அகலக் கண் விரித்து, ஆச்சரியத்தோடும், பிரமிப்போடும், மிரட்சியோடும் பார்க்கும் அந்தச் சிறுவனின் வயதை ஒத்த அதே பருவத்தில் தான் நானும் ஆகப் பெரிய அந்தப் போர்க் காலத்தை முதன் முதலில் அனுபவித்தேன்.
இந்திய அமைதிப் படை காலம் என்பது என்பது என் பதின்ம வயதில் என்னை உள ரீதியாகப் பலமாகத் தாக்கியதை முன்னர் பல அனுபவப் பகிர்வுகள் மூலம் எழுதியிருக்கிறேன்.
ஒரு ஐந்து நிமிடக் கண தூரத்தில் ஷெல் வீச்சில் இருந்து நாம் தப்பியதும், எமக்கு முன்னே போன குடும்பம் மாண்டதும் கூட நான் எழுதியதில் ஒன்று.
எனவே அந்த உலகத்தில் ஒன்றரை மணி நேரம் கொஞ்சமாவது வாழ்ந்து விட்டு வந்தது போலவே “நீளிரா”
பட அனுபவம் வாய்த்தது.
நீளிரா வில் துவக்கோடு விளையாடும் சிறுவர்கள், கல்யாண அமளியில் பெரியோர்கள் என்று இரண்டு தடங்களில் அந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதைப்போக்கு.
அந்தச் சிறுவனின் பார்வையிலேயே கதையை நகர்த்தி இருக்கலாம்.
“அழியாத கோலங்கள்” கொடுத்த தன் குருநாதர் பாலுமகேந்திராவின் உத்தியை சீடர் சோமிதரன் கையாண்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.
நீளிரா போலவே வீடியோ கடையில் பட கசெட் எடுத்துப் போட்டு பார்ப்பது, ஊமை விழிகள் விஜயகாந்த் மேலான நேசம், “அடுத்த நாள் ஐந்து மணிக்கு முன்னம் கசெட்டைக் கொண்டு வாங்கோ” என்ற வீடியோக் கடைக்காரரின் விதிமுறை இதெல்லாம் கண்டு அனுபவித்தவன்.
அந்தப் பெடியன் போலவே ஒரு பட போஸ்டர் கிடைக்குமா என்ற நப்பாசையும் இருந்தது.
போர்க்கால நடைமுறையில் எங்கள் வாழ்வியல் அந்தந்தக் காலப்பகுதியை ஒட்டி மாறிவிடும்.
தேசிய அடையாள அட்டைக்குப் பதில் பாடசாலை அடையாள அட்டையைக் காட்டுவது இன்னும் பாதுகாப்பானது என்ற அந்த நுணுக்கமான வாழ்க்கை முறையை அனுபவித்தவன் இங்கே அதையும் படத்தில் பதிவு செய்த போது உருவாக்கத்தின் நேர்த்தியில் ஒரு சோறு என நினைத்துக் கொண்டேன்.
பெட்டியில் துவக்கு மறைத்து வைத்தல், சாரத்தோடு பெடியள், நேரு படம் மாட்டிய வீட்டுச் சுவர், தாடிக்கார அண்ணன்மார், பெடியளுக்குச் சாப்பாட்டு பார்சல் கொடுப்பது, திடீர் சுற்றி வளைப்புகள், தலையாட்டியின் காட்டிக் கொடுப்பில் சிக்கும் அப்பாவி, துவக்கால் அடி வாங்குவது இதெல்லாம் கூட நாம் கண்டதும் கேட்டது.
ஒரு கல்யாண வீட்டின் இரவு தான் கதைக் களம். ஆனால் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட திரைக்கதையும் சரி, காட்சியமைப்புகளும் சரி ஒட்டுமித்த அமைதிப்படை காலத்து விவரணப் படமாகக் காட்சி தருகிறது.
அந்த 87,88 களில் எடுத்த புகைப்படங்களை எடுத்துப் பார்த்தால் அவற்றின் நிறக்கலவை எப்படியிருக்குமோ அதையே பிரதி பண்ணிய அச்சொட்டான ஒளிப்பதிவு நேர்த்தி.
படத் தொடக்கத்தில் அதிர்வூட்டும் பின்னணி இசை உறுத்தல் எழுத்தோட்டத்தை வித்தியாசப்படுத்த வந்திருக்கும் என்று நினைத்தால் தொடர்ந்து வரும் காட்சியமைப்புகளுக்கும் ஒரே திசையில் பயணிக்கும் பின்னணி இசையில் இன்னும் அதிகம் மினக்கெட்டிருக்கலாம்.
சிறப்புச் சப்தத்துக்கான வேலைகளை அந்த இயற்கைச் சூழல் ஒலிகளை வைத்தே இன்னும் செம்மையாக்கி இருக்கலாம்.
குறிப்பாக ஆங்காங்கே காட்டிய கோழியின் கொக்கரிப்பு, நாய் குரைப்பு போன்ற நேர்த்தி பின்னர் இல்லாமல் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் பரபரப்பான காட்சிகளில் தான் இசையமைப்பாளர் கே நிமிர்கிறார்.
பாத்திர வடிமைப்பில் கயல் வின்சென்ட் இன் அனுபவ விளைச்சல் தெரிகிறது. தாய் பாத்திரம், அந்தக் காதலர்கள் காட்சியும் சிறப்பு, ஆனால் மீதிப் பாத்திரங்களை இன்னும் செம்மையாக்கி இருக்கலாம். கதையோட்டத்தை மழுங்கடித்து விடும் என எண்ணி இருக்கலாம்.
அந்த மன நிலை பிறழ்ந்த பெண் பாத்திரம் அந்தப் போர்க்காலத்தின் நிதர்சன சாட்சி தான் ஆனால் நீளிராவின் கதைத் திருப்பத்தை அவரை வைத்து நகர்த்தியது படத்தின் யதார்த்த மீறல்.
“நீளிரா” படத் தலைப்பு அதீத கவிதைத்தனமாகப்பட்டது. எழுத்தாளர் உமா வரதராஜன் சொன்னது போல “நீண்ட இரவு” போல எளிமைப்படுத்தி இருக்கலாம்.
படத்தின் இறுதிக் காட்சியில் இந்திய இராணுவத் தளபதி மன்னிப்புக் கேட்பதை வைத்து விமர்சனமும் கண்டேன். அதெல்லாம் நடக்குமா என்றெல்லாம் கேட்பவர்கள் அந்த இடத்தில் தாத்தா சொல்லும்
“எத்தனை பேரிட்ட மன்னிப்பு கேட்பியள்” என்பதைத் தவிர்த்து விட்டார்கள். இந்த மாதிரியான காட்சியமைப்பு படைப்பாளி தான் சொல்ல வந்த செய்தியைக் கடத்தப் பாவிக்கும் ஒரு உத்தி மட்டுமே. வேறெந்த அரசியலும் இல்லை.
இந்தப் படத்தைப் பார்த்தவர்களில்
ஒன்று
இந்திய அமைதிப் படை காலத்தில் அந்த அனுபவங்களைச் சந்தித்தவர்கள்,
இரண்டு
இந்திய அமைதிப் படை காலம் மட்டுமல்ல, போர்ச்சூழல் கூட அந்நியப்பட்ட ஈழத்தவர்
மூன்று
ஈழத்துக்கு வெளியேயான எமது இனத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளைக்
கேட்டு மட்டுமே அறிந்த சமூகம்
இந்த மூன்று தரப்பில், மூன்றாவது தரப்பு மனிதர்களால் மட்டுமே நீளிராவை நேசிக்க முடிந்தது என்பது வேதனையானதொரு செய்தி.
நாங்கள் அனுபவித்த அந்தக் கொடுமையான காலத்தை மீண்டும் பார்க்க விரும்பவில்லை என்று என் சமகாலத்தவர் சொன்னபோது உள்ளுக்குள் வேதனைப்பட்டேன்.
நம்முடைய காயங்களை, துன்பியல் வரலாறுகளை நாங்கள் மீண்டும் மீண்டும் நினைப்பூட்ட வேண்டும்.
எங்கள் அடுத்த தலைமுறைக்கும் அந்த வலியையும், வேதனையையும், வாழ்வியலையும் சொல்ல வேண்டும்.
சொல்லப் போனால் “நீளிரா” படம் வெளியான போது சோமிதரன் இந்தியாவுக்குச் சோரம் போனார் என்று விமர்சன சிகாமணிகள் சிலரது கருத்தைப் படித்துச் சஞ்சலப்பட்டேன்.
படத்தைப் பார்த்து விட்டு ஒரு முடிவுக்கு வருவோம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கியவன், அந்தக் கதையில் வரும் எளிய மனிதர்களின் உணர்வுகளுக்குள் அடங்குப்பட்டேன்.
மொத்தத்தில் சோரம் போகும் அப்படி ஒரு வெங்காயமும் இல்லை என்ற கருத்தையே பதிவாக்குவேன்.
ஏனெனில் இந்தப் படைப்பில் காட்டிய அத்தனை வாழ்வியலையும் கண்டவன்.
தற்போது Zee 5 தளத்தில் கிடைக்கிறது.
அந்த அனுபவங்களுக்கு நீங்களும் சென்று வாருங்கள்.
பதிவை எழுதியவர் : கானா பிரபா
உயிரினும் மேலான பாடல் பின்னாளில் வந்தது, நிதர்சனம் தொலைக்காட்சி பார்ப்பது கூட அந்தக் காலச் சூழலுக்குப் பொருந்தாது. அதன் இயக்கம் 87 உடன் நிறுத்தப்பட்டது.
மணிச்சாமான் என்று கதைப்பதை இன்றைய யுகம் தெரிந்து வைத்திருக்குமோ என்னமோ அதை ஞாபகப்படுத்தியதும் நேர்த்தியின் ஒரு துளி.
87 ஆம் ஆண்டு டயறி படிப்பது போல இந்தப் படம் இருக்கிறது, குறியீடாகவும் பல காட்சிகள் உண்டு.
ஒரு படத்துக்குள் ஓராயிரம் அனுபவ இடுக்குகளோடு எடுக்கப்பட்ட படம் மட்டுமல்ல, பொருத்தமான காலக் காத்திருப்பில் எடுக்கப்பட்டதால் அந்தக் களம் குறித்த காட்சிச் சமரசம் இல்லை.
ஒரு வீட்டை வைத்து சோமிதரன் ஒரு காலத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார் பெருந்திரையில்.
கானா பிரபா
20.05.2026

0 comments:
Post a Comment