
நேற்றுப் போல இருக்கின்றது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பதிவு உலகில் நானும் ஒரு பங்காளியாக மாறி எழுத வந்த நாள் இன்னும் பசுமையாக நினைவில். அன்றைய சூழலில் வலைப்பதிவு உலகில் எத்தனையோ பல சீரிய பல பதிவர்கள் இயங்கிவந்த சூழல். அப்போதெல்லாம் தமிழ்மணம் தளத்தில் ஒவ்வொரு பதிவுகளுமே தனித்துவமான படைப்புக்களாக இருந்திருந்தன. காலமாற்றத்தில் வலைப்பதிவு மோகம் மெல்ல மெல்லக் குறைந்து தனித்தளங்களுக்குத் தங்களை மாற்றிக்கொண்டோரும், அப்படியே ஓய்ந்து போனோருமாக, இன்று என்னுடய சமகாலத்திலும், அதற்கு முன்பும் தீவிரமாக இயங்கிய வலைப்பதிவர்களில் இன்று ஒரு சிலரை, அதுவும் அவ்வப்போது வலைபதிபவர்களாகத் தான் பார்க்க முடிகின்றது. இது நல்லதா என்றால், வலைப்பதிவுலகின் வாசகன் என்றவகையில் இல்லை என்பேன். எத்தனை எத்தனை நல்ல எழுத்துக்களை இனம் காட்டியது இந்தப் பதிவுலகம், இன்றோ தேடியோ, யாராவது பரிந்துரை கொடுத்தாலோ மட்டுமே எட்டிப்பார்க்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஈழத்தின் அவலம் மிகுந்த நாட்களுக்குப் பின்னர் அப்படியே கொத்தாக ஒரு தொகை பதிவர்களை இழந்ததைக் காண்கின்றேன். நாடே போய்விட்டது இனி என்ன என்று சொன்னார் என் சக வலைப்பதிவர். எல்லாம் இழந்த வெறுமையில் இனிமேல் இந்தச் சூழலில் இருந்து ஒதுங்கித் தமக்கான தண்டனையாக நினைத்துக் கொண்டோரால் வாசக உலகம் தான் இழந்தது சீரிய எழுத்துக்களை.
மடத்துவாசல் பிள்ளையாரடி, எங்களூர்க் கோயில். அந்தக்காலத்து எம் நினைவுகளின் எச்சங்களை இன்னும் தாங்கிப்பிடித்திருக்கும் சூழல். எப்போது மடத்துவாசல் பிள்ளையாரடி மண்ணை மிதித்தாலும் அந்தக் கனவுலகத்தில் என்னைப் புதைத்து நிற்பேன். அதனால் தான் எம் ஊர் பற்றிய சிந்தனை வரும் போது நினைவுகளுக்கு வடிகாலாய் நான் இந்த மடத்துவாசல் பிள்ளையாரடியில் எழுதத் தொடங்குவேன். இந்தப் பதிவில் இருந்து கிளைகளாகப் பல வலைப்பதிவுகளைத் தொட்டாலும், இன்னும் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் மாதம் ஒன்றாவது பதிவைக் கொடுத்து நன்றிக்கடனைக் கழிக்கின்றேன்.
"நினைவு நல்லது வேண்டும்" என்று சொன்ன பாரதி போல, என் எழுத்திலும் நல்ல விஷயங்களை மட்டுமே பகிர நினைத்தேன், க்கிறேன். இது தொடரும்.
எனது ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக
மடத்துவாசல் பிள்ளையாரடி
என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி
இவை தவிர ஈழத்து முற்றம் என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும் என்ற கூட்டுவலைப்பதிவில் எழுதி வந்தேன். தொடர்ந்து இந்த வலைப்பதிவில் பங்களிப்பாளர்கள் வெறுமையான சூழலில், என் சொந்த வலைப்பதிவான உலாத்தலில் தொடர்ந்து கவனம் செலுத்த முனைந்திருக்கின்றேன். இனிமேல் இந்த வலைப்பதிவில் என் புதிய இடுகைகள் வராது.
அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவில் இயங்கி வந்தேன். ஏற்கனவே பல தளங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்தக் கூட்டுவலைப்பதிவிலும் நான் தொடர்ந்து பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே.
இவற்றோடு இந்த ஆண்டில் றேடியோஸ்பதி இணைய வானொலியையும் ஆரம்பித்திருக்கின்றேன். இந்த வானொலி எதிர்காலத்தில் உலகெங்கும் பரந்துவாழும் வலைப்பதிவர்களில் வானொலி ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கான களமாக அமையும். றேடியோஸ்பதி 24 மணி நேர இணைய வானொலி அகப்பக்கம் இங்கே http://radiospathy.wordpress.com/
மடத்துவாசல் பிள்ளையாரடியில் ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப்படைப்பாளிகள் குறித்த ஆவணப்பதிவுகளை 2012 இல் இன்னும் முனைப்போடு செயற்படுத்த எண்ணியுள்ளேன். உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புக்கும் என் நன்றிகளை இவ்வேளை பகிர்ந்து கொள்கின்றேன்.
நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
www.kanapraba.com

வலைப்பதிவில் ஒரு வருஷம்
2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்
2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
வலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள்
2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2011 ஆம் ஆண்டில் என் மடத்துவாசல் பிள்ளையாரடியில் இட்ட பதிவுகள்
"முகத்தார்" என்ற எஸ்.ஜேசுரட்ணம் நினைவில்

1.1.11 - "கத தொடருன்னு"

"இராவண்ணன்" படைத்த சுஜித் ஜி

ஆரியன் இராமன் ஆண்டவனானான்
அயலவன் வாலி குரங்கானான் - என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்துக்கு நான் இராவண்ணன்"
காதுக்குள்ள கேக்குது இன்ரநெற் றேடியோ

காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)
ஈழக்கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் ஆடிய களம்
முரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார்

கும்பிடப் போன தெய்வம்

எச்சரிக்கை: இது என் முதல் சிறுகதை முயற்சி ;-)
ஈழத்துத் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பேசுகிறார்

"சத்யசாயி சென்ரர்" மானிப்பாய் வீதி, தாவடி

அகவை எழுபதில் BBC தமிழோசை

"தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" அப்பா சொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளை விரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று.
விசா எடுத்து ஒரு யாழ்ப்பயணம்

யாழ்ப்பாணத்து றோட்டுப் புராணம்
ஊரில் இறங்கி உலாத்த ஆரம்பித்தால் எதிர்ப்படுபவர்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த விசாரிப்பில் எந்தவிதப் பிரதியுபகாரமும் இல்லாத அன்பின் தேடல் மட்டுமே இருக்கும். கொழும்பில் இருந்து வந்ததும் வராததுமாக, அள்ளிக் குளித்து விட்டுப் பிள்ளையாரடிப்பக்கம் நடக்க ஆரம்பிக்கிறேன்.
காங்கேசன்துறை வீதியால் கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் காண ஒரு பயணம்
"சின்ராயா அண்ணை! நாளைக்கு நாங்கள் கீரிமலைப்பக்கம் போகோணும் வெள்ளண ஆறுமணி போல வரேலுமோ"
எங்கள் ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணரிடம் முதல் நாளே ஒப்பந்தம் போட்டு வைத்து விடுகிறேன். அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு உள்வீட்டுச் சுவாமி தரிசனம் முடித்து, சரியாக மணி ஆறைத் தொடவும் சின்னராசா அண்ணரின் ஆட்டோவின் சுருதி இழந்த ஒலி வீட்டு முன் பக்கம் கேட்கிறது.
மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை
சின்னராசா அண்ணை முன்னமே சொல்லிவிட்டார், "முதலில் கீரிமலை கண்டுட்டு வரேக்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் போவம்"என்று. கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆட்டோ மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குப் பறந்தது. மாவிட்டபுரக்கந்தனின் கோபுரமுகப்புக்கு முன்னால் வந்து நின்றோம்.
இலங்கையில் சந்தித்த வலைப்பதிவர்கள் - தலையில் இருந்து தலைநகரம் வரை

"சிவபூமி" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்
பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்

ஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள்.
வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.
தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை
ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.
திருநந்தீஸ்வரம் கண்டேன்
Steve Jobs படைத்த Apple உலகில் நான்

படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு

ஈழத்தின் எழுத்தாளர்களில் ஒருவரும், சுவைத்திரள் சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கிய திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் அவர்கள் நேற்று நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் நினைவுகளை எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக, அவரோடு பழகிய நண்பரும் எழுத்தாளருமான திரு.லெ.முருகபூபதி அவர்களின் நினைவுப்பகிர்வாக எடுத்து வந்தேன்.
மலையக அன்னையின் மடி தேடி ஒரு ரயில் பயணம்
தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி

19 comments:
தல மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
தொடரட்டும் உங்கள் பயணம் !
வாழ்த்துகள் அண்ணா. உங்களுடன் நானும் 5 ஆண்டுகள் பயணித்ததில் மகிழ்ச்சி.
நல்வாழ்த்துகள்
wishes
வாழ்த்துகள் நண்பா!
தொடரட்டும் உங்கள் பணி!
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
தங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துகிறேன்.
ஆண்டு ஆறுதான். அனுபவம் கனதியானது
வாழ்த்துக்கள் கானா அண்ணா...
வாழ்த்துக்கள் குருவே (என் வலையுலக என் குருக்களில் நீங்களும் ஒருவர்)
வாழ்த்துகள் அண்ணே..
நிறைய இருக்கே பிரபா. நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக படித்துவிடுகிறேன்! சமீப காலமாக ட்வீட்டர் மூலம்தான் அறிமுகம் என்றாலும் உங்கள் எழுத்துகளை அவ்வப்போது படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்....வாழ்க....வளர்க!
ஆறு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணியும் வானொலிப் பணியும்.
அப்போ ஈழத்துமுற்றம் பக்கம் போக எண்ணம் இல்லையா? இதை நான் கேக்கக் கூடாதுதான். காரணம் காணாமல் போன பங்களிப்பாளர்களில் நானும் ஒருவர் :(.
இப்போ றேடியோஸ்பதி இணைய வானொலி கேட்கின்றேன்.
இங்க நீங்கள் போட்டிருக்கிற படங்கள் பலவற்றைப் பார்க்கும்போது, எனக்கு ஒன்று தோன்றுகின்றது. :) என்ன என்று தெரியும்தானே?
எனது வலையுலக துரோணருக்கு எனது வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
கா.பி-க்கு வாழ்த்துக்கள்-ன்னு தனியா வேற சொல்லணுமா நானு?:))
வேணும்-ன்னா இப்படிச் சொல்லுறேன் - "நான் நானா இருக்கேன், கானா பிரபா என்னும் கா.பி யை - படித்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்"
மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபா.
வாழ்த்துக்கள் கானா..:)
தம்பி பிரபா!
அன்றும் என்றும்- சுவாரசியத்துக்குக் குறைவில்லாத , காத்திரமான , ஈழம் சார்ந்த பதிகளிடும்- ஈழத்தைச் சேர்ந்த பதிவர்களில் நான் என்றும் முதன்மையாகக் கருதுவது உங்களையே!
"ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம், இறங்கச்சொன்னால் இயலாதவருக்குக் கோவம்" எனும் பதிவிலகில்
சிக்கலில்லாத் தலைப்புக்களில் எழுதி, இந்த பதிவுலகின் நாடியைச் சரியாகப் பார்த்து எழுதுகிறீர்கள்.
நான் இப்போது அடிக்கடி பின்னூட்டமிடாவிடிலும், படித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீங்கள் இனித் தடையின்றிச் செல்வீர்கள்.செல்லுங்கள்.
முதலில் வாழ்த்துக்கள்.
இந்த ஆறு வருடங்களாக நாங்கள் படும்பாட்டை எங்கு போய் முறையிடுவது. இப்போ எமக்கு உமது இம்சை பழகிவிட்டது. எனவே எழுதுவதை நிறுத்தினால் ரணகளமாகிவிடும் என்று எச்சரிக்கிறேன்.
Post a Comment