skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Tuesday, December 05, 2017

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்


இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பன்னிரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து பதின்மூன்றாவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.
எப்பேர்ப்பட்ட வரம் இது. 

இறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", மற்றும் "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.

இதுவரை பதிப்பித்த நூல்களை விரைவில் Amazon Kindle நூலுருவாக்கும் பணியில் உள்ளேன். அத்தோடு தமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள்,  படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன். 

எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக 
மடத்துவாசல் பிள்ளையாரடி http://www.kanapraba.blogspot.com

அல்லது
www.madathuvaasal.com

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
http://www.radiospathy.com/

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
http://ulaathal.blogspot.com.au/

இவை தவிர

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி 
http://videospathy.blogspot.com.au/

 ஈழத்து முற்றம் 
http://eelamlife.blogspot.com.au/
என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்
http://eelamlife.blogspot.com.au/

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/
என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.

ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற "அனுமதி பெறாது பிரசுரிக்கும்" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன். 

இதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
05.12.2017
Posted by கானா பிரபா at 8:35 AM 2 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, December 03, 2017

எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஈழத்தில் தீபாவளி என்றால் புதுச்சட்டை போட்டுக் கொண்டு கொண்டாடுவதைத் தாண்டி, வீடுகளில் தீபம் ஏற்றும் மரபு இருந்ததில்லை. ஆனால் கார்த்திகைத் தீபம் என்ற விளக்கீடு வருகுதென்றால் ஒரு சில வாரங்களுக்கு முன்பே உள்ளூர்க் கடைக்காரர் தம் வாசல் படியைத் தாண்டிக் கடகங்களில் மண் தீபச் சுட்டிகளைக் குவித்து விடுவர். விளக்கீடு வரப் போகுதென்று கட்டியம் கூறும் அது.


வீடுகளின் முகப்பு வீதியில் இருக்கும் கல், புல் பூண்டு எல்லாம் அகற்றப்படும் உழவாரப் பணியை ஒவ்வொரு வீட்டாரும் தொடங்கி விடுவர். அதுவரை குடிகொண்டிருந்த முள் பற்றைகள் எல்லாம் காலியாகிப் பளிச்சென்று மின்னும். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பின் வளவில் வாழைத் தோட்டமும் முற்றத்தில் பப்பாளி மரமும் இருக்கும். வாழைக் குலையை ஈன்ற பெரும் வாழை இந்த விளக்கீட்டுக்காகக் குறி வைக்கப்படும். ஒரு வாழை மரத்தைத் தறித்து அதன் தலைப் பகுதியை நறுக்கிக் கிடத்தி விட்டு இரண்டாக்கினால் இரண்டு வாழைக் குற்றிகள், இரண்டு வீட்டுக்கு உதவும். இரண்டாக்கிய வாழையின் மேலே கத்தியால் குவியமாகக் கோதி விட்டிருக்கும். 


பாதி வெட்டப்பட்ட வாழைக் குட்டியைக் கொண்டு போய் வீட்டுக்கு நேர் வெளியே  உள்ள வீதியில் பறித்த குழியில் நட்டு அதனுள் பப்பாளிக்காயை வைத்து எள் எண்ணெய் எரிப்பது போலவும் விளக்கேற்றுவார்கள். இன்னுஞ் சிலர் கொப்பரைத் தேங்காயை வாழைக் குற்றிக்கு மேல் நட்டும் எரிப்பர்.  அந்த வீதியின் இரு மருங்கும் வாழைக் குற்றிகளின் தலையில் தீச் சட்டி பவனி போலக் காட்சி தரும். வாழைக் குற்றியைச் சூழவும் சோடனை போல மரத் துண்டுகளைச் செருகி அதன் மேல் சுட்டி விளக்கையும் வைப்பர்.


கிழுவந்தடிகளை அளவாக வெட்டி, தோய்த்துலர்ந்த 

பழைய வேட்டியைக் கிழித்து தேங்காய் எண்ணெய் தோய்த்து ஒவ்வொரு தடிகளிலும் பந்தம் கட்டி வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். வீட்டின் பின் வளவின் ஒவ்வொரு திக்கிலும், தோட்டத்திலும் இந்தத் தீப்பந்தங்களை நடுவதும் மரபு. 

வீட்டில் இருக்கும் ஆம்பிளைகள் வாழைக் குட்டித் தீபத்துக்குப் பொறுப்பு என்றால், பெண்கள் இந்தக் கிழுவந்தடிப் பந்த வேலையைப் பங்கிட்டுச் செய்வர். என்னுடைய அம்மாவுக்குப் பின் வளவில் இவற்றை நட்டு வைக்காவிட்டால் பொச்சம் தீராது. கடுமையான போர்க்காலங்களில் கூட வெளிச்சத்தைக் கண்டு ஹெலியில் வந்து குண்டு போடுவார்கள் என்ற பயமில்லாது சனம் தம் சடங்கைச் செய்தது.


தாவடிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை விளக்குப் பூசை எங்கள் அப்பாவின் பரம்பரைப் பூசை. அப்பாவின் தங்கையின் கணவர் பூபாலசிங்கம் மாமா இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியில் இருந்து வெள்ளணவே மாட்டு வண்டி கட்டி வீட்டுக்கு வந்து பொருள், பண்டங்கள், பொங்கல் பானை, இளநீர்க் குலைகள் எல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டு, சின்னப் பெடியள் எங்களையும் வண்டியின் ஒரு கரையில் இருத்தி “ஏ இந்தா இந்தா” என்று மாட்டை வழி நடத்திப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு போவார். 


கோயிலின் முன் பக்கம் பாழ் பட்ட பனைக் குற்றி ஒன்று நிமிர்த்தி வைக்கப்பட்டு அதன் மேல் தென்னோலை,

பனையோலை எல்லாம் செருகி ஒரு சூரனைப் போல நிற்கும். நவராத்திரிக்கு வாழையை நட்டு மகிடாசுரன் என்று அதை உருவகப்படுத்தி வாழை வெட்டு நடத்துவது போல இந்தக் கார்த்திகை விளக்கீடு அன்று சுவாமி வெளி வீதி வருகையில் ஓலை கட்டிய பனையைக் கொளுத்தியதும் சொக்கப்பனை கொழுந்து விட்டெரியும். சுவாமி பின் வீதிப் பக்கம் போனதும். எரிந்து தணிந்த அந்த மரத் துண்டையும், ஓலைத் துண்டையும் இழுத்துக் கொண்டு போய்க் குப்பை மேட்டில் போடுவது சிறுவருக்கு ஒரு கொண்டாட்டம் போல.


சாமம் தொட வீடு திரும்பும் போது கொண்டு போன பொருட்கள் எல்லாம் சர்க்கரைப் பொங்கலாகவும், வடை, மோதகங்களாகவும் மாறி மாட்டு வண்டியில் திரும்ப வீடு வரும். வீட்டுக்கு வந்து எல்லோரும் பரிமாறி உண்டு மகிழ்வோம்.


விளக்கீட்டுக்கு வீடு வீடாக எரிந்து கொண்டிருக்கும் வாழைக் குற்றிகளைப் பார்க்கிறேன் பேர்வழி என்று படலைப் பக்கம் நிற்கும் தன்னுடைய ஆளைப் பார்ப்பதற்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு வாலிபக் குருத்துகள் கிளம்பி விடுவர். சாமத்தில் சைக்கிளில் வரும் விடலைப் பெடியள் கூட்டம் வாழைக் குற்றியைக் காலால் தள்ளி விழுத்தி விட்டுப் போகும் சேட்டையும் நடக்கும். கார்த்திகைத் தீபம் கோயிலில் ஒரு நாள், வீட்டில் ஒரு நாள் என்று பங்கிட்டுக் கொண்டாடி முடிந்ததும் விற்பனை ஆகாத தீபச் சுட்டிக் கடகங்களைக் களஞ்சிய அறைக்குள் கொண்டு போய் வைத்து விடுவர் கடைக்காரர், அடுத்த விளக்கீடு வரும் வரைக்கும்.


படங்கள் நன்றி : கடகம் & தமிழ் வின் இணையத் தளங்கள்


கானா பிரபா

03.12.17

 

Posted by கானா பிரபா at 11:54 AM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, November 24, 2017

சென்றிப் பெடியன் தவாண்ணை


யாழ்ப்பாணம் ரவுணுக்கை சைக்கிள் கடை வச்சிருந்த வேலாயுதம் மாமாவுக்கு பெரிய வீடு, வளவு. ஊருக்குள்ளை ஒரு பெரிய அரண்மனை மாதிரியிருக்கும். எண்பத்தேழில இந்தியன் ஆமி வந்த கையோட வேலாயுதம் மாமா குடும்பம் கொழும்புக்குப் போய் அப்பிடியே கனடாவுக்குப் போயிட்டினம். 
சண்டை மூண்ட பிறகு இந்தியன் ஆமி காம்ப் ஆக வேலாயுதம் மாமா வீடு இருந்தது. 
இந்தியன் ஆமிக்காறர் போன கையோட பூட்டிக் கிடந்த வீட்டை இயக்கக்காறர் எடுத்திட்டினம். ஆனால் இயக்கப் பெடியள் அங்கே நிரந்தரமாகத் தங்குவதில்லை. இருந்திட்டு எப்பவாவது  ட்றக்கில குவியலா வருவினம். ரெண்டு மூண்டு நாளிலை ஆக்களைக் காணேலாது. வெளி மாவட்டத்தில இருந்து சண்டைக்காக வாற பெடியள் எண்டு கந்தையா அண்ணை ஒருமுறை அப்பாவின் காதில் குசுகுசுத்தது கேட்டது. 
வேலாயுதம் மாமா வீட்டில் ஒருத்தர் மட்டும் அங்கே நிரந்தரமாகத் தங்கியிருப்பார். அவர் தான் தவாண்ணை.

எங்கட ஊர்ச் சனத்துக்குத் தான் அவர் சென்றிப் பெடியன் ஆனால் எனக்கு அவர் “தவண்ணை”
வேலாயுதம் மாமா வீட்டு வளவை மூடிக் கட்டிய பென்னம் பெரிய மதிலுக்கு மேல் இருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார் தவாண்ணை. கையில துவக்கு, இடுப்பைச் சுற்றிய சாரத்தை இறுக்கியிருக்கும் பெல்ட் கிரனேட் குண்டு பொருத்த வாகாக இருக்கும்.
ஒல்லி உடம்பெண்டாலும் கறுத்த புறூஸ்லீ மாதிரி இருப்பார் அவர்.

தவா அண்ணையோடு எப்படி எனக்குப் பழக்கம் வந்தது எண்டு யோசித்துப் பார்க்கிறேன். வேலாயுதம் மாமா வீட்டு வளவுக்குள்ள இருந்த வயிரவர் கோயில் எங்கட ஊர்ச் சனத்துக்குப் பொதுச் சொத்து மாதிரி. அப்பிடித்தான் நானும் கோயில் கும்பிடப் போற சாக்கில இயக்கப் பெடியளை விடுப்புப் பார்க்கப் போவேன். 
சாந்தன் அண்ணா என்னை விட ஐந்து வயது மூத்தவர். வேலாயுதம் மாமா வீட்டுக் காணியோட ஒட்டின ஒரே மதில்காறர். ஊர்க்காறரைக் கண்டால் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாத தவா அண்ணைக்கு ஏனோ என்னிலும் சாந்தன் அண்ணையிலும் ஒரு நேசத்தை வைத்துக் கொண்டிருந்தார். சினேகமாகச் சிரித்து விட்டுக் கடந்த காலம் போய். சாந்தன் அண்ணா வீட்டு விசேசங்களில் செய்யும் சாப்பாடு முதற் கொண்டு வைரவர் கோயில் புக்கை வரைக்கும் வாழையிலையில மடிச்சிக் கொண்டு போய் தவா அண்ணரோடு பங்கிட்டுச் சாப்பிடும் அளவுக்குப் பழக்கம் பிடித்து விட்டோம். பின்னேரம் ஆனால் மதிலில் இருந்து அலட்டிக் கொண்டிருப்பம்.
இந்த மூன்று பேர் கூட்டணியில் தவா அண்ணரை விட இரண்டு வயது இளையவர் சாந்தன் அண்ணா என்பதால் அவர்களுடைய கதைக்குள்ள நான் அதிகம் தலையிட மாட்டன். கேட்டுக் கொண்டிருப்பன்.

ஒரு நாள் சுப்பையா அண்ணை கண்டு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார். 
“எடேய் இயக்கப் பெடியனோட உங்களுக்கென்னடா சினேகிதம் அவன் பாவி மடியில கட்டியிருக்கிற குண்டு வெடிச்சுக் கிடிச்சுப் போனால் என்ன செய்வியள்? என்று வெருட்டிப் பார்த்தார். சுப்பையா அண்ணை கவலைப்படுவதிலும் நியாயம் இருந்தது. இந்தியன் ஆமி வர முந்தின காலத்தில ஒருமுறை  சுதுமலைத் தோட்டத்தில இலங்கை ஆமி ஹெலியை இறக்கி நோட்டம் பார்த்தவன். அந்த நாள் தொட்டு எங்கட ஊர் முச்சந்தியில இரவு நேரம் இயக்கப் பெடியள் மாறி மாறி சென்றியில் நிப்பினம். 

“நானொரு சென்றி தாவடிச் சென்றி
 பாதை தெரியவில்லை இந்த ஊரும் புரியவில்லை” எண்டு எங்கட ஊர் அண்ணைமார் “நானொரு சிந்து காவடிச் சிந்து“ சினிமாப்பாட்டை மாத்திப் பாடும் அளவுக்கு முச்சந்திச் சென்றிக்காறர் பிரபலமாகீட்டினம்.
அந்த முச்சந்தியில தான் வெட்டின சுரக்காய்க்குக் குங்குமம் போட்டு கழிப்புக் கழிக்கிறது. செத்த வீட்டு எட்டுச் சாப்பாடெல்லாம் அதில் தான் போடுறது. அந்தச் சந்தியைக் கடக்கும் போதே பயத்தில அங்காலை திரும்பிப் பார்த்துக் கொண்டு போகுமளவுக்குப் பயமான ஏரியா அது. ஆனால் இயக்கக்காறர் சென்றி போட்டதில இருந்து எல்லாருக்கும் பயம் தெளிஞ்சுட்டுது. கள்ளர் காடையர் கூட இரவில இனி வராயினம் என்று ஊர்ச்சனத்துக்குப் பெரும் ஆறுதல். 
ஆனால் ஒருநாள் இரவு நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது. படார் என்ற சத்தம் கேட்டு ஊர் நாயெல்லாம் வாள் வாளெண்டு குலைக்குது. சனம் அரக்கப் பரக்க வீதிக்கு வந்துட்டுது. முச்சந்திப் பக்கமிருந்து தான் அந்தச் சத்தம் வந்தது. காவலுக்கு நின்ற இயக்க அண்ணையின் கிரனேட் க்ளிப் கழண்டு குண்டு வெடிச்சு ஆள் அந்த இடத்திலேயே பலியாம் ஊர்ச்சனத்துக்கு மெல்லக் கதை பரவி விட்டது. சுப்பையா அண்ணை முதற் கொண்டு ஊர்ச்சனமெல்லாம் இயக்கத்தைப் பய பக்தியோட பார்க்கத் தொடங்கி விட்டுது.

“தவாண்ணை உந்த கிரனேட் கிளிப் தவறுதலாக்
கழண்டால் என்ன செய்வியள்?” 
“அது வெடிச்சுச் செத்துப் போவன் ஆனால் சண்டையில சாகேல்லை எண்ட கவலை இருக்கும்” என்று சொல்லும் போது தவா அண்ணையை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருப்பேன். முற்றிக் கிடந்த பப்பாக் காயைக் கத்தியால் செதுக்கி கிரனைட் மாதிரிச் செஞ்சு தந்தார். பறித்திருந்த குருமணல் திட்டியில் அதை மாறி மாறி எறிந்து, தெறித்துப் பாயும் மண்ணைப் பார்த்துக் கை தட்டி ஆமிக் காம்புக்குக் குண்டு போட்டாச்சு என்று கை தட்டிச் சிரிப்போம்.

தவாண்ணை இயக்கத்தில் சேர்ந்த கதையைச் சிரித்துச் சிரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் சாந்தன் அண்ணையிடம். நான் ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். தன்னுடைய ஊர் கிளிநொச்சியாம். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இயக்கக்காறரைக் கண்டதும் இவருக்கும் இயக்கத்துக்குச் சேர வேண்டும், யூனிஃபோர்ம் போட வேணும்,  துவக்குத் தூக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் சண்டைக்குப் போகப் பயம். ஏன் காயப்பட்டு இறந்தவர்களைக் கண்டால் அதை விடப் பயப்பிடுவாராம்.
இயக்கக் காம்புக்குப் போய் அங்குள்ள பெரியாளிடம்
 “நான் இயக்கத்தில சேர ஆசை ஆனால் அரசியல் துறையில் சேர ஆசை” என்று சொல்லியிருக்கிறார். தவாண்ணையின் நினைப்பு அரசியல் துறையில் இருந்தால் சண்டை பிடிக்கத் தேவையிராது என்று அவராகவே எடுத்த தீர்மானம் அது.
“வாரும் தம்பி தாராளமா அரசியல்துறையில் இறங்கலாம்” என்று கொடுப்புக்குள்ளை சிரித்துக் கொண்டே வரவேற்றாராம் இயக்கத்தின் பெரியாள்.

தவாண்ணைக்குக் கொடுத்த முதல் பொறுப்பு  சண்டையில காயப்பட்ட போராளிகளைப் பராமரிப்பது. அதுவரை காணாத காட்சியெல்லாம் கண்டாராம். 
ஒரு பக்கம் இடுப்புக்குக் கீழை ஒண்டுமே இல்லாமல் போர்வையைப் போர்த்துக் கொண்டு அனத்திக் கொண்டிருக்கும் போராளி, கண் பக்கம் கட்டுப் போட்டு கொண்டு “ஐயோ அம்மா வலிக்குது” என்று கத்திக் கொண்டிருக்கும் இன்னொருவர், கையோ, காலோ இழந்து சுய நினைவின்றிப் படுத்திருக்கும் ஒரு கூட்டம், இவர்களையெல்லாம் கடந்து போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பக்கம் வந்தால், கலங்கிய கண்களோடு அவர்களில் இலையான் மொய்க்காது பனையோலை விசிறியால் வீசிக் கொண்டிருக்கும் முந்த நாள் போருக்குப் போனவர்கள். இவர்களோடு இருந்து இரவிரவிரவாகப் பணிவிடை செய்தாராம். விடியக்காத்தால வந்த பொறுப்பாளரரின் போய்த் தவண்ணை கேட்டாராம் “அண்ணை எப்ப பயிற்சி தொடங்குது?” என்று. முந்திய இரவு தவாண்ணைக்கு மன ரீதியான பயிற்சியைக் கொடுத்து விட்டது. மணலாறு காணச் சண்டைக்குப் போகும் அளவுக்குத் தவாண்ணை தேறி விட்டார். அடிக்கடி வெவ்வேறு கள முனைக்குத் தேவைப்படும்போது கூப்பிடுவார்களாம்.

சாந்தன் அண்ணை ஓ எல் எடுத்த கையோட ஜேர்மனிக்குப் போய் விட்டார். தவாண்ணைக்குப் பேச்சுத் துணை நான் மட்டுமே.

“உங்களுக்கு வெளிநாடு போற ஆசை வரேல்லையோ தவாண்ணை”

“எனக்கிருக்கிற ஒரே ஆசை நான் சந்திக்கிற கடைசிச் சண்டைக்கு முன்னம் தலைவருக்குப் பக்கத்தில நிக்கோணும்” தவாண்ணையின் கறுத்த முகத்தில் ரோச் லைற் அடிச்ச மாதிரி மின்னியது அதைச் சொல்லும் போது.

பிள்ளையாரடி கொடியேறி விட்டுது. ஒவ்வொரு நாளும் திருவிழா போற சாக்கில கச்சானும், தும்பு முட்டாசும் சாப்பிடலாம் என்று நாக்கு சப்புக் கொட்டியது. பாதி சாப்பிட்டுக் குறைந்த கச்சான் சரையைக் கொண்டு வந்து தவாண்ணையிடம் கொடுத்தால் ஒன்றை உடைத்துக் கோதை வீசி விட்டு உள் பருப்பை ஆமிக்காறனைப் பார்ப்பது போலப் பார்த்துட்டு 
“என்ன இருந்தாலும் எங்கட வன்னிக் கச்சான் மாதிரி வராது, கொப்பேக்கடுவ மாதிரிக் கொழுத்ததுகள்” என்பார்.
பிள்ளையார் கோயில் தேருக்குத் தவாண்ணையைக் கொண்டு போய்க் காட்டுவம் என்று எனக்கு உள்ளூர ஆசை. கடும் கடவுள் பக்தி அவருக்கு. ஆனால் வருவாரோ மாட்டாரோ என்று சந்தேகம்.
தேர் அண்டு கேப்பம் என்று காத்திருந்தேன். சப்பறத் திருவிழாவுக்கு வெளிக்கிட்டுக் கொண்டு தவாண்ணையிடம் போனேன். வேலாயுதம் மாமா வீட்டில் ஒரு ட்றக் நிற்கிறது. இயக்க ஆட்கள் வந்தால் நான் தவா அண்ணையைத் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கி விடுவேன். நான் வந்துட்டுப் போறதைத் தவாண்ணை கண்டுட்டார்.
“தம்பி இஞ்ச வாரும்” என்று ஆசையாகக் கூப்பிட்டார். தயங்கித் தயங்கிப் போனேன். மற்றைய போராளிகளைப் போலத் தவாண்ணையும் யூனிஃபோர்ம் போட்டிருக்கிறார். 
“நான் அடிபாட்டுக்குப் போறன், வந்தால் சந்திப்பம் என்ன” தவண்ணை.
“அப்ப நாளைக்குத் தேருக்கும் கூட்டிக் கொண்டு போவம் எண்டு நினைச்சன்....” நான்
பொக்கற்றுக்குள்ள கையை விட்டு  இருந்த பத்து ரூபாத் தாளை எடுத்து என் கைக்குள் திணிக்கிறார்.
“தவாண்ணையை நினைச்சு தும்பு முட்டாசும், கச்சானும்
வாங்கிச் சாப்பிடும், கண்ட கண்ட இனிப்புச் சாப்பிடாதையும் வயித்துக்குள்ள பூச்சி வரும்” தவாண்ணையின் கதை ஒண்டும் என்ர மூளைக்குள்ள ஏறுதில்லை. அவரைக் கோயில் திருவிழாவுக்குக் கொண்டு போகேல்லை என்ற ஏமாற்றம் தான் நிக்குது.

வேலாயுதம் மாமா வீடு பூட்டிக் கிடக்குது. 
அடுத்த நாள், அடுத்த நாள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறன். பிள்ளையார் கோயில் தேரடிப் பொங்கலும் வந்துட்டுது.
கோயிலுக்குப் போய் விட்டு வீடு திரும்பும் போது வேலாயுதம் மாமா வீட்டுச் சுவர் முழுக்க நோட்டீஸ் ஒட்டியிருக்கு. எட்டிப் போய் அரை இருட்டில் பார்த்தால்
தொப்பியோட தவாண்ணையின் படம். 
மேஜர் செம்பருதி (தவச்செல்வன்) கோட்டை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச் சாவடைந்தார்.
அரசியல் துறை - யாழ்ப்பாணம் என்று போஸ்டரில் எழுதியிருக்கு. தவாண்ணையும் நானும் குந்தியிருக்கிற மதில் பக்கம் போய்ப் பார்த்தேன். நோட்டீஸ் எதுவுமில்லாமல் வெறுமையாகக் கிடக்குது.

🥀 ஈழப் போரில் தம் இன்னுயிர் ஈய்ந்த அனைத்துப் போராளிகளுக்கும் இச் சிறுகதை சமர்ப்பணம்

கானா பிரபா
24.11.2017
Posted by கானா பிரபா at 10:19 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Labels: சிறுகதை

Thursday, November 16, 2017

ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்


ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்கை செய்தே எழுத வேண்டிய நிலை இருக்கிறது. ஒரு சில விதிவிலக்குகள் இருப்பினும் இதுவே நடைமுறை யதார்த்தம்.
ஈழத்தின் போர்க்கால வரலாற்றில் கள முனையில் நின்று போரிட்டவர்களுக்குச் சமமாகப் பேனா பிடித்து எழுதியவர்கள் இயங்கியிருக்கிறார்கள். பாலியல் சித்திரவதையிலிருந்து துப்பாக்கி வன்முறை வழியாகக் காவெடுக்கப்பட்ட வகையில் ஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர்களே உலக அரங்கில் போர்க்குற்றங்கள் வழியாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு இவர்களில் பலர் இருந்திருந்தால் போர்ப் பயங்கரவாத நடவடிக்கைகள் பலதும் வரலாற்று ஆவணங்களாக மெய்த்தன்மையோடு பகிரப்பட்டிருக்கும். ஆனால் இன்றும் கூட ஒரு வட இந்திய எழுத்தாளரோ அல்லது இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு இயங்க வல்ல தமிழகத்து ஆங்கில ஊடகவியலாளர்களோ அல்லது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளோ எழுதிய நூல்களையே மேற்கோள் காட்ட வேண்டிய நிலையில் ஈழத்துப் போரியல் வாழ்வில் வரலாற்றுப் பக்கங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தில் பேசப்படாத பக்கங்களில் ஒரு சில பக்கங்களை நிரப்பும் நூலாக அமையும் வகையில் மிக முக்கியமானதொரு ஆவணமாகத் திகழ்கின்றது. யோசித்துப் பாருங்கள் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தமிழீழப் பகுதியில் தனி நபர் துஷ்பிரயோகம், படுகொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை என்று எவ்வளவு பல இன்னல்களை அனுபவித்திருக்கிறது அந்த உலகம். ஆனால் அந்தக் கால கட்டத்திலும், அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் இந்தத் துன்பியல் வரலாறுகள் முறையாகப் பதியப்படவில்லை. இந்த நிலையில் தான் ஏற்கனவே சந்தித்த உயிர் அச்சுறுத்தலையும் எதிர் கொண்டு, 1989 இல் தமிழக ஏடான ஜூனியர் விகடனில் “கோபு” என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் ஒரு தொடர் எழுதத் தொடங்குகிறார். அதுதான் இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை”.

ஆறு தசாப்தங்களாகப் பத்திரிகையாளராக வாழ்ந்தவர் எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்கள். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்
“1987 ஒக்ரோபர் முதல் 1990 பெப்ரவரி வரை இலங்கையிலிருந்த அமைதிப்படை பற்றி வாத விவாதங்கள் நிறைய உண்டு. வரலாற்றின் தவிர்க்க முடியாத குருதிக் குலைவுகளில் ஒன்றாக அது அமைந்து விட்டது.
இன்று ஒரு தசாப்தத்தின் பின் மீளத் திரும்பிப் பார்க்கும் பொழுது இந்த நாடகத்தில் (இலங்கையின் இனக் குழும நெருக்கடி) இந்தியாவுக்கு ஒரு முக்கியமான வகிபாகம் உண்டு என்பது புறக்கணிக்கப்படக் கூடாத உண்மை என்பது புலனாக்கப்பட்டுள்ளது. இதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும்” (27.07.2000) என்கிறார்.

எம்.எஸ்.ஜி (கோபாலரத்தினம்) வீரகேசரியில் தொடங்கி ஈழ நாடு, ஈழ முரசு, காலைக் கதிரி, செய்திக் கதிர், ஈழ நாதம், தினக் கதிர் (மட்டக்களப்பு), சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர்.
இவரின் அரை நூற்றாண்டுப் பணிக்காக 2004 ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனால் தேசிய சின்னம் பொறித்த தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். ஶ்ரீ ரங்கன் என்ற பெயரில் சிறுகதைகளில் எழுதியதோடு எம்.எம்.ஜி, பாலரத்தினம், ஊர் சுற்றி ஆகிய பெயர்களில் பத்திரிகைப் பணியாற்ரியிருக்கிறார். ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை, அந்த உயிர் தானா உயிர், பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.
மேலும் இவரின் ஊடகப் பணியின் ஆரம்பம் தொட்டு விலாவாரியான தகவல்களை உதயன் நாளேட்டின் உதவி ஆசிரியராக இருந்த சி.பெருமாள் பகிர்ந்திருக்கிறார்.

ஈழ முரசு பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளை நானும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு 62 நாட்கள் சிறையில் இருந்த போது யான் பெற்ற அனுபவம், அங்கு கண்டு கேட்டுப் பெற்றவைகளையே எழுதியிருக்கிறேன் என்று நூலாசிரியர் எம்.எஸ்.கோபாலரத்தினம் குறிப்பிடுகிறார்.
1988 இல் ஜூனியர் விகடனில் தொடராக வந்த போதும் பலதும் விடுபட்டதால் விடுபட்டதையும் சேர்த்து நூலுருவாக்க 1990 இல் முயன்று 2007 ஆம் ஆண்டே சாத்தியப்பட்டிருக்கிறது. அந்த இன்னல்களை எல்லாம் தன்னுரையில் பகிர்ந்திருக்கிறார். “எனது முடிவில்லாப் பயணத்தில்” (பாரிஸ் ஈழநாடு குக நாதன் முன்னர் நூலாக்கியது) கட்டுரைத் தொடரையும் மீள் பதிக்க வேண்டும் என்ற அவாவையும் குறிப்பிடுகின்றார்.

1987 ஒக்ரோபர் 10 ஆம் ஆண்டு ஈழ முரசு பத்திரிகை அலுவலகம் இந்தியப் படையால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதிலிருந்து நூலின் பக்கங்கள் விரிகின்றன. தானும், பத்திரிகைக் காரியாலயத்தில் பணி புரிந்தோரும் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு பத்திரிகைக்காரர் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று இராணுவ மேலதிகாரிக்கும் சிப்பாய்களுக்கும் இடையிலான முரண்பாடுகளைச் சம்பவங்களுனூடு காட்டுகிறார்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரும் தறுவாயில் இடம் பெயர்ந்தும் ஈழ முரசு பத்திரிகையை வெளிக் கொணர்ந்த அனுபவங்கள், பட்டினிப் போராட்டம் என்பவற்றைத் தன் அனுபவங்களூடாகப் பகிர்கிறார்.

தீபாவளித் தினத்தில் இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில்  எழுபதுக்கு மேற்பட்ட நோயாளிகள், வைத்தியப் பணியாளர்கள், வைத்தியர்கள் உட்படக் கொல்லபட்ட சம்பவங்கள், தாய், தகப்பனைக் கொன்று விட்டு மகளைப் பாலியல் வல்லுறவுக்கு இரையாக்கிக் கிணற்றில் போட்டது, மூதாட்டிகளைக் கூடத் தம் பாலியல் இச்சைகளுக்குத் தப்பாமல் பயன்படுத்தியது எல்லாம் நூலில் பதிவாகியிருக்கிறது.

கோட்டைச் சிறைக்குள் ஊத்தைத் தட்டில் உப்பு, புளி இல்லாத சாப்பாடு, சிப்பாய் மனம் இரங்கினால் மல ஜலம் கழிக்கும் உரிமை இந்த அனுபவங்களோடு தான் இவரின் முதல் நாளில் இருந்து தொடங்குகிறது சிறை வாசம். காலை உணவு பூரியைக் கையால் வாங்கி சாப்பிடும் தட்டில் தேநீரை உறுஞ்ச வேண்டுமாம்.
கடும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டோர் மன ஜலம் கழித்த பாத்திரத்தைத் தாமே கழுவிப் பாவிக்க வேண்டும்.
“அடிக்காதேங்கோ ஐயா அடிக்காதேங்கோ ஐயா” என்று அழுதழுது கதறும் இளைஞர்களைப் பற்றிய எழுத்துகள் என் வீட்டில் நான் நேரடியாகக் கேட்டது இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்ட என் அண்ணன் வழியாக.

சார்ஜண்ட் ராம்பால் “நீ எல்.ரீ.ரீ.ஈ யா?” என்று கேட்டுக் கேட்டு அப்பாவி இளைஞர்களுக்கு அலுமீனியத் தடியால் கொடுக்கும் அடிகளும், தனக்கு வயிற்றுப் போக்கு வந்த போதும் கருணையின்றிக் கிடைத்த ஸ்பெஷல் மண்டிப் போன தேயிலைச் சாயத்தையும் பற்றியும் சொல்கிறார்.
இதே வேளை கோர்ப்பரல் குப்தா என்ற உயர் அதிகாரி சார்ஜண்ட் தடுத்து வைக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்திக் கொடுமைப்படுத்திய நடவடிக்கைகளில் விசனம் கொண்டு முரண்பட்ட சம்பவங்களையும் விபரிக்கிறார்.

“மதராசித் தமிழனும் யாழ்ப்பாணத் தமிழனும் சேர்ந்து இந்திய இராணுவத்தைத் தாக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே எல்.ரீ.ரீ.ஈ” என்ற சார்ஜண்ட் ராம்பாலின் போக்கோடு இயங்கிய இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளாலேயே தமிழ் மக்கள் இவர்கள் மீது முற்றாக நம்பிக்கை இழக்க வைத்தது என்ற உண்மையைச் சொல்லி வைக்கிறார்.
இவர்களைக் கைது செய்தால் மட்டும் போதாது கொன்று போட வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனராம் இந்திய இராணுவச் சிறையில் இருந்த இந்த அப்பாவிகளைப் பார்க்க விசேட விருந்தினராக வந்த சிங்கள இராணுவ அதிகாரி.

புலிகளால் செயலிழக்கப்பட்ட இயக்கங்களின் கூட்டு த்றீ ஸ்டார் போன்ற கூட்டு இயக்கங்களாலேயே இந்த அப்பாவி இளைஞர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு புலிகளுக்கு உதவினார்கள் ஆகவே இவர்களும் புலிகள் என்று சித்திரவதைக்கு ஆளானார்கள். ஆணுறுப்பில் கத்தியால் கீறித் துன்புறுத்தும் அளவு எல்லையோடு இந்த வன்முறைகள் நிகழ்ந்ததாகச் சாட்சியம் பகிர்கிறார்.

விசாரணை என்ற பெயரில் கண்கள் கட்டப்பட்டு, எல்லோருடைய கைகளும் பிணைக்கப்பட்டு முள்ளு நிலத்தில் ஓட விட்டு அடி கொடுக்கும் போது சிங்களச் சிப்பாய்களதும், ஹிந்தி வீரர்களதும் சிரிப்பொலிகளும் கலக்குமாம்.

கோட்டையில் இருந்து பலாலித் தளத்துக்கு மாற்றப்பட்ட பின் சந்தித்த மாறுபட்ட அனுபவங்களையும் எழுதிச் செல்கிறார், அங்கேயும் கோட்டையில் சந்தித்த குப்தா போன்ற நல்லவர் மேஜர் நாயரால் சித்திரவதைகளில் இருந்து காப்பாற்றப்பட்டது உட்பட.

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையாகும் போது இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பத்திரிரிகையார்களால் இந்த நிகழ்வுகள் பதிவாக்கப்படும் போது, “இரண்டு பத்திரிகை நிறுவனங்களை எமது மண்ணில் தகர்த்து விட்டு உங்கள் பத்திரிகையாளர்களை அழைத்து வருகிறீர்களே” சக பத்திரிகைக்காரர் சர்வேந்திரா பொருமுவாராம்.

பருத்தித்துறை வைத்தியர் லலித் குமாரின் உண்ணாவிரதப் போராட்டம் வழியாக விடுதலையான நினைவுகளும், மேஜர் ஹரிகிரத் சிங் பத்திரிகையாளர்களான தங்களை மீண்டும் பத்திரிகை நடத்தித் தமக்குச் சார்பான செய்திகளை வெளியிட வைத்த முயற்சிகளும் பகிரப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் இறந்த செய்தி கேட்டு நண்பகல் உணவைத் தியாகம் செய்து அஞ்சலி செலுத்தினாராம் நண்பர்களோடு.
இதைப் பார்த்து விட்டு “அந்தப் .....ஆலே தானே இந்தப் பிரச்சனை” என்று தமிழ்ச் சிப்பாய் சொன்னாராம்.

சந்தேச செய்தி நிறுவனத்தை நடத்தியவரும் Saturday Review பிரதம ஆசிரியருமான காமினி நவரத்தின எடுத்த பகீரதப் பிரயத்தனங்களால் தன் விடுதலை கை கூடி வர எடுத்த நடவடிக்கைகளைக் கடிதத்தோடு பகிர்கிறார்.

தமிழ் தெரியாத இந்தியச் சிப்பாய்கள் முன்பு “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடலை “தமிழீழமே தீர்வு என்று சொல்லுவோம்” என்று வல்வெட்டித் துறை இளைஞர் முகாமில் நடந்த தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் பாடியதை அப்படியே வரிகளோடு சொல்கிறார்.

“உங்கள் விடுதலைக்கு ராஜீவ் காந்தி எந்த விதமான தலையீட்டையும் செய்ய முடியாது”

“எல்.ரீ.ரீ.ஐ இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டுத் தான் போவோம் ஶ்ரீலங்கா ஆமி எதிர்த்தால் அவர்களோடும் சண்டை போடுவோம்”

“சீக்கிரம் பிரபாகரன் எங்களுடன் வந்து விடுவார்”

30 வருடங்களுக்கு முன் இந்திய இராணுவ அதிகாரிகளால் சொல்லப்பட்ட மேற் சொன்ன கூற்றுகள்  பிற்காலத்தில் நடைமுறையில் சந்தித்த வரலாறுகளோடு உரசுகின்றன.

இந்த நூலில் குறிப்பிட்ட சித்திரவதைக்குப் புகழ் பெற்ற இராணுவ அதிகாரி சர்மாவின் நடவடிக்கைகளை நேரடி அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எங்களூர் மருதனார் மடத்திலேயே அவரின் கட்டுப்பாட்டில் இருந்த சித்திரவதை முகாம் இருந்தது.

தன்னுடன் இருந்த சக அப்பாவிகளின் பின்னணிகளையும் இணைத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் எம்.எஸ்.கோபாலரத்தினம்.

இந்திய அமைதிப்படையின் நடவடிக்கையால் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஜ்ந்த நூலை ஆசிரியர் சமர்ப்பித்திருக்கிறார்.

நேற்று நம்மை விட்டு மறைந்த எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் நினைவுகளோடு புத்தகத்தைக் கையிலெடுத்தேன். பல நாட்களாகத் தேடிய புத்தகம் சிட்னியின் மளிகைக் கடையொன்றில் சீண்டப்படாதிருந்தது கண்டு அப்போது வாங்கியது.

ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் நிகழ்த்திய கோரத் தாண்டவத்தின் முப்பது ஆண்டுகளை வேதனையோடு நினைவுகூரும் இந்த வேளை இவற்றுக்கெல்லாம் நேரடிச் சாட்சியாக விளங்கிய கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம் அவர்களின் பிரிவுக்கு நாம் செய்யக் கூடிய கைமாறு இந்த “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற நூலை மீள் பதிப்பித்துப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சென்றடைய வைக்க வேண்டும். அத்தோடு இந்த நூல் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் உட்பட வேண்டிய தேவை இருக்கிறது.

“பேனா ஒரு வலிமை மிக்க ஆயுதம் என்கிறார்கள். உண்மை தான்! அவனிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அது மட்டுமே! அதைப் பறித்து விட்டு அவன் கைகளைப் பிணைத்து விட்டால் அவனை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” - கோபு என்ற எம்.எஸ்.கோபாலரத்தினம்

ஐயா உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏

கானா பிரபா
16.11.2017
Posted by கானா பிரபா at 8:22 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, November 02, 2017

“என்ரை அப்பு வந்துட்டானோ”


பாதி கிழிந்ததும் கிழியாததுமான தகரப் படலைத் திறந்து கொண்டு ஆச்சி வீட்டுக்குள் நுழையும் போதே என் சைக்கிளின் முன் சில்லைப் பார்த்துப் பிடித்து விட்டுச் சந்தோசக் கூக்குரல் எழுப்புவார் இருந்த இடத்தில் இருந்து.

சைக்கிளை ஸ்ராண்டில் வளைய விட்டு ஆச்சி வீட்டுத் திண்ணையில் நாலு படி ஏற வேண்டும். பழங்காலத்துச் சுண்ணாம்புக் காறல் திண்ணை வீடு அது. ஒரேயொரு அறை தான், அதுவே சாமி அறை, பண்டக சாலை, நகை நட்டு, உடு பிடவை வைக்கும்இடம் எல்லாமுமே. வெளித் திண்ணையில் தான் ஆச்சியின் சீவியம் முழுக்க. கூடவே பெரிய மாமியும். பிரிந்திருக்கும் தனியே ஒரு மண் குடிசைக்குள் தான் சமையல், சாப்பாடு எல்லாம்.
அந்தச் சின்னத் திண்ணை வீட்டின் அத்திவாரமே ஒரு மனிசர் அளவு உயரம். படிகளில் ஏறும் போதே மேலேயிருந்து ஆச்சி இரண்டு கைகளையும் விரல்களை உள்ளிளுத்து அந்தரப்பட்டு நீட்டுவார் கெதியாக வரச் சொல்லி.

ஒரு கிழுவந்தடிக்குச் சீலை சுத்தியது போலத் தான் ஆச்சியின் உருவம். கூன் முதுகு. பொன்மனச் செல்வியின் கதையைச் சமய பாடத்தில் படித்த போது அது என்ரை ஆச்சி என்றே நினைவில் பதித்திருந்தேன்.
ஆச்சியின் காது தோடுகளால் ஈய்ந்து போய் பெரிய ஓட்டை போட்டிருக்கும். அதில் தொங்கியிருக்கும் கல்லு வச்ச தோட்டைத் தொடும் சாக்கில் ஆச்சியின் காதை நைசாகப் பிழிந்து பார்த்தால் என்ன என்று ஆசை வரும். பச்சைச் சீத்தைச் சேலையும் வெள்ளை ப்ளவுசும் தான் ஆச்சியின் சீருடை.

“என்ரை அப்பு வந்துட்டானோ” என்று வாஞ்சையாக அழைந்து என் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டிருப்பார். அவரின் தோல் நைந்த பொலித்தீன் பை போல இருக்கும். பழுப்புப் பச்சையாய் வீங்கிப் புடைத்த நரம்புகள் அந்தத் தோலை மீறிக் கோடாய் இருக்கும். 
“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார்.
நான் ஆச்சிக்கேற்ற கதைகளை மட்டும் வடித்துச் சொல்வேன். ஆசையாகக் கேட்பார்.
கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும்
“என்ரை குஞ்சு என்ன புதினம் சொல்லணை” ஆச்சி கேட்பார். அவவுக்கு நான் சொல்லும் கதையில் ஆர்வமில்லை என்னோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டும் சொன்ன கதையைச் சொல்லுவேன். புதிதாய்க் கேட்பது போலக் கேட்பார் திரும்பவும்.

ஆச்சியின் குச்சிக் கைகள் வலிமையாக என் கைகளைக் களையாதவாறு இறுகிப் பிடித்தபடி இருக்கும். கதை கேட்டுக் கொண்டிருப்பவர் கண்ணிரண்டிலும் பொல பொலவென்று கண்ணீர் பெருக்கெடுத்தோடும். 
“என்ரை பத்திரகாளி ஆச்சி என்ரை பிள்ளையைக் கவனமாப் பாத்துக் கொள்” என்று தாவடிப் பத்திரகாளி அம்மன் கோயில் பக்கம் பார்த்துச் சொல்லி விட்டு என் கைகளைக் களைந்து அந்தப் பக்கம் கை கூப்பித் தொழுவார். சேலைத் தலைப்பில் கண்ணிரண்டையும் ஒற்றுவார். பிறகு என்ரை கையைப் பிடிச்சுக் கொஞ்சுவார்.  புறங்கையை எடுத்து மணந்து கொஞ்சி விட்டு மீண்டும் கையை இறுக்கிப் பிடித்திருப்பார்.
குழந்தைப் பிள்ளையின் கையில் அகப்பட்ட பாவைப் பிள்ளை போல நான். மேல் வகுப்புப் படிக்கும் வயதிலும் இதே கதை தான்.

“ஏன் குஞ்சு மெலிஞ்சு போனாய் கொம்மாட்டைச் சொல்லி முட்டை அடிச்சுக் குடி” ஆச்சியிடம் நான் போகும் போதெல்லாம் என் எடை குறைந்து விடும்.

அம்மாவின் பக்கம் இணுவில், அப்பாவின் பக்கம் தாவடி. 
இரண்டுமே பதினைந்து இருபது நிமிடச் சைக்கிள் ஓட்டத்தில் இருக்கும் பக்கத்துப் பக்கத்து ஊர்.
இணுவில்காறர் “தவமணி ரீச்சரின் மேன் எல்லோ” என்று கேட்பார்கள். தாவடிக்கார் “திருப்பதி ஆச்சியின்ர பேரனெல்லோ” என்பார்கள். ஆச்சியின் முகவெட்டாம் எனக்கு. அப்பா தன் தாயை ஆச்சி என்று கூப்பிடுவது போல அவரே எங்களுக்கும் ஆச்சி. ஆச்சி தன் கணவரை அப்பு என்பார். அப்பாவும் அப்பு என்றே கூப்பிடுவார். ஆச்சிக்கு நாங்களெல்லாம் “அப்பு”
அப்பு செத்துப் போறதுக்கு நாலு வருஷம் முன்பே நான் பிறந்து விட்டாலும் ஆச்சி நினைத்துக் கொண்டிருக்கிறா அப்பு தான் திரும்பவும் பிறந்திருக்கிறார் என்று.

அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள். வெவ்வேறு பாடசாலைகள். அப்பா தன்னுடன் என்னைக் கூட்டிக் கொண்டு வந்து ஆச்சி வீட்டில் விடுவார். பக்கத்து வீடு கனகமாமி அப்பாவின் இன்னொரு சகோதரி. ஆச்சி வீட்டில் தான் என் குழந்தைப் பராயம் கழிந்தது.
அதனால் ஆச்சிக்குத் தான் வளர்த்த பிள்ளை நான்
என்ற பெருமை.

“பிரபு!  ஆச்சி செத்துப் போனாவாம்”  
ரவுணில் உள்ள ரியூஷன் சென்ரருக்குப் போய் வந்து சைக்கிளை நிறுத்த முன்பே பக்கத்து வீட்டு அன்ரியின் குரல்.  வீடு பூட்டியிருந்தது அப்பா, அம்மா போயிருப்பினம். அப்படியே ஆச்சி வீட்டுக்குச் சைக்கிளை மிதித்தேன். படலைக்குப் பக்கமாக “ஆச்சீ ஆச்சீ” என்று அழுகுரல்கள் தான் கேக்குது. என்னை ஆசையாக அழைக்கும் ஆச்சி மூச்சுப் பேச்சில்லாமல் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறா. ஆச்சியோட தினமும் மல்லாடும் பெரிய மாமி அழுது அரற்றிக் கொண்டிருக்கிறா. ஏன் ஆச்சி என்னை விட்டுப் போனனீ?

“பேரப் பிள்ளையள் வரிசையா வாங்கோ” பூபாலசிங்கம் மாமா கூப்பிடுகிறார். மாமிமாரின் பிள்ளைகள் போகினம். நானோ ஒளிக்க இடம் தேடினேன். குணம் மாமி கண்டு விட்டார். 

“இஞ்சை வா அப்பன் நீ ஆச்சி ஆசையா வளத்த பேரனெல்லே” போய் நெய்ப் பந்தம் பிடி ராசா”

“இல்லை எனக்கு ஆச்சியைப் பாக்கப் பயமா இருக்கு மாமி” 

குணம் மாமி கொற இழுவையில் இழுத்துக் கொண்டு போய் ஆச்சியின் தலைப் பக்கம் நிறுத்தினார்.
ஆச்சியைக் குளிப்பாட்டிப் புதுச் சீலை எல்லாம் போட்டுக் கதிரையில் இருத்தியிருக்கு. நெய்ப் பந்தத்தை என் கையில் திணிக்கிறார்கள். ஆச்சியைச் சுத்திக் கொண்டு வரும் போது அவவோட ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியது தான் ஞாபகத்துக்கு வருகுது.
ஆச்சியைக் கடைக் கண்ணால் பார்த்தேன் கண்ணை இறுக மூடியிருந்தா.

ஆச்சி செத்து இருபத்தஞ்சு வருசம் கழிச்சு ஆச்சி சாகேக்கை வராத அழுகை நேற்று வந்தது. ஆச்சியை நினைத்து அழுதேன். அதற்குக் காரணம் நேற்றுத்தான் பேஸ்புக் பட்டியலில் கண்ணுற்று நண்பர் ஆக்கிய அன்பு உறவு மகிவனியின் இந்தக் கவிதை.
Posted by கானா பிரபா at 5:10 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, October 10, 2017

ஈழ மண்ணில் இந்தியப் போர் - 30 ஆண்டுகள்


அது நடந்திருக்கக் கூடாது நடந்திருக்கவே கூடாது என்று இன்னமும் உள்ளுக்குள் மனம் ஓலமிடும்.
ஈழத்தில் இந்திய அமைதி காக்கும் படையாக வந்த இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான யுத்தம் ஆரம்பித்து இன்றோடு 30 ஆண்டுகள். இந்த யுத்தத்தில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட “பொது சனங்களில்” நானும், என் குடும்பத்தினரும் அடக்கம்.
அதுவரை வானத்தில் வட்டமிட்டுப் பறந்து குண்டைப் பறிச்சுப் போடும் ஶ்ரீலங்கா அரசின் விமானக் கழுகுகளுக்கும், பலாலி விமானப் படைத்தளத்திலிருந்து ஒரு திசை வழியாகவும்,
யாழ்ப்பாணக் கோட்டை கடற்படைத் தளத்தில் இருந்து இன்னொரு திசை வழியாகவும் பாய்ந்து வந்து வெடிக்கும் ஷெல் அடிகளுக்கும் தேடி ஒளித்துப் போன காலம் கடந்து நேரடி யுத்த முனைக்குள் சிக்கிய முதல் அனுபவமது.
கண நேரத்திலேயே வீடிழந்து போக்கிடமறியாது கோயிலுக்கு ஓடவோ, பாடசாலைக்கு ஓடவோ இல்லை குண்டு துளைக்காத அடுக்குக் கட்டிடத்தின் தரையடுக்குத் தேடி இடம் பிடித்து குந்திக் கொண்டே நித்திரையும், கால் வயிறு சாப்பாடுமாக நாட் கணக்காக உயிரைக் கையில் பிடித்து வாழ்ந்த காலமது.
மயிரிழையில் உயிர் தப்புதல் என்பதற்கான அர்த்தங்களைப் பல சந்தர்ப்பங்களில், ஏன் ஒரே நாளிலேயே அனுபவித்திருக்கிறோம்.
குண்டுச் சத்தங்களின் பலத்த ஒலி கேட்கக் கேட்க ஒவ்வொரு இடமாகத் தப்பிக் கொண்டு போகும் போது
ஒரு ஐந்து பத்து நிமிட தூரத்தில் எமக்குப் பின்னால் வந்த குடும்பங்களையோ, தனி நபரையோ அதற்குள்
பலியெடுத்து விட்டிருக்கும்.
கொஞ்ச நேர அவகாசத்தில் கோயிலில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் வீடு பார்க்கப் போனவர் கக்கூசுக்குள் இறந்து கிடப்பார் திடீர் இராணுவச் சுற்றிவளைப்பில்.

ஆர்மிக்காறன் காணும் முன்னர் கே.கே.எஸ் றோட்டின் ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தத்தைக் கடக்க வேண்டும் என்று அவதிப்பட்டவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி அங்கேயே நாட்கணக்கில் நாய்களுக்கு உணவாகிப் போவார்.

தங்கியிருந்த கோயிலின் முகப்பு மண்டபத்தில் காயப்பட்டவரையோ, இறந்தவரையோ கிடத்தி விட்டுக் கொஞ்ச நேரம் அழுது விட்டு தூக்கிக் கொண்டு போய்ப் பக்கத்து மைதானத்தில் எரித்து விட்டு ஓடிப் போய் மண்டபத்தைக் கழுவி விட்டு அதே இடத்தில் உறக்கம் கொள்ள வேண்டும்.
கொள்ளைப் பசி, மாற்று உடை இல்லை, பொய்யான காட்டிக் கொடுப்பால் இந்திய இராணுவத்தின் என்
அண்ணனின் கைதால் நடைப் பிணமான பெற்றோர் இப்படி நான் சந்தித்த அந்த அனுபவங்களை என் சம வயது நண்பர்களும் சந்திக்க வில்லை என்றால் அது அதிசயம். மாதம் கடந்து வீடு திரும்பிய அண்ணன் கதை கதையாகச் சொல்லுவார் அந்தச் சித்திரவதை முகாம் அனுபவங்களை.
இந்த நாளில் இத்தனை புலிகள் இறந்தார்கள் என்ற
கணக்குக் காட்ட எம் கண் முன் குடும்பஸ்தர்களைச் சுட்டுப் போட்டு விட்டு ஆல் இந்தியா ரேடியோவின் இலங்கைக்கான சிறப்பு ஒலிபரப்பு “நேசக் கரங்கள்”, “அன்பு வழி” வழியே அவர்கள் புலிகளாக்கப்பட்டார்கள்.
ஒபரேஷன் பூமாலை என்று சாப்பாடு போட்ட விமானங்களில் வந்தவர்கள் வாய்க்கரிசியும், இறுதி யாத்திரைக்கான மலர் மாலையும் போட்டார்கள்.
போர் கொஞ்சம் ஓய்ந்து வீட்டுக்குத் திரும்பினால், திரும்பிய இடமெல்லாம் வாழைத் தோப்புக்குள் மத யானை புகுந்த மாதிரி எல்லா மனைகளும், பாடசாலைகளும் கிழித்துப் போடப் பட்டிருந்தன.
அப்போது பதின்மத்தில் இருந்த எனக்கு சில நாட்களுக்குள்ளேயே என்னைச் சுற்றி நடந்ததெல்லாம் அனுபவித்து, அகதி முகாமில் இருந்து வீடு திரும்பிய போது ஒரு அறைக்குள் இன்னொரு அறைக்குள் போகவே பயமாக இருக்கும். அம்மாவின் காதுக்குள் தான் போய்ப் பேசுவேன்.
பாடசாலை விளையாட்டு மைதான வளவுக்குள் பிரேதங்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன. திரும்பிய இடமெல்லாம் சவுக்குழி.
அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு தானே பள்ளிக்கூடம் போகும் வழியில் கண்ட இந்தியன் ஆர்மி மாமாக்களுக்கு டாட்டா காட்டிச் சிரித்து மகிழ்ந்தோம், இப்போது ஏன் அவர்களின் பாதுகாப்பு அரண்களைக் கண்டு குலை நடுங்கிக் கொண்டு மெல்லத் தரையைப் பார்த்துக் கொண்டே கடக்கிறோம்? எல்லாம் மாறி விட்டது.
கைதுகள், பாலியல் பலாத்காரங்கள், சித்திரவதைகள், படுகொலைகள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி நிகழ்த்திக் காட்டப்பட்டு விட்டது.
கொக்குவில் பிரம்படி லேனில் சனத்தை வீதியில் கிடத்தி விட்டு செயின் ப்ளொக்ஸ் எனும் கனரக வாகனம் நெரித்துக் கொண்டு போனது இன்னமும் நினைவில் வந்து அந்த வீதியைக் கடக்கும் போது உதறும்.
என்னுடைய அந்த நாள் அனுபவங்களை இட்டுக் கட்டி எழுதாமல் வாக்குமூலமாகப் பதிந்தாலேயே பக்கங்கள் கடக்கும். ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கிறேன். அதே சிந்தனையோடு எனது ஈழத்து உறவுகளும், தமிழகத்துச் சகோதரர்களும் இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.
அது என்னவெனில், எப்படி இந்திய இராணுவத்தால் பலியெடுப்புகளும், அழிப்புகளும் நிகழ்ந்தனவோ அது போலவே ஈழத்தமிழருக்காகத் தாய்த் தமிழகம் கொடுத்த விலை பெரிது. ஈழத்து அகதிகளை வாரியணைத்து ஆண்டாண்டு காலமாகப் பாதுகாப்புப் பிச்சை போட்டது,
முத்துக்குமாருக்கு முன்பே பல்லாண்டுகளாக ஈழ உறவுகளுக்காகத் தம் இன்னுயிர் ஈய்ந்த தமிழகத்துச் சோதரர் போன்று தமிழகத்தில் இப்படியொரு இக்கட்டு வரும் போது தமிழகத்தவருக்காக உயிரைக் கொடுக்கும் எல்லை வரை ஈழத்தமிழன் இருக்க மாட்டான்.
இந்திய இராணுவத்தின் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போதே காயப்பட்ட புலிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததும் இந்தத் தமிழகம் தான்.
2009 இல் கையறு நிலையில் இருந்த கருணாநிதியை விமர்சிக்கும் தலைமுறைக்கு முந்திய தலைமுறை என்பதால் அவர் காலத்தில் ஈழ ஏதிலியருக்கும் கல்வி என்ற அவரின் செயல் திட்டம், ஏன் அதற்கு முந்திய நிகழ்வாக இன அழிப்பைச் செய்து விட்டு இந்திய அமைதிப் படை நாடு திரும்பிய போது வரவேற்காத வன்மத்தைக் காட்டி நெஞ்சை நிமிர்த்திய தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் கலைஞரையும் மறவோம். 2009 காலப்பகுதி தனியாக ஆனால் கண்ணியமாக விமர்சனம் செய்து பார்க்க வேண்டியது. காலம் வாய்க்கும் போது அதையும் சொல்வோம்.
சிங்கள மேலாதிக்க அரசின் சாணக்கியத்தில் விழுந்த இந்திய மத்திய அரசின் அந்த செயற்பாட்டை ஒருபோதும் அகண்ட பாரதத்தின் பிரசைகளின் நிலைப்பாடாக நாம் எடுக்க மாட்டோம். அந்தத் தெளிவு எமக்குண்டு. இதே தவறை 2009 இல் செய்த போதும் கூட.
இந்தியா ஏதாவது செய்யும் என்ற நிலையில் இருந்த காலம் போய் இந்தியா எங்களுக்கு ஒன்றும் செய்து விடக் கூடாதே என்ற அச்ச நிலையின் மையப் புள்ளி தொடங்கியது October 10, 1987 இலிருந்து தான்.
கானா பிரபா
10.11.2017
மேலதிக வாசிப்புக்கு
நன்றி : கனடாவில் இருந்து வெளிவரும் “தாய் வீடு” இதழில்
இந்திய அமைதிப் படை யுத்தத்தின் 30 ஆண்டு நினைவுகள், வரலாற்றுப் பகிர்வு, அனுபவங்களோடு இங்கே படிக்கக் கிடைக்கின்றது.
http://thaiveedu.com/…/20…/spl/New-IPKF-thaiveedu-Aug-17.pdf

யாழ்ப்பாணத்தில் “முரசொலி” அலுவலகம் தகர்க்கப்பட்டு முப்பது ஆண்டுகள்
முரசொலி நாளிதழின் பிரதம அலுவலகம், ஈழ முரசு காரியாலயம், மற்றும் விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி ஊடகமான “நிதர்சனம்” ஆகியவை இந்திய இராணுவத்தால் உடைத்தழிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளைக் கடந்திருக்கிறது என்ற செய்தியை இன்றைய காலை சொல்லி வைத்தது. அந்தக் காலகட்டத்து நினைவுகளை மனம் ஒரு பக்கம் அசை போடத் தொடங்கியது.
எண்பதுகளில் இலங்கையின் தலைநகரப் பத்திரிகைகளாக வீரகேசரி, தினகரன், தினபதி போன்றவை இயங்கிய போது அவை பிராந்திய அலுவலகங்களை யாழ்ப்பாணம் போன்ற தமிழரின் தலைப் பட்டினத்தில் கிளை பரப்பிச் செயற்பட்ட வேளை யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பத்திரிகைகள் என்ற தனித்துவ முத்திரையோடு இயங்கியவை ஈழ நாடு, ஈழ முரசு (ஞாயிறு இதழ் ஈழ நாதம் என்று நினைவு பின்னாளில் 90 களில் ஈழ நாதம் தினசரி வெள்ளி நாதம் வார இதழ்), உதயன் (வார இதழ் சஞ்சீவி, சிறுவர் இதழ் அருச்சுனா), முரசொலி ஆகியவை. இவற்றில் ஈழ நாடு தவிர மற்றவை எண்பதுகளில் முளைத்தவை.
முரசொலி நாளிதழின் ஆசிரியராக மூத்த ஊடகர் எஸ்.திருச்செல்வம் இயங்கினார். முரசொலி பத்திரிகையின் தலைப்புகள் அப்போது அதீத பரபரப்பைக் கொடுத்ததை அப்போது உணர்ந்திருக்கிறேன். வழமையான பத்திரிகை மரபில் இருந்த வாசகனுக்கு இது புதுமையாக இருந்திருக்கும்.
மற்றைய பத்திரிகைகளை விடத் தனித்துவமாகக் காட்டும் முயற்சியாகக் கூட அது இருந்திருக்கலாம்.
ஸ்ரான்லி றோட்டில் இருந்த முரசொலி காரியாலயத்தில் ஓவியர் லங்கா தான் ஆஸ்தான ஓவியர், பக்கத்திலேயே லங்கா ஆர்ட்ஸ் என்ற கடையையும் வைத்திருந்தார்.
அவர் இன்னமும் இருக்கிறாரா?
செங்கை ஆழியானின் களம் பல கண்ட கோட்டை போன்ற தொடர்கள் அப்போது முரசொலி வழியாகப் பிரபலம்.
தொண்ணூறின் ஆரம்பத்தில் வேலணையில் இருந்து வந்து என்னுடைய வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவியின் அக்காவின் திருமணம் நாச்சிமார் கோயிலடியில் நடந்த போது கோட்டையில் இருந்து ஶ்ரீலங்கா இராணுவத்தால்
ஏவப்பட்ட ஷெல் மணவறையில் விழுந்த போது அந்த இடத்திலேயே மணமகன் பலியானார். அந்த நிகழ்வை நினைத்து வருந்தி முரசொலிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை அப்போது பிரசுரித்திருந்தார்கள். ஈழ நாடு, உதயனின் சஞ்சீவி போன்ற இதழ்களுக்குச் சிறுவர் கதை எழுதிக் கொண்டிருந்த எனக்கு இதுவொரு புது அனுபவம். அப்போது காகிதத் தட்டுப்பாடு நிலவியதால் முதலில் ஒற்றை ரூல் பேப்பரிலும் பின்னர் சித்திர ஒட்டுவேலைக்குப் பயன்படும் தடித்த காகிதாதியில் இந்தப் பத்திரிகை தொண்ணூறுகளில் வந்தது.
எஸ்.திருச்செல்வம் அவர்கள் தன்னுடைய ஒரே மகன் அகிலனை அவலமாகப் பறிகொடுத்ததும் இந்த முரசொலி ஆசிரியர் பணியின் விளைவே. தங்களுக்குச் சாதகமில்லாத செய்தியை வெளியிட்டதால் திருச்செல்வத்தின் மகன் அகிலனை அப்போதைய இந்திய அமைதிப் படையின் ஒத்தோடித் தமிழர் குழுவான E.N.D.L.F வேட்டையாடியது.
பரியோவான் கல்லூரி மாணவன், க.பொ.த உயர்தரத்தில்
அதி திறமைச் சித்தி பெற்றவர், கிரிக்கெட் விளையாட்டில் தலை சிறந்த வீரன் அகிலனின் இழப்பு அப்போது பரவலான அனுதாப அலையைக் கிளப்பியது.
இவை குறித்த விரிவான வரலாற்றுப் பகிர்வுகளை இங்கே படிக்கலாம்.
http://thesamnet.co.uk/?p=57831
http://www.keetru.com/…/2009-1…/2011-sp-1424635742/16348--10
புலம் பெயர்ந்த என் ஊடக வாழ்வில் முரசொலி எஸ்.திருச்செல்வம் அவர்களை வானொலியூடாகப் பல சந்தர்ப்பங்களில் தொடர்பு கொண்டு அரசியல், கலை, இலக்கியப் பகிர்வுகளைப் பெற்று வருகிறேன். அவரைத் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் முரசொலியின் அந்தப் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துவதில்லை அது எனக்குள் தானாக நினைப்பூட்டும்.
எஸ்.திருச்செல்வம் அவர்கள் கனடாவுக்குப் புலம் பெயர்ந்து தமிழர் தகவல் என்ற இதழின் முதன்மை ஆசிரியராக இருக்கிறார்.
கடந்த வாரம் பிபிசி தமிழ் முப்பது ஆண்டுகளுக்குப் பின் இலங்கை சென்ற இந்திய இராணுவ அதிகாரியின் அனுபவங்களைப் பகிர்ந்தது. அதுவும் பார்க்க வேண்டியதொன்று
https://youtu.be/5G9KItToBog
பத்திரிகை முகப்பு உதவி நன்றி : நூலகம் தளம்

Posted by கானா பிரபா at 2:07 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, October 04, 2017

“அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில்

ஈழத்து வானொலிப் பாரம்பரியம் எழுபதுகளிலும் எண்பதுகளிலும்  ஒவ்வொருவர் வீட்டின் நடு முற்றத்தில் குடி கொண்டிருந்த வேளை அந்த ஒவ்வொருவர் வீட்டின் தவிர்க்க முடியாத அங்கத்தினர்களில் ஒருவராக விளங்கியவர் எங்கள் அன்புக்குரிய அப்புக்குட்டி ராஜகோபால் அண்ணர். மேடை நாடகக் கலைஞனாக, ஈழத்துத் திரைப்பட நடிகராக, வானொலிக் கலைஞராகத் தன்னுடைய நடிப்பின் முத்திரையை அகல  விரித்த அவர் அதிகம் நெருக்கமானது என்னவோ வானொலிப் பெட்டி வழியாகத் தான்.

ஈழத்துப் பிரதேச மொழி வழக்கின் பொற்காலமாக எழுபதுகளில் செழித்தோங்கிய நகைச்சுவை இயக்கத்தில் மரிக்கார் ராம்தாஸ், கே.எஸ்.பாலச்சந்திரன், உபாலி செல்வசேகரன், கே.ஏ.ஜவாஹர், டிங்கிரி (கனகரட்ணம்) - சிவகுரு (சிவபாலன்), முகத்தார் எஸ்.யேசுரட்ணம், “லூஸ் மாஸ்ரர்” ஐசக் இன்பராஜா, கே.சந்திரசேகரன் என்று நீண்டு தொடரும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தம் தனித்துவமான நடிப்பால் மட்டுமன்றி ஈழத்து மொழி வழக்கைப் பிரயோகப்படுத்திய வகையில் தனித்துவம் கண்டவர்கள். இவர்களோடு முன்னுறுத்தக் கூடிய அற்புத ஆற்றல் மிகு கலைஞர் நம் “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணர். இங்கே பகிரப்பட்ட கலைஞர்களைத் தாண்டி இன்னும் பல ஈழத்து நாடக, நாட்டுக்கூத்து ஜாம்பவான்கள் சம காலத்தில் இயங்கியிருந்தாலும் நகை நடிப்பு, ஈழத்துப் பிரதேச வழக்கைக் கையாண்ட. நுட்பத்திலும் இந்த வட்டத்தைக் குறுகிக் கொடுத்திருக்கிறேன்.
தமிழகத்துத் திரைப்பட வசனங்களுக்கு நிகராக அல்லது அதற்கு மேலாக ஈழத்து நாடக, மேடைக் கலைஞர்களின் படைப்புகள் ஒலி நாடாக்களிலும் வெளிவந்து றெக்கோர்டிங் பார் எங்கும் களை கட்டிய காலமது.

அந்தக் கால கட்டத்தில் இந்திய நகைச்சுவை நடிகர்களைத் தாண்டிய ஒரு ரசனையை ஈழத்து ரசிகர்கள் விரும்பக் காரணம் ஈழத்து நடிகர்களின் பிரதேச வழக்கு சார்ந்த மொழிப் பிரயோகம். 
தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்போடு
நாற்பதைக் கடந்த ஒரு கண்டிப்பான அப்பா, கறாரான மேலதிகாரி, அல்லது சிடுமூஞ்சித் தனமாக பக்கத்து வீட்டுக்காரர் இப்படியானதொரு யாழ் மண்ணின்
பாத்திரத்தைக் கற்பனை செய்ய முடிந்தால் அதில் முன் நிற்பவர் நம் ராஜகோபால் அவர்கள்.
கவுண்டமணி காலத்துக்கு முன்பே ராஜகோபால் அண்ணரின் எள்ளல் மிகு நடிப்பை ரசித்திருக்கிறோம் நாமெல்லாம். அதெல்லாம் விரசமில்லாது ரசிக்க வைத்தவை. “அப்புக்குட்டி” என்ற பாத்திரத்தில் அக்காலத்தில் நிகழ் மனிதர்களையும் காணுமளவுக்குத் தத்துரூபமான நடிகர்.

இலங்கை வானொலி நாடகப் படைப்புகள், 
கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணர் தயாரித்த நாடக ஒலிப்பேழை, கோமாளிகள், ஏமாளிகள் திரைப்படங்கள் போன்றவை இன்னமும் அப்புக்குட்டி ராஜகோபால் பெயர் சொல்லும்.
கோமாளிகள் திரைப்படம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ரூபவாஹினியில் துண்டுப் படமாகப் பலர் பார்த்திருக்கக் கூடும். அந்தப் படம் இப்போது முழுமையாக YouTube இல் மரிக்கார் ராம்தாஸ் இன் புதல்வரால் வலையேற்றப்பட்டுள்ளது.

தொண்ணூறுகளில் கொழும்பு கிறீன்லண்ட்ஸ்
ஹோட்டலுக்குப் போனால் ஈழத்துப் பிரபலங்களைத் தரிசிக்க முடியுமென்று அடிக்கடி செல்வேன். அப்படியாக மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால் ஆகியோரைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் இவரின் நடிப்புலக அனுபவத்தைப் பதிவாக்க வேண்டுமென்ற தீரா ஆசை இன்னமுண்டு.

இன்று அகவை எழுபத்தைந்து காணும் “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணர் பொன் விழா கடந்த ஈழத்துக் கலைஞர். ஐபிசி தமிழா 2017 இல் வாழ் நாள் சாதனையாளர் விருது கொடுத்துக் கெளரவிக்கப்பட்டவர்.
அவர் குறித்த முழுமையானதொரு ஆவணத் திரைப்படத்தை இன்று ஈழத்தமிழருக்கென இயங்கும் ஈழத்து, புலம் பெயர் தொலைக்காட்சிகள் இயக்க முன் வர வேண்டும். அதில் அவர் பகிரும் தன் கலையுலக அனுபவங்கள் வழி ஈழத்து நாடக மரபின் ஒரு பகுதி வரலாறு பதியப்பட வாய்ப்புக் கிட்டும்.
Posted by கானா பிரபா at 1:24 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, September 25, 2017

சிவலிங்க மாமா

உங்களூரில் ஒருவர் இருப்பார், அவர் ஊரிலுள்ள எல்லாப் பிரச்சனையையும் தன் பிரச்சனையாகத் தலையில் சுமந்து தீர்க்க முற்படுவார். ஏன் வீதியில் ஏதாவது சண்டை கூடினாலோ முதல் ஆளாகக் களத்தில் இறங்கி விடுவார், விடுப்புப் பார்க்க அல்ல அந்த வீதிச் சண்டையைக் கலைத்து விட்டு ஆட்களை அவரவர் பாட்டில் போக வைத்து விடுவார்.
இது அடுத்தவன் பிரச்சனை நமக்கென்ன வம்பு என்று ஒதுங்கியிருக்க மாட்டார் இல்லையா? இதைப் படிக்கும் போது உங்களூரில் இருந்த, இருக்கின்ற அப்படியொரு மனிதரை நினைவுபடுத்த முடிந்தால் அவர் தான் எங்களூரில் இருந்த சிவலிங்க மாமாவும்.

“இஞ்சருங்கோ உங்களுக்கேன் மற்றவேன்ர பிரச்சனை அவையவை தங்கட பாட்டைப் பாப்பினம் தானே” என்று மீனாட்சி அன்ரி சிணுங்குவா.
“நீ சும்மா இருப்பா” என்று சொல்லிக் கொண்டே கிப்ஸ் மார்க் சாரத்துடன் வெளியே வரும் போது அவரின் ஒரு கையில் சேர்ட் தொங்கிக் கொண்டிருக்கும். கேற்றைத் தாண்டுவதற்குள் முழுக்கையும் இறங்கி பட்டனையும் பூட்டி விட்டு குடும்பச் சண்டையை விலக்குத் தீர்க்கப் போய் விடுவார்.

எனது அம்மாவின் சிறிய தந்தை பெரும் செல்வந்தர். அவர் கட்டியாண்ட வீட்டை விட்டு  எண்பத்தஞ்சில் கொழும்புப் பக்கம் போய் விட்டார்கள். அந்த வீட்டைச் சுமக்கும் பொறுப்பு எங்களுக்கு வந்தது என்பதை விட எங்கட அம்மாவுக்கு வந்தது. “தேப்பன் இல்லாத எங்களை குஞ்சி ஐயா தானே வளத்து ஆளாக்கினவர்” என்பது அம்மாவின் நியாயம். அம்மாவின் இரண்டு சகோதரிகள், கடைக்குட்டித் தம்பி, அம்மம்மா எல்லோரோடும் நிர்க்கதியாக இருந்த குடும்பத்தைக் கரை சேர்த்தது அம்மம்மாவின் இந்தக் குஞ்சி ஐயா.
இணுவிலில் அந்த வீடு மைசூர் மகாராசாவின் குட்டி அரண்மனை போல இருந்தது. வெளிநாட்டில் இருந்து நாளையிலேயே புதுப் புதுக் காரெல்லாம் இறக்குமதியாகி அந்த வீட்டுக்கு வரும். எங்களூரில் முதன் முதலாக டிவி வந்ததும் அந்த வீட்டில் தான். அப்ப்பேர்ப்பட்ட வீடு அது. ஆனால் அந்த வீடு இன்னும் பல அனுபவங்களைச் சுமக்கக் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.

அந்தப் பெரிய வீட்டில் நாங்கள் குடி புகுந்த சில மாதங்களிலேயே தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் (T.E.A) கதவைத் தட்டியது. 
“இருக்கிறதிலியே பெரிய வீடு உங்கட வீடு தான். ரவுணை விட்டுத் தள்ளி இருக்குது. பாதுகாப்புக் காரணங்களால ஒரு பெரிய ஆளை இங்க கொஞ்ச நாளைக்கு வச்சிருக்கப் போறம், உங்கட வீட்டை எங்களுக்குத் தர வேணும்” தமிழீழ இராணுவத்தின் உள்ளூர்ப் பிரதிநிதி அம்மாவிடம் வந்த நோக்கத்தைச் சொன்னார்.
“ஐயோ தம்பி குஞ்சி ஐயாவுக்கு வாக்குக் கொடுத்திட்டன் செத்தாலும் இந்த வீட்டை விட்டு வர மாட்டன்” இது அம்மா.

வழக்கத்துக்கு மாறாக வாகனம் ஒன்று வீட்டின் முன்னால் இருக்கிறது, ஏதோ சலசலப்பும் கேட்குது என்று ஊகித்து விட்டு அதற்குள் சிவலிங்க மாமாவும் வந்து விட்டார்.
“தங்கச்சி கொஞ்சம் பொறு” என்று அம்மாவை அமைதிப்படுத்தி விட்டு
“தம்பியவை உவள் பாவம் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து விட்டாள், உது பெரிய வீடு தானே உவை நாலு பேரும் (அம்மா, அப்பா, சின்ன அண்ணன், நான்) வீட்டின்ர பின்பக்கம் இருக்கட்டும் நீங்கள் முன்னறைகளைப் பாவியுங்கோ கொஞ்ச நாளைக்குத் தானே தேவை எண்டு சொன்னனியள்” என்று அவர்கள் பக்கமே கோல் ஐப் போட்டார் சிவலிங்க மாமா. 
என்ன கூத்து என்று தெரிந்தும் தெரியாத பருவத்தில் அப்போது நான். அவர்கள் சொன்ன பெரிய ஆள் வருவதற்கு முதல் நாளே வீட்டின் ஒழுங்கை ஈறாக சென்றி போட்டுப் பலப்ப்படுத்தினார்கள். பெரிய ஆள் உண்மையிலேயே பனையடி உயரம், கட்டுமஸ்தான ஆள் எங்களோடு பேச்சு வார்த்தை இல்லை. கொஞ்சக் காலத்தில் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். அங்கே பலித்தது சிவலிங்க மாமாவின் சமயோசிதம். அவர்கள் சொன்ன அந்தப் பெரிய ஆள் “தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்” என்ற தமிழீழ இராணுவத்தின் தலைவர் என்பது விபரம் தெரிந்த நாளிலே நான் அறிந்து கொண்டது.

அத்தோடு கதை முடிந்து விடவில்லை ஈபிஆர்எல்எஃப் காரர்கள் கதவைத் தட்டினார்கள். துவக்கோடு நிண்ட பெடியளைக் கண்டு சிவலிங்க மாமா விழுந்தடித்து ஓடி வந்தார். அவர்களின் பல்லவியும் “கொஞ்ச நாளைக்கு வீடு வேணும்” என்றிருந்தது. ஆனால் வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற இறுக்கமான கட்டளையோடு.
அம்மா அழுது குழறியும் விடவில்லை. சிவலிங்க மாமா எவ்வளவோ சொல்லியும் இயக்கக்காறர் விடுவதாயில்லை. 
“தங்கச்சி நீங்கள் எங்கையும் போக வேண்டாம் எங்கட வீட்டில வந்திருங்கோ கொஞ்ச நாளையில விட்டுடுவம் எண்டு தானே சொல்லுகினம்” என்று சிவலிங்க மாமா சொல்லவும் சிவலிங்க மாமா வீடு ஒரே மதில், பக்கத்து வீடு என்பதால்அரைகுறை மனசோடு வெளியேறினோம். 
அப்ப நான் சின்னப்பிள்ளை, ஈபிஆர்எல்எப் இல் இருந்து அந்த வீட்டுக்கு வந்த அண்ணைமார் ஆசையாகக் கூப்பிட்டு துவக்கை எல்லாம் தொட்டுப் பார்க்கத் தருவினம். றிவோல்வரைத் தூக்க முடியாமல் தூக்கிப் பார்த்திருக்கிறேன். இயக்கம் எண்டால் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் என்ற நினைப்பே மாறியிருந்தது. இதையெல்லாம் தனியாக எழுதினால் ஒரு முழு நீள நாவல் எழுதுமளவுக்குச் சரக்கு இருக்கு.
ஒரு நாள் சாமம் சிவலிங்க மாமா வீட்டில் நாங்கள் படுத்திருக்கிறம். சிவலிங்க மாமா தட்டியெழுப்பி 
ஜன்னல் பக்கம் கூட்டிக் கொண்டு போனார். வீட்டுக்குள் லைற் போடாமல் தெரு விளக்கில் தெரிவதைப் பார்க்கிறோம். நாங்கள் இருந்த வீட்டில் இருந்து
இயக்கக்காரர் வாகனம் போய் வருகிறது. இம்முறை கொஞ்சம் அதிகமான போக்குவரத்து. அடுத்த நாள் எங்களிடம் வீடு கையளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் தான் தெரியவந்தது அங்கு மறைத்து வைத்த ஏராளம் நகைகள் காலி என்று.
தலைமையகத்துக்குப் புகார் கொடுத்ததால் 
 கூலிங் க்ளாசுடன் வாட்ட சாட்டமான ஒருத்தர் வந்து “எங்கட தோழர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டினம் அம்மா” என்ற அவர் தான் பின்னாளில் ஜன நாயகக் கட்சி ஒன்றை உருவாக்கி இன்றும் இயங்கும் “அரசியல்”வாதி.  நகை நட்டுடன் இந்தியா நோக்கிப் பயணித்த வள்ளம் நடுக்கடலில் நடுக்கடலில் தாண்டு தோழர்கள் இறந்தது பல்லாண்டுகளுக்குப் பிறகு தினமுரசில் அற்புதன் எழுதிய “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” தொடரில் இணுவில் தொழிலதிபர் வீட்டுக் கதையோடு சொல்லப்பட்டிருக்கிறது.

இந்திய இராணுவம் காலத்தில் என் சின்ன அண்ணரை ஆர்மிக்காரர் பிடித்துக் கொண்டு போன போது உடைந்திருந்த அப்பா, அம்மாவைத் தேற்றி மீண்டும் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் சிவலிங்க மாமா. பசி, பட்டினி, பொருள் தட்டுப்பாடு நேரமது. சிவலிங்க மாமாவின் ஆறு பிள்ளைகளோடு இன்னொரு பிள்ளையாக எனக்குச் சோற்றுக் கவளம் தருவார் மீனாட்சி அன்ரி. 
“வாத்தியார் கவலைப்படாதேங்கோ அவன் கெதியா வருவான்” என்று அப்பாவுக்கு ஆறுதல் கொடுத்துக் கொண்டு பராக்குக் காட்டி பேச்சுக் கச்சேரிக்கு இழுத்துப் போவார் சிவலிங்க மாமா. இன்னொரு பக்கம் என் சின்ன அண்ணனை விடுவிப்பதற்கு அவர் ஓடிக் கொண்டிருந்தார்.

ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் மற்றவர் கஷ்ட நஷ்டங்களில் இவ்வளவு தூரம் பாரமெடுக்கும் மனிதர் சிவலிங்க மாமா அளவுக்கு நான் கண்டதில்லை. அதற்காகத் தான் எங்கள் குடும்பத்தின் கதையிலும் சில பக்கங்களைச் சொன்னேன்.

தொண்ணூறுகளில் சிவலிங்க மாமா வீட்டு அல்லது மீனாட்சி அன்ரி வீட்டு வெளி விறாந்தையே கதியென்று  நானும் நண்பர் குழாமும் இருப்போம். மீனாட்சி அன்ரிக்கும்  பொழுது போக ஆள் வேண்டும். அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தால் இரவு ஒன்பதையும் தாண்டியிருக்கும், சிவலிங்க மாமாவும் வந்திருந்து கதைத்துப் பார்த்து விட்டு 
“சரி சரி இனி நாளைக்குக் கதைக்கலாம்” என்று சொல்லும் வரைக்கும் அது நீளும். 
எப்போவாவது தப்பித் தவறி அங்கு போகாவிட்டால் போச்சு. “ஏன் என்ன கோவமோ? மீனாட்சி தேடுறாள் வந்து தலையைக் காட்டீட்டுப் போங்கோ” என்பார் எனக்கும் நண்பர்களுக்கும்.

சிவலிங்க மாமா ஒரு எளிய மனிதர். காலையில் குளித்து முழுகி வைரவர் கோயிலுக்குப் போய் விட்டு ரவுணுக்குப் போய் விடுவார். மாலை வேலையால் திரும்பியதும் 
சிவகாமி அம்மன் கோயிலடியில் இருக்கும் தன் 
 தாய் வீட்டுப் பக்கம் போய், கோயிலையும் கண்டு விட்டுத் திரும்புவார். பின்னர் இராச நாயகம் சித்தப்பா வீட்டில் குட்டி அரட்டைக் கச்சேரி அத்தோடு அவரின் பொழுது போய் விடும். பின் வளவில் இருக்கும் பனையால் இறக்கிய கள்ளில் எப்பவாவது இருந்திட்டு  கொஞ்சம் எடுத்துக் கொடுத்து விட்டுப் போவான் மாணிக்கன். 

பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சிலலிங்க மாமா காட்டியது தனித்துவம். சம்பந்தப்பட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு பின்னர் தனித்தனியாகக் கூப்பிட்டு “நீ ஏன்ரா இப்பிடிச் செய்தனீ” என்று திருத்துவார்.

ஊர்ப்பாசம் என்பது அங்கு வாழ்ந்து பழகிய மனிதர்கள் மீதானது, வெறும் காணித் துண்டுக்குள் எழுத முடியாத பந்தமது. அப்படியொருவர் தான் சிவலிங்க மாமா.

சுவாமியார்ர மேள் மீனாட்சி அன்ரி உலகம் தெரியாதவர். சிவலிங்க மாமா தான் அவருக்கு எல்லாமே.
“மீனாட்சி எனக்கு முந்தியே நீ போய் விட வேணும் தனியாக இருந்து நீ சமாளிக்க மாட்டாய்” என்பாராம் சிவலிங்க மாமா. ஆனால் அவர் அவசரப்பட்டு விட்டார்.
சிவலிங்க மாமா செத்துப் போய் இன்றோடு ஐந்து வருடங்கள். ஒவ்வொரு முறை தாயகப் பயணத்திலும் மீனாட்சி அன்ரி வீட்டைக் கடக்கும் போது
“என்ன பிரபு பறையாமல் போறாய்?” என்று சிவலிங்க மாமா கூப்பிடுவது போல எனக்கிருக்கும்.
Posted by கானா பிரபா at 2:04 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, September 17, 2017

தமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் மறைந்தார்



ஈழத்தமிழினத்தின் விடிவுக்கான போராட்டம், தமிழ் சார்ந்த உணர்வு இந்த இரண்டிலும் விட்டுக் கொடாத வெறியர் அவர். 

தொண்ணூறுகளில் நான் மெல்பர்னில் வாழ்க்கைப்பட்ட போது வைத்திய கலாநிதி சத்தியநாதன் அவர்களின் தமிழ் சார்ந்த செயற்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன்.

அவரின் வைத்திய நிலையத்துக்குப் போய் மருத்துவ ஆலோசனை கேட்கப் போனால் முதல் வேலையாகத் திருக்குறள் ஒன்றைக் கேட்பார் அவ்வளவு தூரம் அவரின் தமிழ்ப் பற்று இருந்தது.

புகழ் வெளிச்சம் பட விரும்பாதவர் அதனால் அவர் தன்னலம் கடந்து செய்த பல தெரியாமல் போயின.
மெல்பர்ன் வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழ் நூலகம் வேண்டுமெனத் தொண்ணூறுகளில் சலியாது முயற்சித்தவர்.

ஈழத் தமிழருக்கான விடிவில் உலகத் தமிழரின் பங்களிப்பில் வைத்திய கலாநிதி சத்தியநாதன் மறக்கப்பட முடியாதவர். அவரின் பரந்த செயற்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு அவரின் இழப்பின் வலி புரியும். 
அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Rajeevan AR அண்ணாவின் பின்னூட்டத்தில் இருந்து வைத்திய கலாநிதி பொன்.சத்திய நாதன் குறித்த விரிவான பகிர்வு

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள்

பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.

தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.

படம் உதவி Aran Mylvaganam
Posted by கானா பிரபா at 10:35 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, August 02, 2017

அநு.வை. நாகராஜன் - பள்ளிப் பெடியன் என்னை அணிந்துரை எழுத வைத்த பெரியவர்



எண்பத்தேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்ட வேளை நாங்கள் தங்கியிருந்த உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தது ஒரு குடும்பம். 
நெற்றியில் மூன்று கோடும் பதிந்த திருநீற்றுப் பட்டையும் நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட அந்தக் கவர்ச்சிகரமான மனிதர் நெஞ்சில் ஓர் ஆலயம் கதாநாயகன் கல்யாண்குமார் போல இருந்தார்.
அப்பா ஆசிரியராகப் பணி புரியும் தாவடி தமிழ்க் கலைவன் பாடசாலையின் புதிய அதிபர் அநு.வை.நாகராஜன் என்றளவிலேயே அவருக்கான அறிமுகம் எனக்குக் கிட்டியது. தெல்லிப்பழையில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருந்தார்கள்.

அந்த நேரத்திலும் கச்சான் கடலைச் சரைப் பேப்பரைக் கூட விட்டு வைக்காமல் படிக்கிறானே இவன் என்று அநு வை நாகராஜன் அவர்கள் என்னை ஓரக் கண்ணால் பார்த்திருக்க வேண்டும். ஒரு நாள் ஒரு பெரிய கட்டு எழுத்துப் பிரதியை என் முன்னால் வைத்தார். 
"காட்டில் ஒரு வாரம்" என்று தன் கைப்பட எழுதிய அந்த சிறுவர் நாவலை எடுத்து முழுமூச்சாகப் படிக்கத் தொடங்கி விட்டேன். அதுவரை இந்திய, ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களிக் சிறுவர் படைப்புகளைத் தேடிய எனக்கு அதுவொரு புது அனுவத்தைக் கொடுத்தது. இலங்கையின் காடும், என் வயதொத்த சிறுவனின் வீர தீரத்தையும் படிக்கப் படிக்கப் புதுமையாக இருந்தது.
சுற்றும் முற்றும் ஷெல் அடியும், துப்பாக்கிச் சூடும் தக தகத்துக் கொண்டிருக்கிறது. படித்து முடித்ததும் அந்த நாவல் 
வாசிப்பனுபவம் குறித்து என் கைப்பட எழுதி அவருக்குக் கொடுத்தேன்.

ஒரு சில மாதங்கள் கடந்தது. நூல் வெளியீட்டு விழா அழைப்பொன்றை எனக்கு நீட்டினார். அது நாலாக மடிக்கப்பட்ட "காட்டில் ஒரு வாரம்" நாவல் வெளியீடு யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி இன்ன திகதி, 1988 ஆம் ஆண்டு நடக்கிறது என்று இருந்தது. அந்த விழா அழைப்பிதழின் முதுகைத் திருப்பிப் பார்த்தேன். நான் கைப்பட எழுதிக் கொடுத்ததை "கனக பிரபா" வழங்கிய அணிந்துரை என்று குறிப்பிட்டிருந்தார். பெடியன் எனக்கு ஆச்சரியமும் புழுகமும் பிடிபடவில்லை.

ஓவியர் ஆசை இராசய்யாவின் வண்ணம் கலந்த அட்டையோடு காட்டில் ஒரு வாரம் நாவல் மேசையில் பகட்டாக இருக்க, ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகள் சொக்கன், சிற்பி சரவணபவன் (அப்போது வைத்தீஸ்வராக் கல்லூரி அதிபர் இவர்) , செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் உள்ளிட்ட இன்னும் பல ஜாம்பவான்களை அந்த மேடையில் கண்டதே பெரும் பேறாக அப்போது நினைத்தேன். காரணம் இவர்களையெல்லாம் ஈழநாடு, வீரகேசரி, ஈழ முரசு, மல்லிகை வழியாகத் தானே பார்த்திருந்தேன் இதுநாள் வரை. அந்த நிகழ்வில் எழுத்தாளப் பெருந்தகைகளோடு,  தான் அதிபராக இருக்கும் தாவடி இந்துத் தமிழ்க் கலைவன் பாடசாலையில் மேல் வகுப்பில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்த 
மாணவிகளையும் அழைத்து நூல் ஆய்வு விமர்சன அரங்கை வைத்தார். அந்த நிகழ்வு போல நூலைப் "படித்து" அக்கு வேறு ஆணி வேறாக நிகழ்த்திய கூட்டத்தை நான் இது நாள் வரை பார்த்ததில்லை. 
அந்தக் கூட்டத்தில் தான் செங்கை ஆழியானை நேரில் கண்டு அவரின் கையெழுத்தை நூலின் உள் அட்டையில் வாங்கியது பற்றி முன்னர் சொல்லியிருந்தேன்.
 அந்த ஆண்டுக்கான சாகித்திய இலக்கியப் பரிசைப் பெற்றது "காட்டில் ஒரு வாரம்" சிறுவர் நவீனம். 

ஈழத்து முன்னோடிச் சிறுவர் நாவலாகக் கொள்ளப்படும் நவசோதி எழுதிய "ஓடிப் போனவன்" 
நாவலையும் அந்தக் காலத்தில் தேடிப் படித்தது மறக்க முடியாத அனுபவம். அவுஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்ந்து வருக் முருகபூபதி அண்ணரின் பாட்டி சொன்ன கதைகள் (தமிழகத்தில் பாட நூலாக அங்கீகரிக்கப்பட்டது), கவிஞர் அம்பி போன்றவர்களின் சிறுவர் இலக்கியங்களைப் பின்னாளில் நுகரும் வாய்ப்புக் கிட்டியது. அநு.வை.நாகராஜன் அவர்கள் ஈழத்தின் சிறுவர் இலக்கியத்திலும், ஆன்மிகப் படைப்புகளிலும் வழங்கிய பங்களிப்பு குறைத்து மதிப்பிட  முடியாதவை.
ஈழத்து நூலகம் தளத்தில் அவரின் நூல்கள் சிலது படிக்கக் கிடைக்கின்றன.
http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நாகராஜன்,_அநு._வை.

அநு.வை.நாகராஜன் அவர்கள் குறித்து வெளிவந்த, சிற்பி எழுதிய மல்லிகை அட்டைப்படக் கட்டுரை 

http://noolaham.net/project/29/2852/2852.pdf

என் அணிந்துரையைப் பொறித்து வந்த புத்தகம், ஆதர்ச எழுத்தாளரின் கையெழுத்தும் வாழ்த்தும் எழுதிய அந்தப் புத்தகம் காலவோட்டத்தில் தொலைந்து போனது. பல்லாண்டுகள் கழித்து தாயகப் பயணத்தில் அவரைச் சந்திக்கப் போன போது காட்டில் ஒரு வாரம் நாவலின் ஒரு பிரதியாவது கிட்டுமா என்ற நப்பாசையோடு கதவைத் தட்டினேன். அந்தக் கால இடவெளியில் நோய் அவரைச் சூறையாடி நாற்காலிக்குள் முடக்கிப் போட்டிருந்தது. என்னை நினைவுபடுத்த முயன்று பார்த்தார். அந்த நிலையில் புத்தகத்தைப் பற்றிப் பேசாதிருந்து சுகம் மட்டும் விசாரித்து அடுத்த சந்தர்ப்பத்தில் அதைப் பற்றிப் பேசுவோம் என்று மனதை அடக்கிக் கொண்டேன். அவரின் இறப்புச் செய்தி முந்திக் கொண்டது.

அநு.வை.நாகராஜன் அவர்கள் மறைந்து இன்றோடு ஐந்து ஆண்டுகள். தன் படைப்பு எட்டக் கூடிய வாசகனின் நாடித் துடிப்பு அறிய அவனுக்கு அதை நுகர்ந்து பார்க்க வைக்கவும், கருத்துக் கேட்டுச் சீர்திருத்தவும் எத்தனை படைப்பாளிகள் இறங்கி வருவார்கள். இன்று அவரது நினைவு நாளில் அநு.வை.நாகராஜன் அவர்களின் அந்தப் பண்பே நினைப்புக்கு வருகிறது.

Posted by கானா பிரபா at 2:12 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ▼  2017 (20)
    • ▼  December 2017 (2)
      • வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்
      • எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥
    • ►  November 2017 (3)
      • சென்றிப் பெடியன் தவாண்ணை
      • ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்
      • “என்ரை அப்பு வந்துட்டானோ”
    • ►  October 2017 (2)
      • ஈழ மண்ணில் இந்தியப் போர் - 30 ஆண்டுகள்
      • “அப்புக்குட்டி” ராஜகோபால் அண்ணரின் எழுபத்தைந்தாவது...
    • ►  September 2017 (2)
      • சிவலிங்க மாமா
      • தமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் ...
    • ►  August 2017 (1)
      • அநு.வை. நாகராஜன் - பள்ளிப் பெடியன் என்னை அணிந்துரை...
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes