வலைப்பதிவு உலகிற்கு வந்த சூழலில் அவ்வப்போது பார்த்த உலகப் படங்களை நம் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பல பதிவுகளைக் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில் உலக சினிமா எழுதினால் தான் வலைப்பதிவாளர் என்ற ரீதியில் கும்பல் கும்பலாகப் பதிவர்கள் ஒரு "வழி" பண்ணியபோது பாவம் வாசக உலகம் என்று ஒதுங்கிவிட்டேன். அண்மையில்
நான் பார்த்த பிரெஞ்சுப் படம் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
"With Love... from the Age of Reason" என்ற அந்தப் படம் Sophie Marceau என்ற 45 வயதான நடிகையை நாயகியாக்கிப் படம் முழுதுமே அவரையே மையப்படுத்தி நகர்கின்றது.
சதா வேலை வேலை என்று அலையும் ஒரு பெரும் தொழிலதிபர் Margaret. இவரது நாற்பதாவது வயதில் ஒரு கடிதக் குவியல் வந்து சேர்கிறது பரிசாக. அந்தக் கடிதங்கள் அவரே தன் ஏழாவது வயதில் எழுதி வைத்தவை தான்.
என் வாழ்க்கையில் எப்படியெல்லாம் என் தெரிவுகள் இருக்கவேண்டும் என்று விதவிதமாக எழுதி வைத்த அந்த கடித அட்டைகளை வேண்டா வெறுப்பாகத் தான் படிக்க ஆரம்பிக்கிறாள். தன் வாழ்வில் எப்படியெல்லாம் மாறுபட்ட முடிவுகளை எடுக்க நேர்ந்ததோ அவற்றைச் சரி செய்ய இந்தக் கடிதங்கள் அவருக்குத் தூண்டுகோலாய் அமைகின்றன. அறியாப் பருவத்தில் எழுதிவைத்த அந்தக் கடிதங்களோடு அவளின் தேடல் தொடங்குகின்றது. தான் எதற்காக வாழ ஆசைப்பட்டாள் என்பதைத் தேடிக்கண்டுபிடிக்கிறாள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு காலம் என்ற சாக்குத் தேவையில்லை என்ற உண்மையை உணர்கின்றாள். படத்தைப் பார்த்து முடித்ததும் ஆயிரம் எண்ண அலைகள். எப்படி வாழவேண்டும் என்று ஆசைப்பட்டதில் இருந்து இப்படியே வாழ்ந்துவிட்டுப் போவோமே என்றுதானே வாழப் பழகிவிட்டோம்.
0000000000000000000000000000000000000000000000000
கவிக்கோ அப்துல் ரகுமான், இன்றுவரை சினிமாவின் கதவுகளைத் தட்டாதவர். இருந்தபோதும் இன்றும் வாசகர்களால் தொடர்ந்தும் தன் தனித்துவமான கவிதைகளால் நேசிக்கப்படுகின்றார். 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மெல்பன் நகர் வந்தபோது அவரைப் பேட்டி காணவேண்டும் என்ற முனைப்பில் பல வழிகளிலும் முயற்சித்து, தொலைபேசி மூலமே நான் கேள்விகளைக் கேட்க அவர் பதிலைச் சொல்லச் சொல்ல என்று ஒரு அரை மணி நேரம் தாண்டிய சம்பாஷணையை நினவில் வைத்திருந்து மீண்டும் அதை எழுதி அப்போது வெளிவந்த உதயன் என்ற பத்திரிகையில் முழுப்பக்கப் பேட்டியாகக் கொடுத்திருந்தது அப்போது எனக்கு ஒரு புது அனுபவம். இணையமோ, ஒலிப்பதிவு வசதிகளோ கைக்கெட்டாத காலம் அது. அந்தப் பேட்டியைப் பின்னர் சமயம் வாய்க்கும் போது கொடுக்கின்றேன்.
அவர் குறித்த செய்தி அண்மைய காலத்தில் வந்திருந்து. அதாவது அப்துல் ரகுமானின் குறித்த கவிதை "மின்மினிகளால் ஒரு கடிதம்" என்ற அவரது கவிதைத் தொகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும் அதைச் "சுட்டு" தற்கால முன்னணிப் பாடலாசிரியர் கவிஞர் முத்துக்குமார் திரைப்படப்பாடலாக ஆக்கியதாகவும் ஒரு செய்தி. இந்தக் கவிதையை எழுதிய முத்துக்குமாரை கவிஞர் வாலி பாராட்டிய போதுதான் அப்துல் ரகுமான் இந்த விஷயத்தைச் சொன்னதாகவும் அந்தச் செய்தி இருந்தது."ஒரு கல் ஒரு கண்ணாடி" என்ற சிவா மனசில சக்தி படப்பாடல் தான் அது. என்னிடம்
இந்தக் கவிதைதைத் தொகுதி இருப்பதாக ஒரு ஞாபகம். என் புத்தகப் பெட்டியைத் துளாவித் தேடிப் புத்தகத்தை எடுத்துவிட்டேன். அப்துல் ரகுமானின் குறித்த கவிதை எதுவாக இருக்கும் என்று பார்த்தால் இந்தக் கவிதை தான் கிட்டியது.
