skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Saturday, December 28, 2024

மகாலிங்கம் பத்மநாபன் : வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் வரலாற்றை எழுதி வரலாறாய் ஆனார்




“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் 

நற்றவ வானினும்

நனி சிறந்தனவே…”

தன் சொந்த ஊரிலேயே வாழ்ந்து கழித்த எங்கள் அப்பா தன் இறுதிக்காலம் வரை மந்திரம் போலச் சொல்லிக் கொண்டிருப்பார். 

“அது ஒரு அழகிய நிலாக்காலம்”

மகாலிங்கம் பத்மநாபன் எழுதி வழங்கிய

“வன்னி மண்ணின் மூன்று கிராமங்களின் கதை”

என்ற இந்த நூலைப் படித்து முடித்த போது அப்பேர்ப்பட்ட உணர்வு தான் எழுந்தது. தன் மண்ணை, தன் மக்களை நேசித்த மண்ணின் மைந்தனின் மன உணர்வுகளை அச்சொட்டாக எழுத்தில் கவர்ந்தால் எழும் வரலாற்றுப் பெரு நூல் இது. 

அதனால் தான் 432 பக்கங்களோடு பின்னிணைப்பாக அந்த மூன்று கிராமங்களின் கதையின் நாயகர்கள் வாழ்ந்து கழித்த தலங்கள், கோயில்கள் எல்லாம் நிழற்படங்களாக அந்த வரலாற்றோட்டத்தில் நம் மனக் கண்ணில் உருவகித்தவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது.

பெரிய பரந்தன், குஞ்சுப் பரந்தன், செருக்கன் ஆகிய மூன்று கிராமங்களின் தோற்றமும் வாழ்வியலுமாக நிஜ கதைமாந்தர்களோடு பயணிக்கிறது இந்த நூல்.

தன் மண்ணின் மீது தீராக் காதல் கொண்ட ஒருவரால் தான் இத்துணை தரவுகளோடு, காட்டாறு போன்றதொரு பெருகிய எழுத்துப் படைப்பைக் கொடுக்க முடியும்.

எழுத்தாளர் தாமரைச் செல்வியின் இளைய சகோதரியின் கணவரான இந்த நூலாசிரியர் பற்றிக் குறிப்பிடுகையில் அதையே கோடிட்டுக் காட்டுகின்றார் இப்படி

“திரு ம.பத்மநாபன் அவர்கள் தனது மண்ணை, அதன் சூழலை, அங்கு வாழும் மனிதர்களை நேசிப்பவர். தனது மூதாதையரதின் வாழ்க்கையை உண்மைத் தன்மை எங்கும் மாறி விடாமல் பதிவு செய்திருக்கிறார்.

மேலும், 

இது மூன்று கிராமங்களின் கதை மட்டுமல்ல மூன்று தலைமுறையின் கதையும் கூட. 1900 ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையான வாழ்வு இங்கே சொல்லப்பட்டிருக்கின்றது. 

என்ற முன்னுரையே இந்த நூலின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கின்றது.

“தென்மராட்சியில், குறிப்பாக மீசாலையில் இருந்து காலத்திற்குக் காலம் இம்மூன்று கிராமங்களில் குடியேறிய மக்களின் வரலாற்றையும், அவர்களின் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சி நிலைகளையும் முதன்மைப்படுத்திக் கூறுவது இந்நூலின் முக்கிய கருப்பொருளாக இருந்தாலும், அவ்வரலாற்றின் ஊடாக இன்று மறைக்கப்பட்டு மற்றும் மறைந்து வரும் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களையும் நூலாசிரியர் முறையாகப் பதிவு செய்திருப்பது பலதுறை சார்ந்த ஆய்வாளர்களுக்கு பயனுள்ள ஒரு பதிவாகக் காணப்படுகிறது"

என்று மூத்த பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் அவர்களின் அணிந்துரையே, இப்புத்தகத்தைப் படித்து முடித்ததும் மனதில் எழும் உணர்வாகவும் பிரதிபலிக்கின்றது. 

யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் தெற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் பரட்டைக்காடுகளும், களப்புகளும், இவற்றின் தெற்கே அமைந்துள்ள வயலும் வயல் சார்ந்த இடங்களாக வன்னிப் பெரு நிலப்பரப்பின் வடக்கே, கண்டி வீதியின் மேற்குப்பக்கமாக அமைந்திருக்கும் இம்மூன்று ஊர்களுக்கும், விவசாயம் செய்யவெண்ணி வள்ளத்தில் ஏறி, யாழ்ப்பாணக் கடல் நீரேரி ஊடாகச் சுட்டதீவுத் துறையில் இறங்கிக் கால் நடையாகவும், மாட்டு வண்டில்களிலும் பயணம் செய்த மாந்தர்களின் வரலாற்றைப் படைத்ததற்கு வாழ்த்துரையில் சிறு வரலாற்றையும் பதிந்து வைத்திருக்கிறார் மகாலிங்கம் பத்மநாதன் (ஓய்வு நிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்).

ஈழத்தில் இது போலப் புதையுண்டு போன தமிழர் பூர்வீக நிலங்களை அந்தந்தப் பிரதேசத்து மக்கள் அவ்வப்போது கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வடித்த போதும் இந்த நூல் கொடுக்கும் அனுபவம் தனித்துவமானது. இங்கே ஆசிரியர் அங்கு வாழ்ந்து கழித்த, வரலாறாய்ப் போன மனிதர்களை உயிர்ப்பித்து அவர்களை நூல் முழுக்க வாழ வைத்து விடுகிறார். அதனால் ஒரு நீண்ட நெடிய வன்னி மண்ணின் நாவலாகவும், ஆவணத் தொகுப்பாகவும் இரு பரிமாணங்களில் விளங்கி நிற்கின்றது.

தம்பையர், முத்தர், ஆறுமுகம் ஆகிய மண்ணின் மைந்தர்கள் காடு திருத்திக் கழனியாக்கிய வரலாற்றை ஆரம்ப அத்தியாயங்களில் படிக்கும் போது தீரச்செயலைச் செய்யப் புறப்பட்ட்ட நாயகர்களாகக் கண் முன்னே நிற்கின்றார்கள்.

வரலாற்றுக்கு உசாத்துணையாக வழித்தடங்களையும் கைப்பட எழுதிப் பகிர்ந்திருக்கின்றார். 

கதைப் போக்கிலே வரலாற்றில் நாம் மறந்து போன, புழக்கத்தில் இருந்த பல சொற்களை மீட்டெடுத்து விளக்கமும் கொடுக்கிறார்.

வன்னிமண்ணுக்கே உரிய வேட்டையாடும் மரபையும், வேள்வி விழாக்களையும் கூட விடாமல் பதித்திருக்கின்றார். 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து மாறி வந்த நிர்வாக முறைமைகளையும் வெகு திருத்தமாகக் கண்முன் நிறுத்துகின்றார்.

வரலாற்றில் பயணிக்கும் கதை மாந்தர்களின் இழப்பை நம்முடைய சொந்த இழப்பாகவே நினைக்குமளவுக்குத் தாக்கத்தை உண்டுபண்ணும் உணர்வோட்டத்தோடு இந்தப் படைப்பை நிறுவுகின்றார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரலாற்றுத் துணுக்குகள், சம்பிரதாயங்கள், உலக நடப்புகள் போன்றவற்றை முத்தாய்ப்பாகக் கொடுத்தே தொடங்குவார்.அவ்விதம் 50 வது அத்தியாயத்தில், ஒரு அரச அலுவலகர் எப்படி மக்களோடு கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், நிறைவான 51 வது அத்தியாயத்தில் இறப்பின் சிறப்பை “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்” எனத்தொடங்கும் திருவள்ளுவத்தோடும், டாக்டர் அப்துல் கலாமின் பொன்மொழியான

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்”

என்று குறிப்பிட்டு இந்த வரலாற்று நூலின் அத்தியாயத்தை நிறைவு செய்ததை இப்போது நினைத்துப் பார்த்தால் இவருக்காகவே எழுதி வைத்து விட்டது போல மனதில் சுமையொன்று எழுகின்றது.

இந்த நூலாசிரியர் மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பெரிய பரந்தனில் பிறந்தார். தந்தை மகாலிங்கம், தாய் பொன்னம்மா. பத்மநாபன் ஆசிரியராக மன்னார் பிரதேசத்தில் ஆசிரியத் தொழிலைத் தொடங்கி, கிளிநொச்சியில் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றி, ஈற்றில் பரந்தன் இந்து மகாவித்தியாலத்தில் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 

வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அலகினால் சிறந்த நூலாக 2023 ஆம் ஆண்டில் “அது ஒரு அழகிய நிலாக்காலம்” பரிசினைப் பெற்றது.

“அது ஒரு அழகிய நிலாக்காலம்” மூன்று கிராமங்களின் கதை நூலைத் தன் கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பி வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நூலைப் படித்து முடித்த பரவசத்தில் அவரோடு பேசவேண்டும் என்று அவாக் கொண்டிருந்தேன்.

ஆனால் காலன் முந்திக் கொண்டான்.

மகாலிங்கம் பத்மநாபன் கடந்த டிசெம்பர் 27 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து இறையடி சேர்ந்து விட்டார்.

அன்னாரின் நினைவுகளை இந்த மூன்று கிராமங்களின் கதை உயிர்பித்து வைத்திருக்கும்.

கானா பிரபா

28.12.2024










Posted by கானா பிரபா at 11:30 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, December 13, 2024

ஞானசேகரம் மாஸ்ரர்

 


அப்போது அம்மா படிப்பித்த, நான் படித்த இணுவில் அமெரிக்கன் மிஷன் பாடசாலைக்கு மலையகத்தில் இருந்து இடம் மாறினார்கள் ஞானசேகரம் மாஸ்ரரும் அவரின் மனைவியும். மூன்றாம் வகுப்பு கணிதப் புத்தகத்துக்கெல்லாம் உறை போட்டுத் தருவார் திருமதி.ஞானசேகரம் ரீச்சர்.


ஞானசேகரம் மாஸ்ரர் தான் ஒழுக்கத்தை எனக்கு முதலில் பாடமெடுத்தது. அவர் எங்கள் வகுப்பாசிரியர் ஆனதும் ஒழுக்கம் தான் முதல் பாடம். ஒருமுறை "வாத்திமார்" என்று வாய் தவறிச் சொல்லி விட்டேன் என்று என்னை இழுத்துப் பிடித்து என் கையாலேயே என் கன்னங்களில் அடிக்க வைத்துத் தண்டித்தார். ஆனால் "என்ர பிள்ளையள்" என்று தன் வகுப்புப் பிள்ளைகளை விட்டுக் கொடார். ஒருமுறை அவர் என்னக் கோலியாத் ஆக நடிக்கச் சொல்லி தாவீது (நடித்தவன் சுதா) கல்லெறிய அது என் நெற்றியில் பட்டு விழ வேண்டும் என்று நடிப்புச் சொல்லிக் கொடுக்க நான் அந்தக்காலத்து வில்லன் சத்தியராஜ் நடிப்பெல்லாம் போட்டு அவரிடம் கை தட்டு வாங்கியிருக்கிறேன். 


அப்பாவின் இறுதி நிகழ்வு வீட்டுக்கிருத்தியத்துக்காக அவரை வெகு காலத்துக்குப் பின் சந்தித்தேன். கைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஆசையாகப் பேசினார்.

“எனக்கு நீர் தான் சாப்பாடு 

போட்டுத் தர வேணும்”


என்று குழந்தைப் பிள்ளை போலச் சொன்னார்.


அன்று நிகழ்வு அமளியில் அவரே சாப்பாடு போட்டுச் சாப்பிட்டுட்டு வந்து

“எனக்கு நீர் போட்டுத் தரேல்லை”

என்று சிரித்தார்.


இம்முறை தாயகப் பயணத்தில் நானும், அம்மாவுமாக ஞானசேகரம் மாஸ்டர் , ரீச்சரைப் பார்க்க நெட்டிலிப்பாய் பிள்ளையாரடிப் பின் பக்க வீதிக்குப் போனோம். அவர்களின் வீடு கூட மறந்தது போலிருந்தது. அயலில் இருந்தவர்களிடம் விசாரித்தோம்.

“அவையள் இப்ப இங்க இல்லையே”

என்றார்கள். ஏமாற்றத்துடன் திரும்பினோம்.


இன்று ஞானசேகரம் மாஸ்டர் லண்டனில் காலமான செய்தி கிடைத்திருக்கிறது.

போய் வாருங்கள்  மாஸ்டர். 🙏

Posted by கானா பிரபா at 7:08 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, December 05, 2024

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 19 ஆண்டுகள் ❤️ ✍🏻

இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்து 20 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

இதுவரை 

490 பதிவுகள் ✍🏻

"ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுமாக"

மடத்துவாசல் பிள்ளையாரடி தளத்திலும்

http://kanapraba.blogspot.com/

924 பதிவுகள் ✍🏻

"என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் நல்மருந்தாய் அமையும் 

இசைப் பகிர்வுகளுக்காக"

றேடியோஸ்பதி தளத்திலும்

http://www.radiospathy.com/

139 பதிவுகள் ✍🏻

"எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப் பிடிக்கும் அதற்காக"

உலாத்தல் தளத்திலும்

http://ulaathal.com

என்று வகைப்படுத்தி எழுதியிருக்கிறேன், இன்னும் தொடர்வேன்.

220  பதிவுகள் ✍🏻

வீடியோஸ்பதி தளத்திலும்

https://www.youtube.com/c/videospathy

காணொளி ஊடகத்துக்காக வீடியோஸ்பதி வலைத் தளம், இரண்டு வருட காலத்துக்குள் கணிசமான இடுகைகளை அதில் இட்டிருக்கிறேன். 

தொடர்ந்து இன்னும் இதில் தீவிரமாக இறங்கவுள்ளேன்.

தவிர ஈழத்து முற்றம்

http://eelamlife.blogspot.com/

இசையரசி, கங்காரு தேசம் போன்ற குழுமத் தளங்களிலும் பங்களித்திருக்கிறேன். அவை தனிக்கணக்கு.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன். எப்பேர்ப்பட்ட வரம் இது.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை 

✍🏻 “கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி"

✍🏻 "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள்  நோக்கி”

✍🏻 “அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்”

✍🏻  “SPB பாடகன் சங்கதி” - 3 பதிப்புகள்

✍🏻 “அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்” - திருத்திய பதிப்பு 

ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறேன். 

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் podcasting இல் களமிறங்கி உள்ளேன். 

Spotify, iTunes, Amazon Music இன்ன பிற podcast தளங்களில் kanapraba என்ற id வழியாக என் podcast பகிர்வுகளைக் காணலாம்.

https://open.spotify.com/show/25ZvXOpdQymPa62Btp8GNG?fbclid=IwY2xjawG930RleHRuA2FlbQIxMAABHVE34RiEJC404wvFXeoCPISLa3zjPZ-ma4jMh-puEd82Yc7GUQsc5lcGZQ_aem_R8IDLUTOomHT-1ELphp2_w

Podcast மற்றும் Short videos இவற்றை இன்னும் அதிகமாகப் பகிர்வது என்னுடைய அடுத்த முயற்சி.

வரும் 2025 எனது அடுத்த முயற்சியாக என் சிறுகதைகளை நூலுருவில் கொண்டு வர இருக்கிறேன்.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

05.12.2024


Posted by கானா பிரபா at 12:21 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, November 30, 2024

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி”


ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம் சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர். 

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும்.

சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது. 

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் குறித்த நூல்களை அந்த நிறுவனம் சார்ந்தவர்களாலேயே எழுதப்பட்டதைப் படித்த வகையில் சொல்கிறேன், “ஏவிஎம் படத்தலைப்பில் வாழும் நடிகர்கள்” என்ற கட்டுரையைப் படித்த போது அந்த நூல்களில் கூட இடம்பெறாத செய்திகளும், அப்படியே இடம்பெற்ற செய்திகளையும் தகுந்த முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 

படக்கதைகள் உருமாறிய வரலாறுகளையும், படத் தலைப்புகள் தலைமுறை கடந்து பயன்படுத்தப்பட்ட பாங்கையும் இணைத்து கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞர் மனசு வைத்தால் கூட நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்த முடியும் என்பதையும் ஒரு கட்டுரை சொல்லி வைக்கின்றது.

“இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி” கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் பானுமதியின் கர்வமான தோற்றம் தான் தோன்றி மறையும், ஆனால் அதன் பின்னால் நெகிழ வைக்கும் பின்னணியைக் கொடுக்கிறார். சினிமாவில் கூட யதார்த்தம் பேணிய முன்னோர்கள் என்பதை அது உணர்த்துகிறது.

கவிஞர் முத்துலிங்கத்துக்காக எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிக் கொடுத்த பாட்டைப் பற்றி அவரே சுவைபடக் கூறினாலும் இங்கே அதைப் பற்றி எழுதும் ரவிவர்மா அதன் நீட்சியாக முத்துலிங்கம் குறித்த தகவல்களை இன்றைய சந்ததிக்கும் சொல்லி வைக்கிறார்.

தோல்வியை வெற்றியாக்கும் சூக்குமம் கைவரப்பெற்ற படைப்பாளிகளும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவற்றை வெற்றிபெற்ற படங்களுக்குப் பின்னால் சொல்லியும் இருக்கிறார்கள்.

எழுத்தாளரும் தன்னுடைய கட்டுரைப் பதிவில் இத்தகு உதாரணங்களோடு எழுதிச் செல்கிறார்.

தமிழ்த் திரையுலகின் பழைய வரலாறுகளை மட்டுமன்றி கடந்த தசாப்தத்தில் புதிய அலையைப் படைத்த செல்வராகவன் குறித்த பின்னணியும் உண்டு.

இன்று இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல்ஹாசன் என்ற பட்டங்களோடு அடையாளப்படுபவர்களின் ராசியை கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள் வழிப் பதிவு செய்கிறார்.

இயக்குநர் பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, தன் தந்தை திடீரென்று இறந்த போது கடன்காரர் தொல்லையால் குடும்பம் அவஸ்தைப்பட்ட சூழலில் தன் அண்ணனும், தானும் சேர்ந்து போய் அழுது கொண்டே எம்.ஜி.ஆரைச் சந்தித்து அவர் உதவிய வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.

இங்கோ பந்துலுவோடு எம்.ஜி.ஆருக்கு இருந்த பந்தத்தைக் காட்டி நிற்கின்றார் ரவிவர்மா.

ஒரு காலத்தில் திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு போய், இன்று சின்னத்திரைக் கலைஞர்கள் தற்கொலை செய்யும் அவலத்தையும் காட்டுகிறார்.

கண்ணகி சிலைக்கு மாதிரி உருவமாக அமைந்த நடிகை விஜயகுமாரி குறித்துப் பதிவு செய்யும் போது அவரின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கொடுக்கிறார்.

 நடிகர் விஜயகுமார் சினிமாவுக்கு வந்த கதையே ஒரு சினிமா ஆக்கக் கூடிய சுவாரஸ்யம் நிறைந்தது. அந்த சுவாரஸ்யம் ரவிவர்மாவில் எழுத்தில் மின்னுகிறது.

சந்திரபாபு குறித்த கட்டுரையைப் படிக்கும் போது அதை நீட்டி முழு வரலாற்று நூலாக்கக் கூடிய பண்பு அமைந்திருக்கின்றது.

இன்று உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகளோடும், பரபரப்பு அறிக்கைகளோடும் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரை இலக்கியத்தை மெய்த்தன்மை பொருந்திய வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுத்த ரவிவர்மாவுக்கு இந்த வேளை மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

கானா பிரபா

Posted by கானா பிரபா at 6:23 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, October 31, 2024

மெய்யழகனும் மெய்யுலகமும்


தம்பி! 

நீர் இன்னார்ற்ற மேன் எல்லோ?

தாயகப் பயணத்தில் சைக்கிளில் ஊர் சுற்றும் போது வழி, தெருவில் என்னை நிறுத்திக் குசலம் விசாரிப்பர்.

தங்களது கணிப்புச் சரியான சந்தோஷத்தில் 

“அப்பிடியே அம்மாவின்ர முகம் ஒட்டியிருக்கு”

என்று பூரிப்பாகச் சொல்லி விட்டு விடைபெறும் சமிக்ஞையோடு தலையாட்டிக் கொண்டே கடந்து விடுவர்.

“நான் ஆரெண்டு தெரியுமோ”

என்று கேட்பவர்களின் முகப் பரிச்சயம் மட்டும் இருக்கும். 

ஓவென்று தலையாட்டும் போது

சிலசமயம் தங்களை அடையாளப்படுத்தக் கேட்டுத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதும் உண்டு.

முப்பது வருடங்களாகப் புலப் பெயர்வு வாழ்க்கை, அதில் பாதி வருடங்கள் ஊருக்கே போக முடியாத போர்க்காலச் சூழல் எல்லாம் கடந்து ஊருக்குப் போனால் போரிலும் நோயிலும் செத்தவர் பாதி போக மூப்பில் அந்திமத்தை எட்டுவோர் மீதி என்ற நிலையில் இருப்போருக்குத் தம் பழைய முகங்களைக் காணும் போது எழும் அகத் திருப்தி தான் இம்மாதிரியான விசாரிப்புகள்.

தன் பால்ய மண்ணுக்கு அரவிந்த்சாமியின் மீள் வரவு என்ற ஒற்றை வரி அறிமுகதோடு மெய்யழகனைப் பார்க்கத் தொடங்கினால், அதன் அடி நாதமாக அந்தப் பழைய உறவைத் தேடிக் கண்டடைதல் என்ற செய்தியோடு படம் முடியும் போது உண்மைக்கு நெருக்கமாக இப்படைப்பை வைத்துக் கொண்டேன்.

ஆனால் ஆரம்பத்தில் தன் சொந்த வீட்டைப் பிரியும் விடலைப் பையனின் மன உணர்வுகளைக் குறும்படமாகச் சித்தரித்த விதம், தன் தங்கைக்குக் கொலுசு அணிவிக்கும் போது நமக்கும் மொழுக்கென்று விழுந்த கண்ணீர்த் துளிகள், கார்த்தியின் மனைவி ஶ்ரீதிவ்யாவின் வெள்ளந்திப் பேச்சு இவை கவிதைத்தனமாக அமைந்து படைப்போடு ஒன்ற முடிந்தது.



"ஶ்ரீதிவ்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும்

அதனால மெய்யழகன் படைப்பில் 

அவங்களையும் சேர்க்கணும்னு 

ஹைதராபாத் வரை தேடிப் போய்

பிடிச்சு வந்தேன்,

அவங்க முதல்ல நடிக்க இருந்தது

அர்விந்த்சாமியின் தங்கையாக"

இப்படியாக சாய் வித் சித்ராவில் இயக்குநர் சி.பிரேம்குமார் தன் பேட்டியில் சொல்லி இருந்தார்.

உண்மையில் மெய்யழகன் படத்தில் அர்விந்த்சாமிக்கு அடுத்ததாகப் பாத்திர வார்ப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஶ்ரீதிவ்யா தான்.

கார்த்தியும், அர்விந்தசாமியும் ராத்திரியில் குடித்துக் கும்மாளமிடப்போகிறார்கள் என்று தெரிந்தும்,

நயமாக அவர்களுக்கு வழி விடுவதும்

அவர்களின் கொட்டத்தைக் காது கொடுத்துக் கேட்டு முறுவலிப்பதும்,

"சாப்பிடுறீங்களாண்ணா"  அன்றே அறிமுகமான அந்நிய உறவுக்காறர் அர்விந்த்சாமியைப் பரிவோடு கேட்பதும்,

இதையெலாம் தாண்டி அந்த ஜல்லிக்கட்டுக் காட்டியில் மிடுக்கோடு சினிமாத்தனமில்லாத ஒரு வீராங்கனையாக வருவதும் என்று ஶ்ரீதிவ்யாவுக்கு ஒரு அழுத்தமான வாழ் நாட் பாத்திரத்தை பிரேம்குமார் கொடுத்திருக்கிறார்.

அதையெல்லாம் தாண்டி ஒரு அனுபவரீதியான ஒரு காட்சியும் இருக்கும்.

அர்விந்த்சாமிக்கு உதவ வேண்டும் என்று கார்த்தி எல்லாத்தையும் அள்ளிப் போடும் போது ஒத்தாசையாக ஶ்ரீதிவ்யா நாண்டுகொண்டு நிற்பதை அக்மார்க் வெள்ளந்திக் கிராமியப் பெண்களிடம் பார்க்கலாம்.

