சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு
(சிறுகதைத் தொகுப்பு) - தாமரைச் செல்வி
நூல் நயப்பு
ஈழத்து எழுத்தாளர்களில் கடந்த அரை நூற்றாண்டாக இயங்கி வரும் தாமரைச் செல்வி அவர்கள் வன்னி மண்ணில் பிறந்த கதை சொல்லி. அவரின் சமீப காலத்து வரவாக இச்சிறுகதைத் தொகுதி எதிர் வெளியீடு வழியாக வெளி வந்திருக்கிறது.
“இரவில் நிலா வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு மடியில் படுத்திருக்கும் பிள்ளைக்குத் தன் வாழ்க்கைக் கதைகளை மனோலயப்படி சொல்லும் தொனியில் எளிமையாகப் பேசும் இச்சிறுகதைகள்”
என்று முன்னுரையில் இந்திரன் அவர்கள் காட்டிய வண்ணமே இந்த நூலைப் படித்து முடித்த பின்னர் உணர்வெழுகின்றது.
இன்னும் சொல்லப் போனால் அந்தந்தக் கதைகளுக்குள் வாழ்ந்து விட்டு வந்தது போலொரு உணர்வை, ஒவ்வொரு கதைகளின் பரப்பை விவரிக்கும் பாங்கிலும், கதை மாந்தர்களை உலாவ விடும் விதத்திலும், போலித்தனமில்லாத, அதே சமயம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு கதைப்பின்னணியிலும் யதார்த்தம் கொண்டு படைத்திருக்கின்றார்.
“எளிமையும், உண்மையும், மனிதாபிமானமும் நிறைந்த யதார்த்த எழுத்துகளே இவரது முத்திரை”
என்று அணிந்துரையில் ரஞ்ஞனி சுப்ரமணியம் பகிர்ந்ததும், நம்முடைய வாசிப்பனுபவத்தின் சாட்சியாக அமைகின்றது.
முடித்து வைக்கப்பட்ட போ ரின் ஆறா வடு, மறுபடி ஆரம்பப் புள்ளியில் இருந்து வாழத் தலைப்படும் சமூகம் எதிர் நோக்கும் அடுத்த கட்டச் சவால்களையே இச் சிறுகதைத் தொகுப்பில் காணும் படைப்புகள் பலதும் கோடிட்டுக் காட்டுகின்றன.
தன்னுரையில் எழுத்தாளர் தாமரைச் செல்வி அதையே முக்கியப்படுத்திப் பதிவாக்குகிறார்.
எழுத்தாளர் என்பவர் நீதிபதியா அல்லது நிகழ்வின் சாட்சியமா என்பதற்கான விடை பகரும் முடிவிடமாக இச் சிறுகதைகள் அமைகின்றன.
நம்முடைய வாழ்வோட்டத்தில் சந்தித்த மனிதர்கள் மட்டுமன்றி சந்திக்காதோரது சிக்கல்களைக் கூடத் தன் சிறுகதைகளில் காட்டி நிற்கும் போது அவற்றின் மெய்த்தன்மை கேள்விக்குட்படுத்தப்படாது ஏற்குமளவுக்கு அங்கே நம் தாயகத்துச் சொந்தங்களின் துன்பியல் வாழ்வு அமைந்திருக்கிறது. எனவே இவ்வாறான அனுபவ ஓட்டத்தில் புனைவு என்பது தேவையே இல்லை என்பதைத்தான் தாமரைச் செல்வியின் கதைகள் உணர்த்துகின்றன.
யாரொடு நோவோம் சிறுகதையின் பின்புலத்தில், முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் வலிகளைப் பிரதிபலிக்கும் சூழலில், தன் கணவன் இறந்து விட்டான் என்ற முடிவில் இருக்கும் ஒரு அபலையின் வாழ்வில் எதிர்ப்படும் அதிர்ச்சி நிகழ்வும், அந்தச் சூழலின் முடிவும் காட்டப்படுகிறது.
“கனவுகளின் மீள் வருகை”, “கசிந்துருகிக் கண்ணீர் மல்கி”, இருட்டின் நிறம் வெள்ளை
முள்ளிவாய்க்கால் காலத்துப் பின்னணியோடு அமைந்த இருவேறுபட்ட கதைப் பின்னணிகள். அவை கொடுக்கும் கனதியும் தனித்தனி.
மெளன யுத்தம் தமிழ்ச் சூழலில் ஒரு பொதுத்தன்மை கொண்ட கதை மாந்தர்களைக் கொண்டு அமைந்திருக்கிறது.
புலம்பெயர் வாழ்வின் பரிமாணங்களைக் காட்டும் சிறுகதைகளாக, எதிர்பார்ப்பு, வெயிலோடும் மழையோடும், மழை வரும் காலம் , தேவதைகளின் உலகம் ஆகிய சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. இங்கும் எடுத்துக் கொண்ட பார்வை ஒவ்வொன்றிலும் தனித்து நிற்கிறது. சில முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வாசகனையும் தூண்ட வைக்கிறதோ என்று எண்ண வைக்கும் எழுத்தோட்டம்.
பால்ய காலத்துக் காதலையும் கூட ஒரு ஈழத்துத் துயர் தேய்ந்த பின்னணியில் உணர்வுபூர்வமாகத் தர முடியும் என்பதை அவனும் அவளும் கதை படித்த போது உணர வைத்து விடுகிறது. ஒரு முழு நீள நாவலைப் படித்த திருப்தி இந்தச் சிறுகதைக்குள் இருக்கிறது.
“பறவைகளின் நண்பன்” ஜோவின் கதையைப் படித்த பின்னர் ஒரு கலையம்சம் பொருந்திய கொரிய சினிமாவைப் பார்த்த உணர்வே மேலோங்கியது. எழுத்தாளர் தாமரைச் செல்வியின் கதைகளின்
பன்முகம் என்ற நோக்கில் இது புதுவித வாசிப்பனுபவத்தையும், வியப்பையும் எழுப்புகிறது. ஒரு நேர்த்தியான படைப்பாளியின் கையில் சிக்கினால் கலைச் செறிவான குறும்படமாகலாம்.
இந்தக் கதையை எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் பேதமில்லாத உணர்வூட்டம் தரும்.
“சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” அவதிப்படும் அந்தக் கிழவரோடு நம்மையும் அலைக்கழிக்க வைத்து விடுகிறது. இந்தக் கதை தாமரைச் செல்வியின் வாழ்வியலில் கடந்து போனதாகவும் இருக்கலாம்.
இனி வரும் நாட்கள், வாழ்தல் என்பது, நிழல் ஆகிய சிறுகதைகள் சமீப காலத்தில் ஈழத் தமிழ்ச் சமூகம் சந்திக்கும் சமூகச் சிக்கல்களின் காலக் கண்ணாடியாக அமைந்திருக்கின்றன.
இதில் பிரமிக்கத்தக்க விடயம் என்னவென்றால் வெறும் தமிழ்ச் சமூகத்தினுடைய வாழ்வியல் சிக்கல்களை மட்டுமன்றி, வன்னி மண் கடந்து, அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துச் சூழலில் அமையும் கதைகளாகவும் அவை அமைந்து சிறப்புச் சேர்க்கின்றன.
ஒரு குறுகிய வட்டத்தில் நில்லாது, பரப்புரை அற்ற எழுத்தாக,
தாமரைச் செல்வி அவர்களின் பரந்துபட்ட பார்வையே கதைகளின் விதைகளாக அமைந்திருக்கின்றன.
தன்னுடைய எழுத்துலக வாழ்வியலின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தாமரைச் செல்வியின் சிறுகதைகளை அணுகினால் அவை ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுக் கூறாகக் கூட இருக்கும் என்பது மிகையில்லை என்பதை இந்த நவீன காலத்துச் சிறுகதை எழுத்துகளின் நீட்சியில் வரையறுக்கின்றன.
கானா பிரபா
10.04.2026

0 comments:
Post a Comment