skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Monday, December 24, 2012

வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு


இதோ அதோவென்று ஓடிவிட்டது வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் கடந்த இருப்பு.  கடந்த ஏழு வருஷங்களில் நான் தொடர்ந்து செய்த ஒரு ஆத்ம திருப்தி தரக்கூடிய விடயம் என்று பார்த்தால் இந்த வலையுலக வாழ்க்கையே முதலில் வந்து நிற்கிறது. எத்தனை எத்தனை சங்கதிகளை என்னால் பகிர்ந்து கொள்ள இந்த ஊடகம் எந்தவிதத் தடையுமின்றி அன்றுபோல் இன்றும் செயற்பட வைத்திருக்கின்றது என்று நினைக்கும் போது உண்மையில் இது எனக்குக் கிடைத்த பெரும் வரம் என்பேன்.

எனக்குப் பிடித்த விடயங்களைப் பாரபட்சமின்றிப் பேசுவதில் நான் எப்போதும் பின்னிற்பதில்லை.  நமக்குப் பிடித்தவற்றைப் பேசுவதற்கும் செய்வதற்கும் கூட குழு அமைத்துக் கண்காணிக்கும் சமூக ஊடகப் பரப்பில் இது சவால் நிறைந்த விடயமும் கூட. ஆனால் எனக்குத் தெரியும், என் ஒத்த சிந்தனையுள்ள ஒரு வாசக நண்பர் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எனக்கான ஆதரவுக்குரலாக இயங்கி வருவார் என்று.  அந்த நம்பிக்கையே என்னை இத்தனை ஆண்டு கால வலைப்பதிவு வாழ்க்கையில் நீடித்து நிலைக்க வைத்திருக்கிறது. சமீபத்தில் சக ட்விட்டர் உமா கிருஷ் இன் இடுகை வழியாக இதை மெய்ப்பித்தும் கொண்டேன்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் வலைப்பதிவு உலகில் நான் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த சக வலைப்பதிவர்கள் ஏறக்குறையக் காணாமல் போய் விட்டார்கள். இன்னும் சிலர் கால மாற்றத்துக்கேற்ப ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று தாவிவிட்டார்கள். அங்கெல்லாம் நான் இருந்தாலும் என் தாய் வீடு இந்த வலைப்பதிவு உலகம் தான். அதனால் தான் என் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற மூல வலைப்பதிவில் மாதாந்தம் ஒரு இடுகையேனும் இட்டு என் இருப்பைக் காட்டி வருகின்றேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு இடைவெளி இருந்த என் சக வலைப்பதிவான உலாத்தல் பதிவில் அதிக முனைப்போடு எழுதி வருகின்றேன்.  அத்தோடு கூடவே இருக்கு என் இசைச்சிலாகிப்புக்கும்,ஒலிப்பகிர்வுகளுக்குமென றேடியோஸ்பதி

ஏழு வருடங்களுக்கு முன்னர் என்னோடு பயணித்த சக வலைப்பதிவர்கள், வலைப்பதிவுப் பரப்பில் இருந்து நீங்கினாலும் எங்கோ ஒரு இடத்தில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் நண்பர் ஈழநாதனின் இழப்பு என்பது தனிப்பட்ட ரீதியிலும் என்னை வெகுவாகப் பாதித்த ஒரு விடயமாக இந்த ஆண்டு அமைந்து விட்டது.
ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருடம் தமிழகம் போகிறேன். என்னை ஏந்திப் பிடித்து ஊர்சுற்றிக் காட்டிப் பத்திரமாக நாடு திரும்ப வைத்த அத்தனை உறவுகளும் என் இணைய வாழ்வில் பெற்ற பேறு. இதை எப்படி மறப்பேன்.

ஏழு ஆண்டுகள் என்ன ஏழேழு ஆண்டுகளும் அதே முனைப்போடு என்னை இயங்க வைப்ப நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன், தற்காலிகமாக.

நேசம் கலந்த நட்புடன்
அன்பன்
கானா பிரபா
http://www.kanapraba.com/


வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்

2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்

2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்


2011 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு




 கடந்த 2012 ஆம் ஆண்டில் எழுதிய பதிவுகள்

ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா

Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதியின் Chairman ஆகவும் இருந்தவர். தவிர ஏராளமான சஞ்சிகைகளில் இவரது கட்டிடக்கலை சம்பந்தமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், ஆலயங்கள், மற்றும் முக்கிய கேந்திர அமைவிடங்கள் இவரது கைவண்ணமாக அமைந்திருக்கின்றன.




 "இலங்கையில் தமிழர்" - முழுமையான வரலாற்று ஒலி ஆவணம்
 
"இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கி.மு 300 கி.பி 2000)" என்ற இந்த ஒலி ஆவணம் MP3 வடிவில் தனித்தனிப்பாகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே இறுவட்டில் கிடைக்கின்றது. இந்த ஒலிப்புத்தகத்துக்குக் குரல் வடிவம் கொடுத்திருப்பவர் மூத்த வானொலியாளர் திரு. அப்துல் ஜபார் அவர்கள். ஒரு வரலாற்று ஆவணத்தை நிதானமான ஒலி நடையில் அழுத்தம் திருத்தமான உச்சரிப்போடும், மூலக் கருத்துக்களைச் சிதைக்காது கொண்டுவருவதில் திரு அப்துல் ஜபாரின் பங்கு வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றது.




 செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்


 1987 ஆம் ஆண்டு இந்தியன் ஆமிக்கும் புலிகளுக்கும் சண்டை மூண்ட பிறகு ஒவ்வொரு நாளும் கே.கே.எஸ் றோட்டுப் பக்கம் போறதே பெருங்காரியம் தான். எப்ப என்ன நடக்குமெண்டு தெரியாது. திடீரெண்டு சுத்தி வளைப்பு இருக்கும், றோட்டை மறிச்சு எல்லாரையும் நிக்க வச்சு விசாரணை நடக்கும், அதில் எத்தனை பேர் வீட்டுப் பக்கம் திரும்பி வருவினம் எண்டும் சொல்ல ஏலாது. அரைக்காற்சட்டை போட்ட என் வயசுக்க்காரருக்கு அப்படி ஒன்றும் இதுவரை பெரிய சிக்கல் இல்லை என்றாலும் அம்மாவுக்கு நான் வளந்த பெடியன்.


 இணையத்திலே ஓர் ஈழத்து நூலகம்


இலங்கையில் வாழுகின்ற ஒரு வாசகனுக்கும் சரி, லட்சக்கணக்கில் உலகின் எல்லாத்திசைகளிலும் புலம்பெயர்ந்து வாழும் வாசகனுக்கும் சரி, அல்லது ஈழத்து எழுத்துக்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்று முனையும் தமிழக வாசகனுக்கும் ஒரு சேரத் தன் பணியை வழங்குவதில் இணையத்தில் இயங்கிவரும் ஈழத்து நூலகம் http://www.noolaham.org கொடுக்கும் முனைப்பும், சேவையும் உண்மையில் உயரியது என்பதை இந்தத் தளத்துக்குச் சென்றவர்கள் உணர்வர்.



 ஏ எல் எடுத்துட்டு வீட்டில சும்மா இருக்கிறன்



 ஏ.எல் (Advanced Level) என்பது பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான கல்லூரிப்பருவம். ஓ.எல் (Ordinary Level) வரைக்கும் நீல நிறக் கட்டைக்கழுசானும், அந்தக் கழுசானுக்குள் செருகிய அரைக்கை வெள்ளைச் சேர்ட்டோடும் கடந்த பதினோரு ஆண்டுப் பள்ளிப்பருவத்தின் பின்னான ஏ.எல் என்ற அடுத்த இரண்டு வருஷங்களும் வாழ்க்கையையே தீர்மானிக்கும் காலம். விரும்பிய துறையை எடுத்துப் படித்துப் பல்கலைக்கழகத்துக்குப் போவதற்கான வெட்டுப்புள்ளியையும் கடந்தால் தப்பலாம்.


 ராஜேஸ்வரி சண்முகம் என்றதோர் வானொலிக்குயில் ஓய்ந்தது

 இலங்கை வானொலியை உயர்த்திய ஒலிபரப்புச் சிகரங்களில் ஒருவர், வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி இவ்வுலகை விட்டுப் பறந்தார். இலங்கை வானொலியின் பொற்காலங்களில் ராஜேஸ்வரி சண்முகம் என்ற வானொலி நட்சத்திரத்தின் குரலினிமையைக் கேட்டு ரசித்த கோடானுகோடி ரசிகர்களுக்கு இந்தச் செய்தி பேரிடியாக அமைந்திருக்கும்.





 "இருளிலே தெரிந்தது"


சாலையைக் கடக்க முயன்ற நாயொன்று எதிர்ப்பட்ட வாகனத்தால் அடிவாங்கி உயிர்பிழைக்க மறுகரை நோக்கி ஓடுமே அதே தள்ளாட்டாட்டத்தோடு ஓடிப்போய் எதிரே Taxi Stand இல் தனியனாகத் தரித்து நின்ற Taxiக்குள் பாய்ந்து மூச்சிரைக்க ஆரம்பித்தான். Preston...Preston... என்று அராத்திக் கொண்டு எதிர்த்திசையை நோக்கி அவன் கைகள் உயர , Taxi சாரதி அவனை விநோதமாகப் பார்த்தவாறே வாகனத்தை முடுக்கினார் மீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. இரைக்க இரைக்க ஓடிவந்ததால் மார்புக்கூட்டு குத்திக் குத்தி வலித்தது. மார்பைப் பொத்திக் கொண்டே அழ ஆரம்பித்தான் தயாளன்.


எங்கட கோயில் கொடியேறி விட்டுது

  மடத்துவாசல் பிள்ளையார் கோயில் கொடியேற இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரேயே ஊர் உலகமெல்லாம் பரவிவிட்டது. இப்போது கொடியேறித் திருவிழா நடக்குது. போன வருஷம் தாயகம் போனபோது 16 வருஷத்துக்குப் பிறகு மடத்துவாசல் பிள்ளையார் கோயில் தேர்த்திருவிழா எல்லாம் கண்ட காட்சி இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது. 16 வருஷம் எண்டவுடனை வருஷம் 16 றேஞ்சுக்குக் கன்னாபின்னாவெண்டு கற்பனை வளக்காதேங்கோ.

 இன்று முதல் "கள்ளத்தீனி" கொடுக்கிறேன்


 கள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.


 "அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும்

 நாட்டின் 2 சதவீதமான மக்கள் தொகையைப் பிரதிபலிக்கும் தமிழர் பரம்பல் என்பது இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது போல இயங்கும் இந்த நாட்டின் வாழ்வியல் போன்று இலங்கை, இந்தியத் தமிழர் என்ற பாகுபாடு கடந்து மொழியால் ஒன்றுபட்ட ஒரே இயங்குதளத்தில் சொல்லிலும் சிந்தனையிலும் இயங்கினால் நம் தமிழ் மொழியின் எதிர்கால இருப்புக்கும் ஆரோக்கியமான அத்திவாரமாக அது நின்று நிலைக்கும் எனலாம்.

 என்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்

அந்தப் பாடலோடு 1942 A Love story படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதியப்பட்டுப் பாடல்கள் வெளியாகின்றன. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் ஆர்.டி.பர்மனை உயிர்ப்பிக்கின்றன. 1942 A Love story படக்குழுவே அவருக்காக ஜனவரி 1, 1994 பிறக்கும் கணத்தில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். அதில் வரும் "ஏக்கு லடுக்கிக்கே" பாடல் ஒலிபரப்பாகும் வேளை அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் கம்பீரமாக அரங்கில் நுழைகின்றார். January 4, 1994 அவர் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றார், கடைசி உயிர்ப்பில் தன்னை நிலை நிறுத்திய திருப்தியில்.

 "கள்ளத்தீனி" ஆகஸ்ட் 14


தான் எதற்காக வாழ ஆசைப்பட்டாள் என்பதைத் தேடிக்கண்டுபிடிக்கிறாள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு காலம் என்ற சாக்குத் தேவையில்லை என்ற உண்மையை உணர்கின்றாள். படத்தைப் பார்த்து முடித்ததும் ஆயிரம் எண்ண அலைகள். எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்பட்டதில் இருந்து இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோமே என்றுதானே வாழப் பழகிவிட்டோம்.

 சென்னை என்னை வா வா என்றது!


 யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.

 BBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்


 சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.


 ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(


எப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஓர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை. அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும் ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். "பிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ" என்று விதை போட்டார்.

 யாழ்ப்பாணம் போற பஸ்


ஒருவருஷத்துக்கு மேலாகத் தாயகம் செல்லாத நிலையில் இந்த நவம்பர் மாதம் தாயகம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த வேளை, அப்போதுதான் அங்கிருந்து வந்த நண்பர் "அங்கை கடும் மழை, வெள்ளம், அதோட டெங்குக் காய்ச்சலும் பரவுது, ஏனப்பா வலியப்போய் வினையைத் தேடுறீர்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதை விட்டால் வாய்ப்பில்லை, ஷெல், குண்டு மழையிலேயே சீவிச்சனாங்கள், இதெல்லாம் என்ன பெரிசு என்று மனசுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்தேன்.





 இறுதி யுத்தத்தின் பின் "இனி அவன்" தமிழ் பேசும் திரைப்படம்


 ஈழப்போரில் போராளிகளாகப் பங்கெடுத்தவர்களில், இறந்தவர்கள் தவிர இராணுவத்திடம் சரணடைந்து இப்போது மீண்டும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் சகோதரர்களின் வாழ்வு இன்னொரு அவலக் கதை பேசும். அதைத்தான் "இனி அவன்" திரைப்படத்தின் முக்கிய பாத்திரம் வழியாகச் சொல்லப்படுகின்றது.
Posted by கானா பிரபா at 8:51 PM 15 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, December 21, 2012

இறுதி யுத்தத்தின் பின் "இனி அவன்" தமிழ் பேசும் திரைப்படம்


ஈழ யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் யுத்த வடுக்கள் மாறாத இடங்கள் மட்டுமல்ல மனிதர்களும் நடைப்பிணங்களாய் வாழும் நிலை தொடரும் சூழலில் "இனி அவன்" என்ற தமிழ் பேசும் திரைப்படம் வெளிவந்திருக்கிறது.  சமுதாயம் என்ற இலங்கையில் தயாரிக்கப்பட முதல் தமிழ்த் திரைப்படத்தைத் தொடர்ந்து எழுபதுகளில் ஈழத்துத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று சொல்லக்கூடிய நிலை இருந்து, எடுத்த படங்களும் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் தீக்கிரையாக்கப்பட்டு, ஆங்காங்கே எஞ்சியது என்று எண்ணிப்பார்த்தால் பத்துக்கும் குறைந்த படங்களே நம் ஈழ சினிமாவின் கதை சொல்லும். ஈழப்போராட்ட காலத்தில் நிதர்சனம் என்ற தொலைக்காட்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்த பின்னர், அடுத்த கட்டமாக போர்க்கால வாழ்வியல் பேசும் திரைப்படங்கள் வீடியோ கமராவில் எடுக்கப்பட்டு அகன்ற திரைகளில் காண்பிக்கப்பட்ட வரலாறும் உண்டு.  இப்போது வந்திருக்கும் "இனி அவன்" என்ற திரைப்படம் தொழில் நுட்ப ரீதியில் முழு நீள சினிமாவுக்கான இலட்சணங்களோடு வந்திருக்கிறது.

எந்த ஒரு தீர்வுமில்லாது இருந்ததையும் அழித்துத் துடைத்த ஈழ யுத்தம் முடிவடைந்த பின்னர், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த யுத்தத்துக்குப் பின்னான விளைவுகளின் தரிசனமாகவே ஈழத்தின் தமிழ்ப்பிரதேசங்கள் சாட்சியம் பகிர்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் இயங்கும் வானொலி மூலம் வன்னிப்பிரதேசப் பாடசாலை மாணவருக்கான அடிப்படைத் தேவைகள் பற்றிய உதவித்திட்டம் செய்ய முன் வந்தபோதுதாய் மட்டும் உள்ள பிள்ளை, தந்தை மட்டும் உள்ள பிள்ளை, தாயும் தந்தையும் இல்லாத பிள்ளை, பெற்றோர் இருந்தும் தன் அங்கங்களை இழந்த பிள்ளை என்று  ஒவ்வொரு மாணவருக்குப் பின்னால் இருந்த இழப்புக்களைப் பட்டியலிட்டிருந்தது. ஈழப்போரில் முக்கியமாகப் பாதிக்கப்பட்ட வன்னிப்பெரு நிலப்பரப்பு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆண்டாண்டு காலமாக வேளாண்மை செய்து வாழ்வை நடத்தியவர்கள். யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்து யுத்த காலத்தில்  வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும் போது அந்த எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே. எனவே யுத்தம் ஓய்ந்த பின்னர் வன்னிவாழ் மக்களது பொருளாதாரம் குறித்த இருப்பும் பெரும் கேள்விக்குறியாகத் தொடர்கின்றது.

மேற்சொன்னவை ஒருபுறமிருக்க, ஈழப்போரில் போராளிகளாகப் பங்கெடுத்தவர்களில், இறந்தவர்கள் தவிர இராணுவத்திடம் சரணடைந்து இப்போது மீண்டும் பொதுவாழ்வில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பும் சகோதரர்களின் வாழ்வு இன்னொரு அவலக் கதை பேசும். அதைத்தான் "இனி அவன்" திரைப்படத்தின் முக்கிய பாத்திரம் வழியாகச் சொல்லப்படுகின்றது.  புனர்வாழ்வு முகாமிலிருந்து வரும் அவனின்  வாழ்வில் அடுத்த பக்கங்களாக இந்தத் திரைப்படம் கொண்டு செல்லப்படுகின்றது. ஈழத்துச் சிங்களப் படைப்பாளிகளைப் பொறுத்தவரையில் பிரசன்ன விதானகே, அசோகா கந்தகம போன்ற விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஓரளவு தமிழர் பிரச்சனையின் நியாயங்களை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய நிலையில் இப்போதும் இருக்கின்றார்கள். அவர்களின் படைப்புக்களில் வெளிப்படும் நியாய தர்மங்கள் என்பது பொது நோக்கிலன்றி தனியே அவர்கள் எடுத்துக் கொண்ட கதையம்சத்தோடு வைத்துப் பார்க்கப்படவேண்டியது.

இனி அவன் படத்துக்கு முன்னரேயே  அசோகா கந்தகமவின் Me Mage Sandai என்ற படத்தையும் பார்த்திருக்கின்றேன்.  ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த அந்தப் படத்தில் சிங்கள இராணுவச்சிப்பாயோடு அவனின் கிராமத்துக்கு வரும் தமிழ்ப்பெண்ணை அந்த ஊர் மக்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட படம் அது. அந்தப் படத்தோடு ஒப்பிடும் போது இனி அவன் படத்தின் தயாரிப்பில் அசோகா கந்தகமவும் அவர் சார்ந்த குழுவும் இன்னும் அதிகப்படியான Home work செய்திருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். மிக முக்கியமாக, இனி அவன் திரைப்படத்துக்கான நாயகன் தர்ஷன் தர்மராஜ்,  அவனோடு தொழில் செய்யக்கூடப் பயணிக்கும் ஏழைப்பெண்ணாக நிரஞ்சனி சண்முகராஜா, அவனின் காதலியாக வரும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எல்லாப் பாத்திரங்களுமே பொருத்தமாக அமைகின்றன. ஆனால் இந்தப் படத்தின் சூழல் யாழ்ப்பாணப் பிரதேசக் கிராமம் ஒன்றில் இயங்கும் போது, நாயகனின் தமிழில் இந்தியத் தமிழ் பேச்சுவழக்கின் பாதிப்பில் உச்சரிப்பு அமைவது சிறிது உறுத்தல்.

புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியேறும் முன்னாள் போராளி தன் வாழ்க்கையை இன்னொரு பக்கத்திலிருந்து தொடங்கும் போது, யாழ்ப்பாணச் சமூகம் அவனை எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்கிறது என்பதைப் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் இயல்பாகக் காட்டப்படுகின்றது. சில உண்மைகள் கசப்பானவை என்றாலும் அங்கே இயங்கும் தற்போதைய சூழலின் பரிமாணமாக அமையும் போது என்ன செய்ய முடியும். இயக்கத்துக்குப் போக முன்னர்,  சாதிப்பாகுபாடால் இன்னொருவருக்கு வாழ்க்கைப்படும் காதலியை, போராளியாகிப் பின்னர்   புனர்வாழ்வு முகாமிலிருந்து வந்து பழைய வாழ்க்கையை வாழ முனையும் போது சந்திப்பது கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றது. படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக அமைகிறது, இருந்த தொழிலையும் பறிகொடுத்த கணவனையும் பிள்ளைகளையும் காப்பாற்றவேண்டி, இவனோடு இணையும் பெண் பாத்திரம். வெளி நாட்டில் இருந்து வந்த அரைக்காற்சட்டை இளைஞன், சில்லறைக்கடை வர்த்தகர் உள்ளிட்ட பாத்திரங்கள் கூட நம் மத்தியில் உலாவருபவர்கள் தான்.

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் இருந்து மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் காட்சிகளினூடு யுத்தத்தின் பின் விளைவுகளைக் காட்டிய இயல்பான வடிவம், பின்னர் அவன் தனக்கான ஒரு வாழ்க்கையைத் தேடச் செல்வதன் பின்னரான திரைக்கதை தடம் மாறுவது போல ஒரு பிரமை.  நகைக்கடை முதலாளியின் இன்னொரு சொரூபம் நாம் தென்னிந்திய சினிமாக்களில் அதிகம் பார்த்ததாலோ என்னவோ அது யதார்த்தம் மீறிய சினிமாப் படம் என்ற எல்லைக்குள் செல்லும் அபாயம் இறுதிக்காட்சிகளில் தென்படுகின்றது. படத்தின் திரைக்கதையில் நுணுக்கமான சில விஷயங்களை, உதாரணமாக, வீட்டுக் காணியில் தங்க நகைகளைத் புதைத்து வைத்திருப்பது, யாழ்ப்பாணத்தின் சாதீயத் திமிர், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறும் இரட்டைத் தேசியம் பேசும் மனிதர்கள் என்று காட்சிகளின் வாயிலாக வெளிப்படுத்திய திறமான உத்தியைப் படத்தின் முடிவை நோக்கிய திரைக்கதையிலும் கொண்டிருக்கலாம்.   காட்சிகளை எடுக்கத் தகுந்த நடிகர்கள் கிட்டியது போல, யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பொருத்தமான இடங்களையும் ஒளிப்பதிவாளர் கச்சிதமாகக் கவர்ந்திருக்கிறார்.   
படத்தின் இயல்பைச் சிதைக்குமாற்போல் பாடல்களைப் புகுத்தி மசாலா ஆக்காது, காட்சிகளுக்கு மெருகூட்டும் மென் இசையும் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு காட்சிகளையும் நாடகப்பாணி விழுங்கிடாது பெருமளவு காப்பாற்றுகின்றது இயக்கமும் படத்தொகுப்பும். சிங்கள இயக்குனருக்கு நம் தமிழ்ப்பிரதேச வாழ்வியல், சிக்கல்கள், மொழிப்பயன்பாடு போன்றவற்றை  காட்சிப்படுத்தும் போது வரக்கூடிய சவால்களைப் போக்குகின்றது வதீஸ் வருணன், தர்மலிங்கம் ஆகியோரது உதவி இயக்கம்.

போருக்குப் பின்னான வாழ்வியலை ஒரு முன்னாள் போராளியை முக்கிய பாத்திரமாகக் கொண்டு நகர்த்தும் போது அவன் சார்ந்த சூழலையே முக்கியப்படுத்தப்படுகின்றது. படத்தின் திரைக்கதை அமைப்பில் யுத்தம் ஏற்படுத்திய உளவியல் சிக்கல்களை இன்னும் விரிவாக எடுத்துக் காட்டியிருக்கலாமோ? ஆனாலும் என்ன, அந்த முக்கிய பாத்திரம் இந்த வலியைத் தனக்குள்ளே புழுங்கி வெளிப்படுத்துமாற்போல அமையும் காட்சிகள் பலம் சேர்க்கின்றன.

தேசிய இனப்பிரச்சனையில் இப்படியான படைப்புக்களை வழங்கும்போது சார்பு நிலை குறித்த சிக்கல் வரும்.  ஆனால் ஒவ்வொரு மனிதருக்குப் பின்னால் இருக்கும் கதைகள் ஒத்தவை அல்லவே, அதே நேரம் தனி ஒருவர் ஒரு முழுச்சமூகத்தைப் பிரதிபலிக்கக்கூடிய அளவுக்கு எவ்வளவு தூரம் கதாபாத்திரமாக மாறமுடியும் என்ற சவாலைப் படைப்பாளியின் கண் கொண்டு சிந்திக்கவேண்டும்.  எது சரி, எது பிழை என்பதை விட, இப்படியான கதைகளும் நிஜங்களாக உலாவருகின்றன என்பதைத் தான் சொல்லிவைக்கின்றது இனி அவன். இதை விடவும், இன்னும் பல பேசப்படாத அவலங்கள் உண்டு. அவை இனிவரும் படைப்புக்களில் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை. அந்தவகையில் இனி அவன் ஒரு ஆரம்பம் என்றும் சொல்லலாம்.

யுத்த சூழல், அதன் பின்னான வாழ்வியல், ஆமிக்காறன், விடுதலைப்புலிகள் என்று எல்லா விஷயத்தையும் ஒரே படத்தில் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரி சினிமா ரசிகனாக இல்லாமல், இந்தப் படம் சொல்லும் சங்கதி என்ன , நாம் எங்கே போகிறோம் என்பதைப் பற்றியெல்லாம் படம் முடிந்த பின்னரும் கொஞ்சமாவது சிந்திக்க வைத்திருப்பதற்காகவே கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.




Posted by கானா பிரபா at 9:27 PM 2 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, November 28, 2012

யாழ்ப்பாணம் போற பஸ்

ஒருவருஷத்துக்கு மேலாகத் தாயகம் செல்லாத நிலையில் இந்த நவம்பர் மாதம் தாயகம் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்த வேளை, அப்போதுதான் அங்கிருந்து வந்த நண்பர் "அங்கை கடும் மழை, வெள்ளம், அதோட டெங்குக் காய்ச்சலும் பரவுது, ஏனப்பா வலியப்போய் வினையைத் தேடுறீர்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு இதை விட்டால் வாய்ப்பில்லை, ஷெல், குண்டு மழையிலேயே சீவிச்சனாங்கள், இதெல்லாம் என்ன பெரிசு என்று மனசுக்குள் சமாதானப்படுத்திக் கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்தேன். இரண்டரைக் கிழமை லீவில் ஏகப்பட்ட திட்டங்கள். தாயகப்பயணத்தோடு, இந்தியாவுக்கும் ஆறு வருஷங்களுக்குப் பின் போக முடிவெடுத்தால் அதிலும் இன்னும் ஏகப்பட்ட திட்டங்கள். கொச்சின், குருவாரூர், கோழிக்கோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று வந்துவிட்டன. ஊருக்குப் போவதன் முதல் காரணமே அப்பா, அம்மாவைப் பார்க்கவேண்டும். தொலைபேசியில் பேசும் போது "தம்பி! பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினிலும் நனிசிறந்தனவே" என்ற முத்தாய்ப்போடுதான் அப்பா ரிசீவரை வைப்பார்.

கொழும்பு, யாழ்ப்பாணம் போக்குவரத்து ஆதிநாளில் யாழ்தேவி புகையிரதச் சேவை இருந்த காலத்தில் போயிருக்கிறேன். யாழ்தேவி போன தண்டவாளத்தின் சுவடே இல்லாமல் புல்பூண்டு முளைத்து, மண் மேடாய் இருக்க, ரயில் நிலையங்களும் அகதிகளின் தற்காலிக முகாமாகிப் போய்விட்டன. ஒருகாலத்தில் இலங்கையின் ஒட்டுமொத்த ரயில்சேவைகளில் முதன்மையான இலாபம் கொழிக்கும் ரயில்சேவையாக இருந்தது யாழ்ப்பாணம் கொழும்புக்கான யாழ்தேவி ரயில்சேவையாம். என் சித்தியின் மகள் தன் வாழ்நாளிலேயே இலங்கை ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பில்லாமல் இப்போது கல்யாணம் கட்டிக் குழந்தைகளோடு வெளிநாட்டில் இருக்கும் வரை இந்த ரயில்சேவை இன்னும் வரவில்லை என்றால் பாருங்களேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இப்போதுதான் மெல்ல மெல்லத் தண்டவாளம் போடும் பணிகள் ஆரம்பமாகின்றன என்று கொழும்புப் பத்திரிகையில் வந்திருந்ததை மெய்ப்பிக்குமாற்போல எங்களூரில் இருக்கும் ரயில் நிலையத்தில் பெரிய பார ஊர்த்தி வாகனங்கள் வேலையாட்களோடு இறக்கியதைக் காணமுடிந்தது.

 இடையில் தொண்ணூறுகளில் கடும் சண்டை நடந்து கொண்டிருக்க, வானத்தில் விமானக்கழுகு வட்டமிட்டுக் கொண்டிருக்க அவனுக்குப் போக்குக்காட்டி யாழ்ப்பாணம் மினிபஸ்காரன் பளையில் இறக்கி விட, கொம்படி, ஊரியான் பாதையால், முழங்கால் அளவு தண்ணீரில் கால் மைல் நடந்து, ஜெற்றியில் ஏறி இன்னொரு மோட்டார் சைக்கிளில் இன்னும் இரண்டு கிலோ மீட்டர், பிறகு இன்னொரு மினிபஸ் அது ஓமந்தை வரை சென்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் தாண்டி, புலிகள் இராணுவம் இருவரும் இல்லாத சூனிய வெளியில் இறக்கிவிட பின்னர் இராணுவப் பகுதி சென்று அங்கிருந்து பஸ் எடுத்து வவுனியா போய், அங்கே ஒருநாள் தங்கி போலீஸ் வாக்குமூலம் வாங்கி, அடுத்த நாள் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் யாழ்தேவி ரயில் சேவை என்று அந்த நாளில் இளவரசன் காடு, மலை, மேடு, களனி, ஆறு எல்லாம் தாண்டி இரத்தினக் கல் எடுக்கிறது மாதிரியான சமாச்சாரம். அதுவும் இடையில் ஏதாவது சண்டை வந்தால், கிளிநொச்சிப் புத்த விகாரை ஆச்சிரமத்தில் நாட்கணக்கில் இருந்து போகவேண்டும். அந்த அனுபவமும் உண்டு. தேய்ந்து தேய்ந்து நலிந்து அழுது பொங்கி வெடித்த மினிபஸ் டயரால் நடுவழியில் தடைப்பட்ட பயணமும் உண்டு. பின்னர் பல்கலைக்கழக வாழ்வில் வவுனியாவுக்கும், கொழும்புக்கும் கூட்டாளிமாரோடு ஓடும் யாழ்தேவியில் எட்டிப் பாய்ந்து சீட் பிடித்துப் போன காலமும் கடந்தாச்சு. இரண்டாயிரமாம் ஆண்டுகளில் விமானப்போக்குவரத்தில் பலாலியில் (யாழ்ப்பாணம்) இருந்து இரத்மலானை (கொழும்பு) என்றும் பயணிச்சாச்சு. இந்த ஏழுகடல் அனுபவங்களை இந்தத் தலைமுறை கண்டிருக்காது.

இப்போதோ நிலமை வேறு. ஏ9 பாதையே கதி என்று தரை வழிப்பாதை மாலையானால் அடுக்கடுக்காகச் சொகுசு பஸ் பயணம், அதைவிடப் பகல் வேளைகளில் அரச பேரூந்தும் இயக்கப்படுகின்றது. ஆனால் காலையில் ஆரம்பிக்கும் அரச பேரூந்துப் பயணம் ஒவ்வொரு தரிப்பாக நின்று கொழும்பு/யாழ் போய்ச் சேர ஒரு முழு நாள் ஆகிவிடும். தனியார் சொகுசுபஸ்காரன் இரவு ஏழுமணிக்குத் தன் பயணத்தை ஆரம்பிப்பதாகச் சொல்லி, கொழும்பில் இருக்கும் குறுக்குச் சாலைகளிலெல்லாம் ஆட்களைக் கவர்ந்து கொழும்பு தாண்ட இரவு பத்து மணி ஆகிவிடும். இடையில் சாப்பாட்டுக்கு இருபது நிமிடம், முறிகண்டிப்பிள்ளையார் கோயிலில் இன்னொரு இருபது நிமிடம் என்று ஆடிப்பாடி ஊர்போய்ச் சேரஅதிகாலை தாண்டி, காலை வந்து ஜன்னலுக்குள்ளால சூரியன் கொக்கட்டம் விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சொகுசு பஸ்ஸில் பயணிக்கும் போது புதுசு புதுசாக முளைத்திருப்பார்கள். போன ஆண்டு இருந்த பஸ்காரர் எங்கே என்று தேடவேண்டும். ஒரு சிலர் மட்டுமே ஆண்டாண்டு காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளவத்தைக் (கொழும்பு) கடைகளில் யாழ்ப்பாணத்துக்குப் போகும் சொகுசு பஸ்கள் ஒவ்வொன்றும் தம் தனித்துவத்தை விளம்பரப்படுத்திக்கொண்டிருக்க ஒரு பஸ்காரர் மட்டும் என் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். கால் நீட்டிப் படுக்குமளவுக்கு இருக்கை வசதி, அத்தோடு Wi Fi இணைய வசதி என்று கண்டதும் எட இதென்ன புதுக்கூத்து என்று முகவரி தெரியாத அந்த பஸ்காரருக்குப் பணம் கட்டியாச்சு. காலி வீதியில் உள்ள ஏதாவது கடைக்கு முன்னால் வந்து ஏறுங்கோ என்ற காலம் போய், வெள்ளவத்தைக் கடற்கரைக்குப் பக்கமாக,இராமகிருஷ்ண லேனில் தான் இப்போது பஸ்கள் முகாமிட்டிருந்தன. ஏழுமணிக்கு வாங்கோண்ணை என்ற பஸ்காரன் பஸ் நிரம்புமளவுக்கு ஆட்களைச் சேர்க்கும் வரை கிளம்பமாட்டான் என்று தெரிந்தது. "உவங்களுக்கு யாழ்தேவி வந்தால் தான் பாடம் கிடைக்கும்" என்று எனக்குப் பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் புலம்பினார்.

"அண்ணை இந்த பஸ் காங்கேசன்துறை வீதியால் போகுமெண்டு றிக்கெற் வித்தவர் சொன்னவர் சரிதானே" என்று நான் கேட்க "
இல்லையண்ணை இது பருத்தித்துறை போற பஸ், யாழ்ப்பாணத்தில இறக்கிவிடுவம் ஓட்டோ எடுத்து ஊருக்குப் போங்கோ" என்று நடத்துனர் முதல் கோணல் வைத்தார்.
பஸ் கிளம்பியது. முன் இருக்கையில் முகவாய் இடிக்குமளவு நெருக்கம். "அறுந்துபோவார் இதைத்தானோ கால் நீட்டிப் படுக்குமளவு சீட் எண்டவங்கள்" என்று நொந்துகொண்டேன். முன் சீட்டில் இருந்தவர் வெகு இலாகவமாக ஓடும் பஸ்ஸிலேயே நின்றுகொண்டு ஜீன்ஸுக்கு மேல் சாரத்தை (லுங்கி)க் கட்டி தன் இரவு உடைக்கு மாறினார். எனக்குப் பக்கத்தில் இருந்தவரோ மிகுந்த பொறுமைசாலி, நிமிடத்துக்கு ஒருதரம் பஸ்காரரைத் திட்டிக்கொண்டு வந்தார்.
"தம்பி, உவ்வளவு நேரமாக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறம் பஸ்ஸையும் எடுக்கமாட்டீரில்லை, உதிலை ரீவியிலை ஏதாவது படத்தைப் போடுமன் பாப்பம்" என்று சினந்து கொண்டிருந்தார்.
பஸ் நடத்துனரோ அதைக் காதில் வாங்குவதாயில்லை.
"தம்பி உம்மோடையெல்லே கதைக்கிறன், உந்த ரீவியைப் போட்டால் தேய்ஞ்சு போடுவீரோ" மீண்டும் அவர்
"அண்ணை, வேலை பாக்குற நேரம் கரச்சல் குடுக்காதேங்கோ" நடத்துனர் பெடியன் (அவனுக்கென்ன பஸ் நிரம்பியாச்சு)
 "ச்சீ கேவலமான பண்பப்பா" என்று அவர் மீண்டும் திட்ட, வேண்டாவெறுப்பாக அவர் திட்ட,
நடத்துனர் பெடியன் வேண்டாவெறுப்பாக சின்னத்திரையில் கோ பாடலைப் போட்டான்.
"வெண்பனியே வெண்பனியே உன் தோளில் சாய்ந்திடவா" என்று டிவி பாடிக்கொண்டிருக்க, எனக்குப் பக்கத்தில் இருந்த அந்த அவர் ஸ்டீரியோவில் குறட்டை ஒலி கொடுத்துக் கொண்டிருந்தார். "சுத்தம், உம்மை நித்திரையாக்குறத்துக்கோ படம் போடச் சொன்னனீர்" என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். ஏ9 பாதை கடந்த ஆண்டை விடச் சீராக இருந்தது. போனவருஷப் பயணத்தில் அடிக்கடி பஸ் குத்தாட்டம் போட்டுப் பயணித்திருந்தது, இம்முறை பாக்யராஜ் நடனம் போல வெகு நிதனமாக.
Wi Fi ஐக் காணவில்லை என்று புகார் கொடுக்கலாம் போல, இந்த ஓட்டை பஸ்ஸில் அதுதான் இல்லாத குறை என்று நினைத்துக் கொண்டேன். பஸ்ஸுல் துப்பாக்கி படம் கள்ள டீவியில் போட்டு காதைச் செவிடாக்கும் அளவுக்கு விஜய் சுட்டுக் கொண்டிருந்தார் அவ்வளவு சத்தம்.
குளிரூட்டப்பட்ட ஏஸி பஸ் என்றாலே பதப்படுத்தும் மீனை குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கும் அளவுக்குத் தான் யாழ்ப்பாண பஸ்காரர் வைப்பார்கள், அவ்வளவு குளிர். லண்டனில் இருந்து வரும் வெள்ளைக்காரனே யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறினால் விறைச்சுச் செத்துப்போவான். செல்போனில் இணைய வசதி இருந்ததால் அதை நோண்டிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு தாண்டி சென்னை ட்விட்டர்கள் ஒருபக்கம் நடுநிசிக்கீச்சு, கவிதை என்று களைகட்டிக்கொண்டிருக்க, அமெரிக்க வாழ் ட்விட்டர்கள் இந்தியப் பொருளாதார மேம்பாடு குறித்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துகொண்டிருந்தார்கள். முகம், கால் கழுவி, முறிகண்டிப் பிள்ளையாரைக் கும்பிடும்போது நாலுமணி ஆகியிருந்தது. முறிகண்டிப்பிள்ளையார் அன்று முதல் இன்றுவரை அமைதியாக இருந்தார். அந்த அமைதிக்குப் பின்னால் ஆயிரம் செய்திகளிருக்கும். யாழ்ப்பாணம் நோக்கி நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது பஸ்.
Posted by கானா பிரபா at 8:32 PM 16 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, October 01, 2012

ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(

இன்று சிட்னியில் விடுமுறை நாள் என்ற ஆவலை விட, முழுநாள் பயிற்சிப்பட்டறை இருக்கின்றதே என்ற உளைச்சலோடு நகரப்பகுதியை நோக்கிச் சொல்லும் போது, சக நண்பன் தமிழ்ப்பித்தனின் தனிமடலில் "ஈழநாதன் இறந்து விட்டாராம்" என்ற ஒற்றை வாக்கியம் மட்டும் வந்தபோது ஒருகணம் என் தலையில் இடியே விழுந்தது போல இருந்தது, இப்போது இதை எழுதும்போதும் அந்தப் பாரத்தை இறக்கி வைக்கமுடியாமல் கைபோன போக்கில் தட்டச்சுகின்றேன்.

வலைப்பதிவு உலகுக்கு வந்த காலத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு, இணையப்பரப்பில் இருக்கும் சக நண்பர்களை அறிமுகப்படுத்தி எங்கள் எல்லோருக்கும் இணைப்பாக இருந்தார் மதி கந்தசாமி. அவரின் வழியாகவே எனக்கு ஈழநாதன் என்ற வலைப்பதிவரோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு முன்னர் அவருடைய வலைப்பதிவு, மற்றும் தட்ஸ்தமிழின் முந்திய பதிப்பு (இந்தியா இன்ஃபோ என நினைக்கிறேன்) வழியாக ஈழநாதன் என்ற ஒரு கவிஞரை அறிந்து கொண்டாலும் இவ்வளவு இளையவர், ஈழத்து இலக்கிங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆகப்பெரிய கனவோடு இருப்பார் என்பதை நான் அவரைச் சந்திக்கும் வரை உணர்ந்ததில்லை. என்னுடைய முதல் சிங்கப்பூர்ப் பயணத்தில் ஒவ்வொரு இடமாகக் கூட்டிச் சென்று ஒரு குழந்தைக்கு வழிகாட்டுமாற்போல ஒவ்வொன்றாகக் காட்டி மகிழ்ந்தார், முதல் நாள் இரவு வேலை முடிந்த களைப்போ, தூக்கக் கலக்கமோ இல்லாது. "வடிவாச் சாப்பிடுங்கோ பிரபா" தான் வழக்கமாகச் செல்லும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று ஆசை தீரப்பரிமாறினார்.

அதன்பின்னர் மின்னஞ்சல் வழியாக நீண்டது நம் தொடர்பு. எப்போது பேசினாலும் நூலகம் என்ற ஈழத்தில் ஓர் தமிழ் இணைய நூலகத்தைப் பற்றி அவர் பேசாத நாளில்லை.  அது மட்டும் போதாது, தற்போது வாழ்ந்து வரும்  ஈழத்தின் கலை, இலக்கியவாதிகள் எல்லோரதும் சொந்தக் குரலில் அவர்களது வாழ்வியலைப்பதிவு செய்ய வேண்டும் என்பதில் அப்போது தீவிர முனைப்பாக இருந்தார். "பிரபா, 2007 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு வருமாற்போல ஒரு ஒலிக்களஞ்சியம் செய்வோம், செலவெல்லாம் நான் பார்க்கிறேன் முதலில் காரியத்தில் இறங்குவோம், உங்களால் முடிந்த அளவுக்கு நீங்கள் பணிபுரியும் வானொலி வழியாகவும் இதைச் செய்யப்பாருங்கோ" என்று விதை போட்டார். அவர் சொன்னதை நான் ஒருபக்கமாகச் செய்யத் தொடங்கினேன், அவற்றையே மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஒலிப்பதிவுகளாகவும் இட்டேன்.  பெரும் இலக்கியக் கனவோடு இருந்தாலும் தன்னுடைய பணிச் சுமை காரணமாக இணையப்பரப்பில் முன்னர் அளவுக்குத் தீவிரமாக இல்லாவிட்டாலும், அவர் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை, ஈழத்துப் பதிவுகள் வரும்போது தன்னுடைய சிந்தனையைப் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

ஈழநாதனின் வலைப்பகிர்வுகள் இங்கேயுள்ள அவரின் இணைப்பில் http://www.blogger.com/profile/06819662477238200109



ஈழநாதா!  நான் நினைக்கவில்லை இனி உம்மை என் வாழ்வின் எஞ்சிய நாட்களில் சந்திக்காமல் இருக்கப்போகின்றேன் என்று :-(

 ஈழநாதனின் பகிர்வு ஒன்று

நீட்டிக்கப்படும் உயிர்வாழ்க்கை

காலையிலிருந்துவானொலிஅலறிக்கொண்டிருக்கிறது. மீண்டுமொருமுறை உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறதாம். தொலைக்காட்சியில் கூட அடிக்கடி காட்டினார்கள். சிரித்த முகத்துடன் தலைவர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள். தேவதைகள் ஆசீர்வதித்தன. தேவர்கள்பூமாரி பொழிந்தனர். வானத்திலிருந்து அசரீரியாய் வானொலி பெருங்குரலெடுத்து அலறியது. சமாதான முன்னெடுப்பாய் உயிர்வாழும் உரிமை எங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாம். இப்போதைக்கு உயிர்வாழ மட்டுமேஅனுமதி. படிப்படியாக வெளியே நடமாடவும் பிற செயற்பாடுகளுக்கும் அனுமதி கிடைக்கும், அக்கம் பக்கத்தில் பேசிக்கொண்டார்கள். இப்படியாக வானொலியும்தொலைக்காட்சியும் சேதி சொன்ன காலையொன்றில், பக்கத்து வீட்டண்ணன் சுடப்பட்டிறந்தான். "ஒருவேளை உயிர்வாழ்வதற்கானஅவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்." தன்னைத்தானேதேற்றிக்கொள்ளும் அவனது தந்தை!


ஈழநாதனைச் சந்தித்த அந்த 2006 நினைவில் 

யூன் 10, 2006, சனிக்கிழமை காலை 10.30 மணி

பெங்களூரிலிருந்து வரும் போது ஒரு நாள் சிங்கப்பூரின் தங்குவதாக முடிவெடுத்தேன். ஆசிய நாடுகள் பலவற்றிற்குச் சென்றாலும் சிங்கப்பூருக்கு இன்னும் செல்லவில்லை என்று வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. எனவே அந்த குறையும் இந்தப் பயணத்தோடு தீர்ந்தது.
சிங்கப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது ஈழநாதன். பெங்களுரில் வைத்து ஈழநாதனுக்கு மடல் ஒன்றைத் தட்டியதன் விளைவு அவரும் ஆவலோடு நான் தங்கியிருந்த Pan Pacific ஹோட்டலுக்கு வந்தார்.


நேராக அவர் என்னை அழைத்துப் போனது சிங்கப்பூர் நூலகத்துக்கு. அங்கு அருகில் உள்ள கலையரங்கில் சிங்கபூர் அரசின் அனுரசணையுடன் பல்லின மக்களின் கலைநிகழ்ச்சி வாரமாக அமைந்திருந்தது அது. சிங்கப்பூர் என்றால் வெறும் வர்த்தக நகரம் என்ற இமேஜை மாற்றும் அரசின் ஒரு கட்ட நடவடிக்கையே இந்தக் கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளும் ஊக்குவிப்புக்களும் என்றார் ஈழநாதன்.சிங்கப்பூர் நூலகம் சென்றபோது ஓவ்வொரு புத்தகப் பிரிவினையும், சினிமா சம்பந்தப்பட்ட வாடகைக்கைக்கு விடும் சீடிக்கள் பற்றியும் விரல் நுனியில் தகவல்களை வைத்துக்கொண்டே பேசிக்கொண்டு வந்தார். ஆளுக்கும் நூலகத்துக்கும் நல்ல பொருத்தம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்

சிராங்க்கூன் சாலை சென்று ஒரு உணவகத்தில் மீன், கணவாய், இறாலுடன் ஈழநாதன் உபயத்தில் (பெடியன் என் காசுப்பையைத் திறக்கவிட்டாத் தானே?) ஒரு வெட்டு வெட்டினோம். காலாற சிராங்கூன் சாலையை அளந்தவாறே புத்தகம், நாட்டு நடப்பு, வலையுலகம் என்று பேசித் தீர்த்தோம்.

முஸ்தபா சென்டர் சென்று சீ.டிக்களின் பிரிவுக்குள் சென்று ஒவ்வொரு சீ.டியாகத் துளாவினோம். நல்ல சீனத்திரைப்படங்களை ஈழநாதன் அடையாளம் காட்டினார். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா (மலையாளம்) வீ.சி.டியையும், அச்சுவின்டே அம்மா மலையாள இசை சீ.டி (இளையராஜாவுக்காக) நான் வாங்கவும் நம் சந்திப்பும் பிரியாவிடை கொடுத்து நிறைவேறியது. நிறைய வாசிப்பு மனிதனைப் பூரணப்படுத்தும் என்பதற்கு தன் இளவயதில் நல்ல இலக்கிய சிந்தையுள்ள ஈழநாதன் ஒரு உதாரணம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
Posted by கானா பிரபா at 8:31 PM 14 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, September 11, 2012

BBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்

பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பில் இரண்டரை தசாப்தங்களாக (1966 - 1991 ) இயங்கி வந்த சங்கரமுர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத நாயகர்களில் ஒருவர் ஷங்கர் அண்ணா என்பதைக் கடந்த தலைமுறை இன்னும் நன்றியோடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வானொலி ஊடகத்துறையில் தன் பங்களிப்பைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்.

இந்த வேளை பி.பி.சி சங்கரண்ணா குறித்த மறைவுச் செய்தியை பி.பி.சி தமிழோசை தளத்தில் இருந்து பகிர்வதோடு, அவரின் குரல் ஒலிப்பகிர்வையும், அகவை எழுபதை பி.பி.சி தமிழோசை கண்டபோது நான் கொடுத்திருந்த பகிர்வையும் மீள் இடுகையாகத் தருகின்றேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.

ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

தமிழோசையின் முன்னாள் துறைப் பொறுப்பாளரும் பிரபல ஒலிபரப்பாளருமான ஷங்கரன் சங்கரமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை லண்டன் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

அந்தக் கம்பீரமான குரலை தமிழோசையின் நீண்ட நாள் நேயர்கள் மறந்திருக்க முடியாது.

சுமார் இரண்டரை தசாப்தங்கள் தமிழோசை மூலமாக வானலைகளில் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்தும் தமிழோசையைக் கேட்டு வந்த அந்தக்கால நேயர்களை மயக்கிய அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான ஷங்கரன் சங்கரமூர்த்தி மறைந்துவிட்டார்.

கடந்த சில மாதங்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்த சங்கரமூர்த்தி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் சிறுநீரக மற்றும் இருதய நோயால் காலமானார். அவருக்கு வயது 82.

மறைந்த சங்கரமூர்த்தி, 1966லிருந்து 1991 வரை தமிழோசையின் பணியாற்றினார். அவர் பணியாற்றிய காலப் பகுதியில் தமிழோசை வாரமிருமுறை என்ற நிலையிலிருந்து வாரம் ஐந்து நாட்கள் ஒலிபரப்பு என்ற அளவுக்கு வளர்ந்தது.
தமிழோசையில் 1970கள் மற்றும் 80களில் பெரும்பாலும் சஞ்சிகை வடிவில் இருந்த நிகழ்ச்சி, சங்கரமூர்த்தியின் தமிழ்ப் புலமைக்கு ஒரு பெரிய களத்தைத் தோற்றுவித்துத் தந்தது.
ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்ட சங்கரமூர்த்தி, அந்தக் காலகட்டத்தில் ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்கள் பலவற்றையும், கிரேக்க மகாகவி ஹோமரின் இதிகாசங்களான இலியட், ஒடிசி போன்றவற்றையும், தமிழில் கவிதை நாடக வடிவிலேயே தந்து, அவை நேயர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

மற்றொரு பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் புகழ் பெற்ற நாடகமான “பிக்மேலியன்” என்ற நாடகத்தையும் ஷங்கர் தமிழில் மொழிபெயர்த்து, அதில் தமிழ் திரைப்பட நடிகை ராதிகா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர அவரே சொந்தமாக பல வானொலி நாடங்கங்களையும் இயற்றியிருக்கிறார்.

00000000000000000000000000000000000000000000000000000000
அகவை எழுபதில் பி.பி.சி தமிழோசை - மீள் இடுகை

"தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும் தான் எங்களுக்கு அப்போது வானொலிக் காந்திகள். பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக் காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காய நடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின் பின்னணியில் தோரணையில் ஆளாளுக்கு அரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்ததொன்று.

இன்றைக்கு உலகத்தில் தமிழன் பெருகிப் போயிருக்கும் இடமெல்லாம் ஒன்றோ, இரண்டோ பலதோ பத்தோ என்று 24 மணி நேர வானொலிகள் வியாபித்து விட்டன. ஆனால் வானொலி நிகழ்ச்சிகளின் தரமும், பகிர்வும் "பூசக் கொஞ்சம் சந்தனம் கிடைத்தால்" என்ற நிலையில் தான். ஆனால் ஒரு அரைமணி நேர நிகழ்ச்சியிலேயே நச்சென்று ஒரு நாளில் புரட்டிப்போட்ட சமாச்சாரங்களை அடக்கி வானொலி ரசிகர் மனதில் ஆள்வதென்பது அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல எழுபது ஆண்டுகள் என்பது தமிழ் ஊடகத்துறையில் தமிழோசையின் தவிர்க்கமுடியாத ஆளுமை எனலாம். தானும் பயணித்துக் கூடவே உலக வானொலிகள் பலவற்றிலும் தவிர்க்கமுடியாது இருக்கும் அங்கமாக மாறிவிட்ட BBC தமிழோசையின் எழுபதாவது அகவையில் ஒரு சிறப்பு வானொலிப் படையலையும் எழுத்து ஊடகப் பகிர்வையும் கொடுக்க விழைந்தேன்.

அகவை எழுபதில் இந்த ஆண்டு தடம்பதிக்கும் BBC தமிழோசை குறித்த சிறப்பு வானொலிப் பகிர்வை நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கிய சிறப்புப் பகிர்வு

ஒலிவடிவில்

வணக்கம், இலண்டனில் இருந்து விமல் சொக்கநாதன் பேசுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் மேற்குலக நாடுகளில் குடியேற ஆரம்பித்த காலப்பகுதி 1980களின் நடுப்பகுதி என்று சொல்லலாம். ஆனாலும் அதற்குப் பலவருடங்களுக்கு முன்னரே உலகில் தமிழ் வானொலிகள் பல, அமெரிக்காவில் இருந்தும் பிலிப்பீன்ஸ் இல் இருந்தும் இங்கு பிரிட்டனில் இருந்தும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தமிழ் வானொலி, சீனாவின் பீக்கிங் தமிழ் வானொலி, பிலிப்பீன்ஸின் மணிலா தமிழ் வானொலி ஆகியன இப்போது ஒலிபரப்பைத் தொடராவிட்டாலும் BBC என்ற எழுபது வயதுத் தமிழ் மூதாட்டி மட்டும் 1941 இல் இருந்து இன்றுவரை லண்டனில் இருந்து தமிழ் முழக்கம் செய்துகொண்டிருக்கிறாள். 1985 இற்குப் பிறகு தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் இலட்சக்கணக்கில் குடியேற ஆரம்பித்தார்கள். குடியேறிய நாடுகளில் எல்லாம் ஆலயங்களும் தமிழ்க்கடைகளும் நிறுவப்பட்டமை போல புதிய பல வானொலி நிலையங்களும் புலம்பெயர் தமிழர்களால் நிறுவப்பட்டன. இத்தனை புதிய தமிழ் வானொலிகளின் இளம் ஒலிபரப்பாளர்களும் இலண்டன் BBC தமிழோசையின் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் தமிழோசையின் தனித்துவத்திற்கு ஒரு சான்று என்று சொல்லலாம். இரண்டாவது உலகப்போர் காலத்தில் தனது காலணித்துவ நாடுகளுக்கு அவரவர் மொழியிலேயே உலகச் செய்திகளை வழங்க வேண்டும், நாடு நாட்டுடன் நல்லுறவு பேசட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பிரிட்டிஷ் அரசாங்கம் 1940 களில் ஆரம்பித்தது BBC World Service பன்மொழி உலக ஒலிபரப்புச் சேவை. இதில் ஒன்றான தமிழ்மொழி ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்தது. வாரம் ஒரு தடவை வியாழக்கிழமைகளில் மட்டும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழோசை தினசரி ஒலிபரப்பாக விரிவுபடுத்தப்பட்ட போது நிரந்தரத் தயாரிப்பாளர் பதவிக்கு சங்கர் சங்கரமூர்த்தி என்ற ஒரு துடிப்பான அறிவிப்பாளர் தமிழ் நாடு அகில இந்திய வானொலியில் இருந்து கொண்டுவரப்பட்டுப் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆங்கிலத்தில் எழுதப்படும் BBC செய்திப்பிரதிகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அவர் பயன்படுத்திய அழகு தமிழ்ச் சொற்கள் அவற்றை வான் அலைகளில் படிக்கும் போது கேட்கும் அவர் காட்டும் நெளிவு சுழிவுகள் செய்திகள் ஒரு திரைப்படத்தைப் போல கேட்போர் மனதைப் பதிய வைத்தன. இதனால் தமிழோசையை விரும்பிக் கேட்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் நிதியுதவியோடு நடத்தப்படும் BBC பன்மொழிச் சேவையில் ஒன்றான தமிழோசையை நேயர்கள் தெளிவாகக் கேட்கிறார்களா, அந்த நிகழ்ச்சியில் எவற்றையெல்லாம் ரசிக்கிறார்கள் போன்ற தகவல்களை BBC நிர்வாக அதிகாரிகள் நேயர்கள் அனுப்பும் கடிதங்களின் வாயிலாக அறிந்துகொள்கிறார்கள். தமிழ்க்கடிதங்களை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுப்பதற்கு Listener research department என்ற ஒரு பிரிவு இயங்கி வந்தது. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைமேதைகள் லண்டனுக்கு வரும்போது அவர்களை வெறுமனே பேட்டி மட்டும் கண்டு அனுப்பிவிடாமல் தானே சில பாடல்களை எழுதி அவர்களைக் கொண்டு பாடவைத்து ஒலிபரப்புவார் கவிஞரான சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள். "தேம்ஸ் நதிக்கரையில் இருந்து தேடிவரும் ஓசை தமிழோசை", "மகாராணி மெச்சும் ஒரு மாட்டுப்பொண்ணு டயானாக்கண்ணு" போன்ற பாடல்களை இவர் எழுதி சீர்காழி கோவிந்தராஜனும் அவர் புதல்வர் சிவசிதம்பரமும் எங்கள் BBC கலையகத்தில் பாடி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்கள். தமிழோசைத் தலைவர் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் தமிழோசைத் தலைவர் , தயாரிப்பாளர் என்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு.மகாதேவன், திருமதி ஆனந்தி.சூரியப்பிரகாசம், திரு சம்பத் குமார் ஆகியோரும் தமிழோசையின் தலைமைப்பதவியில் பணியாற்றினார்கள். இப்போது இந்தப்பதவியில் இருப்பவர் திருமலை மணிவண்ணன் அவர்கள். செய்திகளை முந்தித் தருவது, செய்திகளை நடுநிலையாக வழங்குவது , உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வழங்க மறுப்பது இவை BBC தமிழோசையின் அசைக்க முடியாத தூண்கள். உலகத்தமிழ் ஒலிபரப்புக்களில் BBC தமிழோசை ஒரு சிகரம் என்று மதிக்கப்படுவதற்கும் எழுபது ஆண்டுகளாக அது வானலைகளில் நிலைத்து நிற்பதற்குமான ரகசியம் இது ஒன்று தான். BBC தமிழோசை வழங்கிய சிறப்புப் பெட்டகப் பகிர்வுதமிழோசைக்கு வயது 70 BBC தமிழோசையில் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்த அமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வி இருந்து ஒலிப்பகிர்வாக வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அறிவிப்பாளர் அமரர் "சுந்தா" வீ.சுந்தரலிங்கம் அவர்களின் மன ஓசையில் இருந்து லண்டனில் West Minister பாராளுமன்றத்திலே சில மாதங்கள் பயிற்சி பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது தமிழோசையுடன் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சங்கரண்ணாவைச் சந்தித்தபோது "நீங்கள் ஒலிபரப்பாளராக இருந்தீர்கள் எவ்வளவோ நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கின்றீர்கள். ஆகவே நான் இங்கு இரண்டு மூன்று நாடகங்களை வானொலிக்குத் தயாரிக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். நீங்கள் அதில் பங்கு கொண்டால் உதவியாக இருக்கும் வருவீர்களா" என்று கேட்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு BBC தமிழோசையில் பங்குகொண்டேன். King Lear என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும் Tempest என்ற நாடகத்தையும் சங்கர் தமிழில் தயாரித்தார், அதுவும் கவிதையாக. அதிலே முக்கிய பாத்திரங்களைக் கொடுத்து என்னைக் கெளரவப்படுத்தினார். BBC தமிழோசையின் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் ஒத்தல்லோ நாடகத்தைத் தமிழில் தயாரித்து அதை சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்களில் ஒருவர் பிரபல நாடக, திரைப்படக் கலைஞர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து விலகி நான் சென்னை சென்று தங்கியிருந்த காலத்தில் அப்போது BBC நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த சங்கரமூர்த்தி அவர்கள் கண்ணிலே சத்திரசிகிச்சை செய்ய வேண்டி விடுமுறையில் சென்ற போது BBC தமிழோசையில் ஒரு வருடமோ ஒன்றரை வருடமோ நிகழ்ச்சித்தயாரிப்பாளராக வரவேண்டும் என்ற அழைப்பின் பேரில் நான் லண்டன் சென்றேன். அப்பொழுது தமிழோசை நேயர்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி BBC ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. Meet the listeners என்பதே அதன் பெயர். சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலெல்லாம் தமிழோசை நேயர்களைச் சந்திப்பதற்காகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். சங்கரும் நானும் BBCஐச் சேர்ந்த Judy Marshall, Heather Bond, Kailash Pudhwar போன்றோரும் ஒவ்வொரு ஊராகச் சென்று தமிழோசை நேயர்களைச் சந்தித்தோம். நேயர்களின் அன்பு வெள்ளத்தில் BBC குடும்பமே திக்குமுக்காடிப் போனோம். BBC அதிகாரிகளுக்கு இதன் பின்னர் தான் தமிழோசை நேயர்களின் ஊக்கமும் உற்சாகமும் புரிந்தது. இதன் பயனாக நிகழ்ச்சி நேரம் 15 நிமிடத்திலிருந்து அரைமணி நேரமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்த தமிழோசை நிகழ்ச்சி வாரம் 5 நாட்களுக்கு மாற்றப்பட்டது. "தமிழோசை"என்ற தலைப்பைக் கேட்கும் பொழுதெல்லாம் தமிழ் ஒலிபரப்புக்கு இந்தப் பெயரைச் சூட்டிய சோ.சிவபாதசுந்தரனாரை வியக்காமல் இருக்க முடியாது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று பாரதி எப்படித் தீர்க்க தரிசனத்துடன் பாடினானோ என்று நினைத்துக் கொள்வேன்! இப்படியாகத் தன் மன ஓசையில் பகிர்ந்து கொண்டார் அமரர் சுந்தா.வீ.சுந்தரலிங்கம் அவர்கள். எத்தனையோ ஜாம்பவான்களால் கட்டியிழுத்த இந்தத் தமிழோசை என்னும் தேர் இன்னும் பல்லாண்டுகாலம் ஓடித் தமிழ்ப்பணியாற்ற வாழ்த்தி இப்பதிவை நிறைவாக்குகிறேன். இந்தத் தொகுப்புக்கு உதவிய ஊடகர் திரு விமல் சொக்கநாதன் அவர்கள் ஊடகர் அமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் ஆகியோருக்கு நன்றி
Posted by கானா பிரபா at 12:10 PM 4 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, August 22, 2012

சென்னை என்னை வா வா என்றது!

ஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது "என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க" என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான வாழ்வியல் சூழலை உருவாக்க இந்தக் கற்பனாலோகம் வழிவகுத்தது. சென்னை வானொலி நிலையமும், விவித்பாரதியும் என் பால்யம் கடந்த பதின்ம வயதுக்காலங்களில் வழித்துணையாய் வந்தன.

தாயகத்தில் கடும் யுத்தம் நடந்த சூழலில் ஏழு ஆண்டுகள் ஊர்ப்பக்கமும் தலைகாட்ட முடியவில்லை. என்னைப் போல புலம்பெயர் தமிழர்களுக்கு அப்போது ஊருக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு வந்தால் சென்னைக்கு ஒரு எட்டு போய் நாலு படமும், தி.நகரில் உடுப்பும் வாங்கி வந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததையும் சொல்லிவைக்கவேண்டும்.

அதுநாள் வரை தமிழக வார சஞ்சிகைகளின் வழியாகவும், பல்வேறு கதைகளினூடாகவும் கற்பனையில் சிருஷ்டித்திருந்த சென்னை மாநகருக்குச் செல்லும் வாய்ப்பு, என் புலம்பெயர் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கழித்துக் கிட்டியது. 2002 ஆம் ஆண்டு அப்போது நான் பணிபுரிந்த Oracle நிறுவனத்தின் பணி நிமித்தம் பெங்களூர் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இன்றைய சூழல் போல வலைப்பதிவு நண்பர்களோ அல்லது ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக வட்டங்களோ அவ்வளவு இல்லாத காலம். சென்னையில் யாரைத் தெரியும் என்று கேட்டால் முதற்பந்தியில் சொன்ன, தமிழக வார சஞ்சிகைகளில் வந்த முகம் தெரியாத எழுத்தாளர்களைத் தான் சொல்லலாம், அவர்களுக்கு என்னைத் தெரியாதது வேறு விஷயம் ;-)
ஒரு வார இறுதியை சென்னைக்குச் சென்று பார்த்து வரலாமே என்று நினைத்து, பெங்களூரில் பணிபுரிந்த சக நண்பர்களிடம் விசாரித்து சதாப்தி எக்ஸ்பிரஸில் போகலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தேன்.
அந்தநாளும் வந்தது. டாக்ஸி மூலம் ரயில் நிலையம் வந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் வரும் மேடையைத் தேடிப் பிடித்து நிற்கிறேன். பக்கமெல்லாம் தமிழ் வாடை. எல்லாம் பார்த்து வந்தாலும் உள்ளூரப் பயம் இந்த மேடையில் தான் சதாப்தி வருமா அல்லது சொதப்பி விடுமா என்று நினைத்து அருகில் தன் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு ஐம்பதைத் தொடும் குடும்பஸ்தரிடம் சென்று தமிழில் கேட்கிறேன்
"இந்த ப்ளாட்பாரத்தில் தான் சென்னை ரெயில் நிக்குமாங்க?"
"ஆமாங்க" என்றவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு "ஐ கேன் ஸ்பீக் இங்கிலீஷ் டூ"
என்றார். (என்னை வேற்றுலகவாசியாக எண்ணியிருப்பாரோ)

சதாப்தியும் வந்தது. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரயில் பயணம். ஏற்கனவே தமிழக சஞ்சிகைகளில் ரயில்களில் நிலவும் குளறுபடிகளை எழுதியதால் உள்ளூரப் பயத்துடன் ஏறினால், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. சாப்பாடு எல்லாம் கொடுத்து உபசரித்தது புதுமையாக இருந்தது. எனக்குப்பக்கத்தில் ஒரு சிங்களவர். புட்டபர்த்தி போய்விட்டுச் சென்னைக்குப் போகிறாராம். இரவு எட்டுமணி என்று நினைக்கிறேன் சென்னை சென்ட்ரலை ரயில் இன்னும் சில நிமிடங்களில் தொட்டுவிடும் என்று ஒரு அறிவிப்பு ஒலிக்கிறது. யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.

சென்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு வாடகை டாக்சி மூலம் மாரிஸ் ஓட்டலுக்குப் போகிறேன். "சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலுக்குப் போ" என்று என் அண்ணன் முன்னரேயே சொல்லிவைத்தார். மாரிஸ் ஓட்டல் உரிமையாளர் முன்னர் இலங்கையில் தான் தொழில்பார்த்தவர். எங்கள் அப்பப்பாவுக்கு அந்தக் காலத்தில் நன்கு தெரிந்தவர். அந்தப் பழக்கத்தில் எங்கள் ஊரவர்கள் சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலில் தான் தங்குவார்கள். சிலர் மாதக் கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.

அடுத்த இரண்டு நாட்கள் சென்னை உலாத்தல். இந்த உலாத்தலில் அதுநாள் வரை கற்பனையில் உலாவிய இடங்களின் பெயர்களை ஞாபகம் வைத்து தியேட்டர்களையும் விகடன், குமுதம், அலுவலகங்கள் அமைந்த இடங்களையும் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்களையும், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற புத்தகசாலைகளையும், தி.நகர் போன்ற சனத்திரள் மிகு கடை வீதிகளையும், சந்து பொந்துக்களில் இருந்த சிறுபுத்தக நிலையங்கள் என்று ஒவ்வொன்றாத் தேடித் தேடிப் பார்த்துக் கண்களில் பதிந்து கொண்டேன். மெரீனா சென்று காலாற நடந்தேன். கபாலீஸ்வரரைத் தரிசித்தேன். தி.நகர் முருகேசன் தெருவுக்குப் போய் இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு முன் பழியாய்க் கிடந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, பின் காவலாளிகளால் வஞ்சிக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். சுள்ளென்ற வெய்யில் என்னைப் பதம் பார்த்தாலும் கிடைத்த இரண்டு நாட்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு இடமாக ஆட்டோவில் அலைந்தேன், தயார் செய்து அடுக்கிவைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் உருசிக்கும் ஆவல் போல். பழக்கப்பட்ட தெருக்கள் போல அளைந்தேன், எல்லாமே புத்தகங்களில் படித்த அனுபவங்கள் இப்போது கண்ணுக்கு முன்னால்.
தேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.

சாந்தி தியேட்டர் பக்கமாக ஒரு குளிர்பானக் கடை. ஒரு கொக்கோ கோலா போத்தலை வாங்கிவிட்டு அந்த இடத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு, நான் சவாரி செய்த அதே ஆட்டோவில் ஏறி சில எட்டுப் பயணித்திருப்போம். பின்னால் ஒருவர் ஓடிவந்தார் "யோவ் யோவ்" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. என்னதான் துணிந்து தனியனாக ஊர் சுற்ற வந்தாலும் யாராவது ஏமாற்றுக்காரரிடம் வசமாக மாட்டிவிடுவேனோ, அது இந்த ஆளோ என்று பயம் கவ்வ, "ஆட்டோவ நிறுத்துங்க, யாரோ கூப்பிடுறாங்க" என்றேன்.
துரத்தி வந்தவர் "போத்தலைக் குடுத்துட்டுப் போங்க தம்பி" என்றார்.
அப்போது தான் சோடாப்போத்தலைத் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை ஞாபகத்தில் வந்து அசட்டுச் சிரிப்புடன்
"இந்தாங்கோ" என்றேன்
"குடிச்சுட்டுக் குடுங்க தம்பி, சிலோனா?"
"ஆமாங்க"

பின்னாளில் இரண்டு முறை நீண்ட விடுமுறையில் சென்னைக்குப் பயணப்பட்டாலும் இனிப் பயணப்படப்போகும் காலத்தையும் சேர்த்தே சொல்கிறேன் சென்னைக்கு வரும் போது என் தாய்வீட்டுக்கு வரும் உணர்வு எப்போதும்.

சென்னை தின வாழ்த்துக்கள்

2004 ஆம் ஆண்டில் நான் சென்னை வந்தபோது எடுத்த சில படங்கள்

தாஜ் கன்னிமாராவில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் நாகேஷ் ஐச் சந்தித்தேன். ரோட்டரி க்ளப் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது.

ஏவிஎம் ஸ்டூடியோ சென்றபோது பேரழகன் படப்பூஜையில் கலந்து கொண்டேன். படத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு

கவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகத்தில்

கவிஞர் அறிவுமதி அவர்களை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது

பிரபலமான கல்யாண மண்டபம் ஒன்று (பெயர் சட்டென்று மறந்து விட்டது) எட்டிப்பார்த்தேன், திருமணம் ஒன்று
Posted by கானா பிரபா at 2:19 PM 34 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, July 24, 2012

என்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்

சிட்னியில் இருந்து சிங்கை நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் ஏறுகிறேன். இருக்கையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமர்ந்ததும் முதல்வேலையாகத் தேடியது அந்த சிங்க்ப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் காண்பிக்கவிருக்கும் படங்களின் பட்டியல். தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த மொக்கைப்படங்களான வேங்கை, மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு என்று விபரமிடப்பட்டிருந்தது. அலுத்துச் சலித்து மேலும் ஏதாவது தேறுகிறதா என்று பக்கங்களைப் புரட்டினேன். Pancham Unmixed என்ற தலைப்பில் இசைமைப்பாளர் ஆர்.டி.பர்மன் குறித்த விபரணச்சித்திரம் ஒன்று இருப்பதாகப் போடப்படிருந்து. சில விஷயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டால் போல எதேச்சையாக நிகழ்வது போலத்தான் இதுவும். காரணம் என் பயணத்துக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஆர்.டி.பர்மன் இசையில் இறுதியாக வெளியான 1942 A Love story படத்தின் பாடலான குச் நா கஹோ பாடலை ஏனோ கேட்கவேண்டும் என்று மனம் உந்தித் தள்ள சில பத்துத் தடவைகள் மீண்டும் மீண்டும் கேட்டிருப்பேன், பல வருஷங்களுக்குப் பின் கேட்கும் போது ஹாஸ்டலில் தங்கியிருக்கும் பிள்ளை வீட்டுக்கு வரும்போது ஆசை தீர உச்சி மோந்து கொண்டாடும் தாய்போல உணர்வு.

1995 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து பல்கலைக்கழகப் படிப்பில் நாட்களை நெட்டித் தள்ளியவேளை, இப்போது போல அப்போதெல்லாம் இணைய வானொலிகள்,நண்பர்கள் வாசனையே இல்லாத வேளை ஒரு வட இந்திய மளிகைக்கடையில் சரக்குப் பொட்டலங்களுக்கு மேல் தூசிபடர்ந்திருந்த பொம்மையாக 1942 A Love story படத்தின் ஒலிநாடாப்பேழையைக் கண்டு, (கையில் அப்போது காசு புழங்காத நேரம் வேறு) அந்தப் படம் பற்றி அப்போது விகடனில் வந்த கவர் ஸ்டோரி கொடுத்த பின்னணியால் மட்டுமே வாங்கிக் கேட்டிருந்தேன். அப்போது தான் ஆர்.டி.பர்மன் என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருப்பதே தெரிந்திருந்தது எனக்கு. ஊரில் இருக்கும் போது இலங்கை வானொலி வர்த்தக சேவையில் "தம் மரே தம்" பாடலை இவர் தான் இசைத்திருந்தார் என்று தெரியாது கேட்டிருந்தது வேறு விஷயம். அப்போதெல்லாம் எங்களை ஆக்கிரமித்திருந்தது இளையராஜா என்ற மந்திரம். நாளாக இளையராஜாவை என்ற எல்லைக்கு அப்பாலும் இசை மேதைகள் இருக்கின்றார்கள் என்று புரியவைத்தது 1942 A Love story.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மெல்ல அந்தரத்தில் மிதக்க ஆரம்பிக்கிறது. Pancham Unmixed என்ற ஆர்.டி.பர்மன் குறித்த விவரணச் சித்திரத்துக்குள் என்னை அர்ப்பணிக்கின்றேன். திரையிசையில் ஒரு சகாப்தமாக விளங்கிய கலைஞனுக்கு ஆத்மார்த்தமாகக் கொடுத்த உணர்வுகளின் கலவை என்றே இதைச் சொல்லவேண்டும். இந்தப் படத்தை இயக்கியிருந்தவர் Brahamanand Singh. எண்ணப்பரிமாறல்களைப் பதிவாக்கும் போது அது கொஞ்சம் பிசகினாலும் அசட்டுத்தனமான பாராட்டுக் குவியலாக மாறிவிடும் அபாயம் இருக்கும், ஆனால் இந்தப் படத்தில் ஆர்.டி.பர்மனைப் பற்றி வந்து பேசும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் அவரோடு பயணித்தவர்கள், அல்லது அவரின் இசையால் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். எனவே எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி அவரின் வாழ்க்கையின் எல்லாத் திசைகளையும் தொட்டுச் சொல்கின்றது இது. காலத்தினால் செய்த கெளரவமாக இந்த விவரணச் சித்திரத்துக்கு தேசிய விருதும் கிட்டிருப்பது உபரித்தகவல்.

Pancham da என்று செல்லமாக அழைக்கபட்ட ஆர்.டி.பர்மன் ஏற்கனவே சிகரத்தில் இருந்த எஸ்.டி.பர்மன் என்ற இசை ஆளுமையின் மகன். எனவே தந்தையைக் கடந்து தன்னை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு. அதைச் செய்தாரா என்றால் 1960 இலிருந்து கடந்த முப்பது ஆண்டுகளில் முதல் இருபது ஆண்டுகள் தன்னை நிரூபித்திருக்கின்றார். திரையிசையில் நுணுக்கமான சங்கதிகளைப் போடுவதில் வல்லவர் என்றவாறே அவர் காட்டிய சாகித்யங்களை ஒருவர் ஆசையோடு ஒப்புவிக்கிறார். இசையில் எந்தவொரு வட்டத்தையும் போட்டுவைக்காதது போலவே அவரின் வாழ்வும் அமைந்து விட்டதை நெருக்கமான நண்பர்கள் பகிரும் போது அவரின் ஆத்மார்த்தமான மனைவி இசை ஒன்றுதான் என்ற முடிவை எடுக்கவைக்கின்றது. அவருடைய இசைக்குழுவில் பணியாற்றியவர்களில் இருந்து இன்றைக்கு முன்னணி இசைமைப்பாளர்களான விஷால் பரத்வாஜ், சங்கர் மகாதேவன் போன்றோர், ஆர்.டி.பர்மன் திரையிசையில் காட்டிய தனித்துவத்தை ஒரு ஆய்வுப்பாடமாக நடத்திக் காட்டுகிறார்கள்.


ஆர்.டி.பர்மனின் முதல் திருமணமும் ஒரு குட்டி சினிமா போலத் தான். ஆர்.டி.பர்மனோடு சினிமா பார்க்கிறேன் பார் என்று தன் நண்பிகளோடு பந்தயம் கட்டி டார்ஜிலிங்கில் அவரைத் தன் வலையில் விழ வைத்த பணக்காரி ரீட்டா பட்டேல், பந்தயம் முடிந்தபின் கழன்றுவிட, தன் நண்பர்களின் உதவியோடு தொலைபேசி விபரக்கொத்தில் ரீட்டாவின் தொலைபேசியைத் தேடிக் கண்டுபிடித்துத் தன் காதலைப் பகிர்ந்து மணமும் முடித்துக் கொண்டார். ஆனால் இசையே வாழ்வாகிப்போனவருக்கு இடையில் வந்த சொந்தம் ஒட்டவில்லை. பின்னாளில் ஆஷா போன்ஸ்லே என்ற பெரும் பாடகியைத் தன் வாழ்நாள் துணையாக்கிக் கொண்டார். இந்த விபரணப்படம் சொல்லாத ஒரு சேதியை நான் பல வருஷங்களுக்கு முன்னர் படித்திருக்கின்றேன். அது என்னவென்றால், ஆஷா போன்ஸ்லேவின் முதல் கணவர் ஹேமந்த் போன்ஸ்லே என்ற பெயரோடு ஒட்டிருயிருந்த அந்தப் பெயரை இறுதிவரை அப்படியே வைத்திருக்கச் சொன்னாராம் ஆர்.டி.பர்மன்.

இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன், பாடகர் கிஷோர்குமார், நடிகர் ராஜேஷ்கண்ணா இந்த மூவரும் சேர்ந்தால் வெற்றி வெற்றி வெற்றிதான் என்றதொரு சூழல் எழுபதுகளில் இருந்தது. கலைத்துறையில் எதிர்பாராத ஏற்றம் வருவதும் பின்னர் திறமை என்ற ஏணியால் மேலே மேலே உயரப்போவதும், திடீரென்று எதிர்பாராத சறுக்கல் வருவதும் வாழ்வியல் நியதி. அந்தச் சுற்றோட்டத்தில் இருந்தும் ஆர்.டி.பர்மனால் விலகமுடியவில்லை. எண்பதுகளிலே புதிய அலை அடிக்கிறது, அதுவரை உயரத்தில் இருந்த ஆர்.டி.பர்மனின் 17 படங்கள் வரை தொடர்ச்சியாக வர்த்தகச் சூழலில் நஷ்டப்படுகின்றன. அதுவரை உச்சாணிக்கொம்பில் வைத்து அழகு பார்த்தவர்களாலேயே வேண்டப் பொருளாகச் சீண்டாத நிலை இவரின் இசைக்கு.

ஆனால் அவர் தன் சுயத்தை இழக்கத் தயாராகவில்லை. பிரபல இயக்குனர் சுபாஷ் கை, இவரை ராம் லக்கன் படத்துக்காக ஒப்பந்தம் செய்துவிட்டு, லஷ்மிகாந்த் பியாரிலால் இரட்டையர்களிடம் பின்னர் கைமாற்றிவிட்டார். சுபாஷ் கை ஒரு மரியாதை நிமித்தமாவது என்னிடம் இதைச் சொல்லவில்லை என்று மனம் நொந்து பிலிம்பேர் பத்திரிகைக்குப் பின்னாளில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

"I am never going to let people who are close to me, destroying me because I am not commercially viable" - ஆர்.டி.பர்மன்
இயக்குனர் விது வினோத் சோப்ராவின் பரிண்டா படம் 1989 ஆம் ஆண்டில் தயாராகும் போது ஆர்.டி.பர்மன் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய்ப்படுகிறார். பாடல் இசை உருவாக்க இருக்கும் வேளை ஏதோவொரு காரணத்தால் திடீரென்று நாயகன் அனில் கபூர் நடிக்கமாட்டேன் என்று முரண்டு பிடிக்க, படத்தையே கிடப்பில் போடும் சூழல். விது வினோத் சோப்ரா, ஆர்.டி.பர்மனுக்குத் தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை எடுக்கும் முடிவைக் கைவிடுகின்றேன் என்று விட்டு வைக்கிறார். அடுத்த நாள் ஆர்.டி.பர்மனிடம் இருந்து விது வினோத் சோப்ராவுக்கு அழைப்பு. "ஒரு பாடலை கம்போஸ் பண்ணி வைத்திருக்கிறேன் ஸ்டூடியோ வரை வந்து போகமுடியுமா"
எனவும், எந்தப் படத்துக்காக என்று விது வினோத் சோப்ரா வினவ "பரிண்டா படத்துக்குத் தான்" என்கிறார் ஆர்.டி.பர்மன். "எனக்கு மனம் சரியில்லை இப்போது அதைக் கேட்கும் சூழலில் நான் இல்லை"என்கிறார் விது வினோத் சோப்ரா. "இல்லை நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்" என்று வற்புறுத்தித் தான் கம்போஸ் பண்ணிய பாடலைக் கேட்க வைக்கிறார். அதுதான் ஆர்.டி.பர்மன்.
பின்னர் அந்தப் படம் எடுத்து முடிக்கப்பட்டது.

1942 A Love story படத்தை 1994 ஆம் ஆண்டில் விது வினோத் சேப்ரா எடுக்கமுடிவெடுக்கிறார். ஆர்.டி.பர்மன் இசையமைத்தால் எங்களுக்கு வேண்டாம் என்று ஆடியோ கம்பனிகளே பகிரங்கமாக இவருக்குச் சொல்லிவிட்ட சூழலில் அவர்களுக்குச் சொல்லாமலேயே ஆர்.டி.பர்மனை ஒப்பந்தம் செய்து ஒருநாள் பாடல் கம்போஸ் பண்ண ஆரம்பிக்கும் நேரம்.
ஆர்.டி.பர்மன் ஒரு மெட்டை வேகமெடுத்துப் பாடிக்காட்டுகிறார், கூடவே தபேலா போன்ற பக்கவாத்தியங்கள் சொல்லிவைத்தாற் போல முழங்குகின்றன. எல்லாம் முடிந்த பின் விது வினோத் சோப்ராவின் முகத்தைப் பார்க்கிறார். எந்தவிதச் சலனமும் இல்லை.
"எப்படி இருக்கு பாட்டு?"
"குப்பை, படு குப்பை" என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்லுகிறார் விது வினோத் சோப்ரா.
அறையில் இருந்த ஒவ்வொரு இசைக்கலைஞர்களும் மெல்ல மெல்ல வெளியேறுகிறார்கள்.
விட்டு மேலே இருக்கும் எஸ்.டி.பர்மன் படத்தைக் காட்டி "I am looking for him",
"நான் உங்களுக்குப் பிச்சை போடுவதற்காக இந்தப் படவாய்ப்பைத் தரவில்லை, மேலே படத்தில் இருப்பவரின் இசை ஆளுமைக்கு நீங்கள் சளைத்தவரில்லை ஆனால் நீங்கள் இப்போது கொடுத்தது முடிவுற்ற இசையின் முற்றுப்புள்ளி இப்படியான ஆர்.டி.பர்மன் எனக்குத் தேவையில்லை" என்று கோபமாகப் பேசுகிறார் விது வினோத் சோப்ரா.

"நான் இந்தப் படத்தில் இசைமைக்கிறேனா" மெல்லக் கேட்கிறார் ஆர்.டி.பர்மன்.

"எனக்கு இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சுத் தேவையில்லை, எனக்குத் தேவை நீங்கள் கொடுக்கவேண்டிய இசை, அதைக் கொடுங்கள்"

இரண்டு வாரம் கழிகிறது. மீண்டும் ஆர்.டி.பர்மன், விது வினோத் சோப்ரா சந்திக்கிறார்கள். மீண்டும் அதே இசைக்குழுவினரோடு தன் ஆர்மோனியத்தை எடுத்து பெங்காலி இசைவடிவத்தை முதலடியாகக் கொடுக்கிறார் அது பாடலாகப் பரிணமிக்கிறது. அதுதான் இந்தப் பாட்டு "குச் நா கஹோ"

அந்தப் பாடலோடு 1942 A Love story படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாகப் பதியப்பட்டுப் பாடல்கள் வெளியாகின்றன. பட்டிதொட்டியெங்கும் அந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் மீண்டும் ஆர்.டி.பர்மனை உயிர்ப்பிக்கின்றன. 1942 A Love story படக்குழுவே அவருக்காக ஜனவரி 1, 1994 பிறக்கும் கணத்தில் ஒரு ஸ்பெஷல் பாராட்டு விழாவை நடத்துகிறார்கள். அதில் வரும் "ஏக்கு லடுக்கிக்கே" பாடல் ஒலிபரப்பாகும் வேளை அவர் தன் காரை நிறுத்திவிட்டுக் கம்பீரமாக அரங்கில் நுழைகின்றார். January 4, 1994 அவர் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றார், கடைசி உயிர்ப்பில் தன்னை நிலை நிறுத்திய திருப்தியில். ஒரு மணி நேரம் 53 நிமிடங்கள் ஓடிய அந்தப் படத்தை முழுதும் பார்த்தபோது உண்மையில் உணர்ச்சிவசப்பட்டுக் கலங்கினேன். இதை வெறும் வார்த்தை ஜாலங்களுக்காகப் நான் பகிரவில்லை. இதை நீங்களும் ஒருமுறை பார்த்தால் அதே உணர்வில் இருப்பீர்கள். இந்தப் படத்தை இணையத்தில் பார்க்கக் கிடைக்கும் தொடுப்பு
இன்று வழக்கமாக இசைத்தட்டு வாங்கும் கடைக்குப் போகிறேன். ஆர்.டி.பர்மனின் இசைத் தட்டு ஒன்று கண்ணில் வெட்டெனப்படுகின்றது. ஆசையோடு உறை பிரித்து என் காரின் இறுவட்டுக்கருவியில் இசைத்தட்டைச் செருகுகின்றேன். Ek Ladki Ko Dekha To Aisa Laga நெஞ்சை நிறைக்கிறது.
Posted by கானா பிரபா at 10:18 PM 12 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ▼  2012 (16)
    • ▼  December 2012 (2)
      • வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு
      • இறுதி யுத்தத்தின் பின் "இனி அவன்" தமிழ் பேசும் திர...
    • ►  November 2012 (1)
      • யாழ்ப்பாணம் போற பஸ்
    • ►  October 2012 (1)
      • ஈழநாதன் இனி வரமாட்டாராம் :-(
    • ►  September 2012 (1)
      • BBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்
    • ►  August 2012 (1)
      • சென்னை என்னை வா வா என்றது!
    • ►  July 2012 (1)
      • என்னை உயரே பறக்க வைத்த ஆர்.டி.பர்மன்
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes