கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.
சிங்கள அரச பயங்கரவாதம் தமிழினத்தின் மீதான அடக்குமுறையின் ஆரம்பமாக கல்வித் தரப்படுத்தல் முறைமையைக் கொண்டு வந்திருந்த வேளை தமிழ் மாணவர் பேரவை என்னும் அமைப்பை சத்தியசீலன் அவர்களோடு சக மாணவர்கள் ஆரம்பித்த அந்த இயக்கமே ஈழத்தின் போராட்ட வரலாற்றின் இளைஞர் சக்தியை ஒன்று திரட்டி ஆரம்பித்த போராட்டமாக அமைந்தது.
பேட்டியின் ஒலிவடிவைக் கேட்க
திரு சத்திய சீலன் அவர்களின் பேட்டியில் இருந்து சில துளிகள்
ஆரம்பத்தில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தமிழ் இளைஞர் ஒன்றயம் என்ற அமைப்பு தமிழர்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு ஆரம்பித்தோம். இதற்கு அன்றைய அரசியல் சூழ்நிலைகளே காரணமாக இருந்தன.
1965 ஆம் ஆண்டு திருச்செல்வத்தை மந்திரியாக நியமிப்பதன் மூலம் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலையில் இருந்து விலகிப் போவதை இளைஞர்களாகிய நாங்கள் அன்று உணர்ந்திருந்தோம். அதன் அடிப்படையிலேயே தமிழர் இளைஞர் ஒன்றயம் என்ற அமைப்பு தோற்றம் பெற்றது.
1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்காவால் தரப்படுத்தல் கொள்கை கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் மாணவர்களை ஒன்று திரட்டி 1970 ஆம் நவம்பர் 23 ஆம் திகதி தமிழ் மாணவர் பேரவை தனது முதலாவது அரச எதிர்ப்பு ஊர்வலத்தை யாழ் முற்றவெளியில் நடத்தியது.
நாம், சிவகுமாரன் உட்பட பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரங்களை நடத்தினோம். இவ்வாறு டிசம்பர் 7, 1970 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை கூட்டத்துக்கு சென்றபோது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தேவையை உணர்த்தினோம். அந்தக் கூட்டத்தில் சந்தித்தேன் சின்னப்பையனாக இருந்த "பிரபாகரனை". தமிழ் மாணவர் பேரவையில் தானும் இணைந்து பங்களிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அங்கேயே ஒரு ரூபா அங்கத்துவப் பணத்துடன் தமிழ் மாணவர் பேரவையில் அவரை இணைத்துக் கொண்டேன்.
1971 ஆம் ஆண்டு யூன் மாதம் தமிழீழத்தில் இருக்க முடியாத அரசியல் நெருக்கடியால் தமிழகம் சென்றேன். திருச்சியில் ஈ.வே.ரா பெரியாரை ஆகஸ்டில் சந்திக்கிறேன். எமது மாணவர் போராட்டத்தைப் பற்றி விளக்கி உங்கள் ஆதரவை எமக்குத் தாருங்கள் என்று கேட்டேன். அப்பொழுது
"இவையெல்லாம் சாத்தியப்படுமா?" என்று அவர் தனது பாணியிலேயே கேட்டார்.
"அவர்கள் பெரிய டாங்கிகளையும் துப்பாக்கிகளையும் வைத்து உங்கள் எல்லோரையும் அழித்துப் போடுவார்களே" என்றும் சொன்னார்.
"இல்லை அதை எதிர்த்து எங்களால் போராட முடியும், அந்த மனவலிமை எங்களுக்கு இருக்கிறது, உங்களுடைய ஆசி தான் எங்களுக்கு வேண்டும் என்று கேட்டேன்.
"சரி, நீங்கள் சொன்னதையெல்லாம் எழுத்து வடிவில் தாருங்கள் விடுதலை பத்திரிகையில் அதைப் பதிவாக்குகிறேன்" என்றார். அதைப் பதிவாக்கினார்.
ஜி.டிநாயுடு என்ற அன்றைய பிரபல விஞ்ஞானி, அவரிடம் சென்று எங்களுக்கான வாக்கி டாக்கி (walkie talkie) என்ற கருவியைச் செய்து தரும்படி கேட்டிருந்தோம். அவரும் உங்களுக்கான ஆதரவைச் சேருங்கள் என்று ஊக்குவித்தார்.
உரும்பிராயில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவையின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழீழ விடிவிற்காய் களப்பலியாகியவருமான தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவுத் தூபி
1972 டிசம்பருக்கு மீண்டும் ஈழம் வந்தோம். அப்போது அமுல்ப்படுத்த இருந்த அரசியல் யாப்புக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்தோம். அந்தக் காலகட்டத்தில் பாடசாலைச் சிறுவனாக இருந்த தம்பி பிரபாகரன் அடிக்கடி வந்து சந்திப்பதை வழக்கமாகக் கொண்டார்.
படங்கள் நன்றி:
http://tamilmakkalkural.blogspot.com
www.tamilnation.org/
6 comments:
அருமையான பகிர்வு!
அண்ணா,
வாசிக்க கவலையாக இருக்கு.
படத்தில் இருக்கும் எல்லோரும் தம் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தானே.
அவர்களுக்கும் எல்லோரையும் போல வாழ வேண்டும் என்ற ஆசை இல்லாமலா இருக்கும்.........
..................
பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி சந்தனமுல்லை
வணக்கம் வாசுகி
40 வருஷங்களுக்கு முன் இருந்த காலத்துக்குப் போய் மீண்டும் ஆரம்பத்தில் தொடங்குகிறோமோ என்ற கவலையும் பற்றிக் கொள்கின்றது
என்ன சொல்ல அண்ணா...! எல்லாமே எமக்கெதிராகிவிட்ட ஒரு சூழலில் என்ன சொல்ல என்றே தெரியவில்லை. அதிகமாக சிந்தித்தால் அதிகமாக கவலையும் கண்ணீருமே. ஆனால் அதற்காக சிந்திக்காமல் இருக்கவும் முடியவில்லை. அருமையான பகிர்வு..! தொடரட்டும்.
........
நன்றி.
2009 மே யுத்த முடிவிற்குப் பிறகு நானும் அவரை ஒரு பேட்டி கண்டிருந்தேன். அப்போதும் பெரியார் குறித்துப் பேசியிருந்தார்.
http://sajeek.com/audio/sathya.mp3
மேல் இணைப்பில் கேட்கலாம்
Post a Comment