skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, June 28, 2009

கவிஞர் இ.முருகையன் நினைவில்...!

போய் வா என் ஆசானே போய் வா
விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது
போய் வா என் ஆசானே போய் வா

மனம் நெகிழ வழியனுப்பும்
வாழ்வியலின் ஒரு நிகழ்விது
இருபத்தியொரு வருடங்களுக்கு முன்னர்
கல்லறை மேலான காற்றில் என்
நினைவுச் சிதறல்களுக்கு நீ கொடுத்தது தானே
என் பேனாவுக்குக் கிடைத்த முதல் முத்தம்

உனது எழுத்துகளை மட்டுமல்ல
உன்னையும் அதிகம் வாசித்தவன் நான்
நீயும் சோ.பா வும் எங்கள்
"பா"ப்பிள்ளைகளுக்கு
ஏடு தொடக்கியதால் தானே -இன்று
அவற்றுக்கு எழுதப்படிக்கத் தெரிகிறது
போய் வா என் ஆசானே போய் வா

நெருப்பைக் கூடப் பதற்றப்படாமல்
கருக்கிவிடப் பழக்கியவனே போய்
கொள்கைகளை முழங்கிவிட்டு
கொல்லைப்புறத்தால்
கொடுக்கல் வாங்கல்கள்
செய்பவர் மத்தியில்
வாழ்க்கைமுறையால்
கொள்கைகளை வரைந்து
வரைந்து காட்டியவன் நீ

வட்டங்களாய் சதுரங்களாய்
வடிவான முக்கோணங்களாய்
அமைப்புகளெல்லாம் உன்னை
தமக்குள் அடைக்கமுயன்ற போதும- நீயோ
வானத்தை வளைத்து
உனக்கு வேலியாய் வைத்தவன்

மாடும் கயிறுகள் அறுக்கும் என்று - நீ
மனிதர்களுக்குச் சொன்னதால் தானே
எங்கட மண்ணும் விடியலைப்
பார்க்க விருப்பப்பட்டது

சிரேஷ்ட உதவிப்பதிவாளனாய்
பெயருக்குத் தான் நீயிருந்தாய்
உன் பார்வையின் கூர்மையல்லவா
யாழ் பல்கலைக்கழகத்தை
நிர்வாகம் செய்தது

மென்மையாக நீ நடக்கையில்
இராமநாதன் மண்டபத்தின் மரத்தளங்கள்
இசைத்த அந்த மாறாத தாள ஒலி
என் மனசுக்குள் இப்போதும் கேட்கிறது
கலைவாரத்தில் களைகட்டுவது - உன்னைத்
தலையாகக் கொள்ளும் கவியரங்கமும்
விவாதமும் தானே

கணீரென்று காதுகளுக்குள் நீ
இறக்கிவிட்டவை தான்
நித்திரையாய் கிடந்தவரையெல்லாம்
நிமிர்ந்து உட்கார வைத்தது

கூன் விழுந்த மனங்களுக்கு - உன் குரல்
முதுகில் முள்ளந்தண்டிருப்பதை
ஞாபகப்படுத்தும்

மைதானப்புல்லும் மலைவேப்பமரக்கிளையும்
குலை குலையாய்ப் பூக்கும் கொன்றைகளும்
வேப்பம் துளிர்களும் யூக்கலிப்டஸ் இலைகளும்
நிழல் விரித்த வாகைகளும் உன்
நெஞ்சிருந்த அந்த வளவும்

மெளனங்கள் ஓசையாக ஓசைகள் மெனமாக
விடைதருகிறது எனதருமை ஆசானே
நீ போய் வா

உறவுகளுக்கு மட்டுமல்ல ஊருக்கும் உலகுக்கும்
உன்னதமாகிப் போனவனே போய் வா
நீ விசிறியவை ஆயிரமாயிரம் பேனாக்களில் விழுந்து
மகரந்த மணிகளாய் உயிர்க்கின்றன
உனது விரல் நரம்புகள் இன்று
ஏராளம் விரல் நரம்புகளில் அசைகின்றன
போய் வா என் ஆசானே போய் வா

விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது
மனம் நெகிழ வழியனுப்பும்
வாழ்வியலின் ஒரு நிகழ்விது
போய் வா என் ஆசானே போய் வா

ஈழத்தின் மூத்த படைப்பாளி முருகையன் அஞ்சலிப்பகிர்வினை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகத் தயாரித்த போது அவர்தம் மாணவன் கவிஞர் சடாகோபன் வழங்கிய கவிதை அது.

அதன் ஒலிவடிவம் இதோ



ஈழத்தின் குறிப்பிடத்தக்க மூத்தபடைப்பாளி் முருகையன் அவர்கள் நேற்று சனிக்கிழமை 27 யூன் 2009 காலமாகியிருக்கின்றார்.

இவர் குறித்து யாழில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக் குறிப்பில்,
ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும் நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.

1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரியின் கல்வயல் பகுதியில் பிறந்த இவர் சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். விஞ்ஞானமாணிப் பட்டதாரியான இவர் ஆசிரியர், அரசகரும மொழித் திணைக்கள மொழிபெயர்ப்பாளர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கல்வித் திணைக்கள கல்விப்பணிப்பாளர் மற்றும் யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் ஆகிய அரச பதவிகளை வகித்து ஓய்வு பெற்றவர்.

யாழ் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது. திருமணத்தின் பின்னர் நீர்வேலியில் வசித்து வந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாராவார்.

மாணவனாக இருந்த காலம் முதல் தமிழ் நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு காட்டிச் செயற்பட்டு வந்த இவர் ஒரு தலைசிறந்த கவிஞராகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்.

24 நாடகங்களையும் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ள இவரது நாடகம் மற்றும் கவிதைகளில் சமூகத்து மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களே உள்ளடக்கமாக அமைந்துள்ளன.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைக் கெளரவிக்கும் முகமாக இலங்கை அரசு 2006 ஆம் ஆண்டுக்கான "சாகித்ய ரத்னா" விருது வழங்கிக் கெளரவித்தது.


கவிதைத்துறையுடன் ஆய்வு இலக்கியம், நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் ஆழத்தடம்பதித்த முருகையனது "வெறியாட்டு', "மேற்பூச்சு', "சங்கடங்கள்', "உண்மை' போன்ற நாடக நூல்கள் மிகப் பிரசித்தமானவை. "ஆதிபகவன்', "வந்துசேர்ந்தன்', "அது அவர்கள்', "மாடுகளும் கயிறுகள் அறுக்கும்', "நாங்கள் மனிதர்' போன்ற கவிதை நூல்களையும், "இன்றைய உலகில் இலக்கியம்' எனும் ஆய்வு நூலையும் எழுதிய இவர், மறைந்த கவிஞர் மஹாகவியுடன் இணைந்து "தகனம்' எனும் காவிய நூலையும் பேராசிரியர் கைலாசபதியுடன் "கவிதைநயம்' எனும் நூலையும் எழுதியுள்ளார்.

முருகையனது கவிதைகள் போன்று அவர் பங்களிப்புச் செய்த ஏனைய படைப்புகளும் தெளிவும் ஆழமும் மிக்கவைகளாக விளங்கின. அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு பொரளை, கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். (ஞாயிறு தினக்குரல்)

000000000000000000000000000000000000000000000000

ஈழத்துப் படைப்பாளி முருகையன் குறித்து அஞ்சலிப்பகிர்வுகளைத் தொகுத்து அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக செய்ய விழைந்த போது அன்னாரின் சக நண்பர்கள் தற்போது அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தாமதப்படுகின்றது. முதலில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் வழங்கிய அஞ்சலிப்பகிர்வு இதோ

ஒலியில் கேட்க



பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் அஞ்சலிப்பகிர்வு எழுத்து வடிவில்
நண்பர் முருகையன் காலமாகிவிட்டார் என்ற செய்தி இன்று காலை எட்டிற்று. கொழும்பிலே அவர் மகள் வீட்டுக்கு வந்தபோது அவர் காலமாகியிருக்கிறார்.
உண்மையில் பாரதிதாசனுக்குப் பிறகு தமிழ்க் கவிதையுலகுக்கு, ஈழத்தமிழ்க் கவிதையுலகுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ்க் கவிதையுலகுக்கு மஹாகவியின் மறைவும், முருகையன் மறைவும் பாரதூரமான இழப்புக்களாகும்.

முருகையனுடைய கவிதைகளின் சிறப்பு யாதெனில் அவர் உணர்ச்சி நிலைப்பட்ட கவிஞர் அல்லர். நான் அடிக்கடி சொல்வதுண்டு அவர் ஒரு intellectual poet என்று, அதாவது புலமைத்துவ நிலையில் இருந்த ஒரு கவிஞர். அவருடைய கவிதைகளை நீங்கள் வாசித்தால் அது வெறுமனே உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மாத்திரம் இல்லாமல் ஆழமான சிந்தனைகளைத் தூண்டுகின்ற கவிதைகளாக அவரது பாணி அமைந்திருக்கும்.

"இரண்டாயிரம் ஆண்டு பழைய சுமை எங்களுக்கு" என்ற அவரது கவிதை மிக அற்புதமான கவிதை அது இப்பொழுது எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. முருகையன் முதலிலே விஞ்ஞானப்பட்டதாரியாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் இருந்து புறப்பட்டு சாவகச்சேரி இந்துக்கல்லூரி சென்று ஆசிரியராக இருந்தார். பின்னர் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினுடைய பதிப்பாளராக, எடிட்டராக கொழும்புக்கு வந்திருந்தார். அப்போது அவர் பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களைப் பதிப்பிக்கின்ற விடயங்களிலே ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

முருகையனுடைய கவிதைகளின் முழுத் தொகுதியும் இன்னும் வரவில்லை. ஆனால் முருகையனைப் பற்றி நாம் பேசுகின்றபோது மறக்கக் கூடாதது என்னவென்றால் அவருடைய கவிதை நாடகங்களாகும். வந்து சேர்ந்தன, தரிசனம் போன்றவை மிக அற்புதமான கவிதை நாடகங்கள். துரதிஷ்டவசமாக அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர அவை எல்லாமே இன்னும் வெளிவரவில்லை. அது எங்களுக்குப் பெரிய நட்டம் என்றே நான் கருதுகின்றேன்.

முருகையனிடம் இருந்த பண்புகளில் ஒன்று விடயங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவார். தனக்குத் தான் தெரியும் என்று அடித்து ஒருகாலமும் சொல்ல மாட்டார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலே கைலாசபதியும் இவரும் நண்பர்களாக இருந்தார்கள். கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு வந்தபோதுதான் என்னை அவருக்கு தெரிந்தது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பதிப்பாளர் பதவிக்கு இவர் வந்தபோது அப்போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுடைய 1967 ஆம் ஆண்டு விழாவை நடத்துகிறோம், அந்த விழாவிலே கவிதை நாடகத்தைப் போடவேண்டும் என்று முருகையனைக் கேட்டபோது "குற்றம் குற்றமே" என்னும் நக்கீரன் விவாதத்தையொட்டிய நாடகத்தை எழுதியிருந்தார். முருகையன் அவர்களது உடல்நிலைச் சீர்கேடு காரணமாக அவர் அண்மைக்காலத்தில் அதிகம் எழுதவில்லை. அவரின் தொகுதிகள் கூட இன்னும் வெளிவரவில்லை. இது தமிழுக்குப் பெரும் நஷ்டம் என்பேன். முருகையனுடைய நண்பர்கள் அவரது கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்து "முருகையன் கவிதைகள் என்ற தொகுப்பாகக் கொண்டுவர வேண்டுமென்பது என் விருப்பம். அது முடியுமானால் அந்த முருகையன் கவிதைகள் தொகுப்பு இந்தியாவிலும் வெளிவர வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் வெளிவருகின்ற போது தான் பாரதிதாசனுக்குப் பிறகு intellectual poet ஆக இருந்த ஒரு முக்கியமான கவிஞர் இழப்பு தெரியவரும். இது என் காலத்தில் வரவேண்டும் என்பது என் அவாக்களிலே ஒன்று.
00000000000000000000000000000000000000000000000000

மானிடம் மேம்பட வேண்டும் என்ற உறுதியுடன் பாடிய மாபெரும் கவிஞர் அமரர் முருகையன்
ஞாயிறு தினக்குரலில் அனுதாபச் செய்தியில் பேராசிரியர் தில்லைநாதன்

"அவலங்களும் அழுக்குகளும் மேடு பள்ளங்களும் சுரண்டலும் ஒழிந்து மானிடம் மேம்பட வேண்டும் என்ற உறுதியுடன் பாடிய ஒரு மாபெரும் கவிஞர் அமரர் முருகையன் ' என பேராசிரியர் எஸ். தில்லைநாதன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் முருகையனின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

கவிஞர் முருகையன் உண்மையிலேயே உயர்ந்த, பரந்த பார்வை கொண்டவராக திகழ்ந்தார்.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னா சொல் போன்றவற்றை அவரிடம் நான் என்றுமே கண்டதில்லை.

உள்ளத்தில் உண்மை ஒளி பெற்றிருந்ததால் அவரது வாக்கு ஒளி பாய்ச்சுவதாக இருந்தது. வசன நடையிலும் அவர் பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவரது நாடகங்களும் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளும் மொழி பெயர்ப்பு பற்றிய நூல்களும் பெறுமதி மிக்கவை. அவரது நடையில் காணப்பட்ட தெளிவும், செறிவும், தர்க்க ரீதியான ஒழுங்கும் இலேசில் கைவிடத்தக்கவை அன்று.

அபிப்பிராயங்களை பட்டவர்த்தனமாக கேட்போர் உள்ளங்களில் பசுமரத்தாணி போல் பதியும் வகையில் வெளிப்படுத்திய எழுத்தாளர். எல்லாவற்றுக்கும் மேலாக மானிட பரிவுமிக்க நல்லதொரு மனிதருமாவர்.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆட்டோகிராபை கொடுத்த போது "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்று கவிஞர் முருகையன் எழுதிக் கொடுத்தது என் நினைவில் பசுமையாகவுள்ளது.

தமிழுக்கு சேவையாற்றிய கவிஞர் முருகையனை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறப்பதில்லை எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0000000000000000000000000000000000000000000000000

ஈழத்து மெல்லிசைப் பாடல் உலகிலும் கவிஞர் முருகையனின் செழுமையான பங்களிப்பு இருக்கின்றது என்பதற்குச் சான்றாக அவர் எழுதிய பாடலை வரிகளோடும், ஒலிப்பகிர்விலும் தருகின்றேன்.

பாடல் வரிகள்: கவிஞர் முருகையன்
பாடியவர்கள்: எஸ்.கே பரா மற்றும் கோகிலா சிவராஜா
இசை: எம்.கே.ரொக்சாமி

கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!

நுவரெலியா முதலான உயரமலை
பயிலும் கங்கையாளே...!
தவறாத வளமுடைய....
தன்மை பொழியும் எங்கள் கங்கையாளே...!
கங்கையாளே... கங்கையாளே......

கந்தளாயும்....மூதூரும்....
காத்து வரவேற்கின்ற கங்கையாளே....
வந்து சேர்வாய் திருமலைக்கே..
மாகடலில் போயிறங்கும் கங்கையாளே...!

கங்கையாளே... கங்கையாளே...
காடு கழுவி வரும் கங்கையாளே!
எங்குமோடி..... எங்குமோடி.....
ஈழம் குளிரவைக்கும் கங்கையாளே!



000000000000000000000000000000000000000000

நூலகம் இணைய வழி ஈழத்து மின்னூலாக்கத் திட்டத்தில் "மரணத்துள் வாழ்வோம்" என்ற கவிதைத் தொகுதியினை இணைத்திருக்கின்றார்கள். அதில் முருகையன் அவர்களின் இரு கவிதைகள் பகிரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று,

வாயடைத்துப் போனோம்

'என் நண்பா, மெளனம் எதற்கு?'
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.

(1978 / மல்லிகை)

000000000000000000000000000000000000000000000000000

ஈழத் தமிழ் அரங்கில் மகத்தான அற்புதங்களை எதிர்வுகூற முடியவில்லை

ஆதங்கப்படுகின்றார் கவிஞர் முருகையன்


கூத்தரங்கத்துக்காக நேர்கண்டவர் தே.தேவானந்த்

கலாநிதி இ.முருகையன் நாடறிந்த மூத்த கவிஞர், நாடக எழுத்துருப்படைப்பாளி. யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவபிரகாச வித்தியாசாலை, சாவகச்சேரி இந்துக் கல்லூரிகளில் கற்றார். இரண்டாம் நிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 1956ம் ஆண்டு Bsc பட்டத்தைப் பெற்றுக் கொண்ட இவர், கடந்த காலங்களில் ஆசிரியராக, அரச கரும மொழித்திணைக்கழத்தில் மொழி பெயர்ப்பாளராக, ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராக, கல்வித் திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளராக, பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஈழத்துப் பிரபலமான நாடகக்காரர் சிவானந்தனின் சகோதரர் இவர். 1965ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு பிள்ளைகள். தற்போது யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை இடைவரவு விரிவுரையாளராக கடமையாற்றுகிறார். அவர் கூத்தரங்கத்துக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வி இது.

கே: கலாநிதி இ.முருகையன் அவர்களே நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே உங்களை ஈழத்தமிழ் நாடக உலகில் ஒரு நாடக எழுத்தாளராக அறிகிறோம். நீங்கள் நாடகங்களை எழுத ஆரம்பித்த படிமுறையை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ப: முதன் முதலில் நான் நாடகம் என்று நினைத்து எழுதியது ‘சிந்தனைப் புயல்’. அது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் படித்த காலத்திலே, விடுதிச்சாலை மாணவர் நடத்திய ஒரு தவணை முடிவுக் கதம்ப நிகழ்வில் நடிக்கப்பட்டது. அது எழுத்தாளர் அகிலன் எழுதியிருந்த கதையொன்றைத் தழுவி எழுதியது. அதில் நானே கதாநாயகியாக நடித்தேன். அது ஒரு சிறு விளையாட்டு.

murukaiyan.jpgஇலங்கைப் பல்கலைக்கழகத்திற் சேர்ந்த பிறகு ஒரு கவிதை நாடகத்தை நான் எழுதினேன். அது இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது. திருச்சி றேடியோவில் ஒவிபரப்பான ஒரு நாடகத்தைச் செவிமடுத்ததின் தூண்டுதலால் அதை எழுதினேன். பல மாதங்கள் கடந்தபின் மிகுந்த தயக்கத்தோடு வானொலிக்காரர்கள் அதை ஒலிபரப்பினர் தொடர்ந்து சில நாடகங்களை எழுதக்கூடிய சூழ்நிலைகள் தோன்றின.

முதலில் நான் எழுதிய நாடகங்களைத் தயாரித்தவர்கள் வானொலிக்காரர்கள்தான். பின்பு ஒரு காலகட்டத்திலேதான் மேடை நாடகங்களை எழுதும் நாட்டமும், சூழல்களும், வாய்ப்புகளும் கிட்டின. அது வேறு கதை.

கே: ஈழத்தமிழ் நவீன நாடக உலகில் அறுபதுகளும், எழுபதுகளும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் நீங்களும் நாடகத்துறையில் ஈடுபட்டவர் என்ற வகையில் இந்தக் காலத்தின் நாடக முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

ப: அறுபதுகளிலும் எழுபதுகளிலும் புதிய முன்னெடுப்புக்களும் எழுச்சிகளும் தலையெடுத்தது மெய்தான். அந்தக் காலகட்டத்தில் நான் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராய் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். பள்ளி மாணவர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேவையான பாட நூல்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆற்றிக் கொண்டிருந்தது. அந்தத் திணைக்களத்திலே கல்வி நூல்களில் மட்டுமன்றி, கலை நூல்களிலும் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அறிஞர்கள் பலர் பணியாற்றினர். அவர்களுள் நாடகத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள் பலரும் இருந்தனர். இவர்கள் இனம்சார்ந்த அறிஞர்களிடையேயும் கலைஞர்கள் இடையேயும் பெருமளவு கலந்துறவாடல்கள் இருந்தன. கொடுக்கல் வாங்கல்கள் இருனந்தன. கருத்துப் பகிர்வுகள் இருந்தன. வெளியுலகில் இனப் பகைமையும் வெறுப்பும் நீறு பூத்தநெருப்புப்போல இருந்திருக்கலாம். ஆனால் உயர்கலைஞர்கள் மத்தியில் நல்லுறவும் ஆரோக்கியமான- ஆனால் இலேசான போட்டி மனப்பான்மையும் நிலவியது என்று சொல்லலாம்.

நான் பணியாற்றிய திணைக்களத்தில் மட்டுமல்லாமல் வேறு வட்டங்களிலும் கூட, இந்த விதமான பண்பாட்டுத் தேடலும் செயலூக்கமும் இருந்தன.

இந்தக் காலகட்டத்திலேதான் தேசிய நாடக உருவாக்கமும் அரங்கியல் முன்னெடுப்புகளும் தொடங்கலாயின. நாடகவியலை ஒரு கற்கை நெறியாக வடிவமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் தேவையும் உத்வேகமும் உருவாயின. கொழும்பு தேஸ்ற்றன் றோட்டில் அமைந்திருந்த பல்கலைச் சூழலில், ‘நாடகமும் அரங்கியலும்’ பற்றிய ஆலோசனைகள் மும்முரமாக இடம்பெற்றன் பாடநெறிகள் வரையப்பட்டன.

என்னைப் பொறுத்தவரையில், நான் இவற்றிலே நேரடியாக ஈடுபட்டிருக்கவில்லை. ஆனால் கா.சிவத்தம்பி முதலியோர் அவர்களோடு தொடர்புடைய நா.சுந்தரலிங்கம், அ.தாசீசியஸ், வே.சங்கரசிகாமணி, இ.சிவானந்தன் முதலியவர்களும், சின்னையா சிவநேசன், சோ.நடராசா போன்றோரும் நாடகவியல் அக்கறையும் விழிப்பும் கொண்டவர்களாகத் தலை நிமிர்ந்தனர். இந்த வட்டத்தில் உள்ளவர்களிற் சிலர் க.கைலாசபதி அவர்களின் ஆலோசனைகளை நாடுவோராகவும் அதனால் கலையியல் இலாபங்களைப் பெற்றவர்களாயும் அமைந்தனர். இந்தக் காலகட்டத்திலே தான் ‘நாடகமும் அரங்கியலும்’ என்னும் பாடநெறிக்கான திட்ட முன்வரைபும் உருவாகியது.

இந்தப் பாடநெறியை உருவாக்கவென நடைபெற்ற பரிசீலனைகளும் முனைவுகளும் சிங்களக் கலை வட்டாரங்களிலும் தமிழ்க் கலை வட்டாரங்களிலும் அபரிமிதமான தேடல்களையும் புதுப் புனைவுகளையும் தோற்றுவித்தன. அரங்கியல் என்பது என்ன? அரங்கியற் செயற்பாடுகள் ஏன்? எப்படி? எதற்காக என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளைக் கண்டறியும் உந்துதலையும் ஊக்கத்தையும் தந்தன. தமிழர் தரப்பில் ‘கூத்தாடிகள்’, ‘அரங்கு’, ‘மன்றாடிகள்’, ‘எங்கள்குழு’ என்றவாறு நாடக மன்றங்கள் தோன்றி, இயங்க முன்வந்தன. இவற்றின் பேறாக நாடக எழுத்துருக்கள் தோன்றின. நடிகர்கள் உருவாயினர், நாடகங்கள் மேடையேறின – நவீன நாடகங்கள் மாத்திரமல்லாமல், கூத்தியல் தழுவிய எழுச்சிகளும் தலைதூக்கின. சி.மௌனகுரு, சு.வித்தியானந்தன் முதலியோர் நாட்டுக்கூத்துக்கு மெருகூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர். நவீன நாடக அரங்குகளிற்கூட, கூத்தியற் கூறுகளை அளவறிந்து கலந்து பயன்படுத்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆம், இந்த எழுச்சிகள் பலவும் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இடம்பெற்றவை என்று சொல்லலாம்.

கே: நீங்கள் இதுவரை எழுதிய நாடகங்கள் எத்தனை? அவற்றின் பெயர்களைத் தாருங்கள்.

ப: நான் இதுவரை எழுதிய நாடகங்கள் 24. அவற்றின் பெயர்கள, ‘நித்திலக் கோபுரம்’, ‘அந்தகனே ஆனாலும்’, ‘வந்து சேர்ந்தன’, ‘தரிசனம்’, ‘கோபுரவாசல்’, ‘கடூழியம்’, ‘செங்கோல்’, ‘கலைக்கடல்’, ‘கொண்டு வா தீயை கொளுத்து விறகை எல்லாம்’, ‘சுமசும மகாதேவா’, ‘அப்பரும் சுப்பரும்’, ‘கந்தப்ப மூர்த்தியர்’, ‘வழமை’, ‘அந்தகனே ஆனாலும்’, ‘இடைத்திரை’, ‘குனிந்த தலை’, ‘வெறியாட்டு’, ‘பொய்க்கால்’, ‘குற்றம் குற்றமே’, ‘தந்தையின் கூற்றுவன்’, ‘இரு துயரங்கள்’, ‘கலிலியோ’, ‘உயிர்த்த மனிதர் கூத்து’, ‘எல்லாம் சரி வரும்’.

கே: உங்கள் நாடகங்களின் பாடுபொருள் பற்றி குறிப்பிடுங்கள்?

ப: ‘பாடுபொருள்’ என்று நீங்கள் குறிப்பிடுவது அந்த நாடகங்களின் உள்ளடக்கத்தை என்று நினைக்கிறேன். நாடகத்தில் மாத்திரமல்ல, கதை, கவிதை முதலான எந்தக் கலைப்படைப்புக்கும் உள்ளடக்கமாய் அமைவது மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள்தான். அந்த அனுபவங்கள் சிற்சில தருணங்களிலே தான் நமக்குத் திருப்தியைத் தருகின்றன. மற்ற வேளைகளில் அனுபவங்கள் நம்மைக் குழப்புகின்றன. குடைகின்றன, கலக்குகின்றன, கவலை தருகின்றன. சலனமும் சஞ்சலமும், சில வேளைகளில் உற்சாகமும் உல்லாசமும் தரும் வாழ்க்கை அனுபவங்களை மாற்றுருத் தந்து புதுக்கப் படைக்கும் முயற்சியே கலையாக்கம் என்பது. அவ்வாறு புதுக்கப் படைக்கும்போது அதில் ஒரு விதமான விளையாட்டுத்தனமும் புகுந்து கொள்ளகிறது. இதனாலே தான் நாடகங்களை ‘பிளேய்’ என்றும் ‘ஆடல்’ என்றும் நாம் சொல்வதுண்டு.

வேறொரு விதத்திலே பார்க்கும்போது வாழ்க்கையில் நாங்கள் படும் ‘பாடுகளை’ மூலதனமாகக் கொண்டுதான் நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைகளும் ஆக்கம் பெறுகின்றன.

ஆனால், வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே- எந்திரப் பாங்கிலே படம் பிடித்துத் தருவது உயிர்ப்புடைய நாடகமாய் அமையாது. வாழ்க்கையிலே பல பிரச்சினைகள் இருக்கின்றன, பல வியப்புகள் இருக்கின்றன, பல முரண்கள் இருக்கின்றன, முரண் போலிகள் இருக்கின்றன. இவைகள் எல்லாம்தான் என் நாடகங்களின் ‘பாடு பொருள்கள்’ ஆகின்றன.

இவைகளை அப்படியே படம்பிடிப்பது மட்டுமே கலைஞர்களின் பணி என்று நான் கருதவில்லை. வாழ்க்கையின் உள்ளோட்டங்களை நுழைந்து பார்த்து வியப்பதும், சீறுவதும் கண்டனம் செய்வதுங் கூட நாடகக் கலையின் பண்பும் பணியும் ஆகலாம். ஆனால் எனது நாடகங்களில் பிரசாரப் பண்பு அல்லது பரப்புரைப் பண்பு துருத்திக் கொண்டு (முந்திரிக் கொட்டை போல) தனித்து வெளிநீட்டி நில்லாமல் அடக்கமாக உள்ளிசைவு பெற்று நிற்கவேண்டும் என்பது என் விருப்பமாய் அமைந்துள்ளது.

இனி, நாடகப் பாடுபொருள்களை உடனடியான அண்மைச் சூழல்களிலும், இடத்தாலும் காலத்தாலும் தூர உள்ள சூழல்களிலிருந்தும் நான் பெற்றுக் கொள்கிறேன். அன்னியமான சூழல்களிலிருந்து பெறும் பொருள்களை உசிதம் போல உருமாற்றியும் உரு மாற்றாமலும் தழுவலாக்கம் செய்தும் அமைத்துக் கொள்வதுண்டு.

எது எவ்வாறிருந்தாலும் நமது மக்களின் உடனடிப் பிரச்சினைகளிலிருந்து வெகுதூரம் விலகிச் செல்வது என் வழக்கமோ பழக்கமோ அல்ல.

கே: உங்களது நாடக எழுத்துருப் படைப்பாக்கப் படிமுறைகள் பற்றி விரிவாகக் குறிப்பிடுங்கள்?

ப: நான் சற்று முன் கூறியதுபோல என் ஆரம்பகாலப் படைப்புகள் வானொலி நாடகங்களாக இருந்தன. அவை பெரும்பாலும் என்னுள்ளிருந்து, என் சொந்த ஆளுமையின் படைப்புகளாய் இருந்தன. இவற்றை எழுதும் போது அவை என் படைப்பாக்கம். வேறு யாருடைய ஆலோசனைகளையும் வேண்டி நின்று பெறவேண்டிய நிலை இருக்கவில்லை. அவை எனது சொந்தக் கற்பனையிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றின என்று சொல்லிவிடலாம். அடுத்து வந்த காலங்களிலே எழுந்த மேடை நாடகங்களின் ஆக்கமும் பெரும்பாலும் சுயேச்சைப் போக்கிலேதான் நிகழ்ந்தன. ஆனால், கால கதியில் மேடை நாடகங்களை எழுத முற்பட்டபோது தயாரிப்பாளர் அல்லது நெறியாளரின் ஆலோசனைகளுக்குச் செவிமடுக்கும் தேவையும் பழக்கமும் ஏற்படலாயின.

குறிப்பாக நா. சுந்தரலிங்கம் என் நா கங்கள் சிலவற்றைப் பொறுப்பேற்று நெறியாள்கை செய்த போது எழுத்தாக்கத்துக்கு முன்பே, சில வேளைகளில், கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுண்டு. ஆனால், அவை மிக விரிவான கலந்துரையாடல்களாக இருந்தது குறைவு. இது தொடக்க காலத்து நிலைமை.

ஆனால், நமது அரங்கியற் செயற்பாடுகள் விரிந்து விருத்தியாகிச் செல்லச் செல்ல முன்பை விட, கலந்துரையாடால்களின் தேவை அதிகமதிகமாக அவசியமாகின என்பதை உணரக் கூடியதாய் இருந்தது. இந்தக் கலந்துரையாடல்கள், நாடக எழுத்தாளராகிய எனக்கும் நெறியாளர்களுக்குமிடையே தான் பெரும்பாலும் இடம்பெற்றன. காலம் செல்லச் செல்ல, நடிகர்களையும் நெறியாளரையும் ஒருங்கே சந்தித்துத் திட்டமிடும் முறைமை முளைகொண்டு தலை தூக்கியது என்று சொல்லவேண்டும்.

குறிப்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சூழலிலே, எண்பதுகளில் மேற்படி நடைமுறை அதிகமதிகம் விருத்தி அடைந்தது என்று கூறுவேன். ‘உயிர்த்த மனிதர் கூத்து’ என்னும் நாடகம் உருவாகிய சமயத்தில், திட்டமிடலிற் பெரும் பகுதி அறிஞர் பலரின் கூட்டு முயற்சியாகவே இருந்தது. ஏலவே வகுக்கப்பட்ட திட்டத்துக்கு அமைய, உரையாடல்களையும் கவிதைகளையும் பாடல்களையும் எழுதும் பணி மாத்திரமே என்வசம் இருந்தது. அப்பொழுது என்னிடம் அமைந்திருந்த கருத்திசைவு காரணமாகவும் உணர்வொருமை காரணமாகவும் அந்த நாடகம் எனக்கு மட்டுமன்றி, மற்றும் பலருக்கும் மன நிறைவு தரும் ஒரு படைப்பாகவும் அமையலாயிற்று.

இதற்குப் பிறகும்கூட, சிதம்பரநாதன், தேவானந்த் முதலியோருடனும் சிவயோகன், குழந்தை முதலானோருடனும் ஒத்திசைந்து நிறைவேற்றிய அரங்கியற் பங்களிப்புகள் மனநிறைவு தருவனவாய் அமையலாயின.

கே: அண்மைக் காலமாக நீங்கள் நாடகங்களை எழுதுகின்ற போது நெறியாளருடன் களத்தில் நின்று அவரது எண்ணங்களை காட்சிகளாகக் கண்டு பின் எழுதுகிறீர்கள்? இந்த வகைப் படைப்பாக்க அனுபவம் பற்றித் தெரிவியுங்கள்?

ப: மெய்தான். இந்த விதமாக, களத்தில் நின்று நெறியாளரின் கற்பனைகளையும் காட்சிகளாகக் கண்டு எழுத்துருக்களைப் படைக்கும் முறையில் சாதகமான அம்சங்கள் பல உண்டு, பாதகமான அம்சங்கள் சிலவும் இருக்கின்றன.

இதிலுள்ள சாதகமான அம்சங்களுள் பிரதானமானது எழுத்தாளருக்கும் நெறியாளருக்குமிடையே நிகழும் கலந்துறவு. இந்த விதமான கலந்துறவுப் பரிசீலனையில் நான் இறங்கியது க.சிதம்பரநாதன் நெறியாள்கை செய்த ‘உயிர்த்த மனிதர் கூத்து’ என்பதன் போதுதான். இந்த நாடகம் ஒரு பெரிய கூட்டு முயற்சி. நாடகத்தின் கருத்துருவும் அதன் உட்பிரிவுகளும் கற்றறிவாளர் பலர் கொண்ட ஒரு பெருங் குழுமத்தினாலே மிகவும் சாவதானமாகத் திட்டமிடப்பட்டது. அந்தத் திட்டத்துக்கமைய நாடகத்தின் கூறுகள் கற்பனை செய்யப்பட்டன. இசையும் கூத்தும் சமானியமான வாழ்க்கைக் கூறுகளும் சேர்ந்த ஒரு சங்கமமாகத்தான் ‘உயிர்த்த மனிதர் கூத்து’ உருவாக்கப்பட்டது. இந்த நாடகத்துக் குரிய பாடல்களை நானே இயற்ற வேண்டும் என்று முடிவாயிற்று.

இசைச் சார்புடைய செய்யுள்களாகவே இந்த நாடகப் பாடல்கள் அமைய வேண்டும் என்பது பொதுக் கருத்தாய் இருந்தது. பாடல்கள் அல்லது உரையாடல்கள் வரவேண்டிய சந்தர்ப்பங்களைச் சுட்டும் குறிப்புகளை ஒவ்வொரு நாளும் சிதம்பரநாதன் கொண்டுவந்து தந்து விளங்கப்படுத்துவார். நான் இரவோடிரவாக வீட்டில் இருந்து (மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்திலே) எழுத்துருவை அமைத்து முடிப்பேன். மறுநாள் இது சிவத்தம்பி அவர்களின் பார்வைக்குப் போகும். அவர் அதைப்படித்து ரசித்து இசையமைப்பாளரின் பங்களிப்புக்காக அனுப்பி வைப்பார். இசையமைக்கப்பட்ட பகுதிகளை வைத்துக்கொண்டு தான் நாடக ஒத்திகைகள் கட்டம் கட்டமாக நடைபெறும். இதுதான் ‘உயிர்த்த மனிதர் கூத்தின்’ உற்பத்தி வரலாறு.

இதன் பின்னரும் வேறு சூழ்நிலைகளில் ‘பொய்க்கால்’, ‘நாம் இருக்கும் நாடு’ என்பன போன்ற நாடகங்களும் நெறியாளர் – எழுத்தாளர் ‘கலந்துறவு’ முறையிலே தயாரிக்கப்பட்டன. இந்த முறையிலே உள்ள நன்மை என்னவென்றால் கலையாக்கத்தின்போது ஒன்றுக்கு மேற்பட்ட மூளைகளும் கற்பனா சக்திகளும் தொழிற்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட கலைநோக்குகள் ஒன்றையொன்று சந்தித்துக் கைகோர்த்துச் சங்கம் ஆகின்றன. கூட்டுப் பொறுப்பும் கொடுக்கல் வாங்கல்களும், இன்றியமையாத அம்சங்கள் ஆகிவிடுகின்றன.

ஓர் எழுத்தாளன் ‘தனித்திருந்து வாழும் தவமணி’ ஆகி, தன் மனம்போன போக்கிலே எதையாவது படைத்துவிட்டு, பின்னர் தயாரிப்பாளர்களைத் தேடி ஓடிக் காணாது களைத்து விழுவதை விட, மேற்சொன்ன விதமான கூட்டுப்படைப்பாக்கம் மேலானது அல்லவா? கூட்டுப் படைப்பாக்கத்திலே ‘தேவானந்த்’ ஆகிய நீங்களும் கணிசமாக ஈடுபட்டுள்ளீர்கள் ஈடுபட்டு வருகிறீர்கள். அந்த விதத்திலே உங்களுக்கும் இந்தவிதமான கலந்துறவுப் படைப்பாக்கம் பற்றிச் ‘சிலபல’ கருத்துக்கள் இருக்கும்.

இனி, கலந்துறவுப் படைப்பாக்க முறையில் உள்ள பாதகமான அம்சங்களுள் ஒன்றைப்பற்றிச் சொல்லலாம் என நினைக்கிறேன். நான் எழுதி வெளியிட்ட நாடகங்களுள் ‘அப்பரும் சுப்பரும்’ என்பது ஒரு சிறந்த எழுத்துரு என்று நான் நினைக்கிறேன். புத்தக வடிவில் வந்த எழுத்துருவை வாசித்த விமரிசகர்கள் சிலரும் அதை மெச்சியிருக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் அல்லது நெறியாளர் எவராயினும் அதை அரங்கேற்ற முயலவில்லை. முன்வரவில்லை. உண்மையில் அது பாராளுமன்றத் தேர்தல் முறையில் நிகழும் அரசியல் பற்றிய கிண்டலும் கேலியும் நிரம்பிய நல்லதொரு நாடகம் என்பது என் கணிப்பு. ஆனால், அரங்கச் செயற்பாட்டில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவின் கண்ணிலும் அது படவில்லை. இது ஏன் என்று நான் சில வேளைகளில் நீள நினைந்து யோசித்துப் பார்ப்பதுண்டு. அந்த நாடகத்தின் உள்ளடக்கம் பாராளுமன்ற அரசியலின் போலித்தனங்களை ஆழமாக நோக்கியும் தோலுரித்தும் காட்டுகிறது. சுவாரசியமான காண்பியங்களையும் உருவாக்கிச் சுவைபட மேடையேற்றுவதற்கும் தாராளமாக இடம் கொடுப்பது. ஆனால் சற்று நீளமானதுதான். என்றாலும், தக்க நெறியாளர் ஒருவரும் கிடைக்கவில்லையே என்ற மனக்குறை எனக்கு உண்டு.
கலந்துறவுப் போக்கிலான செயலூக்க அரங்கியற் கலைஞர்களிடம் அது செல்லவில்லையே, இது ஏன் என்று நானும் என் நண்பர்கள் சிலரும் அவ்வவ்போது நினைத்துப்பார்ப்பதுண்டு.

கே: நீங்கள் ஒரு நாடக ஆசிரியர் என்ற வகையில் ஈழத்தமிழ் அரங்கத் துறையின் செல்நெறி பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ப: ஈழத்தமிழ் அரங்கத் துறையின் செல்நெறி என்று பார்க்கும்போது எங்கள் உடனடி வருங்காலத்தில் மகத்தான அற்புதங்கள் எவற்றையும் என்னால் எதிர்வுகூற முடியவில்லை. இன்று நம் கல்வியுலகில், பல்கலைக்கழக மட்டத்திலே ‘நாடகமும் அரங்கியலும்’ ஒரு கற்கைநெறியாய் இருக்கிறது. ஆண்டு தோறும் நமது பல்கலைக்கழகத்திலிருந்து, இப்பாடத்திலே தேர்ச்சி பெற்றவர்கள் வெளியேறுகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் தாம் கற்றவற்றைப் போற்றிப் பேணி வருங்காலத் தலை முறையினரிடம் கையளிக்கும் ஆர்வமும் வேட்கையும் பெற்றவர்களாய் அமையப் போகிறார்கள்?

நாங்கள் அவ்வப்போது சென்றடையும் சாதனைகளின் உச்சங்கள், தொடர்ந்து பேணிப் பாதுகாத்திடக் கூடிய சாத்தியப்பாடுகள் எப்படி உள்ளன?

இந்தப் போக்கிலே சிந்தித்துப் பார்க்கும்போது எங்கள் முன் உள்ள வருங்காலம் அவ்வளவு ஒளிமயமானதாய் இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அவ்வப்போது மகோன்னதமான சில காரியங்களை நாம் செய்து விடுகிறோம். அது மெய்தான். ஆனால் அந்த அபூர்வ சாதனைகளை மீண்டும் மீண்டும் செய்து ஆன்ம நிறைவு கொள்வதற்குப் போதிய தைரியமும் துணிவும் மூலவளங்களும் நம்மிடையே இல்லையோ என்றுதான் யோசிக்க வேண்டி இருக்கிறது.

கலைகள் என்பதை வெற்றுவெளியிலே தோன்றி, அந்தரத்தில் நின்று நிலைப்பவை அல்ல. ஓரளவுக்காயினும் உறுதியும் சமநிலையும் கொண்ட சூழலிலேதான் கலைகள் செழித்தோங்கி வளர்ந்து நிலைக்க முடியும். அவ்வாறான சூழ்நிலைகள் எப்போதுதான் வருமோ? தளராத நன்னம்பிக்கையோடு இடையறாது முயல்வதுதான் ஒரே ஒரு வழி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

கவிஞர் முருகையன் குறித்த நூல்களைத் தேடிய போது "தான்தோன்றிக் கவிராயர்" சில்லையூர் செல்வராசன் எழுதிய ஊரடங்கப் பாடல்கள் தொகுதியில் கவிஞர் முருகையன் எழுதிய கவிதை ஒன்று சில்லையூரார் பற்றி
மான் தோன்றி ஓட, மயில் தோன்றி ஆட, மரபு வழித்
தேன் மூன்று பானைப் புளிச்சலைப் போற் கவி செய்தறியாய்,
தான்தோன்றி என்று தகுதி உணர்ந்தோர் தரம் அறிந்தோர்
தேர்ந்தூன்றி ஆய்ந்து பயின்று நயக்கும் திறலவனே!

நாளாந்த வாழ்வினிடையே இழையும் நளினம் எலாம்
நீள்சாந்த இன்ப நறும் தமிழ் வார்த்தையில் நீ பொதிவாய்!
வாள் ஏந்தி நின்று சமரிடும் உன்மொழி வையம மிசைத்
தேள் போன்ற நஞ்சக் கொடுக்கர் அநீதிகள் சிந்திடவே!

பம்மாத்து வாழ்க்கையர் பண்பின்மை சாடிப் பகடி பண்ண
எம்மாத்திரம் ஐய. உந்தமிழ் நுட்பம் எழுத்தி பெறும்!
கைம்மாற்று வாங்கா திருப்பினும் தேவை கடுமை எனிற்
சும்மா கொடுப்பாய் இலவச நக்கல் சுடச்சுடவே!

மேடைகள் எத்தனை உன்னால் இசையால் விழுப்பம் எய்திச்
சோடை படாது பழுதின்றித் தப்பின! சொல் வலிமைப்
பீடுடுடையாய்! சுழல் பேச்சுடையாய்! பெரியோர் விரும்பும்
ஏடுடையாய்! இந்த நாடுடையாய் என ஏத்துவனே!

000000000000000000000000000000000000000000000000

உறவுகளுக்கு மட்டுமல்ல ஊருக்கும் உலகுக்கும்
உன்னதமாகிப் போனவனே போய் வா
நீ விசிறியவை ஆயிரமாயிரம் பேனாக்களில் விழுந்து
மகரந்த மணிகளாய் உயிர்க்கின்றன
உனது விரல் நரம்புகள் இன்று
ஏராளம் விரல் நரம்புகளில் அசைகின்றன
போய் வா என் ஆசானே போய் வா

விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது
மனம் நெகிழ வழியனுப்பும்
வாழ்வியலின் ஒரு நிகழ்விது
போய் வா என் ஆசானே போய் வா


நன்றி:
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
கவிஞர் சடாகோபன்
யாழ் உதயன் நாளிதழ்
சிட்னி தமிழ் அறிவகம்
ஞாயிறு தினக்குரல்
கூத்தரங்கம் இதழ் வலைத்தளம்
கே.எஸ்.றெக்கோர்ட்ஸ்

படம் உதவி:
தமிழ்ப்பூங்கா http://tamilgarden.blogspot.com/
கூத்தரங்கம் இதழ் வலைத்தளம் http://koothharangam.wordpress.com
Posted by கானா பிரபா at 7:53 PM 30 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, June 22, 2009

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை.....

எண்பதுகளில் ஒரு சனிக்கிழமை நாள்.
"பூபாலசிங்கம் மாமா வீட்டார் அம்மன் கோயிலடியில் மடை வச்சிருக்கினமாம், போட்டு வெள்ளன வா" அம்மா காலையிலேயே விண்ணப்பம் வைத்தார். கொடியில் காயப்போட்ட காற்சட்டையை மாற்றிவிட்டு தோதாக சேர்ட் ஒண்டையும் மேலே போட்டு, ஒரு காலால் மோட்டச்சைக்கிளை உதைத்து இயக்கும் பாவனை கொடுத்து வாயில் சவுண்ட் விட்டுக் கொண்டே ஓடுகிறேன் சிவகாமி அம்மன் கோயிலடிக்கு. வழமையா கோயில் திருவிழாக் காலத்தில் தானே இவையின்ர பூசை வாறது, இண்டைக்கென்ன புதுசா மடை என்று மேலே கேள்வி ஓடிக்கொண்டிருக்க கால்கள் அம்மன் கோயிலடியை எட்டுகிறது.

அம்மன் கோயிலடிக்கு பின்புறம் இருக்கும் வைரவரடியில் தான் மாமி ஆட்கள் நிக்கினம். நேரே அங்கே ஓடிப் போய் மோட்டாச் சைக்கிளை நிப்பாட்டுமாற் போல நிக்கிறன். வைரவர் கோயிலின் சுற்றிலே ஒரு பிரகார தெய்வத்துக்கு முன்னால் மடை இருக்குது. என்னது மடை எண்டு பேந்தப் பேந்த முழிக்காதேங்கோ, சாமிக்குப் படைக்கும் படையலை மடை எண்டும் சொல்லுவினம்.
இதென்ன கொடுமையடா சுவாமிக்குப் படைச்சிருக்கிற சாமானைப் பாருங்கோ, சக்கரைப் பொங்கல், வடை, முறுக்குக்குப் பதிலா கோழி இறைச்சி சட்டியிலும், ஆட்டுக்கறி இன்னொரு சருவச்சட்டியிலும் இருக்குது, இது போதாதெண்டு மீன் பொரியல் கூட. நடுவில வாழையிலையில் குத்தரிசி அப்பாவியாகக் குவிக்கப்பட்டிருக்குது. கோயிலடிக்கு வழக்கமா வாற ஐயர் வரேல்ல, வேறு ஒரு ஐயர் வந்து தான் மந்திரம் சொல்லி கற்பூரதீபத்தை சுவாமிக்கும் காட்டி, சுத்தவர இருந்த மச்சச் சாப்பாடுகளுக்கும் காட்டினார்.
சுவாமிக்கும் மச்சம் (அசைவம்) ஆராவது படைப்பினமோ? கண்ணப்பன் எண்ட வேடுவன் படைச்ச கதை கேள்விப்பட்டிருக்கிறன் ஆனா நாங்கள் ஒரு வீட்டில செத்தவீடு நடந்தாலோ, பெண்டுகள் பெரிய பிள்ளை ஆனாலோ கூட கோயில் வாசற்படியை மிதிக்க விடமாட்டோம் முப்பது நாளைக்கு, தெரியாமல் முட்டை போட்டுச் செஞ்ச பிஸ்கட்டைச் சாப்பிட்டாலே கோயில் படி ஏற விட மாட்டா எங்கட அம்மா. இதென்னப்பா ஒரே மாமிசப்படையலா இருக்கு என்று எனக்குள் முளைத்த கேள்விகளுக்கு அப்போது பதில் சொல்ல யாரும் இல்லை. அதுதான் நான் முதலும் கடைசியுமாகப் பார்த்த வேள்வி.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது போர்ச்சூழல் ஓரளவு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது. தனியே இனவிடுதலை என்றில்லாமல் சமூக பொருளாதார விடுதலையாக அது மாறி இருபது வருஷத்துக்கு மேலாக நின்று நிலைத்ததைக் கண்ணால் கண்டிருக்கிறேன். செத்த ஓணானைப் போட்டுக் கசிப்புக் காய்ச்சுவதில் இருந்து, வேள்வி என்று சொல்லப்படும் உயிர்களைப் பலியெடுத்தலும் ஓய்ந்து போனதென்று தான் நினைத்திருந்தேன்.


ஆனால் "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று காத்திருந்த தம்பிகள் ஆரம்பித்து விட்டார்கள் தங்கள் பிற்போக்குத் தனத்தை. அண்மையில் யாழ்ப்பாணம் கீரிமலைக்குப் போகும் வழியில் இருக்கும் காட்டு வைரவர் கோயிலான கவுனாவத்தை வைரவர் கோயிலில் அமர்க்களமாக நடந்தேறியிருக்கிறது ஆடுகளைக் கூட்டி வந்து உயிரோடு பலியெடுக்கும் நிகழ்வு.

சாதியம் சொல்லி கோயில் கிணற்றிலேயே தண்ணி அள்ள விடாமல் தடுக்கும் சமூகம், ஆராவது கோயில் படி மிதிச்சால் காலை முறிச்சுப் போடுவோம் என்று ஒரு பகுதி மக்களை தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம், மூட நம்பிக்கையிலும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள். இனி மெல்ல மெல்ல எல்லாம் விட்டதில் இருந்து தொடங்கும். சாதீயத்திமிரும், பிற்போக்குத் தனமும் கொண்ட எம் சமூகத்துக்குப் படிப்பினைகள் போதாது போல.

சைவபோசணியாக இருப்பதோ, அல்லது அசைவ போசணியாக இருப்பதோ அவரவர் உரிமை, அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இதெல்லாம் தெய்வத்துக்குச் செய்யும் காரியங்கள், இதை எதிர்த்தால் சாமி கண்ணைக் குத்திப் போடும் என்றெல்லாம் வறட்டு சாக்குகளைச் சொல்லும் சமூகமும் இருக்கத் தான் செய்கின்றது. சாவகச்சேரியிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் ஐடிபி தடுப்பு முகாம்களில் அடைபட்டிருக்கும் லட்சக்கணக்கான எம் உறவுகள் தான் இந்தப் பலியாடுகளின் உருவில் தெரிகின்றார்கள். இப்படியான பிற்போக்குத் தனமான சமூகத்துக்கா இத்தனை ஆயிரம் இளைஞர்கள் தம்மைக் காவு கொடுத்து விடுதலை பெறத் தம்மை மாய்த்தார்கள்?

முருகனுக்கு ரெண்டு வைப் என்று சொல்லி இரண்டு தேடுபவர்களுக்கும், கண்ணனுக்கு நிறைய என்று நிறைய தேடுபவர்களுக்கும், கண்ணப்பனும் மாமிசம் தானே படைத்தான் என்பவர்களுக்கும் செய்யும் பாவங்களுக்கு நிறைய ஜாமீன்கள் இருக்கின்றன.
என்னவோ போங்கள் ஆயிரம் பெரியார்/பிரபாகரன் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா.

படங்கள் நன்றி: யாழில் இருந்து நண்பர்
Posted by கானா பிரபா at 7:59 PM 24 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Tuesday, June 16, 2009

புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"

வழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து "புலிகளின் குரல்" வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்ட வானொலிப் பெட்டி இப்போது வெறும் மயான அமைதியை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது.

தொண்ணூறாம் ஆண்டுப் பகுதி, அப்பவெல்லாம் ஆல் இந்தியா ரேடியோவும், இன்னொரு பக்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமுமாக மட்டுமே செவிக்குணவு கிடைத்தது. அதில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சொல்லவே வேண்டாம். மத்தியானம் பிளேனால் குண்டு போட்டு அதில் செத்துப் போன கிழவர்களையும், குழந்தைகளையும் மாலைச் செய்தியில் புலிகளின் லெப்டினெண்ட் கேர்னல் தரத்துக்கு பதவி உயர்த்திப் பட்டியலிட்டுப் பயங்கரவாதிகள் ஆக்கிச் செய்தி படிக்கும். இது போதாதென்று "மக்களின் குரல்" என்ற மகா மட்டமான வானொலித் தயாரிப்பொன்றை வழங்கித் தன் தலையில் மண்ணள்ளிப் போடும்.

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.

அந்த இரவு நேரங்களின் நிசப்தத்தைக் கலைத்து எல்லா வீடுகளிலும் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரை புலிகளின் குரல் பாயும். அந்த ஒரு மணி நேரத்தில் ஒவ்வொரு நிமிடத்துளிகளையும் போராளிகளின் வீரச்சாவு, களம் கண்ட கதைகள், குறு நாடகங்கள் , செய்திகள், தாயக எழுச்சிப்பாடல்கள் விபரணச் சித்திரங்களாகச் செதுக்கித் தந்தது இந்த வானொலி. அது தவிர மாவீரர் வாரம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது நேர நீடிப்புச் செய்து பகல் வேளைகளிலும் தன் ஒலிபரப்பை அது தரும். புலிகளின் குரல் வானொலிப் பணிமனை

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும்.

புலிகளின் குரல் வானொலிக் கலையகத்தினுள்

சந்தனக்காடு போன்ற பல பிரபலமான நாடகங்களைப் பிரசவித்துப் பின்னர் இந்த நாடகம் வெளிநாடுகளில் வேறு ஆட்களால் மேடையேற்றிப் போடும் அளவுக்குப் பிரபலத்தை உருவாக்கியது இந்த வானொலி நிகழ்ச்சிகளின் தரம். புலிகளின் குரல் வானொலியில் இடம்பெற்ற பாடல்களை ஒலிப்பதிவு செய்து பின்னர் வவுனியாவில் பெடியளோடு குருமன்காட்டில் கொஞ்ச நாள் இருந்த போது கேட்ட நினைவுகள் நேற்று போல இருக்கிறது. வவுனியாவிலும் ஒலிபரப்பு வருகுதாம் என்று களவாக மீட்டர் பிடிச்ச 93 ஆம் ஆண்டும் சாகும் வரை மறக்கமுடியாது. புலிகளின் குரல் வானொலியின் பரிமாணம் எத்தகையது என்பதை எனது தாயக வாழ்வியலுக்குப் பின் அதிக காலம் இருந்த சக நண்பர்கள் நிறையவே சொல்லுவார்கள்.

என்னதான் யதார்த்தம் பேசினாலும் அற்ப மனம் விடாது இல்லையா, அடிக்கடி புலிகளின் குரல் தளத்துக்குப் போய்ப் பார்க்கும் அவா விடாது போல. ஆனால் அதுவோ மே ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் அழுக்குடையோடு மெளனமாய் நிற்கிறதே :(

எங்கோ பிறந்து, சுற்றிச் சுழன்று நானும் வானொலிப் பணிக்கு வரவேண்டும் என்ற தலையெழுத்தின் நிமித்தம் 11 ஆண்டுகளைக் கழித்து விட்டாயிற்று. இந்த இடைப்பட்ட காலத்தில் நான்கு வருஷங்களுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் புலிகளின் குரல் வானொலி நாடகங்கள் இரண்டு. அதில் " வரலாறு காத்திருக்கும்" என்ற நாடகத்தை ஒலிப்பேழையில் இருந்து கணினிக்கு மாற்றி உங்களோடு பகிர்கின்றேன். அந்த ஒலிப்பேழையில் குறுகலாகத் தன் பேனா எழுத்துக்களில் நிரப்பியவரும் சரி, இந்த நாடகத்தில் பங்கு கொண்டவர்களும் சரி இன்னும் இருக்கிறார்களா, மீண்டும் வருவார்களா எதுவும் தெரியாத நிலையில்
நாடகத்தை எழுதியவர்: போராளி தமிழ்க்கவி
நாடகத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள்
மூதாட்டி: வனஜா
கமலம்: கலையரசி
சிறுவயது சேய் - டிலானி
மதன் - கண்ணன்
செந்தூரன் - ரதன்
வளர்த்த சேய் - விதிகுகன்
நிகழ்ச்சித் தயாரிப்பு
க.சிவராசா
கப்டன் துஷான்
போராளி ஜீவகன்
கலையரசி

"வரலாறு திரும்பும்" நாடகத்தைக் கேட்க




கடந்த நவம்பர் 2007 இல் புலிகளின் குரல் பணிமனை அழிக்கப்பட்ட போது

புலிகளின் குரல் வானொலிப் பணிமனை, வானொலிக் கூடம் படங்களைப் பிரத்தியோக ஆல்பத்தில் இருந்து தந்துதவிய நண்பர் சயந்தனுக்கு நன்றி.
Posted by கானா பிரபா at 9:45 PM 26 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, June 01, 2009

உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் - எஸ்.ராமகிருஷ்ணன்

என் ஆதர்ஷ எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் இன்றைய பத்தி எழுத்தில் அவரின் சோரம் போகாத சிந்தனையைப் பார்த்தபோது அதை மீள்பதிவாகத் தரவேண்டும் என்ற உந்துதல் மூலம் இதைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000
இறுதிப்போரின் பின்பு மீளாத துயரமும் அழிவுமாக ஈழம் சிதைந்து போயிருக்கிறது. மின்ஊடகங்கள் அவற்றைத் திரும்பத் திரும்ப காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டேயிருக்கின்றன. மனித உயிரிழப்பு தரும் வேதனை வெற்று காட்சிகளாக கடந்து போவது தாங்க முடியாத வலி தருவதாக உள்ளது.


குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ஈழப்போரினை தங்களது அற்ப அரிப்புகளும் தீனி கொடுப்பதற்கே அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை இதையே நகலெடுக்கின்றன. இறந்து போன பல்லாயிரம் மனிதர்களுக்கான துக்கத்தையோ உயிர் பிழைத்தவர்களின் சொல்லவொண்ணாத துயரத்தையோ எந்த ஊடகமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

நண்பர் நாகர்ஜ�னன் தனது வலைப்பக்கத்தில் இன்றைய ஈழத்தின் அவலநிலை பற்றிய சில இணைப்புகளை வழங்கியிருந்தார். டைம்ஸ் இதழ் ஈழப்படுகொலைகள் பற்றி என்ன தகவல்களை தருகின்றன. என்ற இணைப்புகள் அவை.

அத்துடன் அவரே மேரி கொல்வின் கட்டுரையை மொழியாக்கம் செய்து போட்டிருந்தார். அந்த கட்டுரையின் சாரம் தரும் அதிர்ச்சியும் மனித நம்பிக்கை மோசடியும் நாம் வாழும் காலம் குறித்த மிகுந்த குற்றவுணர்வை. பயத்தை, அசிங்கத்தையே தருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஈழத்திலிருந்து அவ்வப்போது சில நண்பர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தங்கள் நம்பிக்கைகளை, வலியை, துயரை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்வதைத் வேறு வழியில்லை என்ற சூழலில் எழுதப்படும் கடிதங்கள் அவை.

வலி மிகுந்த அந்த மின்னஞ்சல்களை திறந்து படிக்கவே தயங்குவேன். அவை பெயர் தெரியாத உறவுகளின் மரணசாட்சியங்களை அல்லவா சுமந்து வந்திருக்கிறது. எல்லா மின்னஞ்சலிலும் சாவிற்கு கூட அழமுடியாத உடைந்த மனது பீறிட்டுக் கொண்டிருக்கும்.

என்ன பதில் அனுப்புவது. அவர்கள் எந்த பதிலையும் கேட்கவில்லை. அந்த கடிதங்கள் தங்களை சுற்றிய உலகின் கருணையற்ற தன்மையை சுட்டிக் காட்டுகின்றன. மனிதர்கள் விலங்குகளை விடவும் கீழாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டும் வரிகள். சொந்த துயரங்களை விடவும் தன் நிலத்தையும் நிலம் சார்ந்த விடுதலையை. அதன் இழப்புதுயரங்களையும் முன் வைத்த கடிதங்கள்.

யோ என்ற ஒற்றை எழுத்துடன் ஒரு நண்பர் இரண்டு ஆண்டுகாலமாக அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு உறுதியாக இருந்தது. அவரது மின்னஞ்சல்களில் சோர்வுறாத நம்பிக்கை இருப்பதை கண்டிருக்கிறேன். யுத்தசாவுகள் அவரது நம்பிக்கைகளை தகர்க்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்

அதில் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை தவிர வேறு வாசகமே இல்லை.
படித்து முடித்த இரவெல்லாம் கணிணியை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்தபடியே செயலற்று இருந்தேன். அது ஒரு மனிதனின் வெளிப்பாடு அல்ல. மீதமிருக்கும் நம்பிக்கைகளை கூட கைவிட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதே என்ற ஒரு இனத்தின் அவலக் குரல். அது என்னை துவள செய்துவிட்டது.

பகலிரவாக கரையான் அரிப்பதை போல அந்த சொற்கள் என்னை அரித்துக் கொண்டேயிருந்தது. அந்த மின்னஞ்சலுக்கு என்ன பதில் அனுப்புவது. பதில் தேவையற்ற அந்த மின்னஞ்சல் தரும் வலி ரணமாக கொப்பளிக்க துவங்கியிருந்தது. அவரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வராதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வரவேயில்லை

பேரழிவின் இரண்டு தினங்களுக்கு பிறகு அவரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. திறந்து பார்த்தேன். மூன்றே வார்த்தைகள்

உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்


எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கபட்ட சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது.

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்க சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்தி போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.

ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாறிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?

ஈழப்போரின் வழிமுறைகளை தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு சொந்த வாழ்வின் சொகுசு கலையாமல் யோசிப்பதும் புத்திமதி வழங்குவதும் போன்ற மோசடிகளை வேறு எந்த சமூகத்திலும் காணமுடியாது.

எது சரி, யார் செய்தது தவறு? ஈழபோராட்டம் முடிந்து விட்டது என்பது போன்ற உப்புசப்பில்லாத மயிர்பிளக்கும் விவாதங்கள் எப்போதும் போலவே காணும் எல்லா ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது.

தொலைவில் குருதி குடித்த மண் அறுபட்ட குரல்வளையோடு கிடக்கிறது. சவஅமைதி எளிதானதில்லை. அதன் வலிமை அடங்காதது. சாவின் துர்மணம் கொண்ட மண். பித்தேறிய மத்தகத்தின் கண்களை போல நம்மை வெறித்துக் கொண்டிருக்கிறது.

பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.


நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப்போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்று தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.


வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.


யோவின் மின்னஞ்சல் நினைவில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது

உயிரோடு இருப்பதற்காக வெட்கபடுகிறேன்.


இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

0000000000000000000000000000000000000000000000000000000

கடந்த வாரம் சக வலைப்பதிவர் தீபாவின் பதிவில் ஒரு மொழியாக்கப் பதிவினை வழங்கியிருந்தார். குறித்த ஆங்கிலப்பதிவை உள்வாங்கி அந்த மனவோட்டத்தில் தீபா தன் மொழிபெயர்ப்பினை வழங்கியொருந்தார். அவரின் அனுமதி பெற்று குறித்த பதிவை மீள் இடுகையாகத் தருகின்றேன்.

ஒரு மனசாட்சியின் குரல்


இலங்கையர் ஒருவர் தனது வலைப்பூவில எழுதிய பதிவிது.

அத்திறந்த வெளியில் நின்று கொண்டிருக்கும் மக்கள் சிலர் சிரித்துக் கொண்டும் ஆரவாரமிட்டுக் கொண்டும் இருக்கின்றன. முக்கியமாக வெற்றிக் களிப்பில் உள்ளனர். அவர்கள் முன் புல்வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இறந்த உடல்கள் மீது காமிரா நகர்கிறது. இராணுவ அடையாள அட்டை ஒன்றை தங்களுக்குள் கைமாற்றியபடி
புகைப்படக்காரரை அதையும் படமெடுக்கும்படி கேட்கின்றனர். வெற்றிப் பூரிப்பு அந்த இடமெங்கும் தெறிக்கிறது.

இத்தகைய காட்சிகளை நான் முன்பு கண்டிருக்கிறேன். துப்பாக்கிகள் ஏந்தியபடி, வெற்றிக்களிப்பு முகத்தில் கூத்தாடக் காலனியாதிக்கவாதிகள் ஆசியாவிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் வெற்றி கொண்டாடிய காட்சிகள் தாம் அவை. பெரும்பாலும் அந்த நிலத்தின் உண்மையான குடிமகன்கள் இருவர் அடிமைகளாக இருபுறமும் வெறித்த பார்வையுடன் நின்றிருப்பார்கள். வரலாற்றில் மிகப்பெரிய தருணத்தின் ஆவணமாகக் கொண்டாடப்படும் அப்புகைப்படங்கள். மிகப்பெரியதொரு வேட்டையாடலின் வெற்றிப் பரிசுகள் அவை. சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்களின் வேட்டை அவை.

மே 19, 2009 தொலைக்காட்சியில் காட்டப்பட்டதும் அப்படியொரு பெரும் வேட்டையைப் பற்றியது. மனித்ப் புலிகள் வேட்டை. உலகின் மிக பயங்கரத் தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, வீழ்த்தப்பட்டுக் கிடந்தது. இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இப்படங்கள் காட்டப்பட்டன. சில நேரங்களில் மிகக் குரூரமாக, தேவையில்லாமல் மீண்டும் மீண்டும்...

வார இறுதியில், விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டார்கள் என்று முற்றும்
அறிந்தபின் கொழும்பு மக்களும், தீவின் இன்னபிற மக்களும் கொண்டாட்டங்களைத் துவக்கி விட்டனர். வாணங்கள் வெடித்து, பெரிய பெரிய லாரிகளிலும் ட்ரக்குகளிலும் சிங்களக் கொடியைப் பறக்க விட்டபடி, வீதிகளில் வலம் வந்தனர். ஆண்களும் பெண்களும் தெருக்களில் ஆடிப்பாடினர், இனிப்புகளும் பால்பாயசமும் விநியோகித்தனர். எங்கு பார்த்தாலும் இலங்கை தேசியக் கொடி பறந்தது. வீடுகளின் கூரையில், கடைகளில், வணிகக் கட்டடங்களில், தெருவோரங்களில்.. வாகனங்கள் கூட அணிந்து சென்றன. போர், கலகம், பயங்கரவாதம், தற்கொலைப் படை வெடிகுண்டுகள், கன்னிவெடிகள், சிறுவர் சிப்பாய்கள் இவற்றால் பெருஞ்சோர்வடைந்திருந்த சலிப்படைந்த சிங்களர்கள் தீவிரவாதம் வீழ்த்தப்பட்டதில் மிகப் பெருமிதம் கொண்டனர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கியது.

ஒவ்வொரு நாளும் வெற்றிக் கூச்சல்களைக் கேட்கிறேன். ஒவ்வொரு நாளும்
வீழ்த்தப்பட்ட அந்த மக்களின் கனத்த மௌனத்தையும் கேட்கிறேன். கூரையைக் கிழித்துக் கொண்டு கேட்கும் இக்கூச்சல்களில் சொல்லப்படாத செய்தி அது தான். நாம் வெற்றி பெற்று விட்டோம். அதனால் என்ன? யாரோ தோற்று விட்டார்கள். யார் அது? என்னைக் கேட்டால் நாம் அனைவருமே என்று தான் சொல்வேன். இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்களை நினைத்துப்பார்க்கிறேன் நான்.
அவர்களுக்கு எப்படி இருக்கும், என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்
அவர்கள் இப்போது? பீதியிலும் கவலையிலும் ஆழ்ந்திருப்பார்களா? அல்லது அவர்களுக்கும் இந்தப் போர் முடிவு சந்தோஷத்தைத் தருகிறதா?
அவர்களால் சிங்களக் கொடியைப் பறக்க விட்டு மகிழ முடியுமா? இந்தப் போர் முடிவை நாம் இவ்வாறு ”கொண்டாடக்” கூடாது என்றே எனக்குப் படுகிறது. யாரோ சொன்னார்கள். இதற்குப் பதில் கோயில்களுக்குப் போய் வேண்டிக் கொள்ளலாம். ஆம், அது சாலச் சிறந்ததென்றே தோன்றுகிறது; எத்தனையோ மடங்கு.ஒவ்வொரு வெற்றிக் கூச்சலைக் கேட்டும் நான் கூனிக் குறுகுகிறேன்.
ஆடிப்பாடும் கூட்டங்களைக் கண்டு திரும்பிக் கொள்கிறேன். ஏன் எனக்கு
இப்படித் தோன்றுகிறது. எனக்கு என்ன போயிற்று? ஆனால் என் நண்பர்கள்
பலரும் இப்படித் தான் எண்ணமிடுவார்கள் என்றும் உணர்கிறேன். நாங்கள்
அனைவருமே சிந்திப்பது தவறாக முடியாது.


இப்போர் முடிவை இந்நாடு பார்க்கும் பார்வை எனக்கு மிகுந்த
வருத்தமளிக்கிறது என்றே நினைக்கிறேன். தத்தா காமினி கூட ஈழாராவின்
மரணத்தைக் கண்ணியத்துடன் கையாண்டான். எனக்கு அந்த அரசன் மீது பெரிய மதிப்பு இல்லாவிடினும் இன்றைய இலங்கைத்தலைமைக்கு இல்லாத
கண்ணியம் அவனிடம் இருந்தது. 2500 ஆண்டுகள் கூடுதல் நாகரிக வளர்ச்சி
அடைந்த மக்களுக்கு இது எப்பேர்ப்பட்ட வீழ்ச்சி, இப்படிக் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்வது?


பிரபாகரன் ஒன்றும் திடீரென்று தீவிரவாதியாக முளைத்து விடவில்லை.
அப்படி ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க அவருக்கு வலுவான காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் கண்டறியப்பட்டுத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிடில் 26 ஆண்டுகால போருக்குப் பின் நாம் பாடம் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை என்று தான் பொருள். பாடத்தை ஒழுங்காகப் பயிலாதவர்கள் மீண்டும் அந்தப் பாடத்தையே படிக்க வேண்டி வரும் என்பது அனுபவபூர்வமான உண்மை. நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் உணரவேண்டிய உண்மை.


இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான். என் அறையில்
சிங்களக் கொடியொன்று மடித்து வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை எழும்
போதும் இரவு தூங்கும் போதும் அதைப் பார்க்கிறேன். என்றைக்கு ”நான் ஒரு சிங்களன்” என்று சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேனோ அன்று அதைப் பறக்க விடுவேன். தற்போது அது மடித்துத் தான் வைக்கப் பட்டுள்ளது.
Posted by கானா பிரபா at 11:03 PM 16 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ▼  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ▼  June 2009 (4)
      • கவிஞர் இ.முருகையன் நினைவில்...!
      • ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை.....
      • புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"
      • உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் - எஸ்.ராமகிர...
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes