின் அனுபவம் இருந்தால் தானே எனக்கு. ஆசனப்பதிவுக் காரியாலத்தில் இருந்தவரிடம் ஹற்றன் போவதற்கான பதிவு செய்யவேண்டும் ஆங்கிலத்தில் பேசுகிறேன். அவரோ விட்டேனா பார் என்று சிங்களத்தில் ஏதேதோ சொல்கிறார். ஒருமாதிரி சமரசமாகி அவர் ஆங்கிலம் பேசுவதற்குள் எனக்கு இரண்டு முழு எலிபண்ட் பிறாண்ட் ஒரேஞ்ச் பார்லி குடிக்கவேண்டிய களைப்பு. உடரட்ட மெனிக்கே ரயிலுக்குப் பதிவு செய்தாச்சு. ஆனால் பயணத்தில் ஒரு மாற்றம், ஹற்றன் தாண்டி நுவரேலியா போய் அங்கிருந்து ஏதாவது பஸ்ஸில் ஹற்றனுக்கு வருவம் என்று நினைத்து நானு ஓயா வரை டிக்கட்டைப் பதிவு செய்தாச்சு. நுவரேலியாவுக்கு நேரடி ரயில் போக்குவரத்து இல்லை. நானு ஓயா சென்று தான் பஸ் பிடித்து பத்து நிமிட ஒட்டத்தில் நுவரேலியா செல்லவேண்டும் என்றும் கோட்டை பாடம் கற்பித்தது.
கூகிளாண்டவரிடம் முறையிட்டேன் நல்லதொரு ஹோட்டலை காட்டு என்று. அவர் சொன்ன ஹோட்டல் பட்டியலில் ஒன்றுக்கு அழைத்துப் பதிவு செய்தாயிற்று.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு ரயில் பயணம். ஏழரை மணிக்கே வந்தாச்சு. சரக்கு ரயில்களுக்குப் போகவேண்டிய மூட்டைகளுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் இருந்து வெற்றி எஃப் எம் காதுக்குள் கிசுகிசுக்க நேரம் போனதே தெரியவில்லை. உடரட்ட மெனிக்கே வந்து விட்டது. பதிவு செய்யப்பட்ட முதல்வகுப்பு ஆசனங்கள் எந்தப் பக்கம் என்று அங்கும் இங்கும் எட்டிப்பார்த்து, கும்பலாகப் போன பொலிசாரில் ஒருவரைப் பிடித்து விசாரிக்க அவர் கைகாட்ட, ரயிலில் தாவினேன்.

எவ்வளவு நேரம் சிக்கிரமாகப் போய் என்ன பயன், வந்த ரயிலில் உடனடியாக ஏறத்தெரியாமல் என்று முணுமுணுத்தேன். முதல் வகுப்பு ஆசனங்கள் ஏறக்குறைய நிரம்பியிருக்க என் ஆசனத்தில் இன்னொருவன். டிக்கட்டைக் காட்டினேன், சிரித்துக் கொண்டு வழி விட்டுக் கொண்டு அடுத்த பெட்டிக்குப் போகிறான். ஜன்னல் ஓரமாகப் என் ஆசனம். உல்லாசப்பயணிகள் அதிகம் பயணிக்கும் ரயில் இது. ஆனால் இருக்கைகளில் இறப்பர் பாலும், பிசினும் கிளறி எடுக்கலாம். அடுக்கடி மூட்டைப் பூச்சி போல ஏதோவொரு வஸ்து கிளுக்கிண்டியது. ஏஸி இருக்கிறதாம். பயங்கரப்புழுக்கமாக இருக்க ஜன்னலைத் திறக்கிறேன் திறக்கவில்லை. முன்னால் இருந்தவர் கை கொடுக்கிறார். ஜன்னலை உடைத்துத் திறந்தார். அப்படித்தான் திறக்கவேண்டுமாம். ஒலிபெருக்கியில் சன்னமாக உடரட்ட மெனிக்கே புறப்படப் போகிறாள் என்று அறிவிப்பு வருகிறது. எத்தனை வருஷங்கள் கடந்தாலும் இந்த அறிவிப்பாளர் குரல் அப்படியே இருக்கு.

மெல்ல மெல்லத் தன் ஓட்டத்தை எடுக்க ஆரம்பிக்கிறாள். சிட்னியில் நிதமும் அலுத்துப் பயணிக்கும் ரயில் பயணம் போல அல்ல இது. ஜன்னலூடே தண்டவாளங்களுக்கு அப்பால் பரந்து விரியும் மக்களின் வாழ்க்கையைக் காட்டிக் கொண்டே பயணிக்கிறாள். சிறிது நேரத்தில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட்டுக்களைக் கூர்ந்து பார்த்து தன் குறிப்பேட்டில் பேனாவால் கிறுக்குக் கிறிக்கி விட்டுத் தருகின்றார்.

வடே வடே வடே , பார்லி பார்லி பார்லி என்று கூவிக்கொண்டே ரயில் பெட்டிக்குள் தம் வியாபாரத்தை ஆரம்பிக்க வந்து விட்டார்கள் அன்றாடம் இந்த ஓட்டத்தை நம்பிப் பிழைக்கும் வியாபாரிகள். பொல்காவலை வருகிறது. இங்கே தான் யாழ்தேவி மூலம் வரும் வடபகுதி மக்கள் மலையகத்து ரயிலுக்காக மாறவேண்டிய இடம். அதுவும் கடந்து பயணிக்கிறது. எதிர்ப்படும் ஸ்டேஷன்களில் நறுக்கிய மாம்பழத்துண்டங்களுக்கும், அன்னாசிப்பழங்களுக்கு மிளகாய்த் தூள், உப்புப் போட்டு திசுப்பையால் கட்டி, ரயில் நிற்கும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்குள் காசு பார்க்கத் துடிக்கும் வியாபாரிகள். ரயில் பெட்டிகளுக்குக்குள்ளிருந்து கை நீட்டுப்பவர்களுக்குப் பொட்டலங்களைத் திணிக்கும் முனைப்பு காசை வாங்கிவிடவேண்டும் என்பதில் இல்லை என்பது போல சாவகாசமாக ஒவ்வொரு பெட்டியாகக் கொடுத்துக் கொண்டே ரயில் மெல்ல வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது ஓடியோடிக் காசை வாங்கித் திணிக்கிறார்கள். சிலர் பெட்டிகளுக்குள் தாவி ஏறிக் காசை வாங்கிப் பின் வேகமெடுக்க முன்னர் பாய்கிறார்கள்.

ஒரு மாம்பழ நறுக்குப் பொட்டலம் வாங்கிப் பிரித்துச் சுவைக்கின்றேன். நுனி நாக்கில் உப்பும் மையத்தில் மிளகாய்த்தூளும் கடவாய்ப் பக்கம் இனிப்புமாக வாயில்"ஜலதரங்கம்".
முன்னால் இளம் காதலர்கள் ஏதோ பேசிச் சிரிக்கிறார்கள். அவன் கோக் வாங்கிப் பாதி குடித்து மீதியை அவளிடம் நீட்டுகிறான்.


பேராதனைச் சந்தியில் பெருமூச்சு விட்டு நிற்கிறாள் உடரட்ட மெனிக்கே. பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற இலங்கையின் புகழ்பெற்ற பெரும் பல்கலைக்கழகத்தை அடைவதற்கான ரயில் நிலையம் அது. ஆச்சி பயணம் போகிறாள் என்ற செங்கை ஆழியானின் நகைச்சுவை நவீனத்தில் இந்த ரயில் நிலையம் எல்லாம் வந்து போகும், அந்த நேரம் யாழ்ப்பாணத்து ஆச்சிதான் நினைவுக்கு வந்தார். யாழ்ப்பாணத்தில் மிகவும் பழைய மரபில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஆச்சி தன் மகனுடனும் அவனின் முறைப்பெண்ணுடனும் ரயிலில் பயணிக்கும் போது சந்திக்கும் அனுபவங்கள் தான் அந்த நகைச்சுவைச் சித்திரத்தின் கரு.



பசிக்கிறது, ரயில் பெட்டிக்குள் வந்து வியாபாரம் செய்யும் கடலை வடை வியாபாரியிடம் ஒரு பொட்டலம் வாங்கினேன். கைக்கடக்கமான சின்னஞ்சிறு வட்டங்களாக மொறுகிப் பூத்த வடைகள், ஆங்காங்கே செத்தல் மிளகாய் பல் இளிக்க.

ஜன்னலால் தாவிப் பார்க்கின்றேன். வெளியே தண்டவாள எல்லைகளுக்கு அப்பால் உயர்த்திக் கைகாட்டிக் கொண்டே பார்த்துச் சிரித்து ரசிக்கும் சிறார்கள். ஒவ்வொரு நாளும் எத்தனை ரயில்களை இவர்கள் கண்டிருப்பார்கள். ஆனால் இதே பூரிப்புத்தான் அப்போதும் இருக்கும் போல.
நாவலப்பிட்டி ரயில் நிலையம், நாவலப்பிட்டி என்றதும் இங்கே இருந்து ஆன்மீகப் பணி செய்து "ஆத்மஜோதி" என்ற சஞ்சிகையைப் பலவருஷங்களாக வெளியிட்ட ஆத்மஜோதி நா.முத்தையா நினைவுக்கு வருகிறார். அந்தக் காலத்தில் எங்கள் அப்பா என் வயதுக்கு வாசிக்க உகந்தது என்று அங்கீகரித்த ஒரே சஞ்சிகை இது ;)





மலைகளைக் கிளறிக் கொழுந்து விதைத்த தேயிலைத் தோட்டங்கள் பச்சை நிறப் பெருங்கம்பளங்களாகப் பரந்த வெளிகளிலே, கீறல் கோடுகளாக வளையம் போட்ட பாதைகள். ஆங்காங்கே லயன்களும், களஞ்சியங்களும் கவிழ்த்து வைத்த கோப்பைகள் போல. ஜன்னலூடாக மலையகத்தின் எழிலை ரசித்துக் கொண்டு ரயில் பயணத்தைத் தொடர்கின்றேன். அலுக்கவில்லை, கண்கள் குத்திட்டு இயற்கை அன்னை கொடுத்த அந்த மலை முகடுகளையும், தேயிலைத் தோட்டங்களையும், ஆங்காங்கே கடந்து போகும் சிறிதும் பெரிதுமான நீர் வீழ்ச்சிகளையும் என்னுள் ஏற்றுகின்றேன்.
நானு ஓயா அடுத்த தரிப்பு என்று உறுதி செய்து கொண்டு இறங்க ஆயத்தப்படுத்துகின்றேன்.
Posted by கானா பிரபா at 8:43 PM 25 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ▼  2011 (26)
    • ▼  December 2011 (3)
      • ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்
      • வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்
      • தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனை...
    • ►  November 2011 (2)
      • மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes