skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Friday, December 27, 2019

ஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்

வீடியோஸ்பதி எனும் கலை, இலக்கிய, திரை இலக்கிய, நடப்பு வாழ்வியல் சார்ந்த காணொளித் தளத்தை ஆரம்பிக்கிறேன்.

இதன் வெள்ளோட்டக் காணொளிப் பகிர்வாக 2020 ஆம் ஆண்டு முதல் ஆஸி நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பாடசாலைகளில்  தமிழ்ப் பாட நெறி அறிமுகமாகும் சூழல் குறித்த பின்னணி குறித்து கல்வியாளர் திரு. திரு நந்தகுமார் அவர்களுடன் சிறப்புப் பேட்டி வெளியாகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசின் அங்கீகாரத்தோடு இனிமேல் இந்த நாட்டு மாநிலப் பாடசாலைகளில் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கக் கூடிய ஒரு பெரிய வரப் பிரசாதம் கிட்டியுள்ள சூழலில் இந்த முயற்சியின் பின்னால் இருந்த உழைப்பு, எதிர்கால சவால்களும், வாய்ப்புகளும் என்று பரந்து பட்ட நோக்கில் இந்தப் பேட்டி அமைகின்றது.

பேட்டியைக் காண

https://youtu.be/F4ltIEIZ7Aw
Posted by கானா பிரபா at 7:44 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, December 05, 2019

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் 🌷🥁

“ ஏன் இந்த மாதம் பதிவு ஒன்றும் வரவில்லை”
இப்படி ஒரு பின்னூட்டம் என்னுடைய மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பதிவில் கடந்த செப்டெம்பர் மாதம் வந்திருந்தது.
அப்பாவின் பிரிவில் பதிவுலகில் அதிக நாட்டம் இல்லாது ஒதுங்கியிருந்த மாதம் அது. தொடர்ச்சியாக 14 ஆண்டுகள் வலைப்பதிவில் இருந்த என்னை ஆட்டம் காண வைத்த அந்த செப்டெம்பரோடு இனிமேல் இணைய உலகில் ஒதுங்கி விடுவோம் என்று கூட நினைத்ததுண்டு. ஆனாலும் மெல்ல மெல்ல மீண்டும் பழைய நிலைக்கு வந்தாலும் அப்பாவின் நினைவு இன்னும் ஒட்டியிருக்கிறது. அடிக்கடி கனவிலும் வந்து பேசுவார். 

இதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை "மடத்துவாசல் பிள்ளையாரடி" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு 14 ஆண்டுகளை நிறைவு செய்து 15 வது ஆண்டில் காலடி வைக்கிறேன்.

இத்தனை ஆண்டு கால என் வலைப்பதிவு வாழ்வில் ஆத்ம திருப்தி தந்தவை என்று எண்ணிப் பார்த்தால்
  1. மேலே சொன்னது மாதிரி தொடர்ச்சியாக ஒரு வாசகர் வட்டத்தோடு இணைந்திருப்பது
  2. என்னுடைய ஈழத்து வாழ்வியல், கலை இலக்கியப் பதிவுகளை வைத்து இதுவரை இரண்டு ஆராய்ச்சி மாணவியர் தம் பட்ட மேற்படிப்பைச் செய்ததை என்னிடம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டது

இவை தவிர இன்னும் பலருக்கு என் சேகரங்களும், நினைவுப் பதிவுகளும் உசாத்துணையாக இருந்ததைக் காலம் கடந்தும் அறிந்து மகிழ்வுறுகிறேன்.
அண்மையில் அப்பாவின் பிரிவுக்கு அனுதாபம் தெரிவித்து வந்த எதிர்பாராத அழைப்பாக நான் பெரிதும் மதிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் என்னுடைய மடத்துவாசல் பிள்ளையாரடி வலைப்பதிவை வாசிப்பதாகவும், ஈழத்து மெல்லிசை உலகின் மூத்த குடியாகக் கொள்ளும் கலைஞர் எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களது கட்டுரையைத் தம் விழா மலருக்குப் பயன்படுத்திக் கொண்டதையும் அறிந்து பெரும் திருப்தி கொண்டேன். அத்தோடு சமீபத்தில் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள் குறித்து நான் வலைப்பதிவில் எழுதியதைச் செப்பனிட்டு நூலுக்கேற்ப எழுதித் தருமாறு அவர் கேட்டதையும் மகிழ்வோடு செய்து கொடுத்தேன். இந்தக் கட்டுரைகள் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்பே என் வலைப்பதிவில் எழுதி வைத்தவை. இப்போதும் அவை தேடு பொறிகளுக்குள் சிக்குவது தான் தொழில் நுட்பம் நமக்குக் கொடுத்த பெரிய கொடை.

பால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன். 

ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.
அவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.

இந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.

ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.
எப்பேர்ப்பட்ட வரம் இது. 

இறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.

இன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.

இதுவரை "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி", மற்றும் "பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.

தமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள்,  படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன். 

எனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக 
மடத்துவாசல் பிள்ளையாரடி 
http://kanapraba.blogspot.com/

அல்லது
www.madathuvaasal.com

என்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக
றேடியோஸ்பதி
http://www.radiospathy.com/

எனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக
உலாத்தல்
http://ulaathal.com

இவை தவிர

காணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர
வீடியோஸ்பதி 
http://videospathy.blogspot.com.au/

 ஈழத்து முற்றம் 
http://eelamlife.blogspot.com.au/
என்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,
நான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர
கங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்
http://eelamlife.blogspot.com.au/

அருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/
என்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.

ஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற "அனுமதி பெறாது பிரசுரிக்கும்" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன். 

இதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.

அடுத்த முயற்சியாக வீடியோஸ்பதி காணொளித் தளத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்னொரு பரிமாணத்தைத் தேட விழைகிறேன்.

தொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா
05.12.2019
Posted by கானா பிரபா at 7:34 AM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, December 03, 2019

“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்



அம்புலிமாமா காலத்தில் இருந்த என்னைப் புரட்டிப் போட்ட படைப்பு லங்கா ராணி.
துயர் தோய்ந்த ஈழ வரலாற்றுப் பக்கங்களில் “லங்கா ராணி” நாவல் இன்று வரை தனித்துவமாக நோக்கக் கூடியதொன்று.
பின்னாளில் ஈழத்தில் இனப் பிரச்சனை கொழுந்து விட்டெரிந்த காலத்திலும் எமது அவலத்தை இம்மாதிரியானதொரு நிகழ் நடப்புகளோடு ஒட்டி எழுதவில்லையே என்றதொரு ஏக்கம் எழுந்தது இரண்டு படைப்புகளைப் படித்ததன் அனுபவ வெளிப்பாடாக.
ஒன்று செங்கை ஆழியானின் “தீம் தரிகிட தித்தோம்” என்ற நாவல், இன்னொன்று அருளரின் “லங்கா ராணி”. பின்னாளில் ஈரோஸ் இயக்கத்தினர் இந்த நூலைத் தாமே மறு பதிப்புச் செய்யுமளவுக்கு மதிப்பு மிக்க பெறுமதியான ஆவணம் இது.
1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்துக்கு முன்பே நம் தமிழினம் சிறிதும் பெரிதுமாகப் பல இனக் கலவரங்களுக்கு முகம் கொடுத்தது. அப்படி ஒன்று தான் 1977 ஆவணி மாதத்தில் ந்ழுந்த இனக் கலவரம். அப்போது கொழும்பிலிருந்து இனவெறிக் கோரத்தாண்டவத்தில் இருந்து எஞ்சிப் போன அபலைகள் லங்கா ராணி என்ற கப்பலில் ஏறித் தம் தாய் மண் நோக்கிப் பயணப்படும் அவல வாழ்வியலின் பக்கங்கள் லங்கா ராணியில் சாட்சியம் பறைகின்றன. இது புனை கதை அல்ல என்ற உண்மையை இன்றும் அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழர் இயல்பாய் உணர்வர்.
நான் சந்திக்க வேண்டும், பேச வேண்டும் என்று நெடு நாள் கனவு கண்ட “லங்கா ராணி” எழுதிய அருளர் என்ற அருளர் தன் சொந்த மண்ணிலேயே விடை பெற்று விட்டார். லங்கா ராணி இறக்கிய இடத்திலேயே முற்றுப் புள்ளி வைத்து விட்டுப் போயிருக்கிறார்.
எம் ஆதர்ச எழுத்தாளர், போராளி அருளரின் பிரிவால் வாடும் மகள்கள் என் பேஸ்புக் நட்பு சகோதரி Kali Arulpragasam கலி அருள்பிரகாசம் மற்றும் நம் இனத்தின் விடுதலை வேண்டி உலக அரங்கில் குரல் கொடுக்கும் பாடகி மாயா அருள்பிரகாசத்துக்கும் அன்னாரின் பிரிவில் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறேன்.
லங்கா ராணியை ஈழத்து நூலகத்தில் படிக்க
http://www.noolaham.org/…/%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE…
அகிலனின் பார்வையில் "லங்கா ராணி"
(இது அகிலன் அவர்களால் 1981-இல் எழுதப்பட்டது என்பதை நினைவில் நிறுத்தவும்) பகிர்வுக்கு நனறி கனக்ஸ் இன் தமிழ் வலையின் மினி நூலகம்
1977 ஆகஸ்டில் இலங்கையில் இனக்கலவரம் நடந்ததல்லவா? அதில் பாதிக்கப்பட்ட 1200 தமிழ் அகதிகளைச் சுமந்து கொண்டு 'லங்கா ராணி' என்ற கப்பல் கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, தெற்கு நோக்கி வந்து, இலங்கைத் தீவைச் சுற்றிக் கொண்டு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பருத்தித்துறைத் துறைமுகத்துக்குச் செல்கிறது. கப்பல் கொழும்பில் புறப்படுவதுடன் தொடங்கும் கதை, இரண்டு நாட்களில் பருத்தித்துறையைச் சென்றடைவதோடு முடிகிறது.
இது கற்பனைக் கதையல்ல. முற்றிலும் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட உயிர்த் துடிப்புமிக்க கதை. இரண்டே நாட்களில் நடக்கும் கதையைப் போலத் தோன்றினாலும், இதில் அங்கங்கே 2500 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இலங்கை எப்படி இருந்தது? விடுதலை பெற்ற பிறகு - ஏன் 1958ல் ஒரு பயங்கரமான இனக் கலவரமும், பிறகு 1977 ஆகஸ்டில் ஓர் இனக்கலவரமும் அங்கே ஏற்பட்டன. கலவரங்களின் விளைவுகளை மறந்து, தமிழர்களும், சிங்களவர்களும் இனி எதிர்காலத்தில் அங்கு இணைந்து வாழ முடியுமா? இவை போன்ற பல அடிப்படைப் பிரச்சனைகள் இந்த நாவலில் அலசி ஆராயப்படுகின்றன.
இந்த நூலின் ஆசிரியர் அருளர், வெறும் உணர்ச்சித் துடிப்புமிக்க இளைஞராகத் தோன்றவில்லை. காரிய காரணங்களை மிகவும் ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார். நாட்டு நடப்பைக் கூர்ந்து நோக்கியிருக்கிறார். வகுப்புக் கலவரங்களுக்குள்ள அடிப்படைக் காரணம், இந்த அரசியல் அமைப்பு - இதன் அரசியல் கட்சிகள் - தேர்தலில் இனவெறியைத் தூண்டிவிட்டு, மறு இனத்தைப் பகைக்கச் செய்து ஓட்டு வாங்கும் முறை என அவர் சான்றுகளுடன் கூறும் போது, நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
சரவணன், குமார், தவன் மூவரும் கொழும்பு இந்துக் கல்லூரி அகதிகள் முகாமில் தொண்டர்களாகப் பணியாற்றிய இளைஞர்கள். அவர்களுடன் கப்பலில் ஒரு வெள்ளை வேட்டி இளைஞனும் சேர்ந்து கொள்ளுகிறான். இவர்களோடு பலதரப்பட்ட வாழ்க்கை நிலையில் உள்ள தமிழ் அகதிகளும் கப்பலில் வருகிறார்கள். கலவரங்கள் எங்கெங்கே எவ்வளவு கொடூரமாக நடைபெற்றன எனும் சோகக் காட்சிகள் கண்முன்னே நடைபெறுபவைபோல் வருணிக்கப்படுகின்றன.
இளைஞர்களின் உரையாடல்களின் வாயிலாகவே காரிய காரணங்கள் நமக்கு விளக்கப்படுகின்றன.
1958-ல் நடந்த முதல் கலவரத்தை அடுத்து 1961-ல் நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். அதற்கு முன்பாக யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், தோட்டங்களிலே வேலை செய்த இந்தியத் தமிழர்களிடமிருந்து பிரிந்து, உயர்ந்தும் ஒதுங்கியும் வாழத் தலைப்பட்டது மல்லாமல் தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவும் காரணமாக இருந்தார்கள் எனக் கேள்வியுற்றேன். இந்தப் போக்கு அவர்களையே மிகச் சிறுபான்மையோராக மாற்றி விட்டது. இப்போது தமிழர்களுக்கிடையே வேற்றுமை குறைந்து வருவதாகத் தெரிகிறது. இலட்சிய ஆவேசங் கொண்ட புதிய தலைமுறை இளைஞர்கள் அங்கே தோன்றியிருக்கிறார்கள்.
அண்மைய வரலாற்று நிகழ்ச்சிகள் நிறைந்த ஓர் அற்புதப் படைப்பு இது. ஈழத்து விடுதலைப் புரட்சியாளர்களின் சிந்தனையும் செயலும் சரியானவைதாமா என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை அப்படி உருவாக்கி விட்ட பின்னணி நிகழ்ச்சிகளை நம்மால் மறந்துவிட முடியாது.
படித்து முடித்தபின் நம்மை உணர்ச்சி வயப்படுத்தும் நாவல் இது, சிந்திக்கச் செய்யும் நாவல் இது; செயல்படத் தூண்டி ஒரு நல்ல முடிவு காணும் உந்துதலை ஏற்படுத்தத் தூண்டும் நாவல் இது.
கானா பிரபா
03.12.2019
Posted by கானா பிரபா at 8:26 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, November 15, 2019

ஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚



“டேய் இணுவில் !
இலாப நட்டக் கணக்கைக் காட்டு பாப்பம்?
பொட்டு, (திருநீற்றுக்) குறியோட வந்துட்டாங்கள் பார்”
“ஹேய் கிளிநொச்சி!
நீ என்ன மாடு பிடிக்கவே யாழ்ப்பாணம் வந்தனீ?”
பெடியள் விழுந்து புரட்டு சிரிப்பார்கள். நீண்ட A5 அளவு கணக்குக் கொப்பி ஶ்ரீ மாஸ்டரின் கையிலிருந்து பறந்து போய் இன்னொருவன் தலையில் விழும். மடத்துவாசல் பிள்ளையார் கோயிலில் கும்பிட்டுட்டு சந்தனப் பொட்டு, திருநீற்றுக் குறியோட நாங்களும், வன்னிப் பக்கமிருந்து இரவோடிரவாகப் பயணித்து வந்து படிக்கும் பெடியளும் என்று எல்லாத் திக்குகளிலிருந்தும் ஶ்ரீ மாஸ்டரின் வகுப்புக்கு வருவார்கள்.
கொடுத்த கணக்கு வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. மரச்சட்ட றூலரால் நல்ல சுவைக்கச் சுவைக்க அடி விழும்.
ஐ நோ ஐ நோ புரியாத புதிர் ரகுவரன் மாதிரி சிரிச்சுச் சிரிச்சுக் கொண்டே அடிப்பார். அந்த அடி நொந்தாலும் அடி விழ முன்னர் ஶ்ரீ மாஸ்டர் அடிச்ச கிண்டலை நினைச்சு அடியை வாங்கிக் கொண்டே சிரிப்போம்.
அதுவரை எங்களூர் இணுவிலில் அருட்செல்வம் மாஸ்டரின் வீட்டில் டியூஷனின் படித்துப் பழகிய கால்கள் பத்தாம் வகுப்பு முடிச்சு அடுத்து பல்கலைக்கழகப் பெரிய வகுப்புப் படிப்புப் படிக்க வேண்டுமென்று யாழ் நகரப் பகுதி டியூட்டறிகளுக்குப் படையெடுத்தன, அதில் என் கால்களும் அடங்கும். அப்படித்தான் ஶ்ரீ மாஸ்டரின் ரியூஷன் சென்டரும் அறிமுகமாயிற்று. படிக்கத் தேர்ந்தெடுத்தது வர்த்தகத் துறை வேறு
“ஶ்ரீ மாஸ்டர் என்று இளம் ஆசிரியர்
இப்போது கணக்கியல் பாடத்தில் கலக்குறாராம். நல்லூரடியில் இருக்கும் அவரின் வீட்டில் ரியூஷன் குடுக்கிறாராம்”
என்று நண்பன் கிரி சொன்னான். அவனே விசாரித்துப் பார்த்து விட்டு வந்து சொன்னான்
“அவரின் வீட்டில இடம் கிடைக்கிறது கஷ்டம்
மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களைத்தான் எடுப்பாராம் சரி நாங்கள் அவர் ரவுணில நடத்திற ரியூஷன் சென்ரருக்குப் போவம் அப்ப”
ஶ்ரீ மாஸ்டர் வீட்டில் ரியூசன் கொடுக்கும் போது ஒரு விதம் அங்கே வீட்டுக்காரர் இருப்பதால்
நல்ல பிள்ளையாக அடக்கி வாசிப்பார். ஆனால் CCA க்கு வந்து விட்டால் ஒரே கொட்டம் தான். இந்த இரண்டு வித ஶ்ரீ மாஸ்டரின் குணாதிசியத்தை இரண்டு இடத்திலும் படிக்கும் நண்பன் ஒருவன் துப்பறிந்து எங்களுக்குச் சொன்னான். ஆனால் கொடுத்த இலாப நட்டக் கணக்கைச் செய்யாவிட்டால் அடி பொது தான். தங்களுடைய வகுப்புப் பெண் பிள்ளைகளும் அடி வாங்கிய கதையை அந்நாள் ஶ்ரீ மாஸ்டரின் வீடடுக்குச் சென்று படித்த யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி, இந்நாள் என் மனைவி ஊர்மிளா கதை கதையாகச் சொல்லிச் சிரிப்பார்.
வெலிங்டன் தியேட்டர் சந்தி மிதப்பில் லிங்கன் கூல்பார் பக்கத்தில ஜென்டில் மேன், காதலன் படத்தில புதுசா வந்து கலக்கிற பிரபு தேவா எண்ட பெடியன் போடுற ஸ்டைலில் பக்கி ஜீன்ஸ் தைக்கிற விக்ரம் ரெய்லர்ஸ்
வெலிங்டன் சந்தியால் நேரா பிறவுண் றோட் போற அந்த வீதியில் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள், மோட்டார் வாகனம் திருத்தும் கடைகளுக்கு மத்தியில் இருந்தது CCA.
யாழ் நகரத்தில் இருக்கும் அந்த ரியூஷன் சென்ரறில் மொத்தமாக அந்த வார இறுதியை அர்ப்பணித்து விட்டால் உலகம் தெரியாது, அந்த ஓலைக்கொட்டில் ரியூஷனில் பொருளியல், கணக்கியல், வர்த்தகம், இந்து நாகரிகம் என்று ஒரு றவுண்டு அடிச்சிட்டு முடிய பின்னேரம் ஏழு மணியாகும் வீடு வந்து சேர.
தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு காலப் பகுதி
மாலை ஆறு மணிக்கெல்லாம் யாழ்ப்பாண நகரப்பகுதி மயான அமைதியில் தன்னைப் போர்த்துக்கொண்டிருந்தது. நகரப்பகுதியில் அமைந்த கடைக்காரர் ஐந்து மணிக்கெல்லாம் பூட்டுப் போட்டு விடுவார்கள்.
இந்த இடத்தில் ஆறுமணிக்கும் சுத்துற கூட்டமென்றால் அது கண்டிப்பாக க.பொ.த உயர்தர பல்கலைக்கழகத் தேர்வுக்கு ரியூஷன் படிக்கிற கூட்டம் தான். ஶ்ரீ மாஸ்டரின் வர்த்தகத்துறைக்கான ரியூசன் வகுப்புகள் ஒரே நேரத்தில் முடிந்து கும்பல் கும்பலாக சைக்கிள் சகிதம் வெளிக்கிளம்பும்.
கணக்கியலுக்கு ஶ்ரீ மாஸ்டர், பொருளியலுக்கு வரதராஜன் சேர், அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் தேவராஜா மாஸ்டரிடம் வர்த்தக பாடம் படிச்சாலும் இங்கேயும் இன்னொரு வகுப்பு ரட்ணம் மாஸ்டரிடம், பிறகு பாலா மாஸ்டரிடம் இந்து நாகரிகம் இங்கேயும் இன்னொருத்தர் (பெயர் மறந்து விட்டது) என்று CCA ரியூசன் சென்டரே அழுகிடையாகக் கிடந்த காலமது.
ஒரு சிறு மனஸ்தாபத்தால் பொருளியல் படிப்பித்த வரதராஜன் மாஸ்டர் அவரின் மனைவியின் சகோதரர்களுடன் சேர்ந்து ஶ்ரீதர் தியேட்டருக்கு முன் பக்கம் பொருளியல் கல்லூரியை ஆரம்பித்தார். வரதராஜன் சேர் பற்றித் தனிப் பதிவே எழுதலாம், எழுதியும் இருக்கிறேன். இங்கே https://www.facebook.com/photo.php?fbid=10204547866481992&set=a.10200950943041154&type=3&sfns=mo
அப்போது வரதராஜன் மாஸ்டரோடு நாமும் பொருளியல் படிக்க முகாம் மாறினாலும் ஶ்ரீ மாஸ்டரின் ரியூஷனில் இருந்த அபிமானத்தால் வரதராஜன் மாஸ்டரின் மாணவன் உதயன் மாஸ்டர் அப்போது CCA இல் புதிய பொருளியல் ஆசிரியராக வந்த போது அவரிடமும் சம காலத்தில் படித்தோம்.
உதயன் மாஸ்டர் நடிகர் பிரசாந்தின் முக பாவம் முக்கால் பங்கு தோற்றம் இருப்பார். மேவி இழுத்த தலையோடு பகி ஜீன்ஸ் ஸ்டைல் மன்னன் ஆனால் சேர்ட் இவரைப் போட்டிருக்கிறதா இல்லை இவர் சேர்ட்டைப் போட்டிருக்கிறாரா என்னுமளவுக்கு அநியாயத்துக்கும் ஒல்லி. அந்த இருநூறு, முன்னூறு பேர் கொண்ட ரியூசனில் கத்திக் கத்தி நோட்ஸ் சொல்லுவார். அழுத்தம் திருத்தமாக எல்லோருக்கும்
கேட்க வேண்டும் என்று உச்சமாக இவர் கத்தும் போது இரண்டு கைகளின் விரல்களையும் இறுக மடக்கிக் கொண்டே எழும்பி இறங்குவார்.
“டேய் மனுசன் மாரித்தவக்கை மாதிரி கத்திக் கத்தியே வெடிக்கப் போகுது” எண்டு ராஜன் கிண்டலடிப்பான்.
அப்போது உதயன் மாஸ்டரின் பிள்ளையின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் பிகில் பட முதல் நாள் கொண்டாட்டம் போல அவர் வீடெல்ல ஒரே மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சுருள் முடி கேசமும் பாதி நரைத்த மீசையுமாக கொமோர்ஸ் படிப்பிச்ச ரட்ணம் மாஸ்டர். CCA முகப்பில் ஒரு காகிதாதிகள் கடையும் வைத்திருந்தார். ரட்ணம் மாஸ்டரின் வர்த்தக பாட நோட்ஸ் முந்தின கிழமை தேவா மாஸ்டரிடம் படிச்சது அச்சுப் பிசகாமல் இருக்கும். ஏனென்றால் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த நோட்ஸ் ஐ வாங்கி இவர் பகிர்வார் 😀
இவர்களுக்குள் கணக்கியல் ஶ்ரீ மாஸ்டர் ஏன் வித்தியாசம் என்றால் முன் சொன்னவர்களின் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியருக்குண்டான மரியாதை. இங்கோ தலை கீழ் கூடப் படிக்கும் ஒரு கெட்டிக்காரப் பெடியன் தோற்றத்தில் தான் இவரின் குணாதிசியம். சிங்கார வேலன் படத்தில் வந்த மீசை இல்லா பாடகர் மனோ போல இருப்பார். நடு வகிடு எடுத்த தலை முடி.
ஆளின் கண்ணைப் பார்த்தாலே குறும்பு கொப்பளிக்கும். ‪மரியாதையாகக் கதிரையில் இராமல் தொங்கி ஏறி வாங்கில் உட்கார்ந்து காலாட்டுவார்.‬ ஶ்ரீ மாஸ்டர் போலவே அவரின் அண்ணரின் முக ஜாடை. நல்லூர்த் திருவிழா நேரம் அவரை இவராக நினைத்து பல்பு வாங்கியிருக்கிறோம்.
ஶ்ரீ மாஸ்டரின் வகுப்பில் நிறையக் காதல்கள் ஓடிக் கொண்டிருந்தன. காதல்கள் என்றால் இங்கே கூடப் படித்த பெடியளைப் பெண்கள் காதலித்த கதைகள் தான்.
அப்போது நண்பன் பேரின்பனை அத்தியடிப் பெட்டை விழுந்து விழுந்து லவ் பண்ணினாள். வாசனை ஒருத்தி அவன் போகும் ரியூசன் கிளாஸ் எல்லாம் போய் தேடித் தேடிக் காதலித்தாள். இதெல்லாம் ஶ்ரீ மாஸ்டருக்குத் தெரியும். ஏனென்றால் மாணவர்களுக்குள் ஒரு ஒற்றர் படையையே வைத்திருந்தார். வகுப்புகள் முடிந்ததும் அவர்களோடு தான் கும்மாளம், கச்சேரி.
“கம்பசுக்குப் போக முன்னமே
நாண் பூட்டத் திரியுதுகள்”
கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே முணுமுணுத்தவாறு அந்த முன்னூறு பேர் கொண்ட வகுப்பில் இலாப நட்டக் கணக்கு, சமப்படுத்தல் கணக்கு, தொங்கல் கணக்கு எல்லாவற்றையும் எழுமாற்றாக மேய்ந்து கொண்டே
“என்ன வாசன் எப்பிடி இருக்கிறியள்”
என்ற கிண்டலோடு அங்கால் பக்கம் வாசனை சைற் அடித்துக் கொண்டிருக்கும் அவள் பக்கம் ஶ்ரீ மாஸ்டரின் கண் போகும்.
“எருமை இதென்ன கவிதை எல்லாம்
கணக்குக் கொப்பியில எழுதியிருக்கிறாய்” இதயம் முரளி வேஷம் போட்ட மாணவன் ஶ்ரீ மாஸ்டரிடம் வேண்டிக் கட்டுவான்.
ஆரிய குளம் சந்தியில் அருள் நங்கை ரீச்சரின் உயர் கலைக் கல்லூரியில் ஆர்ட்ஸ் படிக்கிற பிள்ளையள், நியூ மாஸ்டர்ஸ் இன்ஸ்ரிரியூட் இல்
மத்ஸ் படிக்கிறவை, இங்கால நியூ விக்டேர்ஸ் பக்கம் சயன்ஸ் படிக்கிற வேம்படி, லேடீஸ் கொலிஜ், ‪சுண்டுக்குளி, கொன்வென்ற்‬ பிள்ளையள் என்று எத்தனை சுற்றல், சுழட்டல், எறிதல் வேலை சைக்கிளில் உலா வரும் என் சகபாடிப் பெடியளுக்கு ஹிஹி எனக்கும். வணிக பாடம் படிக்கிற பெடியிடம்
சத்தீஸ் மாஸ்டரின் இரசாயனவியல் பாட வகுப்பு நேரம் இருக்கும். தவிர CCA இல் அடுக்கி வைக்கப்பட்ட சைக்கிள் கூட்டத்தில் ஒரு மூலையில் சைக்கிளைப் பாதி கிடத்தி விட்டுக் கூட்டமாக நின்று வாற போற ஹம்சாக்கள், ஆனந்திகளைப் பார்க்க வேணும்.
ஆனாலும் அந்த இக்கட்டான சூழலிலும் கல்வி ஒன்றே மூலதனம் என்று குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருப்போம்.
வாழ்ந்து கெட்ட அரண்மனை மாதிரி அந்தக் காலத்தில் பொருளியல் கிருஷ்ணானந்தன் சேர், ‪கணக்கியல்‬ வன்னியசிங்கம் சேர், இந்து நாகரிகம் காரை செ சுந்தரம்பிள்ளை சேர், தமிழ் குழந்தை சேர் என்று மூத்த அண்ணன்கள் படித்த அரண்மனை விக்னா ரியூசன் சென்ரர் (ஶ்ரீதர் தியேட்டர் கழிந்து ரயில்வே கடவை கடந்தால் வரும்) அதில் பிரபாகரன் சேர், கலாதரன் சேர் பிரபல ஆசிரியர்கள். அங்கும்
எட்டிப் பார்த்து விட்டு வந்த காலம் உண்டு.
CCA இல கொசப்புப் பெடியள் எல்லாம் வருவாங்கள் என்று விக்னா ரியூட்டறிப் பெடியள் கிண்டலடித்த காலம் போய் அந்தக் கொசப்புப் பெடியள் கம்பஸ் கிடைத்துப் போகும் போது ஆவென்று வாய் பிளந்து பார்த்த காலமது. சகபாடி அன்ரனி செய்யாத குழப்படி இல்லை அவனுக்கும் யாழ் பல்கலைக் கழகக் கதவு திறந்தது அவனுக்குக் கிடைத்தது உயர் புள்ளிங்கோ.
கடும் யுத்த காலமது. புதுவை இரத்தினதுரை, வாஞ்சிநாதன் என்று விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவினர் கல்லூரிகள், ரியூசன் சென்ரர் எல்லாம் வந்து போருக்கு வா என்று பிரச்சாரம் செய்வார்கள். அப்போது கூடப் போனவர்களும் உண்டு.
கேணல் கிட்டு இறந்த அன்று ரியூசனுக்குக்குப் போனால் வாசலில் வைத்துத் தான் செய்தி பறைகிறார்கள். அப்போது ஒரு சிறு நீளக் கரும்பலகை ஒன்றை எடுத்து வந்து வெளியில் வைத்து சோக்கட்டியால் கேணல் கிட்டுவுக்கு வீர வணக்க அஞ்சலியை நான் எழுதியது எப்பவும் மறக்காது.
இன்னொரு பக்கம் ஏப்ரல் ஃபூல் தினத்துக்கு,
ஶ்ரீ மாஸ்டரின் வகுப்பில் பெடியள் எல்லாம் கும்பல்ல கோவிந்தாவாக மை அடிச்சு ஆரோ ஒருத்தன் அதைப் போட்டுக் குடுத்து தமிழீழக் காவல்துறையிடம் அம்பிட்ட கதையும் இருக்கு.
விடியச் சாப்பாட்டோடு யாழ் நகருக்குள் அந்த ரியூசன் கொட்டிலே அடைக்கலம். இடையில் பக்கத்தில் இருக்கும் லிங்கன் கூல் பாரில் இரண்டு ரோல்ஸ், சர்பத் அல்லது நெல்லி கிறஸ்.
கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து கிராமத்து ரியூசனில் படித்து வளர்ந்து பின் யாழ் நகரத்து ரியூசனில் அதுவரை அறிமுகமில்லாத யாழ் இந்து, சென் ஜோன்ஸ், சென்றல், வேம்படி, இந்து மகளிர், திருக்குடும்பக் கன்னியர் மடம் எல்லாம் புடை சூழப் படித்த காலமெல்லாம் ஏதோ நேரடியாகவே பல்கலைக்கழகத்தில் இருந்த உணர்வு.
அப்போது மின்சாரம் இல்லை, எப்ப ஷெல் வரும், தலைக்கு மேலால் பொம்மர் விமானம் வந்து குண்டு போடும் என்று நிச்சயமில்லாத நொடிகளுக்குள் தான் இந்த ரியூஷன் படிப்பு.
கத்திக் கத்தி நோட்ஸ் சொல்ல வேணும், ஒற்றி ஒற்றி அதை நாங்கள் எழுதிப் படிக்க வேணும்.
அப்போது நாம் கொடுக்கும் நூறு ரூபாவைத் தான் நாலாகப் பங்கிட வேண்டும். என்னதான் கேலி, கிண்டல் இருந்தாலும் படிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ஶ்ரீ மாஸ்டர் அந்தக் கண்ணியத்தைத் தவறவில்லை.
‪ரியூசன் வகுப்பின் கடைசி நாளன்று கண் கலங்கியவாறே, நா தழுதழுக்க ஶ்ரீ மாஸ்டர் எம்மை வாழ்த்தியதும் ஈரம் காயாமல் இருக்கின்றது.‬
‪இன்றைக்கு வாழ்க்கையை இவ்வளவு ஈசியாக, இயல்பாக வாழ ஶ்ரீ மாஸ்டரும் ஒரு காரணி.‬
தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அங்கு எஞ்சி நிற்கும் நண்பர்களிடம் ஶ்ரீ மாஸ்டரைப் பற்றிக் கேட்பேன்.
வெளிநாடு போய் விட்டாராம் என்ற வதந்தியில் இருந்து கொழும்பில் எங்கோ படிப்பிகிறாராம் என்றெல்லாம் சொல்வார்கள்.
நான் தான் இன்னமும் 25 வருடங்கள் பின் தங்கி இருக்கிறேனோ என்று நினைப்பதுண்டு.
இம்முறை தாயகத்துக்குப் போன போது என் வீட்டாரின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களுக்குள் ஶ்ரீ மாஸ்டரிடம் படித்த கணக்கியல் கொப்பியும் இருந்து பத்திரப்படுத்திக் கொண்டேன்.
யாழ் நகரப் பக்கம் போகும் போது அந்த CCA ரியூசன் சென்டர் இருந்த இடம் போய்ப் பார்த்து விட்டு ஒரு பெருமூச்சோடு கடப்பேன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஒரு நிலைத் தகவலைக் கண்டேன். நண்பர் தபேந்திரன் ஶ்ரீ மாஸ்டரைப் பற்றி குறிப்பிட்டு அவர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் தன் சொந்த நிலத்துக்கு இடம் மாறுகிறார் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஶ்ரீ மாஸ்டரை நிழல் படத்தில் பார்க்கிறேன்.
அடுத்த முறை யாழ்ப்பாணம் போகும் போது அவரைச் சந்திக்க வேணும். அப்போது நினைப்பிருந்தால் சொல்லுவார்
“டேய் இணுவில் !
பொட்டுக் குறியோட வந்துட்டாய் என்ன?”
கானா பிரபா
14.11.2019
Posted by கானா பிரபா at 11:10 AM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, October 17, 2019

யாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️


“பொங்கை பார்
வாறான்...வாறான்
குத்துறான்...குத்துறான்....குத்துறான்
குத்தீட்டான்...”
இரண்டு கன்னங்களிலும் கை வைத்துக் கொண்டு தூரத்தே வானத்தைப் பார்த்துப் பேசுவது அப்போதெல்லாம் வழக்கமானதொரு நிகழ்வு. ஏன் நாளாந்த வேலை என்று கூடச் சொல்லலாம்.
“இங்கை தான் வாறன்
ஓடுங்கோ ஓடுங்கோ
பங்கருக்குள்ளை ஓடுங்கோ....”
வீட்டு முற்றத்திலோ அன்றில் பின் வளவிலோ வெட்டி வைத்திருக்கும் பதுங்கு குழிக்குள் ஓடி ஓளிய வேண்டும். காதைப் பொத்திக் கொண்டிருந்தால் அந்த அடைப்பை மீறியும் பேரிரைச்சல் கேட்கும். நிலம் ஒரு தடவை நில நடுக்கம் கண்டது போல அதிர்ந்து விட்டு ஓயும்.
ஊர் நாய்கள் எல்லாம் வாள் வாளென்று கத்தி அழும்.
“உங்காலிப் பக்கம் தான் எங்கேயோ
குண்டைப் பறிச்சிட்டான் போல”
சத்தம் வந்த திக்கைப் பார்த்துப் பேசி விட்டு விமான இரைச்சல் ஓய்ந்த பின்னர் மெல்லப் பதுங்கு குழியை விட்டு வெளியே வருவோம்.
வீதியில் பயணிக்கும் போது தலைக்கு மேலால் ஹெலிகொப்டர் வட்டமடித்தால் சைக்கிளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டு எங்கேனும் மதகுப் பக்கம் போய் ஓடி ஒளிய வேண்டும்.
இப்படித்தான் யாழ்ப்பாணத்துச் சனத்துக்கும் விமானத்துக்குமான தொடர்பு ஆரம்பித்தது.
“பொங்கை பார் பலாலியால போறான்”
என்று மேலே போகும் விமானத்தை ஒரு கொடும் சீவராசி போலவே பார்ப்போம்.
1986 ஆம் ஆண்டு அயலூரான தாவடியில் போட்ட முதல் விமானக் குண்டு வீச்சு அனுபவத்தில் இருந்து பத்தாண்டுகள் இம்மாதிரியான அனுபவங்களை நானும் என் தலைமுறையும் கண்டிருக்கும்.
அப்போதெல்லாம் இன்னொரு வேடிக்கையும் நடக்கும். ஹெலிகொப்டர் வழியாக மேலிருந்து துண்டுப் பிரசுரங்களை வீசுவார்கள்.
“பயங்கரவாதிகளின் இலக்குகளை ஶ்ரீலங்கா விமானப்படை இனம் கண்டுள்ளது. அவற்றின் மீது தாக்குதல் செய்யப் போகிறோம். உங்கள் ஒத்துழைப்பையும், மேலதிக தகவல்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்”
என்ற தொனியில் அந்தச் சிறு துண்டுப் பிரசுரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
ஹெலி போட்ட அந்தத் துண்டுப் பிரசுரம் வானத்தில் மிதந்து மிதந்து காற்றின் திசையில் அலைக்கழிக்கப்பட்டு நிலத்தில் வந்து சேருமிடத்தை விரட்டிக் கொண்டே போய் அந்த ஒற்றையை (notice) எடுப்பது ஏதோ சாதனை போல எங்களூர்ச் சனங்களுக்கு. அதை வாசித்து முடித்துக் கசக்கி எறிந்து விட்டுப் போவார்கள்.
இந்த மாதிரியானதொரு காலகட்டத்தில் இலங்கை அரசு தரை வழியான இராணுவ நடவடிக்கையை 1987 ஆம் ஆண்டு மே மாதம் ஒபரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் ஆரம்பித்து மெல்ல மெல்ல யாழ்ப்பாணக் குடா நாட்டின் பகுதிகளைப் பிடித்துக் கொண்டே வர மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, எஞ்சிய சனம் இடம் பெயர்ந்து கொண்டிருந்தது.
அந்தச் சூழலில் ஜூன் 4 ஆம் திகதி, 1987 ஆம் ஆண்டு கார்த்திகேசு மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று காதைக் கிழிக்குமளவுக்குப் பேரொலி. எங்களின் தலைக்கு மிக அண்மித்ததாக கூட்டம் கூட்டமாக் விமானங்களின் அணி வகுப்பு வானத்தில்.
“ஐயோ போச்சு போச்சு”
என்று நடுங்கிக் கொண்டே தரையில் விழுகிறோம். ஆனால் ஒனறும் நடக்கவில்லைப் போல. உடம்பு நடுங்குகிறதே தவிர அப்படியே இருக்கிறது. விமான இரைச்சல் நம்மை விட்டுக் கடந்த சொற்ப நொடிகளில் மெல்ல மேலே பார்க்கிறோம். குட்டிக் குட்டிப் பாரசூட்டுகளாய்
வெள்ளைப் பொட்டலங்களாக ஏதோ போடப்படுகின்றன. சில மணி நேரத்தில் ஊரெல்லாம் கதை பரவி விட்டது இந்திய வானொலி புண்ணியத்தில். அது தான் “ஒபரேஷன் பூமாலை”
எங்கள் பக்கம் இந்திய அரசாங்கம் இருக்கிறது என்று முதலும் கடைசியுமாக மார் தட்டிய நிகழ்வு அது. அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இன்னொரு நாட்டின் பறப்புச் சட்ட விதிகளைப் புறந்தள்ளி மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை அந்த ஒபரேஷன் பூமாலை. விமானத்தில் இருந்து போடப்பட்ட பொட்டலங்களில் இருந்த தகரத்தில் அடைக்கப்பட்ட சமைத்த உணவுகளை அப்போது யாரும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. ஆனால் தேடித் தேடிப் பிடித்து ஆசையாக வைத்துக் கொண்டார்கள் அந்த ஒபரேஷன் பூமாலை போட்ட உணவுப் பொதிகளை.
ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா என்று ஒவ்வொரு அரசியல் காய் நகர்த்தல்களும் தமிழருக்கு எதிராகவே மாறின. வட பகுதியின் தலைப் பட்டினம் யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலி இராணுவத் தளத்தில் இருந்து முன்னர் எப்படி இலங்கை விமானப்படை குண்டு போடும் விமானங்களைக் கிளப்பியதோ அதே விமானப்படைத் தளத்தில் இந்திய இராணுவத்தினர் அமைதிப்படை என்ற பெயரில் நிலை கொண்டு அப்போது என் அண்ணன் உட்பட ஏராளம் இளைஞர்களை அடைத்து வைத்த சித்திரவதை முகாமாக மாறியது. அங்கே போராளிகள் என்ற போர்வையில் பிடித்து அடைக்கப்பட்ட பெண்களுக்கான் வதை முகாமும் பக்கத்திலேயே இருந்த அனுபவங்களை முந்திய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” நூலிலும் பலாலி இராணுவ முகாமில் தன் கொடிய நாட்களை எழுத்தில் வடித்திருக்கிறார். இவ்வாறு பலாலி விமானப் படைத்தளம் 33 வருடங்களாக (1986 - 2009) தமிழரைப் பொறுத்தவரை காவு எடுக்கும் யமதர்மசாலையாகவே இருந்தது.
அந்தக் காலத்தில் நான் கொழும்புப் பக்கம் வந்தால் மேலே பறக்கும் ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு யுத்த பூமியில் சுற்றிய ஹெலிகொப்டர் நினைவில் தலை முடியெல்லாம் குத்திட்டது போல உணர்வெல்லாம் வந்திருக்கிறது. அந்த் யுத்த பூமியை விட்டுக் கடந்த புலம்பெயர்ந்த குழந்தைகள் சாதாரண பயணிகள் விமானச் சத்தம் கேட்டு மேசைக்கு அடியில் ஓடி ஒளியும் கதையெல்லாம் உண்டு.
போர் நடந்த காலத்துக்கு முன்னர் Air Ceylon என்ற இலங்கை அரசின் விமான சேவையும் பின்னாளில் உபாலியின் தனியார் விமான சேவையும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக ஞாபகம். போர்க்காலத்திலும் தனியார் விமான சேவைகள் சில இயங்கின. Expo Air மற்றும் Lion Air போன்ற விமான சேவைகள் அப்போது பறப்பில் இருந்தன.
2004 ஆம் ஆண்டில் ஒரு நெருக்கடியான சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவதற்கு விமானப் போக்குவரத்து ஒன்றையே நாடவேண்டிய சூழலில் முதன் முதலாக அந்த அனுபவத்தைச் சந்தித்தேன். Expo Air விமானம் மூலம் பயணம் செய்ய ஏற்பாடாகி விட்டது. யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில் என்னோடு சக பயணிகளுமாகத் தீவிர இராணுவச் சோதனைக்கு உள்ளாகி இராணுவத்தின் பஸ்ஸிலேயே பலாலி விமானத் தளம் போகிறோம். வழியெங்கும் தடுப்புச் சோதனைச் சாவடிகள். ஒவ்வொன்றாகக் கடந்து செல்லும் போது எங்களுக்கு ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது என்று.
பலாலி இராணுவ விமானத் தளத்தை அண்மித்த இன்னொரு தடுப்பு நிலத்துக்குள் நுழைகிறது நாம் பயணித்த பஸ்.
படாரென்று ஒரு சத்தம். பஸ் பாதையை விட்டு விலகிப் போய் கவிழ்ந்து போய் கிடக்க, அந்த அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு
“ஐயோ ஐயோ” என்று பயணிகளின் கூக்குரல்.
நானும் கவிழ்ந்து போன அந்த பஸ்ஸுக்குள் வாயடைத்துப் போய் திக்கித்து இருக்கிறேன்.
பஸ்ஸில் இருந்து குத்தித்த ஒரு இராணுவச் சிப்பாயோடு அண்மித்த பக்கத்தில் கண்காணிப்பில் இருந்த இராணுவமும் வந்து சேர போட்டது போட்டபடி பஸ்ஸைச் சுற்றிச் சோதனையிடுகிறார்கள். புலிகள் தான் கிளைமோர் குண்டைக் கிண்டைப் போட்டிட்டினமோ என்று சனம் அந்தக் குறுகிய நேரத்தில் தீவிரப் புலனாய்வில் இறங்க, இராணுவச் சிப்பாய் ஒருவன் வந்து மெல்ல மெல்ல ஒவ்வொருவராக பஸ்ஸின் பின் பக்கக் கதவை உடைத்து இறங்கச் சொல்ல ஒவ்வொருவராக இறங்கினோம். பிறகு தான் தெரிந்தது தார் போடாத அந்த மண் சாலையில் இருந்து விலகி பஸ் வீதியோர நீண்ட பதுங்கு குழிக்குள் ஐக்கியமாகியிருப்பது.
இந்த அமளிக்குள் ஒரு கூத்து. கனடாவோ எங்கோ இருந்தோ வந்திருந்த ஒரு கிழவி தன்னுடைய கமராவை எடுத்து அந்தக் கவிழ்ந்த பஸ்ஸைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
“ஆச்சி படம் எடுக்கக் கூடாது
அங்கிட்டுப் போங்கோ” என்று ஒரு சிப்பாய் அரைகுறைத் தமிழில் சொன்னதை அசட்டை பண்ணிக் கொண்டே சிரித்துக் கொண்டு படம் எடுத்தார்.
அந்தச் சிப்பாய் முறைத்துப் பார்த்து விட்டுக் கிழவியின் கமராவைப் பறித்துக் கொண்டு போய் விட்டான்.
“விசர்க் கிழவி இடம் வலம் தெரியாமல் படமெடுக்குது” என்று சனம் திட்டித் தீர்த்தது.
இன்னொரு பஸ் வர பலாலி விமானத்தளத்துக்குப் போய் இன்னொரு சோதனைச் சாவடி கண்டு இன்னொரு சோதனையோடு விமானத்துக்குள் ஏறினோம்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமான அந்தக் குட்டி விமானப் பயணம் தட்டி வானில் பாழடைந்த தார் றோட்டில் யாழ் ரவுணுக்குப் போகும் அனுபவம் போல, காற்றடிக்கும் திசையெல்லாம் சுற்றிச் சுற்றிப் பெருங்குடல் சிறுகுடல் எல்லாம் ஆட ஆட திருகோணமலை கண்டு (திருக்கணாமலை என்று சிங்களத்தில் வேறு அறிவிப்பு) கொழும்பு வந்திறங்கினோம். அப்பாடா என்றது மனது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்குமான பயணம் ஏதோ பக்கத்து ஊருக்குப் போய் வருவது போலக் கடல் வழிப் பாதையால் சுலபப்பட்டது. புதுப்படங்கள் அப்போது இலங்கையில் சுடச் சுடத் திரையிடப்பட மாட்டாது என்பதால் படம் பார்க்க வல்வெட்டித்துறையில் இருந்து தமிழகத்தின் தூத்துக்குடி, இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளுக்கும் திருச்சிக்குமாக வெள்ளிக்கிழமை பயணித்து இரவுக் காட்சி படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு அடுத்த நாள் காலை மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பதுவது எண்பதுகளுக்கு முந்திய காலத்தில் சர்வ சாதாரணம். இங்கிருந்து லக்ஸ் சோப், ராணி சந்தன சோப், மற்றும் ஜப்பான் ரேடியோ போன்ற அப்போது இந்தியாவில் கிடைக்காத பொருட்களை வியாபார நிமித்தம் கொண்டு போவதும் அங்கிருந்து சேலை உள்ளிட்ட பொருட்களை யாழ்ப்பாணத்துக்குல் கொண்டு வருவதுமான கடல் வழி வர்த்தகப் போல்குவரத்தும் இருந்தது.
இம்முறை தாயகப் பயணத்தில் அண்ணாவுடன் இந்த விமானப் போக்குவரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அந்தக் காலத்தில் பலாலி விமான நிலையத்தினூடாக தந்தை செல்வாவின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த அரசியல் தலைவர்களைச் சந்தித்த அனுபவங்களைப் பேசினார். கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட கலையுலக நட்சத்திரங்கள், அறிஞர்கள் கூட இவ்வழியே வந்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்துக்கு. அப்போது அம்மாவின் சிறிய தந்தை வீடடில் அவர்களின் சந்திப்புகளின் புகைப்படங்களை ஆவணமாக எடுத்து வந்திருக்கிறேன்.
இன்று ஒக்டோபர் 17, 2019 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தின் பெயர் யாழ்ப்பாண நிலையமாகப் பெயர் மாற்றம் கண்டு இந்திய நகரங்களுக்கான போக்குவரத்து நடக்கப் போகிறது. இந்த விமானப் போக்குவரத்தின் மீதான விமர்சனங்களை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டுத் தாய்த் தமிழகத்துக்கும் நமக்குமான இடைவெளி சுருங்க வேண்டும், ‪விட்டுப் போன அந்த அழகிய பழைய பந்தம் இறுக வேண்டும்‬ என்பதே என் ஆதங்கம்.
கானா பிரபா
17.10.2019
மேலதிக வாசிப்புக்கு
Operation Poomalai
https://sangam.org/2007/06/Operation_Poomalai.php?uid=2402
என் பழைய இடுகைகள்
இரை தேடும் இயந்திரக் கழுகுகள்
http://www.madathuvaasal.com/2006/08/blog-post.html
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை
http://www.madathuvaasal.com/2017/11/blog-post_16.html
Posted by கானா பிரபா at 9:28 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Friday, August 16, 2019

பிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா



இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஈழத்தின் ஓவிய மரபில் நீண்டதொரு தடம் பதித்த ஓவியர் ஆசை இராசையா அவர்கள்
ஈழத்தில் புகழ் பூத்த ஓவிய ஆளுமைகளில் ஒருவரான மாற்கு மாஸ்டர் எமது கல்லூரியில் சித்திர வகுப்பு ஆசிரியர். பள்ளிக் கூடத்தில் அவருடைய சித்திரக் கூடம் முழுதும் ஓவியங்கள் பொதிந்த அட்டைகளும், மேசை பரவி பாதி வேலையில் இருக்கும் களிமண் சிற்பங்களுமாக நிறைந்திருக்கும். அந்த நேரத்தில்
சிங்களக் கலையுலகம் வரை போற்றப்பட்ட ஆளுமையாக விளங்கிய மாற்கு மாஸ்டரின் அருமை பெருமையைப் பள்ளி மாணவர் நமக்கோ புரிந்து கொள்ளக் கூடிய வல்லமை இல்லாதிருந்தது. பின்னாளில் திரு பத்மநாப ஐயர் “தேடலும் படைப்புலகமும்” என்று ஈழத்தின் அனைத்து ஓவியர்களின் வாழ்வனுபவங்களையும் திரட்டி வெளிவந்த “தேடலும் படைப்புலகமும்” என்ற நூலை எமது கொக்குவில் இந்துக் கல்லூரியில் பெரும் விழா எடுத்துக் கொண்டாடிய போது சிறப்புப் பிரதி வாங்கிய மாணவர்களில் ஒருவன் நான். அந்த வகையில் அந்தக் காலத்தில் எப்படி அம்புலிமாமா காலத்தில் இருந்து மெல்ல மெல்ல ஈழத்து எழுத்தாளர்கள் பக்கம் திசை திரும்பி அவர்களின் எழுத்துகளை அள்ளியெடுத்துப் படித்தேனோ அது போலவே ஈழத்து ஓவியர்களின் படைப்புகளையும் விரும்பி ரசித்துப் பார்க்கும் வழக்கம் உண்டாயிற்று. ஓவியர் ரமணி, பயஸ் போன்றோர் ஈழத்துப் பத்திரிகைகளில் அடிக்கடி ஓவியம் போடுவார்கள். தவிர ரமணியின் ஓவியம் தாங்கிய ஈழத்து நாவல்கள், சிறுகதைகள் என்று வந்து கொண்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க எங்களையறியாமலேயே இன்னாரென்று தெரியாமல் அவருடைய ஓவியங்கள் நம் பாடப் புத்தகங்களில் இருந்ததை ரசித்துப் பார்த்து வாழ்ந்திருக்கிறோம். அவர் தான் ஓவியர் ஆசை இராசையா.
ஓவியர் ஆசை இராசையா அவர்களை இன்னும் நெருக்கமாக அணுக வைத்தது பெருமதிப்புக்குரிய எழுத்தாளர் அமரர் அநு.வை.நாகராஜன் எழுதிய “காட்டில் ஒரு வாரம்” என்ற சிறுவர் நவீனம். அந்த நாவலுக்கு ஆசை இராசையா அவர்கள் தான் ஓவியம்.என் பதின்ம வயதில் என்னுடைய படிக்கும் ஆர்வம் கண்டு “காட்டில் ஒரு வாரம்” நாவலுக்கு அணிந்துரை எழுத வைத்தவர் அமரர் நாகராஜன் அவர்கள். அந்த வகையில் என் எழுத்து வந்த நூலுக்கும் ஆசை இராசையா அவர்களின் சித்திரம் வந்ததைப் பெருமையோடு நினைவு கூர்வேன். இந்த நூல் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் வெளியீடு கண்ட போது முகப்பு ஓவியம் குறித்தும் அன்றைய மூத்த எழுத்தாளர்கள் பேசியது நினைவுக்கு வருகிறது. இது குறித்து நான் முன்னர் எழுதிய போது ஆசை இராசையா அவர்கள் இவ்வாறு கருத்திட்டிருக்கிறார்.
“பலாலி ஆசிரிய கலாசாலையில் நான் 1973/1974 ம் ஆண்டுகளில் பயிலுனராக இருந்த காலகட்டம். பயிற்சி நிறைவில் நான் கொ/றோயல் கல்லூரியில் ஓவிய ஆசிரியராகப் பணிக்கப்பட்டிருந்தேன். இலங்கையில் மிகப் பெரிய கல்லூரி. (1983ம் ஆண்டு இக் கலூ.ரியின் மாணவர் தொகை : 8000. ஆசிரியர் தொகை 350.) கல்லூரி வளாகத்தில் கால் எடுத்து வைக்கவே உதறல் எடுக்கும். இக்கலூரியில் வாயப்புக் கிட்டியதே அதிர்ஷ்டம் என்று பலரும் வற்புறுத்தியதன் நிமித்தம் வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொண்டேன். அங்கே சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றார் அநு.வை.நாகராஜன். பின்புதான் தெரிந்துகொண்டேன் அவர்தான் நான் அக் கல்லூரிக்கு ஆசிரியப்பணிக்கு வரக் காரணமானவரென்று. அப்பொழுது ஏற்பட்டதுதான் அவருடனான நட்பு. காட்டில் ஒரு வாரம், அவன்தான் பெரியன் ஆகிய இரு நூல்களுக்கும் நானே ஓவியம் வரைந்தவன். நல்ல ஆற்றொழுக்கான நடையில் எழுதும் ஆற்றல் உள்ளவர். சிறுவர் இலக்கியங்கள் மட்டுமல்ல சமய நூல்கள் கட்டுரைகள் பலதும் எழுதியுள்ளார். சுவைபட உரையாடுவதிலும் வல்லவர். எனது சுகவீனம் காரணமாக நீண்ட தூரம் பயணிக்க முடியாததால் சந்திக்கமுடியவில்லை. அவருடைய இறுதிப் பயணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாதது இன்றும் வேதனையே.”
ஆசை இராசையா அவர்கள் குறித்து விக்கிப்பீடியா இவ்வாறு பகிர்கிறது. இவர் ஆகஸ்ட் 16, 1946 இல் பிறந்தவர். நூல்களின் வடிவமைப்பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில் புகழ் பெற்றவராகவும் இருக்கின்றார். இவர் இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஒருவர். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார்.
இவர் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்சமயம் யாழ். பல்கலைக்கழகத்தில் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
ஓவியர் ஆசை இராசையா குறித்த நீண்ட விரிவான பதிவுளை மேலும் படிக்க
4TamilMedia வில் ஓவியர் ஆசை இராசையா அவரின் ஓவியத்தின் மீதான காதல் பற்றி, மகள் காயத்திரியுடன் உரையாடுகிறார்.
பாகம் ஒன்று
http://www.4tamilmedia.com/speci…/…/1110-2016-08-12-00-06-00
பாகம் இரண்டு
http://www.4tamilmedia.com/special/yard/1111-2
பாகம் மூன்று
http://www.4tamilmedia.com/special/yard/1112-3
ஈழத்து நூலகத்தில்“தேடலும் படைப்புகலமும்” என்ற
ஓவியர் மாற்கு சிறப்பு மலரில்
அ. இராசையா: உயிர்கொண்ட நிலக்காட்சிகள் - அரூபன் (பக்கம் 157)
http://www.noolaham.org/…/தேடலும்_படைப்புலகமும்_(ஓவியர்_மாற…
Our Jaffna இணையம்
https://ourjaffna.com/cultural-heroes/ஓவியர்-இராசையா
பதிவை அலங்கரிக்கும் ஓவியங்கள் திரு ஆசை இராசையா அவர்களால் வரையப்பட்டது.
ஓவியர் ஆசை இராசையா நிழற்படம் நன்றி Our Jaffna இணையம்
கானா பிரபா
16.08.2019
Posted by கானா பிரபா at 7:51 PM 1 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, July 22, 2019

Structures of Tamil Eelam : A Handbook 📖 நேற்றிருந்தோம் அந்த நாட்டிலே


ஈழப் போராட்டமானது அதன் தொடக்க காலத்திலேயே தமிழருக்கான சுய நிர்ணய உரிமைக்கான முன்னெடுப்பு மட்டுமன்றி, தன்னிறைவானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற முனைப்புடனேயே இயங்கியது.
ஈழத்தில் பல்வேறுபட்ட போராளி இயக்கங்கள் நிலைபெற்றிருந்த காலத்தில் பொருண்மிய மேம்பாட்டின் அடிப்படை இலக்காக, ஈழத்தில் கிட்டும் வளங்களை முன்னுறுத்திய தொழிற் செயற்பாடுகள் தொடங்கப்பட்டன. எண்பதுகளில் அங்கு வாழ்ந்தோர் போராளி இயக்க உறுப்பினர்கள் வீடு தோறும் சென்று தும்புத்தடி, கைப்பை போன்ற பொருட்களை விற்று வந்ததை நினைவுபடுத்தக் கூடும். ஈழத்து அஞ்சல்துறையின் முன்னோடியாக ஈழச் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் அப்போது அச்சாகின. கலை, பண்பாட்டு விடயங்களில் ஈழத்து நாட்டுக் கூத்து மரபை அடியொற்றி கொஞ்சம் நவீனம் கலந்து போர்க்கால எழுச்சிக் கருத்துகள், ஈழத்தமிழர் காலாகாலமாகச் சந்திக்கும் கல்வித் தரப்படுத்தல்கள், அடக்குமுறைகளை வெளிக்கொணரும் கூத்து நாடகங்கள், வீதி நாடகங்கள் போன்றவை பல்கலைக்கழக மட்டம் தாண்டி போராளி இயக்கங்களாலும் அரங்கேற்றப்பட்டன. போரியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோரின் எழுச்சிப் பாடல்களைத் தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட போராளி இயக்கங்கள் மெல்லத் தாயகத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை உள்வாங்கிய படைப்புகளை வெளிக் கொணர்ந்தார்கள்.
இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஈழத்துக்கு இந்திய இராணுவம் வர முன்னதாக கவியரங்கங்கள், ஈழமுரசு நாளேடு, விடுதலைப் புலிகள் செய்தி ஏடு, சுதந்திரப் பறவைகள் செய்தி ஏடு, நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவை, தமிழீழத் திரைப்பட முயற்சிகள், தமிழகத்துப் பாடகர்களை வைத்துப் பண்ணப்பட்ட எழுச்சிப் பாடல்கள் என்று கலை, இலக்கிய முயற்சிகளிலும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம், அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் என்று பல்வேறு கூறுகளாக பொருண்மியம் சார்ந்த முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்திய இராணுவத்தின் வருகையின் பின் குழம்பிப் போயிருந்த சமூகம் முன்னெப்போதுமில்லாத வகையில் பரந்து பட்ட அளவில் தம்மை மீளக் கட்டியமைத்தது தொண்ணூறுகளுக்குப் பின்னான இரண்டாம் கட்ட ஈழ போரிலிருந்து தான்.
தொண்ணூறுகளில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பித்த போது அது புதிய பரிமாணம் எடுத்தது. போரியல் முறைமைகளில் மட்டுமன்றி முன்னெப்போதுமில்லாத பொருளாதாரத் தடை தமிழர் பகுதிகளில் விதிக்கப்பட்டது. ஒரு நாட்டுக்குள்ளேயே இரண்டாகப் பிளந்தது போலத் தமிழர் தாயக நிலப்பரப்பில் மின்சாரம் இல்லாத சூழலில்
எரிபொருட்கள் தொடங்கி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை பகிரங்கமாகவே இலங்கை அரசாங்கம் பட்டியல் போட்டுத் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சூழலில் தமிழர் தம் விடுதலைக்கு சுய நிர்ணய உரிமை அங்கீகாரம் மட்டுமன்றி பொருளாதார ரீதியான சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய அனுபவ ரீதியான வாழ்க்கை முறைக்குள் தள்ளப்பட்டனர்.
இந்தச் சூழலில் போர்க்களத்தில் நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தம் மக்களின் தன்னிறைவான வாழ்க்கை நெறிகளைப் பேணுவதற்கான அடிப்படைச் செயற் திட்டங்களை வகுத்து அவற்றை நெறிமுறையோடும், தகுந்த பயிற்சித் திட்டங்கள், நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகள் என்று சீரான ஒழுங்கில் அமல்படுத்தினர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடங்கிய இம்முன்னெடுப்புகள் கல்வி, பொருளாதாரம், மருத்துவம், கலை மற்றும் பண்பாடு,ஊடகம், சட்டம் மற்றும் ஒழுங்கு, புனர்வாழ்வு என்று பரந்துபட்ட செயற்பாடுகளாக விரிந்தன. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளைத் தொடும் காலம் வரை ஒரு உத்தேச அரசாங்கம் எப்படியிருக்குமோ அதன் ஒத்திகையாகவே ஈழத்து மக்கள் வாழ்வியலில் ஒன்று கலந்து பரிணமித்தது.
கடந்த கால வரலாறுகளை மீளக் கிளறி விட்டது அண்மையில் வெளியான Structures of Tamil Eelam : A Handbook என்ற நூல். செஞ்சுடர் ஜெமினி என்பவரை ஆசிரியராகக் கொண்டு புரட்சி மீடியாவினால் வெளியிடப்பட்ட இந்த நூல் கடந்த ஜூன் மாதம் சிட்னியிலும் வெளியப்பட்டு வைக்கப்பட்டது. முழுமையான வண்ணப் படத் தொகுப்புகள், உயர் ரக தடித்த வள வள காகிதம் கொண்டு மொத்தம் 225 பக்கங்கள் திரட்டிய இந்த நூலின் உள்ளடக்கம், வடிவமைப்பு, உசாத்துணை போன்ற விபரங்களில் ஆவணத்துக்குரிய நேர்த்தி தெரிகிறது. தமிழீழப் பயணத்தில் தம் இன்னுயிரை ஈய்ந்த உயிர்களுக்கு இந்த நூல் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதுதான் Facebook போன்ற சமூக வலைத்தளங்கள், YouTube ஈறாகப் பல்லூடகத் தளங்களும் இருக்கின்றனவே இந்தச் சூழலில் ஏன் இப்படியொரு புத்தகம் என்ற எழுமாற்றான கேள்விக்கும் பதில் கொடுக்கிறார்கள்.
Glimpes of Tamil Eelam (GoTE) என்ற சமூக வலைத்தளம் 2017 ஆரம்பிக்கப்பட்டு ஈழத்துப் போரியல், அரசியல் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை ஆவணப்படுத்த ஆரம்பித்த போது இந்த அமையத்தின் பேஸ்புக் கணக்கு 21.04.2018 இல் முடக்கப்பட்டதாகவும் தொடர்ந்து 09.08.2018 இல் Instagram கணக்கும் முடக்கப்பட்டதாகவும் இதன் படிப்பினையாக இவ்வண்ணம் ஆவண நூலொன்றைப் பிரசவிக்க வேண்டிய தேவை எழுந்ததாகவும், அத்தோடு நம்முடைய இளைய தலைமுறைக்கு இப்பேர்ப்பட்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பு ஈழத்தில் இருந்தது என்பதைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் கூடவே அமைந்ததும் இந்த நூலை வெளியிடும் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
கொஞ்சம் உணர்வு வயப்பட்டு இந்த நூலை ஆக்க வேண்டுமென்று அணுகியொருந்தால் அது வெறும் பிரச்சாரக் கையேடாக அமைந்திருக்கும். ஆனால் முறையான வகைப்படுத்தல்கள், தேவையான தரவுகள் போன்ற அணுகுமுறையோடு பயணிக்கும் இந்த நூல் தமிழீழத்தில் இயங்கிய ஒவ்வொரு அமைப்பினதும் தொடக்கம் தேதி, ஆண்டு வாரியாகவும், அதன் முக்கிய நோக்கம், செயற்பாடு என்பவற்றை ஒரு சில பக்கங்களிலேயே உள்ளடக்கி விடுகிறது.
அந்த வகையில்
தமிழீழத் தேசிய ஆட்பதிவு மையம்
அரசியல் பிரிவு அலுவலகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி
தமிழீழப் போக்குவரத்துக் கழகம்
திட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான பிரதேச செயலகம்
தமிழீழ நீதிமன்று
தமிழீழக் காவல்துறை
ஈழ நாதம் செய்தியேடு
ஊடகத் தொழில் நுட்ப மையம்
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி
புலிகளின் குரல் வானொலி
பொருண்மிய ஆலோசனை அமையம்
தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்
தமிழீழ வைப்பகம்
தமிழீழ மருத்துவக் கல்லூரி, மருத்துவப் பிரிவு
பாடப் புத்தகம்
ஆங்கிலப் போதனை நிலையம்
சிறார் கணினிப் பூங்கா
கலை பண்பாட்டு அமைப்பு
உணவகம்
எழுச்சிப் படைப்புகள்
புனர்வாழ்வு முன்னெடுப்புகள்
சிறார் காப்பகங்கள்
என்று ஈழத்தில் பரந்து விரிந்த சமூகச் செயற்பாடுகள், மக்களின் அடி நாதமாக ஒலிக்கும் அரசாங்கம் ஒன்றிருந்தால் அதன் தூர நோக்கம் எப்படியிருக்கும் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவுகிறது. அந்தக் கால கட்டத்தில் ஈழப் பரப்பில் வாழ்ந்தோருக்கு மீள் நினைவுகளாக விரியும் இந்த நூலில் ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்வாங்கம், விளைச்சலோடு காட்டப்பட்டிருக்கின்றன.
உண்மையில் இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிட்டிருக்கும் அமைப்புகள், அவற்றின் செயற்பாடுகளை விரிவுபடுத்தினாலேயே பல ஆய்வு நூல்கள் எழுதக்கூடிய பெறுமானம் கொண்டவை. களத்தில் போரிட்டுத் தம் விழிப் புலம் இழந்தோர், கை, கால், அவயகம் களைந்தோரின் தோள் பற்றிக் கொண்டாடும் புனர்வாழ்வு முன்னெடுப்புகள் ஒரு புறம், ஈழச் சிறாருக்குக் கணினிக் கல்வி, ஆங்கில அறிவு போன்றவற்றைப் போதிக்கும் கல்வி அமைப்புகள் இன்னொரு புறமாக இருக்க, ஈழப் போரின் இறுதி நாட்களில் மரணத்துக்கு சில நிமிடங்கள் தொலைவில் இருந்தாலும் மக்கள் பணியில் இருந்த தமிழீழக் காவல்துறையின் செயற்பாடுகள் படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த ஆவணத்தைப் படிக்கும் போது இன்று விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இல்லாத கடந்த பத்து வருட காலத்தில் குறித்த கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட துறை சார் அமைபுகளையோ, செயற்பாடுகளையோ தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளோ அன்றித் தன்னார்வ அமைப்புகளோ (புனர்வாழ்வு நீங்கலாக) செய்ய முன் வரவில்லையே என்ற ஆதங்கம் எழுகிறது.
ஈழத்தில் கிட்டும் வளங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய உற்பத்திகளுக்கான முன் மாதிரித் திட்டங்கள் எதிர்காலத்தில் விளையப் போகும் ஒரு நாட்டின் அடிப்படைப் பொருளாதார மூலாதாரமாக அமையப் போகிறது என்பதை முன்னுறித்திய செயற்பாடுகள் காணக் கிடைக்கின்றன.
இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தாலும் தமிழிலும் கிட்ட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. விடுதலைப்புலிகள் தலைமையில் இயங்கிய அரசு போர் வெற்றிகளில் குளிர்ந்து கொண்டிருந்த ஒரு போராளி இயக்கமல்ல, அது தனது பரந்து பட்ட அரசியல், சமூகச் செயற்பாடுகளின் வழியே ஒரு நல்லாட்சியை நடத்தியிருக்கின்றது என்பதை இந்த ஆவணம் சான்றுகளோடு நிறுவியிருக்கின்றது.
கானா பிரபா
22.07.2019
Posted by கானா பிரபா at 1:19 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, July 17, 2019

இலங்கை வானொலி ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் - அகவை 90




இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உலகளாவிய புகழ் கொண்டு முன்னணி வானொலி நிலையமாகத் திகழ்ந்த போது அதனைக் கட்டியெழுப்பிய சிற்பிகள் பலர் நம் காதுகளுக்குள் உறவாடும் குரல்களாகவும், வானொலியின் இயக்கத்துக்குப் பின்னணியில் இயங்கியவர்களாகவும் அமைந்து விளங்கினர்.
இவர்களில் பெரும்பாலானோர் 83 இனக் கலவரத்துக்குப் பின்னர் மெல்ல மெல்ல நாடு தாண்டி உலகின் பல்வேறு கரைகளைத் தொட்ட போது அவுஸ்திரேலியாவும் சில ஆளுமைகளை வாரிக் கொண்டது.
அந்த வகையில் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அமரர் சுந்தா சுந்தரலிங்கம், அமரர் காவலூர் இராசதுரை, அமரர் பொன்மணி குலசிங்கம் மற்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் திருமதி பாலம் லஷ்மணன் அம்மா, எஸ்.எழில்வேந்தன் ஆகியோரோடு இன்னொரு மூத்த ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவையும் குறிப்பிட வேண்டும். கடந்த ஜூலை 17 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அம்மாவுக்கு அகவை 90 ஐ எட்டியிருக்கிறது.
எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் சிட்னியில் ஒரு இலக்கியச் சந்திப்பை ஏப்ரல் 7 ஆம் திகதி 2007 இல் நடத்தினோம். அந்தச் சந்திப்பின் முக்கிய நிகழ்வாக அந்த ஆண்டு 75 வது அகவையை திரு காவலூர் ராசதுரை அவர்கள் பூர்த்தி செய்யும் தருணம் கெளரவிக்க வேண்டும் என்று அவருக்கே தெரியாமல் இரகசிய ஒழுங்குகளை திரு முருகபூபதி அவர்கள் செய்து வைத்திருந்தார்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்டு வானொலிக்கால இனிய நினைவுகளை மீட்டினார். http://www.madathuvaasal.com/2014/10/blog-post_15.html
2007 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதி திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைச் சந்திக்க்கிறேன். நீண்டதொரு உரையாடலின் பின் தன்னுடைய அனுபவப் பகிர்வு நூலான “The Green Light” ஐயும் அன்போடு தந்து வழியனுப்பினார்.
திருமதி ஞானம் அவர்கள் ஒரு வழிகாட்டி அறிவிப்பாளராகவும், மக்கள் சேவையாளராகவும் தன்னுடைய வானொலிப் பணியை முன்னெடுத்தவர் என்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முதன்மைத் தலைவர் மற்றும் இயக்குநர் நாயகம் (chairman) பொறுப்பேற்ற திரு நெவில் ஜெயவீர குறிப்பிட்டிருக்கிறார்.
ஏராளம் அரிய தகவல்கள், புகைப்படங்களோடி தன் வானொலி வாழ்வியலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றோடு இணைத்து திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கும் போது இது சுய புராணமாக அன்றி இலங்கை வானொலியின் வரலாற்றுப் பதிவாகவே அமைகின்றது.
“The Green Light” நூலைத் தான் உருவாக்க ஏதுவாக 1998 இல் இலங்கை வானொலியில் ஊடகர் திரு இளையதம்பி தயானந்தா அவர்கள் தன்னிடம் எடுத்த வானொலிப் பேட்டியைத் தொடர்ந்து இந்த அனுபவங்களை ஆவணமாக்குங்கள் என்று தன்னை வேண்டியதாகத் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். “The Green Light” நூல் குறித்த முழுமையான பகிர்வைப் பின்னர் பகிர்கிறேன்.
திருமதி ஞானம் இரத்தினம் குறித்து பெருமதிப்புக்குரிய ஊடகர் பி.விக்னேஸ்வரன் P Wikneswaran Paramananthan அண்ணாவின் பகிர்வையும் இங்கே தருகிறேன்
இலங்கை வானொலி பல திறமைமிக்க ஒலிபரப்பாளர்களின் கடின உழைப்பால் புகழ்பெற்ற ஒரு ஸ்தாபனம். இலங்கை வானொலி தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய சேவையும் அதனால் அது அடைந்த பிரபல்யமும் கௌரவமும் மிகப் பெரியது. இதில் ஆண்களின் பங்கு அதிகமென்றாலும் சில பெண்களும் மிக முக்கிய பதவிகளிலிருந்து அரும்பணியாற்றியிருக்கிறார்கள். எண்ணிக்கையில் மிகக் குறைவென்றாலும் இவர்கள் இலங்கை ஒலிபரப்பு வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த மிகக்குறைந்தளவான அதிகாரிகளில் திருமதி. ஞானம் இரத்தினமும் ஒருவர்.
பட்டப்படிப்பின் பின்னர் இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் தயாரிப்பாளராகச் சேர்ந்த ஞானம் இரத்தினம் அவர்கள், நான் பணிக்குச் சேர்ந்த 1970ஆம் ஆண்டில் வானொலி மஞ்சரிக்குப் பொறுப்பான ஆசிரியராக இருந்தார். பின்னர் தேசியசேவையின் தமிழ்ப்பிரிவுத் தலைமைப் பொறுப்பையேற்ற அவர், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டபோது இயல், நாடகப் பிரிவின் கட்டுப்பாட்டாளராகப் பதவியேற்றார். தொடர்ந்து, தமிழ்ச்சேவை ஒன்றுக்குப் பொறுப்பான மேலதிக இயக்குனராப் பதவிவகிக்கும்போது, இலங்கையில் தேசிய தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட, மலேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பயிற்சிபெற்ற அவர், ரூபவாஹினியின் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பான இயக்குனராகப் பதவியேற்றார். தமிழ்ப்பிரிவு இவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. அப்போது அவரின் நெறிப்படுத்தலிலும் ஆலோசனைகளுக்கமையவும் நான் பணியாற்றினேன்.
அவர் எந்தப்பிரச்சினைகளையும் கையாளும் விதம் எனக்கு வியப்பூட்டும். சிந்தனைத் தெளிவுமிக்க பெண்மணி. தாயுள்ளம்கொண்ட அவர் கடிந்து பேசமாட்டார். தமிழிலும் ஆங்கிலத்தலும் மிகுந்த புலமைபெற்ற அவர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும்போது, ஆங்கிலம் ஓர் இலகுவான மொழிபோல் எமக்குத் தோன்றும். தமிழ்போலவே ஆங்கிலத்திலும் இலகுவான நடையில், தங்குதடை ஏதுமின்றிப் பேசும் அவர், 1983ஆம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னி நகரில் வசித்துவருகிறார்.

ஜுலை மாதம் 17ஆம் திகதி அவருக்கு 90ஆவது பிறந்தநாள்.
அவர் நீண்டகாலம் சுகதேகியாக, மனநிறைவுடன் வாழவேண்டுமென்று பிரார்த்திப்போம்.
Posted by கானா பிரபா at 7:47 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ▼  2019 (19)
    • ▼  December 2019 (3)
      • ஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்
      • வலைப்பதிவு உலகில் நிறைந்த என் 14 ஆண்டுகள் 🌷🥁
      • “லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற...
    • ►  November 2019 (1)
      • ஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚
    • ►  October 2019 (1)
      • யாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️
    • ►  August 2019 (1)
      • பிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை...
    • ►  July 2019 (3)
      • Structures of Tamil Eelam : A Handbook 📖 நேற்றிரு...
      • இலங்கை வானொலி ஊடகர் திருமதி ஞானம் இரத்தினம் - அகவ...
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes