skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Tuesday, December 05, 2023

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 18 ஆண்டுகள் ❤️ ✍🏻

இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 18 ஆண்டுகளை நிறைவு செய்து 19 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

இதுவரை 

467 பதிவுகள் ✍🏻

"ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுமாக"

மடத்துவாசல் பிள்ளையாரடி தளத்திலும்

http://kanapraba.blogspot.com/

881 பதிவுகள் ✍🏻

"என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் நல்மருந்தாய் அமையும் 

இசைப் பகிர்வுகளுக்காக"

றேடியோஸ்பதி தளத்திலும்

http://www.radiospathy.com/

139 பதிவுகள் ✍🏻

"எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப் பிடிக்கும் அதற்காக"

உலாத்தல் தளத்திலும்

http://ulaathal.com

என்று வகைப்படுத்தி எழுதியிருக்கிறேன், இன்னும் தொடர்வேன்.

146  பதிவுகள் ✍🏻

வீடியோஸ்பதி தளத்திலும்

https://www.youtube.com/c/videospathy

காணொளி ஊடகத்துக்காக வீடியோஸ்பதி வலைத் தளம், இரண்டு வருட காலத்துக்குள் கணிசமான இடுகைகளை அதில் இட்டிருக்கிறேன். 

தொடர்ந்து இன்னும் இதில் தீவிரமாக இறங்கவுள்ளேன்.

தவிர ஈழத்து முற்றம், இசையரசி, கங்காரு தேசம் போன்ற குழுமத் தளங்களிலும் பங்களித்திருக்கிறேன். அவை தனிக்கணக்கு.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன். எப்பேர்ப்பட்ட வரம் இது.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை 

✍🏻 “கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி"

✍🏻 "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள்  நோக்கி”

✍🏻 “அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்”

✍🏻  “SPB பாடகன் சங்கதி” - 3 பதிப்புகள்

✍🏻 “அது எங்கட காலம்”  - ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல்” - திருத்திய பதிப்பு 

ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறேன். 

என்ற எனது நான்காவது படைப்பு.

கடந்த ஆண்டு முதல் podcasting இல் களமிறங்கி உள்ளேன். 

Spotify, iTunes, Amazon Music இன்ன பிற podcast ஆகிய தளங்களில் kanapraba என்ற id வழியாக என் podcast பகிர்வுகளைக் காணலாம்.

https://open.spotify.com/show/25ZvXOpdQymPa62Btp8GNG

Podcast மற்றும் Short videos இவற்றை இன்னும் அதிகமாகப் பகிர்வது என்னுடைய அடுத்த முயற்சி.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்

கானா பிரபா

05.12.2023

Posted by கானா பிரபா at 12:39 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, November 12, 2023

யாதும் யாவரும்.... திரைப்பார்வை – கானா பிரபா

நம் தமிழ்சமூகத்தில் காலாகாலமாகப் பேணப்பட்ட வாழ்வியலின் மீறல்களை நாவல் இலக்கியம் அளவுக்குத் திரை இலக்கியம் அதிகம் அரவணைக்கவில்லை. மாறாக மலையாளத் திரைச் சித்திரங்களில் இவ்விதமான கட்டுடைப்புகளை சீரியஸான படைப்புகளாகவோ அல்லது நகைச்சுவை கூட்டிக் கொடுத்தவையாகவோ வந்திருக்கின்றன.

தமிழில் அவ்வப்போது “விடுகதை” படம் போல உருவாக்கப்பட்ட முழு நீள சீரியஸ் சினிமாக்களின் வர்த்தகத் தோல்விகளும் இப்படியான முயற்சிகளுக்கு முடிவு கட்டி விட்டன.

“யாதும் யாவரும்" படத்தைப் பொறுத்தவரை நாம் காணும் உலகில் நிகழும் உறவுச் சிக்கல்கள், ஒற்றைப் பெற்றோரின் மன உணர்வுகள் போன்றவற்றை மிகவும் யதார்த்தமாகப் படைத்திருக்கிறது எனலாம்.

படத்தின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெவ்வேறு விதமான நேசிப்புத்தனம் மிக்கவர்களாக, அவர்களை நியாயபடுத்தக்கூடிய அளவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்களில் அந்த “விக்ரமின் அம்மா” கூட விதிவிலக்கு அல்ல.

 “யாதும் யாவரும்” காட்சி முடிந்து பல மணி நேரம் கடந்தும் அந்தந்தப் பாத்திரங்கள், அவர்களின் உறவுமுறைகளை இப்போது நினைத்தாலும் ஏதோ நாம் நேரில் சந்தித்துப் பழகிய மனிதர்களைச் சந்தித்து விட்டு வந்தது போல மனப்பிராந்தி எழுகின்றது.

தாய், மகள், அவர்களின் நண்பி என்று நீண்டு விக்ரமின் குடும்பம் வரை அது தொட்டு நிற்கின்றது.

 இவ்வளவுக்கும் இந்தப் படத்தில் நடித்த ஒரு சிலர் தவிர மீதிப் பேர் மரபு வழி வந்த நடிகர்கள் அல்ல, இதுதான் அவர்களுக்கு முதல் திரை அனுபவம். ஆனால் அந்தக் குறையே இல்லாத அளவுக்கு நேர்த்தியான, யதார்த்தபூர்வமான நடிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார்கள். வசன அமைப்பிலும் ஒவ்வொருவரின் குணாதிசியம் வெளிப்படும் வண்ணம் நடிப்பு மிளிர்கின்றது. 

 திடீரென்று வரும் விக்ரமின் குடும்பம் அதுவரை படத்தின் ஓட்டத்துக்கு மாறுபாடான காட்சி மற்றும் வசன அமைப்பில் வந்தாலும், நாடகத்தன்மை இல்லாத திரைமொழிக்கேற்ப அந்தக் காட்சி அமைக்கப்பட்டதால் தான் பார்வையாளர் மத்தியில் வெடிச்சிரிப்புகள் எழுந்தன. அது எப்படி இந்தப் படத்தில் இணைந்து கொண்ட எல்லோருமே நிறைவாக, ஒருமித்துப் பங்களித்திருக்கிறார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகின்றது.

 ஒவ்வொரு பாத்திரங்களின் நுண்ணிய உணர்வுகளுக்கு அனுதாபம் தேடும் காட்சி அமைப்போ வசனங்களோ இல்லாது நடைமுறை வாழ்வியல் இந்த மாதிரியான சிக்கல்களை எவ்வாறு நாம் கையாள்வோமோ அவற்றைக் கச்சிதமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

 பல்லின கலாச்சாரச் சூழலில் சந்திக்கும் உறவுத் தேடல்களின் பிரதிபலிப்பாகக் கேரள சமூகமும் இந்தப் படைப்பில் இணைந்து புலம்பெயர் வாழ்வியலின் கண்ணாடியாகக் காட்டுவது ஒருபுறமென்றால், இந்தப் படத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட இளைய சமுதாயம் தேர்ந்தெடுக்கும் ஒரு பாலின உரிமை குறித்த பார்வையை மிகுந்த பொறுப்புணர்வோடு கையாண்டிருக்கின்றார் இயக்குநர். 

 தொடக்கத்திலே வரும் “நீ தாயா” https://www.youtube.com/watch?v=mmhpCNWrPSQ பாடல் விரியும் போதே சிலிர்த்து விட்டது, இந்தமாதிரி உணர்வைப் நம்மவர் படங்களில் காண்பதே புது அனுபவம். போதாக்குறைக்கு அரங்கத்தில் இருந்த இள வட்டங்களில் இருந்து பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த நடுத்தர வயதுக்கார் எல்லோருமே ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவைக்குப் பலமாகச் சிரித்தும், காட்சிகளில் பட்டென்று தெறிக்கும் வசனங்களுக்குக் கைதட்டி மகிழ்ந்தும் பார்த்ததை உணர்வதும் கூட உள்ளூர மகிழ்வை எழுப்பியது.

“யாதும் யாவரும்” படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் இடம், பொருள், ஏவல் கொண்டு கச்சிதமாக ஒட்டிக் கொண்டது மட்டுமல்ல, அவை மூன்றும் மூன்று பரிமாணங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. போதாக்குறைக்குப் படத்தின் முடிவிலும் எழுந்து போக முடியாமல் இரண்டு வகையான பாடல்களின் கோவை அமைந்ததும் சிறப்பு.

 பின்னணி இசை காட்சிகளோடு பின்னிப் பிணைந்து வலுவூட்டுகிறது. சில இடங்களில் அமைதி காத்து, ஓய்வெடுத்து வெளிப்பட்டிருக்கலாம். அப்போது காட்சியின் வீரியத்தையும், ஒலியமைப்பின் ஆளுமையையும் உய்த்துணர இன்னும் வசதியாக இருந்திருக்கும்.

 ஒளிப்பதிவில் உள்ளரங்கக் காட்சிகளோடு போட்டி போடும் வெளிப்புறப் படப்பிடிப்பில் சிட்னியின் அழகைத் திரட்டித் திரையில் பார்ப்பதே இன்பகரமானதொரு அனுபவம்.

படத்தின் ஆரம்பத்தில் அமைந்த காட்சி மற்றும் உடையலங்காரப் போட்டியோடு அமைந்த காட்சி இவற்றுக்குப் பயன்பட்ட Green mat தொழில்நுட்பத்தை இன்னும் நுட்பமாகக் கவனித்திருக்கலாம்.

 ஆரம்பத்தில் ஒரு கதையோடே தட்டையாகப் போகப் போகிறதோ என்ற உணர்வு எழுந்த நிலையில் அந்த ஒரு கதை பல கதைகளின் திறவுகோலாய் அமைந்து, ஒரு எதிர்பாராத திருப்பத்தையும் கொடுத்ததை நிச்சயமாக அதிகம் பேர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அங்கே தேர்ந்த திரைமொழிக்கான உழைப்புத் தெரிகின்றது.

 “பொய்மான்” திரைப்படம் எப்படி ஒரு முழு நீளத்திரைப்படத்தைப் பார்ப்பதற்கான தயார்படுத்தலைத் தந்ததோ அதற்கு அடுத்த படைப்பு “யாதும் யாவரும்” அந்தத் தயார்படுத்தலுக்குப் பரிபூரணமான தீனி கொடுத்திருக்கிறது.

தன் முந்திய படைப்போடு போட்டி போட்டு இன்னொரு பரிமாணத்தில் மிளிர்ந்திருக்கும் படைப்பாளி Dr ஜெயமோகன் மற்றும் குழுவினருக்கு படம் பார்த்த பார்வையாளர் மன உணர்வில் இருந்து சொல்ல வேண்டுமென்றால் “சபாஷ்”.

 “யாதும் யாவரும்” புலம்பெயர் தேசத்தின் பேசாப்பொருளைப் பேசத்துணிந்த நேர்த்தியான படைப்பு.

 கானா பிரபா.

12.1.2023


Posted by கானா பிரபா at 8:45 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, October 29, 2023

வேலு பரி படைத்த “மெளனத் தீவு” நூல் நயப்பு கானா பிரபா


இந்த நாவலைப் படித்த போது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கால இயந்திரத்தில் என பால்யகாலத்துக்குப் போய் விட்டேன். அந்தக் காலத்தில் தினம் ஒரு புத்தம் என்று வெறி கொண்டு படித்த போது நமக்குப் பெருந்தீனியாக வாய்த்தவர்கள் வாண்டு மாமா என்ற எழுத்தாளரும், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா போன்றோர். 

அது போல் நம் ஈழ வரலாற்றை நாவல் வடிவில் கொடுத்த வகையில் செங்கை ஆழியான் மிக முக்கியமானதொரு படைப்புலகப் பணியைச் செய்திருக்கிறார்.

அந்த நாட்களில் நாம் படித்த சிறுவர் நவீனங்கள் இன்னமும் பசுமரத்தாணி போல் நம் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. 

காரணம் அழகு தமிழ் விளையாடும் எழுத்து நடையில் வீர தீரம் நிறைந்த வரலாற்றுப் பின்னணியோடு அவை எழுதப்பட்டிருக்கும்.

இங்கே பரி அவர்களது மெளனத்தீவு நாவலைப் படித்து முடித்த பின்னர் அந்த நாள் இனித்த இலக்கியச்சுவை தான் மனதில் சப்புக் கொட்டியது.

ஈழத்தில் நம் கிராமிய வாழ்வியலை அவர் எழுத்தில் படிக்கும் போது நாம் வாழ்ந்த அந்தக் காலம் பசுமையாக முளைக்கின்றது. அவ்வளவுக்குத் அனுபவித்து எழுதியிருக்கிறார்.

இந்த நூலின் வடிமைப்பே வெகு சிறப்பாக வந்திருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பெரிய எழுத்துரு, எழுத்துப் பிழைகள் அற்ற வாக்கியங்கள் என்று ஒரு இடறல் இல்லாமல் படிக்க முடிகின்றது.

மெளத்தீவு படிக்க ஆரம்பித்ததுமே அதன் களம் கண்ணுக்குள் விரிகின்றது. வேலு பரி அவர்களின் எழுத்தாழுமையால் சம்பவங்களைக் கொண்டு வரும் பாங்கில் ஒரு சித்திரக் கதை போன்றதொரு பாங்கில் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

ஓநாய்க் கோட்டை என்ற வாண்டு மாமாவின் சித்திரக் கதை போலவே இந்த மெளனத்தீவையும் கொண்டு வரலாம் இன்னொரு முயற்சியாக.

மெளனத்தீவு வாசிப்பனுபவத்தில் இன்னொரு மிக முக்கியமாகச் சொல்ல வேண்டியது. இந்த நூல் எல்லாத்தரப்பு வயதினரையும் திருப்திப்படுத்துமளவுக்கு எழுத்துப்படுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்த தேசத்தில் வளரும் நம் பிள்ளைகளுக்கும் புரியும் வண்ணம் இலகு நடையிலும், இயல்பு நடையிலும் தமிழ் கையாளப்பட்டுள்ளது.

திருக்கோணேச்சர ஆலயத்தை பற்றியும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் அவர் எழுதிச் செல்லும் பாங்கில் நம் இந்து கலாச்சார விழுமியங்களை அன்னிய சக்திகள் சூறையாடிய அந்தக் காலத்தை நினைவுபடுத்தும் ஏக்கம் தொனிக்கின்றது.

அந்தமானியப் பழங்குடிகளை எடுத்துக் கொண்டால் இவர்கள் ஜாரவா ஒன்கே, செண்டினல் 

ஷோம்பென் என்ற பூர்வ இனக்கூறுகளாக உள்ளனர். 

இவர்களில் ஒன்கே மக்களின் மரபணுவை வைத்து நிகழ்த்திய ஆய்வில் ஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இந்த மெளனத் தீவு நாவல் ஒரு வீரசகாசம் நிறைந்த எழுத்தாக அமைந்தாலும், இதன் பின்னால் உள்ள வரலாற்று நியாயத்தையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக தமிழரின் தொன்மை நாகரிகத் தேடலை வரலாற்றோடு இணைத்து எழுதும் கதை மரபில் தென்கிழக்காசிய நாடுகளை வைத்துத்தான் அதிகம் எழுதப்படுவதுண்டு. இங்கே அந்தமானை நோக்கிய பயணமாக அது அமைந்துள்ளது.

அவர்களின் மெளனத் தீவின் நாயகர்களை வைத்து இன்னொரு ஒரு தொடர் நாவல் வடிவங்களை வேலு பரி எதிர்காலத்தில் கொடுக்கலாம். அதன் மூலம் நம் வரலாற்றைக் கடத்த முடியும் என்ற ஆழமான சிந்தனையும் எழுகின்றது.

கானா பிரபா



Posted by கானா பிரபா at 7:04 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, October 26, 2023

ஆஸி தமிழ்ச் சமூகத்தின் மற்றுமொரு படைப்பு ❤️ யாதும் யாவரும் 🙋🏻‍♀️💃🤷‍♀️ முழு நீளத் திரைப்படம்

நாடக அரங்கியல், குறும் பட இயக்கங்கள் இவற்றோடு  "பொய்மான்" என்ற வெற்றிகரமான முழு நீளத் திரைப்படத்தை இயக்கிய Dr J. ஜெயமோகன் முற்றிலும் வித்தியாசமான, புலம் பெயர் மண்ணின் இன்னொரு கதைக்களத்தோடு "யாதும் யாவரும்" படத்தை ஆக்கியுள்ளார்.

வழக்கம் போல திறன் வாய்ந்த தொழில் நுட்பக் கூட்டணியாக இளைஞர் பட்டாளத்தோடு, தேர்ந்த நடிகர்களும் இணைந்த இந்தப் படைப்பில் வழியாக புலம் பெயர் மண்ணில் வாழும் பெண்களின் மனவோட்டத்தை யதார்த்தபூர்வமாகப் பதிவாக்கியுள்ளார். 

வீடியோஸ்பதி தளத்துக்காக Dr J. ஜெயமோகன் வழங்கிய இந்த நேர்காணல் வழியாக "யாதும் யாவரும்" படம் பிறந்த கதை மற்றும் இந்தப் படைப்பை ஆக்கத் துணை நின்றவர்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார்.

https://www.youtube.com/watch?v=zgTPiGv3clE


Posted by கானா பிரபா at 6:22 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, October 12, 2023

நான் கீபோர்ட் வாத்தியம் பழகிய கதை 🎹

எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லாத குறைக்கு என்னைத் தன் கைக்குள் பொத்தி வளர்த்துக் கொண்டிருந்தார் அம்மா.

தான் படிப்பிக்கும் இணுவில் அமெரிக்கன் மிஷன் பள்ளிக்கூடத்தில் சண்முகபிரியா டீச்சரிடம் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டார். ஆனால் எனக்கோ அலைகள் ஓய்வதில்லை ராதா ஆரம்பத்தில் பாடும் அபஸ்வரமாகமே அமைந்து விட்டது. நான் அந்த நேரம் பெரிய ஈடுபாடு காட்டவில்லை என்பதால் சங்கீதமும் என்னைக் கை விட்டு விட்டது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மீண்டும் ஈழத்தில் கனத்த சண்டை நேரம். அன்ரி (அம்மாவின் தங்கை) வீட்டுக்குப் போய் அங்கே துளசி அண்ணாவின் அறையை நோண்டினால் அவர் முன்பு பதிவு செய்து வைத்த இளையராஜாவின் பாடல்கள் ஒரு தொகை ஒலிப் பேழைகள் இருந்தது. கூடவே நீல நிற மேனியும், வெள்ளைப் பற்களுமாக ஒரு  Melodica வாத்தியம் இருந்தது. துளசி அண்ணா வெளி நாடு போகும் வரை பழகிய வாத்தியம் அது. 

வாயால் ஊதி ஊதி வாசிக்க வேணும்.

அன்ரியிடம் கேட்டால்

“அது இங்கை சும்மா கிடக்குது தானே எடுத்துக் கொண்டு போ பிரபு” 

என்று பளிச்சென்று அனுமதி கொடுத்தார்.

அது நாள் வரை பூவரசம் பீப்பீயில் வாத்திய இசை வழங்கிக் கொண்டிருந்த எனக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது மாதிரி மனசுக்குள் ஒரு கொண்டாட்டம்.

மின்சாரமே இல்லாத தேசத்தில் இந்த வாயால ஊதி வாசிக்கிற வாத்தியம் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது.

மீனாட்சி அன்ரி வீட்டு வெளி விறாந்தையில் இருந்து அந்த அந்த வாத்தியத்தின் குரல்வளையை என் வாய்க்குள் திணித்து மெது மெதுவாக ஊதிக் கொண்டே அதன் வெள்ளைப் பற்களை அழுத்தி அழுத்திப் பழகிப் பார்த்தேன். பிடிபடவில்லை. நான் ஊதின அந்த ஊதுக்குப் பெரும் காடே தீப்பிடித்திருக்கும். ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆனேன். 

இதன்னடா இது சினிமாப் பாட்டு கேக்கேக்கை அதில் வரும் புல்லாங்குழல் வாத்தியம் போல அபிநயம் எல்லாம் பிடிச்சு வாயால வாத்தியம் போட்டிருக்கிறன் ஆனால் கையில் நிஜமாகவே ஒரு வாத்தியம் கிடைத்தும் அனுபவவிக்க முடியவில்லையே என்று மனம் புழுங்கியது. நான் வாசித்துப் பழகுவதை மீனாட்சி அன்ரி வீட்டைக் கடந்து போகும் மனிதர்கள் விநோதமாக எட்டிப் பார்த்து விட்டுப் போவார்கள். 

“எடேய் பிரபு । 

யாழோசை கண்ணன் மாஸ்டரிட்ட கீபோர்ட் பழகப் போறேன்

நீயும் வரப் போறியோ”

என் பள்ளிக்கால சகபாடி ராஜன் என் கலைத்தாகம் சஹாரா பாலைவனம் ரேஞ்சில் இருப்பதைக் கண்டு ஒரு நாள் இப்படி ஒரு தண்ணீர் கலனோடு வந்தான்.

கரும்பு தின்னக் கூலியா?

நான் கீபோர்ட் பழக விரும்பும் செய்தியைஅம்மாவிடம் கேட்டால் மறு பேச்சில்லாமல் சம்மதித்தார். 

ஒரு சுபயோக சுப தினத்தில், நான் நினைக்கிறேன் விஜயதசமி நாள் என்று ஏனென்றால் அந்த நாளில் தான் பல இளையராஜாக்கள் புதுப்புது வாத்தியம் பழகுவார்கள்.

“யாழோசை” என்ற பெயர்ப் பலகையைக் கண்டதுமே ஏதோ அன்னக்கிளி பட வாய்ப்பு வந்தவன் போல சைக்கிளில் இருந்து துள்ளிக் குதித்தேன். கூடவே அந்த நீல நிற வாத்தியமும் வந்தது.

“யாழோசை” கண்ணமன் மாஸ்டர் வீட்டின் முன் முற்றம் முழுக்க எல்லாம் பெடி தரவளியள். நாங்கள் மேல் வகுப்புக்காரர் அவங்களோ லிடியன் நாதஸ்வரம் ரேஞ்சில் பெடிப் பிள்ளையள்.

நான் வச்சிருக்கிற ஊது குழல் மாதிரியும் வச்சிருக்கினம். எங்களை அந்தப் பெடிப்பயல்கள் ராக்கிங் பண்ணாத குறையாகப் பார்த்தாங்கள். 

எங்களுக்குக் கொடுத்த முதல் பால பாடமே 

“நிலவு தூங்கும் நேரம்

 நினைவு தூங்கிடாது”

இதைத் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப வாசிச்சுப் பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேணும்.

இப்போது நினைத்தால் என்னடா இவ்வளவு தூரம் இளையராஜாவின் முரட்டு பக்தராக கண்ணன் மாஸ்டர் இருக்கிறார் என்றெண்ணத் தோன்றும்.

நான் போன வகுப்பெல்லாம் இதைத்தான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம்.

கொஞ்சக் காலத்தில் சண்டைக் காலம் தீவிரமாகி மெல்ல மெல்ல எல்லாம் முடங்கிப் போகவும் எங்கள் கீபோர்ட் பயிற்சி வகுப்பும் ஒரு முடிவுக்கு வந்தது.

வெளிநாட்டுக்கு வந்த பின்னும் கீபோர்ட் வாத்தியம் பழகும் ஆசை விடவில்லை. கே.டி.குஞ்சுமோன் கணக்காகப் பெரும் பொருட் செலவில் எடுத்த எடுப்பிலேயே Korg கீபோர்ட் வாங்கினேன் (இளையராஜா எல்லாம் இதான் பாவிக்கினம் என்று ஆசிரியர் வேறு உசுப்பேத்தி விட்டுட்டார்) கொஞ்சக் காலம் பழகிப் பார்த்தேன்.

ஆனால் பாட்டுத் தேடல்கள், எழுத்து எல்லாம் என் இசைப் பயிற்சியை விட அதீத ஆர்வத்தைக் கொடுத்ததால் இன்னொரு தடங்கல்.

இப்போது இலக்கியா வேறு கீபோர்ட் பழக ஆரம்பித்து விட்டார்.

Korg கீபோர்ட் இன்னமும் ஓரமாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது, இலக்கியாவா நானா அதை மீண்டும் தொடப் போகிறோம் என்ற ஆவலோடு.

“நிலவு தூங்கும் நேரம்

நினைவு தூங்கிடாது…”

https://youtu.be/RpSRYdtadlg?si=bQiGGNkjd6SS8Lth

பாட்டைக் கேட்கும் போதெல்லாம் “யாழோசை” கண்ணன் மாஸ்டரும் என்

ஞாபக அறையில் உட்கார்ந்திருப்பார்.

கானா பிரபா

12.10.2023

கோவிட் முடக்கத்துக்குப் பின் அம்மாவைப் பார்க்க இரண்டாண்டுகள் கழித்துக் கடந்த ஆண்டு ஊருக்குப் போக முடிந்தது, அது ஒரு குறுகிய பயணம். 

இன்னும் கோவிட் அலை முழுதாகக் கலையாத பயத்தில் அதிகம் ஊர் சுற்றாமல், கொழும்பில் கிடைத்த ஒரு பாதி நாளில் அப்படியே அன்ரியையும் (அம்மாவின் தங்கை) சித்தப்பாவையும் பார்த்து விட்டு வருவோம் என்று போனேன். உள்ளூர சுகாதார எச்சரிக்கையையும் மனம் கொடுத்துக் கொண்டிருந்தது. அவர்கள் தனியாட்கள் ஏதும் வைரஸ் ஐக் கொண்டு போய்க் கொடுத்து விடக் கூடாது என்று.

வழியில் அவர்களுக்குப் பிடித்தமான சைவ உணவகத்தில் வடை வாங்கிக் கொண்டு போனேன்.

"எட இங்க பிரபு!"

சித்தப்பா முகம் கொள்ளாத சிரிப்போடு வரவேற்றார். 

"ஓ"

பின்னால் வந்த அன்ரி சிரித்துக் கொண்டே வந்து கதை கேட்டார்.

அன்ரிக்கு ஞாபக மறதிச் சிக்கலால் கடந்த மூன்று பயணங்களிலும்

"படிச்சு முடிச்சாச்சோ" என்று கேட்பார். 

அவருக்கு நான் இன்னமும் பள்ளிக்கூட மாணவன் தான்.

ஆனால் இந்த முறை படிப்பைப் பற்றிக் கேள்வி எழவில்லை.

அன்ரிக்கு என்னை அடையாளம் கண்டதே சந்தோஷம் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அன்ரியின் இந்த வயசுக்கு ஞாபக மாறாட்டம் வந்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைப்பதுண்டு. அவர் இன்னும் பல ஆண்டுகள் சுகதேகியாக இருக்க வேண்டியவர்.

கடந்த ஆண்டே சித்தப்பாவும் விடை பெற்று விட, இன்று அன்ரியும் போய் விட்டார். இனிப் படிப்புப் பற்றிக் கேள்வி கேட்கவும் என் அடுத்த பயணத்தில் அன்ரி இருக்க மாட்டார்.

இன்று காலை நான் எழுதிய பதிவில் அந்த Melodica வாத்தியத்தைத் தந்த அதே அன்ரி தான் அவர்.

அன்ரி ! உங்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

பட்சமுள்ள

பிரபு.


Posted by கானா பிரபா at 6:16 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, October 01, 2023

“சினிமா : பார்த்ததும் கேட்டதும்” ✍🏻 லெ.முருகபூபதி | நூல் நயப்பு 📚 கானா பிரபா


இலக்கியவாதியாக இருப்பவர், மொழி பேதமற்ற சினிமா ரசிகராகவும் இருந்தால் நமக்குக் கிடைக்கும் இலாபம் எது என்பதற்கான விடை தான் இந்த நூல்.

எழுத்தாளர் லெ.முருகபூபதி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் அவரின் தளம் பரந்து விரிந்தது. ஐம்பது ஆண்டுகளைக் கடந்த இலக்கிய, வாசிப்பு, பத்திரிகைப் பணி எல்லாம் சேர்ந்து “சினிமா : பார்த்ததும் கேட்டதும்” அவரின் இன்னொரு அனுபவத் தேடலாகப் பதியப்பட்டிருக்கின்றது.

தான் வருடத்தில் குறைந்தது 200 திரைப்படங்களாவது பார்க்கிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலமும் அவர் கொடுத்திருப்பதால் இந்த நூலில் பகிரப்பட்ட கட்டுரைகள் இவ்வளவு காலமும் தான் கண்ட படைப்புகளில் ஆளுமை செலுத்தியவைகளின் பதிவுகளாகக் கூடக் கொண்டு நோக்கலாம். ஆனால் இதையும் தாண்டி “சொல்லப்படாத கதைகள்” இன்னொரு பாகமாகவும் நாம் எதிர்பார்க்கலாம்.

“திரைப்படங்கள் நமக்குள் உருவாக்கும் கனவுகள் மிக அந்தரங்கமானவை. அது கூடவே வளர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நேரங்கள் அந்தக் கனவுகள் பகிரங்கமாகி விடுகின்றன. ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு சினிமா மறக்கமுடியாத நினைவு ஒன்றின் பகுதியாகி விடுகிறது”

என்று சொன்ன எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அந்தக் கருத்தை நூலின் ஒரு கட்டுரையிலும் பதிவு செய்கிறார். இந்த நூலில் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் அடிநாதமும் அதுவே எனலாம்.

சில கட்டுரைகளில் ஒரே நிகழ்வுகள் திரும்பவும் காட்டியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவற்றைத் தனியாகப் படிக்கும் படிக்கும் போது அவற்றின் தேவையும் உணரப்படுகிறது. இது பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு என்பதாலும் சமரசம் கொள்ளலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் திரையுலகப் படைப்பாக முயற்சிகளை “ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும்” என்ற கட்டுரையில் விலாவாரியாக எழுதும் போது அவற்றை வெறும் பட்டியலாகத் திரட்டாமல், அந்த முயற்சிகளின் பின்னால் உள்ள வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுப்பது தனிச் சிறப்பு. இவற்றில் பலவற்றைக் காலம் அடித்துப் போன, மறந்து போன செய்திகளாகவும் சொல்லலாம். இதே பாங்கிலேயே “கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவும்” கட்டுரையும் ஆழமான பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது.

ஈழத்தில் பிறந்த கலை மீதான வேட்கை கொண்டோருக்குக் கிடைத்த இன்னொரு இலாபம் சிங்களக் கலைப்படைப்புகள், ஆக்க கர்த்தாக்கள் பற்றிய அனுபவ அறிவும், தொடர்பும் அமையப்பெற்றிருப்பது. அதன் விளைச்சலாகவே சிங்கள சினிமாவின் பிதாமகன், இயக்குநர்  லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், தர்மசேன பத்திராஜ போன்ற ஆளுமைகள் குறித்த பதிவுகளோடு, Death on a Full Moon Day (பெளர்ணமியில் ஒரு மரணம்), President Supper Star போன்ற திரை விமர்சனங்களை இவர் எழுதியிருப்பது. இந்தக் கட்டுரைகளிலும் முன் சொன்ன கூற்றின் நியாயத்தன்மையைப் பறை சாற்றுகின்றது.

தமிழ் சினிமாவின் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தாலும் நாகேஷ், மனோரமா ஆகியோரின் பரிமாணம் என்பது அந்தச் சுவைக்குள் மட்டுமே அடக்க முடியாதது என்பதை அந்தந்தக் கட்டுரைகள் விபரித்து முடிக்கின்றன.

இயக்குநர் மகேந்திரன், பாலுமகேந்திரா, எழுத்தாளர் கி.ரா (ராஜநாராயணன்) , நடிகர் ஓம்புரி போன்றோர் குறித்தும் படைப்பாளியின் பார்வையிலேயே தன் எழுத்தை நகர்த்துவதால் அவற்றில் சினிமாத்தனம் இல்லாத இலக்கியத்தனம் மிஞ்சி நிற்கின்றது.

“பொன்மணி” ஈழத்துப் படம் பிறந்த கதையைப் பகிர்பவர் நடுச்சாமத்தில் அந்தப் படத்தைக் கணினியில் தரவிறக்கிப் பார்த்த அனுபவம் போலவே தர்மசேன பத்திராஜவின் “In search of a road” ஆவணப்படம் பற்றிய கட்டுரையைப் படித்த பின் இணையமெங்கும் சல்லடை போட்டுத் தேடினேன். சிக்கவில்லை. யாராவது புண்ணியவான் அந்தப் படத்தை இணையத்தில் பகிர்வது காலத்தின் தேவை.

இலக்கியமும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. அதுவே தழுவலாகவும் களவியலாக அமைந்து விடுகிறது.

“சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் !” என்ற கட்டுரையில் இலக்கியப் படைப்புகள் திரைப்படங்களான வரலாற்றைப் பேசிக் கொண்டே, சர்ச்சைக்குள் அகப்பட்டவை, எழுத்தாளரது எதிர்வினைக்கு ஆட்பட்டவை போன்றவற்றை காய்த்தல் உவத்தல் இன்றிப் பகிர்ந்து, நீங்களே அவற்றை ஒப்பு நோக்கி முடிவு செய்து விடுங்கள் என்றும் சொல்லி வைக்கின்றார்.

ஈழத்திலிருந்து ஜீவநதி வெளியீடாக, ஓவியர் திரு கிறிஸ்டி நல்லரெத்தினம் முகப்பு அட்டை அளிக்கையோடு,  மொத்தம் 15 கட்டுரைகள் அமையப்பெற்ற “சினிமா : பார்த்ததும் கேட்டதும்” புலம்பெயர் மண்ணில் பல்கலைக்கழகப் புகுமுகப் பாட நெறியாகத் தமிழ் மொழியைப் படிக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். அவ்வளவுக்கு எளிமையான நடையில் ஆழமான வரலாற்றுச் சங்கதிகளைத் திரட்டித் தருகின்றது.

கானா பிரபா

01.10.2023


Posted by கானா பிரபா at 7:16 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, September 12, 2023

வானலைகளில் ஒரு வழிப்போக்கன் ✍🏻B.H.அப்துல் ஹமீத் நூல் நயப்பு 📚 கானா பிரபா

“உலகத் தமிழ் ஒலிபரப்பாளர்” என்ற அடையாளத்துக்குச் சர்வ இலட்சணங்களும் பொருந்தியவர் யார் என்ற கேள்விக்கு உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழரும் ஒரே ஆளுமையை அடையாளம் காட்டுவர். அது எங்கள் பேரபிமானத்துக்குரிய “எல்லோருக்கும் பொதுவான” B.H.அப்துல் ஹமீத் அவர்கள். 

 நாம் சந்திக்கும் “பத்துத்” தமிழகத்தவரில்  “பத்துப்பேராவது” இரண்டு பேரைப் பற்றிப் பேச்செடுப்பார்கள் ஒருவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம், இன்னொருவர் தமிழ் தன் நாவில் சிம்மாசனம் இட்டு வீற்றிருக்கும் பி.ஹெச்.அப்துல் ஹமீத் அவர்கள்.

தன் அரை நூற்றாண்டு வானொலி வாழ்வியலைப் பதிவாக்கிய “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” நூலை எடுத்து விரித்தவுடனேயே அந்த வழிப்போக்கனோடு நாமும் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

ஒரு குழந்தை தனக்குப் பிடித்த உலகத்தில் இறக்கி விட்டபின்னர் அங்கே எல்லாவற்றையும் அளைந்து, தொட்டுப் பார்த்துப் பூரித்து நெஞ்சில் நிறைத்து வைப்பது போல இந்த “வானலைப் பேராசைக்காரரின்” அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.

அது தன் எல்லை தாண்டி வானொலியைக் கண்டு பிடித்தவரின் தேசம் சென்று “மார்க்கோனியின் ஒலிபரப்புக் கலையகம் சென்று பார்த்த அனுபவங்களோடு தான் தொடங்க வேண்டும் என்று அவரின் மூளைக்குத் “தந்தி” அனுப்பியிருக்கிறது போல.

இன்று உலகத் தமிழ் வானொலிகள் பல்கிப் பெருகி விட்ட சூழலில் இலங்கை வானொலி பேரதிஷ்டம் செய்ததென்று தான் சொல்ல வேண்டும். கடல் கடந்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட இலங்கை வானொலியின் ஆளுமைகள், கலைஞர்கள் படைத்த நூல்கள் வெறுமனே தன் வரலாற்றுச் செய்திகளாக ( மன ஓசை – சுந்தா சுந்தரலிங்கம், ஒரு சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் – ஜோர்ஜ் சந்திரசேகரன், காற்று வெளியினிலே – அப்துல் ஜப்பார்)  மட்டுமல்லாமல், வானொலி நாடகச் சுவடிகள் (தணியாத தாகம் – சில்லையூர் செல்வராசன், லண்டன் கந்தையா – செ.சண்முகநாதன் (சானா) முகத்தார் வீட்டுப் பொங்கல் – எஸ்.ஜேசுரத்தினம் )  (வானொலி நாடகங்கள், வானொலி நாடகம் எழுதுவது எப்படி போன்ற படைப்புகளோடு அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை எழுதிய நூல்கள், இலங்கை வானொலியின் தமிழ் நாடக வரலாறு – மறைமுதல்வன் ஜி.பி.வேதநாயகம்) 

தமிழகம் உட்பட இலங்கை வானொலியை நேசித்த நேயர் நெஞ்சங்களின் நனவிடை தோய்தல்களின் தொகுப்பு (பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி, ஒலிபரப்பாளர்களின் நினைவுப் பகிர்வுகள் (நினைவலைகளில் வானொலிக் குயில் ராஜேஸ்வரி சண்முகம், இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் – தம்பிஐயா தேவதாஸ்),  வானொலி வர்ணனைச் சுவடிகள் ( நல்லை நகர்ச் செவ்வேள் – செ.தனபாலசிங்கன்),   அது மட்டுமன்றி செய்தி ஊடகர்கள் (The News Read by S.Punniamoorthy) , நிர்வாகப் பணியில் இயங்கிய பணிப்பாளர்கள் (The Green Light by Gnanam Rathinam) , கே.எஸ்.பாலச்சந்திரனின் “நேற்றுப் போல இருக்கிறது”, விமல் சொக்கநாதனின் “வானொலிக் கலை” என்று நீண்டு சமீபத்தில் வெளியான வி.என்.மதி அழகனின் “தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு" (இதற்கு முன்னர் என் மனப் பதிவுகள்) , வானொலி மற்றும் தொலைக்காட்சி என்று இருமுகப்பட்ட பரிமாணங்களில் நீண்ட வரலாற்று மற்றும் தகவல் களஞ்சியமாகத் திகழும் பி.விக்னேஸ்வரன் படைத்த “நினைவு நல்லது” என்று நீளும்.

இங்கே நான் பகிர்ந்தவை சில சோறுகள் தான். இப்படியாக வானொலியின் அத்தனை பரிமாணங்களையும் பல்வேறு ஆளுமைகளால் எழுதிப் பகிர்ந்த பெருமையை இலங்கை வானொலி அள்ளிக் கொண்டது.

இவற்றைத் தவிர ஒலிப் பேழைகள், இறுவட்டுகள் என்பவை தனிக்கணக்கு.

வானொலியாளரின் சுவாரஸ்யமான பகிர்வுகளை அவரின் பக்கத்தில் இருந்து கேட்டுச் சிரித்து, ரசித்த உணர்வை “சுந்தா” சுந்தரலிங்கம் அவர்களின் “மன ஓசை” அளித்தது. அவரின் அந்த அனுபவங்களை இப்போது கற்கண்டாய் இனித்தாலும், ஒலிபரப்புத் துறையில் நுழைந்த போது சந்தித்த சோதனைகள் தான் பின்னாளில் அவரைச் சாதனை படைக்க வழி கோலியது என்ற வானொலிப் பாடத்தைத் தான் சமீபத்தில் வாசித்து முடித்த எங்கள் அபிமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” என்ற நூல் வாசிப்பு அனுபவமும் வழங்கியது.

“ஆழமான சிந்தனைகளை உள்ளடக்கிய, 

அல்லது தனக்குள்ள மொழியாற்றலை 

வெளிப்படுத்தக்கூடிய நடையில் இதனை எழுத வேண்டும் 

என்று இவன் முயலவில்லை” 

என்று தன் முன்னுரையில் “வழிப்போக்கனின் வாக்குமூலமாக” அப்துல் ஹமீத் பதிவு செய்திருக்கின்றார்.

அவையடக்கமாகத் தன் அனுபவப் பதிவுகளை எழுதிச் செல்லும் போது “நான்” என்ற சொற் பிரயோகம் ஆணவத் தளை தட்டும் என்றெண்ணி “இவன்” என்ற சொல்லாடலாக அவர் பயன்படுத்துகின்றார். ஆனால் இந்த அவையடக்கத்தைக் களைந்திருக்கலாம். வாசிப்பு ஓட்டத்தில் “இவன்” ஒரு உறுத்தலாகத் துருத்திக் கொண்டிருக்கிறது.

இன்னாரின் சுய சரியதை என்றாலும் அவராகவே ஆகிவிடுவான் வாசகன். அப்படியானதொரு அனுபவ ஓட்டத்தில் இந்தச் சொல்லாடலை நான் ஆகவே ஆக்கியிருக்கலாம்.

“வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” வெறுமனே ஹமீத் அவர்களது வானொலி வாழ்வியல் அனுபவங்களை மட்டுமே பேசவில்லை. அவரின் அடுத்தடுத்த முன்னெடுப்புகளில் சந்தித்த அனுபவங்கள் என்று பரந்து விரிகின்றது.

இந்த நூலுக்கு முன்பே 2004 ஆம் ஆண்டில் அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதுக்குப் பாராட்டு விழா மலரை எஸ்.கே.ராஜென் – சுந்தரம் ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோரை இயக்குநர்களாகக் கொண்ட உலகத் தமிழ்க் கலையகம் “தமிழமுதம்” ஆகத் திரட்டித் தந்திருக்கிறது. அதை ஒரு முன்னோட்டம் என்று கூடச் சொல்லலாம். அவர் பால் அன்பு கொண்ட பல்வேறு ஆளுமைகளின் உள்ளக்கிடக்கைகள் பகிர்வுகளாக அங்கே திரட்டப்பட்ட போது 

“வானலை வெளியினில் ஒரு வழிப்போக்கன்” என்ற தலைப்புடனேயே அங்கு தன் ஏற்புரையை பகிர்ந்திருக்கிறார் அப்துல் ஹமீத்.

வானொலியின் நதி மூலத்தைத் தேடித் தொடங்கும் முதல் அத்தியாத்தில் இருந்து இருபத்து மூன்றாவது அத்தியாயத்தில் தமிழ் மொழியை நம் எல்லோரும் பேணிப் பேசிப் பழகி, வளர்க்க வேண்டியதொரு தேவையை அழிந்து போனவைகளோடு ஒப்பிட்டு எச்சரிக்கின்றார்.

“தாயை நேசிப்பது போல்

தாய்த் தமிழ் மொழியையும் 

நேசிப்போம்”

என்றுதன் அனுபவ வரலாற்றிலும் சமூகப் பிரக்ஞையைப் பதிவாக்கியிருக்கிறார்.

“விதை முளைத்த கதையில்” சிறுவர் மலரில் சேர்ந்த கதை ஒரு சிறுகதை போல இருக்கிறது. இன்றும் அதே 1 ஆம் இலக்கக் கலையகத்தின் முன்னால் அவர் படம் எடுத்துப் பகிர்ந்திருக்கிறார்.

சிறுவர் மலரையும் கணக்கிட்டால் 60 தேறும் வானொலி அனுபவம் கொண்டவர். 

தேடலும் பதித்தலும் ஒரு ஒலிபரப்பாளனுக்கு இருக்க வேண்டிய தேவையை எஸ்.கே.பரராஜசிங்கம் உணர்த்தியதும், பின்னாளில் இவருக்குக் கிடைத்த ஞாபகசக்திக்கான பாராட்டுகள் எனும் வெகுமதிகளுக்குப் பின்னால் அடிப்படையில் ஆரம்பத்தில் பயிற்சி கொடுத்த அந்த வழிகாட்டியை நினைத்துப் பார்க்க முடிகின்றது.

“நவரசக் கோவை” நாடக அனுபவங்கள் அறிவிப்பாளர் என்ற எல்லை கடந்து படந்த அடுத்த பரிமாணத்தின் திறவுகோலாய் அமைந்ததை சுயம்புவாக வளர்ந்த கதை வெளிப்படுத்துகின்றது.

சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் மூத்த கவிஞர் அம்பியின் “யாழ்பாடி” கவிதை நாடகத்தை நெறிப்படுத்திய சங்கதியும் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கை வானொலியின் பவள விழா கொடுத்த புண்ணியத்தால் அந்தப் படைப்பு இறுவெட்டில் இன்று பாதுகாப்பாக நம்மிடையே இருக்கிறது.

மேலும் “தான் தோன்றிக் கவிராயர்” சில்லையூர் செல்வராசன் கவிதை நாடகமாக்கிய ஷேக்ஸ்பியரின் “றோமியோ ஜூலியட்” குறித்த அரிய செய்தியும் பதிவாகியிருக்கின்றது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் அப்துல் ஹமீத் குரல் மீது அளவற்ற காதல் கொண்டிருந்ததை அறிவோம். அவரோடு ஹமீத் நிகழ்த்திய ஒலிப்பேட்டியும் இன்னும் பத்திரமாக அப்துல் ஹமீத் இணையத்தளத்தில் இருக்கின்றது. அதைக் கேட்கும் போதே இவர் மீது நடிகர் திலகத்தின் நேசத்தை உணர முடியும். இங்கே அந்தச் சந்திப்பின் பின்னணியும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

அதற்கெல்லாம் மேலாக மேஜர் சுந்தரராஜனின் கருணை உள்ளத்தை சம்பவ உதாரணத்தோடு சொல்லும் போது மெய் சிலிர்க்கின்றது.

வெறுமனே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடாமல் வானொலி விளம்பரதாரர் நிகழ்ச்சிகளிலும் புதுமை படைத்துக் காட்ட முடியும் என்பதற்கமைய இவர் எடுத்த முயற்சிகளின் அறுவைகள் பெரும் ஜனரஞ்சக வெற்றிகளாகியிருக்கின்றன. “மீனவ நண்பன்” அதற்கோர் உதாரணம்.  பின்னாளில் “கிராமத்தின் இதயம்” என்று தமிழகத்துக் கிராமங்களின் இதயங்களைத் தேடிப் போன படைப்புப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது.

ஈழத்து மெல்லிசை இயக்கத்தில் அப்துல் ஹமீத் அவர்களின் பங்களிப்பு பொன்னெழுத்துகளால் பொறிக்க வேண்டியது. ஆனால் அந்த முயற்சியை எடுக்கும் போது வேலைக்கே உலை வைத்து விடக் கூடிய காரியத்தைச் செய்தார் அந்த இளம் அறிவிப்பாளர். 

ஈழத்து மெல்லிசை இயக்கம் குறித்த மிகவும் ஆழமான பகிர்வை அவர் இந்த நூல் வழியே கொடுத்தது ஆய்வு நோக்கில் பெரும் வரப்பிரசாதமாக இருக்கப் போகிறது.

ஒல்லாந்து நாட்டில் வேற்று நாட்டு ஊடகர்களோடு ஒலிபரப்புக் கலையைக் கற்ற போது அங்கு நடந்த சுவாரஸ்யங்களையும் தன் டயறியின் பக்கங்களைக் கிழித்துக் கொடுத்தது போலத் தந்திருக்கிறார்.

24 மணி நேர வானொலிகள் தோற்றம் பெற்ற போது அப்துல் ஹமீத் அவர்கள் கெளரவ அழைப்பால் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று தன் மனப்பதிவைப் பதிவைப் பதிவாக்கியவர். அவர் இரண்டு தசாப்தங்களுக்கு முன் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது

“தக்கன வாழும் தகாதன அழியும்”

“இன்னொருவர் நேரத்தை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள் அதற்காக எதை நீங்கள் கொடுக்கப் போகிறீர்கள் என்பது முக்கியம்”

இவையெல்லாம் தாரக மந்திரங்களாக மாறி விட்டன இப்போது.

கடும் வெயிற் காலத்தில் ஒரு நீண்ட பயணத்தில் சிக்கி நா வரண்டு போய் மோர் விற்கும் ஒரு சிறுகடைக்குப் போனால் அங்கே பத்துப் பதினைந்து பேர் அப்துல் ஹமீத் வழங்கும் “இசையணித் தேர்வு” கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இவரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று உய்த்துணர முடிகின்றது.

தாகசாந்தி செய்யாமலேயே பாலைவனத்தில் திடீரென எழுந்த நீர்ச்சுனையைக் கண்ட உணர்வு அவருக்கு வந்திருக்கும் அல்லவா?

“மதுரா இசை விழா” ஒளிப்பேழைகளை தொண்ணூறுகளை அனுபவித்தவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்த் திரையிசை உலகச் சாதனையாளர்களில் இருந்து புதிதாக இசைக்களத்துக்கு வந்திருப்போர் வரை நீண்ட நெடு மணி நேர நிகழ்ச்சியாக அது கொடுக்கப்பட்டதன் வரலாறும் இங்கே பதிவாகி இருக்கிறது.

பாட்டுக்குப் பாட்டு போன்ற சுய முயற்சிகள் மட்டுமன்றி மற்றோர் முன்னெடுத்த வானொலி உலக, திரையுலகச் சாதனைகளில் அப்துல் ஹமீத் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதன் சில உதாரணப் பருக்கைகள் அவை.

ஈழத்துத் திரைப்பட முயற்சிகளில் நேரடித் தமிழ்ப்படமான கோமாளிகள் மட்டுமல்ல, சிங்களத்தில் இருந்து மொழி மாற்றம் கண்ட படைப்புகளிலும் இவரின் பங்களிப்பை எடுத்து விபரிக்கின்றார்.

“மரியாதை முன்னோடிகளை” மறக்காமல் பதிவாக்குகிறார். எல்லோர் குறித்தும் பேசும் போதும் ஒரு நல் மாணாக்கனுக்குரிய பண்போடு கனம் பண்ணுகிறார். தான் நேசித்த மனிதர்களை, தன்னை வளர்த்த பெரியவர்களைத் தேடிச் சந்தித்ததையும் சொல்லி ஒளிப்படங்களோடு பகிர்கிறார்.

“தெனாலி” பட உருவாக்கத்தில் பங்களித்ததில் இருந்து “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்துக்கும் பாட்டு எழுதிய கதைகள் பேசப்பட்டிருக்கின்றன.

“இறைதாசன்” என்ற புனைப்பெயரிலே அப்துல் ஹமீத் எழுதிய ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் தனி இலக்கணம் வகிக்கும். 

பல்லண்டுகளுக்கு முன்னர் இறைதாசன் எழுதி ஃபயாஸ் – ரட்ணம் இசைமைத்த “இசையின் மழையில் நனைந்திடும் நேரம்” பாடல் தான் சமீபத்தில் மறைந்த பொன்.சுபாஷ் சந்திரனுக்கு இசை அஞ்சலி வழங்கிப் பிரியாவிடை கொடுத்தது. 

“விழி நுகர் கனி இருப்ப” காய்கள் எதற்கு என்பது போலத் தன் கசப்பான அனுபவங்களில், சம்பந்தப்பட்டவரைச் சுட்டுவிரலால் அடையாளப்படுத்தாமல் தன் செய்தியை மட்டும் சொல்லி விட்டுக் கடந்து விடுகிறார்.

“வழிப்போக்கர்களே திசைகளைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்” என்று திரைப்பட இயக்குநரும், இந்த நூலின் எழுத்து வடிவத்துக்குத் துணை புரிந்தவருமான த.செ.ஞானவேல் அவர்கள் சொல்வதை அப்துல் ஹமீதின் அனுபவங்களே அவரின் திசையைத் தீர்மானித்ததாகவும் கொள்ளலாம்.

பேரன்புக்குரிய சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள் இல்லாத இந்த உலகில் அவர் இந்த நூலுக்கு எழுதிக் கொடுத்து விட்டுப் போன வாழ்த்துரையையப் படிக்கும் போது மனசின் ஓரத்தில் ஒரு வலி கிளம்புகிறது. 

“உடன் பிறக்கவில்லை என்றாலும் பி.எச். எனக்கு உற்ற நண்பன்

உயிரனைய ஸ்னேகிதன் – உரித்துள்ள சகோதரன்”

என்ற வார்த்தைகளைப் படிக்கும் போது அறுத்து உறுத்துத் தமிழகச் செய்தி மடல் கொடுத்து விட்டுப் போன அந்தக் குரல் நம் காது மடல்களில் ஒரு அதிர்வைக் கிளப்பி விடுகிறது.

தன்னுடைய 50 ஆண்டுகளைக் கடந்த வானொலி அனுபவங்களில் சந்தித்த ஆளுமைகள், கருத்துப் படங்கள் என்று நிறை வண்ணத்திலும், கருப்பு – வெள்ளையிலும் நிரம்பியிருக்கின்றன.

ஊடகத்துறையில் சாதிக்கத் துடித்த ஒரு இளைஞனின் பயண ஆவணமாக விரிகிறது இந்நூல். இன்று உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் அவர் வீற்றிருப்பதன் பின்னால் உள்ள கடின உழைப்பின் வாக்குமூலம் இந்த எழுத்துகள்.

அப்துல் ஹமீத் அவர்களது அனுபவங்கள் இந்த 315 பக்கங்களையும் தாண்டியவை என்பதைப் படித்து முடிக்கும் போதே உய்த்துணரலாம்.

காத்திருப்போம் இந்த நூல் இன்னும் விரித்து எழுதப்படும் சமயம் வரும் வரை.

அதுவரை “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” உலகத் தமிழர்கள் ஒவ்வொருவர் வாசிப்புத் தளத்திலும் இருக்க வேண்டியதொன்று. 

“உண்மையில் அப்துல் ஹமீத் தோற்றுவித்த நியமனங்கள் தான் நிகழ்ச்சி அளிக்கைகளுக்கு மிக முக்கியமாக அமைகின்றன”

என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்று இன்னும் பல காலம் கடந்தும் நிலைத்திருக்கும் மெய்த்தன்மை பொருந்தியது.

“வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” வாசித்து முடிந்ததும் அவரை மனம் எனும் பல்லக்கில் சுமந்து கொண்டு போகிறேன்.

கானா பிரபா

12.09.2023


Posted by கானா பிரபா at 11:32 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, August 03, 2023

விடைபெற்ற எங்கள் விமல் அண்ணா !





தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" 

மேசையில் குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பி விடும் அப்பாவின் குரல். 

வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் தருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக் காந்திகள். 

போர் மையம் கொண்ட மின்சாரமில்லா இரவுகளில் ஜாம் போத்தல் விளக்கைப் போட்டு விட்டு அந்தக் குறு வெளிச்சத்தில் குந்தி இருக்கும் அயலவர் சூழ, சைக்கிள் டைனமோவில் மின்சாரம் பிறப்பித்து பிபிசி கேட்ட காலம், 

ஓ அந்த உலகம். அங்கே உருவமற்ற குரல்கள் நம் சொந்தக் காரர்களாகி விட்ட பிரமை. அவர்கள் சொல்லே “வேதவாக்கு”. அங்கே ஒரு கம்பீரக் குரல் விமல் சொக்கநாதன் என்று ஒலிக்கிறது.

ஈழத்தின் மூத்த வானொலிப் படைப்பாளி விமல் சொக்கநாதன் அவர்கள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி அகால மரணத்தைத் தழுவிக் கொண்டதை அதிர்ச்சியோடு ஒட்டுமொத்தத் தமிழ் உலகமே எதிர்கொண்டது.

ஈழத்தின் யாழ்ப்பாணத்தில் பிறந்த விமல் சொக்கநாதன் அவர்கள் இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சி வழியாக 1959 ஆண்டு வானொலிக் கலையகத்தில் நுழைந்தவர் என்ற தகவலைப் பகிர்ந்து கொண்டவர் அவரின் வானொலிச் சாகபாடி திரு பி.எச்.அப்துல் ஹமீத் அவர்கள்.

இலங்கையில் சட்டம் பயிலும் மாணவராக வானொலியின் தேசிய சேவையில் பகுதி நேரக்கலைஞராக இணைந்த விமல், சட்டக்கல்வியை முடித்த பின்னரும் 1971 இல் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் முழு நேரத்தயாரிப்பாளராக இணைந்து கொண்டார்.

1971 ஆம் ஆண்டில் இருந்து 1976 ஆம் ஆண்டு வரையான குறுகிய காலப் பகுதியிலேயே சங்க நாதம், வாலிப வட்டம், இசையும் கதையும் போன்ற நிகழ்ச்சிகளின் வழியாக தமிழ் நெஞ்சங்களின் பேரபிமானம் பெற்ற அறிவிப்பாளராக விளங்கினார்.  

பின்னாளில் புகழ் பூத்த எழுத்தாளரான அருண் விஜயராணி உள்ளிட்ட பெரும் படைப்பாளிகளின் கதைகளை இசையும் கதையுமாக அரங்கேற்றிப் பெரும் புகழைச் சம்பாதித்தவர். 



வி.ஏ.அப்துல் கபூர், கே.எஸ்.நடராஜா (ஞானக்கவிஞர் நாவற்குழியூர் நடராசன்) போன்ற மூத்த வானொலி ஆளுமைகளைத் தன் குருவாக நேசித்தவர். அவுஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்ந்த இலங்கை வானொலி ஆளுமை திருமதி பொன்மணி குலசிங்கம் (இலங்கை வானொலித் தமிழ்ப் பகுதி முன்னாள் இயக்குநர்) அவர்களை மிகுந்த பயபக்தியோடு எதிர்கொள்வார். இலண்டன் பிபிசி தமிழ்க் குடும்பத்தில் தன்னை இணைத்து, உலகத் தமிழ் ஒலிபரப்பில் புடமெடுத்துப் பிரகாசிக்க வைத்த “தமிழ் மாகடல் சங்கரண்ணா” என்ற தமிழோசை சங்கர் என்ற சங்கரமூர்த்தியைத் தன் வாழும் காலம் தோறும் நேசித்தவர் என்பதற்கு அவரது ஒவ்வொரு பேட்டிகளும் சான்று.

இசையும் கதையும் நிகழ்ச்சியில் அவர் குறித்த கதை சொல்லியாகவும், பாத்திரமாகவும் மாறி மாறிப் பயணிக்கும் உத்தியை வெகு சிறப்பாக வேறுபடுத்திக் காட்ட வல்லவர்.

இவரும், அப்துல் ஹமீதுமாக இசையும் கதையும் நிகழ்ச்சிக்காகப் பாடல்கள், சிறப்புச் சப்தங்கள் கொண்ட ஒலிப் பேழைகளோடு மிகவும் சிரத்தையாகச் செய்து முடித்த களைப்பில் வானொலிக் கலையகத்தை விட்டு வெளியேறும் போது “என்ன இசையும் கதையும் ஒலிப்பதிவா?” என்று கேட்பார்களாம். அவ்வளவுக்கு முகம் அழுது வடிந்த நிலையில் குறித்த படைப்பின் சோகப் பாத்திரமாக மாறி விடுவார்களாம்.

 

இலங்கை வானொலி நேர்முகப் பரீட்சையில் தனக்குக் கிடைத்த நிரந்தர அறிவிப்பாளர் பதவியை புவனலோஜினி (வேலுப்பிள்ளை) நடராஜசிவம் என்ற புதியவருக்குக் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டு, ஒலிபரப்பு ஒழுங்கு உதவியாளராக விமல் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டது அவரின் பெருந்தன்மைகளில் ஒன்று என்று இவர் வாழும் காலத்திலேயே தன்னருகில் வைத்துக் கொண்டு அப்துல் ஹமீத் அவர்கள் நெகிழ்ந்திருக்கிறார்.

விமல் சொக்கநாதனின் “வாலிப வட்டம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பின்னாளில் இலங்கைப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாகவும் விளங்கிய தலைமைத்துவப் பண்பைக் கொண்டதுவும், அவர்களோடு இன்னும் அந்த நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் இன்று தாத்தா நிலையிலும் விமலின் ரசிகர் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வதாகவும் அப்துல் ஹமீதோடு, விமல் சொக்கநாதன் கலந்து கொண்ட ஐபிசி நேர்காணலில் சொல்லி மகிழ்ந்தார். 

‘அறிவிப்பாளரோடு அரை மணி நேரம்” என்ற புதுமையான இலங்கை வானொலி நிகழ்ச்சி வழி, சக அறிவிப்பாளர்களையும் அவர்களை நேசிக்கும் நேயர்களையும் கலந்துறவாட வைத்து மகிழ வைத்ததும் விமல் சொக்கநாதனின் இன்னொரு பரிமாணம். 

1976 ஆம் ஆண்டு லண்டனில் குடியேறிய விமல் சொக்கநாதன் அங்கு தனது சட்டத்தரணியான துணைவியார் சகிதம் ஒரு சட்ட நிறுவனத்தை நடத்தி வந்திருந்தார். 

விமல் சொக்க நாதன் அவர்களின் வானொலி வேட்கைக்குத் தீனி போட்டது லண்டன் பிபிசி.

லண்டன் பிபிசியின் தமிழோசையில் பகுதி நேரமாக நிகழ்ச்சி வழங்குனராகவும் பணியாற்றி வந்தார். இலங்கை வானொலியில் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிவந்த விமல் சொக்கநாதனுக்கு பிபிசியில் செய்தி ஒலிபரப்புப்பணி. அவர் ஆரம்பத்தில் பணிபுரிந்த சட்ட நிறுவனத்தின் இயக்குநர், தன்னிடம் சட்ட உதவிகளைத் தேடி வரும் தமிழர்களுக்கு “இவர் பிபிசியில் வேலை செய்கிறார்” என்று பெருமையாக விமல் சொக்கநாதனை அறிமுகப்படுத்துவாராம்.

சிறந்த அறிவிப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தனது சக ஒலிபரப்பாளர்களால் அங்கு அவர் பாராட்டப்பட்டார்.

இலங்கை வானொலியில் குறுகிய காலத்தில் பெரும் நேயர் வட்டத்தை உருவாக்கியவர். பின்னர் பிபிசி தமிழோசை கேட்கும் உலகத் தமிழ் நெஞ்சங்களின் இதயத்தில் மட்டுமல்ல. ஈழத்தில் போர் முற்றிய நெருக்கடியான சூழலில் அவரது குரலை மின்சாரமில்லா இரவுகளில் ஈழத்தாயகத்தில் உள்ளோர் மறுபக்கச் செய்திகளைக் கேட்பதற்காகத் தவம் கிடந்ததெல்லாம் வரலாறு.

பிரான்ஸை மையப்படுத்திய TRT வானொலி மற்றும் தொலைக்காட்சி, TTN தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கங்களும் அவரது வானொலி அறிவுச் சொத்தை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொண்டார்கள். 

“மனதைத் திறவுங்கள்” நிகழ்ச்சி வழியாகவும், ஐபிசி சிற்றலை ஒலிபரப்பின் வழியே ஈழத்துக்கு உறவுப்பாலம் அமைத்த “களம் பல காண்போம்” நிகழ்ச்சி வழியாகவும் ஈழத்து மண்ணில் தன் வேரைப் பரப்பினார். அதன் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் ஒரு வாரம் சிறப்பு வானொலி வழிகாட்டல் பயிற்சி நெறியை வன்னியில் உள்ள ஊடகருக்கு வழங்கவும் பயணப்பட்டு அப்பணியைச் செம்மைப்படுத்தினார்.

லண்டனில் வாழும் மூத்த பத்திரிகையாளர் ஈ.கே.ராஜகோபாலின் புதினம் பத்திரிகையிலும் பின்னாளில் தன் இறப்பு நேரும் வரை வீரகேசரியிலும் “விமலின் பக்கம்” என்ற தொடரின் வழியாக சமூக நடப்புகளைத் தன் பாணியில் கொடுத்து வந்தார். 

2007 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட “வானொலிக் கலை” என்பது ஒவ்வொரு ஒலிபரப்பாளன் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆகச் சிறந்த கையேடு. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பொருள் நிறைந்த வழிகாட்டியாகக் கொண்டு போவார்.

அந்த நூல் வெளியீட்டு விழாவை சென்னையில் இருந்து, கனடா, சிட்னி காண எடுத்திருந்தார்.

விமலின் பக்கங்கள் என்ற நூலைத் தொடர்ந்து ‘இலண்டனில் இருந்து விமல்” என்ற நூல் எங்கள் விமல் சொக்க நாதன் அவர்களது நிறைவான பங்களிப்பாக அமைந்து தன் தாயத்திலும் விழாக் கண்டு விடைபெற்றுக் கொண்டார்.

ஒரு பழுத்த கல்விமானாக இருந்தாலும் ஒலிபரப்புத் துறை மீது கொண்ட காதலால் தன்னுடைய வாழ்நாளின் அடிநாதமாக அந்த வேட்கையை ஊடகத்துறை மீது நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று அவாக் கொண்டவர் என்பதை அவரின் பேட்டிகளின் வழியாக உணரலாம்.

தான் கல்வியில் பெரிய உயரத்தைத் தொட்டாலும் வானொலிப் பணியே மகத்தான ஆத்ம திருப்தி தந்த பணியாக அவர் மனது திடம் கொண்டதால் தான் 50 ஆண்டுகளைக் கடந்து வானொலி வாழ்வோடு அவரை இருக்க வைத்தது.

“முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய அனுபவம் எனக்கிருந்தாலும், விமல் சொக்கநாதனைக் கண்ட நாள் முதலாய் அவருடைய மாணவனைப் போலச் செய்திக்களைப் படித்துப் பழகினேன்” என்கிறார் பிபிசி புகழ் எஸ்.சம்பத்குமார் என்ற மூத்த ஊடகர். 

“அவரவர் வாழ்க்கையில்

ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்”

பாடல் தன்னை ஈர்த்ததொன்றாகத் தன் வாழ்வியல் பயணத்தை ஒப்பிட்டுப் பார்க்க வைத்ததாக இலங்கை வானொலி “தென்றல்” அதிதியாகப் போன போது விமல் சொக்கநாதன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

அதே பாடலில் வந்து போகும்

“நிலவுகள் சேர்ந்து பூமியில்

வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்”

என்று வாழ்ந்து மறைந்த நம் வானொலிக் குயில்களை நினைத்து மனம் பாடுகிறது.

காற்றில் கலைபடைத்துக் காற்றலையில் சங்கமமாகிய

எங்கள் விமல் அண்ணா என்ற விமல் சொக்கநாதன் அவர்கள்

உலகத் தமிழ் ஊடகப் பரப்பில் அவர்கள் அழியாச் சொத்தாக விளங்கி நிற்பார்.

கானா பிரபா

03.08.2023


Posted by கானா பிரபா at 10:19 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, July 28, 2023

Prisioner #1056 “போர் தின்ற மனிதன் சாதித்த கதை” 📚 நூல் நயப்பு

 

“அழக்கூட முடியாமல் களைத்துப் போயிருந்தோம்"

நாளுக்கு நாள் இந்த வதைமுகாமலில அனுபவிக்கும் சித்திரவதையை விட மேலானது இறப்பு, 

என்பதுதான் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகபட்ச கருணை என்ற நிலையில் தான்அங்குள்ள அத்தனை பேரின் ஒருமித்த மனநிலை.


அம்மாவின் கைக்குள் இருந்த அந்தப் பதினேழு வயதுப் பையன் இதோ இப்போதுகைதி இலக்கம் #1056 என்ற அடையாளச் சின்னதோடு ஶ்ரீலங்கா அரசின் வதைமுகாமில்.

அவனோடு கூடவே சிறைப்பிடிக்கப்பட்ட 2700 அப்பாவித் தமிழ் இளைஞர்களின்குரலாக அது ஒலிக்கிறது.


அந்தப் 17 வயது பையன், 36 வருடங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த அவலவாழ்வினைக் காட்சிப்படுத்தும் சூழலில் இருந்து ஆரம்பிக்கிறது Prisioner #1056.

அந்தப் பையன் தான் இன்று கனேடிய மண்ணின் ஆகப்பெரிய சுயாதீன சொத்துநிர்வாக நிறுவனம் CI Financial இன் நிறைவேற்றுத் துணைத்தலைவராக வளர்ந்துநிற்கும் ரோய் ரட்ணவேல். 

ஈழத்தின் வடமராட்சி மண்ணின் கடல் வளம் கொண்ட பருத்தித்துறை மண்ணின்அழகியல் விபரணத்தோடு தொடங்குகிறது ரோய் ரட்ணவேலின் வாக்குமூலம்.

மிராஜ் 2000 விமானத்தாக்குதலோடு தொடரும் பக்கங்களில் தன் கண் முன்னேகண்ட போரின் கோர வடுக்களோடு மெல்ல மெல்ல, 

1987 இல் வடமராட்சி மண் மீது ஶ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை வழியாக அந்தக்கொடிய போரின் சாட்சியங்களில் ஒருவராகக் கைதாகி, வதை முகாமில் அடுத்தஅனுபவங்களுக்கு முகம் கொடுக்கிறார். தமிழ்த் தீவிரவாதி என்று பலவந்தமாகஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அந்தக் கொலைக்களத்தின் பலியாடுகளில்ஒருவராகிறார்.

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் நிகழ்ந்து 40 ஆண்டுகள் தொட்டிருக்கும்நிலையில் அந்தக் கொடிய போரியல் வரலாற்றோடு சுபேந்திரன் (ரோய் ரட்ணவேல்) என்ற அந்த இளைஞனின் சோதனையும், சாதனையுமாகப் பயணிக்கிறது தொடர்ந்த பக்கங்கள்.


“தோற்றுப் போன கண்களோடு” 

தந்தையைக் கண்ட விபரணம் முதற்கொண்டு பக்கத்துக்குப் பக்கம் படித்துக்கொண்டே போகும் போது அந்த வலிகள் மனதில் ஏறிக் கண்களைக் குளமாக்கிக் கொண்டே போகிறது. முதல்நான்கு அத்தியாயங்களைப் படிக்கும் போது இடையில் நிறுத்தி அழுதுவிட்டுத்தொடர்வதுமாக இருந்தது இந்த வாசிப்பனுபவம். அவ்வளவு பெரிய வேதனையைக்கொட்டிக் கொடுத்திருக்கும் அந்த அப்பாவி இளைஞனின் துயர் மிகு வரலாறு.



Prisioner #1056 நூல் நயப்பு ஒலிப்புத்தகமாகவும் Audible இல் Roy Ratnavel  அவர்களின் குரலிலேயே பதிவு செய்யப்பட்டும் கிடைக்கிறது. அந்தக் குரல் வழி கேட்கும் அனுபவம் கிடைக்கும் போது எழுத்தின் வீரியம் இன்னும் இருமடங்காகத்தொனிக்கிறது. 10 மணித்தியாலங்கள் கொண்ட ஒலிப்புத்தகம் அது. 

அந்த வதை முகாமில் இருந்து தப்பிய வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள்எல்லாம் அப்படியே ஒரு டயரியின் ஒவ்வொரு கிழிக்கப்படாத பக்கங்களைப்படிக்கும் அனுபவம். காட்சிகளையும், வரலாற்றையும் விபரிக்கும் தோரணையில்ஒரு முழு நீள வாழ்வியல் திரைப்படத்தைக் கண்ட உணர்வும் எழுகிறது.


இந்தப் புத்தகம் ஒரு சாதாரண மனிதன் சாதித்த கதையையும் சொல்கிறது, கூடவேஇலங்கை இனப்பிரச்சனையின் மூலாதாரங்களையும் தொட்டுக் கொண்டு போகும்முழுமையான வரலாற்றுப் பார்வையாகவும் பயணிக்கிறது. மிக முக்கியமாக 1983 இலிருந்து 2009 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனக் கருவறுப்பும், அதனையொட்டி நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு எதிரான முன்னெடுப்புகளும்ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

புலம்பெயர் தேசத்து நம்மவரை எள்ளி நகையாடும் தாயகத்தவருக்கு இந்த நூல்நல்லதொரு படிப்பினையைக் கொடுக்கும்.

ஈழ விடுதலைப் போராட்டம் மீது மாற்றுச் சிந்தனை கொண்டிருந்த தன் தந்தைதான் நேசித்த தேசத்திலேயே அகதியாக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையால்கொல்லப்பட்ட வலியை நம்முள் கடத்துகிறார்.


“இந்த உலகத்தில் இரண்டு பிரச்சனைகள் உண்டு

 ஒன்று உன்னுடையது, இன்னொன்று மற்றவருடையது

 உன்னுடையதை நீ தான் தீர்க்க முடியும்”

அந்தச் சிறுவனுக்கு கோல்பேஸில் ஐஸ்கிரீமும், கொத்து ரொட்டியும் வாங்கிக்கொடுத்துச் சொன்ன அந்தத் தந்தையின் அசரீரி வார்த்தைகளோடு தன்னுடையசுய வரலாற்றில் 17 வயது வரை ஆக்கிரமித்த தன் தந்தையின் சிந்தனையின்வெளிப்பாடுகளாகத் தான் அடைந்த முன்னேற்றங்களோடு பதிவு செய்கிறார்.


இதைப் படிக்கும் போது தந்தையின் அருமை, நாம் அதே ஸ்தானத்தை எட்டும்போது இன்னும் பரிபூரணமாக விளங்கும் ஞானமும் எட்டிப் பார்க்கிறது.


“மயக்கமா கலக்கமா”

மனதிலே குழப்பமா”


கண்ணதாசன் வரிகளுக்கு அடிமைப்பட்ட தந்தையின் குணாதிசியம்ஒவ்வொன்றையும் படமெடுத்துப் புத்தகம் முழுக்கச் சொல்லிக் கொண்டேபோகிறார்.


குண்டு மாரி பொழிந்த காலத்தில் இருட்டு பங்கருக்குள் பொக்கற் றேடியோவில்இளையராஜா பாடலைக் கேட்டு அந்த நேரம் கொஞ்சமே ஆசுவாசப்பட்ட அந்தப்பையன் பின்னாளில் கனடாவில் சில அடிகள் முன்னே இசை நிகழ்ச்சி படைக்கவந்த இளையராஜாவைப் பார்த்த கணம், அப்படியே பழைய நினைவைத்தொடர்புபடுத்திப் பார்க்கிறார்.


கண்ணீரும் குருதியும் கலந்த தேசத்தின் பிரதிநிதியாக தான் சுமந்ததையும், தன்தேசம் சுமந்தயும் பதிந்து கொண்டே போகிறார்.


"ஒன்று என்பது உன் குடும்பமும், நட்பும் ;

பூச்சியம் என்பது எல்லாமுமே" என்று சொல்லிச் சென்ற தன் வழித்துணையாக வந்த அப்பாவின் கதைகளோடு அம்மாவின் மீன் கறியின்சுவை, ஆன்மிகக் களஞ்சியமாக இருந்த ஈழத்துக்கே உரித்தான பழமையின்சின்னம் தன் அப்பப்பா குறித்த பார்வை, அயலவர்கள் என்று ஒரு ஈழத்து அழகியவாழ்வியலின் கூறுகளைப் பதிவாக்குகிறார்.


கனடா தேசத்தின் உள் நுழைவு நேர்முகத்தில் தன்னைச் சந்திக்கும் கனேடியவெள்ளையின அதிகாரி போரால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் கேட்க, மேனியைத் திறந்து காட்டி அந்தக் கோர வடுக்களை ஆதாரமாகச் சமர்ப்பிக்கிறார்.


அமைதிப்படையால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் தந்தைக்குப்பக்கத்தில் 4 மணி நேரம் உறைந்து போயிருந்த தன் தாயின் நிலையை, 

புலம் பெயர் தேசத்தில் அந்தத் தாய், உளவியல் சிக்கலும், நோயும் கொண்டுமுற்றிப் போய் மரணம் சம்பவித்த இடத்தில் அங்கே தனியனாக சில மணித்தியாலம்தனக்கும் அதைக் கொடுத்து அதே சூழலை இணைத்துப் பார்க்கிறார்.


இந்திய இராணுவம் 32 மாதங்கள்  ஈழமண்ணில் நிகழ்த்தியகோரத்தாண்டவத்தையும் கோடிட்டுக் காட்டுகிறார்.


அப்பா கொடுத்த 100 கனேடிய டாலர்களில் 50 டாலர் பாதி வழியிலேயேதீர்ந்துவிட, 

ஏப்ரல் 18, 1988 இல் கனடாவுக்கு நுழைந்த அந்தக் கணத்தில் அப்பாவின் நண்பர்கொடுத்த புகையிலைச் சுருளால் குடிவரவு அதிகாரிகளிடம் மாட்டுப்பட்டதைநகைச்சுவையோடு விபரிக்கிறார்.

தான் கனடாவுக்கு வந்து மூன்று தினங்களில் ஏப்ரல் 21 அன்று தனது 53 வயதுத்தந்தை இந்திய இராணுவத்தின் கொடூரத்தால் கொல்லப்பட்டதை விபரிக்கும்போது நம்முள்ளும் அந்த வெறுமை, ஆற்றாமை மேலெழுகிறது.


உனக்கு ஏற்படும் வலியானது இரண்டு விதமான அதிர்வுகளைக் கொடுக்கும். ஒன்று, அதில் இருந்து மீளாது அதில் உழன்று கஷ்டப்படுவது.

இன்னொன்று அந்த வலி உனக்கு வாழ்க்கையின் திறவுகோலாய் வழிகாட்டுவது.


தன் தந்தை கொடுத்த அந்த உபதேசம் தான் அந்தத் தனித்து விடப்பட்ட சிறுவன்கனேடிய மண்ணில் தொடர்ந்து போராடிச் சாதிக்க அசரீரி வார்த்தைகளாய்எழுகின்றது.

இந்தப் புத்தகத்தில் ஈழத்து மண் வளத்தில் இருந்து கனேடியப் பனிக்காலம்எல்லாம் வெகு அற்புதமான வர்ணனைகளால் காட்டப்பட்டிருக்கின்றது.


கனடாவில் பனிக்காலம் தொடங்கியதை அறியாதவர் அன்றொரு நாள்தொழிற்சாலையில் வேலை முடித்து வெளிக்கதவைத் திறந்தால் “Crystal white gown” போர்த்தப்பட்டது போல இருந்தது என்று அந்தப் பனிச்சூழலைஉவமானப்படுத்தும் அழகியல் ஆகா.

என்னுடைய வாழ்க்கையில் நான் கண்ட அவலச் சாவுகளே போதும் என் இன்றையவாழ்வு எவ்வளவு கொடுப்பினையானது என்று சொல்கிறார்.


சுய பச்சாதாபம் (self-pity) எப்போதும் உங்களை வளர்க்காது என்ற அவரின்கூற்றில் ஆகப் பெரிய உளவியல் இருக்கிறது.


தன் 44 வயதிலேயே விதவை “ஆக்கப்பட்ட” தாயைக் கனேடிய மண்ணுக்குக்கொண்டு வர எடுக்கும் முயற்சிகளும், தன் தாயின் உளவியலுக்கும், சாதிக்கத்துடிக்கும் மகனுக்குமான மனப் போராட்டத்தையும் பதிவாக்குகிறார்.


தன் உயிரை மீட்ட Fernando அங்கிளில் தொடங்கி Bill என்று தன் வாழ்வின்வழிகாட்டிகளின் ஆளுமைத் திறன் தன்னை எப்படிப் புடம் போட்டது என்றும்சொல்கிறார்.

கட்டுநாயக்கா விமானத் தாக்குதல் நடந்த வரலாற்றைப் பதிவாக்கும் போது அந்தத்தாக்குதலை முன்னெடுத்து அங்கே வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தன்பால்யகாலத்து ஹாட்லிக் கல்லூரி நண்பன் ரவிஷங்கரின் வாழ்க்கை வேறு மாதிரிஅமைந்திருந்தால் ஒரு பெரும் விஞ்ஞானியாகக் கூடிய மூளை இருந்தது என்றுவருந்துகிறார்.



தன் மனம் கவர்ந்த அந்தப் பெண்ணைச் சந்தித்த அனுபவம், காதலைச் சொன்ன கதை, இளம் குடும்பத்தில் எழும் கருத்து மாறுபாடுகள் அதன் வழியே தன்னைச் சுயவிசாரணைக்கு உட்படுத்தும் பண்பு என்று மிக ஆழமானதொரு வாழ்வியல்மாற்றத்தை அப்படியே பதிவாக்குகிறார்.

நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளான தன் மகனுக்குக் கொடுத்த உபதேசம், அவனை ஒரு பொறுப்பான தந்தையாக வழி நடத்திய சம்பவங்கள் நமக்கும் பாடம்எடுக்கின்றன.


மீண்டும் இலங்கைக்குப் போய் தம் தந்தை இறந்த அந்த அறைக்குப் போய்ப்பார்த்து பிரியாவிடை கொடுத்து விட்டு, பெர்னாண்டோ ஆன்ரியையும், தன்தந்தையின் காதலியையும் சந்தித்தது ஒரு குறும் படமாக ஓடுகிறது.


புலம்பெயர்ந்த தேசத்தில் படிப்பும், வேலையும் என்று இரு குதிரைச் சவாரியில் ஒவ்வொரு இளைஞனும் சந்திக்கும் அனுபவ வெளிப்பாடுகளை இவர் கதையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.

இந்த நூலைப் படித்துக் கொண்டு போகும் போது ஒரு சாதாரண இளைஞன் சாதித்த கதை திரைப்படமாக ஓடுகிறது. அதை ஒப்புவிக்குமாற் போலத் தன்கதையைப் படமாக்கினால் ஹாலிவூட் நாயகன் Matt Damon கச்சிதமான தேர்வாகஇருப்பார் என்றும் சொல்லிப் போகிறார் ரோய்.

உன்னுடைய வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை மீண்டும் நினைத்துப் பார் இன்னும்

சாதிக்கலாம்”


“மற்றவர்களின் கருத்துகளில் உன்னுடைய ஆளுமையைச் செலுத்த முடியாதுஆனால் அதன் விளைவாக  உன்னுள் எழும் உணர்வை கட்டுப்படுத்தக் கூடியஆளுமை உன்னிடம் உள்ளது”

ஆங்காங்கே தொனிக்கும் தன் வழிகாட்டிகளின் வழியாகத் தான் பெற்ற அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் என்று ஒரு முழு மனிதனைஉருவாக்கும் முகாமைத்துவப் பாடமாகவும் இந்த நூல் திகழ்கின்றது.


முன் அனுபவமற்ற சாதாரண அலுவலக வேலையாளாகச் சேர்ந்து தன்தனித்துவத்தை அடையாளப்படுத்துவது எப்படி,  வேலையில் எழும் முகாமைத்துவச் சிக்கல்கள், அதை எப்படிக் கையாளவது என்று ஆரம்ப வகுப்பில் இருந்தே பாடமெடுக்கிறார்.


மூன்று மாத வதை முகாமில் 36 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு நிகழ்ந்த உடல், உள ரீதியான காயங்கள் இன்னமும் ஆறாமல் வடுக்களைச் சுமந்து வாழும் கொடுமையும் அதனால் வாழ்க்கையில் எழக்கூடிய முக்கியமான முடிவுகளைக் கூடஎடுக்க முடியாமல் தவிக்கும் ஆற்றாமையும் காட்சியாகக் கொண்டு வரும் வலிநிறைந்த எழுத்து நூல் நெடுகக் கிடக்கிறது.


கனடாவின் மைய நீரோட்டத்தில் வாழும் என்ற ரோய் என்ற தனிமனிதனின்சரித்திரம் அவலம் நிறைந்த ஈழத்தவர் வாழ்வின் பரிமாணமாக விரிந்து கிடக்கிறது.




ரோய் சுபேந்திரன் ரட்ணவேல் (Roy Ratnavel) எழுதிய Prisioner #1056

 நூல் கனடாவின் முதற் பத்து நூல்களில் முதன்மையானதாகவும் விற்பனையின் முதற் தரவரிசையில் இடம்பிடித்திருக்கிறது.


“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”


ரோய் இன் அப்பா தனக்குப் பிடித்த பாடலைப் பாடுவது அசரீரியாக நம் காதிலும்ஒலிக்கிறது.

தன் தந்தையின் கனவுகளுக்கு மகன் கொடுத்த ஆகச் சிறந்த வெகுமதி இந்த நூல்.


கானா பிரபா

28.07.2023

Posted by கானா பிரபா at 11:25 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ▼  2023 (19)
    • ▼  December 2023 (1)
      • வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 18 ஆண்டுகள் ❤️ ✍🏻
    • ►  November 2023 (1)
      • யாதும் யாவரும்.... திரைப்பார்வை – கானா பிரபா
    • ►  October 2023 (4)
      • வேலு பரி படைத்த “மெளனத் தீவு” நூல் நயப்பு கானா பிரபா
      • ஆஸி தமிழ்ச் சமூகத்தின் மற்றுமொரு படைப்பு ❤️ யாதும...
      • நான் கீபோர்ட் வாத்தியம் பழகிய கதை 🎹
      • “சினிமா : பார்த்ததும் கேட்டதும்” ✍🏻 லெ.முருகபூபத...
    • ►  September 2023 (1)
      • வானலைகளில் ஒரு வழிப்போக்கன் ✍🏻B.H.அப்துல் ஹமீத் ...
    • ►  August 2023 (1)
      • விடைபெற்ற எங்கள் விமல் அண்ணா !
    • ►  July 2023 (2)
      • Prisioner #1056 “போர் தின்ற மனிதன் சாதித்த கதை” 📚...
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes