skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, June 15, 2025

பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய திருமதி. புவனா இராஜரட்ணம் பேட்டி

ஆஸி தமிழ்க் கல்விச் சமூகத்தில் இருந்து திருமதி புவனா இராஜரட்ணம் பேசுகிறார்

பேட்டி கண்டவர் : கானா பிரபா


கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கி வரும் மெல்பர்ன் பாரதி பள்ளியின் பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய புவனா இராஜரட்ணம் அவர்களால் ஆக்கப்பட்ட 

நான்கு சிறுவர்களுக்கான வில்லிசை நாடக எழுத்துருக்கள் கொண்ட இந்நூல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இளைய சமுதாயத்தின் தமிழ்க் கல்வியை சிறுவர் நாடகங்கள் மூலம் தூண்ட முடியும் என்ற நம்பிக்கையோடு புவனா இராஜரட்ணம் அவர்கள் வழங்கிய செவ்வியை ஆஸி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 

எடுத்திருந்தேன். அதனைச் செவிமடுக்க


https://www.youtube.com/watch?v=zMecw48MN1c




Posted by கானா பிரபா at 10:26 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, May 30, 2025

எல்லோருக்கும் AI 📚 “எல்லோருக்கும் அவசியமான கையேடு" 📚


“தற்போது மனிதன் பேசும் மொழியே நிரலாக்க மொழியும் ஆகும். உலகில் உள்ள அனைவரும் இப்போது ஒரு நிரலாளர். இது AI ஆல் ஏற்பட்ட ஒரு அதியசம்" – ஜென்சன் ஹூவாங்

அன்புச் சகோதரன் ப.முகுந்தன் படைப்பாக வெளிவந்திருக்கும் எல்லோருக்கும் AI என்ற நூலைப் படித்துப் பிரமித்துப் போனேன்.

மாணவருக்கான ஒரு வழிகாட்டல் நூலாக இதைக் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், AI சார்ந்த கற்கை நெறிகளைக் கற்ற என் போன்றவருக்கும் கூட மேலதிகமான செய்திகளையும், வரலாற்றுப் பின்புலன்களையும் தாங்கிய அற்புதமானதோர் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.

ஒரு பாட நூலுக்குரிய நேர்த்தியான கட்டமைப்பு, செயன்முறை விளக்கங்கள், பயிற்சி போன்ற அம்சங்களைக் கச்சிதமாக ஒவ்வொரு அலகிலும் கொடுத்தவாறே பரந்து விரிகின்றது இந்தத் தொழில் நுட்பம் குறித்த கையேடு.

ஒரு அறிவியல் நூலில் அ ந்நியமில்லாமல் தெளிந்த நீரோடை போலப் பயணிக்கும் எழுத்து, மிகச் சிறந்த வழிகாட்டியாகக் கருத்தூன்றி நிற்க உதவுகின்றது.

பக்கங்கள் தோறும் கொடுக்கப்பட்ட AI செயலிகளை நாமும் பரிசோதித்து அந்தந்தக் களங்களை அனுபவ ரீதியாகப் பயிலக் கூடிய வகையில் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

நமது இதிகாச புராணங்கள் மட்டுமன்றி மற்றைய மேலைத்தேய நாகரீகங்களில் பழங்காலத்தில் சொல்லப்பட்ட கற்பனைக்கும் எட்டாத விடயங்களை இப்போது இந்த எவ்வளவு தூரம் கண் முன் கொடுக்கின்றது என்பதை ஒப்பீட்டு உதாரங்ணங்கள் வழி பகிர்கின்றார்.

AI குறித்துச் சமூகத்தில் பேசப்படும் நிலைப்பாடுகளைக் காட்டி அவற்றின் மெய்த்தன்மை குறித்துப் பேசுகின்றார்.

Artificial Intelligence (AI) எனும் செயற்கை நுண்ணறிவின் (நடைமுறை நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்குக் குறுகியகாலத்துக்குள் பரந்து விரிந்து விட்டது. 

மேலை நாடுகளில் இதற்கென ஒரு தனிப் பிரிவே உருவாக்கப்பட்டு அதில் நுட்பமும், ஆற்றலும் மிக்கோர் உள்வாங்கப்படுகின்றனர்.

நுகர்வோர் சமூகத்தில் நம் அன்றாட வாழ்வில் மறைமுகமாகச் செயற்பட்ட தொழில் நுட்பத்தை இன்று நம் உள்ளங் கைக்குள் வைத்து நாமே பல செயன்முறைகளைச் செய்யக் கூடிய அளவுக்கு ஏகலைவர்களாகி விட்டோம். 

இன்னொருபுறம் பொருட்கள், சேவைகளின் பயன்பாட்டில் மறைமுகமாக இயக்கு கருவிகளாக இருந்தவை இன்று பன்மடங்கு திறன் மிக்கவையாக மாறி விட்டன. இன்னும் இன்னும் அவற்றின் மேம்பாடு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகின்றது.

இந்த நிலையில் நம் தமிழ்ச் சமூகத்துக்கு AI குறித்த முழுமையானதொரு பரிமாணத்தை இதை மீறிக் கொடுக்க முடியுமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கின்றது.

முழுக்க முழுக்க AI வழியாகவே இந்த நூல் ஆக்கப்பட்ட செய்தியையும் சொல்லி, ஒரு முழுமையான அனுபவ வெளிபாட்டைக் காட்டி நிற்கின்றார் ஆசிரியர்.

இப்படியானதொரு அறிவியல் படைப்பைக் காலச் சூழலுக்கேற்ப உருவாக்கிய முகுந்தனுக்கும், அழகான கண் கவரும் படங்களை ஒவ்வொரு ஆக்கத்தின் பேசு பொருட்களுக்கும் கொடுத்த அபிலாஷ் மற்றும் அட்டைப்படத்தை உருவாக்கிய விமலாதித்தன், மற்றும் பிழையற மெய்ப்புத் திருத்தம் செய்த திவாகரி என்று இந்த நூல் முழுமைக்கும் திறமானதோர் பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

இவ்வளவுதூரம் கடினமானதோர் முயற்சியை எடுத்து வழங்கியுள்ள அறிவியல் நூலை, பிரதியெடுக்கவும், அச்சிட்டு விநியோகிக்கவும் எல்லோருக்கும் அனுமதியைக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் வேண்டி நிற்பது ஒன்றே தான்

“மற்றொருவர் கற்றுக்கொள்ள உதவுங்கள்.”

ஆகவே உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ச் சமூகம் இந்த நூலை பிள்ளைகளில் இருந்து பெரியோர் வரை பாவித்துப் பயனடைய உதவுங்கள்.

கானா பிரபா

இணைப்பு

https://book1.ai2all.org/?fbclid=IwY2xjawKl711leHRuA2FlbQIxMABicmlkETFERmFmcHBKYzdLR040TVBaAR4IyuZFBSQj98jHbdcsammEiSP6CmdwuqlBcq4iVyDpgBxPl33fXIQaAz8oAw_aem_MPhZ-v7jIR0V2BzAyeHDJA&page=1

Posted by கானா பிரபா at 12:03 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, May 26, 2025

அறப்பணியில் சவால்களும் சாதனைகளும் -செஞ்சொற் செல்வர், கலாநிதி ஆறு. திருமுருகன் சிறப்புப் பேட்டி


செஞ்சொற் செல்வர், கலாநிதி ஆறு. திருமுருகன் தற்பொழுது சிட்னிக்கு  வருகை தந்துள்ளார்.

நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியில் சமூகப் பணிகளில் அண்மைய இலக்குகள் மற்றும், சவால்களும் சாதனைகளுமாகப் பேசுகிறார்.

பேட்டியைக் கேட்க

https://www.youtube.com/watch?v=mnt-lzn7CUg


Posted by கானா பிரபா at 9:23 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, April 21, 2025

வாண்டு மாமா நூற்றாண்டு ❤️

எங்கள் அம்மாவின் இளமைக்காலத்துப் பொழுதுபோக்கை, எங்கள் வீட்டின் புத்தக அறை மெய்ப்பிக்கும். ஆசிரியையாக மலையகத்துக்குச் சென்ற காலத்தில் இருந்து அவருடைய பேச்சுத்துணையில் முதல் ஆள் கல்கி, ஆனந்த விகடன் தான். அந்தக் காலத்துக் கல்கி, ஆனந்த விகடன் சஞ்சிகைகளில் வந்த கதைகளைத் திரட்டிப் பின்னர் கோர்த்து ஒவ்வொரு கதைகளின் சித்திர அட்டைகளை முகப்பில் ஒட்டி அடுக்கி வைத்திருப்பார்.

எங்கள் வீட்டில் எந்த அறைக்கும் சுதந்திரமாக உலாவலாம் எதையும் எடுக்கலாம் ஆனால் அந்தப் புத்தகக் கட்டுகளை எடுப்பதென்றால் அம்மா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறப் பகீரதப் பிரயத்தனம் தான் செய்ய வேண்டும். அப்பாவும் புத்தகப் பிரியர் என்றாலும் அவருடைய எழுத்தாளர்கள் கல்கி, ஜானகிராமன், அகிலன் என்று இருக்கும். அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா என்று அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கும் சிறுவர் சஞ்சிகைகளை விழுந்தடித்துப் படித்துச் செரிமானம் அடைவதற்குள் இன்னொரு புத்தகத்தின் மேல் கை படரும். அப்படியான ஒரு நாளின் தான் என் தொல்லை தாங்காமல் அம்மா தான் கட்டி வைத்த புத்தகச் சொத்தில் இருந்து "ஓநாய்க் கோட்டை" என்ற சித்திர நாவலை எடுத்துத் தந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. "புத்தகத்தை ஒரு சிறு கீறலும் இல்லாமல் படிச்சு முடிச்சுட்டுக் குடுத்துடவேணும்" என்று என் அம்மாவின் கட்டளையெல்லாம் ஒரு காதில் போட்டாச்சு.

இலேசாகப் பழுத்துப் போன அந்தக் காகிதக் கற்றையில் பொதிந்த ஓவியக் குவியல்களோடு நான் இன்னொரு உலகத்துக்குப் பயணிக்கிறேன். ஒவ்வொரு பக்கம் பக்கமாகப் பிரமிப்போடு படிக்கிறேன் அதை. அன்றுதான் வாண்டுமாமா எனக்கு அறிமுகமானார். அம்புலிமாமா யுகத்தில் பொத்தம் பொதுவாக எழுத்தாளர் யார், எவர் என்ற ஆராய்ச்சி இல்லாமல் படித்துக் கடந்து போன எனக்கு "வாண்டு மாமா" என்ற எழுத்தாளரைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற உந்துதலை அந்தப் பால்யகாலம் விளைவித்தது. அவரின் எத்தனை கதைகளை நூலகங்களில் தேடிப் படித்திருக்கின்றேன் என்று நினைவில்லை. ஆனால் என் வாசிப்பு அனுபவத்தில் வாண்டு மாமா தான் அடையாளத்தைத் தேடி வாசிக்கும் பண்பை முதலில் வளர்த்தவர். என்னுடைய மத்திய வகுப்பில் வேடிக்கையாக "ஒற்றைக்கண் மந்திரவாதி" என்றெல்லாம் கதைகளை நானாகக் கைப்பட எழுதிச் சித்திரம் எல்லாம் வரைந்து நண்பர்களுக்குப் படிக்கக் கொடுப்பேன். அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் வாண்டு மாமா.

சிலவேளை வயதுக்கு மீறிய எழுத்துகளை நூலகத்தில் இருந்து காவி வந்து வீட்டுக்குள் வந்து என் அப்பாவின் கண்ணில் பட்டால் போதும் "இப்பிடியான அழுகல் புத்தகங்களை வாசிக்கக் கூடாது, அதெல்லாம் பெரியாக்களுக்குத் தான் எழுதினவை" என்று அப்பா கடிந்து கொள்வார். எங்கள் பால்ய காலத்தில் வீட்டில் பாடப்புத்தகத்துக்கு அடுத்ததாகச் சுதந்தரமாகச் சுற்றித் திரிந்தவை வாண்டுமாமாவின் சித்திரக்கதைக் கட்டுகளும், அழ.வள்ளியப்பாவின் பாடல்களும் தான். அவற்றை அப்பாவுக்குக் காட்டிக் காட்டி வாசிக்கும் போது ஏகப்பட்ட சலுகையும் மரியாதையும் கூடக் கிடைக்கும்.

இன்று நினைத்துப் பார்க்கும் போது எண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்தில் தேக்க நிலை இருப்பது போலத் தென்படுகின்றது. அதற்குக் காரணமே அந்தக் காலத்தில் மலையளவு கிட்டிய சிறுவர் இலக்கியப் படைப்புகள் தாம். ஒரு பக்கம் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் தரும் வண்ண வண்ண மொழிபெயர்ப்புப் படைப்புகள், இன்னொரு பக்கம் அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இவற்றோடு அந்த நாளில் பொலிவோடு களமிறங்கிய கோகுலம் என்று சிறுவருக்குத் தீனி கொடுத்தவை ஏராளம்.

எங்கள் ஈழத்துத் தமிழ் மொழிவழக்கில் என் நினைவுக்கு எட்டியவரை "வாண்டு" என்ற சொற்பிரயோகத்தைப் பாவித்ததில்லை. அதற்கு மாற்றீடான சொல்லே புழக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால் வாண்டுமாமா என்ற சொல்லின் அர்த்தம் எங்களுக்குத் தெரிந்தது அவர் கொடுத்த படைப்புகளாகத் தான். மூப்பும், பிரிவும் மனிதரைத் தாக்கும் என்றாலும், வாண்டுமாமாவின் பிரிவைக் கேட்டபோது ஒரு சில நிமிடங்களேனும் என் சொந்தக்காரரை இழந்த துயரை ஏற்படுத்திவிட்டதற்குக் காரணமே அவரின் எழுத்துகளின் வழியான பந்தமும், நெருக்கமும் தான்.

என் புத்தகப் பட்டியலில் இன்றும் சிறுவர் இலக்கியத்தைத் தேடி நுகர்வதற்கு முக்கியமாக வாண்டுமாமாவின் தாக்கம் மிகப்பெரியது.

ஏப்ரல் 21,2025 வாண்டுமாமா பிறந்த நூற்றாண்டு தினம், அதனையொட்டி எழுத்தாளர், நண்பர் என்.சொக்கன் அவர்களும்,  இணைய சமூகத்தில் பரவலாக அறியப்பட்ட சித்திரக்கதைப் பிரியர் மற்றும் வாண்டு மாமா நூற்றாண்டு நிகழ்வைத் தன் இலக்கிய குழாமோடு வெற்றிகரமாக நிகழ்த்திய  நண்பர் கிங் விஸ்வாவும், வாண்டு மாமா நம்மை விட்டுப் பிரிந்த போது (12 ஜூன் 2014) வழங்கிய நினைவுப் பகிர்வையும் இந்த வேளை பகிர்ந்து கொள்கிறேன்.

Youtube

https://www.youtube.com/watch?v=Ct0KK9bujTA


Spotify

https://open.spotify.com/show/25ZvXOpdQymPa62Btp8GNG


கானா பிரபா

Posted by கானா பிரபா at 1:56 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, March 30, 2025

சாதித்துக் காட்டிய எங்கட பெடியள் ❤️❤️❤️

மூன்று மணி நேரம் கடந்த நிகழ்ச்சி, அரங்கமே வயது வேறுபாடின்றி ஆர்ப்பரித்துக் கொண்டாடும் காட்சி.

இதெல்லாம் தென்னிந்திய நட்சத்திரங்களைக் கண் கொண்டு பார்த்த அனுபவங்கள். 

ஆனால் ஈழ மண்ணின் இளவல்கள், எந்தவிதமான வர்த்தக அடையாளமும் இன்றி, இன்று சமூக வலைத்தளத்தையே தம் கருவியாகக் கொண்டு ஒட்டுமொத்த உலகத் தமிழரையே மயக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியம் பறைந்தது, ஐரோப்பிய மண்ணினைத் தொடர்ந்து ஆஸியில் மெல்பர்ன், அடலெய்ட், பேர்த் தொடர்ந்து சிட்னி என்று நான்கு நகரங்களில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இன்னிசைத் துள்ளல்.

இப்படிய ஒரு சேர ஆஸி நகரங்களில் நம்மவர் நிகழ்த்திக் காட்டுவதும் கூடப் புது வரலாறு.

சொல்லிசையைக் கையில் எடுத்துக் கொண்டு, உள்ளார்த்தம் பேசும் வரிகளைப் பார்வையாளர்களிடமேயே ஊகிக்க வைத்துத் தமிழர் மொழி, இனம் மீதான காதலைக் கடத்துவது என்பது புதியதொரு உத்தி. அதை வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் என்பதைச் சான்று பகிர்ந்தது, அவையோர் அந்த மொழி ஊடாடல்களினூடே நமக்காக உயிர்ப்பூச் சொரிந்த அந்தத் தேசப் புதல்வர்களை நினைத்து ஆர்ப்பரித்த போது.

வாகீசன் ராசையா, திஷோன் விஜயமோகன், அட்விக் உதயகுமார் மூவருமே முப்பரிமாணங்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆனால் கூட்டாக இணைந்தாலே ஒரு மாயாஜாலத்தை மேடையில் நிகழ்த்த வல்லவர்கள் என்று காட்டியது அவர்கள் சுரந்த பாடலும், ஆடலும்.

இப்படியான நிகழ்ச்சிகளில் தம்முடைய கச்சேரியையும் பாருங்கள் என்று கூப்பாடு போடும் ரசிகப் பெருமக்களும் இருப்பார்கள். சில சமயம் மேடையை மேவி அவர்கள் அந்த நிகழ்ச்சியைச் சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். ஆனால் இங்கே நடந்ததோ வேறு. சபையோரை அடக்கி ஆண்டார் வாகீசன். அவர்களோடு பேச்சுக் கொடுத்து நான் உங்கட பெடியன் என்ற உரிமையோடு அந்நியம் களைந்து அன்னியோன்யம் ஆக்கினார். 

அனுபவப்பட்ட பாடகர், இசைக் கலைஞர்களுக்கே இம்மாதிரியான சூழல் கைவரப் பெறுவது கடினம். ஆனால் இந்த இளம் வயதில் மதி நுட்பமாகப் பேசிக் கட்டுக்குள் கொண்டு வந்தது சபாஷ் போட வைத்தது.

தேவைப்படும் போது வந்து ஆடிச் சிறப்பித்த நடன மாந்தர், பொருத்தமான ஒளிக் கலவை, முரண்டு பிடிக்காத ஒலியமைப்பு என்று எல்லாமே கச்சிதமாக இயங்கியது.

அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று அறுத்து தள்ளாமல், இடையிடையே ஒரு இசைக்கலைஞருக்குச் சுய ஒழுக்கமும், முறையான கல்விப் பின்னணியும் கட்டமைப்பதன் அவசியத்தையும் கோடிட்டுக் காட்டினார்.

பள்ளிக்கூடக் காதல், ஊர் சுற்றும் பொப்பிசை, வீரம் விளைந்த மண்ணின் பரணி என்று பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாக மாறி மாறி எழுந்து கட்டிப் போட்டன.

இரண்டாவது சுற்றும் வேண்டும் என்று உரிமையோடு கேட்ட ரசிகர்களுக்கு தமிழரின் உரிமை கீதமும், கனகா பாட்டும் வந்தது.

ஆஸி நகரங்களில் எங்கட பெடியளைக் கொண்டாட வைத்ததன் பின்னணியில் உழைத்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் புத்துணர்வோடு பூச்சொண்டு. 

எல்லாவற்றையும் ஒரு பக்கம் வைத்து விடுங்கள்.

தமிழ்ச் சுவடே அதிகம் படாத புலம் பெயர் தேசத்துக் குழந்தைகளையும் கிளர்ந்து ஆடிப் பாட வைத்து கூட நின்று பார்க்க வேண்டும் என்ற ஆசையை எழுப்பும் மந்திரத்தை இவர்கள் எங்கே கற்றார்கள்?

எங்கட பெடியளைப் பார்க்க ஆர் வருவினம் என்ற ஊகங்களைத் தவிடு பொடியாக்கி விட்டார்கள் எங்கட பெடியள் ❤️❤️❤️

கானா பிரபா

30.03.2025


Posted by கானா பிரபா at 6:58 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, March 10, 2025

சிட்னியில் மகாஜனர்கள் நிகழ்த்திய மகா நிகழ்வு




அசுர உழைப்பு என்பார்களே? 

அதை நேரில் பார்க்கும் போது அணு அணுவாக உணரக் கூட அளவுக்கு மேடையில் அந்த அலைவரிசையைப் பார்வையாளருக்குக் கடத்திய உணர்வு மேலிட்டது.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சிட்னியில் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நிகழ்த்திய அரங்கு 

பிரமிப்பும், பெருமிதமும், பூரிப்பும் நிகழ்ந்த அனுபவமாக அமைந்து விட்டது.

கட்டியம் கூறி சிலப்பதிகாரம் தொடங்கிய போது முன்னோட்டமாக அந்தச் சிறுமிகள் ஆடலும், பாடலுமாகக் கொடுத்த நேர்த்தியில் கண் கலங்கிப் பூத்து விட்டது.

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவியும், ஆசிரியருமான பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி கோகிலா மகேந்திரன் அவர்களின் புதல்வர் முனைவர் பிரவீணன் மகேந்திரன் அவர்களது கச்சிதமான அறிமுகத்தோடு தொடங்கிய மகாஜன மாலை 2025 நிகழ்வில் இரண்டு அரங்கச் சுவை அம்சங்கள் அமைந்திருந்தன.

தொடக்கத்தில் “சிட்னி அரங்கக் கலைகள் சக இலக்கியப் பவர்” வழங்கிய “மாலை” என்ற குறு நாடகம்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பின் இந்த அமைப்பு ஃபீனிக்ஸ் போல உயிர்த்தெழுந்திருக்கிறது.

இவர்களின் நாடகங்களை முன்னாளில் அனுபவித்தவர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்க அதற்குச் சரியான “மாலை” போட்டது.

குறியீட்டுப் பாணியிலே அந்த நாடகத்தின் கதைப் போக்கைப் பார்த்தால், சாதியத்தை நோக்கியதா? இல்லை இனவாதத்தை நோக்கியதா இல்லையில்லை அதிகாரத்தின் முகத்தைக் காட்டும் வர்க்க வேறுபாட்டைக் கொணர்ந்திருக்கிறதா என்று பல கேள்விகளைக் காட்டும்.

இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ஶ்ரீபாலனுக்கு இரட்டை வேடம், ஆமாம் இன்று “மாலை”யில் நடிகர், பின்னர் சிலப்பதிகாரம் அரங்கியலில் பின்னணிப் பாடகர் என்று.

மாலை நாடகத்தில் சிறப்புச் சப்தங்களுக்கும், இன்றைய தொழில் நுட்ப வாகனத்தில் ஏறி மாறும் பின்னணிக் காட்சிகள் என்று சுவாரஸ்யம் கூட்ட, அந்த அம்மன் சிலைக்குப் பதில் கேள்விக்குறி வடிவில் சிலை வடிவமைத்தது கூட ஆச்சரியம் கலந்த நுண்ணரசியல் தான். அதன் பின்னணியில் வடிவமைப்பாளர் திரு.குணசிங்கம் சிவசாமியின் கைவண்ணம் இருந்திருக்கலாம்.

இந்த அளிக்கையில் கருணாகரன் நடராஜா, அழகரட்ணம் சந்திரகாசன், பாலசுந்தரம் ஶ்ரீபாலன் உள்ளிட்ட பழம்பெரும் (!) கலைஞர்களோடு ஞானாம்பாள் அசோகன், அம்பிகா அசோகபாலன், ஜனார்த்தனன் குமாரகுரு ஆகிய புதுவரவுகளும் இலக்கியப் பவரை மீளவும் ஒளிரச் செய்திருக்கிறார்கள்.

நாடகம் முடிந்த பின்னர் இடைவேளையின் போது ஆங்காங்கே பேச்சுக் கொடுத்த போது எல்லோரின் பேசுபொருளாக இந்த நாடகத்தில் அற்புதமாக நடித்த கலைஞர்களும், கதை பேசும் அரசியலும் றோலுடனும், வடையுடனும் சேர்த்து ருசிபார்க்கப்பட்டதை அனுபவரீதியாகக் கேட்டேன். 

மிக முக்கியாக, எந்த வித வசனமும் இல்லாமல் சைகையாலேயே நடித்த சந்திரஹாசனை அடையாளம் தெரியாமல் ஒருவர் 

“அந்தக் குடை பிடித்தவர் நடிப்பு அபாரம்" என்றார். அவ்வளவு தூரம் இந்த நாடகத்தின் மீது பார்வையாளருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

குறை என்று பார்த்தால், இந்த நாடகத்தின் மையக் காட்சியாக, சிலையின் முன்னால் நிகழும் முக்கியமான உரையாடல் போக்கின் பின்னணியில் கொடுத்த பக்தி இசை உறுத்தி மழுங்கடிக்கப் பார்த்தது. ஒரு அமானுஷ்யம் கலந்த மென்சோக இசையைப் பரவ விட்டிருக்கலாம்.

இலக்கியப் பவரை இன்னும் தொடரவும், அடுத்த தலைமுறையோடு பயணிக்கவும் “மாலை” மீண்டும் மாலை போட்டிருக்கிறது.




ஈழத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெறும் கல்விமான்களை மட்டுமல்ல, தலை சிறந்த எழுத்தாளர்களை, கலைஞர்களை ஈன்றெடுத்திருக்கிறது. அதற்கும் மேலாகத் தொன்று தொட்டு அங்கு வளர்க்கப்பட்ட நாடகர்கள் வெளி உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். அப்படியானதொரு ஆளுமை மாவை நித்தியானந்தன் அவர்கள். 

நாடகத்துறையில் 55 வருட காலம் அனுபவம் கொண்டவர் மாவை நித்தியானந்தன், அத்தோடு அவருடைய கல்விச் செயற்பாடுகள் அவுஸ்திரேலிய மண்ணில் பரந்து விரிந்தவை, 30 ஆண்டுகளுக்கு மேலாக பாரதி பள்ளியின் பன்முகச் செயற்பாடுகளில் நாடகமும் அரங்கியலும் இணைந்தவை.

ஐந்து ஆண்டுத் தேடலோடு ஒரு ஆற்றுகையை எழுதியவர், ஆறு மணி நேர ஆற்றுகையை இரண்டரை மணி நேரமாகச் சுருக்கிக் கொடுக்க வேண்டிய சவாலையும் மாவை நித்தியானந்தன் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய எழுத்து சக தயாரிப்பில் அமைந்த அந்தப் படைப்பை இயக்கியவர் நடன விற்பன்னர் பகீரதி பார்த்திபன்.

நாற்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் திரட்டோடு அமைந்த சிலப்பதிகாரம் ஒரு பாரம்பரிய அரங்காற்றுகையில் பங்காற்றியவர்கள் மாவை நித்தியானந்தன் அவர்கள் 1994 இல் நிறுவி இன்று முப்பது ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கும் பாரதி பள்ளியின் நடப்பு மாணவர்களும், பழைய மாணவர்களும் தாம்.

என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அவுஸ்திரேலியாவில் மாநில மட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் முதல் கலாசாரப் பரிவர்த்தனை என்றும் சொல்லலாம். ஈழத்தில் நாம் வடக்குக் கிழக்கு மற்றும் தென் பிராந்தியங்களில் நாடக விழாக்களுக்குப் போய்க் களமாடிய நினைவுகள் கிளர்ந்து வருகிறது.

சிட்னியில் சிலப்பதிகார விழா ஆண்டு தோறும் நிகழ்த்தப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய நிகழ்வு. குடிமக்கள் காப்பியம் என்று போற்றப்படும் அந்தக் காப்பியத்தைத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆண்டு தோறும் நிகழ்த்திக் காட்டுவதும் ஒரு சம்பிரதாயமாகி விட்டது.

மாவை நித்தியானந்தனின் “சிலப்பதிகாரம்" வழமைக்கு மாறானதொரு கோணத்தில் பரந்து விரிந்திருந்தது.

ஒவ்வொரு காட்சியிலும் வந்து காட்சிப்புலத்தை விபரிப்பதில் இருந்து, அந்தந்தக் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும் நடன மாந்தரைப் பொறுத்தவரை அவர்கள், 

கோவலன், கண்ணகி, மாதவி, கவுந்தி அடிகள், பாண்டிய மன்னன் போன்ற முக்கிய பாத்திரங்களுக்கு நிகராக அல்லது இயங்க வேண்டியதொரு பான்மையில் இந்தப் படைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

காட்சியில் எல்லோருமே பாட வேண்டும், கூத்து மரபு சார்ந்த நடன வெளிப்பாட்டைக் காட்ட வேண்டும் என்ற பன்முகத்தன்மை கொண்ட இயக்கமாக அமைந்தது. பின்னணிப் பாடுவோருக்கும் ஓய்வில்லாமல் ஒவ்வோர் காட்சிகளின் தன்மை அறிந்து குறித்த பாத்திரங்களின் குரலாக மாறிக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள். 

இந்த மாதிரியானதொரு முயற்சியை உள்ளது உள்ளபடி அப்படியே திரைப்படமாக எடுக்க நினைத்தால் கூட ஆறு மாதங்கள் பிடிக்கும் சிரமதசை கொண்ட நுணுக்கமானதொரு படைப்பு. 

அதனால் தான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் அந்த அசுரத்தனமான உழைப்பைக் கோடிட்டுக் காட்டினேன்.

காட்சிகள் மாறிக் கொண்டிருக்கும் போது இடைவெளியில்லாமல் எல்லோருமே தத்தமது காட்சி மாந்தர்களாகச் சீராகப் பயணித்துக் கொண்டிருந்தார்கள். காட்சிப் பின்புலத்தில் காவிரிப்பூம்பட்டினமும், மதுரையும், அரண்மனையும் என்று தேவையறிந்து மாறிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒலி, ஒளித் தொழில் நுட்ப அணி அந்த வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தது.

இந்த அரங்காடலில் கையாண்ட குறும் பாடல்கள் மற்றும் உரையாடலில் கையாண்டவை கலப்படமற்ற தூய தமிழ் இலக்கிய நயம் கொண்டவை, அந்தத் தூய தமிழ் ஈராயிரக் குழவிகளின் வாயில் நேர்த்தியாகப் பயணித்தது, நாடகர் மாவை நித்தியானந்தனின் இன்னொரு வெற்றி எனலாம்.

ஒரு காவியப் படைப்புக்கு உண்டான எல்லாவற்றையும் கலந்து கொடுக்க வேண்டும் என்று காட்சியில் விளைவிக்கும் அழகியலையும், குரவை கூத்து போன்ற நாட்டாரியல் அம்சங்களையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையைப் படைப்பாளரும், அணி செய்தோரும் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதில் கொஞ்சம் செம்மைப்படுத்திக் குறைத்திருக்கலாம் என்ற எண்ணமும் வந்தது. அதாவது கொடுத்தது எல்லாமே சிறப்பு என்றாலும் மிதமிஞ்சிய தித்திப்பு நிலை. 

ஆற்றுகை போய்க் கொண்டிருக்கும் போதே இவர்கள் கொடுத்த பிரமிப்பான அனுபவத்துக்கு எழுந்து நின்று கை தட்டிக் கொண்டே இருக்கலாம் போலத் தோன்றியது,

இவ்வளவு பேரும் மீண்டும் அன்று மாலை மீண்டும் இதே அரங்காற்றலைக் கொடுக்கப் போகிறார்களே என்று நினைக்கும் போதே தலை சுற்றியது. 

மகாஜன மாலை 2025 சிறப்பிதழில் “மகாஜனக் கல்லூரியின் நாடகப் பாரம்பரியம்” சில நினைவலைகள் என்ற பெறுமதியானதோர் ஆவணம் காணக் கிடைக்கின்றது. நூலகம் இணையத்தளத்தில் இதைச் சேர்த்து விடுங்கள். அத்தோடு பழைய நாடக, கலைவிழாப் படங்கள்  இவற்றோடு “நாடகக் கலையால் காலத்தை அளந்த கனவான் அமரர் கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கம்” அவர்கள் குறித்த கட்டுரையும் கிடைக்கின்றது. 

மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் அவுஸ்திரேலியா இரண்டு செய்திகளைச் சொல்லி வைத்திருக்கிறது.

ஒன்று, 

என்ன வளம் இல்லை இந்த ஆஸி தேசத்தில் என்று நம் பக்கத்து மாநிலத்தை அழைத்து வந்து காட்டியிருக்கிறார்கள்.

இப்பேர்ப்பட்ட பிரமாண்ட நிகழ்வை நினைத்தாலே களைப்பு வந்து விடும். ஒன்றல்ல இரண்டு நிகழ்வுகளை ஒரே நாளில் அரை மணி நேர இடைவேளையில் நாலரை நாலரை மணி நேரங்களாக நிகழ்த்திக் காட்டிய உழைப்பை வந்திருந்த சக சிட்னித் தமிழர்கள் கண்டிப்பாக உள்ளார்ந்து பாராட்டியிருப்பார்கள்.

இது சக பழைய மாணவர் சங்கங்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடு.

இரண்டு,

இனிமேல் ஆஸியில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகள் ஊர் கடந்து, மாநிலம் கடந்து தம் கலாசாரப் பரிவர்த்தனைக்கு இம்மாதிரியான நாடக விழாக்களை நிகழ்த்திக் காட்டலாம். இதன் மூலம் ஏட்டுச் சுரக்காய் ஆக இல்லாது தமிழை ஒரு இயங்கு நிலை மொழியாகத் தொடர்ந்து வைத்திருக்கவும், இளைய சமுதாயத்தின் கலை வெளிப்பாட்டுக்கு ஒரு நம்பிக்கையான எதிர்காலத்துக்கும் வழி சமைக்கும்.

கானா பிரபா

09.03.2025

ஒளிப்படங்கள் நன்றி : மெல்பர்ன் சிலப்பதிகார அரங்காடல்




Posted by கானா பிரபா at 8:07 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, February 23, 2025

காருகுறிச்சியைத் தேடி எழுத்தாக்கம் : லலிதாராம் நூல் நயப்பு : கானா பிரபா

 

இந்த நூலைப் பிரித்து வாசிக்கத் தொடங்கியதுமே தாயகத்தில் நம் இணுவில் கிராமத்தில் நிற்பது போலவொரு பிரமை எழுந்தது.

ஏனெனில் நமக்கெல்லாம் கோயில்கள் தோறும் எழும் மணியோசையும், நாகசுர மற்றும் தவில் வித்துவான்கள் அவ்வாத்தியங்களினூடு எழுப்பும் சாதகமும் தான் கிண்ணென்று காதில் தட்டியெழுப்பும்.

லலிதாராம் தீவிர இசை ரசிகராக மட்டுமன்றி, அடியார்க்கும் அடியேன் என்ற நோக்கில் இயங்குபவர். 