அதாவது தன் கணவன் அப்பாவியாக எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சு உதவும் போது கூடவே அவனின் குணாம்சம் ஒட்டிக் கொண்ட பெண்களை அனுபவத்தைக் கண்டிருக்கிறேன். 

"இந்தாங்க ! இதையும் அவங்களுக்குக் கொடுத்துடுங்க பாவம்"

என்ற மனோநிலை. இதை என் வீட்டம்மாவிடம் ஏதோவொரு சந்தர்ப்பங்களில் அடிக்கடி கண்டிருக்கிறேன்.

திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.


“யாரோ இவன் யாரோ” கமல் பாடும் பாடல் தவிர்த்து 

பின்னணி இசையும், பாடல்களும் கூடப் பெரிதாக ஈர்க்கவில்லை. தஞ்சை மண்ணின் கல்யாணப் பாடல் வித்யாசாகருக்குக் கிடைத்திருந்தால் ஒரு பெரும் கல்யாண விருந்தே படைத்திருப்பார்.

இது அரவிந்த்சாமி படம். ஆரம்பத்தில் ஒரு உணர்வுரீதியாகத் தன் கிராமத்து வீட்டோடும், அந்த வாழ்வியலோடும் ஒட்டிக் கொண்டவன், நகரத்து வாழ்வியில் ஒரு வெறுப்பு மன நிலையில் வாழ்ந்து விட்டு, தங்கைக்குச் சீர் செய்யும் கல்யாண மேடையில் உடைந்து அழும் காட்சி ஒன்றே போதும் அவருக்கு மகுடம் சூட்ட.

மெய்யழகன் எடுத்துக் கொண்ட கதைப்பின்புலத்துக்கே இயக்குநர் பிரேம்குமாருக்குப் பூச்சொண்டு கொடுத்துப் பாராட்ட வேண்டும்.

ஆனால் வலைப்பதிவு யுகத்தில் எண்ணற்ற பதிவர்கள் தம் நனவிடை தோய்தலில் காட்டிய 90களின் வாழ்வியலை மிக அழகாக எழுதியிருக்கிறார்கள். அவற்றை முன்னுறுத்திக் காட்சிகளுக்குக் கனம் சேர்த்திருக்கலாம். குறிப்பாக அந்தக் கோயில் வாழ்வியலும், யானையோடு எழும் பந்தமும்.

“மெய்யழகன்” ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க, நம் ஈழத்து வாழ்வியலின் கடந்து போன பக்கங்களை அவ்வப்போது நினைத்துக் கொண்டேன்.

சொத்துப் பிரச்சனை, காணி எல்லைப் பிரச்சனை என்று தமிழகத்தின் பண்பாட்டுக் கூறு ஈழத்திலும் இன்று வரை சம தளத்தில் தொடர்ந்தாலும், நிலம் இழந்த கதைகள் பலதும் நம் போர்க்கால வாழ்க்கையோடு தான் ஒட்டி இருக்கின்றன.

ஆர்மிக்காரன் பிடிச்ச வீடு பார்க்கப் போய் சூடு பட்டுச் செத்தவர்களும், மிதி வெடியில் கால் இழந்தவர்களும், முழுக் குடும்பத்தையுமே காவு கொண்டு மொட்டைச் சுவர்களாக இன்றும் பற்றை படர்ந்த காணிகளுமாக அந்த நிலம் பேசும் கதைகள் பல.

ஊருக்குப் பல்லாண்டுகள் கழித்துப் போதெல்லாம் பழகிய நட்புகளை விட இயற்கை தான் உற்ற தோழன். அது மீட்டிப் பார்க்கும் நினைவுகள் பல. அதனால் தான் சைக்கிளில் தேடித் தேடி அவற்றைக் காண உலாத்துவேன்.

இந்தப் படத்தின் ஆரம்பத்தில் நன்றி அறிவிப்பில் “இயற்கை” க்கும் கொடுத்தது இன்னொரு இன்ப அதிரச்சி.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் 

நற்றவ வானிலும் நனி சிறந்தனவே”

ஒவ்வொரு தடவை தாயகத்திலிருந்து மீளும் போதும் அப்பா சொல்லி அனுப்புவார்.

நானும் அப்படியே அந்த இயற்கையில், என் சைக்கிள் பயணங்களில் அவர்களைத் தேடுகிறேன்.

கானா பிரபா

Posted by கானா பிரபா at 1:31 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, September 02, 2024

பசுவும் பரமேஸ்வரியும் ❤️🐄

“கட்டின குழையெல்லாம் 

அப்பிடியே கிடக்குது,

ஏன் சாப்பிடேல்லை?

இந்தா...இந்தா...!”

ஆட்டுக் கொட்டிலில் தொங்கிக் கொண்டிருக்கும் குழைக் கொத்தில் இருந்து இரண்டு நொட்டுப் பிடுங்கி நீட்டுவார் அப்பா.

அப்படியே வாய்க்குள் தள்ளி விட்டு

‘ம்ம்ம்ம் அஹ்ஹ்ஹ் ம்ம்ம்" என்று ஆட்டுக்குட்டிகள் அவரோடு கதை பேசும். 

அப்பா ஆடு வளர்த்த காலமெல்லாம் ஆடுகள் தான் வளர்ந்தன, 

அவற்றிடமிருந்து ஒன்றையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

காது நீண்ட கிழவி போல அதில் ஒரு மூத்த ஆடு தன் அந்திம காலம் வரை வளர்ந்து எங்கள் வீட்டுப் பின் வளவில் தான் சமாதி கொண்டது.

“அப்பா ஆட்டை வில்லுங்கோ” 

ஊருக்குப் போகும் போதெல்லாம் சொல்லுவோம்.

“நீங்கள் போனாப் பிறகு எனக்கு ஆர் துணை? “ 

என்ற அப்பாவின் கேள்விக்குப் பதில் இராது எங்களிடமிருந்து.

"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர்.

எங்கட எண்பதுகள் காலம் மாட்டு வண்டிச் சவாரிகளோடும் மாட்டுப் பொங்கலோடும் மட்டும் நின்று விடவில்லை, ஆடு, மாடுகள் சினேகபூர்வமான வளர்ப்புப் பிள்ளைகளாக இருந்தன.

“பசுவும் பரமேஸ்வரியும்" குறும்படத்தைப் பார்த்து முடித்ததும் பழைய டயரியைப் படித்தது போல ஒரு உணர்வும் எழுந்தது.

Dr ஜெயமோகன் அவர்களின் படைப்புலம், வானொலி நாடக மரபிலிருந்து மேடை நாடகம் அதன் பின் குறும்பட முயற்சிகள் என்று பரிணமித்து “பொய் மான்”, “யாதும் யாவரும்” என்று நீளத் திரைப்படங்களை எடுத்து அடுத்த கட்டத்தில் நகர்ந்த போதும், அவர் மீண்டும் இன்னொரு குறும் படைப்போடு வந்திருக்கிறார்.

“பொய் மான்” புலம்பெயர் சூழலில் அமைந்த கதைக்களத்தில் கூட ஈழத்து வாழ்வியலின் பக்கங்கள் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தன. அந்த விதை தான் இப்படியொரு முயற்சியை ஈழத்துக் கதைக்களனையே முழுமையாக மையப்படுத்தி எடுக்கத் தூண்டியிருக்க வேண்டும். 

அந்த வகையில் மீண்டும் தன் தொட்டிலுக்கு வந்து கொடுத்த ஒரு படைப்பாக “பசுவும் பரமேஸ்வரியும்” அமைந்திருக்கிறது.

ஈழத்து வாழ்வியலில் சீதனச் சிக்கலின் எச்சமாக இருக்கும் ஒரு முனையை எடுத்துக் கொண்டு அந்த வாழ்வியலின் பரிமாணத்தை இந்தக் குறும்படத்தில் அழகாகக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

நம் தேசத்து இளவல்களின் தொழில் நுட்பத் திறனும் நேர்த்தியும் யாருக்கும் சளைத்தவையல்ல என்பதை இப்படத்தின் ஆரம்பக் காட்சி விரியும் போதே உறுதிப்படுத்துகின்றது.

தந்தை மகள் நேசத்தோடு விரியும் தொடக்கத்திலிருந்து பரமேஸ்வரிக்கு பசு மீதான அவளின் அன்பை நான் அவளின் தந்தைக்குக் கொடுக்கும் அன்பின் பரிமாணமாகவே பார்த்தேன்.

திரைக்கதை அமைப்பில் அந்த அன்பின் ஆழத்தை இன்னமும் ஆழப்படுத்தியிருக்கலாம். அப்படி நினைக்கும் போது கதையோட்டத்தில் மீண்டும் வந்து போகிறது அந்த அன்பின் சுவடு.

பின்னணி இசையிலும் உரையாடலுக்குள் ஊடுருவும் இசைத் துணுக்கினை நம் மண்ணின் மெல்லிசை வாத்தியக் கோவையாகக் கொடுத்திருந்தால் ஆங்காங்கே எழும் நாடகத் தன்மையைத் தவிர்த்திருக்கலாம்.

உச்சத்திலிருந்து நிலமெலாம் அளந்து பரந்து விரிந்து அந்த வீட்டு வளவுக்குப் போகும் ஒளிப்பதிவும், ஒளிக்கலவையும் மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டு நம் மண்ணின் அடையாளத்தைச் சிறைப்பிடித்துக் காட்டுகின்றது.

அப்பாச்சியிலிருந்து எல்லாப் பாத்திரங்களும் தம் பங்கைச் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள். கேசவராஜன் அண்ணரின் மனைவி கமலராணி அக்காவை மீண்டும் திரையில் கண்டது பெரு மன நிறைவு.

பசுவும் பரமேஸ்வரியும் படத்தைக் காண

https://www.youtube.com/watch?v=oKnTeXvjeP8&t=2s

“ஈழ நாட்டிலே....

ஒரு ஊரிருக்கு...

அந்த ஊரிலே 

ஒரு வெள்ளைப் பசு...

காதுகளை விட்டு நீங்க மறுக்கிறது படத்தின் உணர்வோட்டமான ஆரம்ப பாடல்.

இப்படத்தின் ஆக்க கர்த்தா Dr ஜெயமோகனின் ஈழத்துக் கதை சொல்லல் இன்னும் நீள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், வாழ்த்துகளும்.

கானா பிரபா

02.09.2024


Posted by கானா பிரபா at 10:14 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, August 18, 2024

கடுகண்ணாவ – ஒரு யாத்ரக் குறிப்பு


“M.T.வாசுதேவன் நாயரின் கதைகளில் மனித உணர்வுகளின் மெய்த்தன்மை இருக்கும், 

இந்தக் கதையைப் பொறுத்தவரை அவருடைய நிஜ வாழ்க்கையின் படிமம் ஆகவே எனக்குத்

தென்படுகிறது”

கமல்ஹாசனின் அறிமுகக் குறிப்போடு வேணுகோபால் என்ற பத்திரிகையாளன் இலங்கையின் கடுகண்ணாவை நகரம் நோக்கி பயணப்படுகிறான். 

“இலங்கைக்கு ஒருமுறை தான் பயணப்பட்டிருக்கிறேன்,

அதுவும் வெறும் நான்கு மணி நேரம் தான்”

என்று கமல்ஹாசன் தன் அறிமுகக் குறிப்பில் சொல்லியிருப்பார்.

இங்கோ வேணுகோபாலுக்கு இதுவே முதன்முறை.

ஆனால் அவனுக்கும் இலங்கைக்கும், அதுவும் குறிப்பாக கடுகண்ணாவைக்குமான பந்தம் 1942 ஆம் ஆண்டிலேயே விதைக்கப்பட்டு விட்டது.

கொழும்பு நகர வீதியில் அவன் கார் பயணப்பட்டாலும்,

அவனின் எண்ண அலைகளோ தன் பால்யகாலத்துக்குச்

சுழல்கிறது.

தன் சகோதரியாகப்பட்டவளான லீலாவைப் பார்க்கப் போகிறான். 

வருஷக்கணக்காக அவன் வாழ்க்கையில் ஒளிந்திருந்த ஒரு செய்தியின் மெய்த்தன்மைக்கும் விடை கிடைக்கிறது.

“காதாகாரன்” M.T.வாசுதேவன் நாயரை நாயகனாக்கி அழகு பார்த்து, மம்மூட்டியின் வெகு இயல்பானதொரு நடிப்பில், “கடுகண்ணாவ – ஒரு யாத்ரக் குறிப்பு” என்ற குறுந்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தின் மகோன்னதரப் படைப்பாளி M.T.வாசுதேவன் நாயரின் சிறுகதைகள் “மனோரதங்கள்” என்ற இணையத் திரைப்படத் தொகுப்பாக வந்துள்ளது., அதில் உள்ள ஒன்பது கதைகளில் ஒன்று இது.

இந்தப் படைப்பு ஒவ்வொன்றுமே மம்மூட்டி, மோகன்லால் என்ற பெருந்திரை நட்சத்திரங்கள், ஆளுமைப்பட்ட இயக்குநர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு கதையாக எடுத்துப் பண்ணியது.

கடுகண்ணாவ – ஒரு யாத்ரக் குறிப்பு” இயக்குநர் ரஞ்சித் படைத்திருக்கிறார். ஏற்கனவே “பலேரி மாணிக்கம்” என்ற அற்புதமான மர்மப்படைப்பை மம்மூட்டியோடு இணைந்து படைத்தவர் இங்கே ஒரு உணர்வுபூர்வமான படைப்பிலும் இந்தக் கூட்டணியின் வெற்றியை நிரூபித்திருக்கிறார்கள்.

இந்தக் கதையை முன்னர் நண்பரும், எழுத்தாளருமான ரிஷான் ஷெரிப், “புரவி” கலை இலக்கிய இதழுக்காக “கடுகண்ணாவைக்கு ஒரு பயணம்” என்ற பெயரில் தமிழ் மொழியாக்கம் செய்ததையும் குறிப்பிட்டு வைக்க வேண்டும். 

அந்நியமற்ற காட்சிப்படுத்தல்கள் இலங்கையைப் படம்பிடித்துக் காட்டியதில் கேரளத்தவர்களின் யதார்த்த நிலை அதிசயப்பட வைக்கவில்லை என்றாலும். 

“லீலா” என்ற சிங்களச் சிறுமி பேசும் ஆங்கிலம், ஒரு சிங்களப்பெண் எப்படிக் கொஞ்சலோடு பேசுவாளோ அவ்வளவு தூரம் வெகு நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது.

கேரளப் பின்புலத்தில் மம்மூட்டியின் தந்தையாக நடித்த வினீத் இடமும் நேர்த்தியான நடிப்பைப் பார்க்க முடிவதோடு, 1942 ஆம் ஆண்டு அந்தக் குடும்பத்தில் எழும் சலசலப்பையும் இந்தச் சிறுகதையின் அச்சாணி விலகாது படமோட்டுகிறது.

அந்தச் சிறுவன், சிறுமிக்குமிடையில் பூக்கும் சகோதர நேசமும் ஒரு அழகியல் காட்சி மொழியில் கையாளப்பட்டிருக்கிறது.

“கொச்சியான்ஸ்” என்ற அடைமொழியோடு மலையாளிகள் இலங்கையில் அழைக்கப்பட்ட வரலாற்றுச் செய்தியோடு, மெலிதாகப் பயணிக்கும் இசையோடு அரை மணி நேரத்தில் ஒரு உணர்வுபூர்வமான சிறுகதையை வாசித்த அனுபவத்தைக் கொடுத்து நிற்கின்றது.

கானா பிரபா

18.08.2024



Posted by கானா பிரபா at 9:13 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, July 26, 2024

கலகலப்பு தீசன் கதைக்கிறார் ❤️😁


“சிரிக்கத் தெரிந்தவனே வாழத் தெரிந்தவன்” என்பர்.

நகைச்சுவை என்பது ஒரு கலை என்றால், 

தற்காலச் சூழ்நிலையைக் கண் கொண்டு பார்த்து 

அதை நகை மொழியில் கொடுப்பது என்பது ஒரு மகத்தான கலை.

அந்த மாதிரியான நுட்பம் கைவரப் பெற்றவர் கலகலப்பு தீசன்.

ஈழத்தமிழரின் அவல வாழ்க்கையை நகை முகம் கொண்டு பார்த்து

அவர் கொடுக்கும் கலகல மொழிகள் யாரையும் முகம் சுழிக்க வைக்காது சிரிப்பில் ஆழ்த்தும்.

ஈழத்தில், இணுவிலில் பிறந்தவர் “கலகலப்பு" என்ற சஞ்சிகையை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் தோழமைகளோடு இணைந்து நடத்தி ஈழம் பூராகவும் வாசக வட்டத்தை விரித்தார்கள்.

விவசாயியின் மகன் என்ற எள்ளலை அவரின் சாதனைக்கான பொறியாக எடுத்துக் கொண்டு விவசாயத்துறையில் உயர் புலமைப்பரிசில் பெற்றுத் தன் இளவயதிலேயே அமெரிக்காவுக்குப் பயணித்தவர்.

ஒரு பக்கம் புலமைத்துவத்திலும், இன்னொரு பக்கம் நகைச்சுவைப் புலத்திலுமாக இரு முகங்கள் கொண்டவர்.

கனேடிய மண்ணில் தன் நீண்ட இருப்பில் தொடர் மேடை நாடக நிகழ்வுகள், திரைப்படங்கள், பத்திரிகை எழுத்து என்று வீச்சோடு பயணிப்பவரின் காலப் பெட்டகமாக இந்தப் பேட்டியைப் பகிர்கிறார்.

கலகலப்பு தீசனின் ஐம்பது ஆண்டு கலைப்பயணத்தின் பதிவாக அமைந்தாலும் இன்னொரு முறை இன்னும் இவரிடம் அள்ள வேண்டும்.

என்னுடைய கால் நூற்றாண்டு வானொலி அனுபவத்தில் ஒரு மணி நேரம் சிரித்துச் சிரித்துப் பேட்டி எடுத்தது இதுவே முதன்முறை.

https://www.youtube.com/watch?v=gYBztftiUS8

Spotify இல் கேட்க 

https://open.spotify.com/episode/0powrUF6P5fuvYSYTK9mhy

கலகலப்பு தீசனோடு கதைத்தவர்

அதே இணுவிலில் இருந்து புலம்பெயர்ந்த

கானா பிரபா

26.07.24


Posted by கானா பிரபா at 10:28 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, July 23, 2024

திருமதி.பராசக்தி சுந்தரலிங்கம் 🙏

இலங்கை வானொலி மற்றும் பிபிசி புகழ் வானொலியாளர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மனைவி.

கடந்த 24 ஆண்டுகளாக வானொலியின் பரம ரசிகையாக இருந்து அவ்வப்போது தன்னுடைய விமர்சனப் பகிர்வுகள் ஆக்கங்களைத் தன் கைப்பட எழுதி அனுப்பி வந்தவர்,

ஒவ்வொரு நாளும் அவரின் மின்னஞ்சலில் தான் விழிப்பேன்.

வலைப்பதிவில் பகிரும் ஒவ்வொரு ஆக்கங்களையும் படித்துத் தன் கருத்துகளை நயம்பட உரைப்பார்.

டொமினிக் ஜீவா, பேராசிரியர் சிவத்தம்பி போன்ற பெரும் ஆளுமைகளுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தவர். 

யாரையும் புறம் பேச மனம் வராது.

என்னுடைய முதல் வாசகியாக இருந்து வழி நடத்தியவர்களில் மறைந்த எழுத்தாளர் அன்புச் சகோதரி திருமதி. அருண் விஜயராணியோடு திருமதி சுந்தரலிங்கம் ஆன்ரியும் என் வாழ்நாளில் மறக்க முடியாதவர்கள்.

ஆழ்ந்த இரங்கல்களுடன்

போய் வாருங்கள் ஆன்ரி ! 🙏

கானா பிரபா

Posted by கானா பிரபா at 6:30 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, July 12, 2024

I Am: Celine Dion


குரல் தான் என் வழிகாட்டி

அது சொன்ன வழியில் தான் 

என் வாழ்க்கை அமைந்தது,

ஆனால்.....

2022 ஆம் ஆண்டில் பாடகி Céline Dion தன் உலகச் சுற்றுலாவுக்குத் தயாரான வேளை அவருக்கு Stiff Person Syndrome (SPS) என்ற நோய்க்கூறு பீடிக்கப்பட்டதை அடையாளம் காண்கிறார்.

கணவன் René-Charles Angélil ஐ 2016 இழந்த மன உளைச்சலில் ஒரு புறம், 

பால்ய வாழ்வில் இருக்கும் மூன்று பிள்ளைகள் ஒருபுறம்,

இன்னொரு புறம் நோயோடு போராடுதல்.

இவற்றோடு தன்னுடைய குரலை மெல்ல மெல்ல இழந்து சூனியமாகிப் போய் கொண்டிருக்கும் ஒரு உலகப் புகழ் பூத்த பாடகி என்ற பெரும் உச்சத்தில் இருந்து சரிந்து விழும் மன உறுதி

என்று அவரின் வாழ்க்கையே கடந்த 2 வருடத்தில் புரட்டிப் போடுகிறது இந்த நோய்.

“நான் வாழ் நாள் முழுக்கப் பாடிக் கொண்டே இருக்க வேண்டும்”

இது பதின்ம வயது செலின் டியானின் வாக்குமூலம்.

அப்படியே இந்த ஆவணப் படத்தில் தொடங்கும் அது, 

“எனக்கு இந்தச் சவாலைக் கடக்க முடிவது கடினம் என்று தெரியும்

ஆனாலும் போராடுவேன், 

மீண்டும் பாடுவதற்காகப் போராடிக் கொண்டே இருப்பேன்”

அப்படியே முடிகிறது.

“என்னால் நடக்க முடியவில்லை”

“என்னால் ஓட முடியவில்லை”

“என்னால் துள்ளிக் குதிக்க முடியவில்லை”

ஒரு காலத்தில் துள்ளிக் குதித்து,  மேடையில் ஆர்ப்பரித்த அந்த ஸ்ப்ரிங் உடம்பா இப்படி இறுகிப் போய்க் கிடக்கிறது?

அப்படியே காட்சிகள் மாறி மாறி செலினின் பழைய உலகத்துக்கும் புது உலகத்தும் பாய்ந்து பாய்ந்து பயணிக்கிறது.

“ஒரு இசைக் கச்சேரியை ரத்துச் செய்வதன் வலியை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா?”

“பாடுவது ஒரு உள்ளார்ந்த இன்பம் என்றால்

மேடைக் கச்சேரி என்பது அந்த இன்ப ஆர்ப்பரிப்பின் உச்சம் 

என்பேன்”

பாட்டுக் கச்சேரியில் பாடகர் பாட்டு வரிகளை மறந்தாலும் பரவாயில்லை அதுதான் இருக்கவே இருக்கிறார்களே

கூடி நின்று ஆர்ப்பரித்துக் கூடவே பாட இருக்கும் ரசிகர்கள்

அவர்கள் கை கொடுப்பார்களே?

இப்படியாக செலின் தன் பழைய வாழ்வின் அற்புதத் தருணங்களை நினைத்துப் பூரிக்கிறார்.

ஒலிவாங்கியை நீட்டி அந்தப் பல்லாயிரம் ரசிகர்களைப் பாட வைத்து அழகு பார்க்கிறார்.

தான் ஒவ்வொரு பாட்டுக் கச்சேரிகளிலும் போட்டு அழகு பார்த்த பாதணிகள், உடைகள் ஒவ்வொன்றாகத் தொட்டுப் பார்த்து ஆசை பார்க்கிறார்.

"உலகமெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன் ஆனால் இசை மேடைகளைத் தவிர எதையுமே பார்த்ததில்லை"

பழைய செலின் போலப் பாடிப் பார்க்கப் பார்த்து உடைந்து போய் விழும் அந்த ஒலி நயத்தை வேதனையோடு பிரதிபலிக்கிறார்.

உலகத்தில் எத்தனை உச்சபட்ச விருதுகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் ஒருமுறையல்ல பலமுறை சுவீகரித்த பாடகி.

மேடையில் அவரின் குரல் ஜாலம் என்பது ஒரு இசைக்கருவியின் பல்பரிமாணம் போல மிளிர்கிறது. அதையும் காட்சி பகிர்கின்றது.

ஈட்டியால் குத்தித் துளைப்பது போல வலியால் துவண்டு மரண வேதனையோடு தன் சிகிச்சைக்கு முகம் கொடுக்கிறார் செலின்

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி; 

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!”

கவியரசு கண்ணதாசனின் வரிகள் வெறும் வார்த்தை ஜாலமல்ல.

அனுபவ முத்திரைகள்.

நமக்குக் கிடைத்த இந்த நிமிடம் கூட ஆசீர்வதிக்கப்பட்டது.

அதை நாம் முழுமனதோடு அனுபவிக்க வேண்டும்.

I Am: Celine Dion ஆவணப் படத்தைப் பார்த்த பின்னர் நள்ளிரவு தொடும் அந்தச் சூழலில் இந்த ஜீவனுக்காக ஒவ்வொரு உயிர் அணுக்களும் அழுவது போல உணர்கிறேன்.

ஏனெனில்

என் புலம்பெயர் வாழ்வில் தாயகத்தின் இனிமைத் தொலைத்த அந்தத் தனிமையிலே, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்து கொண்டே படித்த காலத்தில், அந்த வேலைத்தளத்தின் குட்டி வானொலி நள்ளிரவு கடந்து ஏதோவொரு பண்பலை அலைவரிசை வழியாக அந்த விடிகாலைக் குளிரின் கதகதப்போடு 

கொண்டு வரும்

My Heart Will Go On

https://www.youtube.com/watch?v=9bFHsd3o1w0

செலினுக்காக மனசுக்குள் அழுதேன், இப்போதும் கூட.

I Am: Celine Dion தற்போது Prime Video வில் வெளியாகியிருக்கிறது. 

கானா பிரபா

12.07.2024




Posted by கானா பிரபா at 11:32 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, July 08, 2024

சிட்னியில் பரமேசுவரன் இரங்கநாதன் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலைய ஆதரவில்

திரு. பரமேசுவரன் இரங்கநாதன் ஆக்கத்தில்

“இலக்கணச் சாரல்” மற்றும் “எங்கள் பொங்கல்”

இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு


கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை, சிட்னியின் மேற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள கொலிற்றன் பள்ளி மண்டபத்தில் மாலை 3 மணிக்குக் குறித்த நேரத்தில் ஆரம்பமாகிக் கச்சிதமாக நடைபெற்ற நிகழ்வாக அமைந்தது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் மங்கல விளக்கேற்றலை திரு.திருமதி முரளீதரன் தயாளினி தம்பதியினர் மற்றும் காந்தரூபன் ஜென்சி தம்பதியினர் தொடக்கி வைக்க, எம் உறவுகளின் ஈகையை நினைத்து அக வணக்கத்தோடு தொடர்ந்தது.

இந்த விழா நிகழ்வு மவுண்ட் றூயிட் தமிழ்க் கல்வி நிலையத்தின் அநுசரணையில் நடைபெற்றது முன்னுதாரணமான செயற்பாடாக அமைந்தது. வெறுமனே தமிழ் கற்பிக்கும் கல்விச்சாலையாக அன்றி, எதிர்காலத்தில் எழுத்துச் சிற்பிகளை உருவாக்கும் கலைக்கூடமாகவும் திகழ வேண்டும் என்ற கருத்தையும் நூலாசிரியர் இந்தக் கூட்டத்தில் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தின்  தலைவர் திரு.தேவராஜா சதீஸ்கரனின் தலைமையில் நிகழ்ந்த இந்த விழாவில்  உப தலைவர் திரு.கந்தசாமி கெளரீஸ்வரன் வரவேற்புரையைத் தொடர்ந்து, தலைவர் ஆறுமுகசாமி பேரின்பமூர்த்தி மற்றும் ஆசிரியை திருமதி. நிருபா ஜனார்த்தனன் வாழ்த்துரை வழங்கவும், தொடர்ந்து வெளியீட்டு உரையை இந்தப் புத்தகங்களை அழகுற வடிவமைத்த நிசா ஆட்ஸ் உரிமையாளர் திரு.நிசாகுலன் செல்வராசா வழங்கும் போது, தாயகத்தில் இருந்த காலத்திலேயே “அறிவியல் துளிகள்” இறுவட்டு வழியாகவும் இரங்கநாதன் அவர்களது தமிழியல் செயற்பாடுகள் நிகழ்ந்ததை அனுபவரீதியாகப் பகிர்ந்து கொண்டார்.

மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தின் உப அதிபர் திருமதி. அனிதா சிவசங்கர் வழியாக முதற்பிரதிகளைப் பெற்ற சிவப்பிரகாசம் விஜய நேசன் தம்பதியினர் (Sri Ganesh Selections), மற்றும் திரு.திருமதி கனகரட்ணம் சுதர்மன் தம்பதியினரைத் (KST Spice Corner) தொடர்ந்து, சிறப்புப் பிரதிகளை அவையில் வந்திருந்தோர் வாங்கிச் சிறப்பித்தனர்.  

சிற்றுண்டிப் பரிமாறலோடு குறுகிய இடைவேளையைத் தொடர்ந்து நிகழ்வின் அடுத்த பாகம் அரங்கேறியது.

இந்த விழாவில் குறிப்பிடத்தக்க இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், திரு. பரமேசுவரன் இரங்கநாதன் ஆக்கியளித்த கவிதைகளை முத்தாய்ப்பாக தமிழ்க் கல்வி நிலைய மாணவியர் பகிர்ந்து சிறப்பித்தார்கள்.

“இலக்கணச் சாரல்” நூல் மதிப்பீட்டுரையை திரு. சரவணமுத்து தேவராசா (ஆசிரியர், முன்னாள் அதிபர் ஹோம்புஷ் தமிழ்க்கல்வி நிலையம்) வழங்குகையில்,

“இலக்கணச் சாரல்” என்ற தலைப்பில் இருக்கும் நுட்பம் தன்னைக் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார். ஏனெனில் தமிழ் இலக்கணத்தை மிகவும் கடினமான நோக்கில் நம்மவர்கள் பயிற்றுவிக்கும் செயற்பாட்டால் மாணவர் உலகம் சந்திக்கும் சவால் உள்ள சூழலில் இம்மாதிரியான எளிய கை நூல் மாணவருக்குப் பெரும் வரப்பிரசாதமாகும் என்று குறிப்பிட்டார்.

“அகர முதல எழுத்தெல்லாம்” என்பது போல, முத்தாய்ப்பாய்

“அகரன்” என்ற பெயர்ச்சொல்லோடு இந்த நூல் தொடங்கும் சிறப்பை மகிழ்வோடு பகிர்ந்தவர், 

மேலும் தமிழ் இலக்கணப் பிழைகளோடு உலாவும் சமூகச் செயற்பாடுகள் குறித்த தன் ஆதங்கத்தையும் பதிந்து வைத்தார்.

வரலாற்று நோக்கில் தமிழ் இலக்கணம் குறித்த ஆவணப்படுத்தலையும் தன் உரையில் வழங்கிச் சிறப்பித்தார்.

“எங்கள் பொங்கல்” நூல் குறித்த மதிப்பீட்டுரையை வழங்கிய கானா பிரபா,

“தாய் மொழிக் கல்வியின் தொடக்கமாக அமைவது எளிமையான குழந்தைப் பாடல்கள். அதனால் தான் மகாகவி சுப்ரமணியபாரதியாரில் இருந்து தொடங்கி, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா போன்ற தமிழகத்துப் படைப்பாளிகளோடு, ஈழத்தில் கவிஞர் அம்பி, கவிஞர் சத்தியசீலன், கவிஞர் த.துரைசிங்கம் உள்ளிட்ட பல ஈழத்துப் படைப்பாளிகளது கவிதைகளைப் பாடல்  நூல் ஈறாக உள்வாங்கிக் கற்பிக்கும் நடைமுறை இருந்து வருகின்றது. திரு. பரமேசுவரன் இரங்கநாதன் அவர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பைப் படிக்க ஆரம்பித்ததுமே அந்தப் பழைய சிறுவர் உலகத்தில் மூழ்கிவிட்டு வந்தேன்.தாய் தான் சமைத்த உணவை மொன்று பார்த்துத் தன் குழந்தைக்கு ஊட்டுமாற் போல, இவரின் கவிதைகளில் கையாளப்பட்டிருக்கும் வார்த்தைகளின் எளிமையும், சந்தமும் சிறுவர்களுக்கு மிக அணுக்கமாகச் சென்று சேரும் வகையில் அமைந்துள்ளன.அதே நேரம் எடுத்துக் கொண்ட கருப்பொருளின் ஆழம் சிதையாமலும் பார்த்துக் கொள்கிறார்.தமிழரின் தொன்மையைப் பக்தியோடு சேர்த்துக் கவிதைகளாகக் கொடுத்தது மட்டுமன்றி, தற்காலத்தில் அலைக்கழித்த கொரோனாவைக் கூட விட்டு வைக்காமல் அறிவியல் அறிஞர்கள், மருத்துவர்கள் மேற்பார்த்து அவசிய மடலொன்று அனுப்பி வைக்கிறார் பாருங்கள்.கவிஞர் பரமேசுவரன் இரங்கநாதனது இத்தகு படைப்புகள் இன்னும் வெளிவர வேண்டும். அவை புலம்பெயர் தமிழர்கள் மட்டுமன்றி தாய் நிலத்தவருக்கும் சென்று சேரவேண்டிய இலக்கியச் செழுமை கொண்டவை” என்று குறிப்பிட்டார்.

நிகழ்வில் தொடர்ந்து ஏற்புரையை நூலாசிரியர் திரு. பரமேசுவரன் இரங்கநாதன் வழங்கிய போது, 

இந்த நூல்களை வெளியிட்டதன் தேவையையும், பின்னணியில் இருந்த உழைப்பையும் கோடிட்டுக் காட்டினார். 

தமிழின் சிறப்பையும், அதன் விஞ்ஞானத் தத்துவத்தையும் “திருப்புகழ்” தொட்டு உதாரணம் பகிர்ந்தார். சம்பிரதாயபூர்வமான ஏற்புரையாக அன்றித் தன் பேச்சில் காத்திரமான பல விடயங்களைத் தொட்டுச் சென்றார்.

இவற்றைக் கொண்டு வருவதில் அவரின் மனைவியும், தமிழாசிரியருமான திருமதி. செல்வராஜி இரங்கநாதனின் உழைப்போடு, நூல்களை வடிவமைத்த திரு. நிசாகுலன், மற்றும் அச்சுப்பதிவை அளித்த திரு. சதீஸ்கரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தின்  செயலாளர் திரு. சிவா சிவசங்கரின் நன்றியுரையைத் தொடர்ந்து இந்நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைந்தது.

திரு.பரமேசுவரன் இரங்கநாதன் ஈழத்தில் இருந்த காலத்திலேயே நாடகங்கள் எழுதியும், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றும் தமிழுக்கான தன் செழுமையான பங்களிப்பை வழங்கியவர். 

இன்று சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் இவரின் தமிழ்க் கல்வி கற்பித்தல் செயற்பாடுகளோடு இத்தகு இலக்கியப் பரிமாறல்கள் அழகுற வடிவமைக்கப்பட்டு அச்சேறி வெளிவருவது நம் தமிழருக்குக் கிடைத்த வரப்பிரசாதம். 

நூலாசிரியருக்கும், கச்சிதமான விழாவை நிகழ்த்திய மவுண்ட் றூயிட் கல்வி நிலையத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு இந்த வேளை நன்றிகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொள்வோம்.



















Posted by கானா பிரபா at 8:31 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, June 19, 2024

தன்வியின் பிறந்த நாள் (சிறார் கதைகள்) ✍🏻 யூமா வாசுகி வாசிப்பனுபவம் 📚



2024ஆம் ஆண்டுக்கான பாலபுரஸ்கார் விருது தன்வியின் பிறந்த நாள் கதைத் தொகுப்புக்காக, யூமா வாசுகி அவர்களுக்குக் கிடைத்த செய்தியோடு நேராக இந்தப் புத்தகத்தைத் தேடி Kindle இல் கண்டடைந்தேன்.


ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க என் பால்ய காலத்து உலகத்தில்  இருந்துவிட்டு வந்தேன். 

அவ்வளவுக்கு எளிமையும், ஆங்கிலக் கலப்பற்ற அழகு தமிழுமாக இவரின் எழுத்துகள் திகழ்கின்றன.

எண்பதுகளில் சிறார் கதைகளோடு வாழ்ந்தவர்களுக்குத் தான் புரியும் இவ்விதமான சிறுவர் இலக்கியத்தையும் நாம் பேணுபவர்கள் என்று.


இந்தக் கதைத் தொகுப்பை 5 முதல் 18 வயது வரையான சிறார்களுக்கானது என்று Kindle வரையறுத்திருந்தாலும், எல்லா வயதினரும் படிக்க வேண்டியது என்றே சொல்வேன்.


இன்று திரைப்படங்களில் மித மிஞ்சிப் போன வன்முறைகள், காண் பகிர்வுகளில் கிடைக்கும் தேவையில்லாத அரட்டைகள் தான் சிறுவர்களுக்கான தீனியாக இருக்கும் சூழலில் இந்த மாதிரியான கதைகள் மனதைச் செழுமைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


மொத்தம் பத்துக் கதைகள். அனைத்துமே சிறுவர் உலகத்தில் நின்று பேசுகின்றன. அதுதான் பூமா அவர்கள் மீது பேராச்சரியம் கொள்ள வைக்கின்றன. ஒரு ஆற்றொழுக்கான மூத்த படைப்பாளி, சிறார் மொழியிலேயே சிந்தித்து அவர்களோடு உறவாடுவது என்பது இயல்பான காரியமல்ல. ஆனால் இந்தக் கதைத் தொகுப்பைப் படித்து முடித்ததும் இன்ப ஆச்சரியமே மேலோங்குகின்றது.


ஒவ்வொரு கதைகளிலும் ஒவ்வொரு நீதி பேசப்பட்டாலும் அது போதனையாக அன்றி கதைப் போக்கிலேயே சொல்லி விட்டுப் போகின்றது.

உதாரணத்துக்கு “தலைவர் ஜெய் செய்தது சரியா?” என்ற கதையில் ஊருக்கு உதவும் அந்தச் சிறுவனின் செயல் சரியா என்று வாசகரையே கிடுக்குப்பிடி போட்டு விடுகிறது.

மெல்லிய நகைச்சுவையையும் கலந்து எழுதும் நுட்பம் கூட இந்தக் கதைகளின் சுவாரஸ்யத்துக்கான பலம்.


சிறார் கதைகளின் சிறப்பு என்னவென்றால் பூனைக்குட்டியால், நாய்க் குட்டியால், குட்டி யானையால் இன்ன பிற மிருகங்களால் பேச முடியும். இங்கேயும் எழுத்தாளர் அவற்றைத் தன் கதைகளில் பொருத்தி எழுதியிருப்பது வெகு சிறப்பு.

“தன்வின் பிறந்த நாள்” கதையைப் படிக்கும் போதே அந்த உலகம் கற்பனையில் விரிந்து படமாக ஓடுகிறது.


“குட்டிநாய்க்குப் பெயர் கிடைத்தது எப்படி?” அந்த நாய்க்குட்டியின் தனிமையை, சோகத்தை நம்முள் இறக்கி விட்டு இறுதியில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்து விடுகிறார்.

தன்னுள் இருக்கும் கவிதைக்காரனையும் பொருத்தமான இடத்தில் அளவாகக் கொடுத்தது இன்னுஞ் சிறப்பு.


“உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்” என்பதன் சாரமாய் முந்திய கதை அமைந்தது போல “தன்வியின் பூந்தோட்டம்” கதையும் அமைகின்றது.

இன்றைய தலைமுறையில் எத்தனை பேர் பூந்தோட்டப் பராமரிப்பில் ஈடுபடுகிறார்கள் என்றொரு கேள்வியைப் பெரியவர்கள் எங்களிடம் மறைமுகமாகக் கேட்பது போலிருந்தது.


சிறார்களுக்கே உரித்தான கவனச் சிதறலை “எண்ணல்” நுட்பமாகக் காட்டுகின்றது.


“அன்பளிப்பு” கதை சற்றே பெரிய சிறார்களுக்கான நீண்ட விபரணங்களையும், கதைப் போக்கையும் கொண்டது. ஆடுகளுக்குத் தீனி வைத்த ஜெய், தன்வி சகோதரங்களுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் அன்பளிப்பை அது காட்டுகின்றது.


போலியோ என்று இன்று பரவலாகப் புழங்கும் சொற்பதத்தை நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய “இளம் பிள்ளை வாதம்” என்ற சொல் கொண்டே “குணசுந்தரி” என்ற பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறார்.

குணசுந்தரி என்ற அந்தப் பிள்ளை மீது அரச உயர் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முதற்கொண்டு எல்லா வகுப்பு மாணவர்களும் பிரியம் கொண்டிருப்பதும், அவளின் வாயில் வழியும் எச்சிலைக் கூடத் துடைத்து விடும் பரிவுமாக ஒரு அழகிய உலகைக் காட்டுகிறது.

இயலாமை என்று எதுவுமே இல்லை என்ற கோணத்தில் குணசுந்தரி அந்த நாள் முழுக்கப் பள்ளியில் செய்த வேலைகளை அடுக்கிக் காட்டி அவளின் உலகம் எவ்வளவு அழகானது என்று முடிக்கிறார் எழுத்தாளர்.

“எட்டாம் வகுப்பு தன்வி, குணாவைப் பிடித்து அணைத்து, தன் மேற்சட்டை விளிம்பால் அவள் எச்சிலைத் துடைத்து விட்டு அவசரமாகச் சென்றாள்”

இவ்விதம் குணா என்ற குணசுந்தரி கதையிலும் தன்வி என்ற பாத்திரம் மின்னி மறைகிறது.

பாடசாலையின் சுற்றாடலை ஒவ்வொரு மாணவரும் பொறுப்போடு கையாள வேண்டும் என்பதை வலுவிழந்த குழந்தை மூலம் மறைமுகமாகப் பாடம் எடுக்கிறது இக்கதை.


தன்னுடைய ஆசிரியர் எவ்வளவு கண்டிப்பானவராக இருந்தாலும் அவருடைய குடும்பத்துக்கு ஒரு இக்கட்டு நேரக்கூடாது என்ற சிந்தனை தன்னுடைய நெருக்கடியிலும் ஜெய் என்ற மாணவனுக்கு எழுந்ததால் தான் அவனுக்குக் கைமேல் பலன் கிடைத்ததை “சிறகுத்தேள்” விபரிக்கின்றது.


“குழிக்குள் விழுந்த கோழிக்குஞ்சு” அதைக் காப்பாற்ற ஜெய்யும், தன்வியும் எடுக்கும் முயற்சிகளும், அவர்களுக்கு உதவ முன் வரும் பாத்திரங்களும் மெலிதான நகைச்சுவை ஓட்டத்தோடு எழுதப்பட்டு முடிவில் அவர் கொடுக்கும் “சம்பவம்” தான் பகீரென்றிருக்கும்.


“அவர்நாண நன்னயம் செய்து விடல்” என்ற குறளின் அடி நாதமாய் “வலியினால் அல்ல” சிறுகதை விளங்குகிறது.

இதுவும் சற்றே பெரிய சிறுவர்களுக்கான கதை. ஏற்றத்தாழ்வு இல்லாத நட்பில் பொறாமை வந்து விழுவதால் எழும் மனச் சிக்கலைச் சிறுவர் உலகத்தில் நின்று பேசி நிறைவானதொரு கருத்தோடு முடிக்கின்றது இக்கதை.


பெரும்பாலும் ஜெய், தன்வி ஆகிய பாத்திரங்கள் வெவ்வேறு கதைகளில் வருகிறார்கள்.

ஒட்டு மொத்தமாக எல்லாக் கதைகளையும் படித்த பின்னர் அவர்களின் உலகில் நடந்த கதைகள் போன்றதொரு பிரமை தொனிக்கின்றது.


இந்தக் கதைகள் Tanvi’s Birthday என்ற பெயரில் சென்னை SIET மாணவிகள் S.பவானி, R.S.ரெஹானா சுல்தானா ஆகியோரால்  ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தமிழ் நூலைப் பதிப்பித்த பாரதி புத்தகாலயமே வெளியிட்டிருக்கின்றது.


இந்த இடத்தில் சிறுவர் இலக்கியத்தில் இன்றுள்ள சூழலில் பாரதி புத்தகாலயத்தின் தொடர்ச்சியான பணி க்குத் தமிழுலகம் நன்றி கொள்ள வேண்டும்.


தன்வியின் பிறந்த நாள் கதைத் தொகுப்பு வெறும் விருதுக் கெளரவத்தோடு மட்டும் நின்று விடக்கூடாது. சிறார் பாட நூல்களில் இடம்பெற வேண்டும்.


குறிப்பாகப் புலம் பெயர் மண்ணில் தமிழ்ப் பாட நூல் ஆக்குவோருக்கு இந்தக் கதைத் தொகுதி மிகக் கச்சிதமான படைப்பு ஆகும்.


கானா பிரபா

19.06.2024


யூமா கணினி வரைகலை : வன்மி

Posted by கானா பிரபா at 10:47 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, June 09, 2024

இன்னும் கன்னியாக - பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராசாவின் சிறுகதைத்தொகுதி

சட்டத்துறையில் இயங்கும் பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராசா அவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழ்பவர், கவிஞராக அதிகம் அறியப்பட்டாலும் ஆழ்ந்த இலக்கியமும், தமிழ்ப் பற்றும் மிக்க புலமையாளர். மடை திறந்தது போலப் பேச்சாற்றல் மிக்கவர்.

இவருடைய ஆளுமைத் திறத்துக்கு இவர் ஆக்கியளித்த அச்சுவடிவில் வந்த நூல்கள் மிகச் சிலவே.

இன்று அவருடைய இன்னொரு பரிமாணமாக “இன்னும் கன்னியாக” என்ற சிறுகதைத் தொகுதியைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தைப் பகிர வந்துள்ளேன்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் உரையை இந்த நூல் வெளியீட்டு விழாவின் தலைமையுரையில் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

அதன் நீட்சியாக “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது போலவே இந்தச் சிறுகதைத் தொகுதியின் ஒன்பது கதைகள் அமைந்திருக்கின்றன.

“இன்னும் கன்னியாக”

இந்தப் புத்தகத் தலைப்பே இதற்குள் அடக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டி விடும்.

அவ்வளவு தூரம் பெண்ணியம் சார்ந்த, பெண்களுக்கு நேரும் பல்வேறு சவால்களை, குறிப்பாகத் திருமணம் முடித்த பெண்களின் கதைகளாக அமைந்திருக்கின்றன.

இவற்றைப் படிக்கும் போது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஈழமுரசு பத்திரிகையில் வெளிவந்த ஒரு தொடர் ஞாபகத்துக்கு வந்தது.

புலம்பெயர்ந்த மண்ணுக்குத் தாயகத்தில் இருந்து  அனுப்பப்படும் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், புலம்பெயர் மண்ணில் இருந்து அழைக்கும் ஆண் வர்க்கம் நிகழ்த்திய மோசமான செயற்பாடுகளைத் தோலுரித்துக் காட்டிய உண்மை நிகழ்வுகளின் பதிவு அது.

ஆகவே ஶ்ரீகந்தராசா எழுதிய இந்தக் கதைகள் எங்கோ, யாருக்கோ நடந்தவை தான். அதுவே இவற்றின் யதார்த்த நிலையைக் காட்டுகின்றன.

இவர் ஒரு சட்டத்தரணியாகவும் இருக்கின்ற காரணத்தால் தன்னுடைய அனுபவங்களின் திரட்டுகளாகவும் கொடுத்திருக்கலாம்.

இந்த வேளை நடிகர் மம்முட்டி தான் வழக்கறிஞராக இருந்த போது கண்ட அனுபவங்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

“மூன்றாம் பிறை” என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது,

படித்துப் பாருங்கள்,

மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் நேர் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்முட்டி.

எடுத்த எடுப்பிலேயே “காணமல் போனவள்” என்ற ஒரு கதை கலாச்சார அதிர்ச்சியைப் பதிவு செய்கிறது.

மட்டக்களப்புப் பேச்சுவழக்கை சிறுகதைகளின் உரையாடல்களில் இவர் கையாண்டிருப்பதைப் படிப்பது ஒரு புது அனுபவம் எனக்கு.

“எனக்காகவா நான்”, “இன்னும் கன்னியாக”, “முதல் உறவு” போன்றவை பெண்களின் மனச்சிக்கல்களை அவர்களின் கோணத்தில் நின்று காட்சிப்படுத்தியிருக்கின்றார்.

முதல் உறவு மிக வித்தியாசமாக எழுதப்பட்ட கதை. அதில் உண்மைக்கும் பொய்க்குமான சமரத்தை வேண்டிய மனதின் போராட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்.

பெற்ற மனம் கதையில் சகோதர யுத்தத்தால் எழும் இழப்பை ஒரு அதிர்ச்சியான கதைப்போக்கோடு பதிவு செய்திருக்கின்றார்.

திசை தெரியாத பயணம் கதையில் இந்தியப் பேச்சு வழக்கைப் பின்பற்ற முயன்றிருக்கிறார்.

ஒப்பீடு சிறுகதை புலம்பெயர் வாழ்வில் இருப்பவர்களுக்குப் பழக்கப்பட்டது. தாய் நிலத்தில் இருப்போருக்கு ஒரு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுக்கும்.

ஒப்பீடு கதைக்கு எதிர்த் திசையில் நான் வரமாட்டேன் அமைகின்றது. அது முழுக்க முழுக்க ஈழத்து வாழ்வியலின் இன்றைய நிலையைப் பிரதிபலிப்பது.

என் வாழ்வில் முதன்முறையாக மட்டக்களப்பு மண்ணுக்குக் கடந்த வருட இறுதியில் போயிருந்தேன். உண்மையிலேயே அந்த உலகத்தின் வெள்ளாந்தி மனிதர்கள், சூழல் இவற்றையெல்லாம் பார்த்த போது ஏதோ புதியதொரு உலகத்தில் வந்தது போன்ற பிரமை.

இவர் தன்னுடைய கதைகளில் இன்னும் ஆழமாக அந்த மண்ணின் மைந்தர்களைப் பற்றிப் பேச வேண்டும், அதற்குரிய மண்வாசனை எழுத்தை இன்னும் மாறாமல் வைத்திருக்கிறார் என்பதை நான் வரமாட்டேன் வழியாக உணர்ந்தேன்.

ஆரம்பத்தில் நான் குறிப்பட்ட ஈழமுரசு அனுபவத் தொடரின் சாட்சியம் போல அமைகின்றது மறுவாழ்வா என்ற கதை.

இதையெல்லாம் படிக்கும் போது ஒருபக்கம் எமது இனம் தன் அடையாளத்துக்காகப் போராடி அழிந்தது போக, இன்னொரு பக்கம் புலம்பெயர் சூழலின் தாக்கங்களால் சிதைக்கப்பட்ட பெண்களின் அவல நிலையை நாம் யதார்த்த நிலையில் நின்று வருந்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவற்றையெல்லாம் படித்துக் கொண்டு போகும் போது இன்ப அதிர்ச்சியாக ஒரு பதின்ம வயது இளவலின் பாஸ்போர்ட் சைஸ் படம் அது வேறு யாருமல்ல ஶ்ரீ அண்ணா தான். அவருடைய பதினைந்தாவது வயதில் எழுதிய கதை “ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்”

ஒரு திரைப்படத்தைப் பார்த்த பாதிப்பில் எழுதப்பட்ட அந்தக் கதையைப் படித்த போது முன்னர் படித்த தற்கால எழுத்து நடையில் இருந்து விலகிய ஒரு புத்தாக்கமாக, வித்தியாசமான எழுத்து நடையும் வாசிப்பு அனுபவமாகவும் கிடைக்கிறது.

ஈழத்தமிழினத்தின் புலமைச் சொத்துகளில் ஒருவரான மயிலங்கூடலூர் பி.நடராசன் அவரின் மாணவராக இருந்தவர் என்ற செய்தியையும், அவரே இவரின் தமிழ்ப்புலமையை இளம்பிராயத்தில் கண்டு “உயிர்ப்பு” இதழாசிரியராகவும் அமர்த்திக் கொண்டதையும் பார்க்கும் போது அவரின் தீர்க்க சிந்தனை இன்று யதார்த்தமாகியிருக்கிறது.

பாடும் மீன் சு.சிறீகந்தராசா அவர்களின் சிறுகதை, கட்டுரைப் பகிர்வுகள் மட்டக்களப்பு மண்ணை இன்னும் ஆழமாகத் தோண்டி எடுத்து எமக்கு அவர் தரவேண்டும். கூடவே அவருடைய அச்சுப் பெறாத கட்டுரைகள் நூலுருவில் வரவேண்டும் என்றும் இந்த வேளை வேண்டிக் கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கின்றேன்.

09.06.2024 இல் சிட்னியில் நிகழ்ந்த பாடும் மீன் சு.சிறீகந்தராசா அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வில் பகிர்ந்தது.

கானா பிரபா 


Posted by கானா பிரபா at 9:12 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, June 08, 2024

ஈழத்துப் புலமைசார் ஆளுமை திரு.கதிர் பாலசுந்தரம் நினைவேந்தல்

ஈழத்துப் புலமைசார் ஆளுமை

திரு.கதிர் பாலசுந்தரம் நினைவேந்தல்

கடந்த ஜூன் மாதம் 1 ஆம் திகதி மறைந்த யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பொற்கால ஓய்வு நிலை அதிபரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களது நினைவேந்தலை ஒருங்கமைத்து அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலைகளில் பகிர்ந்திருந்தேன்.

இந்தப் பகிர்வில் கனடாவில் இருந்து "சிந்தனைப்பூக்கள்" திரு.எஸ்.பத்மநாதன், மற்றும் மெல்பர்னில் இருந்து எழுத்தாளர் லெ.முருகபூபதி ஆகியோர் தமது பகிர்வுகளை வழங்கிருந்தார்கள்.

அந்த ஒலிப் பகிர்வைக் கேட்க

https://www.youtube.com/watch?v=PPi05Hk8oks

Posted by கானா பிரபா at 12:12 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, May 28, 2024

ஊழி திரைப்பட இயக்குநர் ரஞ்சித் ஜோசப் உடன் உரையாடல்

 


https://open.spotify.com/episode/37AoxePDE1eX7D78sKpXqO

போருக்குப் பின்னதான ஈழச் சமூகம் இந்த நிமிஷம் வரை முகம் கொடுக்கின்ற காணாமல் போதல், சுவீகரிப்புகள், போதைப் பொருள் கலாசாரம் என்று ஈழத்தமிழ் சமூகம் முகம் கொடுக்கின்ற முக்கியமான அபாயங்களை முன்வைத்து அவற்றின் கூறுகளோடு இணத்துக் கதை பண்ணுவது என்பது ஒரு மிகப் பெரிய சவால்.
ஊழி இதைத்தான் விரிவாகவும் பரந்து பட்டும் பேசுகிறது. இது ஈழத்தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த அனுபவங்களின் நீட்சி எனலாம்.
இதற்கான உங்களின் உழைப்பைப் பகிர்ந்து கொள்ளுங்களேன். 
தொடர்ந்து ஈழ சினிமாவைப் பார்க்கும் அனுபவத்தில் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரங்கள் எல்லாமே புதுமுகங்களாகத் தெரிகிறது, ஆனால் அவர்கள் எல்லோருமே அந்தத் திரைமொழி அனுபவத்தை மிக இயல்பாகக் கடத்துகிறார்கள். இது எப்படிச் சாத்தியமாயிற்று.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒரு non-linear நுட்பத்தில் படத்தொகுப்பு அமைந்திருக்கிறது. ஈழ சினிமா ரசிகருக்கு இதை எளிதாகக் கடத்தி விட முடியும் என்று நினைக்கிறீர்களா?
ஊழி படத்தின் இன்னொரு முக்கிய பலம், நிலம் பேசும் மொழி.
ஈழத்துப் படைப்புகளில் இவ்வளவு நுட்பமாக மண்ணோடும் கடலோடும் படைப்பை இணைத்துப் பயணித்த அனுபவம் கிடைத்ததில்லை. இதை நீங்கள் தீர்மானித்தது தானா?
சினம் கொள் படம் ஒரு போராளியின் மீள்வரவில் நிகழும் அனுபவங்களாக அமையும். அதன் நீட்சியாக அமுதன் என்ற பாத்திரம் அமைந்து விட்டதோ?
மெய்யான வரலாற்றைப் பகிரவேண்டும் என்று சொல்லும் ஆசிரியர் வில்வரத்தினம், புதுவையார், சேரன் போன்றோரை உதாரணப்படுத்தி
நம் மெய்யான வரலாற்றைக் கொடுக்க வேண்டும் என்று போகிற போக்கில் தீபச்செல்வன் கொடுத்த ஆழமான வசனங்களை இயக்குநர் என்ற வகையில் எவ்வளவு தூரம் சுதந்திரம் கொடுத்திருந்தீர்கள்?
அந்தப் புத்த பிக்குக் குறியீட்டைப் பார்த்த பின்னர் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலச் சுவீகரிப்பைத் தேடிப் பார்ப்போரும் உண்டு. 
இது குறித்து?
இசையமைப்பாளரின் பணியை நாம் காது கொடுத்தோம். அவர் என்ன சொன்னார்?
 நாசரின் குரலோடு தான் தொடங்குகிறது. கமல்ஹாசனுக்கு நன்றி பகிர்ந்ததன் பின்னால் ஏதும் செய்தி உண்டா?
படப்பிடிப்பு நடக்கும் சமயம் கிடைத்த முட்டுக்கட்டை?
நடிகர்கள் தம் நடிப்பை வழங்கும் போது நீங்கள் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி கிடைத்த அனுபவம்?
கானா பிரபா


Posted by கானா பிரபா at 12:55 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, April 28, 2024

கவிஞர் அம்பி விண்ணேகினார் 🙏


ஈழத்தின் மூத்த படைப்பாளி அம்பி ஐயா சிட்னியில் தனது 95 வது வயதில் மீள உறக்கத்துக்குச் சென்று விட்டார்.

ஈழத்தில் நாம் படித்த காலத்தில் பாப்பா பாடல்கள் வழியே அறிமுகமாகியவர் எழுத்துப் பணியில் நீண்டதொரு பரந்து விரிந்த செயற்பாட்டைச் செய்து இன்றும் அதே துடிப்போடு இயங்கியவர்.

அவரின் 90 வது பிறந்த நாளில் சிட்னித் தமிழர்கள் கூடி விழா எடுத்துக் கெளரவித்தோம்.

கவிஞர் அம்பியை 2020 இல் அவரின் வீட்டில் சந்தித்தோம். அப்போது

எழுத்தாளர் லெ.முருகபூபதி, கவிஞர் அம்பியோடு நிகழ்த்திய உரையாடலின் சிறு பகுதியோடு, படங்களையும் இத்தால் பகிர்கிறேன்.

https://www.youtube.com/watch?v=GuBpHpeI61Y

கவிஞர் அம்பி ஐயாவின் பிரிவில் எழுத்தாளர் திரு லெ.முருகபூபதி எழுதிய வாழ்க்கைக் குறிப்பை இங்கே பகிர்கிறேன். கவிஞர் அம்பி வாழ்வும் பணிகளும் என்ற நூலை லெ.முருகபூபதி அவர்கள் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

📚

இராமலிங்கம் அம்பிகைபாகர் என்ற இயற்பெயரைக்கொண்ட கவிஞர் அம்பி அவர்கள் இலங்கையில்  வடபுலத்தில் நாவற்குழியில் 17-02-1929 ஆம் திகதி  பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் பின்னர் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த அவர் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியராக 1950 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரையில் யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பணியாற்றினார்.

இக்கல்லூரி தனது மகத்தான சேவையில்  இருநூறு ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.   சுமார் 18 ஆண்டுகள் வரையில் இங்கு பணியாற்றிய அம்பி அவர்கள், அதன்பின்னர் கிழக்கிற்கு இடமாற்றம் பெற்றார்.  அங்கு முதலில் ஓட்டமாவடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் அதன்பிறகு, மட்டக்களப்பு அரச கல்லூரியிலும் சேவையாற்றினார்.

கொழும்பு கல்வி வெளியீட்டுத்திணைக்களத்தில் 1969 இல் கணித பாடநூல் எழுத்தாளராகவும்  பணியாற்றிய அம்பி,  சனத்தொகை பயிற்சிக்கல்விக்கான புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா  சென்றார். அங்கு  University of Connecticut  (Institute of public service)  இல் பயிற்சியை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பி, மீண்டும் கொழும்பில் சனத்தொகை கல்விப் பாடத்திட்ட அதிகாரியாக பணியாற்றினார். அதன் பின்னர், 1981 இல் பாப்புவா நியூகினி நாட்டிற்கு பணிநிமித்தம் சென்று  அங்கு தொலைக்கல்வி கல்லுரியில் கணிதத்துறை தலைவராக பணியாற்றினார்.   அங்கிருந்து,  1992 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தார்.

இளம் பராயத்திலிருந்தே கவிதை, கவிதை நாடகம்,  சிறுகதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு முதலான துறைகளில் அவர் அளப்பரிய பணிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் தமிழ்கூறும் நல்லுலகில் கவிஞர் என்றே அறியப்பட்டவர்.

அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வராகப்பதவி ஏற்றதையடுத்து தமிழ்நாட்டில் 1968 இல்  நடந்த இரண்டாவது தமிழாரய்ச்சி மாநாட்டிற்காக நடைபெற்ற அகில உலக கவிதைப்போட்டியில் பங்கேற்ற கவிஞர் அம்பி, அதில் வெற்றியீட்டி தங்கப்பதக்கம் பெற்றவர். இதனை அம்பி அவர்களுக்கு, அச்சமயம் தமிழக அரசில் அங்கம் வகித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரசிகமணி கனகசெந்திநாதன் ஈழத்து பேனா மன்னர்கள் என்ற தலைப்பில் தொடர் எழுதியபோது அம்பியின் எழுத்துலகம் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளார். இயல்பிலேயே இனிய பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ள அம்பி நகைச்சுவையாகவும் அங்கதம் தொனிக்கவும் பேசவல்லவர்.

இதுவரையில் 15 இற்கும் மேற்பட்ட  நூல்களை எழுதியிருக்கும் அம்பி அவர்கள், இலங்கையின் தமிழ்மருத்துவத்துறை முன்னோடியான அமெரிக்க பாதிரியார் மருத்துவகலாநிதி சாமுவேல் கிறீன் அவர்களைப்பற்றி விரிவான ஆய்வு நூலை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.

அம்பி, அத்துடன் நில்லாமல் குறிப்பிட்ட மருத்துவ முன்னோடிக்கு இலங்கையில் தபால் தலை வெளியிடுவதற்கும் முயற்சித்து அதில் சாதனை புரிந்தார். அம்பியின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு குறிப்பிட்ட தபால் தலையை வெளியிட்டது. 

இந்த மதிப்பிற்குரிய செயலைப்புரிந்தமைக்காக இலங்கையில் அமெரிக்க தூதுவராலயம் அம்பி அவர்களை அழைத்து கௌரவித்து பாராட்டியது. 

சாமுவேல் கிறீன் அவர்களின் கல்லறை அமெரிக்காவில் மசாசூசெட் மாநிலத்தில் கிறீன் அவர்கள் பிறந்த ஊரான வூட்சரில் அமைந்துள்ளது. அவ்விடத்திற்கு இரண்டு தடவைகள் நேரில்சென்று மலரஞ்சலி செலுத்தியவர் அம்பி அவர்கள் என்பதும் முக்கிய தகவல்.

இலங்கையில் இவரிடம் கற்ற பல மாணவர்கள் பிற்காலத்தில் இவரது தூண்டுதலாலும் ஊக்குவிப்பினாலும் எழுத்தாளர்களாக அறிஞர்களாக, கவிஞர்களாக உருவாகியிருக்கிறார்கள். கவிதைத்துறையில் இவரது ஆற்றலை வியந்து தமிழக இலக்கிய இதழான சுபமங்களா இவரை ஈழத்தின் கவிமணி என்று புகழாரம் சூட்டியுள்ளது.

பாப்புவா நியூகினியிலும் அவுஸ்திரேலியாவிலும் குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுவர் இலக்கிய வரிசையில் சில கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். அத்துடன் அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழ்மொழியை ஒரு பாடமாகப்பயில தமிழ் மாணவர்கள் முன்வந்தபோது அவர்களின் தேவைகருதி உருவாக்கப்பட்ட தமிழ்ப்பாட நூலாக்கக்குழுவில் பிரதம ஆலோசகராக பணியாற்றி இங்கு வாழும் தமிழ்க்குழந்தைகளின் தமிழ் அறிவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு தொடர்ச்சியாகத் தொண்டாற்றினார்.

அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா முதலான நாடுகளிலிருந்து தமிழர்கள் புலம்பெயர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளின் நாவில் தமிழ் வாழவேண்டும் என்பதற்காக இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் தமிழைக்கற்பிக்க அமைக்கப்பட்ட பாடநூலாக்கக்குழுவில் கவிஞர் அம்பியின் பணியானது விதந்துபோற்றுதலுக்குரியது.

தமிழ்சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள், விழாக்கள்  உட்பட பல கவியரங்குகளிலும் அம்பி அவர்கள் புகலிட நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழை மறந்துவிடக்கூடாது என்ற தொனிப்பொருளிலேயே தொடர்ச்சியாக குரல் எழுப்பிவந்துள்ளார். அத்துடன் இதுதொடர்பாக பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். தேமதுர தமிழ் ஓசை உலகமெலாம் பரவச்செய்யவேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க தமிழின் சிறப்பை ஏனைய மொழிகள் அறிந்தவர்களுக்காக ஆங்கிலத்திலும் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான அம்பி அவர்கள் அந்த அமைப்பின் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பதுடன், இந்த அமைப்பின் வருடாந்த எழுத்தாளர் விழா ஒன்று கூடலில் நடைபெறும் சிறுவர் அரங்கு மற்றும் மாணவர் அரங்கு முதலானவற்றில் பங்குபற்றும் இளம் தலைமுறையினருக்கு தான் படைத்த சிறுவர் இலக்கிய நூல்களைப்பரிசளித்து வருகின்றார்.

எழுத்துலகில்

தினகரன் வாரமஞ்சரியில்   வெளிவந்த இலட்சியச் சோடி என்ற சிறுகதையின் மூலம் இலக்கிய உலகில் அறிமுகமானஅம்பியின்  படைப்புகள் :

கிறீனின் அடிச்சுவடு 

அம்பி பாடல் (சிறுவர் பாடல்கள்)

வேதாளம் சொன்ன கதை (மேடை நாடகம்)

கொஞ்சும் தமிழ் (சிறுவர் பாடல்கள்)

அந்தச் சிரிப்பு

யாதும் ஊரே; ஒரு யாத்திரை

அம்பி கவிதைகள் 

மருத்துவத் தமிழ் முன்னோடி 

Ambi's Lingering Memories (Poetry, பப்புவா நியூ கினி

Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green 

உலகளாவிய தமிழர் 

A String of Pearls

பாலர் பைந்தமிழ்

அம்பியின்  நாடகங்கள்

அம்பியின் வேதாளம் சொன்ன கதை கவிதை நாடகம், இலங்கையில் பிரபல நாடக இயக்குநர் சஹேர் ஹமீட் நெறியாள்கையிலும், யாழ்பாடி என்ற கவிதை நாடகம் அவுஸ்திரேலியாவில் அண்ணாவியார் இளையபத்மநாதனின்  அண்ணாவியத்திலும் அரங்கேறியுள்ளன. அம்பியின் பவளவிழாவை முன்னிட்டு அவரது வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும்   விரிவான ஆய்வு நூலை எழுத்தாளர் லெ. முருகபூபதி  எழுதியுள்ளார். இந்நூல்   2003 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில்  வெளியாகியுள்ளது.

தமிழில் விஞ்ஞானக்கட்டுரைகளை இலங்கையில் எழுதிய முன்னோடி கவிஞர் அம்பி அவர்கள்  என்று பிரபல இலக்கிய விமர்சகர் அம்பியைப்பற்றி  இலங்கையில் வெளியாகும் The Island பத்திரிகையில் எழுதியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பி இதுவரையில் பெற்றுள்ள விருதுகள்:

1968 உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது (தங்கப்பதக்கம்)

1993 இலங்கை இந்து கலாசார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’

1994 கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது.

1997 அவுஸ்திரேலியாவில்  மெல்பன் ‘நம்மவர்’ விருது.

1998 கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது (தங்கப்பதக்கம்)

2004 அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது

இலங்கையில் மல்லிகை, ஞானம் ஆகிய இலக்கிய இதழ்கள்  முகப்பில் அம்பியின் உருவப்படத்துடன் அவரது பணியை பாராட்டி கட்டுரை எழுதி கௌரவித்துள்ளன.

தற்பொழுது அம்பி, அவுஸ்திரேலியா சிட்னியில் தமது மனைவி, மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வசிக்கின்றார்.

" புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கிலே.... சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வம் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் " என்று நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார் மகாகவி பாரதியார்.

காலம் உருண்டோடியது. தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் புலம்பெயர்ந்தனர். 

பாரதியின் தமிழ்க் கவிதை இலக்கிய மரபில் தோன்றியிருக்கும் கவிஞர் அம்பி அவர்கள், உலகெங்கும் புலம்பெயர்ந்துசென்று வாழும் தமிழர்கள் தமது தாய்மொழியை கைவிட்டுவிடலாகாது என அறைகூவல் விடுத்துள்ளார்.

அம்பி கவிதைகள் நூலிலும் பல இதழ்கள், இணையத்தளங்களிலும் வெளியாகியிருக்கும் பிரசித்திபெற்ற அக்கவிதையை இங்கு காணலாம்.

ஓடிடும் தமிழா நில், நீ ஒரு கணம் மனதைத்தட்டு

வீடுநின்னூருள்  சொந்தம், விளைநிலம் நாடு விட்டாய்

தேடியதெல்லாம் விட்டுத்திசைபல செல்லும் வேளை

பாடிய தமிழை மட்டும் பாதையில் விட்டிடாதே

ஓர்தலைமுறையின் பின்னே உன்னடி உறவென்றேனும்

ஊரிலே அறியாப்பிள்ளை உலகரங்கினில் யாரோ

தாரணிமீதில் நானோர் தமிழனென்றுறுதி செய்யின்

ஊர்பெயர் உடைகள் அல்ல ஒண்டமிழ் மொழியே சாட்சி

சாட்சியாய் அமையுஞ் சொந்தச் செந்தமிழ் மொழியே முன்னோர்

ஈட்டிய செல்வம் எங்கள் இனவழிச்சீட்டாம் 

ஏந்த நாட்டிலே வாழ்ந்தபோதும் நடைமுறைவாழ்வில் என்றும்

வீட்டிலே தமிழைப்பேணும் விதிசெயல் கடமை ஐய!

வீட்டிலே தமிழைப்பேசும் விதி செயல் கடமை ஆமாம்

பாட்டனாய் வந்து பேரன் பரம்பரை திரிதல் கண்டே

ஈட்டிய செல்வம் போச்சே,  இனவழி போச்சே என்று

வாட்டு நெஞ்சுணர்வை வெல்ல வழி  பிறிதொன்றுமில்லை.

📚

கவிஞர் அம்பி ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

கானா பிரபா

28.04.2024


Posted by கானா பிரபா at 12:23 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ▼  2024 (25)
    • ▼  December 2024 (3)
      • மகாலிங்கம் பத்மநாபன் : வன்னி மண்ணின் மூன்று கிராமங...
      • ஞானசேகரம் மாஸ்ரர்
      • வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 19 ஆண்டுகள் ❤️ ✍🏻
    • ►  November 2024 (1)
      • ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி”
    • ►  October 2024 (1)
      • மெய்யழகனும் மெய்யுலகமும்
    • ►  September 2024 (1)
      • பசுவும் பரமேஸ்வரியும் ❤️🐄
    • ►  August 2024 (1)
      • கடுகண்ணாவ – ஒரு யாத்ரக் குறிப்பு
    • ►  July 2024 (4)
      • கலகலப்பு தீசன் கதைக்கிறார் ❤️😁
      • திருமதி.பராசக்தி சுந்தரலிங்கம் 🙏
      • I Am: Celine Dion
      • சிட்னியில் பரமேசுவரன் இரங்கநாதன் இரு நூல்களின் வெள...
    • ►  June 2024 (3)
      • தன்வியின் பிறந்த நாள் (சிறார் கதைகள்) ✍🏻 யூமா வாச...
      • இன்னும் கன்னியாக - பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராசாவி...
      • ஈழத்துப் புலமைசார் ஆளுமை திரு.கதிர் பாலசுந்தரம் ந...
    • ►  May 2024 (1)
      • ஊழி திரைப்பட இயக்குநர் ரஞ்சித் ஜோசப் உடன் உரையாடல்
    • ►  April 2024 (2)
      • கவிஞர் அம்பி விண்ணேகினார் 🙏
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes