skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, February 04, 2007

யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதாவது 91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில் இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள் வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

ஐஸ்கிறீம் என்ற பெயர் காணாமற் போய்க் குளிர்களி என்று மாறியதும், விறகு காலை போய் மர அரிவு ஆலையாக மாறியதும், துர்க்கா என்ரபிறைசஸ் மறைந்து கொற்றவை கால்நடைத்தீனி வாணிபம் என்று மாற்றம் பெற்றதுமாக நிறைய மாற்றங்கள். அப்போது ஒரு வேடிக்கைப் பார்வையோடு எள்ளிநகையாடியவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் காலம் செல்லச் செல்ல அந்த மாற்றமே அங்கே வாழும் சமூகத்தின் புழக்கத்தில் அதிகம் வந்துகலந்துவிட்டதை அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து இப்போது புலம் பெயர்ந்திருப்பவர்களால் நன்கு உணரமுடியும். எப்போதும் நல்ல விஷயங்கள் ஆரம்பத்தில் கசக்கத்தான் செய்யும், காலம் கடந்து நீண்ட நோக்கில் பார்க்கும் போது அதன் அறுவடை செழுமையாக இருக்கும். இதைத் தான் நேற்றுக்கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கும் போது என் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தேன்.

செந்தமிழ்ச் செல்வர் சு. சிறீ கந்தராஜாவின் "தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும்" என்ற அந்த நூல் வெளியீடு விழாவில் திரு. தேவராஜா அவர்கள் ஆய்வுரை பகிர்ந்தபோது "தமிழோடு 25 வீத சமஸ்கிருதம் கலந்து மலையாளமாகியும், 50 வீத சமஸ்கிருதக்கலப்பில் தெலுங்காகியும், 75 வீதக்கலப்பில் கன்னடமாகியும்" தமிழ்மொழி கிளைமொழிகளாகித் தன் அடையாளத்தைத் தொலைத்துக்கொண்டு போவதையும் குறிப்பிட்டிருந்தார். இந்த நூலில் கூட நூலாசிரியர் இப்படிச் சொல்கிறார், "1100 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது கி.பி. 9 ஆம் நூற்றாண்டுவரை கன்னடமொழி தமிழாகவே இருந்தது. 900 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது கி.பி. 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்கு மொழி தமிழாகவே இருந்தது. 700 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 13 ஆம் நூற்றாண்டு வரை மலையாளம் தமிழாகவே இருந்தது".

கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் தமிழிலிருந்து தோன்றாமல் விட்டிருந்தால் இன்றைக்கு இந்தியாவிலே இருக்ககூடிய தமிழனின் தொகை 21 கோடி என்கின்றார்.

ஓவ்வொரு முறை என் தாயகத்துக்கோ தமிழ்நாட்டுக்கோ செல்லும் போதோ நான் வாங்க நினைப்பது ஒரு தமிழ் அகராதி. ஆனால் புத்தகத்தின் கனம் தடைபோட்டுவிடும். அடுத்தமுறை போகும் போது ஒரு தமிழ் அகராதியை வாங்கிக் கடல் அஞ்சல் மூலமாவது அனுப்பிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது எனக்குக் கிடைத்தது "யாழ்ப்பாணத் தமிழ் அகராதி".

தமிழ்மண் பதிப்பகம் சென்னை, மற்றும் சேமமடு பதிப்பகம் கொழும்பு ஆகிய பதிப்பாளர்களால் மே 14, 2006 ஆம் ஆண்டு மீள்வெளியிடப்பட்ட இப்புத்தகம் மெல்பன் தமிழ்ச்சங்கத்தால் அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. கையெட்டும் தூரத்தில் கிடைக்கும் கனியை விடலாமோ? உடனே வாங்கிவிட்டேன்.

புத்தகத்தை வாங்கி விரிக்கும் போது ஆச்சரியமான வகையில் இருப்பது இதன் முதற்பதிப்பு. 1842 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாண புத்தகச் சங்கத்தால் 10 ஷில்லிங் அல்லது 5 ரூபாய்க்கு விற்கப்பட்டதாம்.

சந்திரசேகரப் பண்டிதர், மற்றும் சரவணமுத்துப் பிள்ளை ஆகியோரை ஆசிரியராகக் கொண்ட இந்நூல் கனதியான அட்டையோடு 486 பக்கங்களோடு வெளிவந்திருக்கிறது. பின் அட்டையில் இருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் "பதிப்பரசர் எங்கள் படை" என்ற கவிதை மூலம் இந்நூலை மீள்பதிப்பாகக் கொண்டுவந்த கோ.இளவழகனை விதந்து பாடுகின்றார்.
நூலை விரிக்கின்றேன்.
அளவையம்பதி தமிழ்ப்புலவன் வேலுப்பிள்ளை குமாரன் கனகசபாப்பிள்ளையின் சிறப்புப் பாயிரம் முதலில் அணி செய்கின்றது. அந்த நேரிசையாசிரியப்பாவை எல்லோரும் புரிந்துகொள்ளும் விதத்தில் சந்தக்கவி இராமசாமியால் சீர்கள் பிரிக்கப்பட்டு இப்பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து உடுவைநகர் முத்துக்குமாரசுவாமி சிதம்பரப்பிள்ளையின் இருபத்து நான்கு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அமைகின்றது.
முதற்பதிப்பின் முன்னுரையில் (1842 ஆம் ஆண்டு) அமெரிக்கன் அச்சகத்தாரால் இப்படித் தொடர்கின்றது. "தமிழ்மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்ட இவ்வகராதி தமிழுலகின் முன்னர் சமர்ப்பிக்கப்படுகின்றது. அவ்வகராதியில் 58,500 சொற்கள் உள்ளன. அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களை விட நான்கு மடங்கு சொற்கள்".

மீளப்பதிப்பில் வாழ்த்துரை வழங்கிய தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் கூற்றில் " அகராதி என்பது அதன் உருவிலும் உள்ளடக்கத்திலும் மேலைத்தேய பண்பாட்டு வழி வந்ததாகும். தமிழ்மரபில் நிகண்டு முறைமையே உண்டு. அம்முறையினுள் அகராதியில் கிடைப்பன போன்ற சொல்லுக்கான கருத்து தரப்படாது. மாறாகச் சொற்கள் தொகுதிகளாத் தரப்படும். சிவனுக்குரிய பெயர்கள், கடலுக்குக்குரிய பெயர்கள் என தொகுதி முறையிலேயே வரும். உண்மையில் ஆங்கில மரபுப்படி இவை ஒரு பொருளுக்கான பல பெயர்கள் (Synonyms) எனவே கொள்ளவேண்டும்.

தமிழ்மக்களிடையே தமது மதத்தைப் பரப்ப முனைந்த முதற்பெரும் பாதிரியார் முதலே அகராதி முறைமை வழியாகத் தமிழைத் தமது விளக்கப்பதிவிட் கொண்டுவருவதற்கு மேலை நாட்டு மரபு வழி வந்த அகராதி முறைமையக் கையாண்டுள்ளனர். (வீரமாமுனிவரின் சதுரகராதி) புரட்டஸ்தாந்தக் கிறீஸ்தவர்கள் இம்முயற்சியில் அறிவியல் பூர்வமான அணுகுமுறைமையே மேற்கொண்டனர். இவர்களுள்ளும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டியங்கப் புறப்பட்ட மிசனரிமார்கள் தொடக்கத்திலிருந்தே அகராதி முயற்சியில் ஈடுபட்டனர். ஜோசப் நைற் பற்றி பேராயர் செபநேசன் சந்துள்ள செய்திகளை நோக்குக. ஜோசப் நைற் மெதடிஸ்ட மிஷன் பாதிரியாராகிய பர்சிவலுடன் இணைந்து செயற்பட்டார் என்பது முக்கியமான செய்தியாகும். இந்த பர்சிவல் தான் ஆறுமுக நாவலரின் ஆரம்பகால உந்து ஆற்றலாக விளங்கியவர். " என்று கூறிச் செல்கின்றார்.

அணிந்துரை வழங்கிய பேராயர் கலாநிதி.எஸ்.ஜெபநேசனின் குறிப்பில்"யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மிஷனரிமாரின் இன்னொரு பங்களிப்பினை ஆராயப் புகுவோம். மூன்று மிஷன் சங்கங்களையும் சேர்ந்த ஆரம்பகால் மிஷன் தொண்டர்கள் ஒரு தமிழ்-ஆங்கில அகராதி இல்லாத குறையை உணர்ந்து அதனை நிவர்த்தி செய்வதற்கான பணியை மேற்கொண்டனர்.

1818 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திறங்கிய ஜோசப் நைற் என்பார் தமது பணியைத் தொடங்கிய நேரத்திலிருந்தே ஒரு பாரிய தமிழ் அகராதிகான தரவுகளைத் திரட்டத்தொடங்கினார். கொழுமைச் சேர்ந்த காபிரியேல் திசேரா (இவர் தமிழும் ஆங்கிலமும் அறிந்த தமிழர்), உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகரப் பண்டிதர், இருபாலையை சேர்ந்த சேனாதிராய முதலியார், லெஸ்லியல் மிஷன் போசிவர் உட்பட பல அறிஞர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டார். துரதிஷ்டவசமாக ஜோசப் நைற் தமது வேலை பூர்த்தியாகு முன்னரேயே இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

உடுவிலில் பணியாற்றிய அமெரிக்க மிஷனரியாகிய லீவை ஸ்போல்டிங் என்பார் ஜோசப் நைற் அவர்களின் நண்பராகவிருந்த காரணத்தால் மறைந்த ஜோசப் நைற் திரட்டியவற்றைப் பெற்று , சாமுவேல் ஹற்சின்ஸ் என்ற மிஷனரி மூலமாக 1842 ஆம் ஆண்டு அச்சுவாகனமேற்றினார். "
உடுவிலில் இருந்த பெண்கள் பாடசாலை மாணவிகள் இந்நூலுக்கான படியெடுக்கும் பணியைப் பாடசாலை முடிந்த பின்னரும் தொடங்கும் முன்னரும் செய்தனர்.

யாழ்ப்பாண அகராதி என்பதால் யாழ்ப்பாணத்தமிழுக்கான அகராதி இது என்று நினைப்பது தவறு. ஆனாலும் யாழ்ப்பணத்துத் தமிழ்ச்சொற்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பொன்னத்துப் பெட்டி - தாலி, கூறை வைத்துக்கொண்டு போம் பெட்டி, கசட்டைத் தயிர் -ஆடை நீக்கின தயிர் போன்றன அவற்றுட் சில என்கின்றார் அறிமுகவுரை வழங்கிய பா.ரா.சுப்பிரமணியன்.

இந்நூல் மானிப்பாய் அகராதி என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தஞ்சை தமிழ்த்தென்றல் என்பவரிடம் மூலநூலைப்பெற்று விடுபட்ட 100 பக்கங்களைப் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்று மீள் உருவாக்கம் செய்யப்பட்டதாகப் பதிப்பாளர்கள் கூறுகின்றார்கள்.

இந்த அகராதி நாற்பது டொலர் பெறுமதி என்றாலும் நூலில் பொதிந்திருக்கும் வரலாற்றுக் குறிப்புக்களுக்கும், தமிழ் அகராதிச் சொல் விளக்கத்துக்கும் எவ்வளவு கொடுத்தாலும் தகும்.
Posted by கானா பிரபா at 12:10 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

31 comments:

Anonymous said...

நல்ல விடயங்களை இணைத்து வருகிறீர்கள் பிரபா. என்னுடைய சிறுபராயத்திலும் இந்த நூலை பார்த்த அநுபவம் உள்ளது. ஆங்கில தமிழ் அகராதி என்று நினைக்கிறேன்.
மின்னூல் வடிவில் இருக்கும் என்றால் அனைவருக்கும் உபயோகப் படும்.
நன்றி பிரபா.
தேவன்

February 04, 2007 8:37 PM
கானா பிரபா said...

வணக்கம் தேவன்

இந்த நூல ஆங்கில-தமிழ் அகராதி அன்று. தமிழ்ச் சொற்களுக்குப் புழக்கத்தில் உள்ள அல்லது பதிலீடான வேறு சொற்கள். நீங்கள் குறிப்பிடும் பழைய அகராதியின் பெயர் என் நினைப்புக்கு இப்போது வரவில்லை. உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். மின்னூலாக இவை வருமிடத்துத் தேவையான சொற்களைப் பக்கம் தேடாமல் சில நொடிகளில் பெற்றுவிடலாம் இல்லையா?

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

February 04, 2007 9:32 PM
Anonymous said...

இப்படி ஒரு அகராதியைப் பற்றிக் கேள்விப்படவில்லை. அறிமுகத்துக்கு நன்றிகள். எனக்கும் ஒன்று ஓடர் பண்ணிவிடுகிறீர்களா?

மதம் பரப்ப வந்தவர்கள் இப்படிப் பல நல்ல சேவைகள் செய்துள்ளனர் (தமது தேவை கருதியும் தான்). பதிவுக்கு நன்றிகள்.

February 04, 2007 11:13 PM
Anonymous said...

இதை எழுதித் தொகுத்தவர் அமெரிக்க மிசன் பாதிரியார் நைற். இவர் யாழ்ப்பாணத்தையோ அல்லது மானிப்பாயோ சேர்ந்தவர் அல்ல.
இவருக்கு உதவியாக இருந்த சந்திர சேகர பண்டிதரும், சரவணமுத்துப்பிள்ளையும் பாதிரியார் இறந்த பின்னர் தங்கள் பெயரில்
தங்கள் ஊர் பெயரில் பிற்காலத்தில் வெளியிட்டார்கள்.
இது ஒரு மோசடி . மோசடிக்கு இன்று புகழாரம்.

February 04, 2007 11:22 PM
கானா பிரபா said...

வணக்கம் சிறீ அண்ணா

இப்புத்தகத்தைப் சிட்னியில் பெறுவது குறித்த விபரங்களைப் பெற்றுத் தருகின்றேன்.

February 05, 2007 8:45 AM
கானா பிரபா said...

//இதை எழுதித் தொகுத்தவர் அமெரிக்க மிசன் பாதிரியார் நைற். இவர் யாழ்ப்பாணத்தையோ அல்லது மானிப்பாயோ சேர்ந்தவர் அல்ல.//

வணக்கம் அநாமோதய நண்பரே

இந்த நூலில் ஜோசப் நைற் இன் அரும்பணி பற்றி பதிப்பாளர் உட்பட, உரை வழங்கிய எல்லா அறிஞர்களுமே விதந்து கூறியிருக்கின்றார்கள். அதை என் பதிவிலும் இட்டேன்.


நூலின் முகப்பு அட்டையில் அவர் பெயர் விடுபட்டிருப்பது மிகப்பெரும் தவறு என்பதையும் நான் ஒப்புக்கொள்கின்றேன். அதே வேளை சந்திர சேகர பண்டிதரும், சரவணமுத்துப்பிள்ளையும் ஆகியோரின் உறுதுணைப் பணியும் இருட்டடிப்புச் செய்யமுடியாதவை.

February 05, 2007 9:06 AM
Anonymous said...

பிரபா!
நானும் தமிழ் அகராதியின் தந்தை "வீரமா முனிவர் " நினைவு நாளான (4 பெப்ருவரி) இன்று அவர் பற்றி ஓர் பதிவு போட்டேன். நீங்களும் அகராதி உருவாக்கத்தில் மிசனரிகளுக்குள்ள பங்கு பற்றிக் குறிப்பிட்டுள்ளது. பெருமகிழ்வைத் தருகிறது.இத் தகவல் எனக்குப் புதிது.
ஆனால் சிலர் இன்னும் மிசனரிகள்; வெளிநாட்டவர் செய்த நல்லவற்றை மறைக்க முற்படுவது.ஏனென்றே
புரியவில்லை.
நல்ல பதிவு இப்படித் தேடித் தாருங்கள்.
யோகன் பாரிஸ்

February 05, 2007 9:46 AM
செல்லி said...

சரியான அகராதி பிடிச்ச மனுசன் எண்டதை காட்டிபோட்டியள்.
அறிந்தவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.
தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் எவ்வளவோ அர்த்தங்களிருக்கு, அப்பிடிப்பாக்கேக்கை நாங்கள் அறிஞ்ச சொற்கள் அணுவளவுகூட இல்லை எண்டுதான் சொல்லுவன்.
எனக்கும் உந்த தமிழ் அகராதிகள் வாங்கிறதில சரியான விருப்பம்,ஆனா ஆசைப்பட்டுத் தொட்டிடுவன் பாரங் கண்டு விட்டிடுவன்
தவல்களுக்கு நன்றி

February 05, 2007 11:05 AM
கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

மேலைத்தேயர் செய்த நல்ல விஷயங்களுக்கான அங்கீரம் உரியமுறையில் கொடுக்கப்படல் வேண்டும். இது போன்ற பல முயற்சிகள் மூலம் பழைய உபயோகமான விடயங்கள் மீள் பதிப்பில் வரவேண்டும். உங்கள் ஆதங்கமும் புரிகின்றது.

February 05, 2007 11:41 AM
வசந்தன்(Vasanthan) said...

கானா பிரபா,
இது நானும் போட்டிருக்க வேண்டிய பதிவு.
வெளியீட்டு விழாவோடயே போட்டிருக்க வேணும்.
நல்ல்து செய்தீர்.

இதற்கு யாழ்ப்பாண அகராதி என்று பெயர் வைத்தது அதை உருவாக்கியவர்களோ, வெளியிட்டவர்களோ அல்லர். இந்த அகராதி அந்தப் பெயரில்தான் நூற்றாண்டுக்கும் மேலாக புழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் இதே பெயரில்தான் இவ்வகராதி சொல்லப்பட்டு வந்துள்ளது.
இவ்வகராதியைத் தொகுத்தவர்கள் இதற்கு வைத்த பெயர் 'பெயரகராதி'. தமிழ்நாட்டில்தான் இது யாழ்ப்பாண அகராதியாகச் சொல்லப்பட்டது. பின் அதுவே நிலைத்துவிட்டது. இது மானிப்பாய் அச்சுக்கூடத்தி்ல் அச்சிடப்பட்டதால் 'மானிப்பாய் அகராதி' என்ற பெயரும் பயன்பாட்டிலிருந்தது.

இரு நூற்றாண்டுகளின் முன் எங்கள் தமிழ் எப்படியிருந்ததென்று மேம்போக்கான பார்வையொன்றைப் பெறலாம். மூலப்படிக்கு எழுதப்பட்ட முன்னுரையின் மணிப்பிரவாள நடையே சான்று. ஏராளம் வடசொற்கள் புழங்கியிருக்கின்றன.

பூராயம், பூராயக்கதை என்ற சொற்களும் வருகின்றன; ஆனால் இன்று பயன்படுத்தும் பொருளை முழுமையாக் கொண்டிராமல்.
முசுப்பாத்தி என்ற சொல் வராமல் அதன் அடிகளான, முசிதல், முசிப்பாற்றி, முசிப்பாற்றல் என்பனவும் வருகின்றன. எனவே முசுப்பாத்தி என்பது இந்நூல் எழுதப்பட்ட பின்னர் ஏற்பட்ட திரிபு.
'பறை' என்ற வினையும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
கதை, கதைத்தல் என்ற வினைகளும் வருகின்றன.

கத்தரி என்பதற்கு வழுதுணை என்ற பெயர் தரப்பட்டுள்ளது. இந்தப்பேர் இன்று மட்டக்களப்புப் பக்கம் மட்டும் புழக்கத்தில் இருக்கிறது. (இச்சொல்தான் கத்தரிக்காய்க்குரிய சரியான வேர் என்று நித்தி கனகரத்தினம் சொல்வார்) இந்நூலில் இடம்பெற்றதால் வழுதுணை என்ற சொல் யாழ்ப்பாணத்தாரும் பயன்படுத்தியிருந்தனர் என்று கருதலாமா? (அல்லது இன்றும் யாழ்ப்பாணத்தில் எங்காவது இச்சொல் பயன்பாட்டிலுள்ளதா?)

அகரவரிசை ஒழுங்கில் குழப்பமுண்டு. இது மூல நூலிலேயே இருக்கிறதா, அல்லது இப்போது மீள்வெளியிடும்போது வந்த மாற்றமா தெரியவில்லை.
முச, முசி, முசு போன்ற தொடர்களின் பின்னால்தான், இவையெல்லாவற்றுக்கும் முன்னர் வரவேண்டிய 'முச்' தொடர் வருகிறது. எல்லாத் தொடரிலும் உயிர்மெய்கள் அனைத்தும் முடிந்தபின்தான் மெய்யைத் தொகுக்கிறார்கள். அதாவது ப, பா, பி, பீ, பு.... என்று வந்து இறுதியில்தான் ப் வருகிறது.
அந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தார் தமிழ்நெடுங்கணக்கு அட்டையில் மெய்யை வலப்பக்கத் தொங்கலில் வரிசைப்படுத்தியிருப்பார்களோ?;-)

February 05, 2007 1:03 PM
வசந்தன்(Vasanthan) said...

பிரபா,
தனியொரு அகராதியை வைத்துக் காலம் தள்ள முடியாது. அதுவும் யாழ்ப்பாண அகராதி இன்று எவ்வளவுக்குக் கைகொடுக்கும் என்று தெரியவில்லை. (க்)ரியாவின் தற்காலத் தமிழகராதி பெரிதும் பயனுள்ளது.

ஆனால், இந்த யாழ்ப்பாண அகராதி ஒரு காலத்தின் பதிவு.
தோண்டினால் இன்னும் நிறைய சுவாரசியமான விசயங்கள் கிடைக்கும்.

February 05, 2007 1:05 PM
கானா பிரபா said...

வணக்கம் வசந்தன்

விரிவான உங்கள் தகவல்களுக்கு நன்றிகள். ஒரு தமிழ்ப் பண்டிதர் கத்தரிக்காய் விற்ற பெண்ணிடம் போய் " மாதே மாதே இவ் வழுதுளங்காய் (கத்தரி) விலை என்னே? என்று கேட்கவும், உந்தாள் எதையே கோக்குது என்று அந்தப் பெண் புருஷனிடம் போட்டுக்கொடுக்கவும் , புலவர் அடிவாங்கிய கதை ஞாபகத்துக்கு வருகுது.

உண்மைதான் ஒரு அகராதியில் குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்ட சொற்பதங்கள் தான் இருக்கும். அடுத்தமுறைப் பயணத்தில் "க்ரியாவை"யோ மதுரைத் தமிழ் அகராதியையோ வாங்க வேணும்.

February 05, 2007 1:16 PM
வெற்றி said...

கா.பி,
நல்ல பதிவு.

/* 91 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயம் தூய தமிழ்ப்பெயரிடல். கடைப்பெயர்ப்பலகைகளில் இருந்து ஆரம்பித்து நடைமுறைப்பயன்பாடுச் சொற்கள் வரை இவை புகுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.*/

இன்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் உள்ள வியாபார நிறுவனங்கள் முதல் எல்லாம் தூய தமிழில் தான் பெயர்ப்பலகைகள் உள்ளது. உண்மையில் கிளிநொச்சியில் பல தமிழ்ச் சொற்களை இப் பெயர் பலகைகள் மூலம் அறிந்து கொண்டேன்.

இந்த தமிழ் அகராதி நானும் பல காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு நூல். எப்போது எனக்குக் கிடைக்குதோ பார்ப்போம்.

ஒரு சின்னத் தகவல்; முதல் முதல் தமிழ்-ஆங்கில அகராதியும் யாழ்ப்பாணத்தில் தான் வெளிவந்தது என அறிகிறேன். இதுபற்றி இன்னும் சில ஆய்வுகள் செய்ய வேண்டும்.

February 05, 2007 1:27 PM
கானா பிரபா said...

//செல்லி said...
சரியான அகராதி பிடிச்ச மனுசன் எண்டதை காட்டிபோட்டியள்.
அறிந்தவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.//

;-))

//தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் எவ்வளவோ அர்த்தங்களிருக்கு, அப்பிடிப்பாக்கேக்கை நாங்கள் அறிஞ்ச சொற்கள் அணுவளவுகூட இல்லை எண்டுதான் சொல்லுவன்.//

உண்மை செல்லி, இயன்றவரை இப்படியான அகராதிகள் துணையோடு சரியான, பொருத்தமான பதங்களை எம் எழுத்துத் தமிழில் பயன்படுத்துவதன் மூலமாவது தொலைந்துபோன சொற்களுக்கு நாம் புத்துயிர் கொடுக்கலாம்.

February 05, 2007 1:28 PM
கானா பிரபா said...

//வெற்றி said...
ஒரு சின்னத் தகவல்; முதல் முதல் தமிழ்-ஆங்கில அகராதியும் யாழ்ப்பாணத்தில் தான் வெளிவந்தது என அறிகிறேன். இதுபற்றி இன்னும் சில ஆய்வுகள் செய்ய வேண்டும்.//


வணக்கம் வெற்றி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட ஆங்கிலத் தமிழ் அகராதி பற்றித் தான் முதலில் பின்னூட்டமிட்ட தேவனும் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்கோ அதைப்பற்றி சமீபத்தில் படித்திருந்தேன், தேடியெடுத்துப் பின்னர் விளக்கத்தை தருகின்றேன். அல்லது பின்னூட்டமிடும் அன்பர்கள் யாராவது கை கொடுப்பார்களா என்று பார்ப்போம்.

February 05, 2007 3:56 PM
அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மிகவும் மெனக்கெட்டு எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். இந்த முறை இந்தியாவில் இருந்து கிரியாவின் தற்காலத் தமிழகராதி வாங்கி வந்தேன். என் அக்காவும் நண்பர்களும் அது எப்படி தமிழ்-தமிழ் அகராதி இருக்க முடியும் என்று வியந்தனர். இப்படி இருக்கு சில தமிழர் நிலை :(

February 06, 2007 3:13 AM
கானா பிரபா said...

வணக்கம் ரவிசங்கர்

தங்கள் வருகைக்கு என் நன்றிகள். க்ரியாவை வாங்கி கப்பலில் அனுப்ப முடிவுசெய்துள்ளேன். உண்மையான தமிழ்ச் சொல் தேடித் திரியும் அவலநிலைக்குப் போய்விட்டோம் :-(

February 06, 2007 8:27 PM
theevu said...

http://dsal.uchicago.edu/dictionaries/kadirvelu/

February 09, 2007 7:53 AM
சின்னக்குட்டி said...

வணக்கம் பிரபா.. தெரியாத விசயங்களை தெரிய படுத்தியுள்ளீர்கள் இந்த பதிவின் மூலம் நன்றிகள்.

February 09, 2007 8:40 AM
கானா பிரபா said...

வணக்கம் தீவு

இணையம் மூலம் பார்க்ககூடிய தமிழ் அகராதியைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். பேருதவி இது.

வணக்கம் சின்னக்குட்டியர்

தங்கள் வருகைக்கு நன்றிகள், பாலச்சந்திரன் அண்ணையின் ஒலிப்பதிவை உடன் தரமுடியாமல் தொழில்நுட்பம் தடை போட்டுவிட்டது. கூடிய சீக்கிரம் தருகின்றேன்.

February 09, 2007 8:00 PM
Anonymous said...

ஒருவர் எழுதிய அகராதி அவருடைய அனுமதி இல்லாமல் அதுவும் அவருடைய பெயரை முன் அட்டையில் போடால் அச்சிட்டு வெளியிடுவது சட்டப்படி மிகத் தவறானது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்ற துணிவில்
அவரது பெயரை இருட்டடிப்பு செய்துவிட்டு வேறு நபர்களின் பெயரில்
வெளியிடுவது மோசடி இல்லையா? இது தற்செயல்லான தவறா?
அப்படியானால் இப்போது வெளியிட்டவர்கள் இந்தத் தவறு குறித்து பகிரங்கமான அறிக்கை இதுவரை வெளியிட்டார்களா?

இந்த நோக்கத்தை அகராதியில் "அபகரிப்பு" என்ற சொல்லின் கிழ் பார்வையிடவும்.

February 09, 2007 10:08 PM
கானா பிரபா said...

//Anonymous said...
அப்படியானால் இப்போது வெளியிட்டவர்கள் இந்தத் தவறு குறித்து பகிரங்கமான அறிக்கை இதுவரை வெளியிட்டார்களா?//

உங்களின் கேள்விக்கான பதிலை முன்னர் பின்னூட்டமாக இட்டிருக்கின்றேன்.

February 09, 2007 10:36 PM
Anonymous said...

நீங்கள் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி. ஏன் தவறு செய்தவர்களை கண்டிக்க முடியவில்லை? ஏன் இந்த மோசடிகளை அம்பலப்படுத்த முனையவில்லை.?

February 09, 2007 10:37 PM
கானா பிரபா said...

இதென்னடா இது வம்பாப்போச்சு

இந்த நூலைப் பார்த்ததும் பரவசப்பட்டு அறிமுகம் கொடுக்கவேண்டும் என்று முனைப்பு இருந்தது. பின்னர் ஒரு நண்பர் இதைக் காட்டியபோது தான் பார்த்தேன். இதற்குமேல் என்னைக் கஷ்டப்படுத்தினால் அழுதுடுவன்.

February 09, 2007 10:51 PM
Anonymous said...

உங்கள் நல்ல எண்ணத்தை புரிந்துகொண்டேன். உங்கள் மீது எதுவித தப்பும் இல்லை. சிலர் மற்றவர்களூடைய எழுத்தை திருடுவதை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

எனது கருத்தை பின்னுட்டமாக் வெளியிட்டதற்கு எனது நன்றி.

February 09, 2007 11:24 PM
கானா பிரபா said...

மிக்க நன்றி நண்பரே, நான் வேடிக்கையாகச் சொன்ன கருத்தையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம்.

February 09, 2007 11:27 PM
கானா பிரபா said...

இந்தப் பதிவை வாசித்துவிட்டு ஒரு அன்பர் (தட்டச்சும் வசதி இல்லாததால்) தொலைபேசி மூலம் சொன்ன தகவல், தமிழ் ஆங்கில அகராதிக்கான விளக்கமாகவும் அமைகின்றது. இதோ

Joseph Knight, Spaulding ஆகிய இருவரும் ஆங்கில தமிழ் அகராதியை (English - Tamil Dictionary)1844 ஆம் ஆண்டு வெளியிட்டனர். பின்னர் 1852 ஆம் ஆண்டு Joseph Knight, Spaulding, Hutchings, Wislow ஆகியோர் திருத்திய பதிப்பாக இதை வெளியிட்டார்கள். பின்னர் இப்போது புதுடில்லியிலுள்ள Asian Educational Serivices (AES) திருத்திய பதிப்பாக(revised, Enlarged & Romanised) Appaswamy pillai யின் பணியோடு மீள் அச்சில் கொண்டுவந்திருக்கிறார்கள். (அட்டையில் இந்த நால்வரின் பெயரும் இருக்கிறதாம்)

தவிர Winslow என்பவர் 1862 ஆண்டு தமிழ் ஆங்கில அகராதியை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. தவிர இன்னும் பல சான்றோர்கள் அக்கால கட்டத்தில் இன்னும் பல ஆங்கில தமிழ் அகராதியை வெளிக்கொணர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

February 10, 2007 6:29 PM
Anonymous said...

//உண்மையான தமிழ்ச் சொல் தேடித் திரியும் அவலநிலைக்குப் போய்விட்டோம் :-(//

200 வருடமான பெரும் புயல், பூகம்பம். போன்ற பேரழிவுகளுக்கிடையிலும்
நம் அமுதத்தமிழ் உயிர்பிழைத்ததே தெய்வச்செயல் அன்றோ!

எல்லாம் நன்மைக்கேஎன்று சொல்வதற்கும்,
நம்முறவுக்கள் அகதிகளாக அகிலமெல்லாம் பரவியதற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணுவேன்.

இப்ப விளங்கீட்டுது.
பாத்தி கட்டி வளர்த்த தமிழ் பயிரை பரெங்கும் விருத்தி செய்யவென்று.
தேமதுரத் தமிழோசை திக்கெல்லா ஒலிக்கின்ற தன்றோ!
உங்கள் தமிழ்பணி வாழ்க! வளர்க!!

February 26, 2007 6:45 PM
கானா பிரபா said...

மிக்க நன்றி நண்பரே,

நாம் எல்லோரும் இணைந்து எம்மால் இயன்ற தமிழ்ப்பணி ஆற்றுவோம்

February 26, 2007 8:32 PM
Anonymous said...

hi few ppl mentioned of publishing online. This is a request for all tamil readers. As a printer I know how hard to a author to realase a book. Because tamil readers never buy sri lankan books. They buy ramanichandran jothidam and how to imporve life. As a book seller most of the tamils are intrested in this. Here I mention sri lankan tamils. because i know only them. they will spend lot of money on kumutham annantha vikadan but you must know one thing if 1/3rd of the people who buy tamil stroy books will buy a quality tamil mags from tamil nadu and ours then we can release mags here with confident.

May 31, 2007 6:22 AM
விருபா - Viruba said...

https://viruba.blogspot.in/2017/06/blog-post.html

July 21, 2017 11:43 AM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ▼  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ▼  February 2007 (4)
      • "அண்ணை றைற்"
      • காற்றின் மொழி.....!
      • நான் நேசிக்கும் கே.எஸ். பாலச்சந்திரன்
      • யாழ்ப்பாண அகராதி ஒர் அறிமுகம்
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes