
நான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்திலை பலாலிப் பக்கம் போன உபாலிப் பிளேனைக்காட்டி என்ர அம்மா எனக்குச் சாப்பாடு தீத்தின காலம் இருந்தது. பிறகு அதே வான் பரப்பில வந்து ரவுண்ட் அடிச்சு, விதம் விதம் விதமான பிளேன்கள் வகை வகையாக் குண்டு பொழிஞ்சு எங்கட சனத்தைச் சாப்பாடு ஆகின காலமா ஆகிவிட்டுது இப்ப.
“அங்க பார் பிளேன் வருகுதடா” வீட்டு ஜன்னலுக்குள்ளால
புழுகமாப் பார்த்து, நடு முற்றத்தில போய்ப் பிளேன் பார்த்த காலம் போய்,
“அங்க பார் பிளேன் வருகுது,
ஐயோ...!,ஐயோ...! ஓடுங்கோ” எண்டு சொல்லிக்கொண்டே
சனங்கள் குலை தெறிக்க, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே ஓடி ஒளியும் காலம் இது.
இப்பவும் நினைவிருக்கு, இது நடந்து 20 வருசத்துக்கு மேல்.
எங்கட வீட்டிலை இருந்து தாவடிச் சிவராசா அண்ணை வீடு அதிகம் தொலைவில் இல்லை. சிவராசா அண்ணை வீட்டை சுற்றி பின் பக்கம் தோட்டவெளி நீண்டவெளி கணக்காய் இருக்குது. வழக்கமாப் பின்னேரப் பொழுதில ராமா அண்ணரோட ஆட்டுக்குப் புல்லுப் பிடுங்கப் போற சாட்டிலை, தங்கட தோட்டத்தில வேலை செய்யிற பெடியளோட சேர்ந்து, பொயிலைக் கண்டுகளுக்குள்ளை ஒழிச்சுப் பி்டிச்சு விளையாடுறனான்.
பிளேனாலை எங்கட சந்ததியைச் சிங்களவப் பேரினவாத அரசு அழிக்க முதன் முதல் ஒத்திகையைத் தொடங்கின நாள் அது.
அந்த நாள் மட்டும் தோட்ட வெளிப்பக்கம் போகாமல், சிவலிங்க மாமா வீட்டு சீமெந்துத் திண்ணையில் இருந்து றோட்டால போற வாற சனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன். திடீரெண்டு வானத்திலை இரண்டு பிளேன்கள் நோட்டம் வந்திச்சினம். முன்பின் பிளேன் குண்டு பொட்ட அனுபவம் தெரியாத சனம் நாங்கள் எண்டதால சிவலிங்க மாமா வீட்டு சின்ன கேற்றில் ஏறி நின்று மேல பிளேனை வேடிக்கை பார்த்தன். வானத்தில ரவுண்ட் அடிச்ச அந்தபிளேனிலை ஒண்டு திடீரெண்டு தாழப்பறந்து ஏதையோ தள்ளிவிட்டது தான் தெரியும்.
அந்த அதிர்ச்சியில கேற்றிலை இருந்து விழுந்து விட்டன். பிறகும் ரண்டு மூண்டு குண்டுகள் போடும் சத்தம் கேட்டது. ஒரே புகை மண்டலமாத் தாவடிப்பக்கம் தெரிஞ்சது. ஈழத்தமிழின வரலாற்றிலை சிங்களப் பேரினவாத அரசு போட்ட அந்த முதற்குண்டில் பலியானது சிவராசா அண்ணை வீட்டுக்குப் பக்கத்துத் தோட்டத்தில் விளையாடிய பாலகர்கள். அதுக்குப் பிறகு பின்னேரங்களில நான் அந்தத் தோட்டப்பக்கம் விளையாடப் போறதேயில்லை.
என்ர பதின்ம வயது இரவுகள் பாதி இரவுகளாகத்தான் இருந்திருக்கின்றன.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பேன். நடுச்சாமத்தில எங்கோ ஒரு தொலைவில பிளேன் வாற ஒலி கேட்கும். அடுத்த அறையில படுத்திருக்கும் என்ர அம்மா விறு விறுவெண்டு ஓடி வந்து
என்னைக் கட்டிப்பித்துக்கொண்டு நடுங்கிகொண்டிருப்பா. ஓரு பறவை தன்ர குஞ்சை இறகுச்சிறையால் மறைப்பது போல என்னைத் தன் கைச் சிறைக்குள்ள மறைச்சுக்குக்கொண்டிருப்பா. எனக்கு மேல் தன் உடம்பால மறைச்சால், பிளேன் குண்டு போடேக்கை தன்னைதான் பாதிக்கும், தன்ர பிள்ளையையாவது காப்பாற்றலாம் எண்ட அல்ப நம்பிக்கை என்ரஅம்மாவுக்கு. எனக்கும் பயத்தலால் உடம்பு நடுங்கிக்கொண்டிருக்கும். தூரத்தில் கேட்கும் பிளேன் சத்தம் கிட்டக் கிட்ட வரவும்,
"தண்ணித் தொட்டிப் பக்கம் ஓடுவம் வா" எண்டு சொல்லிக்கொண்டே தரதரவெண்டு என்னை கட்டிலிலிருந்து எழுப்பி இழுத்துக்கொண்டு ஓடுவார்.

எங்கட வீட்டின் பின்பக்கம் நீண்டதொரு தண்ணித் தொட்டி இருக்குது. அதன் கீழ் குளியலறை. பிளேன் குண்டு இந்தச் சீமென்ற் கட்டிடத்தை ஒண்டும் பண்ணாது எண்ட நினைப்பிலை குளியலறை மூலையில் ஒடுங்கி இருப்போம்.அம்மாவின் வாய் ஊரிலுள்ள அத்தனை தெய்வங்களையும் இறைஞ்சி அழைக்கும். மணித்தியாலங்களாக ஈரக் குளியலறைத் தரையில் இருட்டுக்குள் அடைக்கலம். பிளேனுக்கு வீடுகள் தெரியக்கூடாது எண்டு மின்சாரமும் இல்லாமல், கைவிளக்கு வெளிச்சமும் இல்லாமல் ஊர் கும்மிருட்டில் இருக்கும். சமீபமாக வந்து விழுந்து வெடிக்கும் குண்டுகளின் அதிர்வால குளியலறைக் கதவு அறைந்து ஓயும். ஊர்நாய்கள் வாள் வாள் எண்டு நடு நிசி தாண்டி அழுது கொண்டே இருக்கும்.
லலித் அத்துலத் முதலி பேரினவாத அரசாங்கத்தில பாதுகாப்பு அமைச்சரா இருந்த காலம் அது. பீப்பாய்க் குண்டுகள் என்ட புதுவகையான குண்டுகளை எங்கட சனத்தின் மேல் பரிசோதிச்ச ஜனநாயகவாதி அவர்.
பீப்பாய்களுக்குள் மலக்கழிவுகள் மற்றும் விஷக்கிருமிகள் கொண்ட சேதனக்கழிவுகளை நிறைத்து வைத்த குண்டுகள் தான் இந்தப் பீப்பாய்க் குண்டுகள். ஒருமுறை யாழ்ப்பாணம் சிவன் கோயிலுக்கு மேலாலை பிளேன்கள் வட்டமிடேக்கை கோயிற்கோபுரத்துக்குக் கீழ
தன்ர உயிரைக் காப்பாற்ற, ஒதுங்கிய என்ர நண்பன் பிரதீபனின்ர இரண்டாவது அண்ணையை அந்தப் பிளேன்களில் ஒன்று போட்ட பீப்பாய்க்குண்டு காவு எடுத்தது. எங்கட பள்ளிக்கூடத்தில அப்போது உயர் வகுப்புப் படிச்சுக்கொண்டிருந்த அவர் சாகிறதுக்கு முதல் நாள் “ சொன்னதைச் செய்யும் சுப்பு” எண்ட முசுப்பாத்தியான தனிநடிப்பை எங்கட பள்ளிக்கூடத்தில நடிச்சதும் இண்டைக்கும் நினைவிருக்கு. பீப்பாய்க்குண்டுகள் பட்டு உடைஞ்சபடியே பலகாலம் சிவன் கோயில் கோபுரமும் கிடந்தது.

ஏ.எல் படிக்கிற காலத்திலை இணுவிலிருந்து நான் யாழ்ப்பாணத்துக்கு ரியூசனுக்கும் போற
நாட்களில பிளேனுக்கு கண்ணாமூச்சி காட்டிய காலங்கள் மிக அதிகம்.
ஒருநாள் தாவடிப்பக்கமாப் சைக்கிள்ள போகேக்கை குண்டு போட வட்டமிட்ட பிளேனைக் கண்டு மதகுப் பக்கம் சைக்கிளைப் போட்டு விட்டு ஓடினதும், அப்போது முள்ளுப் பாலத்துக்குள் ஓடி ஒளியேக்கை என்ர காலி்லை போட்ட செருப்பைத்தாண்டி பிசுங்கான் ஓடுகள் குத்தியதும் ஒரு அனுபவம்.
ஓருமுறை கொக்குவில் மஞ்சவனப்பதிப்பக்கம் நானும் நண்பன் முகுந்தனும் சைக்கிளிலை வரேக்கை, இரண்டு சீ பிளேன்கள் வந்து வட்டமிட்டுக் கோள் மூட்டி விட்டுப் போன கையோட, சியாமாசெற்றி பிளேன்கள் வந்து ரவுண்ட் போட்டுக்கொண்டிருந்ததைக் கண்டு மஞ்சவனப்பதி கோயிலுக்குப் பின்னால சைக்கிளில் வேகமெடுத்தோம்.
திடீரெண்டு மிகச் சமீபத்தில் குண்டொன்றைப் பறித்து விட்டு மேலெழுப்பியது ஒரு பிளேன். கண்ணுக்கு முன் புகை மண்டலம் தெரிந்தது. சைக்கிளிலிருந்து தானாகவே பொத்தொன்று விழுந்தோம்.
"ஓடு.. ஓடு எண்டு என்ர மூளை கட்டளை போட்டது. என்கால்கள் ஓடுவது போல பிரமை. ஆனால் பயத்தில் அதே இடத்திலேயே குத்திட்டு நின்று மண்ணை விறாண்டிக்கொண்டிருந்தன என் கால்கள். உடம்பெல்லாம் மின்சாரம் அடித்தது போல இருந்தது. சற்றுத் தூரத்தில் முகுந்தன் அதிர்ச்சியில் குப்பிறப்படுத்திருந்தான். நானும் பொத்தென்று தரையில் விழுந்து படுத்தேன்.
இருவருமாக தரையில் படுத்தவாறே ஊர்ந்து ஊர்ந்து அந்தக் கோயில் வெளிமைதானத்தைத் தாண்டி பின்னால் இருக்கும் வீடொன்றுக்குள் ஓடினோம். காலெல்லாம் சிராய்ப்புக் காயங்கள் சுண்டிச் சுண்டி வலியை எழுப்பின. "தம்பியவை கெதியா ஓடியாங்கோ “ அந்த வீட்டு பின் பங்கரிலிருந்து ஒரு வயசாளியின் குரல் அது. சர்வமும் ஒடுங்க கால்கள் மட்டும் பங்கரைத் தேடிப் பாய ஓடி ஒளித்தோம்.
அடுத்த நாள் எங்கட பள்ளிக்கூடம் போன போது தான் தெரிந்தது, முதல் நாள் கொக்குவில் இந்து பள்ளிகூடச் சந்தியில் விழுந்த குண்டு எங்கட கொமேர்ஸ் பாடம் படிப்பிக்கும் ரீச்சரையும் காயப்படுத்தியும், சிலரைப் பலியெடுத்தும் விட்டதெண்டும்.
ஓரு சில மாதங்கள் கழித்து எங்கட கொமேர்ஸ் ரீச்சர் சுகமாகி, எங்கட வகுப்புக்கு வந்த போது தான் தெரிந்தது. அவரது மற்றக்காலுக்கும் பதில் ஊன்று கோல் தான் இருந்தது. முன்பெல்லாம் கலகலப்பாக இருந்த அவர் அன்றின் வாழ்க்கை மாறிவிட்டதை அவர் முகம் காட்டிக்கொடுத்தது. ஏனோ தெரியவில்லை சில நாட்களுக்குப் பின் அவர் பள்ளிக்கூடமே வரவில்லை. அப்போது கல்யாணம் கட்டாமல் இருந்த அந்தரீச்சர் இப்ப எங்க இருக்கிறா, அவருக்கு உதவி யார் எண்டும் எனக்குத் தெரியாது.

இந்தப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடையையும் தாங்கி தான் அரைவயிறு கால் வயிறு நிரப்பி நாட்கள், வருடங்கள், ஏன் ஒவ்வொரு கணமும் எண்டு விமானக் கழுகில் இருந்து காத்து பொத்தி வளர்த்தவை இன்று பட்டுப்போன மரங்கள். மரணம் என்பது மயிரிழையில் வந்து போகும் வாழ்க்கையில், 61 பிஞ்சுகளைத் தொலைத்த இவர்களின் வேதனைகளுக்கு என்ன மாற்றீடு?
இருபது ஆண்டுகளுக்கு மேல் நம் உறவுகளைத் தின்னும் இந்த இயந்திரக்கழுகுகள் சாவது எப்போது?
34 comments:
பொருத்தமான தருணத்தில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி பிரபா. காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்.
யாரோ
தங்கள் வருகைக்கு என் நன்றிகள்
புகைப்படத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் உங்களிடமிருந்து கண்ணீர் வரவழைத்த பதிவு. படித்து முடித்தபின் மீண்டும் பார்த்தேன், எப்படியும் விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் சிரிப்பா?
பொசுக்கென்று கொட்டிவிட்ட கண்ணீர்த்துளிகளை அலுவலகத்தில் யாரும் பார்த்திராவண்ணம் துடைத்து விடவும், துக்கமும் ஆற்றாமையும் நெஞ்சடைக்க இன்னும் இரண்டு சிகரெட்டுகளைப் பிடிப்பதையும் தவிர வேறென்ன செய்ய முடியும் இப்போது? ங்கொம்மால...ஆத்தால என்று யாரைத்திட்டித் தீர்க்க? வரும் ஆத்திரத்தில் யாரைக் கொல்லலாம்? யாரைப் பார்த்தாலும் மனிதர்களாகவே தெரியும் பலஹீனமான மனதை வைத்துக்கொண்டு என்ன செய்வது? மனிதாபிமானமுள்ள கோழைகள் எப்படி புரட்சி செய்வது, விடுதலை பெறுவது? :(
மாற்றங்கள் நிகழும் கவலைப்படாதீர்கள்.
இன்று போலவே பொழுதுகள் என்றும் விடிந்திடாது,
ஒரு நாள் நிச்சயம் மாறும்.
உங்களின் எழுத்து திறன் பிரமிக்க வைக்கிறது.
அன்புடன்
தம்பி
இந்த ஆகாயத்தாலை குண்டு போட்டு அழிச்சு போடுவம் ... இன்று நேத்தல்ல இவையடை வெருட்டல்..... தேசிய போராட்ட ஆரம்பித்த காலத்திலை இந்த பூச்சாண்டியை காட்டினவை... இனவெறியன் ஜே ஆருடைய மந்திரி சிறிமத்தியூ என்றவன்... ஆபிரிக்கா தேசத்தில் போராட வெளிக்கிட்ட சிறிய தேச இனத்தை கூண்டோட ஆகாயத்தால் அழித்த கதை எல்லாம் சொல்லி வெருட்டல் விட்டவன்.... அதையும் மீறி அந்த நேரம் இந்தியாவின்ரை ஜனாதிபதியாய் இருந்த வெங்கட்ராமன்... என்ற தமிழ் பிராமணி. தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு வெருட்டு விட்டார்.... நாங்கள் தமிழ் ஈழத்தை ஆதரித்தால் அமெரிக்ககாரன் ஆகாயத்தாலை வந்து அணுகுண்டை போட்டு விடுவானென்று.......
இப்பவும்... இப்படி ஆகாயத்தாலை கழுகுகளை விட்டு பிணம் தின்னுவது மூலம் .... விடுதலை போராட்டத்தை மழுங்கடிக்கலாம் என்று மனப்பால் குடிக்குது ... இந்த ஆதிக்க வர்க்கம்....
பிரபா, என்னுடைய பெரும்பாலான வாழ்க்கை கொழும்பிலும் வெளிநாட்டிலும் தான். ஆனால் அந்த முக்கியமான 84-91 வரை காலப்பகுதி முழுக்கவும் யாழ்ப்பாணத்தில் கழித்தவன். இந்த இயந்திரக் கழுகுகளின் அட்டகாசங்களை நன்கு அநுபவித்திருக்கிறேன். அத்துலத்முதலி யாழ்ப்பாணம் வந்து போன கையோட தின்னவேலி யாழ்ப்பாணம் முழுக்க விமானக் குண்டுவீச்சு நடந்தது. IPKF சாப்பாடு போட்டு விட்டு பிறகு குண்டுகளைப் போட்டு எத்தனை பேரைக் கொண்டது. அவை எல்லாம் இப்போது சரித்திரமாகி விட்டன. காலவோட்டம் கட்டாயம் மாறத்தான் போகிறது.
செஞ்சோலையில் பலியான அந்த சின்னஞ் சிறுசுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். பதிவுக்கு நன்றி, பிரபா.
வணக்கம் முபாரக்
மனதால் நொந்த எமக்கு உங்களைப் போன்ற சகோதரர்களின் ஆறுதல் வார்த்தைகள் தான் ஒத்தடங்கள்.
//தம்பி said...
மாற்றங்கள் நிகழும் கவலைப்படாதீர்கள்.
இன்று போலவே பொழுதுகள் என்றும் விடிந்திடாது,
ஒரு நாள் நிச்சயம் மாறும்.//
வணக்கம் தம்பி
அந்த மாற்றங்கள் வரும் காலத்துக்குத் தான் காலாகாலாமாக எம் சந்ததிகள் காத்துநிற்கின்றன.
தங்கள் உணர்வைப் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்.
வணக்கம் சின்னக்குட்டி
காலாகாலமாக வித விதமான பிளேன்கள், வித விதமான குன்டுகளால் இந்த அரச பயங்கரவாதிகளால் அழிக்கமுடிந்தது அப்பாவி மக்களைத்தான். இதனால் அவர்கள் வளர்த்தது நம் தமிழ்த்தேசிய உணர்வை.
சரியான நேரத்தில் வந்த பதிவு.
என் முதல் இரு அனுபவங்கள் கிட்டத்தட்ட உங்களது முதல் அனுபவம் போன்றது. ஆனால் அதன்பின் வந்த அனுபவங்கள் அதிக ஆபத்தானதாக, உயிரெடுக்கத்தக்கனவாக இருந்தபோதும் வெருண்டுபோனதில்லை.
பிரபா!
நடந்தவையும்,நடப்பவையும் மிக வேதனை!உண்மையில் அன்றாடங்காச்சிகள் அல்லாடுகிறார்கள்; இதற்கு முடிவில்லையா? அரசு கோழைத்தனமாக நிராயுதபாணிகளைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.என்ன? சொல்வதென்றே தெரியவில்லை.
யோகன் பாரிஸ்
பிரபா அண்ணா,
நெஞ்சு கனக்கின்றது இந்த நிகள்வினை எண்ணிப் பார்க்கும் போதே... ஆயினும் இருந்து நம் நிலைமையினை நாமே நினைத்து நோவதில் என்ன நடந்துவிடப் போகின்றது... இருந்து மனம் வருந்துவதிலும் விட நாம் சிந்தனையிலிறங்கி என்ன இதற்குச் செய்யலாம் என்பதில் நேரத்தை விரையம் செய்வதில் பலன் இருக்கும் என்பது என் கருத்து... ஆனால் மனிதனாய்ப் பிறந்த எவருக்கும் இந்நிகழ்வினைப் பார்த்தால் மனதுருகுவது இயற்கையே. இந் நேரமாவது தமிழர் நாம் அனைவரும் அண்திரண்டு குரல் கொடுக்க முன் வர வேண்டும்.
அப்பபா! படிக்கும் பொழுது அந்த விவரிப்புகளை மூளைக்குள் தோற்றப்படுத்திப் பார்க்கையிலேயே எவ்வளவு துயரமாக இருக்குது. அதிலும் காலை இழுத்துக் கொண்டு ஓடுகையில் நானும் ஓடுவது போல ஒரு உணர்வு. முருகா.....இந்தப் பிள்ளைகளும் உந்தன் பிள்ளைகள் தானே....காப்பாத்தப்பா....
வனக்கம் சிறீ அண்ணா
சிறீலங்கா அமைச்சர்கள் எங்கள் ஊர்களுக்கு முந்து வந்துபோன பின்பு தானே பல அனர்த்தங்களும் வந்தன. 80 களின் இறுதியிலிருந்து விமானக்குண்டுவீச்சின் கடுமையான காலங்கள் தான்.
வன்னியன்
என் சமகாலத்தில் ஊரில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றிகள்.
வணக்கம் யோகன் அண்ணா
உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தத்தெரியாமல் அப்பாவி மக்களை அழிப்பதுதானே இந்தப் பேரினவாத அரசின் வேலை.
///செஞ்சோலையில் பலியான அந்த சின்னஞ் சிறுசுகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.///
நான் இதை வழி மொழிகிறேன்...
மாற்றம் வருமென காத்திருந்தால் வராது...மாற்றத்தை நாமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் நிலை..
போரில் பால் / வயது வித்தியாசம் பார்க்கமாட்டோம் என்று சிங்கள அரசு தொடர்பாளர் கூறியது அவரது குரூர வெறியை காட்டியது...
சர்வதேச / இந்திய ஊடகங்கள் இந்த விஷயத்தை இருட்டடிப்பு செய்தன ( சன் டி.வி விதிவிலக்கு)...
வணக்கம் கெளரிஹரன்
இங்கிருந்து எம் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. அதற்கான வசதியும் வாய்ப்பும் கூட எமக்கிருக்கின்றன. தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.
வணக்கம் ராகவன்
தங்களைப் போன்ற உறவுகளின் உணர்வுபூர்வமான நேசிப்புக்கு நான் தலைவணங்குகின்றேன்.
வணக்கம் ரவி
சர்வதேசம் தெரிந்துகொண்டே கண்ணை மூடுகின்றது.
இனியொரு விதி செய்வோம்....
பிரபா!
வடபகுதியில் நடந்த முதலாவது வான் தாக்குதலே உங்கள் வீட்டிற்கு அருகாமையில்தான் நடந்ததென்று நினைக்கின்றேன்.
கண்முன் கண்ட முதலாவு பயங்கரம்!
//மலைநாடான் said...
பிரபா!
வடபகுதியில் நடந்த முதலாவது வான் தாக்குதலே உங்கள் வீட்டிற்கு அருகாமையில்தான் நடந்ததென்று நினைக்கின்றேன்.
கண்முன் கண்ட முதலாவு பயங்கரம்!//
ஆமாம் மலைநாடான்
அதைத்தான் சொல்லியிருந்தேன்.
உணர்வுகள் மரத்துப் போகுமளவுக்கு நாம் அடிபட்ட பின்பும் ஏன் இந்த சர்வதேசம் கண் அலர்ந்து கிடக்கின்றது????
வணக்கம் மயூரேசன்
அதனால் தானே அவர்கள் இன்னும் "ராஜதந்திரி"களாக இருக்கின்றார்கள்.
மனதைத் தொட்ட பதிவு
//Chandravathanaa said...
மனதைத் தொட்ட பதிவு //
தங்கள் வருகைக்கு நன்றிகள் அக்கா
இந்த பதிவை படிக்கும் முன்பு வரை விடுதலைபுலிகளை நான் ஆதரித்ததில்லை.
ஏனெனில் அவர்கள் நடத்திய/நடத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்கள்..
இப்போது புரிகிறது LTTE செய்வது ஒரு எதிர் தாக்குதல் மக்களுக்காக..
அதே சமயம் அவர்களும் மக்கள் தானே என்று என்னும் போது மனசு இரண்டு பக்கமும் வலிக்கிறது
காலம் மாறாமலா போய் விடும்..
நம்பிக்கையுடன்
சின்னபுள்ள
வணக்கம் சின்னபுள்ள
எம் மக்களின் சோகங்கள் இதையும் விட இன்னும் கேரமானவை உண்டு. ஒரு இனமே திட்டமிட்டு அழிக்கப்படும் போது என்ன செய்வது?
பிரபா,
கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நம்மக்களுக்கு என்று ஒரு நல்ல காலம் வரும் என்று தெரியவில்லை. அந்த ஆண்டவன் இந்த விஷயத்தில் சிறிது கருணை காட்டலாம்.
வணக்கம் சந்தோஷ்
ஒவ்வொரு நிமிஷமும் சுதந்திரம் பற்றிய எதிர்பார்ப்பில் இருக்கின்றது எம்மினம்.
பிரபாண்ணா...நீங்க சொல்ற பிளேன்களில எனக்கு சியாமாசெட்டி, அவ்றோ, சி பிளேன் என்ற பெயரெல்லாம் புதுசாக்கிடக்கு. சகடை வாற சத்தம்தான் எனக்குப்பயங்கரப் பயம்.மரத்துக்குக் கீழ நின்று விளையாடிக்கொண்டு நிப்பம் அது வாற சத்தம் கேட்டஉடன குளறிக்கொண்டு வீட்டுக்குள்ள ஓடுறது.சத்தமே காணும்.
ரியுசனால போகும்போது உள் ஒழுங்கைகளில எல்லாம் விழுந்து படுத்தனுபவங்களை எனக்கும் மறக்கவே ஏலாது.
சினேகிதி
முதல் விமானக்குண்டு வீச்சிலிருந்து 94 ஆம் ஆண்டுவரை விதம் விதமான பிளேன்கள், வகைவகையான குண்டுகளைப் பார்த்தாச்சு.
கானா பிரபா,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனதைக் கனக்க வைத்த பதிவு.
வணக்கம் வெற்றி
முள்ளை முள்ளால் எடுப்பது போல், தமிழீழ வான் படை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம் கனிந்துவிட்டது போல.
Post a Comment