“அம்மா! சோதிப்பெருமாள் மாஸ்டர் எப்பிடி இருக்கிறார்?”
“ஓ கடவுளே எண்டு அண்ணை சுகமாய் இருக்கிறார்” இது அம்மாவின் பதில்.
என் தாயகப் பயணத்திலும் சரி அம்மாவுடனான
தொலைபேசி உரையாடலிலும் சரி நான் மறவாது கேட்கும் மனிதர்களில் அவரும் ஒருவர்.
இணுவில் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலைவன் பாடசாலை என்று பெயரளவில் இருந்தாலும்
“சீனிப் புளியடி பள்ளிக்கூடம்” என்ற அடையாளமே நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விட்டது. அது போல எத்தனையோ அதிபர்கள் இணைந்து நிர்வாகத்தைத் திறம்பட நடத்தினாலும் “சோதிப்பெருமாள் மாஸ்டர் காலம்” என்பது இந்தப் பள்ளிக்கூடத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்காத குறை தான்.
சோதிப்பெருமாள் அவர்கள் தான் நாங்கள் படிக்கும் காலத்தில் அதிபர். அந்த நேரம் என் அம்மாவும் அங்கு ஆசிரியை.
சோதிப்பெருமாள் மாஸ்டர் என்று மற்றவர்களோடு பேசினாலும் “அண்ணை” என்றே அவரை அம்மா அழைப்பார். அவர் போலவே அம்மா “அண்ணை” என்று அழைக்கும் இன்னொருவர் தட்சணாமூர்த்தி மாஸ்டர்.
“தங்கச்சி! இதை ஒருக்கால் எழுதித்தா” என்று ஒரு கட்டு எழுத்துப் பிரதிகளை சோதிப்பெருமாள் மாஸ்டர் அம்மாவிடம் கொடுத்து விடுவார். பள்ளிக்கூடத்தின் பாட நெறிகளுக்கான அந்த எழுத்துப் பிரதிகளைத் தன் வகுப்பு நேரம் முடிந்ததும் அம்மா ஒற்றை றூல் கொப்பியில் எழுதி எழுதிக் கொடுப்பார்.
அம்மாவின் கையெழுத்து மணி மணியாக இருக்கும் எனவே அவரைத் தன் அறிவிக்கப்படாத உதவியாளராக சோதிப்பெருமாள் மாஸ்டர் நியமித்திருந்தார்.
வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையும், சுறுட்டுமாக இருப்பார் சோதிப்பெருமாள் மாஸ்டர். தேவனின் துப்பறியும் சாம்புவின் முகத்தை ஒத்த சாடை.
எங்கள் காலத்தில் காமராஜர் போன்ற எளிமையான மனிதர்களை நினைத்தால் சோதிப்பெருமாள் மாஸ்டர் தான் பிரதிபிம்பமாக இருப்பார்.
அதிபர் அறை என்று பேர் தான் கோயில் மாதிரி தங்கட பாட்டில உள்ளுக்கு வந்து போவார்கள் மாணவர்கள். பள்ளிக்கூடத்தைச் சுத்தமாகக் கூட்டிக் கழுவிச் சுற்றுப்புறங்களில் குப்பை, கூளங்களை அகற்றினால் அந்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தாத குறை தான். “இஞ்சை வாங்கோடாப்பா” என் தன் அறைக்குக் கூட்டிக் கொண்டு போய் மூலையில் அடுக்கியிருக்கும் கெயார் பிஸ்கெட் பொட்டலங்களைப் பிரித்து பிஸ்கெட்டுகளை அள்ளச் சொல்வார்.
ஒரு கல்விச்சாலையைத் திறம்பட நடத்த பெரிய பெரிய மேற்படிப்புகளைப் படித்து விற்பன்னராக இருக்கத் தேவை இல்லை, மாணவரதும் தான் வழி நடத்தும் ஆசிரியர்களதும் உளவியலைப் புரிந்து கொண்டாலேயே நிர்வாகத் திறனைத் தன் கைக்குள் வைத்திருக்கலாம் என்பதற்கு வாழ்ந்த உதாரணம் எங்கள் சோதிப்பெருமாள் மாஸ்டர். பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் தம்முடைய பட்டறிவு மூலம் தான் அதிகம் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். தான் அதிபராக இருந்த காலத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் மீதான பந்தத்தை அவர் விட்டாரில்லை. அத்தோடு இணுவில் கிராமத்தின்
தொடர் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளில் பொறுப்பு வகித்தாலும் புகழ் தேடாத மனிதர், அதனால் தான் அவர் எங்கள் எல்லோர் இதயத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
நேற்று சோதிப்பெருமாள் பூதவுடல் மரித்தாலும் சீனிப்புளியடி பள்ளிக்கூடம் அவரின் ஆன்மாவைத் தன்னுள்ளே தேக்கி வைத்திருக்கும்.
0 comments:
Post a Comment