"காதல் என்பது
கண்ணாடியும் கல்லும்
ஆடும் ஆட்டம்"
இந்தக் கவிதை தான் முத்துக்குமார் சுட்டது என்று அவரை விமர்சித்தால் என்னால் ஏற்கமுடியாமல் இருக்கின்றது. ஒரு கவிஞனுக்கு வரக்கூடிய அதே சிந்தனை இன்னொரு கவிஞனுக்கு வரக்கூடாதா? அப்படியென்றால் 'கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிவது" என்ற சொலவாடைக்குக் காரணகர்த்தாதானே இதற்கெல்லாம் மூலம்?
மூலத்தை அறியாமல் ஆளாளுக்கு ஃபேஸ்புக்கில் முத்துக்குமார் மேல் கல்லெறிவது தான் வழக்கமாக இருந்தது.
களவாடல் என்று வரும்போது 'கையும் களவுமாகப்' பிடிபட்ட இன்னொரு பிரபல களவைச் சுட்டுகிறேன்.
இது பிரபல பத்திரிகை குமுதம் இதழின் வேலை.
இணைய உலகில் சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கு R.P.ராஜநாயஹம் அவர்களைத் தெரியாமல் இருந்தால் வியப்பு. சினிமாவில் பின்னணியில் உழைத்து முன்னுக்கு வராவிட்டாலும் அவரிடம் ஏராளமான அனுபவக் கதைகள் உண்டு. தவிர, தனக்குத் தெரிந்த விடயங்களையும் நேர்த்தியாகக் கொடுப்பதில் தனித்துவமானவர். இது அவரின் வலைப்பதிவு முகவரி http://rprajanayahem.blogspot.com.au/
ராஜநாயஹம் அவர்களது வலைப்பதிவில் மறைந்த கலைஞர் காக்கா ராதாகிருஷ்ணன் பற்றி வந்த எழுத்துக்களை வரிவிடாமல் களவாடி குமுதம் சுனில் கேள்வி பதில்கள் பகுதியில் கொடுத்திருக்கிறார்கள் இப்படி
இது குறித்து அவரின் பகிர்வு இங்கே
அறிவுத்திருட்டு இப்போது பரவலாக இசை, தொழில்நுட்பம் என்று உயர்ரகமாக அமைந்துவிட்ட வேளை, தமிழ் எழுத்துச் சூழலில் பதிவர்களின் படைப்புக்களைச் சுரண்டி விட்டு நன்றி 'இணையம்' என்று பொதுவில் போடுவதும், இல்லாவிட்டால் தாங்களே எழுதியது போலவும் பத்திரிகை உலகம் நடந்து கொள்ளும் பாங்கு புதிய விடயம் அல்ல. அதுவும் இலங்கையில் இருந்து வெளிவரும் வார, சஞ்சிகைகளிலும் இதே கூத்துத்தான்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000
கடந்த சில மாதங்களாக ஒரு சிரமம் புதிய வடிவில் வந்தது. காலையில் எழுந்தால் எங்கள் வீட்டு முற்றத்தில் நாய் ஒன்றின் அசுத்தம் இருக்கும். தினமும் இதுவே வாடிக்கையாகி, நானும் அதைக் கடனே என்று குப்பையாகக் கட்டிப் போடுவதுமாக. அவுஸ்திரேலியாவில் சொந்த நாயை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்ற கடுமையான நெறிமுறை இருக்கிற அதே வேளை பொது இடங்களுக்குக் கூட்டிச் செல்லும் செல்லப்பிராணிகளையும் எப்படிப் பராமரிக்க வேண்டும், அவற்றின் அசுத்தங்களை எப்படிக் கையாளவேண்டும் என்றெல்லாம் நெறிமுறைகள் உண்டு. நாயோடு காலாற நடப்பவர்கள் கையில் ஒரு பொலித்தீன் பையையும் கொண்டு போவார்கள். வழியில் நாய் சிரமப்பரிகாரம் செய்து கொண்டால் அந்த எச்சத்தை அள்ளிக் கொண்டு போன பொலித்தீன் பையில் போட்டுக் கொண்டு போகவேண்டும். ஆனால் என் வீட்டைக் கடந்து போகின்ற குறித்த நபர் இந்த வேலையைச் செய்யவில்லை.
நண்பர்களிடம் ஆலோசனை கேட்டால், ஒருவித மருந்து இருக்கிறது அதை வீட்டின் தோட்டத்தில் தெளித்துவிட்டால் அதை முகர்ந்து பார்க்கும் நாய் திரும்பி வரவே வராது என்றார்கள். எனக்கோ அந்தப் பாவத்தைச் செய்யச் சங்கடமாக இருந்தது.
பொறுத்துப் பார்த்து முடியாமல் ஒருநாள் காலை என் வீட்டின் மாடியில் இருந்து களவாகக் கண்காணித்தேன்.
ஒரு கறுப்பு நாய், பின்னால் அந்த நாயின் சொந்தக்காரர். நாய் எங்கள் வீட்டருகே வந்ததும் முற்றத்தில் இருந்த செடிகளை முகர்ந்து பார்த்து விட்டுத் தன் "காரியத்தில்" இறங்கிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது. அந்த நாயின் உரிமையாளரும் அதைப்பற்றி எந்த வித அசட்டையும் செய்யாமல் போகிறார். ஆளை அப்போதுதான் பார்க்கிறேன். நம் நாட்டைச் சேர்ந்தவர் தான். இப்படிப் பொறுப்பில்லாமல் போகின்றாரே என்ற ஆத்திரம் வேறு. ஆனால் அவருடைய நண்பர் ஒருவரைச் சந்தித்து இந்தக் கூத்தைச் சொன்னேன். கூடவே என் அடுத்த நடவடிக்கை காவல்துறையில் புகார் கொடுப்பதாக இருக்கும் என்றேன். அன்றிலிருந்து ஓய்ந்தது இந்தக் கூத்து.
நாம் புலம்பெயந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பதோடு மற்றவனுக்கும் தொல்லை இல்லாத வாழ்வைக் கொடுக்கவேண்டும்.
இங்கே தரும் படம், யாழ்ப்பாணத்தில் 2007 ஆம் ஆண்டுவாக்கில் சென்றபோது கண்டதில் எடுத்தது ;-)








13 comments:
கள்ளத்தீனி படம் நோட் பண்ணிக்கிட்டேன் ;-)
நானும் முத்துகுமாருக்கே ;-)
"கள்ளத் தீனி"யில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை அருமையாக தொகுத்தளித்திருப்பது அருமை.தொடர வாழ்த்துகள்.
பல தகவல்கள்...
நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
அது ஒரு உருது கஸல் கவிதையிலும் வருகிறது...
அன்பர்களே! காதல் என்பது
விளையாட்டல்ல.
அது
கண்ணாடியும் கல்லும்
சந்தித்துக் கொள்வது
http://pirapanjakkudil.blogspot.in/2011/05/blog-post_09.html
அதனால் முத்துக்குமாரை விட்டுவிடலாம்.அப்துல் ரகுமானையும்...
உங்களுக்கு என் நன்றியை எப்படி சொல்வது.
ஒருவிஷயம். குமுதம் அரசு கேள்வி பதில் அல்ல. சுனில் கேள்விபதில்.
சுனிலிடம் கேளுங்கள் பகுதி அது.
உங்களின் இந்தப் பதிவில் ’கோர்வை’ நன்றாக அமைந்திருக்கிறது.
உங்கள் அன்பில் நிஜமாகவே மிகவும் நெகிழ்கிறேன்.
RP RAJANAYAHEM said...
உங்களுக்கு என் நன்றியை எப்படி சொல்வது.
ஒருவிஷயம். குமுதம் அரசு கேள்வி பதில் அல்ல. சுனில் கேள்விபதில்.
சுனிலிடம் கேளுங்கள் பகுதி அது.//
மாற்றிவிட்டேன், மிக்க நன்றி
Chilled Beers said...
அது ஒரு உருது கஸல் கவிதையிலும் வருகிறது...//
மேலதிக பகிர்வுக்கு நன்றி நண்பரே
தல கோபி
வருகைக்கு நன்றி
ராகவன் சார்,
மிக்க நன்றி
திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி
கானா தல,
கவிதையின் மூலம் பார்த்து உண்மையை சொன்னீர்கள்.
பழைய மஹாகவி காளிதாசில் "யார் தருவார் அரியாசனம் இவனா பெருவான் சரியாசனம்" என துவங்கும் பல்லவியின் வரிகள் அப்படியே வட்டாரம் படத்தில் வைரமுத்துவால் பயன்படுத்தப்படிருக்கும், அதே போல நறுமுகையே வும்.
அதை எல்லாம் பார்த்தால் ஒரு கல் ஒரு கண்ணாடிப்பாட்டு ஒன்றும் காபியல்ல .
-------
நாய் கக்கா மேட்டர்,நம்ம ஆளைவிட்டால் வேற யார் அப்படி செய்வார்கள் :-))
"கள்ளத்தீனி" அருமையான பல தகவல்கள்.
இந்த “கள்ளத்தீனி” ஆகஸ்ட் 14”பதிவின் லிங்க்கை ”என் காக்கா பற்றிய பதிவு குமுதத்தில்” பதிவில் சேர்த்துக்கொள்ளட்டுமா சார்! எனக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகவும் இருக்கும்.
இந்த நாய அடுத்தவன் வீட்டு முற்றத்தில விடுற வேலைய ஆஸ்திரேலியா போயும் செய்கினமோ?
:)
Post a Comment