ஈராயிரத்தின் ஆரம்பத்தில் வலைப்பதிவு யுகம் எழுந்த போது இணையத்தில் கட்டுரைகள், நேர்காணல்கள், ஆவணங்கள் வழி இசையுலக ஆளுமைகளை ஆவணப்படுத்தி வருவது அவரின் ஒரு முகம் என்றால்,

2013 இல் பரிவாதினி அறக்கட்டளையை உருவாக்கி, வெளித்தெரியாத அரிய பல கலைஞர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்து வருகிறார். அந்த அறக்கட்டளையின் இன்னொரு பரிமாணமே நாகசுர, தவில் வாத்தியக் கலைஞர்களுக்கும் முக்கிய இடம் கொடுத்து அவர்களைத் தனித்துவமான கெளரவமும் வழங்கிக் கெளரவித்து வருகின்றது.

காருகுறிச்சி அருணாசலம் அவர்களது பிறந்த நாள் நூற்றாண்டில், அவர் பெயரில் தென்னிந்தியாவின் பல ஊர்களில் வசதியற்ற, நாகசுரம் கற்றுவரும் மாணவர்கள் 100 பேருக்கு நிதி திரட்டியது பரிவாதினியின் முக்கியமான பங்களிப்பாகச் சொல்லி வைக்க வேண்டியது.

கலைஞர்களது வாழ்க்கை வரலாறுகள், சுய பரிமாறல்களாக அல்லது இன்னொருவர் தேடித் தொகுத்தவையாக அமைவது வழமை.

ஆனால் “காருகுறிச்சியைத் தேடி” என்ற இந்த நூல் அப்படியானதொன்றல்ல. தான் நேசித்துக் கொண்டிருக்கும் மகா கலைஞன் வாழ்ந்து கழித்த இடங்கள், அவரின் நினைவெச்சங்களைத் தேடி அலையும் ஒரு ரசிகனின் தேடலாக அமைகின்றது.

அதனால் ஒரு ஆவணப்படத்தைப் பார்க்கும் அனுபவமே எழுகிறது.

திருநெல்வேலி ஜில்லாவில் மூன்று நாட்களில் நிகழ்ந்த சந்திப்புகளும், அவற்றில் லலிதாராம் தேடியவையும் பதித்தவையுமாக அமைகின்றன. நூல் நாகரிகம் என்று புறந்தள்ளாமல் இவரின்  உள்ளக்கிடக்கையையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறார். 

அதில் அந்த மகா கலைஞன் குறித்த தேடலில் ஒரு தொய்வு இருக்கக் கூடாது என்ற பரபரப்புத்தான் தொனிக்கிறது.

இந்த நூலில் அவர் கையாண்டிருக்கும் இன்னொரு விடயம், போலிகளுக்கு அனுமதியில்லை. அதாவது காருகுறிச்சியார் என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு அவர் குறித்துச் சொல்லி வரும் புகழாரங்களை வரலாறாக ஏற்க மறுக்கிறார். மெய்த்தன்மை குறித்து ஆராய்ந்து அவற்றில் நேர்மையானதை மட்டும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்.

புத்தகத்தில் காருகுறிச்சி அருணாசலம் குறித்த துணைச் செய்திகளோடு அரிய பல புகைப்படங்களையும் இணைத்திருக்கிறார். இவையும் அந்தப் பயணத்தின் வழி பெறப்பட்டவையே.

காருகுறிச்சியார் வாழ்ந்த இடங்கள், சந்தித்த மனிதர்களின் சந்ததிகள், அவரின் இசையை கேட்ட எஞ்சி வாழும் மனிதர்கள், மகள் என்று அந்தப் பயணத்தில் திட்டம் போட்டதும், எதிர்பாராது கிட்டிய பொக்கிஷங்களையும் ஒரு தேனீ போல நுகர்ந்து கொடுக்கிறார்.

நகைச்சுவைக் கையாடல் அந்தப் பயணத்துக்குச் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

“காருகுறிச்சியாரைத் தேடி” இனைத் தொடர்ந்து இந்தப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் சிறுகதைகளில்

“நேனெந்து வெகுதூரா” பேசுவது, அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை வைக்க ஆசைப்படும் வேம்பு என்ற சாதாரணரின் அனுபவமாகப் பதிவாகிறது. ஊகிக்கும் முடிவென்றாலும் அதைக் கொடுக்கும் இடத்தில் சொல்லவெண்ணாப் பரவசத்தை எழுப்பி விடுகிறார், சிறுகதையாசிரியராகவும் பரிணமிக்கும் லலிதாராம்.

“சால கல்லலாடு” என்ற இன்னொரு சிறுகதை இணைப்பு, காருகுறிச்சி அருணாசலத்தின் தந்தை பலவேசம் தன் மகனுக்குத் தனித்துவ அடையாளம் தேடத் துடிப்பதும்,  ஞானத்தந்தை ரத்தினம்பிள்ளையின் மேதமையின் பால் காருகுறிச்சிக்கு எழும் இயல்பான குருபக்தியையும் காட்டும் சிறுகதை. இதிலும் லலிதாராம் கையாண்டிருக்கும் சொற்கட்டுமானம் அந்தக் காலத்து நிகழ்வைக் கண்முன் கொண்டு வருமாற்போல அமைகின்றது.

“சிங்காரவேலனே தேவா” பாடலோடே காருகுறிச்சியாரின் திரைப் பங்களிப்பைப் பதிவாக்கும் சூழலில், அந்தப் படத்தைத் தோண்டி எடுத்து மேலும் பல நுணுக்கமான வாசிப்பை நயம்படக் காட்டுகிறார். “ஆஸ்திக்கு ஒரு ஆணும் ஆசைக்கு ஒரு பெண்ணும்” என்ற இன்னொரு படத்திலும் காருகுறிச்சியார் வாசிப்பு இருப்பது பதிவாகி உள்ளது. 

மூர் மார்க்கெட்டில் அந்தத் திரையிசை இசைத்தட்டு லலிதாராமிடம் சேர்ந்தது சேரிடம் சேர்ந்தது போல.

மேலும், “சூட்சம உரசல்” என்ற நயப்பும், “ஆபோகி” எனும் கவி நடையும், “காந்தார பானம்” எனும் கட்டுரையோடு, “அளவு மிறா அமுதப் பெருக்கு” நிறைத்து நிற்கின்றது.

“காருகுறிச்சியைத் தேடி” இசையின் உயர் இலக்கணங்களை ஆய்வு ரீதியாகப் பேசும் நூலன்று, எல்லாத்தரப்பு வாசகனுக்கும் சென்றடையும் வண்ணம் எழுந்த “காருகுறிச்சி வாசிப்பு குறித்த மறு வாசிப்பு” என்று சொல்லலாம்.

“ஒரு கலைஞன் பிறந்து வளர்ந்தது ; மிகவும் சிரமப்பட்டு குருமுகமாகக் கலையில் தேர்ச்சி பெற்றது; கலையை அரங்கேற்ற மேடைகள் தேடிப் போராடியது; கிடைத்த மேடைகளில் நன்றாக வாசித்துத் துறையில் முன்னேறியது; தொடந்து பல ஆண்டுகள் வாசித்து பல அங்கீகாரங்களைப் பெற்றது என்ற சித்திரத்தை அநேகமாக எல்லாக் கலைஞர்களுக்கும் பொருத்த முடியும். எனில், பதிவுகள் அந்தக் கலையில் சிறப்பான தேர்ச்சி பெற்ற ஒரு நல்ல கலைஞனையும், உச்சங்களைத் தொட்டு கலையின் எல்லைகளை விஸ்தரித்த மாகலைஞனையும் போதிய அளவு பேதப்படுத்திக் காட்டுவதில்லை” 

என்ற ஆதங்கத்தை முன்வைக்கும் லலிதாராம், 

“அந்த வித்தியாசத்தை வெளிப்படுத்த அந்தக் கலைஞனின் இசையின் நுட்பங்களுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது”

என்ற நியாயத்தைப் இறுதிப் பக்கத்தில் முத்தாய்ப்பாகச் சொல்லி வைக்கிறார்.

அந்த நியாயத்தைப் புத்தகம் நெடுக அனுபவரீதியாக உணரலாம்.

சந்திக்கும் மனிதர்கள், காணும் நினைவிடங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் போது ஏதாவது காருகுறிச்சி அருணாசலம் போட்ட ஏதாவது ஒரு உருப்படியை அசை போட்டுக் கொண்டாடுகிறார். காருகுறிச்சியார் எவ்வளவு தூரம் தனித்துவமானவர் என்பதை அவரின் கலைத்திறனைக் கொண்டு நிறுவும் பண்பு அது.

கானா பிரபா

24.02.2025.










Posted by கானா பிரபா at 11:00 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

BBC ஆனந்தி அக்கா 🙏

“ஈழத்தமிழச்சி என்று நான் துணிந்து சொல்வேன்”

ஆனந்தி அக்கா ஒரு சமயம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியபோது,

சிங்கள அரசோடு ஒத்தோடு வாழும் தமிழ் அரசியல்வாதி கிண்டலடித்தார் 

இப்படி,

“அவர் அதை லண்டனில் இருந்து தானே சொல்கிறார்”

என்று.

ஆனால் நாம் எங்கு வாழ்ந்தாலும், ஊடகத் துறையில் இயங்கினாலும் நம் இன, மொழி உணர்வோடு இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஆனந்தி அக்கா.

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை இருமுறை பேட்டி காணும் பேறு பெற்றவர்.

அதனால் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஈழத்தை விட்டுப் பிரிந்திருந்த போதும் கடல் கடந்து தமிழக, ஈழ உறவுகளுக்கு “ஆனந்தி அக்கா” என்ற அடையாளத்தோடே  லண்டன் பிபிசி தமிழோசை காலத்தில் வாழ்ந்தவர், அதன் பின்னர் கூட அந்த அடையாளப் பெயரோடே இயங்கியவர்.

1970 களில் பகுதி லண்டன் பிபிசியின் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானார். இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம்

இலங்கை யாழ் குடாநாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் மிகவும் ஊக்குவித்த முன்னாள் தமிழ்ப் பிரிவுத் தலைவர் சங்கரை மிக நன்றியோடு நினைவு கூறுகிறார். என்று லண்டன் பிபிசி மே 2005 இல் அவருக்குப் பிரியாவிடை கொடுத்தது.

இலங்கை வானொலிப் பாரம்பரியத்தோடு தன் ஊடக வாழ்வைத் தொடங்கியவர். இலங்கை வானொலி ஊடகத்தில் புகழ்பூத்த ஊடகர் சானாவின் வானொலி நாடகங்களில் நடித்தவர்.

தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" 

அப்பாசொல்லுறார். 

மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளைவிரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரை இது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும் அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக்காந்திகள். 

பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக் காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காயநடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடு காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின்பின்னணியில் தோரணையில் ஆளாளுக்கு அரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததொன்று.

சுந்தா சுந்தரலிங்கம் அங்கிள், சங்கரண்ணா, விமல் அண்ணா வரிசையில் ஆனந்தி அக்காவும் இப்போது  ஊடகப் பரப்பில் வரலாறாகிப் போய் விட்டார்.

ஆனந்தி அக்காவின் ஊடக வரலாற்றை ஒரு சமயம் ஒலி ஆவணப்படுத்த அழைத்தேன்.

அச்சமயம் அவரின் கணவர் உடல் நலம் குன்றியிருந்ததால் அவரைப் பராமரிக்கும் பணியில் இருந்தவரைத் தொந்தரவு செய்ய மனம் வரவில்லை. ஆனால் இவர் போன்ற ஆளுமைகள் தம் ஊடக வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கலாம் என இப்போது தோன்றுகின்றது.

ஆனந்தி அக்காவுக்கு அகவணக்கம் 🙏

கானா பிரபா

23.02.2025



Posted by கானா பிரபா at 12:55 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, February 17, 2025

ஈழத்துக் கலைத்துறையின் உன்னதம் கலாசூரி அருந்ததி ஶ்ரீரங்கநாதன்


“மாமயில் ஆடக் கண்டேன் 

கதிர்காமத்தில்....”

ஈழத்து முற்றம் நிகழ்ச்சியை வழங்கிய ஈராயிரத்தின் முற்பகுதிகளில் அடிக்கடி இந்தப் பாடலுக்கும் இடம்கொடுப்பேன்.

அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களது குரலில் வெளிப்படும் அந்த இனிய நாதத்துக்குச் சிறப்பு தினமேது என்று அந்தப் பக்திப் பாடலும் இடம்பிடித்து விடும்.

ஈழத்தின் நாம் வாழ்ந்த காலத்தில் கலைத்துறையில் உச்ச ஆளுமைகளில் ஒருவராக இயங்கிக் கொண்டிருக்கிறார் என்ற அறிமுகத்தோடு புலம்பெயர் வாழ்வில் புகுந்த எனக்கு அவரின் பாடலையே வானொலிப் படைப்புகளில் வழங்கும் பேறு கிட்டியது.

அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களது குடும்பமே கலைகளை வளர்க்கும் தோப்பாக இருந்தது. சிட்னியிலும் தொடர்ந்து கலைப்பணி ஆற்றிய ஜயலட்சுமி கந்தையா புகழ்பூத்த நடனக் கலைஞர் மற்றும் ஆசிரியை ஒரு சகோதரி, இன்னொரு சகோதரி பரத இசை மரபு என்ற தமிழக அரசின் விருது பெற்ற நூலினை யாத்த ஆய்வாளர், பேராசிரியை ஞானாகுலேந்திரன் என்று அவரி இரு சகோதரிகளையும் சிட்னி மண்ணில் காணும் வாய்ப்பும் நமக்குக் கிட்டியது. காலவோட்டத்தில் அருந்ததி ஶ்ரீரங்க நாதன் அவர்களும் சிட்னி மண்ணில் நிலைபெற்று விட்டார். 

இவரது தந்தை சிவசுப்பிரமணியம்; தாய் வீரலஷ்மி. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்பு இந்து மகளிர் கல்லூரியிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் கல்லூரியிலும் பயின்று, பட்டப்படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று பீ.ஏ. சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். படிக்கும் காலத்தில் வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வாய்ப்பாட்டிலும் வீணையிலும் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றார். அம்பிகா தாமோதரம், ஞான குலேந்திரன், கேரளாவைச் சேர்ந்த சங்கீத வித்துவான் அந்தனி மாஸ்டர், இசை மேதை மஹாராஜபுரம் சந்தானம் ஆகியோரிடம் இசைக் கலையையும் கயிலாயம்பிள்ளை மாஸ்டர், ஜயலக்‌ஷ்மி கந்தையா, பாலசுந்தரி பிராதலிங்கம் ஆகியோரிடம் நடனக் கலையையும் ஆந்திராவைச் சேர்ந்த செல்வி ராஜா, மற்றும் கல்யாண கிருஷ்ண பாகவதர் ஆகியோரிடம் வீணை இசைக் கலையையும் கற்றுத் தேர்ந்தார்.

அவரோடு சேர்த்து மொத்தம் ஐந்து பெண்பிள்ளைகளும் யோகர் சுவாமிகளின் அருட்கடாட்சம் பெற்றவர்கள் என்று மறைந்த சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவி சுந்தா சுந்தரலிங்கம் சொல்லுவார்.

அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் புதல்வர்கள் சாரங்கன் மற்றும்  சியாமளங்கனும் ஈழத்து மெல்லிசைப் பாடல் இயக்கத்திலும், இசைத்துறையிலும் முக்கிய பங்காளிகளாக விளங்கி வருகிறார்கள் என்பது உலகறிந்த ஒன்று. 

அரசியல், விஞ்ஞானம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் எழுபதுகளிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இயங்கி உள்ளார்.  

1975 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான நிகழ்ச்சித் தயாரிப்புக்காக ஜப்பானிய பரிசை வென்ற திருமதி ஶ்ரீரங்கநாதன் , 1989 ஆம் ஆண்டில் வானொலி தயாரிப்புக்கான வானொலிச் சாதனைப் பெண் விருதைப் பெற்றுக்கொண்டார். 1995ஆம் ஆண்டில் வானொலியின் சிறந்த இசையாளர் என்ற ஜனாதிபதி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது கலைச் சேவையைக் கெளரவிக்கு முகமாக கலாசூரி விருதை வழங்கியுள்ளது இலங்கை அரசு. 1998ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று ஜனாதிபதியின் சாதனை பெண் விருது இவருக்குக் கிடைத்தது. 1989ல் இவருக்குக் கிடைத்த மற்றுமொரு சிறந்த விருது "உண்டா” ஆகும்.

திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதனின் இசைப் பணி இலங்கையோடு நின்று விடவில்லை. அவருடைய இசைப் பணியை பல சர்வதேச அமைப்புக்கள் பாராட்டிக் கெளரவித்துள்ளன. 

1996 ஆம் ஆண்டில் இலண்டன் கேம்பிரிஜில் உள்ள சர்வதேச சாதனையாளர் சங்கம் இவர் ஒலிபரப்பு துறைக்கும் இசைத்துறைக்கும் ஆற்றி பணியைக் கெளரவிக்கும் வகையில் Degree of Merit பட்டத்தை வழங்கியது.

1977ஆம் ஆண்டு இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடர்பியல் மாநாட்டில் இலங்கை ஒலிபரப்பின் வரலாறு" என்ற தலைப்பில் இவர் உரையாற்றினார். 

இந்த உரைக்கு Award of Excellence விருது வழங்கப்பட்டது.

தேசிய-சர்வதேச மட்டத்தில் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள இவர் இலங்கையின் கலாசாரத் தூதுவராகப்  பல நாடுகளுக்கு விஜயம் செய்திருப்பதுடன் மகாநாடுகளிலும் கலந்து சிறப்பித்துள்ளார்.

இவரது சேவைகளைப் பாராட்டி ஜப்பானிய சர்வதேசப் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது.

கலாசூரி திருமதி அருந்ததி ஶ்ரீரங்கநாதன் 1999 இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

உசாத்துணைக் குறிப்புகள் நன்றி : வானொலி மஞ்சரி ஏப்ரல் 1999 & நூலகம் தளம் 

நம்மிடையே வாழ்ந்து ஈழத்தின் கலை அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த அருந்ததி ஶ்ரீரங்கநாதன் அவர்களது ஆன்மா இறையடி சேர்ந்து இளைப்பாற எம் பிரார்த்தனைகள்.

கானா பிரபா

17.02.2025










Posted by கானா பிரபா at 10:45 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, January 13, 2025

ஈழத்தில் போர்க்காலத்தில் இலக்கியப் பசியாற்றிய பெருந்தகை டேவிட் லிகோரி விண்ணேகினார் 🙏


கடும் போர்க்காலத்தில் நமது ஈழத்து இலக்கிய வளம் பெருக, குறுகிய காலத்திலேயே தொடர்ந்து பல எழுத்தாளர்களது நாவல் இலக்கியங்களை மீரா வெளியீடு மூலம் வெளியிட்டவர். ஆரம்பத்தில் திரையிசைப் பாட்டுப் புத்தகங்கள் வெளியிட்டு வந்தவர். 1988 ஆம் ஆண்டு முதல் நாவல்கள் முதலான படைப்புகளை வெளியிட்டார்.

அச்சுத்தாளுக்கும் அரசு தடை போட்ட நெருக்கடியில் முட்டி மோதி இலக்கியம் சமைத்தவர்களில் ஒருவர்.

சின்னச் சின்ன நாவல்கள் ஆனால் எல்லாமே காத்திரம் நிறைந்தவை.

செங்கை ஆழியான் தொடங்கி ஈழத்தின் மூத்த படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் எல்லோருக்கும் தன் படைப்பக வாசல் திறந்தவர்.

மழைக்காலம், ராதையின் நெஞ்சம், முடிவல்ல ஆரம்பம், மண்ணின் தாகம், பூஜைக்காக வாழும் பூவை, இருள் இரவில் அல்ல என்று ஒவ்வொன்றையும் விலை கொடுத்துப் படித்த காலங்கள் நினைவில் நிற்கின்றன.

அதன் சாட்சியமாக இன்னும் சில நூல்களை என் வீட்டு நூலகத்தில் பேணி வருகிறேன்.

எமது ஈழத்துப் பதிப்புலகத்தில் டேவிட் லிகோரியின் பெயர் அழியாது நிலைத்து நிற்கும் 🙏

கானா பிரபா

13.01.2025

Posted by கானா பிரபா at 9:40 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ▼  2025 (10)
    • ▼  June 2025 (1)
      • பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய திருமதி....
    • ►  May 2025 (2)
      • எல்லோருக்கும் AI 📚 “எல்லோருக்கும் அவசியமான கையேட...
      • அறப்பணியில் சவால்களும் சாதனைகளும் -செஞ்சொற் செல்வர...
    • ►  April 2025 (1)
      • வாண்டு மாமா நூற்றாண்டு ❤️
    • ►  March 2025 (2)
      • சாதித்துக் காட்டிய எங்கட பெடியள் ❤️❤️❤️
      • சிட்னியில் மகாஜனர்கள் நிகழ்த்திய மகா நிகழ்வு
    • ►  February 2025 (3)
      • காருகுறிச்சியைத் தேடி எழுத்தாக்கம் : லலிதாராம் ...
      • BBC ஆனந்தி அக்கா 🙏
      • ஈழத்துக் கலைத்துறையின் உன்னதம் கலாசூரி அருந்ததி ஶ...
    • ►  January 2025 (1)
      • ஈழத்தில் போர்க்காலத்தில் இலக்கியப் பசியாற்றிய பெரு...
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes