skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Wednesday, December 05, 2007

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பதிவுகளையாவது "மடத்துவாசல் பிள்ளையாரடி" தளத்தில் இட்டு வருகின்றேன். நான் வலை பதிய வந்த காலத்து நினைவுகளைக் கடந்த ஆண்டு நிறைவுப் பதிவில் நினைவு மீட்டியிருந்தேன்.

நான் பார்த்து ரசித்தவைகளோ, கேட்டவைகளோ, பாதித்தவைகளோ அனுபவப்பதிவுகளாகவும், அதே நேரம் ஈழத்துப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் ஈழ வரலாற்று விழுமியங்களை இயன்றவரை ஒலி மற்றும் எழுத்து ஆவணப்படுத்தலாகவும் இப்பதிவுகளை இன்று வரை எழுதி வருகின்றேன். எனது பதிவுலக முதல் ஆண்டில் நிறையவே எனது வாழ்வியல் அனுபவம் சார்ந்த பதிவுகள் வந்த அதே வேளை இரண்டாவது ஆண்டில் படைப்பாளிகளை, கலைஞர்களை ஆவணப்படுத்தும் பதிவுகள் அதிகம் இடம்பிடித்துக் கொண்டன. 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போன போது எழுத்தாளர் வரதரைச் சந்தித்து அவரை ஒலி ஆவணப் பேட்டி காண இணக்க வைத்து விட்டால் நாடு தலைகீழாய்ப் போய் அந்தக் காரியம் கைகூடாமல் தள்ளிப் போய் கடந்த ஆண்டு டிசம்பரில் சிக்கன் குன்யாவால் வரதர் அவர்கள் நிரந்தரமாகவே தொடர்பற்றுப் போனது தான் என் இரண்டாம் ஆண்டு பதிவுகளுக்கு முதல் பதிவான சோகமும் ஆயிற்று.

துரித கதியில் காலம் தாழ்த்தாது ஆவணப்பணியை என்னால் முடிந்த அளவு திரட்ட எண்ணி, திரு.கே.எஸ்.பாலசந்திரன், திரு.தாஸீசியஸ், திரு.பாலமனோகரன், பேராசிரியர் சிவத்தம்பி என்று இயன்றவரை நம்மவர்களைக் குறித்த விபரங்களைப் பதிவாக்கினேன். கூடவே மறைந்த திரு. எருவில் மூர்த்தி, கல்லடி வேலுப்பிள்ளை, சுவாமி விபுலாநந்தர், எல்.வைத்யநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்றோர் குறித்தும் பதிவுகளை ஆக்கி வைத்தேன்.

நல்லைக்கந்தன் ஆலயத்தின் 25 நாள் மகோற்சவ காலத்தில் 25 நாளும் பதிவுகளை இட்டேன். கூடவே என் நனைவிடை தோய்தலோடு, நல்ல மலையாள சினிமாக்களும் பட்டியலில் இடம் பிடித்தது.

தினக்குரல், வீரகேசரியின் மெட்ரோ பத்திரிகை, ஈழத்தின் புது வரவு "இருக்கிறம்" சஞ்சிகை, ஈழமுரசு, ஒரு பேப்பர், உதயசூரியன் ஆகிய பத்திரிகைகளில் இப்பதிவுகள் இடம்பிடித்ததோடு ஈழத்தின் நெடியதொரு பாரம்பரியமிக்க "மல்லிகை" சஞ்சிகையில் திரு. மேமன் கவி எனது வலைப்பதிவு குறித்த அவர் கருத்தும் யாழ்ப்பாணத்து வாசிகசாலைகள் என்ற ஆக்கமும் வெளிவந்திருந்தது. அத்தோடு கனடாவில் இருந்து ஜெப்ரி வழங்கும் "கலசம்" என்ற கணினி நிகழ்ச்சியிலும் என் வலைப்பதிவு குறித்த அறிமுகத்தையும் வழங்கியிருந்தார். இவற்றையெல்லாம் பெருமையாகச் சொல்வதை விட என் எழுத்துக்கான அங்கீகாரமாகச் சொல்லிப் பெருமிதமடைகின்றேன். "இருக்கிறம்" சஞ்சிகை தொடர்ந்தும் என் படைப்புக்களை வெளியிட்டு உற்சாகம் தருகின்றது. ஆனால் என்னுடன் எந்த விதமான தொடர்பாடலும் இன்றி சில தளங்களில் ( ஐரோப்பாவில் இயங்கும் ஒரு தமிழ் சங்கம் உட்பட) இப்பதிவுகளை தமது சொந்தப் பதிவாக தமது தளத்தில் இட்டிருப்பது குறித்து மிகவும் கவலையடைகின்றேன். கட்டற்ற வலைப்பதிவில் சங்கடங்களில் இதுவும் ஒன்று.

என் பதிவுகளில் ஒன்றான "அண்ணை றைற்" என்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் தனி நடிப்பு ஒலி மற்றும் எழுத்துப் பதிவு தான் அதிகம் பார்க்கப்பட்ட பின்னூட்டப்பட்ட பதிவு. அத்துடன் "அண்ணை றைற்" நாடகம் உட்பட்ட தனி நடிப்பு நாடகங்கள் இந்த ஆண்டு முதன் முதலில் இறுவட்டாகவும் வந்தது ரசிகனாக எனக்கு உரிமையோடு உவப்பை அளிக்கின்றது.


மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்ந்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)
தற்போது தனியாக ஒரு தளமாக கானா பிரபா பக்கங்கள் என்ற திரட்டியையும் ஆரம்பித்திருக்கின்றேன்.

இன்றுவரை என் மனதின் ஓரமாய் வலிக்கும் இழப்பு , கடந்த மாதம் விமானக் குண்டு வீச்சினால் வீரச்சாவடைந்த போராளி மிகுதனின் இழப்பு. ஓராண்டுக்கும் மேலாக என் வலைப்பதிவின் வாசகனாக இருந்து அடிக்கடி கருத்துக்களையும் விமர்சனங்களையும் தந்தவன் சொல்லாமல் போய் விட்டான். மிகுதன் என்ற போராளி இறந்ததாக செய்தி வந்ததும் அவனுக்கு மின்னஞ்சல் போட்டு சுகம் விசாரித்தேன், அவனா என்று. இன்று வரை எனக்குப் பதில் இல்லை. வெளியே சிரித்து உள்ளுக்குள் அழும் வேஷதாரி வாழ்க்கை தான் நமக்கு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வலையுலக அரசியல், எதை எழுத வேண்டும் எழுதக் கூடாது, எத்தனை தரம் பின்னூட்ட வேண்டும் என்று கட்டளை போடும் வலையுலக நாட்டாமைகளையும், புறங்கையால் விலக்கி விட்டு என்னால் முடிந்த அளவுக்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எழுத எனக்கு மனதில் உறுதி வேண்டி விடைபெறுகின்றேன். பின்னூட்டல் மூலம் இதுவரை என்னுடன் பயணித்த/பயணிக்கின்ற உறவுகளுக்கு என் நேசம் கலந்த நன்றிகள்.


2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்:
வலைப்பதிவில் ஒரு வருஷம்

2007 ஆம் ஆண்டில் நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு இது

வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது

ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது.









வரதரின் படைப்புலகம்

வரதர் என்ற தி.ச.வரதராசனின் படைப்புலகப் பணியில் அவரின் அச்சுவாகனமேறிய படைப்புகளை அன்னாரின் நினைவுப் படையலாக வழங்கவேண்டும் என்ற எண்ணம் என்னுள் கருக்கட்டியிருந்தது. இந்தப் பட்டியலில் இடம் பெற்ற அவர்தம் படைப்புக்களை முன்னர் வாசித்த பலருக்கு இதுவொரு நினைவு மீட்டலாகும் அதே சமயம் வரதரின் எழுத்துலகப் பங்களிப்பின் ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாயும் கூட இது அமையும்.








மாட்டுவண்டிச் சவாரிகள்...!

மாட்டுக்காரர் சகிதம் வெறுமையாக ஒரு மாட்டு வண்டி தாவடி நோக்கிப் போகிறது. குதூகலத்தோடு என் காற்சட்டையை மேலே இழுத்துவிட்டு, மாட்டு வண்டியின் ஓட்டதோடு என்னைத் தயார்படுத்தி நிதானமாகக் கெந்தியவாறே பின் பக்கமாக ஏறி அந்த மாட்டுவாண்டியின் ஓரமாகப் போய் இருக்கின்றேன். என்னைக் கடைக்கண்ணால் பார்த்து ஒரு முறுவலை நழுவவிட்டவாறே மாட்டுக்காரர் தன் வாகனத்திற்கு வழி காட்டுகின்றார். ஏதோ பெரிதாகச் சாதித்த களிப்பில் வண்டியின் கழியொன்றைப் பற்றியவாறே ஆடி அசைந்து செல்லும் மாட்டு வண்டியின் பயணத்தை அனுபவிக்கின்றேன்.


பாடி ஓய்ந்த பாடுமீன் ஒன்று

எருவில் மூர்த்தி" என்று திருத்திய அப்பெண் குரல் , நான் அதுவரை அறியாத அக்கவிஞரின் சிறப்பையும் சொல்லிச் சிலாகிக்கின்றார். தவற்றுக்கான மன்னிப்பைக் கேட்டுக் கொண்டே "முடிந்தால் எருவில் மூர்த்தியின் தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா?" என்று நான் கேட்கவும் அந்த நேயர் தருகின்றார். நவம்பர் 17 ஆம் திகதி 2004 ஆம் ஆண்டு முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் எருவில் மூர்த்தியை வான் அலைகளில் சந்திக்கின்றேன் இப்படி.







யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.













நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்

ஈழத்தின் நாடக, திரைப்படக்கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களைப் பற்றிய எனது பதிவை நீண்ட நாட்களாகத் தரவேண்டும் என்று முயற்சி யெடுத்திருந்தேன். அது இன்றுதான் கை கூடியிருக்கின்றது. 80 களில் நான் இணுவில் அமெரிக்கன் மிஷனில் ஆரம்பக் கல்வியைக் கற்கும் காலகட்டத்தில், காலை என் பாடசாலை நோக்கிய பயணத்தில் அடிக்கடி வருவது பாலச்சந்திரன் அண்ணையும் ஒறேஞ் நிற பஜாஜ் ஸ்கூட்டரும் தான்.



காற்றின் மொழி.....!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை





"அண்ணை றைற்"

தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றிய சிறு அறிமுகப்பதிவாக முன்னர் ஒரு பதிவைத் தந்திருந்தேன். அதில் குறிப்பிட்டது போன்று அவரின் ஒவ்வொரு நாடகத்தின் ஒலி வடிவத்தையும் தரவேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தப் பதிவு பிள்ளையார் சுழி போட்டிருக்கின்றது. தனியே ஒலி வடிவத்தையும் தராது அதை எழுத்துப் பிரதியாக்கியும் தருகின்றேன்.




மனசினக்கரே - முதுமையின் பயணம்

தன் காதலுக்காக 52 வருஷங்களுக்கு முன்னர் பெற்றோரை உதறிவிட்டு எங்கோ போய் , மீண்டும் பழைய ஊருக்கு வந்து எல்லா இடங்களையும் பார்த்துத் தன் நினைவலைகளை மீட்டுக் கனத்த இதயத்தோடு திரேசாக் கிழவி, ரெஜியிடம் சொல்லுவார் இப்படி,
"எங்களின் அப்பா அம்மாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோமோ, அதுதான் எங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தருவார்கள்."
அந்த வசனத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.
எங்கட சமுதாயத்தைப் பொறுத்தவரை அண்ணன் ஒரு நாட்டில், அக்கா இன்னொரு நாட்டில, தங்கச்சி வேறோர் இடத்தில.



கல்லடி வேலரின் வாழ்வில்...!

ஆசுகவி என்னும் பட்டத்திற்கு உரியவரான இவர் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரை நடை வசனகர்த்தா.அஞ்சாமை மிக்க பத்திரிகையாளர். சிறந்த சரித்திர ஆய்வாளர். உயர்ந்த சைவத்தொண்டர். ஈழத்தில் மட்டுமல்ல இந்தியா, மலேயா போன்ற தேசத்துப் பெரியார்களாலும் " வித்தகர்" எனப் பாராட்ட "கல்லடி வேலரின் வாழ்விலே" இடம்பெற்ற சில நிகழ்வுகள்.











மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்

ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.



யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு நினைவில்

போன வருஷம் 2006 தமிழ்ப் புதுவருசம் பிறக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில். யுத்த நிறுத்தம் குற்றுயிராக இருந்த, நெருக்கடி நிலை மெல்ல மெல்லத் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு வருசம் ஆகிய இன்றைய புத்தாண்டுப் பொழுதில் முழுமையாகவே சீர் கெட்ட நிலையில் எம் தேசம். பாதை துண்டிக்கப்பட்டு பாலைவன வாழ்க்கையில் எம்மக்கள்.
கடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் சோகமாகவும் மனசை அப்பிக்கொள்கின்றது.


உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்

பலுங்கு என்றால் ஆங்கிலத்தில் crystal. தற்போது வேகமாக அதிகரித்து வரும் நுகர்வுப் போக்கு, அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் மத்திய தர அல்லது கீழ்த்தட்டு மக்களின் இயல்பு வாழ்வை எப்படிச் சீரழிக்கின்றது என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் சேதி.




எல்.வைத்யநாதன் - ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்

தன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.

அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தான் இருப்பார்.





தாசீசியஸ் பேசுகிறார்...!

ஈழத்து நவீன நாடக வரலாற்றிலே புதிய போக்கினை நிறுவிய நாடக நெறியாளர், ஊடகர் ஏ.சி. தாசீசியஸ் அவர்கட்கு கனடிய இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக்குழு 2006ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்குகின்றது. விருது வழங்கும் நிகழ்வு 03-06-2007 ல் கனடாவில் இடம்பெற்றது. இந்த வேளையில், 'தமிழ்நாதம்" இணையத் தளத்திற்காகச் தாசீசியஸ் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வியின் ஒலி மற்றும் எழுத்து வடிவம் கொண்ட பதிவு.











யாழ்ப்பாணத்துச் சமையல்

குளித்து முடித்துக் குசினிக்குள் போகின்றேன், சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன. சோற்றுடன் கொஞ்சமாக மட்டும் இறாலைப் போட்டுச் சாப்பிடுகின்றேன்.

"ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது" இது என் அம்மா.

"என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை".






விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்

உங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை? "
என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
"விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்" என்று.வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.


விபுலாநந்த விலாசம்

ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அடிகளாரின் பன்முகப் பணி குறித்த தொகுப்பு இது.










பாலச்சந்திரன் அண்ணை கதைக்கிறார்..!

கே. எஸ். பாலச்சந்திரனின் “அண்ணை றைற்” முதலான தனிநடிப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு இறுவட்டு (CD) வெளியீட்டை முன்னிட்டு அதனையொட்டிய சிறப்புப் படையலாக, கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள் தயாரித்து வழங்கிய வாத்தியார் வீட்டில் வானொலி நாடகத்தின் ஒரு பகுதியையும், 2005 ஆம் ஆண்டில் அவருடன் நான் கண்ட ஒலிப்பேட்டியையும் தருகின்றேன்.








நிறைவான நல்லூர்ப் பயணம்

ஈழத்தின் நல்லைக் கந்தன் ஆலயத்தின் இருபத்தைந்து நாள் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு நாளும் இடுகையிட்டு அமைந்த வரலாற்று, ஆன்மீக, இசையின்பம் கலந்த பதிவுகளின் தொகுப்பு. நாளாந்த வேலைப்பழுவின் மத்தியில் என்னுடைய சக்திக்கு மீறிய விடயமாக இருந்தாலும் எம்பெருமான் அருளால் கைகூடிய பதிவுகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிய அன்பர்களுக்கும் நன்றியறிதல் என்றும் உண்டு.









நிலக்கிளி" தந்த அ.பாலமனோகரன்

திரு.அ.பாலமனோகரன் அவர்கள் ஈழத்தின் வன்னி மண் தந்த தரமான படைப்பாளிகளில் ஒருவர். ஆக்க இலக்கியம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தன்னுடைய திறமையை விசாலமாக்கிக் கொண்டவர். திரு. பாலமனோகரனின் படைப்புப் பயண அனுபவத்தை ஒலி மற்றும் எழுத்து வடிவில் பகிரும் பதிவு.





பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்

ஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு "முற்றத்து மல்லிகை" என்றும் பின்னர் இப்போது படைக்கும் "ஈழத்து முற்றம்" போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.










தீவாளி வருஷங்கள்....!

தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.





எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார். பேராசிரியரின் பவள விழாவினையொட்டி துறைசார் அறிஞர்களையும் , அவரிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் தயாரித்த ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி, எழுத்து வடிவுடன் கூடிய பதிவாக அமைகின்றது.
Posted by கானா பிரபா at 6:59 PM 52 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, November 23, 2007

எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி

தமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.
ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது பவள விழாவினை அவருக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் நடாத்துகின்றது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைசார் அறிஞர்களையும் , பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி செய்யக் கங்கணம் கட்டியிருந்தேன்.

இந்த வருஷமும் முடியப் போகின்றது ஆனால் எடுத்திருந்த ஒலிப்பகிர்வுகளை முறையாகக் கோர்த்து வெளியிடுவதில் நேரமும் காலமும் பிடிக்கிறதே என்ற கவலை வந்தாலும் முழு மூச்சோடு போனவாரம் இந்தப் படைப்பை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடும் ஒலிப்பெட்டக நிகழ்ச்சியாகச் செய்து முடித்தேன். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானலைகளிலும் அரங்கேறியது. ஆசைக்கு அளவில்லை என்பது போல, இந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சியில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பகிர்வுகளைத் தட்டச்சியும் பாதுகாத்து உங்களுக்கும், எதிர்காலத்துக்கும் தர வேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் இப்பதிவோடு நிறைவேறுகின்றது.

இப்பெருமுயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு அளித்து ஒலிப்பகிர்வை வழாங்கிய கல்விச் சமூகத்திற்கும், ஒலிபரப்ப உதவிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய கி.பி அரவிந்தன் அவர்கட்கும், ஒலிப்பதிவில் உதவிய நண்பருக்கும், உசாத்துணையில் உதவிய பல்வேறு நூல்கள், குறிப்பாக வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்த "கரவையூற்று" என்னும் பேராசிரியர் சிவத்தம்பி குறித்த பல்முக நோக்கு நூலிற்கும் பதிவுக்கான படங்களை உதவிய யூ.எஸ்.தமிழ்ச்சங்க இணையத்துக்கும், சுந்தாவின் "மன ஓசை" நூலிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பதிவினை முழுமையாகவோ பகுதியாகவோ மீள் பிரசுரம் செய்ய விரும்புவோர் தயவு செய்து kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இட்டு உறுதிப்படுத்த வேண்டுகின்றேன்.

ஒலிப்பெட்டகம்

பாகம் 1

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து பிரபல எழுத்தாளர், விமர்சகர், கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து " தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்" குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.



தமிழ் நாதம் ஊடாக Real Player இல் கேட்க

பாகம் 2
பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் , ஏறக்குறைய 2300 ஆண்டு தொன்மை மிக்க தமிழின் வரலாறு பண்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வுப்பணிகளைச் சிலாகின்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்கள். தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவியரில் ஒருவரான திருமதி சுமத்திரி.பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசான் பேராசிரியர் சிவத்தம்பியின் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து கிழக்குப் பல்கலைக்கழத்தில் பேராசிரியரின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் கருத்துரை.



தமிழ் நாதம் ஊடாக Real Player இல் கேட்க

பாகம் 3

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பிக்குள் இருந்த நடிகனையும், நாடகத் தயாரிப்பாளரையும், புதிய நாடக வடிவங்களை ஏற்படுத்த ஏதுகோலாக இருந்த செயற்பாட்டையும் தன் வாழ்வியல் அனுபவத்தினூடே விளக்குகின்றார்.



தமிழ் நாதம் ஊடாக Real Player இல் கேட்க




கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு

பேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.

இவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.

நான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.

ஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.

1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.

இரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.

அதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.

1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் "மனமே சிங்கபாகு" அவர் போன்ற சிறந்த நாடகங்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் "மனமே சிங்கபாகு" போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

இவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

நாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.

கிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.

அந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்பி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.
அவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.


( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).

இதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.

இதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.

இந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.

பிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.

கிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.

இந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.

முக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.

உதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று
"போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்"
என்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.

எனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.
ஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். "எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்" என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். "எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்" என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.

கூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமையான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது "மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்" என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.

டைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
உலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.

அந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.
சுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.

பிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.
யாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.
முக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.

அவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.

ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.
ஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

ஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.

நாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.

சிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அரங்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.



சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களின் பகிர்வு

பேராசிரியர் சிவத்தம்பியின் எழுபத்தைந்தாவது அகவையில் அவர் குறித்துப் பேசுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய ஆய்வுகள் குறித்து 2005 டிசெம்பர் மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், ரொறொண்டோ பல்கலைக் கழக தென்னாசிய ஆய்வு மையமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடாத்தினோம்.
அந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான ஆய்வாளர்கள் பெரும்பகுதியானோர் பங்கேற்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வும் அவரது வகிபாகமும் திசை வழிகளும் என்ற கருத்தரங்கு மூன்று நாள் சென்னைப் பல்கலைக்கழக சஙக இலக்கியத்துறையில் நடைபெற்றது.

தமிழர்களுடைய வரலாறு என்பது 2300 ஆண்டுகளைக் கொண்டது என்பது வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இருக்கலாம்.ஆனால் சான்றுகளின் படி 2300 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ் மொழி பேசும் இனக்குழு இருந்திருக்கின்றது என்பது உறுதி பெற்றிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் 2300 ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தங்களுடைய ஆய்வின் மூலமாக எப்படியெல்லாம் பதிவு செய்திருக்கின்றார் என்பதை உங்களோடு நான் பகிர விரும்புகின்றேன்.

பேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் கி.பி 2000 இற்கு முற்பட்ட காலம் பற்றிய தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ச்சமூகம் என்ரு ஒரு பிரிவாகச் சொல்லலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், அது சார்ந்த ஆய்வுகளையும் இன்னொன்றாகச் சொல்லலாம். மூன்றாவதாக 20 ஆம் நூற்றாண்டு பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்த ஆய்வுகள் என்று சொல்லலாம்.

இந்த முதல் நிலையில் அதாவது தொல்பழங்காலம் பற்றிய, தமிழர்கள் பற்றிய ஆய்வு என்பது மிக முக்கியமான ஒரு ஆய்வாக இருக்கின்றது. குறிப்பாக பிரித்தானியர்கள் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் என்ற நிலப்பகுதியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்திய பொழுது அவர்கள் செயத முக்கிய ஆய்வு கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய ஏஷியாட்டிக் சொசைட்டி என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியவியல் ஆய்வுகளைத் தொடங்கினார்கள். அந்த ஆய்வில் இந்தியா என்ற நாடு சமஸ்கிருத மொழியை முதன்மையாகக் கொண்டதாகவும், ஆரியர் என்ற தேசிய இனத்தைக் கொண்டதாகவும் அவர்களது ஆய்வுகள் நடைபெற்றன. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி பிறகு வில்சன், பேராசிரியர் மாக்ஸ்முல்லர் வரை இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர்கள் எல்லோரும் இந்தோ ஆரியம் சார்ந்த சமஸ்கிருதம் தான் இந்தியாவின் முதன்மையான மொழி என்றும், முதன்மையான பண்பாடு அந்த சமஸ்கிருத மொழியைச் சார்ந்த வேதகாலப் பண்பாடு என்ற வகையில் தான் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

மாறாக 1900 தொடக்கம் 1924 வரை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் பெரியவர்கள், குறிப்பாக சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், பின்னர் உ.வே.சாமிநாத ஐயரும் சேர்ந்து தமிழ்ச் சுவடிகளில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிக அரிய தொல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைப் பதிப்பித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வும் ஐரோப்பியர்களால் இந்தியா என்று கருதப்படும் நிலப்பகுதியில் சமஸ்கிருத மொழிக்கு மாற்றான இன்னொரு மொழிக்குடும்பம் இருக்கிறது என்பதையும், அந்த மொழிக்குடும்பத்துக்கென தொன்மையான பண்பாட்டு மரபுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன என்பதையும் உலகத்துக்குத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய 1965, 75 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் மூலமாக இவ்விதம் இந்தியா என்ற நிலப்பகுதி சமஸ்கிருதம் என்ற மரபுக்கு அமைய ஒருபக்கம் இருக்கும் அதேவேளை மறுபக்கம் திராவிட மரபு எனப்படும் தமிழை முதன்மைப்படுத்திய ஒரு செம்மொழி இலக்கிய மரபும், ஒரு பழமையான தொல்காப்பிய இலக்கண மரபும் இருந்தது என்பதைச் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருந்தது.

அதில் பேராசிரியர் செய்த ஆய்வுகளில் அவரின் கலாநிதிப்பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வில், "பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்" என்ற ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலமாக கிரேக்கச் சமூகத்தில் இருக்கக் கூடிய பண்டை இன மரபுகள் சார்ந்த ஒரு இனக்குழுவைப் போலவே தமிழ் பேசக்கூடிய ஒரு இனக்குழு இங்கிருந்திருக்கிறது எனவும், அதில் ஒரு சமச்சீரற்ற சமூக அமைப்பு செயற்பட்டதென்பதும், அதில் பல்வேறு வகையான மரபுகளைக் கொண்ட கலைஞர்களும், குறிப்பாகப் பாணர்கள், புலவர்கள், விரலியர்கள் இப்படிப் பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களுடைய கலை வடிவங்கள் செழுமையானவையாக நடைமுறையில் இருந்தன என்பதையும் தனது ஆய்வின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இக்காலகட்டத்தில் எழுதிய மேலும் முக்கியமான சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது பண்டைத் தமிழ் சமூகத்தினுடைய திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வாகும். அதைப் போலவே பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் உருவான மேட்டிமை சார்ந்த தன்மை பற்றிய The development of aristocracy means in Tamil Nadu என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை. அதைப்போலவே திணைக்கோட்பாடு சார்ந்து உருவான உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். ஏறக்குறைய அவருடைய கலாநிதி ஆய்வுப் பட்டமும் அதைச் சார்ந்த இந்த சங்க இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்தன, என்னவென்று சொன்னால் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைப் போலவே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் என்பது தொன்மையான நாகரிகம் என்றும் அந்த நாகரிகத்தைச் சார்ந்து ஒரு தொன்மையான கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிடக்கூடிய ஒரு தொல் பழந்தமிழ் இலக்கியமும் உண்டு என்பதற்கான தர்க்கபூர்வமான, அறிவியல்பூர்வமான சான்றுகளை இவருடைய இந்த ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டன என்று சொல்லமுடியும்.

ஏனென்று சொன்னால் இக்காலங்களில் தமிழ் நாட்டைச் சேர்ர்ந்த தமிழ் தேசிய இனத்தை முதன்மைப்படுத்திய பலரும் குறிப்பாக தேவநேயப் பாவாணர், இலக்குவணார், இப்படியான பல பெருந்தகைகளும் இந்தக் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் அறிவியல்பூர்வமான சான்றுகளைத் தந்தார்களா என்று சொல்லமுடியாது. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இந்த ஆய்வுகள் மூலமாக, குறிப்பாக பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த நிலவியல் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்கள் தன்மை, அதன் மூலமாக அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான ஒரு இலக்கிய எடுகோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மானுடவியல் ஆய்வை அவர் செய்தார் என்று சொல்லமுடியும். இந்த ஆய்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால் வட இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த அளவிற்கான ஒரு மிகப்பெரிய மதிப்பீட்டை தென்னிந்தியா அல்லது தென்னிந்தியாவில் இன்றைக்கு வாழக்கூடிய தமிழ் இனத்தின் முந்திய வரலாற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுகிறேன். இப்பங்களிப்பை வரலாற்றுப் பேராசிரியரான செண்பகலட்சுமி, பேராசிரியர் பணிக்கர் போன்ற பலர் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இரண்டாவது மிக முக்கியமான பங்களிப்பு குறிப்பாக ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உள்ள, தமிழின் மிக அதிகமான பங்களிப்பாக உள்ள சமய இலக்கியங்கள் தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள். இதில் குறிப்பாக அவர் சைவ இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்த பொழுது திருமுறைகள் தொடங்கி, மெய்கண்ட சாஸ்திரம் வரையான வளர்ச்சியப் பற்றி அவர் சொல்கின்ற பொழுது ஒரு பாசுர மரபில் உருவான ஒரு மனித நேய மரபு என்பதை ஒரு தத்துவ உரையாடலாக உருவாக்கியது தான் மெய்கண்ட சாஸ்திரங்கள் என்று அவர் எழுதியிருக்கின்றார்.

அதைப்போலவே பிற்காலங்களில் தமிழ்ச்சூழலில் உருவான மிக முக்கியமான சமய மரபைச் சார்ந்த திருமூலர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வள்ளலார் குறிப்பாக தாயுமானவர் இவர்களைப் பற்றி இவர் ஆய்வு செய்த பொழுது இரண்டாவது யுகம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டாவது பக்தி யுகம் என்று இவர் குறிப்பிடுகின்ற பொழுது கி.பி ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை உருவான ஒரு பக்தி இலக்கிய மரபிலிருந்து ஒரு வேற்றான தமிழ் மரபு உருவானதென்றும் இந்த மரபு என்பது மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்தி மனித நேயத்தை முதன்மைப்படுத்திய ஒரு தமிழக சமய இலக்கியமரபாக உருவானதாக அவர் பதிவு செய்கிறார். ஒரு மாக்ஸிய முறையியலை முதன்மைப்படுத்திய பேராசிரியர் அவர்கள் மாக்ஸிய இயங்கியல் சார்ந்து சமூக வரலாற்றை எழுதக்கூடிய அவர் இவ்விதம் சமயத்தையும் மனித நேயத்தையும், இணைத்துக்காணக் கூடிய ஒரு மானுடவியல் துறை சார்ந்த சொல்லாட்சிகளால் அவர் செயற்பட்டிருப்பதைக் காணமுடியும்.

இதில் சில விஷயங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பாக சமயம் என்பது மனிதநேயத்துக்காக செயற்படக்கூடிய ஒரு நிறுவனம் என்பதும், அது சார்ந்துதான் நாம் அவற்றின் பல்வேறு கூறுகளைப் பார்க்க வேண்டும் என்பதை அவருடைய பயிற்சியின் மூலமாக உருவான மானுடவியல் துறை சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக அவர் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிறுவனமாக உருப்பெற்ற ஒரு சமயத்தின் மூலம் இவ்விதமான சாத்தியப்பாடுகள் உண்டா என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, ஒரு சமயத்தை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ததில் பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கே மிக முக்கியமான பங்களிப்பு உண்டென்று நான் கருதுகின்றேன். இது அவருடைய பண்டைத் தமிழ்ச்சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி அளவிற்கு இருக்கும் அவருடைய சிறந்த ஆய்வென்று நான் கருதுவேன்.

இறுதியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 20 ஆம் நூற்றாண்டு பற்றிச் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. குறிப்பாக் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய ஊடகங்கள் பற்றிய ஆராய்ச்சி என்று நாம் சொல்ல முடியும். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, தனித்தமிழ் இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, இதனுடைய மூலத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, என்பதான பல கேள்விகளுக்கான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உள்ளதாக நான் கருதுகிறேன்.

சிவத்தம்பி அவர்கள் பேசுகிறார், சைவ சமய மரபின் தொடர்ச்சியாகவே தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் போன்றவை உருப்பெற்றிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் போக்குகள் குறித்த விரிவான இலக்கிய மற்றும் பல்வேறுவிதமான பண்பாட்டுத் தரவுகள அவர் முன்வைக்கிறார். இதை அவ்வளவு எளிதாக புறந்தள்ள இயலாது. குறிப்பாக மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதல் மறைமலை அடிகள் வழியாக, திரு வி.க வழியாக ஒரு தொடர்ச்சியான சைவ மரபு சார்ந்த உரையாடல் என்பது தமிழ்ச்சூழலில் நடைபெற்றிருக்கின்றது.

இந்த உரையாடல் மரபில் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்கள், குறிப்பாக தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றுக்கான பண்புகளோடு பேராசிரியர் இணைத்துப் பார்க்கும் இந்த ஆய்வு முறை மிகமுக்கியமான ஒரு பதிவாகும். அதைப்போலவே 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஊடகங்கள் குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்ற பல குறித்து பேராசிரியருடை ஆய்வுகள் மிக விரிவானவை. புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் இவை உருவாக்கத்தை ஒரு சமூகவியலோடு எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஆய்வுகள் மிகச்சிறப்பானவை. வழக்கமாக இவ்வாறான புனைகதைகள் அது சார்ந்த ஊடகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு தன்முனைப்பு சார்ந்தும் தர்க்கபூர்வமின்றியும் ஒரு தொடர்ச்சியான மரபின் வளர்ச்சியென்று கருதுகின்ற அதே நேரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புதிதாக உருவான அச்சு ஊடகப் பண்புகளையும், அதன் மூலமாக உருவான வாசிப்புப் பழக்கத்தையும் அந்தப் பழக்கத்தினூடாக உருவான புதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அச்சுப் பண்பாடு உருவாக்கமென்றும் அந்த அச்சுப் பண்பாடு உருவாக்கத்தை 20 ஆம் நூற்றாண்டில் உருவான புனைகதைகளினூடாக நாம் கண்டுகொள்ளலாமெனவும் பேராசிரியர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் ஒரு 2300 ஆண்டு கால தமிழ்ச்சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு விரிவான ஆய்வைத் தனது ஆய்வாகவும் , பின்னர் வந்த காலத்தில் சமய மேலாதிக்கம் மிக்க சூழலில் சமயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படிப்புரிந்து கொள்வது என்பது பற்றிய ஆய்வாகவும், புதிய மறுமலர்ச்சி சார்ந்து, புதிய தன்மையில் உருவான 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய பண்புகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்துள்ள ஆய்வுகள் அவரது இந்த 75 ஆண்டு நிறைவு பவழ விழாக்காலத்தில், 1956 தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழியல் ஆய்வு மேற்கொண்ட அவருடைய ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் தமிழ்ச்சமூகம் விதந்து பாராட்ட வேண்டிய ஒரு மிக முக்கியமான செயல் என்று கருதுகிறேன். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் பல மேல் ஆய்வுகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் பகிர்வு

1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை நான் என்னுடைய பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது அவர் என்னுடைய ஆசானாக இருந்தார். அவருக்கு கீழ் நான் படித்ததையிட்டு பெருமைப்படுகின்றேன். அவர் எங்களுக்கு பல விஷயங்களை அந்தக் காலகட்டத்திலே அந்த நான்கு வருடங்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது பெற்றுக்
கொள்ளக்கூடியதாக இருந்தது. நான் தமிழை சிறப்பு பாடமாகப் படித்த பொழுது நான்கு வருசமும் அவர் எனக்கு விரிவுரையாளராக,ஆசானாக இருந்திருக்கின்றார். இந்த நான்கு வருசங்களிலே தமிழ் பற்றியதான ஒரு ஆழமான தேடுதலை மேற்கொள்வதற்கு ஒரு ஊக்கசக்தியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இருந்திருக்கின்றார்.

நான் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திலே படிக்கின்றபொழுது வாசி, வாசி என்று என்னை வாசிப்பதற்கு தூண்டியவர் அவர். நான் லைபிரரியிலே போய் லைபிரரியின் கடைசி மணி அடிக்கும் வரை இருந்து வாசிப்பேன். அந்தக் காலகட்டத்தில் தான் நான் முற்று முழுதாக தமிழ் நாவல் இலக்கியம் என்பது ஒரு தனிப்பாடமாக இருந்தது. அந்தப் பாடத்தை அவர் தனியாகவே எனக்கு அவர் படிப்பித்தார். அதேபோல சங்ககால அகத்திணை மரபை நான் தனியே அவரிடம் படித்தேன். அதோடு சேர்த்து தொல்காப்பியத்தின் அகத்திணை மரபு, நாடகமும் அரங்கியலும் எனக்கு சிறப்பாகப் படிப்பிக்கப்பட்ட பாடம். இதோடு சேர்ந்து பொதுவாக மற்றமாணவர்களோடு சேர்ந்து தமிழ் சிறப்புப் பாடத்திலே பல விசயங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய படிப்பித்தல் என்பது விரிவுரைகள் மிக ஆழமானதாக இருக்கும்.சிலபேருடைய விரிவுரைகளைக் கேட்கும் போது எப்போது அவை முடியும் என்று நாங்கள் நினைப்பதுண்டு.

ஆனால் அவருடைய விரிவுரைகள் அப்படியல்ல.சலிக்காமல் அலுக்காமல் எத்தனை மணித்தியாலமும் கேட்கக் கூடியதாக, நாங்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக அந்த விரிவுரைகள் அமைந்திருக்கும். நான் தனியே அவரிடம் படித்தபோது சிலவேளைகளில் அவர் பன்னிரண்டு மணிக்கு விரிவுரையைத் தொடங்கினால் கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள், ஐந்து மணித்தியாலங்கள் அந்த விரிவுரைகள் நீண்டு கொண்டே போகும். அந்த விரிவுரைகள் நடத்தப்படுகின்ற பொழுது அது ஒரு விரிவுரையாக இல்லாமல் ஒரு பகிர்தலாக, ஒரு உரையாடலாகவே அது அமைந்திருக்கும். அப்போது தான் பல விஷயங்களை, சிலவேளைகளில் பாடத்துக்கு அப்பாலும் கூட கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தனியே அந்தப் பாடப் பரப்போடு மாத்திரம் நில்லாமல் அந்தப் பாடத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை உலகளாவித் தழுவி வருகின்ற போது பரந்த அறிவைத் தரக்கூடியதாக அவருடைய விரிவுரைகள் அமைந்திருந்தன.

குறிப்பாக இன்னும் நான் சொல்லப் போனால் நான் அவரிடம் சிறப்பாகப் பயின்ற பாடங்கள் என்று சொல்லுகின்ற பொழுது நாடகமும் அரங்கியலும் என்ற பாடம். இந்த நாடகமும் அரங்கியலும் என்ற பாடம் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்துக்கு ஒரு தனிப்பாடமாக இருக்கவில்லை. அத்தோடு க.பொ.த உயர்தரத்திலும் கூட தனி ஒரு பாடமாக இருக்கவில்லை. அதன் பிற்பாடுதான் 1980 களுக்கு பின்னர் தான் தனி ஒரு பாடமாக க.பொ.த உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல பல்கலைக் கழகத்திலே தமிழ் மொழி மூலமாக இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்தை க.பொ.த உயர்தரவகுப்பில் அறிமுகப்படுத்தியதில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு மிக முக்கியமானது.

தமிழ் கலை இலக்கியப்பரப்பிலே அவருடைய இடம் மிகப் பெரிய இடம். அதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கியப் உலகிலே அவர் இயங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கூடாக அவர் ஆற்றிய பணிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காலகட்டத்திலே மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கான பல விஷயங்கள் இவரூடாகவே வெளிப்பட்டது.

அத்தோடு தமிழ் நாடக ஆராய்ச்சி என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் நாடகம் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி என்று சொல்லலாம். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்திலே தமிழ் நாடகங்கள் பற்றி விசயங்களை மதங்க சூளாமணி மூலமாகக் குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து நாங்கள் பார்க்கின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அது இப்போது தமிழில் வந்திருக்கின்றது, "பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்" சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன், அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அவர் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். தமிழ் நாடகத்தையும் கிரேக்க நாடகத்தையும் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழ்ச் சமூகத்திலே இந்த நாடக மரபுகளை சிலப்பதிகாரத்தினூடு அவர் வெளிப்படுத்திய விதம் மிக முக்கியமானது. இன்றைக்கு கூத்துப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டிலே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்கெல்லாம் வழிகாட்டியாக, சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அடிப்படையாக அமைகின்றது. இந்த ஆய்வின் பின்புலம் தான் பலரை தமிழ் நாடகம் பால் இழுக்கச் செய்தது.

பிற்காலத்திலே நீங்கள் பார்த்தீர்களேயானால் தமிழ் நாட்டிலே சக்தி பெருமாள், ஏ,என் பெருமாள் போன்ற பலர் இத்தகைய தமிழ் நாடக ஆய்விலே ஈடுபடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக பேராசிரியர் சிவத்தம்பியத் தான் தமிழ் நாடக ஆராய்ச்சியில் முக்கியமானவராகக் கருத முடியும். அதே போல அவர் இலங்கை கலைக்கழகத்திலே பணியாற்றிய பொழுது, ஈழத்து நாட்டாரியர் குறித்த அவரது ஈடுபாடு மிக முக்கியமானது. குறிப்பாக அவர் முல்லைத்தீவிலே செய்த நாட்டாரியல் விழா, இன்றைக்கும் பலர் நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக இருக்கின்றது. இதை விட அவர் பேராசிரியர் வித்தியானந்தனோடு பணியாற்றிய போது, பேராசிரியர் வித்தியானந்தன் கூத்து மீள் கண்டுபிடிப்பு செயத போது அதாவது ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரங்க வடிவம் பற்றி சிந்தித்த பொழுது கிழக்கிலங்கையிலே பிரபல்யம் பெற்ற தென்மோடி வடமோடி நாடகங்களை அவர் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றினார் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.

பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இவற்றை மேடையேற்றியபோது அதற்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும், பேராசிரியர் கைலாசபதியும். அந்தக் காலத்திலே செய்யப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், வாலி வதை, இராவணேசன் போன்ற நாடகங்கள் மிக முக்கியமான நாடகங்கள். ஆகவே இன்றைக்கு நாங்கள் பேசுகின்றோமே ஈழத்து தமிழர்களுக்கான அரங்க வடிவம், ஈழத்து தமிழர்களுக்கான நடனவடிவம், ஈழத்துத் தமிழர்களுக்கான இசை வடிவம் என்று பேசுகின்ற பொழுது அதற்கான அடிப்படைகளை இத்தகைய கூத்து மீள் கண்டுபிடிப்பு என்கிற அந்த விசயத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஆகவே அதற்கும் கூட அந்தக் காலத்தில் மிகக் காத்திரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இன்றைக்கு தமிழ் நாட்டில் கூட நாடகமும் அரங்கியலும் என்ற கற்கை பிளஸ்டு வில் இல்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற தமிழகத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் தமிழிலே நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதே போல் இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரம் தான். ஆனால் சிறிய ஒரு நாடான நம் நாட்டில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதன் மூலமாக பல கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிங்களத்தில் நாடகமும் அரங்கியலும் பல்கலைக்கழகத்திலே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஈழத்திலே நாடகம் தொடர்ப்பான விஷயங்களிலே, ஆராய்ய்சிகளிலே, படிப்புக்களிலே பேராசிரியர் சிவத்தம்பியின் இடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்திலே அவர் வந்து பணியாற்றிய காலத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே அவர் 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். அவர் பணியாற்றிய காலங்களிலே கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முக்கியமான பட விஷயங்களைத் தொடங்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள், குறிப்பாக கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி அதாவது எம்.ஏ.எம்.பிஎல், பி.எச்.டி ஆகிய கற்கைநெறிகளைத் தொடங்குவதற்கான பாடத்திட்ட வரைபை பேராசியர் சிவத்தம்பி அவர்கள் இருந்து அந்தப் பணியைச் செய்தார்கள். அவரோடு சேர்ந்து பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு போன்றவர்களும் இணைந்து அந்த வேலகளை செய்தார்கள். ஆனால் அதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக இருந்தார்.

அதுமாத்திரமல்லாமல் அந்த உயர்பட்டப்படிப்புக்களை நடாத்துவதற்கான விரிவுரைகளைக்கூடப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்தார்கள். அந்தவகையிலே நாடகமும் அரங்கியலும், நுண்கலை ஆகிய பாடங்களிலே இன்றைக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முதுமாணி, முதுதத்துவமாணி, தத்துவமாணி ஆகிய துறைகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் அங்கே இருக்கின்றன. அந்த வகையிலே
அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முக்கியமான காரியத்தைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.அதாவது நான் அவருடைய மாணவனாக இருந்தது ஒரு பக்கம், பின்னர் அவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது இரண்டாவது கட்டம்.

அடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்ட முன்வரைபு ஒன்று அதற்குத் தேவைப்பட்டது. அந்தத் திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார். பலரும் அதனோடு இணைந்து பணியாற்றினாலும் கூட, சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக நின்று செயற்பட்டார்.

மூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எங்களுடைய சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு மூன்று வகையான பணிகளை அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் பணியாற்றிய போது செய்ததை நாங்கள் அதை மிகப் பெருமையாகக் கருதுகின்றோம். பின்னாளிலே நான் பீடாதிபதியாக வந்த பொழுது பல விசயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்ள அவருடைய ஆலோசனைகள் மிகுந்த வழிகாட்டியாக அமைந்தன.

அதாவது சில ஆராய்ச்சி முயற்சிகளைச் செய்வதற்கும், சில கருத்தரங்குகளை நிகழ்த்துவதற்கும், ஆகவே ஒரு academic என்ற வகையிலே ஒரு கல்விசார் பேராசிரியர் என்ற வகையிலே, ஒரு பல்கலைக்கழக புத்திஜீவி என்ற வகையிலே கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு என்பது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை அவர் எங்களுக்கு அளித்தார். கூடவே அவரால் வரமுடியாத காலகட்டத்தில் நாங்கள் எங்கள் மாணவர்களை கொழும்புக்கு அனுப்பி அவரிடம் கற்கை பெறுவதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தோம். இப்படி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் முக்கியமானவை. அதை விட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடகவிழா நடைபெற்ற பொழுது அவர் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இப்படியாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்பு இன்று வரை தொடர்கின்ற உறவாகவே இருந்து வருகின்றது.
Posted by கானா பிரபா at 7:44 PM 15 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, November 08, 2007

தீவாளி வருஷங்கள்....!

தைபொங்கல், புது வருஷப்பிறப்பு போன கையோட தீபாவளி எப்ப வருகுது எண்டு, அப்பாவின்ர கட்டிலுக்கு அங்கால இருக்கிற மெய்கண்டான் கலண்டரின்ர திகதித் துண்டுகளை விரித்து எண்ணத் தொடங்கி விடுவேன். தீபாவளிக்கான நாள் நெருங்க நெருங்க, பாரதிராஜாவின்ர பாட்டுக்களில வாற வெள்ளை உடை அக்காமார் ஸ்லோமோஷனில் வருமாப் போல நானும் அந்தரத்தில பறப்பேன்.

அப்பாவுக்கு இந்தக் காலத்து நாகரீகம் தெரியாது எண்டு என்ர அண்ணனுக்கு அப்பா எடுக்கும் துணி வகை பிடிக்காது. ரண்டு, மூண்டு கிழமைக்கு முந்தியே சித்தப்பாவைக் கொண்டு ரவுணிலை சேர்ட்டுத் துணியையும், காற்சட்டைத் துணியையும் எடுத்து விடுவோம். இணுவில் கந்தசுவாமிகோயிலடி வெங்காயச் சங்கத்துக்கு முன்னாலை இரு முஸ்லீம் ரெய்லர் கடை இருந்தது. அம்மா ரீச்சர் எண்டதாலபள்ளிக்கூடம் போற வழியில இருக்கிற அந்த ரெய்லரிட்டைத் தான் எப்பவும் சட்டை தைக்கக் குடுப்பம்.
"ரீச்சர்! தீபாவளி வருது தானே, நிறையச் சோலி இருக்கும், கொஞ்சம் சீக்கிரமாவே துணியைக் குடுத்திடுங்க" எண்டு அம்மா பள்ளிக்கூடம் போற நேரம் கடைக்குள்ளால எட்டிப்பார்த்து நினைப்பூட்டி விடுவார் ரெய்லர். துணிக்கு அளவெடுக்கிற போது ரெயிலர் மீற்றர் பட்டியை வைத்து கொலருக்கும், கையுக்கும் எண்டு அளவெடுத்து விட்டுக் என்ர காற்சட்டைக்கு அளவெடுக்கிற நேரம் பார்த்து
"ரெய்லர்! கொஞ்சம் கால் நீட்டா விட்டுத் தையுங்கோ, கன காலம் வச்சுப் போடலாம்" எண்டு அம்மா கட்டளை இடவும் , பல்லால் நெருவிக்கொண்டே அம்மாவை ஒரு முறை முறைப்பேன்.

தீவாளிக்கு உடுப்புத் தாறது வீட்டுக்காரர் மட்டுமில்லை, சித்தப்பாவின் முறையும் இருக்கு. சித்தப்பாவோட யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் உடுப்பெடுக்கிறதெண்டால் பெரிய புழுகம் தான். அதுக்கும் ரண்டு காரணம். ஒண்டு அவரின்ர பஜாஜ் ஸ்கூட்டரிலை போகலாம். இன்னொண்டு, ரவுணையும் பார்த்து விட்டு வரலாம்.


தீவாளித் தினத்துக்கு கொஞ்ச நாள் முன்னமே யாழ்ப்பாணம் ரவுண் புதுமாப்பிளை போல நல்ல சந்தோசமா இருக்கும். பஸ்ராண்டுக்கு நடுவில இருக்கிற மணிக்குரல் விளம்பர சேவையில் , நிமிடத்துக்கொரு புடவைக்கடை விளம்பரம் வரும். கொடி பறக்குது படத்திலை இருந்து "சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு" பாட்டோட சீமாட்டி ஜவுளி மாளிகை விளம்பரம் வரும். கொடி பறக்குது, ராஜாதி ராஜா சேலைகளும், நதியா சுரிதாரும் விளம்பரங்களில் கட்டாயம் இடம்பிடிக்கும்.

புடவைக் கடைத் தட்டிகளில் அமலாவும், அம்பிகாவும் சாறி கட்டினபடி சிரித்துக் கொண்டிருப்பதை ஆவெண்டு பாத்துகொண்டு சித்தப்பாவின் கையைப் பிடிச்சுக் கொண்டே சனத்திரளுக்குள்ளால நகர்வேன். சித்தப்பாவின் கால் சொல்லிவைத்தது போல் நியூமார்க்கட்டுக்குள்ளை இருக்கிற ஹப்பி ரெக்ஸ் கடைக்குத் தான் போகும். ஊர்க்காரற்றை கடை, ஏமாத்த மாட்டாங்கள் என்று நியாயம் கற்பிப்பார். ஹப்பி ரெக்ஸ் இல் சிங்கப்பூரால வந்த சேர்ட்டுக்கள் குவிஞ்சிருக்கும். எனக்கு டிராகன் படமும் பூவும் போட்ட சிங்கப்பூர் சேர்ட்டை சித்தப்பா வாங்கித் தரவேணும் எண்டு கெதியா கண்ணை மூடி ஒருக்கால் பிள்ளையாரை வேண்டிக் கொள்வேன். பெரும்பாலும் பிள்ளையார் வரம் குடுத்து விடுவார். அங்காலை ரியூசனுக்குப் போறதெண்டு சொல்லிப் போட்டு லுமாலாவிலை பஞ்சாபி சட்டை வாங்க வந்த அக்காமாரின் பேரம் பேசலும் மும்முரமாயிருக்கும்.



வசதி குறைந்தவர்களின் அல்லது ஏழைகளின் சொர்க்கமாக பேவ்மென்ற் பாதையோரக் கடைக்காரகளின் விற்பனை இருக்கும்.

புதுச்சட்டை எல்லாம் றெடி எண்டவுடனை, அம்மா பத்திரமாக அவற்றைச் சாமி அறையில இருக்கிற அலுமாரிக்குள்ளை வச்சுப் பூட்டிப் போடுவா. சத்தம் போடாமல், அம்மாவுக்குத் தெரியாமல் சாமியறை அலுமாரியைத் திறந்து மடிச்சு வச்சிருக்கிற சேர்ட்டை ஆசையோடு தடவி விட்டு ஒருக்கால் மணந்து பார்த்தால் வாசனைக்குப் போட்டு வச்ச பூச்சி முட்டை மணமும், புதுச் சட்டையின் வாசமும் கலந்த கலவையான மணம் நாசிக்குள் நிறைக்கும்.

எப்படா விடியும் எண்டு காத்திருந்த தீவாளி நாள் வரும்.

கே.கே.எஸ் றோட்டில, தாவடிசந்தி தாண்டிக் கொக்குவில் பக்கம் போகேக்கை ஒரு மதகு வரும். அந்த மதகுக்குப் பாலம் போட்டு அங்கால் காணியில் ஒரு இறைச்சிக் கடை இருந்தது. வழக்கமா இரண்டு முழு ஆடு தோல் உரிக்கப்பட்டுக் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். கே.கே.எஸ் றோட்டில ஆராவது இறச்சிக்கடைக்காரனுக்குத் தெரிஞ்ச வாடிக்கையாளர் போகேக்கை எட்டி
" அண்ணோய்! ஆட்டிறச்சி ஒரு ரண்டு கிலோ கட்டி வைய்யுங்கோ" என்று கட்டளை இட்டு விட்டுத் தம் வேலையைப் பார்க்கப் போயிடுவினம். மத்தியானம் வரைக்கும் போணியாகாத ஆட்டிறச்சியை எப்படியாவது ஒப்பேற்றி விற்று விடவேணும் எண்ட முனைப்பே இறைச்சிக்கடைக்காரனுக்கு இருக்கும்.

ஆனால் தீவாளி நாளில உதெல்லாம் நடவாது கண்டியளோ, காலமை ஆறு மணிக்கே மதகையும் தாண்டி தீவாளிக்கு இறைச்சி வாங்கவென ஒரு பெருங்கூட்டம் முண்டியடிக்கும்.
"எல்லாரும் வரிசையில நிண்டால் தான் இறைச்சி கிடைக்கும்" என்று புதுப்பணக்காரன் தோரணையில் இறைச்சிக்கடைக்காரன் மிதப்பான்.காலை எட்டுமணிக்கெல்லாம் முழு இறைச்சியும் விற்றுத் தீர்ந்து விடும்.

காலமையே முத்துலிங்க மாமாவின் உதவியில் எங்கட வீட்டுச் சாப்பாட்டுக்கான இறைச்சி வாங்கப்பட்டிருக்கும். சில ஆட்கள் ஒரு ஆட்டை வாங்கி உரித்து சொந்தக்காரருக்குள்ளையே பங்கு ஆடு இறைச்சி பிரிப்பதும் உண்டு. பனையோலையை வளைத்துச் செய்த பாத்திரத்தில் ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் தேவையான இறைச்சி பங்கிடப்படும்.


வெள்ளணக் கிணத்தடிப் பக்கம் போய் துலாவில் நீரிறைத்துக் குளியல் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு, பிள்ளையாரடிக்கு ஆறரைப் பூசை பார்க்கக் கிளம்புவோம்.

மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்.

நாலைஞ்சு சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் புதுச்சட்டையைக் காட்டி விட்டு, அவையள் தாற முறுக்கு, பயற்றம் உருண்டை, அரியதரம் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு பால் தேத்தண்ணி வாயுக்குள்ள இருக்கவே அடுத்த வீட்டுக்குப் பாய்வம். சொந்தக்காரர் வீடுகளுக்கு நடைராஜாவிலேயே பயணம் எண்டதால அவையள் தாற பலகாரச் சாப்பாடெல்லாம் பாதிவழியிலேயே செமிச்சுப் போயிடும். எல்லா வீடுகளுக்கும் ஒரு றவுண்ட் அடிச்சுப் போட்டு வீட்டை வர பகல் பன்னிரண்டை தாண்டி விடும்.

வீட்டுக்கு வரும் வழி நெடுகிலும் கடைக்கதவுகளில் பூட்டுக்கள் சிரித்துக் கொண்டிருக்கும். உள் ஒழுங்கைகளுக்காள் வரும் போது ஏற்கனவே மெண்டிஸ் சாராயவகையறாக்களை ஒரு கைபார்த்து விட்ட வயதான மது போதை மன்னர்கள் சிலர் ரோட்டோரமாகவோ, அல்லது கிடுகு வேலிகளின் கதியால் பக்கமாகவோ போதை தலைக்கேறிச் சுருண்டு படுத்திருப்பார்கள்.
"ஒளுதரும் என்னை ஒந்தும் கேட்கப் பிடாது" என்று பஞ்ச் டயலாக் வேற அவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும். ஊர்நாய்களோ, " மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போறியோ இல்லையோ?" என்ற தோரணையில் வாள் வாளென்று குரைப்பெடுத்துத் தர்ணாப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும். எல்லாவற்றையும் புதினமாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்வோம்.

வீட்டுக்குள் நுளையும் போது ஆரோ ஆக்கள் எங்கட வீட்டுக்குப் பலகாரம் சாப்பிட வந்திருப்பினம். "எட! சோக்கான சட்டையடா" எண்டு ஒருக்கால் சீண்டிப் பார்ப்பினம். மாப்பிளை பார்க்க வந்த பொம்பிளை மாதிரி வெக்கத்திலை கீழை குனிஞ்சு கொண்டே குசினிப்பக்கம் போயிடுவன். அடுப்படியில் இருக்கும் கறிச்சட்டியை மெல்லமாத் திறந்து பார்த்தால் காலையில் பச்சையாக இருந்த ஆட்டிறச்சி கறிச்சட்டிக்குள்ளை பொன்னிறத்தில நல்லா வதக்கிக் காய்ச்சியிருக்கும். இறைச்சிக்குப் போட்ட மசாலா நொடி வயிற்றில் அமிலத்தைச் சுரக்க வைத்து விடும். வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை வழியனுப்பி விட்டு, அம்மா நேராகக் குசினிக்குள் வந்து விடுவா. அப்பாவுக்கும் சாப்பாட்டு நேரம் எண்டு விளங்கி விடும். குசினிக்குள்ள இருக்கிற பலகைக் கட்டையில் இருந்து அம்மா, கோப்பையில் போடும் குத்தரிசிச் சோறையும் எண்ணையாகத் திரண்ட கொழுப்பு ஆட்டம் போடும் ஆட்டிறச்சியைக் கலந்து வாயுக்குள்ளை திணித்தால் தேவாமிர்தம் தான்.

எங்கட நாட்டிலை தீபாவளி எண்டால் வெடிகளோ மத்தப்போ இல்லாத நாள் அது. தைப்பொங்கலுக்குத் தான் வெடி, மத்தாப்பு, பூந்திரி எல்லாம் இருக்கும். தீபாவளியை பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ எண்டு சொன்னால், புதுச்சட்டை போடுவம், பலகாரம் தின்னுவம், ஆட்டிறைச்சியை மூக்குப் பிடிக்க வெட்டுவம், இவை தான் முதலில் வரும். பிறகு தான் நரகாசுரனின் கதை எல்லாம்.

கொஞ்சம் வளர்ந்து விடலைப் பருவம் வந்தவுடன் நாங்களாகவே தீபாவளி உடுப்பு எடுக்க வேண்டிய பொறுப்பு வந்துவிடும். அப்பா தந்த காசில் உடுப்பு வாங்கவேண்டியது எங்கட பொறுப்பு. அந்த நாளிலை ரவுணுக்குப் போய் ஜீன்ஸ் துணி எடுத்து விட்டு, யார் நல்ல ஸ்ரைலாகத் தைப்பார்கள் எண்டு தேடுவதிலேயே பாதி உயிர் போய் விடும். நியூமார்க்கற் பேவ்மென்றையும் தாண்டிக் கொஞ்சம் சந்துக்குள்ளால் நடந்தால் முஸ்லீம் ரெய்லர்மார் நிறையப் பேர் இருப்பினம். எடுத்த ஜீன்ஸ் துணியில் எங்களுக்குப் பிடித்த விஷயத்தைக் கோடிட்டுக் காட்டினால் போதும் அவை ரோடே போட்டு விடுவினம். ஜீன்ஸ் இன் இரண்டு பொக்கற்றின் பக்கமும் விதவிதமான Pattern இல் சப்பறத்துக்குச் சோடிச்ச மாதிரி நூல் அலங்காரமும் டிசைனும் இருக்கும். காதலன் படத்திலை நீக்ரோ மாதிரி புதுசா நடிக்கவந்த பிரபுதேவா எண்டு ஆரோ கதாநாயகன் போட்ட மாதிரி தொள தொளவெண்டு ஜீன்ஸ் தச்சால் தான் பயோ (bioscience ) படிக்கிற பெட்டையளும், சுண்டுக்குளி வேம்படிப் பெட்டையளும் பார்ப்பினமாம். கட்டுப்பெட்டித் தனமா உடுப்புப் போட்டால் தமிழ்க்கலைவன் பாடசாலையும் ஏறெடுத்துப் பார்க்காது.

வெலிங்டன் தியேட்டருக்கு முன்னால "விக்ரம் ரெய்லர்" எண்டு ஒரு ஆள் கடை வச்சிருந்தவர். தொண்ணூறுகளில் அவர் தான் தனிக்காட்டு ராசா. கொஞ்சக் காலம் பின்னால் அந்தக் கடையைக் காணவில்லை.

"எடேய்! இப்பதான்ரா உன்ர ஆள் கோயிலுக்கு வந்து போட்டுப் போகுது" கோயிலுக்கு வரும் போதே ஏஷியா சைக்கிளில் ஊன்றி கொண்டிருக்கும் நண்பன் சொல்லவும், பிள்ளையாரைப் பிறகு பார்க்கலாம் எண்டு மனசு சமாதானப்படுத்த வந்த வழியே திரும்பிச்
சைக்கிள் வலிக்க, சுரிதார் அணிந்து லுமாலாவில் பறந்த கிளியைத் தேடிப் பறக்கும், அதுவரை அவ்ரோ பிளேன் கணக்காய் ஓடிய ஏஷியா அவளின் சைக்கிளை அண்மித்ததும் வேகம் தணிந்து கடைக்கண்ணால் ஏறெடுத்து அந்தப் புதுச்சட்டைக்கே பெருமை சேர்த்த பெருமாட்டியைப் பார்த்து முத்திப் பேறடையும் கணம், லுமாலாச் சைக்கிளே வெக்கத்தில் சிரிக்கும்.

தீவாளி வருஷங்களில் புதைந்த நினைவுகள் கலைய, எல்லாம் தொலைத்து எங்கோ தொலைவில் இருந்து கொண்டு , அந்த நாள் வாழ்வும் வந்திடாதோ என்று உலகப் படத்தில் சின்னப் புள்ளியாய் இருக்கும் இலங்கை போல் நம்பிக்கையின் எச்சம் மட்டும் எஞ்சி நிற்கின்றது.

படங்கள்: 2006 இல் எடுக்கப்பட்டவை
Posted by கானா பிரபா at 9:06 PM 28 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, November 02, 2007

உணர்விழந்து நிற்கின்றேன் :(

மிகுதா !

மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா?


Sent: Tuesday, 18 September, 2007 12:28:35 PM

Subject: mail from miguthan

வணக்கம் பிரபாண்ணா

தங்களது பதிவுகள் பார்த்தேன்
மிகவும் மகிழ்ச்சி
ஒன்றையும் மறக்காதுதான் மனிதர்கள் வாழ்கின்றார்கள்
அதனைச் சொல்வதற்குத்தான் அவர்களால் இயல்வதில்லை
நீங்களும் கொக்குவில் இந்துவில் தான் படித்தீர்கள் என்பதை பதிவின் மூலம் அறிந்தேன்
நானும் 89 தொடக்கம் 95 வரை அங்குதான் படித்தேன்
கார்த்திகேசு இல்லம்
அத்துடன் உங்களது நல்லூர் பற்றிய பதிவை பார்த்தேன்
சின்னொரு வேண்டுகோள்
தமிழின் பெருமைகளைத் தனியே சைவ உறையிட்டு வெளியிடுவதென்பது அதனை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடும் என்றே நினைக்கின்றேன்
எனக்கு அத்தகைய ஓர் உணர்வு அவ்வளவுதான்!

உங்களது யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய தொடுப்பு மிகவும் பிரையோசனமாக இருந்தது.

நன்றியண்ணை.
உங்களுக்கு நினைவிருக்கின்றதா?
ஒருமுறை மகேந்திரம் அதிபர் நவராத்திரியில் சோடியாக பாட்டுப்பாடியதற்காக நிகழ்ச்சியை குழப்பியது.
எப்படியிருந்தது யாழ்ப்பாணம். இப்ப கேபிள் டிவியோடையே இளசுகளின்ர காலம் கழியுதாம்

விரைவில எல்லாத்துக்கும் வழிசமைப்பம் அண்ணா

நன்றி
மிகுதன்

மரணம்
காரணம் அற்றது
நியாயம் அற்றது

கோட்பாடுகளும்
விழுமியங்களும்
அவ்விடத்தே
உறைந்துபோக - கவிஞர் சேரன்
Posted by கானா பிரபா at 8:25 PM 13 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Saturday, October 27, 2007

பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்

சந்தன மேடை எம் இதயத்திலே...
உன்
சந்தங்கையின் நாதம் நான் கேட்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி...
மாமயில் நீ எம் தேவியடி....
பாட்டுக்கு ஆடிடும் பாவையாள்
அவள்
பாவமெல்லாம் புதுமை ராகம் தான்....
மானுடத்தின் குரல் ஒன்று தான்
அவள்
மனதை மயக்கியது உண்மை தான்
கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கே
கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்திலே ஒளிரும் நட்சத்ரமாய்
எங்கள்
வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்
பொன்னுலகின் புதிய கீதங்களே!
பூமியின் செளந்தர்ய கோலங்களே!
மின்னி வரும் நாளை மேன்மைகளே!
மானுடத்தின் வெற்றி நாதங்களே!


ஐந்து வருடங்களுக்கு முன் நான் படைத்த வானொலி நிகழ்ச்சி ஒன்றில் சினிமாப் பாடல்களை ஒலிபரப்பி அலுத்த கணமொன்றில், கையில் சிக்கிய ஈழத்து மெல்லிசைப் பாடல்களில் இருந்து மேற்கண்ட பாடலை ஒலிபரப்பி விட்டு காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டே கேட்க ஆரம்பிக்கின்றேன். ஏதோ இனம்புரியாத இனிய இசை இன்பத்தை என். சண்முகலிங்கன் வரிகளில், எஸ்.கே.பரராஜசிங்கம், மற்றும் எம்.ஏ.குலசீலநாதனின் குரலினிமை கொடுப்பதை உணர்கின்றேன். அன்று தொடங்கியது என் மெல்லிசைப் பாடல்களைத் தேடிக் கேட்கும் ஆவல், அது இன்றும் தணியவில்லை.

என் பதின்ம வயதுகளில் இலங்கை வானொலி தீண்டப்படாத சக்திகளின் கைகளில் வந்தபோது என் மனசு வெளிநடப்புச் செய்து இந்திய வானொலியையே நேசிக்க வைத்தது. அதற்கு முற்பட்ட காலங்களில் என் சிறுபிராயத்தின் நினைவுகளில் எஞ்சியிருப்பது பள்ளிக்குப் போகும் பரபரப்பில் அம்மா தந்த பிட்டுச் சாப்பாட்டை வாயில் முழுங்கிக் கொண்டே, மற்றைய அறையில் றேடியோ சிலோனின் காலை ஒலிபரப்பை அப்பா கேட்கும் போது, காலை ஆறு மணி நாப்பத்தைந்து நிமிசம் மரண அறிவித்தலைத் தொடர்ந்து பொங்கும் பூம்புனலுக்குமுன் வரும் ஒரு சில மெல்லிசைப் பாட்டுக்களில் ஒன்றிரண்டு இலேசாக நினைவில் இருக்கின்றது. அவ்வளவே
ஈழத்து மெல்லிசையில் அப்போது எனக்கிருந்த ஞானம்.

ஐந்து வருடங்களாக ஈழத்து மெல்லிசைப்பாடல்களோடு "முற்றத்து மல்லிகை" என்றும் பின்னர் இப்போது படைக்கும் "ஈழத்து முற்றம்" போன்ற என் வானொலிப் படைப்புக்களுக்கும் பிள்ளையார் சுழி கூட இந்தப் பாடலில் இருந்தே ஆரம்பித்தது. இந்த நன்றிக் கடனைத் தீர்க்க எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் பதிவாக இதனைத் தருகின்றேன்.

பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் "பரா" என்னும் எஸ்.கே.பரராஜசிங்கத்தைப் பற்றிச் சொல்லும் போது:

வானொலியில் நவ நவமாய்
வளமான நிகழ்ச்சிகளை
வனைந்தளிப்பான்!
தேனொலிக்கும் தண் குரலால்
இசை பிழிந்து வார்த்திடுவான்!
தெவிட்டாதென்றும்!
தான் ஒத்த கலைஞர்களும்
தலை நிமிர வழி காட்டித்
தலைமை செய்வான்!
பா நோய்க்காவாறு "கங்கை
யாளை" ஒலித் தட்டமைத்த
பணியே சான்று!

மெல்லிசைக்கும் நம் நாட்டின்
மூல பிதா! அரங்கேற்றம்
மேடை தோறும்
மெல்லியர்கள் பரதத்தில்
நடத்துகையில் பாட இன்று
வேறார் உள்ளார்?
துல்லியமாய்த் தமிழினிலே
விளம்பரங்கள் எழுதி ஒலி
கூட்டிச் சீராய்ச்
சொல்லுகையில் கூட அதில்
கலை அழகு குன்றாமல்
கோக்கும் வல்லோன்!

என்று தொடர்கின்றார் சில்லையூரார்.

இலக்கியம், கலை ஆகியவற்றின் பெயரால் தம்மை வளர்த்துக் கொள்ளும் கலைக்கழுகுகளின் மத்தியிலே தன்னை மறைத்து இசையையும் வளர்த்த அபூர்வ மனிதர் இவர் சர்வதேச "உண்டா" விருதினையும் தம் வானொலிப் பணிக்காகப் பெற்றுக் கொண்டவர்.

விஞ்ஞானப் பட்டதாரியாகி ஆசிரியத் தொழிலை மேற்கொண்ட "பரா" ஒலிபரப்புத் துறையில் நுழைந்தமை தன்னை வளர்த்துக் கொள்வதற்காகவல்ல என்பதைச் சுமார் கால் நூற்றாண்டு காலமாக அவரோடு பழகியவர்களும் பணியாற்றியவர்களும் அறிவர். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கண்ணியத்தையும் தம் சொந்த நேர்மையையும் பேணிக்காத்த மிகச்சிலரில் பரா ஒருவர், இப்படியாகச் சொல்கின்றார் காவலூர் இராசதுரை அவர்கள்.


ஒலி அரசு வீ.ஏ. திருஞானசுந்தரம் அவர்கள், பரா பற்றிச் சொல்லும் போது:
இசைஞானம், இனிய குரல் வளம், கலை இலக்கியப் பின்னணி, சினிமா, நாடகத்தில் பரிச்சயம், புலமைப் பயிற்சி இத்தியாதிகளும் ஒருங்கே அமையப் பெற்ற இவர் பிறந்தது மலேசியாவில். வளர்ந்தது இலங்கையில்.
அக்காலக் கல்வி ஒலிபரப்பில் இடம்பெற்று வந்த வெண்பா வாசிப்புப் போட்டிகளில் பெரும்பாலும் பெண்களேபரிசுகளைத் தட்டிக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்தனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவன் அந்த மரபை மாற்றியமைக்கக் காரணம், "குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்" என்ற வெண்பாவை பொருள் தெளிவுற இனிய குரலில் அமைவாக அதிக ஆலாபனையின்றிப் பாடியதே. பாடிய அம்மாணவர் பராவே தான், என்கின்றார்.


இளமையிலேயே இசையில் தேர்ச்சிபெற்றதுடன், விஞ்ஞானப் பட்டதாரியாகி ஹற்றனில் உள்ள கல்லூரி ஒன்றில் விஞ்ஞான ஆசிரியராகப் பணியை மேற்கொண்டிருந்த போது , 1961 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பரராஜசிங்கம் வானொலியில் சேர்கின்றார். வர்த்தக சேவையில் தன் பணியை ஆரம்பித்த போது வெறும் சினிமாப்பாடல்களையே ஒலிபரப்பும் ஒரு சேவை தானே என்று இளக்காரமாக இருந்த போது "திரை தந்த இசை", ஒலி மஞ்சரி ஆகிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.

எஸ்.கே பரராஜசிங்கம், ஏ.சி.கருணாகரனுடன் இணைந்து வழங்கிய கர்னாடக இசைச் சித்திரம்



அறுபதுகளில் கொழும்பு சரஸ்வதி மண்டபத்திலே முருகையன், பரராஜசிங்கம், குலசீலநாதன் போன்ற கலைஞர்களின் ஒருங்கிணைவில்
நிகழ்ந்த மெல்லிசை அரங்கங்கள் முன்னோடியாகக் குறிப்பிடப்படும். இலங்கை வானொலியின் வர்த்தக நிகழ்ச்சிகளிடை முதன்முதலாக ஒலித்தது மலிபன் கவிக்குரல். பின்னாலே ஈழத்துப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கான மூலதனம் என்று சொல்லக்கூடிய குறிப்பிடத்தக்க சில பாடல்கள் இந்நிகழ்ச்சிகளிடை உருப்பெற்றவை தான். பரராஜசிங்கம், காவலூர் இராசதுரை, ரொக்சாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள், என்று "ஈழத்து மெல்லிசை இயக்கம்" என்ற தனது கட்டுரையில் நாகலிங்கம் சண்முகலிங்கன் (யாழ் பல்லைக் கழகம்)
இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

திரு.எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது மெல்லிசைப் பாடல்கள் காற்றோடு கலந்து போகாவண்ணம் பாதுகாத்து அவற்றை முதன்முதலில் ஒலிப்பேழையாகக் கொணர்ந்தவர் கலைஞர் திரு கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள். 1994 ஆம் ஆண்டு இவ்வொலி நாடா "ஒலி ஓவியம்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கனடாவில் இதனை இறுவட்டாக "அருவி வெளியீட்டகம்" வெளியிட்டது.

கே.எஸ்.பாலசந்திரன் அவர்கள், தான் நேசிக்கும் பரா அண்ணர் குறித்து இப்பதிவில் சொல்லுகின்றார்.


"அவருடன் நான் இணைந்து செய்த நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு பாடப்புத்தகமாக்கப்பட்டது. அவர் செய்த ஒவ்வொரு வானொலி நிகழ்ச்சியையும் கேட்கும் போது பல்கலைக்கழக விரிவுரை போன்ற உணர்வை ஏற்படுத்தியது" என்று கூறிச் செல்கின்றார் ஒலிபரப்பாளர் சி.நடராஜசிவம்.


திருமணமே செய்யாது வானொலியையே தன் துணையாக வரித்துக் கொண்டு வாழ்ந்த பரா அவர்கள் எதிர்பாராத சில முரண்பாடுகளால் வானொலியை விட்டு விலகிச் சிறிது காலம் தமிழகத்தில் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டார்.

இந்தப் பதிவுக்காக நான் எஸ்.கே.பரராஜசிங்கம் குறித்த உசாத்துணை நூல்களைத் தேடியபோது அதிஷ்டவசமாகக் கண்ணிற்பட்டது "இதய ரஞ்சனி" சமூக பண்பாட்டுக் கோலங்கள் என்ற எஸ்.கே.பரராஜசிங்கம், என் சண்முகலிங்கன் எழுதி வெளியிட்ட நூல். இந்த நூலை எடுத்து விரித்துப் படிக்கும் போது ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகின்றன.

இன்று உலகமயப்படுத்தப்பட்ட தமிழ் வானொலிச் சேவையில், அலைவரிசையைக் குத்தகைக்கு எடுத்த யாரும் வானொலி
நிலையம் ஒன்றை உருவாக்கலாம், பாட்டுப் போடத் தெரிந்த எவரும் அறிவிப்பாளராகலாம் என்னும் யதார்த்த உலகில் ஆயிரம் ஆச்சரியக் குறிகளை விதைக்கின்றது இந்த நூல். ஒரு நேர்மையான வானொலியாளனால் வானொலியில் இடம்பெறும் ஆக்கம் எப்படியெல்லாம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதற்கு
இதயரஞ்சனி ஓர் உதாரணம்.


நாம் காண விழையும் நாளையின் நாயகி, வானொலியூடாக அறிமுகமான ஆளுமை தான், நூல் வடிவில் இப்பொழுது தரிசனமாகின்றாள்.
வெகுஜனத்தொடர்பு சாதனங்களின் சமூகச் செல்வாக்கு இன்று பெரிதும் உணரப்படும் இந்த ஊடகங்களைச் சமூகமேன்மைக்குப் பயன்படுத்தலின் இன்றியமையாமையும், இன்றைய சமூக அபிவிருத்தித் திட்டமிடல்களில் முதன்மை பெறும். இந்த வழியில், சக்தி வாய்ந்த தொடர்பூடகமான வானொலியூடாக ஒலித்த இதயரஞ்சனி என்ர கலை இலக்கிய மஞ்சரியின் பண்பாட்டுக் கோலங்கள் என்ற அம்சத்திலிருந்து, இருபத்தைந்து கீற்றுக்கள் இங்கு எழுமாற்றாகத் தரப்படுகின்றன. எழுமாற்றாகத் தேர்ந்தெடுத்த போதிலும் பரந்த நம் பண்பாட்டின் விழாக்கள், வழிபாட்டு மரபுகள், கிராமியக் கலைகள், சடங்குகள், நம்பிக்கைகள், மனவெழுச்சிகள், தொடர்பு சாதனங்கள், ஆளுமைகள் என வகைகளையும் ஒருவித ஒழுங்கினையும் இங்கே காணமுடியும் என்று நூலாசிரியர்கள் தம் முகப்புரையில் சொல்கின்றார்கள்.

ஒரு வானொலிப் பிரதி எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அணிகலனாகத் திகழ்கின்றது இந்த "இதய ரஞ்சனி". எப்படி ஒரு வானொலிப் படைப்புக்கான அறிமுகம் இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இசை வருமிடம், குரல், பாடல், இடையிசை, நிறைவுக்குறிப்பு எனப் பிரிவாக்கி ஒவ்வொரு நிகழ்ச்சிப்படைப்பும் இருக்கின்றது.

இப்பிரதியில் இருந்து உதாரணத்துக்கு ஒன்றைக் காட்டுகின்றேன். "வசந்தன்" என்ற தலைப்பிலான ஆக்கம். இதில் எமது பாரம்பரியக் கலைகள் குறித்த சுருக்கமான அறிமுகம் அமைகின்றது. அடுத்து குரல், என்ற வகைப்படுத்தலில் தமிழகத்திலே இடம்பெறும் வசந்தன் கோலாட்டத்தை ஈழத்துமரபோடு ஒப்பீடு செய்து, தொடர்ந்து கேரள, சிங்கள மக்களின் பண்பாட்டுக் கோலங்களயும் தொட்டுச் சென்று, அலவத்தை வீரபத்திரர் வசந்தன் ஒலிப்பதிவைப் போடும் இடம் சுட்டிக்காட்டப்படுகின்றது, தொடர்ந்து நிறைவுரை.

பார்த்தீர்களா? ஒரு வானொலிப்படைப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை இன்றைய வானொலியாளர்களுக்கும், நேயர்களின் ரசனை குறித்த மாற்றத்தையும் வேண்டி நிற்கின்றது இப்படைப்பு.

பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல்ஹமீதின் வானொலித்துறை ஆசான்களில் ஒருவராக வாய்த்த பரராஜசிஙம் பற்றிக் குறிப்பிடும் போது, நாம் விடும் சிறு தவறுகளையும் நாகரீகமாகச் சுட்டிக் காட்டி, சிக்கனமாகப் பேசி, எம்மைத் திருந்தச் செய்யும் பண்புள்ளவராகத் திகழ்ந்தார். ஒலிபரப்பில் எதனையும் முன் கூட்டியே எழுதி ஒருமுறைக்குப் பலமுறை சரிபார்த்து நிச்சயப்படுத்திய பின்பே ஒலிபரப்ப வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர்.


ஏடுகள் சுமக்காத பாடல் வரிகளாக, கிராமிய இசையாக, மக்கள் நினைவில் மட்டுமே நிலைத்திருந்த நாட்டுப்பாடல்களுக்கு மறைந்த இசையமைப்பாளர்
எம்.கே றொக்சாமியின் துணையோடு, புது இசை வடிவம் கொடுத்து அவர் உருவாக்கிய பாடல்களே பின்னாளில் மெல்லிசைப் பாடல்கள் உருவாகுவதற்கு அடிப்படையாக விளங்கின. உதாரணத்திற்கு கீழ்க்காணும் நாட்டார் பாடல், பின்னர் மெல்லிசையாக எம்.கே.றொக்சாமி இசையில், பரா பாடுவதைக் கேளுங்கள்


கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....

சிட்டுப் போல் நடையழகி
சிறுகுருவி தலையழகி......
பட்டுப் போல் மேனியாளை
பாதையிலே பார்த்தீங்களா.....

கோரைப்புல் மயிரழகி
குருவிரத்த பொட்டழகி
பவளம் போல் பல்லழகி
பாதையிலே பார்த்தீங்களா....

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....

பட்டம் போல் நுதலழகி
பவளம் போல் வாயழகி
முத்துப் போல் பல்லழகி
முன்னே போகக் கண்டீரோ
முன்னே போகக் கண்டீரோ....

கிண்ணி போல் சந்திரரும்
கிழக்கே பார்த்த சூரியரும்
பாதி மரிக்கொழுந்தை நீர்
பாதையிலே பார்த்தீங்களா....




மெல்லிசையில் நாட்டார் பாடல்களைப் புகுத்தியது மட்டுமன்றி இவர் செய்த இன்னொரு புதுமையைச் செயல் முறையில் தருகின்றேன்.
இந்திய இசை மேதை சிட்டிபாபு தந்த வீணை இசையை எடுத்து அதை அங்கையன் கைலாசநாதனைக் கொண்டு வீணை இசையோடு இயைந்து வரக்கூடிய பாடல் வரிகளை எழுதிப் பின் தன் பாட்டினை இந்த இசையோடு இணைத்தார். நவீன தொழில்நுடபம் எட்டிப் பார்க்காத முப்பது வருஷங்களுக்கு முன் இந்தப் புதுமையைத் தன் மெல்லிசையில் படைத்தார் பரா.

சிட்டிபாபுவின் மூல இசை


"மணிக்குரல் இசைத்தது" பாடலை இணைத்துக் கொடுத்த பின்


பாகிஸ்தானிய இசைவல்லுனர் சொஹைல் ரானா, இசைக்கருவிகளைக் கொண்டு சொல்ல விழைந்ததை, சண்முகலிங்கனைக் கொண்டு "குளிரும் நிலவின் இரவு" என்ற சோக கானமாக வடித்தார்.


ஒலி ஓவியம் என்னும் இசைப்பேழையில் பேராசிரியர் சிவத்தம்பியின்
சிலாகிப்பு இப்படிச் சொல்கின்றது:

"Para, a carnatic musician and musicologist is also known from his contribution to light music in tamil. The songs in this cassettes are his pioneering effort in the field of light music in Sri Lanka. They were recorded with minimum instruments on a single track, when electronic technology was unheard of.

The lyrics notable for their poetic quality and melodic content, have been rendered with emotional meaning that lingers forever - the true stamp of any creative music and its musician".

பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றை இந்த மெல்லிசைப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.
கருத்து செறிவையும், குரல்வளத்தையும் மட்டுமே முதலீடாக வைத்து
இப்பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சான்றாக, எனக்கு மிகவும் பிடித்த
பராவின் மெல்லிசைப் பாடல் இரண்டின் வரிகளையும் பாடல்களையும் கீழே தருகின்றேன்.

பாடல் வரிகள்: கவிஞர் முருகையன்
பாடியவர்கள்: எஸ்.கே பரா மற்றும் கோகிலா சிவராஜா
இசை: எம்.கே.ரொக்சாமி

கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!

நுவரெலியா முதலான உயரமலை
பயிலும் கங்கையாளே...!
தவறாத வளமுடைய....
தன்மை பொழியும் எங்கள் கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே......

கந்தளாயும்....மூதூரும்....
காத்து வரவேற்கின்ற கங்கையாளே....
வந்து சேர்வாய் திருமலைக்கே..
மாகடலில் போயிறங்கும் கங்கையாளே...!

கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!


இந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் பெருமைக்குரியவன், பெறுமதியானவன் என்பதற்க்குச் சான்றாக அதே வானொலித் துறையில் சகாவாக இருந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தமது "மன ஓசை" என்னும் வானொலி நனவிடை தோய்தலை பரராஜசிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கின்றார்கள்.

"பரா" என்கிற பரராஜசிங்கத்திற்கு....
நண்பர்களுக்குக் கலைகளின்
சுவையைக் காட்டிய நீ
வாழ்க்கையின் சுகங்களை
அநுபவிக்காமலே
போய்விட்டாயே!

இறைவா சங்கீத "சதஸ்" ஒன்றை - உன்
திருவடிகளுக்கு அழைத்து விட்டாய்!
அதன்
சுநாத நினைவுகளை
எங்களிடமிருந்து பிடுங்கிவிடாதே!

என்று சுந்தாவும் நண்பர்களும் கரைகின்றார்கள்.

மேலும் வானொலிப் படைப்பாளி சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள் தனது நண்பன் பரராஜசிங்கம் பற்றி இப்படிச் சொல்கின்றார்:

பரா என்றதுமே அவனது தம்புராவுடன் இசைந்த உயிரின் குரல் என் நரம்பு நாளங்களையெல்லாம் மீட்டி நிற்கும்.அவனோடும் நண்பன் சிவானந்தத்தோடும் சேர்ந்து சென்னை இசைவிழாக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் நயந்திடத் திரிந்த பொழுதுகள் மீண்டும் வருமா என்ற ஏக்கம் மேலிடும். சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து பாடும் பராவின் இசை நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்புச் செய்வதே ஒரு உயிர்ப்பான அனுபவம் தான்.(சேக்கிழார் அடிச்சுவட்டின் போது - (இடமிருந்து வலம்) சுந்தா சுந்தரலிங்கம், சிட்டி சுந்தரராஜன், வேணு, எஸ்.கே.பரராஜசிங்கம், படம்: சோ.சிவபாதசுந்தரம்)

நாங்கள் நாங்கள் இணைந்து வழங்கிய ஆக்கங்கள் பல. "சக்திக்கனல்" இன்னமும் என் நெஞ்சை நிறைத்து நிற்கிறது. தம்புரா சுருதியில் என் அறிமுகக்குறிப்பும் அதனைத் தொடரும் பராவின் அபிராமி அந்தாதியும் மறக்க முடியாதவை. மீனாட்சி கல்யாண இசையமைப்பு வேலைகளிலும் பராவின் நுண்ணிய இசைத்திறனை வியந்த சந்தர்ப்பங்கள் பல. ஈழத்து மெல்லிசையின் மூலவர்களில் முக்கியமானவராக புகழபெறும் பராவின் வானொலி அனுபவங்கள் மிக மிகப் பெறுமதியானவை. பராவின் இசை சார்ந்த வானொலிப்படைப்புக்கள் தமிழக, வானொலி தொலைக்காட்சிகளுக்கும் கூட முன்னோடியானவை. அந்தச் சம்பவம் இன்னமும் என் மனதில் உள்ளது.

எனது மகள் சுபா சென்னையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த காலம். கல்லூரிக்குச் செல்கையில் பஸ்ஸுக்குள், முன் ஆசனத்தில் இருந்த இரண்டு பேர் இசை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களாம். பேச்சிடை ரேடியோ சிலோன் பரராஜசிங்கம் என்ற சொற்களைக் கேட்டதும் சுபா தன் காதுகளைத் தீட்டிக் கவனமாகக் கேட்டிருக்கிறாள்.
"இப்பதான் நம்ம வானொலிக்காரங்கள், ரி.வி.காரங்கள், திரை இசைக்குள் சாஸ்திரிய இசைக் கண்டுபிடிப்புக்கள், நிகழ்ச்சிகள்னு செய்யிறாங்க ஆனா எவ்வளவோ நாளைக்கு முன்னாடியே சிலோன் ரேடியோவிலே எஸ்.கே.பரராஜசிங்கம் திரை தந்த இசை என்ற பெயரிலும் வேறு பெயர்களிலும் ஆக்க இசை பற்றி அருமையான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்" என்பது அவர்கள் பேச்சிடை மிதந்த சாரம். சுபா உடனடியாகவே இதனைப் பராவுக்கு எழுதியிருந்தாள்.

இலங்கையின் முதல் தமிழ் மெல்லிசை இசைத்தட்டான "கங்கையாளே", பராவின் மெல்லிசைப் பாடல்களிலான ஒலி ஓவியம், கட்டுவன் வீரபத்திர வசந்தன் பாடல்களை மெருகேற்றித் தயாரித்த ஒருமணி நேர கிராமிய இசையாக்கம், எழுபதுகளில் யுனெஸ்கோ வேண்டுதலில் எம்.ஏ.குலசீலநாதன், சி. மெளனகுரு, எஸ்.கே.மகேஸ்வரன், என்.சண்முகலிங்கன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு பரிசும் பெற்ற வடமோடிப் பாடலும், வசந்தன் பாடல்களுமென பராவின் ஆக்கங்கள் பல.

ஆக்க இசைக்கலைஞனான பராவின் வானொலி ஆரம்பம் உண்மையில் வர்த்தக ஒலிபரப்பிலேயே தொடங்கியது. மலைநாட்டில் ஆசிரியப் பணியில் இருந்த பரா, கொழும்பில் வானொலி அறிவிப்பாளர் பதவிக்கு விளம்பரப்படுத்திய வேளை, ஆசிரியப் பணியிலே தொடரவா அல்லது வானொலி அறிவிப்பாளனாக வரவா என்று என்னிடம் கேட்டபொழுது, வானொலிக்கு வரும்படி தயங்காமல் கூறி விட்டேன். வானொலி விளம்பரக்கலையில் என்னோடு பரா இணைந்து செய்த Jingles பல. எனது Jingles இன் வெற்றிக்குப் பராவின் இசை முக்கியமானது. முழுத் திருப்தி வரும் வரை றெக்கோடிங்கை முடிக்க மாட்டான். அப்படி ஒரு Perfectionist.

பரா வர்த்தக ஒலிபரப்பிலேயே தம்பி சண்முகலிங்கனுடன் சேர்ந்து கலை, இலக்கியம் படைத்தவன். சண்முகலிங்கமும் பராவும் இணைந்து எத்தனை ஆக்கங்களைத் தான் படைத்தார்கள்! இத்தனைக்கும் பராவின் திறமைகளை எங்கள் சமூகம் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது மிக மிகத் துயரமானது.



படத்தில் (இடமிருந்து வலம்): திரு. குஞ்சிதபாதம், திரு. சிட்டி சுந்தரராஜன், திரு. சுந்தா சுந்தரலிங்கம், திரு எஸ்.கே.பரராஜசிங்கம்

பராவிடம் உள்ள இசை சார்ந்த வானொலி சார்ந்த அறிவு அனுபவங்களை இனியேனும் எதிர்கால சந்ததியினர் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும். பராவும் எழுத்து வடிவில் அவற்றை எதிர்காலத்துக்குத் தர வேண்டும் என்று தமது மன ஓசையில் குறிப்பிடுகின்றார் சுந்தா சுந்தரலிங்கம் அவர்கள். என்னே துரதிஷ்டம், மன ஓசை எழுதி அச்சில் வரும் போது சுந்தாவின் கனவு மெய்ப்படாது பரா என்ற இசை நாதம் நிரந்தர மெளனம்
கொள்கின்றது, பராவின் வானொலி சார்ந்த ஆளுமை உரியவகையில் எம் அடுத்த ஊடகத்துறைச் சந்ததிக்குக் கைவராமல் போயிற்று.

இன்று இந்தப் பதிவுக்கான ஆயத்தங்களைச் செய்யும் போது, Google chat இல் வருகின்றார், உடன்பிறவாச் சகோதரன், வானொலிப் படைப்பாளி இளையதம்பி தயானந்தா. அவரிடம் நான் எழுதப் போகும் பரா என்னும் பரராஜசிங்கம் குறித்த ஆக்கம் பற்றிச் சொல்கின்றேன். இந்த முயற்சிக்குப் பாராட்டைத் தந்து விட்டு ஒரு சேதியையும் சொல்லி விட்டுப் போகின்றார் அவர். பரராஜசிங்கம் அவரது இறுதிச் சடங்கு நடந்த அன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கலையகத்தில் இருந்து இரவு "மணிக்குரல் ஓய்ந்தது' என்ற 1 மணி நேர அஞ்சலி நிகழ்ச்சியை செய்த பெருமையைச் சொல்லிச் சிலாகித்தார்.

அப்போது தான் எனக்கு பழைய நினைவுகள் மீளக் கிளறுகின்றன. எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள் இறந்த நாள் இரவு அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலியில் இலங்கையில் இருந்து சிட்னி வந்து தற்காலிக வானொலிப்பணியில் ஈடுபட்டிருந்த சக்தி எப்.எம் வானொலியின் அப்போதய நிர்வாகி எஸ்.எழில்வேந்தன், பராவின் நினைவுப் பகிர்வை வழங்கிக் கொண்டிருக்கின்றார். அப்போது தொலைபேசியூடாக இணைந்து கொண்ட அறிவிப்பாளர் பி.எஸ்.அப்துல்-ஹமீதும்இணைந்து பரராஜசிங்கம் அவர்களின் பெருமைகளைப் பேசிக் கொண்டே போய் ஒரு கட்டத்தில் உடைந்து போய் விம்மி விம்மி அழுகின்றார். அதுவும் வானொலியின் அஞ்சலியில் கலந்து வந்து எம் நெஞ்சைக் கனக்க வைக்கின்றது. ஒரு உண்மையான கலைஞன் தன் சாவின் பின்னும் நீண்ட நெடு நாட்கள் நினைவில் வைத்திருக்கப்படுவான் என்பதற்குப் பரா ஒரு சான்று.

பரா என்னும் பரராஜசிங்கத்தின் கலைப்பயணத்தில் கூடவே பயணித்த என்.சண்முக லிங்கன் இப்படிச் சொல்கின்றார்.

என் ஞானக்குயிலே!
"எல்லையற்ற ஞானத்துடன்
இதயம் கனக்க
நீ காத்திருந்தாய்
உன்னை முழுதாய்ப் பருகும் பாக்கியமின்றி
அவசர உலகில்
அலைந்து தொலைந்தோம்.

உசாத்துணை:
மன ஓசை - வீ.சுந்தரலிங்கம், மார்ச் 1999
"பரா"வுக்குப் பாராட்டு - விழா மலர் நவம்பர் 7, 1992
ஈழத்து மெல்லிசை இயக்கம் - நாகலிங்கம் சண்முகலிங்கன், யாழ் பல்கலைக் கழகம்
இதயரஞ்சனி - எஸ்கே.பரராஜசிங்கம், என்.சண்முகலிங்கன், காந்தளகம், ஜனவரி, 1998
Posted by கானா பிரபா at 8:45 PM 31 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (7)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ▼  2007 (53)
    • ▼  December 2007 (1)
      • வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று
    • ►  November 2007 (3)
      • எழுபத்தைந்தில் பேராசான் கா.சிவத்தம்பி
      • தீவாளி வருஷங்கள்....!
      • உணர்விழந்து நிற்கின்றேன் :(
    • ►  October 2007 (2)
      • பரா என்றதோர் ஈழத்து இசைச்சிங்கம்
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes