skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Monday, June 16, 2008

சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!

தங்கம்மா அப்பாக்குட்டி என்றதோர் ஈழத்தின் ஆன்மீகச் சொத்து, ஆருமில்லாப் பெண்களின் ஆறுதற் சொத்து, நேற்று சிவபூமியாம் ஈழபதி யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.தனது எண்பத்து நாலு வயது வரை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தைத் தன் ஆன்மீக நிலைக்களனாகவும், ஆதரவற்ற பெண்களின் புகலிடமான துர்க்கா மகளிர் இல்லத்தைத் தனது அறத்தின் நிலைக்களனாகவும் வைத்து அறத்தொண்டாற்றிய பெருந்தகை அவர். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் அவரது பிறந்த இடமான தெல்லிப்பழையில் இன்று நடைபெற்று தெல்லிப்பழை கட்டுப்பிட்டி மயானத்தில் தகனக் கிரிகைகள் நடைபெற்றிருந்தது.

ஈழத்தில் பிறந்த எவருமே தங்கம்மா அப்பாக்குட்டி என்னும் இந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஆன்மீகச் செம்மலைத் தெரியாமல் வாழ்ந்திருக்க முடியாது. அவரது சொற்பொழிவுகளும், சைவ சமயப் பாடநூல்களிலும், ஆன்மீக இதழ்களிலும் கொடுத்த அவர் தம் கட்டுரைகளும் இன்னும் என்னைப் போன்ற பலர் நெஞ்சில் பசுமரத்தாணியாய் இருக்கும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட இந்தச் சிவத்தமிழ்ச் செல்வியின் நினைவுப் படையலாக அவர் ஆற்றிய சொற்பொழிவுப் பேழையில் இருந்து "தாயான இறைவன்" என்னும் ஒலிப்பகிர்வைத் தருகின்றேன்.



இன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி சிறப்பு அஞ்சலி நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தேன். அதில் பங்கேற்று அஞ்சலிப் பகிர்வை வழங்கியோர்:

* ஆன்மீகப் பேச்சாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்,
* அபயகரம் ஆதரவற்றோர் உதவி அமைப்பின் நிறுவனர் திரு சிவானந்தன்,
* யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ்,
* சிட்னி வாழ் சைவத்தமிழ் அறிஞர் திரு.திருநந்தகுமார்,
* கம்பவாரிதி இ.ஜெயராஜ்,
* ஈழத்தமிழர் கழகம் அமைப்பின் தலைவர், மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* வானொலி மாமா திரு மகேசன் அவர்கள்
* திருநெறிச்செல்வர், சிவத்தமிழ்ச்செல்வியின் வழிகாட்டலில் ஆன்மீக, அறப்பணி ஆற்றிவரும் ஆறு திருமுருகன் அவர்கள்


அந்த நிகழ்ச்சியின் ஒலித் தொகுப்பைக் கேட்க (அளவு: 1 மணி நேரம் 30 நிமிடங்கள் 31 செக்கன்)



தரவிறக்கிக் கேட்க

யாழ்ப்பாணத்தில் இருந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வழங்கும் சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நிகழ்வின் தொகுப்பும், அஞ்சலிப்பகிர்வும்


துர்க்கா துரந்தரியின் ஆன்மீக, அறப்பணியின் வழி செயலாற்றும் சிவநெறிச் செல்வர் திரு.ஆறு.திருமுருகன் அவர்கள் வழங்கும் "சிவத்தமிழ்ச்செல்வியின் இறுதி நாட்களும் அஞ்சலிப்பகிர்வும்".


ஈழத்தின் ஆன்மீகச் செம்மல் வசந்தா வைத்திய நாதன் கொடுத்திருந்த அஞ்சலிப் பகிர்வு



அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் "கம்பவாரிதி" இ.ஜெயராஜின் அஞ்சலிப் பகிர்வு


ஈழத்தின் ஆன்மீகச் செம்மல் வசந்தா வைத்திய நாதன் நமது வானொலிக்குக் கொடுத்திருந்த அஞ்சலிப் பகிர்வின் எழுத்து வடிவம்

துர்க்காபுரம் துர்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவு யாழ்ப்பாண நாட்டுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஓர் பேரிழப்பு. மிகச்சிறந்த ஆளுமை மிக்க ஒரு பெண்மணி. ஆரம்பகாலத்திலே ஆசிரியராக இருந்து தன்னுடைய அறிவை வளர்த்துக் கொண்டவர். சொல்லையும் செயலையும் ஒருங்கு போல செயற்படுத்துபவர். அதுதான் அவருடைய திறமை. பலபேர் சொல்லுவார்கள், செய்ய மாட்டார்கள். ஆனால் சொல்லையும் செயலையும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்களாக கொண்டவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அவருடைய பல்வேறு பட்டங்களிலே "துர்க்கா துரந்தரி" என்ற பட்டம் அவருக்கு மிகப்பொருத்தமானது. துரந்தரர் என்ற சொல்லுக்கு பாரத்தை ஏற்றுக் கொண்டவர் என்பது பொருள். துர்க்கா துரந்தரி என்று சொன்னால் துர்க்கையினுடைய பாரத்தை ஏற்றுக் கொண்டவர். உண்மையிலேயே அந்த துர்க்கையினை இதயதெய்வமாகக் கொண்டு அந்த ஆலயம் மேம்படச் செய்தவர் அவர். அவருடைய சொல் அவருடைய செயல் இரண்டுமே மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. ஒரு ஆலயம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தெல்லிப்பழை துர்க்கை ஆலயம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பழைய காலங்களிலே கோயில்களிலேஅறங்காவலர்கள் ஆண்களாகவே இருந்தவர்கள். நானறிந்த வகையில் பெண்கள் அறங்காவலர்களாக எந்தக் கோயில்களிலும் இருந்ததில்லை.ஆனால் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தான் முதன்முதலாக தெல்லிப்பழையிலே அறங்காவலராகப் பணியேற்று அதைச் செம்மையாக நடாத்தியவர்.

ஆலயம் என்பது வெறும் வழிபாட்டு இடம் மட்டுமல்ல. அந்த ஆலயம் என்பது பலவேறு பணிகளுக்காக ஏற்பட்டது. நாக்கள் பழைய காலங்களிலே பார்க்கும் போது ஆலயங்கள் தேர்தல் களங்களாக இருந்தன, ஆதுலர்சாலைகளாக இருந்தன, சிறந்த நூலகங்களாக இருந்தன, வாழ்வர்றோருக்கு வதிவிடங்களாக இருந்தன, சிறந்த யாசக மண்டபங்களாக இருந்தன, நடனச் சாலைகளாக இருந்தன, நாடகச் சாலைகளாக இருந்தன, உணவு விடுதியாகவும் இருந்தது என்பது பழைய நூல்களில் இருந்து எங்களுக்குக் கிடைக்கின்ற செய்திகள். ஆனால் இப்பொழுது அதை நடைமுறைப்படுத்தியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். அதுதான் நான் அவரிடம் மிகவும் வியந்த ஒன்று. அவர் அந்த ஆலயத்திலே வருகின்ற அந்த வருவாயை மிகச்செம்மையாகச் செம்மைப்படுத்தி எப்படிப் பயன்படுத்தவேண்டுமோ "வளர்வதன் பார்த்தியுள் நீர் சொரிந்தற்கு" என்று வள்ளுவர் சொல்லுவது போல அதை வளர்ச்சிக்கான பணிகளிலே ஈடுபடுத்தியவர். அவர் செய்த அறப்பணிகள் என்பது பட்டியலிட்டுக் கூற முடியாது. ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரித்தல், கைமை வாய்ந்த பெண்களுக்கு உதவி செய்தல், அதுமட்டுமல்ல உணவுச்சாலைகள், ஓவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஆலயத்திற்கு வருபவர்களுக்கு உணவளித்தல் என்று பலவகையான அறப்பணிகளை அவர் ஏற்படுத்தியவர். அதுமட்டுமல்ல அவர் தன் பிறந்த நாளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு, மருத்துவ நிலையங்களுக்கு, வளருகின்ற சிறார்களுக்கு என்று பலவிதத்திலும் உதவி செய்தவர்.

ஒரு ஆலயம் எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு தெல்லிப்பழை ஆலயம் தான் ஒரு முன்மாதிரியாக இருந்தது. அதனைப் பல ஆலயங்களும் பின்பற்ற வேண்டும். இன்று தெல்லிப்பழை ஆலயம், தங்கம்மாவினுடைய பெயரைச் சொன்னால் நன்கொடைகள் வந்து குவிகின்றன. காரணம் என்ன, மக்கள் அவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை. தாங்கள் கொடுக்கின்ற அந்தப் பணமானது வீணாகாது, அது மிகவும் பயன்பாடுள்ள பணிகளுக்குச் சொல்லும் என்கின்ற நம்பிக்கை தான். இன்று உலகத்திலே எங்கெங்கோ இருக்கின்ற மக்கள் கூட அவர் கேட்டவுடன், அவருடைய பெயரைச் சொன்னவுடன் தயங்காமல் பண உதவி செய்கின்றார்கள். அதனை மிகச் சிறந்தமுறையிலே ஆற்றுப்படுத்துகின்ற தன்மை தங்கம்மா அவர்களுக்கு மட்டுமே உண்டு. இதை நான் துணிந்தே சொல்வேன்.

ஆறுமுக நாவலருக்குப் பிறகு சமயத்தையும் தமிழையும அதுமட்டுமல்ல சமயத்தையும், சமூகத்தையுமே தன்னுடைய இரண்டு கண்களாகக் கொண்டு சமயப் பணி செய்பவர்கள் சமூகப் பணி செய்வதில்லை என்ற குறைபாட்டை நீக்கியவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். பழைய காலங்களிலே அப்பர் பெருமான், சம்பந்தர் பெருமான் ஆகியோர் ஆலயங்களிலே ஆன்மிக சமயப் பணிகளோடு சமூகப் பணிகளையும் செய்தார்கள் என்று நாங்கள் பார்க்கின்றோம். ஆனால் நிதர்சனமாக தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் தான் வாழ்ந்து காட்டியவர்கள். செயலிலே செய்து காட்டியவர். அப்படிப்பட்ட ஒரு பெருந்திருவாட்டி. அம்மா என்று சொன்னாலே தங்கம்மா தான். பெயரிலே மட்டும் தங்கவில்லை, அவருடைய செயல்கள், கல்வி, ஒழுக்கம், அவர் மற்றவர்களுக்குக் காட்டுகின்ற முன்மாதிரி, வாழ்ந்து காட்டிய பாதை எல்லாமே போற்றுதற்குரியது.

பெயரிலேயே தங்கத்தை அமைத்துக் கொண்ட அவர்கள் ஒரு சகாப்தம். எப்படி நாவலருடைய வாழ்க்கை ஒரு சகாப்தம் என்று சொல்லுகிறோமோ அது போல தங்கம்மா அவர்களுடைய வாழ்க்கையை ஒரு சகாப்தம் என்றே கொள்ளலாம். அப்படி வாழ்ந்து காட்டிய ஒரு பெரிய மலை இன்று நம்மிடமிருந்து இல்லாமல் போயிருக்கின்றது. எத்தனையோ ஆதரவற்ற கரங்களுக்கு ஆதரவளித்த கரமானது இன்று நழுவி விட்டது என்று நினைக்கும் பொழுது மனம் உருகுகின்றது.

இனி ஒரு தங்கம்மா கிடைப்பாளா? இனி ஒரு பெண்மணி பிறப்பாளா இந்த உலகத்திலே? கருவிலேயே திரு வாய்த்தவள் அவள். ஆகையினால் தான் மிக உயர்ந்த நிலையிலே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு மற்றவர்களையும் வாழச் செய்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.
அவருடைய இழப்பை வெறும் வார்த்தைகளினாலே நாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் அந்த வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டவேண்டும். உண்மை, சத்தியம், நேர்மை, அஞ்சாத நெஞ்சம், எத்தனையோ இடுக்கண்கள் வந்த காலத்தில் எல்லாம் அந்த இடுக்கண்களுக்கெல்லாம் இடுக்கண்களை ஏற்படுத்தி நிமிர்ந்து நின்றவர்கள் அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இருந்து நாங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம், ஏராளம். அப்படி வாழ்ந்த அந்தப் பெருந்திருமகளுக்கு, பெருந்திருவாட்டிக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம். அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.


டிசெம்பர் 1990 ஆம் ஆண்டு மல்லிகையின் அட்டைப்படக்கட்டுரையாக செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி பற்றி கலாநிதி நா.சுப்ரமணியன் அவர்கள் வழங்கிய கட்டுரையில் சில மாற்றங்களோடு மீள்படைப்பாகத் தருகின்றேன்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

இது அறிமுகம் அல்ல.
இவருக்கு அறிமுகத்துக்கான அவசியமும் இல்லை.
தமது நாவன்மையால் நானிலம் அளந்த பெருமை இவருக்கு உண்டு.

செஞ்சொற் புலமையால் சிவம் பெருக்கித் தவம் பெருக்கும் சீலத்தால், அனைத்துக்கும் பல்லாண்டுகட்கு முன்பே அறிமுகமாகிவிட்டவர் இவர். தெல்லிப்பழைத் "துர்க்கா தேவி" தேவஸ்தானத்தின் அறங்காவற் பணிக்கு இவர் சட்டபூர்வமான தலைவர். ஆனால் ஈழத்தின் சைவாலயங்கள் பலவற்றின் அறங்காவற் பணிகளுக்கும் இவரே ஆதர்ச-மானசீகத் தலைவர்.

இவர் சொற்பெருக்காற்றிய மேடைகள் ஆயிரக்கணக்கில். இவர் முன்னின்று நிகழ்த்திய சமயப்பணிகள்-அறப்பணிகள் பல. இவர் எழுதியனவும்-இவரைப் பற்றி எழுதப்பட்டனவும் பலப்பல. இவரைக் கெளரவித்ததன் மூலம் தம்மைத் தாமே கெளரவித்துக் கொண்ட நிறுவனங்களும் பல.

சில பக்கங்களில் இவரை அறிமுகம் செய்து விடுவது உடன் சாத்தியமல்ல. இவரைப் பற்றியும், இவர் சார்ந்த பொது வாழ்வு பற்றியுமான சில எண்ணங்கள் இங்கே பதிவாகின்றன; அவ்வளவே.

தெல்லிப்பழைக் கிராமச் சூழலில், அப்பாக்குட்டி-தையற்பிள்ளை தம்பதிகளுக்கு, 1925-01-07 அன்று பிறந்தவர் 'தங்கம்மா'; சைவச்சூழல் இவரை வளர்த்தது. ஆசிரியப்பணி இவரை அழைத்தது. ஈழத்தின் பல பாகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். அப்பணியோடு தொடர்புடைய சமய-சமூக சேவைகளில் நாட்டம் கொண்டார்; செயற்பட்டார். இவை அவரது பொது வாழ்வின் முதல் நிலை.

தமிழையும் சைவத்தையும் தனிக்கவனம் செலுத்திக் கற்றார். இக் கல்வி அவருக்கு 'பண்டிதர்', 'சைவப்புலவர்' ஆகிய தகுதிகளை ஈட்டிக் கொடுத்தது. இப்புலமைத் திறன்களின் துணையுடன் அவர் சைவத்தின் உயிர் நிலையை உணரத் தலைப்பட்டார்; அவ்வாறு உணர்ந்தவற்றைச் சாதாரண பொதுமக்களும் உணரும் வண்ணம் விரித்துரைக்கும் ஆர்வத்தால் தூண்டப்பெற்றார். இவ்விரிவுரை முயற்சியில் அவர் எய்திய தேர்ச்சியே அவரது பொது வாழ்வின் இரண்டாவது கட்டத்துக்கு அடிப்படையாயிற்று. சொற்பொழிவாற்றல் அவரது ஆளுமையின் முதன்மை அம்சமாயிற்று. சமூகம், பிரதேசம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவர் அறியப்படலானார். ஈழத்தின் பல்வேறு பிரதேச ஆலயங்களும், சமய-சமூக நிறுவனங்களும் அவரை வாழ்த்தி, வணங்கி, வரவேற்று அவரது உரைகளைச் செவிமடுத்து மகிழ்ந்தனர்; கெளரவங்கள் செய்து மனநிறைவடைந்தனர்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பொதுவாழ்வின் மூன்றாவது நிலை அறங்காவற்பணியாகும். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் அறங்காவற் குழுவிலே 1966இல் பொருளாளராகப் பணி தொடங்கிய இவர் 1977 இல் அக்குழுவின் தலைமைப் பொறுப்பெற்றார்; அவ்வாலயத்தை ஓர் அறச்சாலையாக, ஈழத்தின் முதன்மை நிலைக்குரிய சைவத் தெய்வ நிலையமாக வளர்த்தார்; அங்கிருந்தவாறே ஈழத்துச் சைவாலயங்கள் பலவற்றின் அறப்பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும் வளர்த்து வந்தார்; அனைத்துலக சைவத்தமிழ்ப்ப் பண்பாட்டுக்கும் ஓர் ஆதர்ச தலைவியாகவும் திகழ்ந்தார்.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஒரு சொற்பொழிவாளர் என்ற வகையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மேடைகண்டவர். பாடசாலைப் பருவத்திலேயே மேடையேறத் தொடங்கிவிட்ட அவர் 1950-களின் ஆரம்ப ஆண்டுகளின் சமய-சமூக மேடைகளில் தனிச் சொற்பொழ்வுகளும், தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தத் தொடங்கி விட்டார். திருமுறைகள், ஏனைய தெய்வத் தமிழ்ப் பிரபந்தங்கள் என்பன இவரது சொற்சுவையோடிணைந்து சுவைஞர்களின் செவிநுகர் கனிகள் ஆயின. மேற்படி ஆக்கங்களின் உயிர் நிலைகளான தத்துவங்களும் உணர்வு நிலைகளான இலக்கியச் சுவைகளும், சராசரி ,மனித அநுபவங்களுக்கு இவரால் வழங்கப்பட்டன. இவற்றை அநுபவத்தவர்கள் இவம்மையாருக்கு வழங்கிய கெளரவ விருதுகள் பின்வருமாறு:

'செஞ்சொற் செம்மணி' - மதுரை ஆதீனம் (1966)
'சிவத்தமிழ் செல்வி' - காரைநகர் மணிவாசகர் சபை(1970)
'சித்தாந்த ஞான கரம்' - காஞ்சி மெய்கண்டான் ஆதீனம் (1971)
'சைவ தரிசினி' - தமிழ்நாடு இராசேசுவரி பீடாதிபதி (1972)
'திருவாசகக் கொண்டல்' - சிலாங்கூர் இலங்கைச் சைவச் சங்கம் (1972)
'திருமுறைச் செல்வி' - வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானம் (1973)
'சிவமயச் செல்வி' - ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் (1974)
'சிவஞான வித்தகர்' - அகில இலங்கை இந்து மாமன்றம் (1974)
'துர்க்கா துரந்தரி - துர்க்காதேவி தேவஸ்தானம் (1974)
'செஞ்சொற்கொண்டல்'- மாதகல் நூணசை முருகமூர்த்தி தேவஸ்தானம் (1978)
'திருமொழி அரசி' - இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் தேவஸ்தானம் (1983)

இவரது சொற்சுவைக்கு இவற்றை விட விளக்கம் அவசியமில்லை. மேற்படி விருதுகளிற் 'சிவத்தமிழ்ச் செல்வி', 'துர்க்கா துரந்தரி' என்பவை அவரது இயற்பெயர் எனத் தக்கவகையில் நிலைத்த வாழ்வு பெற்றுள்ளன.

செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் சொற்பொழிவாளராக உருவான காலப்பகுதியின் வரலாற்றில் ஈழத்துச் சைவாலயங்களில் நிகழத் தொடங்கிய குறிப்பிடத்தக்க மாற்றமொன்றினை இங்கு சுட்டுவது அவசியம். 1960 களின் முற்பகுதி வரை சைவாலயன் விழாக்களில் 'சின்ன மேளம்' எனப்படும் சதிர்க்கச்சேரி முக்கிய கலைநிகழ்வாக இடம்பெற்று வந்தது. தெய்வீகச் சூழலுக்கு மாறான உணர்வோட்டங்களை அது தூண்டி நின்றது. அந்நிகழ்ச்சியை முற்றாக அப்புறப்படுத்தி அதன் இடத்தில் ஆத்மீக விருந்தாகச் சமயச் சொற்பொழிவை முதன்மைப்படுத்தி வளர்த்தெடுக்கும் எண்ணப்பாங்கு சைவ உலகில் முளை விட்டது. இவ்வெண்ணப்பாங்கிற்குச் செயல் வடிவம் தந்தவகையில் முதன்மையாக வைத்துக் கணிக்கப்படத்தக்கது சிவத்தமிழ் செல்வி அவர்களின் சொற்பொழிவுப்பணி.

இவரது வழிநடத்தலிலே தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் பெளதீக நிலையில் பல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இராஜகோபுரம், தீர்த்தத் தடாகம், கல்யாண மண்டபம், எனப்பலவாக இவற்றின் பட்டியல் விரியும். ஆனால் ஆலயம் என்பது கட்டிடம், கோபுரம், மண்டபங்கள், தடாகங்கள் என்பன அல்ல; கிரியை முறைகள் என்பன கூட அதன் பிரதான அம்சங்கள் அல்ல. அவை யாவற்றுக்கும் அப்பாலான 'தெய்வ சாந்நித்தியம்' தான் ஆலயத்தின் அடிப்படை அம்சம். அத்தெய்வீகத்தை வெளிப்படுத்தும் துணைக்கூறுகளாகவே மேற்படி பெளதீக அம்சங்கள் அமைவன. தெய்வ சந்நிதனத்தின் உயிர் நிலையான கூறு அன்பு.
உயிர்களை நேசிக்கும் அன்பு. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பல்வேறு செயற்பாடுகளும் இந்த அன்பின் அடித்தளத்தில் அமைந்துள்ளன. உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்து குவியும் அத்தனை செல்வமும் பொதுநல நோக்கிலே உரிய வகையில் நிர்வகிக்கப்படுகின்றன. பண்பாட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்புக்களாகின்றன. தேவஸ்தானம் தானே ஒரு 'மகளிர் இல்லத்தை' நிர்வகிக்கிறது. இத்தனைக்கும் வழி சமைத்து ஆலோசனை வழங்கி செயற்படுத்தி நின்ற தலைமை 'துர்க்கா துரந்தரி'யுடையது.

சிவத்தமிழ் செல்வியவர்கள் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் பல மாநாடுகளிற் பங்கு பற்றி உரை நிகழ்த்தியவர்; பல அரங்குகளுக்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தவர்.

சமய சம்பந்தமாக எழும் பிரச்சனைகளிலே இவரின் கருத்துக்கள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன.
'அம்மா என்ன சொல்கிறா' என்பது பொதுவாக எழும் வினா. தங்கம்மா அப்பாக்குட்டி சொன்னாற் சரி, இது சைவ மக்கள் அவரது கருத்துக்களுக்கு ஏகோபித்த அங்கீகாரம். இவை இந்த அறம் வளர்த்த அன்னையின் தலைமைத் தகுதிக்குச் சான்றுகள்.

நன்றி:
* சிவத்தமிழ்ச் செல்வியின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும்
* இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் உதவிய ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள்
* ஒலிபரப்பில் உதவிய ஈழத்தமிழ்ச் சங்கத் தலைவர் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான திரு ஈழலிங்கம்
* "சிவத்தமிழ் ஓசை" ஒலிவட்டு (கிருபா போட்டோ & றெக்கோடிங் சென்றர், மல்லாகம்)
* "மல்லிகை முகங்கள்", மல்லிகைப்பந்தல் வெளியீடு ஜனவரி 1996
* பிரத்தியோகப் படம் உதவி: வெண்காட்டான்





















Posted by கானா பிரபா at 6:06 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

12 comments:

G.Ragavan said...

அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.

சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!

இந்த பொழுதில் இவரைக் கேட்க நேர்ந்ததே!

அவருடைய ஆன்மா சிவபதம் அடைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வணங்குகிறேன்.

June 17, 2008 7:39 AM
தமிழன்-கறுப்பி... said...

ம்ம்ம்ம்....
யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாதவர்களுள் இவரும் ஒருவர்...

June 17, 2008 7:48 AM
HK Arun said...

ஈழத் தமிழர்களின் தனித்துவத்தை வெளிகாட்டும் முகமான எம்மவர்களின் சிறப்பினை உலகறிய வைக்கும் உங்கள் முயற்சி என்றுமே பாராட்டுக்குறியதே.

இவரது சொற்பொழிவை இதுவரை நானும் கேட்டதில்லை.

உங்களின் முயற்சியால் இன்று எனக்கும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று இன்னும் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.

நன்றி

June 17, 2008 8:20 AM
ஆயில்யன் said...

// G.Ragavan said...
சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!//

உண்மைதான்!


சொற்பொழிவினை இங்கு பதிவிலேற்றி பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றிகளுடன்..!

June 17, 2008 12:53 PM
Anonymous said...

இன்று நானும் காலை செய்திதாளில் படித்தேன். அவரின் ஆத்மா ஷாந்தி அடையட்டும்.

June 17, 2008 1:47 PM
கானா பிரபா said...

//G.Ragavan said...
அமைதியும் அருளும் பொலியும் முகம். இத்தனை நாள் இவரது சிவச் சொற்பொழிவுகளைக் கேளாமல் போனேனே.

சைவச் செம்மல்கள் அனைவரும் நம்மை விட்டுப் போகிறார்களே...அடுத்து எவரிடம் சென்று சொற்பொழிவுகளைக் கேட்பது!!!!//

வணக்கம் ராகவன்

அம்மாவின் பெருமைகளை இதுவரை அறியாத உங்களைப் போன்ற அன்பர்களுக்காக அவரின் சொற்பொழிவொன்றை இட்டிருக்கின்றேன். நீங்கள் சொன்னது போல் இப்படியான ஆன்மீகச் சொத்துக்கள் பல நம்மிடமிருந்து போவது வருத்தமளிக்கும் செய்தி.

June 17, 2008 4:29 PM
கானா பிரபா said...

// தமிழன்... said...
ம்ம்ம்ம்....
யாழ்ப்பாணத்தின் மறக்க முடியாதவர்களுள் இவரும் ஒருவர்...//

வருகைக்கு நன்றி தமிழன்


// HK Arun said...
உங்களின் முயற்சியால் இன்று எனக்கும் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்னைப்போன்று இன்னும் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்.//

மிக்க நன்றி அருண்

June 17, 2008 5:42 PM
கானா பிரபா said...

வருகைக்கு நன்றிகள் ஆயில்யன் மற்றும் மயூரேசன்

June 17, 2008 10:21 PM
ஹேமா said...

எங்கள் வாழ்வின் வழிகாட்டிகளூள் இவரும் ஒருவர்.இன்னும் வாழ்ந்திருக்கலாம்.எங்கள் யாழின் ஒரு அற்புத அம்மையார்.அவரது ஆத்மா எங்களை வழிநடத்தி அமைதி காக்கும்.பிரபா, பல ஆண்டுகளுக்குப் பின் அவரது சொற்பொழிவைக் கேட்டேன் உங்கள் தயவில் நன்றி.

June 19, 2008 3:42 AM
கானா பிரபா said...

வணக்கம் ஹேமா

"சிலர் வாழும்போதே செத்துப்போனவர்களாக யாருக்கும் பயனில்லாமல் இருப்பார்கள், சிலர் இறந்த பின்னும் உயிரோடு இருக்கும் படி போல் நிலைத்து இருப்பார்கள்"
இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் திருநந்தகுமார் அவர்கள் இப்படி சொன்னது அம்மையாருக்கும் மிகப்பொருத்தம்.

June 19, 2008 7:55 PM
Umesh said...

Dear Praba Anna thanks for your valuable services. I am in jaffna now. I have created the blogspot for me. I don't know how to use the tamil fonts for my page. Could u explain me how to use the tamil fonts in the blog. Thankin you
yours sincerly
umesh

June 20, 2008 5:44 PM
கானா பிரபா said...

வணக்கம் உமேஸ்

எங்களூர் உறவை வலைவழி காண்பது மட்டற்ற மகிழ்வைத்தருகிறது. எனது மின்னஞ்சல் முகவரியான kanapraba@gmail.com இற்கு ஒரு மடல் போடுங்கள் விபரமாகச் சொல்லித் தருகின்றேன். அத்தோடு உங்கள் பதிவை தமிழ்மணத்திலும் சேர்க்க உதவுகின்றேன்.

June 20, 2008 9:00 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ▼  June 2008 (3)
      • "எரியும் நினைவுகள்" உருவான கதை
      • சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!
      • மேளச்சமா...!
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes