பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பில் இரண்டரை தசாப்தங்களாக (1966 - 1991 ) இயங்கி வந்த சங்கரமுர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.
இந்த வேளை பி.பி.சி சங்கரண்ணா குறித்த மறைவுச் செய்தியை பி.பி.சி தமிழோசை தளத்தில் இருந்து பகிர்வதோடு, அவரின் குரல் ஒலிப்பகிர்வையும், அகவை எழுபதை பி.பி.சி தமிழோசை கண்டபோது நான் கொடுத்திருந்த பகிர்வையும் மீள் இடுகையாகத் தருகின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.
ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpexwmEiI2ws5kMHpUpGUPiWoCv04o_jkiB5WvdfZqIch_isFe8RJkCLu2XfuWBsI2KHTWkCgr6CQvyh3x2xT8ankjNlsExpR9PnTvgxAb5mVpdjhyPYqqNgOxyBzcelUBNSv3/s400/120910114524_shankar624a.gif)
தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.
அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.
சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.
கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.
மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.
00000000000000000000000000000000000000000000000000000000
அகவை எழுபதில் பி.பி.சி தமிழோசை - மீள் இடுகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcKxLJsaUZOX_Gqtu8MvyOzj827iSRwBTeVbaYYKxDlEoB85os9NjvBh5m3kZTaQp4_Ia1Jb5pgYqBqSAoxpF69-2SpfoxjnTwHiAMtH-96yUv3JEvlDn9yN6sfUQm7nEOtXp1/s400/bbc.jpg)
இன்றைக்கு உலகத்தில் தமிழன் பெருகிப் போயிருக்கும் இடமெல்லாம் ஒன்றோ, இரண்டோ பலதோ பத்தோ என்று 24 மணி நேர வானொலிகள் வியாபித்து விட்டன. ஆனால் வானொலி நிகழ்ச்சிகளின் தரமும், பகிர்வும் "பூசக் கொஞ்சம் சந்தனம் கிடைத்தால்" என்ற நிலையில் தான். ஆனால் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியிலேயே நச்சென்று ஒரு நாளில் புரட்டிப்போட்ட சமாச்சாரங்களை அடக்கி வானொலி ரசிகர் மனதில் ஆள்வதென்பது அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல எழுபது ஆண்டுகள் என்பது தமிழ் ஊடகத்துறையில் தமிழோசையின் தவிர்க்கமுடியாத ஆளுமை எனலாம். தானும் பயணித்துக் கூடவே உலக வானொலிகள் பலவற்றிலும் தவிர்க்கமுடியாது இருக்கும் அங்கமாக மாறிவிட்ட BBC தமிழோசையின் எழுபதாவது அகவையில் ஒரு சிறப்பு வானொலிப் படையலையும் எழுத்து ஊடகப் பகிர்வையும் கொடுக்க விழைந்தேன்.
அகவை எழுபதில் இந்த ஆண்டு தடம்பதிக்கும் BBC தமிழோசை குறித்த சிறப்பு வானொலிப் பகிர்வை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கிய சிறப்புப் பகிர்வு
ஒலிவடிவில்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9a5Ig3-6X9IENcoq6hBvkurKbAE6hbNLWuK5_QihAwVal74QKPIsrPiJMsaU7ICCx_RdTRh4ZnMnWaXPnzHz8k37pQNAKr7PtwRTuL_85TnsgPCNW1azUv4ubRfl-zDHJc87i/s400/wimal.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjctqlY00mcf1epN9Q3vBN_6Yeqc2dduziYRQQ2VsmWwQJUOFiD2dg_fOuMDlQ9izLT9U2YaC_N3uCG0QV6GI1IviZCKRHm2gXBhrY1f4_eyu5no0JJiUnfyyICGpnw3EXXNdaO/s400/sunda3.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOdRii9FIqKy0e47xCUFPa5fyLMobS3FpdNyRe77hPnk3m80UEoe_bNC6lDWxgM4YvT7CSjHxLc0qhyphenhyphenp-l-zaJecvvZ4srSFwfc8b-yAA_slEFGywTzPPiXq5uU_4BsnNuRtfz/s400/sunda2.png)
4 comments:
எந்த ஒருவரைப் பற்றியும் எவ்வளவு தகவல்கள் சேகரித்து விரிவாக எழுதுகிறீர்கள்! சங்கரண்ணாவின் குடும்பத்தினருக்கும் அவரது ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
amas32
மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
"ஓ.....எங்கள் சங்கரண்ணா! நீங்கள் ஒரு சிறப்பான ஒலிபரப்பாளர் மட்டுமல்ல, இதயங்களின் ஒருங்கிணைப்பாளர்கூட. உங்கள் "தமிழோசைக்குரல்" கேட்டு எல்லா உயிர்களும் சிலிர்த்தது. "தமிழோசைப்பித்தன்" என நான் எம்மடல்களில் அந்நாளில்,என்னைக்குறிப்பிட்டு எழுதிய போது, "தமிழோசைப்பித்தர்" என அடவுகட்டி அலங்கரித்தவரல்லவோ நீங்கள்! உங்களுடன் ஒரு முறையாவது சமீபமாக பேச முயன்றும், வாய்ப்பின்றி போனதுவே. உங்களின் எதுகை, மோனைகளே! எமக்கு வானொலி நிகழ்வுகளில் உச்சரிப்புத்தெளிவுக்கு உரமூட்டியவை. வாழ்க!நீங்கள் நல்ல தமிழாளர். 1991 ல் "புலிக்கண்" (ஆங்கிலமொழிப்பயிற்சி) ஒலிபரப்புக்கு முன், அறிமுக நிகழ்வுக்கு சென்னை பிரிட்டிஷ் தூதரகத்துக்கு வந்தபோது சந்தித்தேனே-"சந்தன மலரே சங்கரண்ணா". ஆயுள் முழுதும் மறவேன். உங்கள் ஆன்மா என்றைக்கும் "தமிழோசை'யைத்தான் சுற்றிவரும், எம் போன்ற ஆயிரமாயிரம் அன்பு நேயர்களுடன் ஒட்டிவரும். உங்களை நினைத்து வாடும் உங்கள் அன்பு நேயர்-தமிழோசைப்பித்தன்"
இந்த வலைப்பூவுடன் உறவாடுவதில் பெருமகிழ்வே! பல செய்திகள் இதில் இடம்பெறுதல் மன நிறைவைத்தருகிறது. தமிழகத்தின் நெல்லை(திருநெல்வேலி-பாப்பாங்குளம்)யில் பிறந்து அகில இந்திய வானொலியில் பணியாற்றி சிறப்பித்தபின், இலண்டன் பி.பி.சி-தமிழோசையில் ஏறத்தாழ 25 ஆண்டுகள், தமிழ்க்கோலோச்சி பெருமை பெற்ற நமது அன்பை மிகுந்து பெற்ற திரு.சங்கரண்ணா (சங்கரன்-சங்கரமூர்த்தி) அவர்கள் செப்டம்பர் 9, 2012 (ஞாயிறு)அமரரான செய்தியை அவர் பணிபுரிந்து புகழ்பரப்பிய தமிழோசையில் அறிவிக்கக்கேட்டு பதறிப்போனோம். அந்த அளவுக்கு அவரின் ஆளுமை நம்மிடத்தில் உறவாகியிருந்தது பலருக்கும் தெரிந்ததே...பொதுவானதே! எந்நாளும் அந்த தமிழுள்ளம் எழுப்பிய நாதங்கள் நம் நெஞ்சைவிட்டு நீங்காது. இந்நினைவுகளை மேலும் மெருகூட்டும் வகையில் உங்களின் வலைப்பூவிலும் இணைத்துள்ளது கண்டு பேருவகைக்கொள்வதுடன், மனமுவந்த நன்றிகள். இத்துடன் திரு.சங்ரண்ணாவின் இதயத்திலும், எம் போன்று பல்லாயிரம் அன்புள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள (அமரர்)திரு.சுந்தா(சுந்தரலிங்கம்) அண்ணாவின் தகவல்களையும் இதில் இணைத்துள்ளது கண்டு மிகுந்த நன்றிகள் பலப்பல. இவண் விழுப்புரம்- K.ஜமீல் அஹ்மத் (தமிழோசைப்பித்தன்)
Post a Comment