ஈழத்தமிழினத்தின் விடிவுக்கான போராட்டம், தமிழ் சார்ந்த உணர்வு இந்த இரண்டிலும் விட்டுக் கொடாத வெறியர் அவர்.
தொண்ணூறுகளில் நான் மெல்பர்னில் வாழ்க்கைப்பட்ட போது வைத்திய கலாநிதி சத்தியநாதன் அவர்களின் தமிழ் சார்ந்த செயற்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன்.
அவரின் வைத்திய நிலையத்துக்குப் போய் மருத்துவ ஆலோசனை கேட்கப் போனால் முதல் வேலையாகத் திருக்குறள் ஒன்றைக் கேட்பார் அவ்வளவு தூரம் அவரின் தமிழ்ப் பற்று இருந்தது.
புகழ் வெளிச்சம் பட விரும்பாதவர் அதனால் அவர் தன்னலம் கடந்து செய்த பல தெரியாமல் போயின.
மெல்பர்ன் வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழ் நூலகம் வேண்டுமெனத் தொண்ணூறுகளில் சலியாது முயற்சித்தவர்.
ஈழத் தமிழருக்கான விடிவில் உலகத் தமிழரின் பங்களிப்பில் வைத்திய கலாநிதி சத்தியநாதன் மறக்கப்பட முடியாதவர். அவரின் பரந்த செயற்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு அவரின் இழப்பின் வலி புரியும்.
அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
Rajeevan AR அண்ணாவின் பின்னூட்டத்தில் இருந்து வைத்திய கலாநிதி பொன்.சத்திய நாதன் குறித்த விரிவான பகிர்வு
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள்
பொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.
மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
தமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.
படம் உதவி Aran Mylvaganam
0 comments:
Post a Comment