

நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல், பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள். ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை. தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள், அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்.

இக்கதையில் பல சுவாரஸ்யமான பாத்திரங்கள் இருந்தாலும் அனுதாபத்தை அள்ளிப்போவது நாகம்மாவின் முறைமாமன் விருத்தாசலம் பாத்திரம்.கூழக்கடாவை வேட்டையாடிக் கொண்டுபோய் நாகம்மாவைக் கவர அவன் போடும் திட்டமும், கதையின் இறுதியை முடித்துவக்கின்ற அனுதாபத்துக்குரிய பாத்திரமாகவும் அவன் படைக்கப்பட்டிருக்கின்றான்.
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம், இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல், இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது, அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.

மரியதாஸ் பாத்திரம், மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது, பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
செமியோன் -பிலோமினா காதல், மரியதாஸ் நாகம்மா காதல் இன்னொரு திசையில் பயணப்படும் சுவையான பக்கங்கள்.
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
இந்தக் கதை 1974 ஆம் ஆண்டில் செங்கை ஆழியானின் ஆரம்ப கால எழுத்தாக வந்திருக்கிறது. இதை மீண்டும் விரிவாக எழுதும் போது "செம்மீன்" போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன். என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
" எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது, ஆனால் அது எப்பவோ எழுதி முடித்தகதை அதை அப்படியே விட்டுவிடுவோம்" என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
நாவலைப் படித்து முடிக்கும் போது, கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது. இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது. இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது. ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது. வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான். "ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது" படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும், பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும், பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார். பின் இது பற்றி சுந்தரராஜனிடம் இவர் கேட்டப்போது இந்த நாவலைப் படமாகவில்லையே சம்பவங்களையும் முக்கிய பாத்திரப்படைப்புக்களைத் தானே எடுத்து " கல்லுக்குள் ஈரம்" வந்தது என்றாராம்.83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
வாடைக்காற்று திரைப்படமான போது
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர். இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி . ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் , "நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது , வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம்" என்றாராம்.
நடிகர்கள்: ஏ.ஈ.மனோகரன் (செமியோன்) , டொக்டர் இந்திரகுமார் (மரியதாஸ்), சந்திரகலா (பிலோமினா) , ஆனந்த ராணி (நாகம்மா), எஸ்.ஜேசுரட்ணம் (பொன்னுக்கிழவர்), ஜவாகர் (சுடலைச்சண்முகம்), பிரான்சிஸ்( சவரிமுத்து), கே.எஸ். பாலச்சந்திரன் (விருத்தாசலம்) , கந்தசாமி (சூசை).
ஒளிப்பதிவு: ஏ.வி.எம்.வாசகர்
திரைக்கதை, வசனம்: செம்பியன் செல்வன், செங்கை ஆழியான்
இசை: ரீ.எவ்.லத்தீப்
உதவி இயக்கம்: கே.எஸ்.பாலச்சந்திரன்
இயக்கம்: பிறேம்நாத். மொறாயஸ்
படப்பிடிப்பு ஆரம்பம்: 10.02.77
(கதைக்களம் நெடுந்தீவு என்றாலும் பேசாலையில் 43 நாட்களில் படமாக்கப்பட்டது)
திரையிட்ட தேதி: 30.03.1978
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது. அதிக நாட்கள் ஓடிய தியேட்டர் யாழ் ராணி தியேட்டர் 41 நாட்கள்
முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் இது. யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு (ஆதாரம்: இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை)"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே" ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த பாடல்.
மறக்கமுடியுமா இதை.
51 comments:
நமக்குப் பிடித்த ஆக்கங்களை குறித்து எழுதும் போது அதற்கென ஒரு தனிப்பரிமாணமும் அழகும் வந்து விடுகிறதோ?
வாடைக்காற்று படம் குறித்து கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அப்படத்திற்கு, இத்தகைய கனமான இலக்கிய பின்புலம் இருக்கிறது என்று தெரியாது.
இதிலே நடித்த ஏ.ஈ. மனோகரன், எமக்கு, சிலோன் மனோகர் என்ற பெயரிலே பரட்டைத் தலையுடன், ஏற்கனவே அறிமுகமானவர். பிற நடிகர்கள் குறித்து தெரியவில்லை. இதில் நடித்த சந்திரகலா, தமிழ்நாட்டுத் திரைப்படங்களில் நடித்த சந்திரகலாவா என்பதும் தெரியவில்லை.
இடுகைக்கு நன்றி
பிரபா அற்புதமான இரைமீட்பு.செங்கை ஆழியானின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது வாடைக்காற்று.அதிலும் நெடுந்தீவின் புவியியல் அமைப்பு,வாழுயிர்கள் மாந்தர்கள் என்று நுட்பமான வர்ணனைகள் மூலம் அவற்றை கதையினுள் உலவ விட்டிருக்கிறார்கள்.நெடுந்தீவு மக்கள் கல்லாலே வேலி(பகிறு)அமைப்பதைக் கூட குறிப்பிட்டிருப்பார்.நீங்கள் சொல்லும் பாரதிராஜா படம் கல்லுக்குள் ஈரம் பார்த்ததில்லை ஆனால் கடல் மீன்கள் பார்த்தபோது வாடைக்காற்று நாவல் தான் ஞாபகம் வந்தது
வணக்கம் இகாரஸ் பிரகாஸ்
வாசித்துக் கருத்தெழுதியமைக்கு என் நன்றிகள்.
தமிழ் நாட்டின் சந்திரகலா வேறு, இவர் வேறு.
என் பதிவின் முதற் படத்தில் இருப்பவர்கள் ஏ.ஈ மனோகரனும் (சிலோன் மனோகர்), ஈழத்துச் சந்திரகலாவும்.
இதில் குறிப்பிட்ட கே.எஸ் பாலச்சந்திரன் (பட உதவி இயக்குனர்), கமல் நடித்த தெனாலி படத்துக்கான வசன ஒத்துளைப்புப்புக்கு இவரின் வாத்தியார் வீட்டில் என்ர வானொலி நாடக ஒலிப்பேழை பயன்பட்டது. (இவரின் படம், வாடைக்காற்று திரைப்படமான போது என்ற தலைப்பின் கீழ் உள்ளது)
மற்றைய நடிகர்கள் பற்றி உங்களுக்குத் தெரியவாய்ப்பில்லை.
கருத்துக்கு நன்றி ஈழநாதன்,
காலத்தால் முந்திய செம்மீன் படக்களமும் வாடைக்காற்றை நினைவுபடுத்துகின்றது.
//மற்றைய நடிகர்கள் பற்றி உங்களுக்குத் தெரியவாய்ப்பில்லை//
உண்மை. ஈழ இலக்கியமாவது, இணையம் மூலமாக, அப்படியிப்படி என்று தெரிய வருகிறது.ஈழக் கலைஞர்கள் குறித்து சுத்தமாகத் தெரியாது. ஈழத்தமிழ் சினிமாவின் வரலாறு பற்றி, ஏதோ ஒரு மன்றத்திலே, தொடர் ஒன்றை வாசித்த ஞாபகம். ரமணீதரன் சுட்டி கொடுத்தார் என்று நினைவு.
//ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது. எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் , நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்//
நிச்சயமான உண்மை கான பிரபா..... கிடைத்தற்க்கரிய படங்களுடன் இந்த பதிவு நன்றாக இருக்கிறது....
வணக்கம் பிரகாஷ்
என்னால் முடிந்த அளவிற்கு எனக்குத் தெரிந்த ஈழத்துக்கலைஞர்கள் பற்றிய குறிப்பைத் தருகின்றேன்.
/83 கலவரத்தில் ஈழத்துத்திரைப்படங்கள் அழிந்தபோது, ஒரு ரீல் மட்டும் தீக்கிரையாகி ஆனால் முக்கிய காட்சிகள் தப்பிவிட்ட வாடைக்காற்று திரைப்படம் தன்னிடம் இருப்பதாக செங்கை ஆழியான் குறிப்பிட்டார்//
உண்மையா பிரபா... கொப்பி இருக்கிறதா சந்தோசம்.......முன்பு எல்லாம் எரிந்து விட்டதாய் கூறினார்களே...
வணக்கம் சின்னக்குட்டி
உங்களுக்கும் வாடைக்காற்றின் மேல் அபிமானம் இருப்பது தெரியும்:-)
வணக்கம் குண்டக்க மண்டக்க
தாங்கள் அனுப்பிய பின்னூட எழுத்துக்கள் வாசிக்கமுடியவில்லை, தயவுசெய்து யூனிகோட் இல் மீளவும் பின்னூட்டமிடுங்கள்
வணக்கம் சின்னக்குட்டி
அண்மையில் செங்கை ஆழியானை நான் பேட்டிகண்டபோது உறுதிப்படுத்தினார். எனக்கும் மகிழ்ச்சியே.
பிரபா!
இந்த நாவலைப் படித்த போது; நெடுந்தீவைத் தெரியாது; பின் பலவருடங்களால் ஒரே ஒரு தடவை சென்றுள்ளேன்; கதாசிரியரின் உள்வாங்கும் திறனை நினைத்து மெச்சினேன்.கூழக்கடாப் பறவை பற்றிக் கதையில் வருவது,படித்து விட்டு அப்படி ஒரு பறவை எப்படி இருக்கும் என எண்ணி ;பருந்து போல் கற்பனை செய்து வைத்தேன்; இங்கு தொலைக்காட்சியில் பார்த்தபின்பே அதன் பிரமாண்டம்; பறக்குமாற்றல்;எண்ணி வியந்தேன்.
வாடைக்காற்று படம்; நான் தென்னிந்திய சினிமாவின் தாக்கத்திலிருந்ததால்,புது விடயமாக ,ஒன்று இரண்டு, பார்த்த சிங்களப் படங்களின் சாயல் போல் இருந்தது. தொலைக்காட்சி வந்தபின் பல மொழிப்படங்களைப் பார்த்த போதுதான்; இவர்கள் வித்தியாசமாக முயற்ச்சி செய்கிறார்கள் ;என்பது பிடிபட்டது.
நிறையத் தகவல்கள் தந்துள்ளீர்கள்!
யோகன் பாரிஸ்
கானா பிரபா, வாடைக்காற்று நாவல் வாசித்திருக்கிறேன். ஆனால் படம் பார்க்கக் கிடைக்கவில்லை. (படச்சுருள்ஓரளவு முழுமையாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்கள் பதிவு படத்தையே பார்த்தது போல் இருக்கிறது. நல்ல விமர்சனம். படங்கள் அருமை. (கருப்பு வெள்ளைக்கு நிகர் எதுவுமில்லை).
//நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது//
உண்மைதான். அ. பாலமனோகரனின் நிலக்கிளி நாவல் எனக்குப் பிடித்தமான அருமையான நாவல். அது இப்போது இணையத்தில் கிடைக்கிறது. நூலக இணைப்பு இதோ:
நிலக்கிளி
வணக்கம் யோகன் அண்ணா
செங்கை ஆழியானின் தனித்துவமான வர்ணனை காட்சிக்களத்தைக் கண்முன் கொண்டுவந்துவிடும்
வணக்கம் சிறீஅண்ணா
தங்கள் கருத்துக்கும், நூலக இணைப்புக்கும் என் நன்றிகள்
பதிவுக்கு நன்றி பிரபா.
//இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும். சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.//
இது அவரது பிற நாவல்களிலும் இருக்கும் சிக்கல்தான்.
Its Superb...:)
வணக்கம் பிரபா,
அருமையான பதிவு.இதில் நடித்த யேசுரட்ணம் பிரான்சில் இருக்கிறாரர்
அன்புடன் பிரகலாதன்
A.E.Manoharan and Chandrakala acted in a song sequence shot at Vallipuram Temple Area in Point Pedro Area for "Vaadai Katru" film in 1977.
http://balafilms.homestead.com/VaaKaa1.html
வணக்கம் பிரகலாதன்
தங்கள் வருகைக்கும், மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொண்டமைக்கும் என் நன்றிகள்.
வாசித்துக் கருத்தளித்த ரவி, உங்களுக்கு என் நன்றிகள்
//வசந்தன்(Vasanthan) said...
இது அவரது பிற நாவல்களிலும் இருக்கும் சிக்கல்தான்.//
வணக்கம் வசந்தன்
செங்கை ஆழியானின் கதைகளை நன்றாக அனுபவத்துப் படிப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்பதால் இது உங்களுக்கும் தெரிந்திருக்கிறது.
வணக்கம் கானா பிரபா,
செங்கை ஆழியானின் பத்துக் குறுநாவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு "ஆயிரமாயிரம் ஆண்டுகள்" என்ற தலைப்பில் புதிய புத்தகமாக இந்த மாதம் வெளிரவுள்ளது.
இதில் இடம் பெறுபவை,
"பழைய வானத்தின் கீழே"
"முதல் தவறு"
"ஒரு பௌர்ணமிக்காலம்"
"நிலமகளைத் தேடி..."
"யொகாறா"
"அக்கினிக் குஞ்சு"
"சாம்பவி" (கணையாழி)
"யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று" (கணையாழி)
"மீண்டும் ஒரு சீதை" (கலைமகள்)
"வரமும் தவமும்"
வணக்கம் விருபா
இந்த நல்ல தகவல்களைத் தந்தமைக்கு என் நன்றிகள்.
இப்படியான பதிவுகளை தொடர்ந்து தாருங்கள் பிரபா.. என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவும். நன்றி
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளரையோ கலைஞர்களையோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி. வாடைக்காற்று நாவல் இணையத்தில் கிடைக்குமா ?
நிச்சயம் தருவேன் தர்ஷன், தங்கள் வருகைக்கு என் நன்றிகள்
//மணியன் said...
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளரையோ கலைஞர்களையோ எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுத்தியிருப்பது உங்கள் எழுத்தின் வெற்றி. வாடைக்காற்று நாவல் இணையத்தில் கிடைக்குமா ? //
கருத்துக்கு நன்றிகள் மணியன்
வாடைக்காற்று இணையம் மூலம் வாங்கலாம், ஈ புக் ஆகப் படிக்கமுடியாது.
மேல் பின்னூட்டமிட்ட விருபாவின் தளத்தில் ஒருமுறை இது பற்றி விசாரிக்கவும், அது போல்
இந்தத் தளத்தையும் சென்று பாருங்கள், ஒன் லைனில் வாங்கும் வசதியுண்டு:
http://www.tamilemarket.com/pro/book_seng01.htm
இங்கே வாடைக் காற்றைப் பற்றி
வார்த்தைகளால் வரையும் போது
இதமாய் இருக்கிறது.
ஈழத்தின் நல்லதொரு நாவலை படமாக்கியிருந்தாலும் அது 1983ல் நடைபெற்ற இன அழிப்பின் போது எரிந்து விட்டதாகவே அறிந்து வேதனைப்பட்டேன்.
இத் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த ஏ.வி.எம்.வாசகர் அவர்கள் கனடாவிலிருந்து சுவிஸுக்கு வந்த போது.....ஐரேப்பிய தொலைக் காட்சிக்கு ஓர் நேர் காணல் எடுத்த சமயம் என் வீட்டுக்கு வந்திருந்தார். படப்பிடிப்பு காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை நேர்காணலிலும் என்னுடனும் பகிர்ந்து கொண்டார்.
இப்போது இருக்கும் ரீல்களை வைத்து ஒரு டீவீடியாய் ஒரு தொகுப்பு நிகழ்வாய் வெளியிட்டால் அது ஈழத்தின் ஒரு ஆவணமாக இருக்கும்.
ஏதாவது ஒத்துழைப்பு தேவையெனில் என்னால் உதவ முடியும்............
பகிர்தலுக்கு நன்றி பிரபா!
வணக்கம் அஜீவன்
தங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைக்கும் என் நன்றிகள். நிச்சயமாக இதைச்
செங்கை ஆழியான் அவர்களிடம் தொடர்புகொண்டு அறியத் தருவேன்.
aemanoharan and anadarani's contemporary photos show how the time got changed.
Like kallukkuL iiram and vaadikaattru compare there two songs
nith kanagaratnam's kudaththanaiyil and Krishnaraj's ayaa onnu
//Anonymous said...
aemanoharan and anadarani's contemporary photos show how the time got changed.
Like kallukkuL iiram and vaadikaattru compare there two songs
nith kanagaratnam's kudaththanaiyil and Krishnaraj's ayaa onnu //
வணக்கம் அநாமோதய நண்பரே
தேவாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. முன்னர் மலேசியத்தமிழர்களின் லொக் அப் என்ற பாடற் தொகுப்பின் "கொக்கரகர" என்ற பாடலை அப்பட்டமாகப் பிரதியெடுத்து சாக்லெட் படப்பாடலாகத் தந்தார்.
இப்போது நீங்கள் தந்த ஒப்பீடுகையும் மிகப்பொருத்தம்.
நித்தி கனகரட்ணம் தற்போது அவுஸ்திரேலியா, மெல்பனில் தான் இருக்கிறார். எங்கள் வானொலியின் அபிமானிகளில் ஒருவர்.
வணக்கம் அநாமோதய நண்பரே
மேலும் ஒரு தகவல், ஏ.ஈ மனோகரனோடு இருப்பவர் சந்திரகலா. ஆனந்தராண்
"நாகம்மாவும் மரியதாசும்" என்ற படத்தில் இருக்கிறார்,
thambi prabaa appadiyaa? seythikaluku nanri ;))))
ஏ.ஈ மனோகரனோடு இருப்பவர் சந்திரகலா. ஆனந்தராணி
"நாகம்மாவும் மரியதாசும்" என்ற படத்தில் இருக்கிறார்,enpathaiththaan sonneen. aanantharanai meadai nadakangkaLil wadiththup paarththirukkireen. koomaalikaLilum nirmala rajasigaththoodu kannaadi vaarppu tholaikkaadchiyilum. niththi kanagaraththinam ausraliavil iruppathu theriyum. vaadaikkaatru thunai naayagan indrapalavum ausraliavileethaan irukkiraar. I hate him for his phd thesis on tamils
Anonymous said...
ஏ.ஈ மனோகரனோடு இருப்பவர் சந்திரகலா. ஆனந்தராணி
"நாகம்மாவும் மரியதாசும்" என்ற படத்தில் இருக்கிறார்
என்பதைத்தான் சொன்னேன். ஆனந்தராணி மேடை நாடகங்களில் நடித்துப் பார்த்திருக்கிறேன். கோமாளிகளிலும் நிர்மலா ராஜசிங்கத்தோடு கண்ணாடி வார்ப்பு தொலைக்காட்சியிலும். நித்தி கனகரத்தினம் அவுஸ்திரேலியாவில் இருப்பது தெரியும். வாடைக்காட்ரு துணை நாயகன் இந்திரபாலவும் அவுஸ்திரேலியாவில்தான் இருக்கிறார். I hate him for his phd thesis on tamils //
தவறாகப் புரிந்து கொண்டமைக்கு மன்னிக்கவும் நண்பரே.
கண்ணாடி வார்ப்புக்கள் முன்னர் 80 களில் இலங்கை வானொலியில் நாடகமாக வந்தபோது அதை ஒலிப்பதிவு செய்துவைத்திருந்து நேயர் ஒருவர் நான் நடத்தும் "முற்றத்து மல்லிகை" நிகழ்ச்சிக்காகத் தந்தார். என் வானொலிப் படைப்புக்களுக்கான தளம் உருவாகிய பின் அதை ஒலியேற்றுகின்றேன்.
இந்திரபாலாவின் சிந்தனையில் சமீபத்தில் மாற்றம் வந்திருப்பதாகவும் , சமீபத்தில் அவர் எழுதிய வரலாற்று நூல் அதைச் சான்றுபகிர்வதாகவும் அறிந்தேன்.
//இந்திரபாலாவின் சிந்தனையில் சமீபத்தில் மாற்றம் வந்திருப்பதாகவும் , சமீபத்தில் அவர் எழுதிய வரலாற்று நூல் அதைச் சான்றுபகிர்வதாகவும் அறிந்தேன்.//
இந்திரபாலா அவர்கள் ஈழம் என்ற சொல்லுக்கு பல முரண்பாடான கருத்துக்களை வைத்திருந்தார். அது ஒரு சிங்களச் சொல்லென்று தனது thisis இல் நிறுவியிருந்தார் (!). இது குறித்து பல சர்ச்சைகள் அன்று எழும்பியிருந்தன. ஈழம் குறித்து Peter Schalk இன் ஆய்வுகள் தமிழ்ச் சொல்லென விளக்கியிருக்கிறது.
மேலதிக தகவல்களுக்கு நன்றி சிறீ அண்ணா. வரலாற்றாசிரியர்கள் தவறிழைக்கும் போது அது பேரினவாதிகளுக்குச் சாதகமாகிவிடுகிறது.
ஈழத்து திரைப்படம் என்பது எனக்கு புது செய்தி. தமிழகம் தவிர வேறு எங்கும் தமிழ் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்று தான் நினைத்திருந்தேன்
வணக்கம் குறும்பன்
தாங்கள் இப்போது நம் நாட்டுப் படங்கள் பற்றி அறிந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி.
//ஈழத்து திரைப்படம் என்பது எனக்கு புது செய்தி. தமிழகம் தவிர வேறு எங்கும் தமிழ் திரைப்படம் தயாரிக்கப்படவில்லை என்று தான் நினைத்திருந்தேன்//
குறும்பன் புலி/புளி பற்றி பதிவு போட்ட கையோட இங்கு வந்து குறும்பு விடுகிறார் போற் தெரிகிறது.
Kanags said...
//குறும்பன் புலி/புளி பற்றி பதிவு போட்ட கையோட இங்கு வந்து குறும்பு விடுகிறார் போற் தெரிகிறது.//
:-)))
வணக்கம் பிரபா.. தலைப்பைப் பார்த்தவுடன் என் மனதுக்குள் "வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே, நல்ல வாழ்க்கையுண்டு எங்களுக்கு ஓடத்திலே.. இரவினிலே(நிலவினிலே?) தொழிலுக்காக செல்லுகிறோம்.. அந்த இறைவனைத்தான் நம்பி இங்கு வாழுகிறோம்.." என்ற வரிகள் என் மனத்தில் ஓடியது.. எழுபதின் இறுதிகளில் (அல்லது எண்பதின் ஆரம்பத்தில்) இலங்கை வானொலியில் ஒலித்த இந்தப் பாடல் இன்றும் என் மனதில் பதிந்த ஒன்று. தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வானொலியைத் தவறாமல் கேட்ட அந்த நாட்கள் மறக்க முடியாதவை.. உங்கள் கட்டுரை என்னை பழைய நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றது.(அதே போல் இன்னும் நினைவில் உள்ள இன்னொரு பாடல்,"இந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன்.. அதுதான் எனக்குத் திருநாள்.. என் கனவுகள் பலித்திடும் பெருநாள்.." எனத்தொடங்கும் பாடல்.(படம் எதுவென்று நினைவில் இல்லை..).. உங்கள் பதிவுகள் அழுத்தமாகவும், வாசிப்பவர்களை கூடவே கைபிடித்து நீங்கள் எழுதும் உலகிற்கே அழைத்துச் செல்லும் வலிமை கொண்டவை..
வணக்கம் கடல்கணேசன்
தமிழ்நாட்டுச் சகோதரர் நீங்கள் எங்கள் ஈழத்துப் பாடல்களைப் பற்றிச் சிலாகித்துப் பேசியதை நான் வாசித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. உண்மை.
எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா?
"இந்த ஊருக்கு ஒருநாள்" என்ற பாடலை முத்தழகு பாட நான் உங்கள் தோழன் திரைப்படத்தில் வந்தது என நினைக்கின்றேன்.
மிகவும் நன்றிகள் உங்களுக்கு.
முதற்தடவை வருகிறேன். பத்து வருடத்துக்கு முன் வாசித்த கதை, நினைவுபடுத்தியதற்கு நன்றி ,
naayakan
வணக்கம் நாயகன்
தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
கானப்பிரபா,
வாடைக்காற்று நாவலைப் பற்றி கூறப்போய் ஈழத்து திரைப்படங்களைப்பற்றிய பல தகவல்கள் வருவதற்கு களம் அமைத்திருக்கிறீர்கள். நன்றி இருப்பினும் சில திருத்தங்ஙகள்.
வாடைக்காற்று திரைப்படத்தின் துணைநாயகர்களில் ஒருவர் அவுஸ்திரெலியாவில் வாழும் பேராசிரியர் இந்திரபால என்பது தவறு. இங்கிலாந்தில் வசிக்கும் மருத்துவர் இந்திரகுமார் அவர்களே வாடைக்காற்றில் என்னோடும், மனோகரனோடும் இணைக்கதாநாயகனாக நடித்தவர். விணவெளி யாத்திரை பற்றி நூல்கள் எழுதிப் பிரசித்திபெற்றவர்.
இந்த ஊருக்கு ஒரு நாள் திரும்பி வருவேன் என்ற பாடல் நான் உங்கள் தோழன் என்ற படத்தில் இடம்பெற்றதல்ல. மாமியார் வீடு என்ற படத்தில் ஜோசப் ராசேந்திரன் பாடியது. இவர்தான் வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே பாடலையும் பாடியவர்.
கே.எஸ்.பாலச்சந்திரன்
வணக்கம் பாலச்சந்திரன் அண்ணா
முதலில் எங்கள் தாயகத்தின் தனித்துவம் மிக்க கலைஞர்களில் ஒருவரான நீங்கள் என் வலைப்பூவிற்கு வந்ததற்கு மிக்க நன்றிகள்.
என் மூலப்பதிப்பில் டொக்ரர் இந்திரகுமார் என்றே குறிப்பிட்டிருந்தேன், வாசகர் ஒருவர் தான் தவறுதலாகப் புரிந்து கொண்டிருந்தார், நானும் சுட்டிக்காட்ட மறந்துவிட்டேன்.
மாமியார் வீடு பாடல் பற்றி நாம் அறியாத தகவல்களை உறுதிப்படுத்தியமைக்கும் மிக்க நன்றிகள்.
மிக அருமையான கட்டுரை. மினகட்டு செய்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும். இன்நிலையில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அனைத்து தமிழ் நூல்களையும் இணையத்தில் ஈ புத்தகமாக வருவதை நான் விரும்பவில்லை. காரணம் நிறைய புத்தகங்கள் வெளிவராமைக்கு காரணம் எம் மக்களின் வாசிப்பு பழக்கமே. ஒரு குறிப்பிட்ட அளவு புத்தகம் 500 அச்சடித்து விற்பதானால் ஒரு புத்தகத்திற்கு 200 ஆகும் என்றால் 1000 அச்சடித்து ஒரு புத்தகத்தின் செலவு 90-110 ருபாயாக இருக்கும். ஆனால் எங்கள் மக்கள் 500 புத்தக்ததை வாங்க மாட்டார்கள். வாழ்கை்கையில் முன்னேறுவது எப்படி ஜேதிடம் என்று மிகப் பயனுள்ள புத்தகங்களை விரும்பி வாங்குவார்கள். நல்ல இலக்கிய அறிவியல் கல்வி சம்பந்தமான புத்தகங்களை வாங்க மாட்டார்கள். ஒரு புத்தகத்தின் விலையை தீர்மானிப்பது வாசகர்கள் தான். (நல்ல வெளியீட்டாளர்கள் விற்பனையாளர்கள் .... அப்படி யாரும் உண்டா??) என் கருத்து மேற்படி விடயத்தில் இருந்து கொஞ்சம் விலகிப் போகி விட்டது. மன்னிக்கவும்.
வணக்கம் நண்பரே
வாசித்துத் தங்கள் உணர்வை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
என்னைப் பொறுத்தவரை இயன்றளவு அச்சில் ஏறும் நூலாகவே வாங்கி விடுவேன். பெரிய நாவல்கள், புதினங்களை வாசிப்பதற்கு அதுவே மிகச்சிறந்த ஊடகம்.
மின்னூலாக்குவதில் ஒரு நன்மை இருக்கின்றது. அது, எம்மினத்தோடு அழிந்து கொண்டிருக்கும் இலக்கியங்கள் ஏதோ வடிவில் சேமிக்கப்பட்டிருப்பதற்கு இது வகை செய்கின்றது. அத்தோடு பரவலான வாசகர்களையும் போய்ச்சேர்கின்றது.
கானா,
நன்றாக விமர்சனம் செய்துள்ளீர்கள், நாவலாக வந்து திரைப்படமாக வரும் போது ஏற்படும் சிதைவுகள் இல்லாமல் படம் வந்திருக்கும் போல தெரிகிறது.
நான் ஒரே ஒரு இலங்கை , இந்திய கூட்டு தயாரிப்பு படம் தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன், முத்துராமன் நடித்திருப்பார் அதில். பெயர் தெரியவில்லை.
பைலட் பிரேம் நாத் என்ற படமும் அப்படிப்பட்ட கூட்டு தயாரிப்பா?
சிலோன் மனோகரின் பட்டு மாமியே உன் சிட்டு மகள் எங்கே போன்ற பாடல்கள் மூலம் அறிவேன், மற்றப்படி உங்கள் மூலம் பல புதிய தகவல்களை அறியப்பெற்றேன்.
முன்னர் கடல்புறத்தில் என்று ஒரு தொலைக்காட்சி தொடர் கூட வந்தது அதுவும் நீங்கள் சொன்ன இக்கதையை ஒத்தே இருக்கும்.
வாங்க நண்பா
நீங்க சொன்ன முத்துராமன் படம் பேரு "நங்கூரம்". அதில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் நம்மூர் வி.கே.டி.பாலன். மதுரா ட்ராவல்ஸ் என்று சென்னையில் வைத்திருக்கின்றார். கூடவே பொதிகை தொலைக்காட்சியில் வாழ்வில் பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களைப் பேட்டி கண்டு நிகழ்ச்சி செய்கின்றார்.
இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பாக வந்த மேலும் சில படங்க>
தீ - ரஜினி காந்த்
பைலட் பிரேம்நாத் - சிவாஜி
ரத்தத்தின் ரத்தமே - ஜெய்சங்கர்
என்று தொடரும். மேலும் சில படங்களும் உண்டு.
வாடைக்காற்று திரைப்படமே ஈழத்தில் அப்போது வெளிவந்த படங்களில் முழுமையான திரைப்படத்துக்கான தகுதியைக் கொண்டிருந்ததாகச் சொல்லுவார்கள்.
Post a Comment