skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Monday, July 16, 2007

விபுலாநந்த விலாசம்



"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ
காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது.

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ
வாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோ
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது."



ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பொதுவான தமிழறிஞர் விபுலாநந்தராக மாறியமைக்கு அவரது பன்முகப்படுத்தப்பட்ட பணிகள் மட்டுமன்றி அவரது மனுக்குல நேசிப்பும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, விளங்கிய விபுலானந்தர், சமூகத்துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழிற்காற்றிய செவைகளும் அவரை என்றும் நிலைக்கச் செய்வன.

தமது ஐந்தாம் வயதில் காரை தீவு நல்லரத்தன ஆசிரியரால் எழுத்தறிவிக்கப்பெற்ற மயில்வாகனம், 10 வது வயதில் கல்முனை மெதடிஸ்ட் பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மட்டக்களப்பு செயின்ற் மைக்கேல் உயர்தர ஆங்கில பள்ளியில் கல்வி கற்று வருகையில் தனது கணித நுட்பத்தினால் ஆசிரியரையே வியப்படையச் செய்தார். தனது 16 வது வயதில் கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் முதலாவது வரிசையில் தேர்ச்சி பெற்று, 1911 ஆம் ஆண்டு கொழும்பு சென்று ஆங்கில ஆசிரியர் பயிற்சிக்கழகத்திற் சேர்ந்து ஆசிரியப் பட்டம் பெற்றார். பயிற்சிக்கழகத்தில் இருக்கும் காலையில் உயர்தரத் தமிழாராய்ச்சியிலும் கருத்துச் செலுத்திய இவர் கொழும்பில் தமிழறிஞர்களாக விளங்கிய தென் கோவை கந்தையாப்பிள்ளை ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியம் கற்றார். 1916 ஆம் ஆண்டு விஞ்ஞானக் கலையில் டிப்ளோமா பெற்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றதும் இவ்வாண்டிலே தான். பின்னர் யாழ்ப்பாணம் சம்.பத்தரிசியார் உயர்தரக் கலாசாலையில் விஞ்ஞான ஆசிரியராக இருக்கையில், லண்டன் பல்கலைக் கழக பி.எஸ்.ஸி பட்டதாரியானார். அடிகளார் 1931 ஆம் ஆண்டில் தமிழ் நாடு சென்று, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக மூன்றாண்டுகள் தொண்டு புரிந்தார். பின்னர் ஈழநாடு திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார் ( பண்டிதமணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை -1963)

அடிகளாரின் சமூகப் பணி

வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் பன்முகப்பட்ட பணிகளில் சமூகத்துறவியாக அவர் வாழ்ந்து செய்த தொண்டுகள் அளப்பரியவை. அவர் மக்களைத் துறந்து, மக்களை விட்டு விலகித் துறவறம் பூணவில்லை. மக்களிடையே துறவியாக வாழ்ந்து சமூகத்தின் துயரங்களிலும், மகிழ்ச்சிகளிலும் பங்கேற்றார். யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் பழக்கம், துறவுள்ளம் படைத்த மயில்வாகனத்தை விபுலானந்த அடிகளாக்கியது. 1922 இல் சென்னை சிறீ இராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்து, காவி பூண்டு இராமகிருஷ்ண மடத்துத் தலைவர் சுவாமி சிவானந்தரிடம் பிரம்மாச்சாரி அபிஷேகம் பெற்று "பிரபோத சைதன்யர்" என்னும் தீட்சா நாமமும் பெற்றார். அங்கு "இராமகிருஷ்ண விஜயம்" என்ன்ற தமிழ்ச்சஞ்சிகைக்கும் "வேதாந்த கேசரி" என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். அத்தோடு "செந்தமிழ்" என்னும் பத்திரிகைக்கும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

ஆச்சிரம வாழ்க்கை முடிந்து சுவாமி விபுலாநந்தர் என்னும் குருப்பட்டம் பெற்றார். குருவாக இருந்து அபிஷேகம் செய்தவர் சிறீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர்ச்சீடர்களில் ஒருவரான சுவாமி சிவானந்தராவார். கல்லடி உப்போடையில் தாம் அமைத்த ஆங்கிலப் பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது இவரது ஞாபகார்த்தமாகவே.

அதன் பின் ஈழம் திரும்பி, அந்நியர் ஆதிக்கத்தில் மதம், மொழி, கலாசாரம் முதலியவற்றில் தமது தனித்துவ இயல்புகளை இழந்து கொண்டிருந்த தமிழினத்தைத் தட்டியெழுப்பும் முயற்சியிலீடுபட்டார். கல்வி நிறுவனங்கள் பலவற்றை நிறுவினார். மட்டக்களப்பு உப்போடையில் சிவானந்த வித்தியாலயம் என்ற ஆண்கள் பாடசாலை, திருமலை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு விவேகானந்த மகளிர் ஆங்கிலக்கல்லூரி, காரைதீவு சாரதா வித்தியாலயம், என்பன அவர் நிறுவிய கல்வி நிறுவனங்களாகும். தலைநகர் கொழும்பில் தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லாத குறையைப் போக்க விவேகானந்த வித்தியாலயத்தைத் தொடங்கினார். ஒரு சமூகத்துறவி நிறுவிய கல்விச் சாலைகள் அவை. அத்துடன் கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, முதலிய இடங்களில் இராமகிருஷ்ண ஆச்சிரமங்களை நிறுவினார். விபுலாநந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார்.

"நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெற வேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்" என்றார். "பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்" என்றுமுரைத்தார்.

ஈழம் ஈன்றெடுத்த அறிஞர்களில் விபுலாநந்தர் முற்றிலும் வேறுபட்டவர். சாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர். யாழ்ப்பாணத்தில் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும், பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஆசிரியராகவும் 1917-1922 காலகட்டத்தில் கடமையாற்றியுள்ளார். கடமையொழிந்த வேளைகளில் வறுமையிலும், சாதியப் பாதிப்பாலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் "பெரியகோயில் வாத்தியார்" எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது இந்த மனித நேய யாத்திரை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலாநந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள் , நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன.

தாய்மொழிக்கல்விக்கும் அறிவியற்கல்விக்கும் வித்திட்டவர்களில் விபுலாநந்தர் குறிப்பிடத்தக்கவர். ஆங்கில மொழிக்கல்வி ஆதிக்கம் பெற்றிருந்த ஒருகாலவேளையில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி, அறிவியற்கல்வி தமிழிலும் போதிக்கவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார், அறிவியற் கலைச்சொல்லாக்கத் துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்துள்ளார். யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசுடனும் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர் விபுலாநந்தர்.



மெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலாநந்த அடிகளாரின் 60 வது நினைவை முன் கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006 ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டுக் கெளரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

அடிகளாரின் இலக்கியப் பணி

"சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்" என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.

"சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்" – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. "ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் கவி வனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்" என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.
(செ.க.சித்தனின் மே 22, 2006 வலைப்பதிவில் இருந்து)

அடிகளார் ஆக்கிய மதங்க சூளாமணி, நாடக இலக்கண அமைதி கூறும் ஒரு நூலாகும். 1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவில் "நாடகத் தமிழ்" என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.சி.சீனிவாஸ ஐயங்கரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த "மதங்க சூளாமணி" என்ற நூலை எழுதினார்.

1937 ஆம் ஆண்டு இமய மலையைக் காணச் சென்று மலைச்சாரலில் உள்ள மாயாவதி ஆச்சிரமத்தில் தங்கினார். அங்கு சிலகாலம் "பிரபுத்த பாரதா" என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிட்டார்.

கனடாவில் வாழும் ஈழத்துப் பூராடனார் (க.தா. செல்வராசகோபால்) என்ற கவிஞர் 1983 ஆம் ஆண்டில் விபுலாந்த அடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்" என்ற பிரபந்த நூலை வெளியிட்டிருக்கின்றார். அதில் நூலாசிரியர் ஈழத்துப் பூராடனார் விபுலானந்த அடிகளாரை நேரிற் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லையாயினும், அவரது நேரடி வாரிசான புலவர்மணி. ஏ.பெரியதம்பிப் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்றதும், அடிகளாரின் சகோதரியின் புதல்வன் திரு பூ.சுந்தரம்பிள்ளையுடன் உடன்சாலை மாணாக்கனாக நெருங்கிய நட்புக்கொண்டிருந்ததும் இந்த நூல் உருவாக்கத்திற்கு உசாத்துணையாக அமைந்ததாகக் கூறுகின்றார்.

அடிகளாரின் மதங்க சூளாமணியை ஆய்வு செய்து ஆய்வு செய்தும், மறு பதிப்பு செய்தும் அதன் கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு 800 வெண்பாக்கள் அடங்கிய கூத்தர் வெண்பா என்னும் நாடகத்தமிழ் இலக்கண நூல், மதங்க சூளாமணியின் இரண்டாவது பாகமான வடமொழி நாடகவியலின் தமிழாக்கத்தின் உரை நடையை விருத்தங்களாகச் செய்து கூத்தர் விருத்தம் ஆகிய நூல்களையும் செய்துமுடித்திருக்கின்றார் ஈழத்துப் பூராடனார்.

விபுலாநந்தர் பிள்ளைத் தமிழில் ஒவ்வொரு செய்யுட்களிலும்:

1. அடிகளாரின் வரலாறு
2. அடிகளாரின் தாயக வளம்
3. அவரின் போதனைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஈழத்துப் பூராடனார் இந்த விபுலானந்தர் பிள்ளைத் தமிழில் "நான் கண்ட விபுலாநந்த அடிகளார்" என்ற தலைப்பின் கீழ் இப்படித் தருகின்றார்.

மீன் பெண்ணுருவில் நீரரர்கள்
மீட்டு மிசையில் விளரிப்பண்
மிளிருஞ் சேதி விபுலானந்தர்
மிடையக் கேட்டேன் இளம் வயதில்
தேன் மது சொரியும் இலக்கியத்தின்
திகழுஞ் சுவைக்கோ ருரைப்பகுதித்
திரட்டா நமுரைநடைச் சிலம்பதிலே
திருவடி பொழிவதன் சுவைகண்டேன்
மான்கள் மருளும் மதர் விழி வாழ்
மட்டக்களப்பின் திருமகனை
மற்றும் நேரிற் கண்டிடாத
மருளிற் காலம் மடிய நின்றேன்
வான்மழை எனவவர் வருவார் ஓர் கால்
வந்தித் திடுவேன் எனவிருந்து
வள்ள லமரராய் ஆன பின்னே
வாய்த்ததி தருணம் வலிந்துருட்டே

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழி இலக்கிய பாடத்திற்குத் தோற்றும் மாணவர்களுக்கு அருட்டிரு விபுலாநந்த அடிகளாரின் "கங்கையில் விடுத்த ஓலை" ஒரு பாடப் பகுதியாக இருந்தது. அந்தக் கவிதை நயத்தை மாணவர்களுக்கு உதவும் வகையில் பொழிப்பும், விளக்கமும் கொண்ட உபநூலை இலக்கிய வித்தகர் த.துரைசிங்கம் (உதவிக்கல்விப் பணிப்பாளர்) எழுதி சிறீ சுப்ரமணிய புத்தகசாலை வெளியீடாக அக்டோபர் 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்நூலின் முகவுரையில் நூலாசிரியர் திரு த.துரைசிங்கம் அவர்கள் இவ்வாறு கூறிச் செல்கின்றார்.

அடிகளாரின் "கங்கையில் விடுத்த ஓலை" தனிச்சிறப்பு வாய்ந்தது. இமய மலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலை தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப்புலமையும், தூய்மையான வாழ்வும், சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாடய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது.

நெருங்கிய ஒருவர் இறந்தகாலை அவர்க்கிரங்கிப் பாடிய கையறு நிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் "கங்கயில் விடுத்த ஓலை" புதுவகையில், புதுமெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்று முழுதாகக் கையறு நிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்பனின் குண நலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையினை நினைவு கூருகின்றார்.

"எழுத்தறிந்து கலைபயின்றோ நின்றமிழினிய நூல்
எத்தனையோ வந்தனையு மெண்ணியாழங் கண்டோன்
பழுத்த தமிழ்ப் புலமையினோர் பேரவையில் முந்தும்
பணிந்தமொழிப் பெரும் புலவன் கனிந்த குணநலத்தான்"

"சொல்வகையும் சொற்றொகையுஞ் சொல்னடையுமுணர்ந்தோன்
சொல்லவல்லான் சொற்சோராத் தூய நெறியாளன்
பல்வகைய நூற்கடலுட் படிந்துண்மை மணிகள்
பலவெடுத்துத் திரட்டிவைத்த பண்டாரம் போல்வான்"


அன்பினால் பிணைக்கப்பட்ட அவரது உள்ளம் நண்பனை நினைந்து நினைந்து உருகுகின்றது. இத்துயரினை ஆற்ற வழியின்றித் தவிக்கின்றார். இமய மலையிலிருந்து வங்கக் கடலை நோக்கிச் செல்லும் புனிதமான கங்கை நதியின் சாரலையடைந்து அதன் அரவணைப்பில் சோகத்தாற் கொதிக்கும் தம்முளத்தை ஆற்றிக்கொள்ள முற்படுகின்றார்.

"பொங்கியெழுந் துயர்க்கனலைப் போக்குதற்கும் மாயப்
பொய்யுலகி னுண்மையினைப் புலங்கொளற்குங் கருதிக்
கங்கையெனுந் தெய்வநதிக் கரைப்புறத்தை யடைந்து
கல்லென்று சொல்லிவிழும் நீர்த்தரங்கங் கண்டேன்"

பொங்கிவரும் கங்கை நதியின் நீரலைகள் போன்று அடிகளாரின் உள்ளத்திலிருந்து துயர அலைகள் பொங்கியெழுகின்றன. அவை கட்டுமீறிப் பாய்கின்றன. "உள்ளத்திருந்தெழும் உணர்ச்சிப் பெருக்கே பாட்டுக்கு நிலைக்களன்" என்னும் ஆங்கிலப் புலவர் வோட்ஸ்வோத்தின் கூற்றுக்கமைய அடிகளாரின் உள்ளத்துணர்வினைப் பாடல்கள் நன்கு படம்பிடித்துக் காட்டுகின்றன.

வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இந்த உண்மையை நங்கு அறியாதோரே இன்பம் வந்தபோது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்தபோது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும். இதனை அடிகளார் பின்வரும் பாடலில் அழகுற விளக்கியுள்ளார்.

"இன்பவிளை யாட்டினிடை மேலெழுந்து குதிப்பார்
எமக்கு நிக ராரென்பர் இருகணத்தி னுளத்தில்
துன்பமுற மண்ணில்விழுந் திருகண்ணீர் சொரியச்
சோர்ந்தழுவார் மயக்கமெனுஞ் சுழல்காற்றி லலைவார்"

நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சியுடன் மனித வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கின்ற அடிகளார் இன்ப துன்பச் சூழலில் அகப்பட்டுத் தவிக்கும் மனிதன் மரணமெனும் கரையில் ஏற்றுண்டு கிடப்பதையும், பின்னர் மறுபிறவியாகிய திரை கவர மீண்டும் பிறந்து
இன்பதுன்பங்களில் மூழ்கித் தவிப்பதையும் நினைவூட்டுகின்றார் இப்படி:

"மரணமெனுந் தடங்கரையி லெற்றுண்டு கிடப்பார்
மறுபிறவித் திரைகவர வந்தியையுங் கருவி
கரணமுறு முடலெடுத்து மண்ணுலகி னுழல்வார்
காதலிப்பா ரெண்ணிறைந்த வேதனையுட் புகுவார்"

ஆசையே துன்பத்திற்குக் காரணமாகும். இந்த உண்மையை "காதலிப்பார் எண்ணிறைந்த வேதனையுட் புகுவார்" என்னும் அடியில் அடிகளார் அழகாகப் புலப்படுத்தியுள்ளார்.

இவ்வாறெல்லாம் வாழ்க்கை நிலையாமையினையும், கல்விச் சிறப்பினையும் தந்து எடுத்துக்கூறியிருக்கின்றார் அடிகளார்.இவ்வுலகில் உள்ளார் அன்னத்தை, கிளியை, முகிலைத் தூதாக அனுப்புவது மரபு. இம்மரபுக்கமையவே அடிகளார் தாம் வரைந்த ஓலையைச் சிவபெருமானின் செஞ்சடையில் வீற்றிருக்கும் கங்கையெனும் தெய்வ நதிமூலம் அனுப்பத் துணிகின்றார்.

"உள்ளத்திலே உண்மை ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்னும் பாரதியின் வாக்குக்கிணங்க அடிகளாரின் உள்ளத்தெழுந்த உண்மை ஒளி கங்கையில் விடுத்த ஓலையில் நன்கு பிரகாசிக்கின்றது. அடிகளாரின் கவித்திறனை, கற்பனையாற்றலை, தமிழ்ப்பற்றைப் பறைசாற்றும் கங்கயில் விடுத்த ஒலை, தமிழ் உள்ளவரை அடிகளாரை நினைவூட்டும் என்பது திண்ணம்.

பஞ்ச கிருத்திய நுட்பத்தைக் கூறும் நடராஜ வடிவத்தைப் பற்றியும் ஒரு நூலை ஆக்கித்தந்துள்ளார். கர்மயோகம், ஞான யோகம், விவேகானந்த ஞானதீபம் முதலியன அவரது மொழிபெயர்ப்பு நூல்களாகும்.

அடிகளார் விபுலானந்தரின் இலக்கியப் பணி குறித்துப் பேசும் போது அன்னார் ஆக்கிய இலக்கிய ஆக்கங்களில் தமிழுக்குப் புதிதாகவும் மகுடமாகவும் அமைவது யாழ் நூலாகும். பழந்தமிழரின் இசை நுட்பங்களை ஆராய்ச்சி முறையாக விபரிக்கும் ஒரு முதல் நூல். பண்டைத் தமிழரின் இசைக் கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ் செங்கோட்டி யாழ் சகோட யாழ், என்பன பற்றி யாழ் நூல் கூறுகின்றது. அடிகளாரின் பதினான்காண்டு ஆராய்ச்சியின் பயனாக யாழ் நூல் தமிழுக்குக் கிடைத்தது. யாழ் நூல் ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று 15 ஆண்டுகள் ஆராய்ந்து கரந்தை தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம்புதூர்த் திருக்கோயிலில் 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்கள் "யாழ் நூல் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

பாரிசவாத்தினால் தாம் பீடிக்கப்பட்டிருந்தும் தமது 45 வருடக்குறிக்கோள் நிறைவேறிய திருப்தியில் இருந்த சுவாமி விபுலானந்தர் "யாழ் நூல்" அரங்கேறிய அடுத்தமாதமே முடிவுற்றது. 1947 ஆம் ஆண்டு ஆடி மாதம் 19 ஆம் திகதி அவர் விண்ணுலகம் அடைந்தார்.

சிவானந்த வித்தியாலய முன்றலிலுள்ள மரத்தின் கீழ் சுவாமிகளின் பூத உடல் அடக்கம் செய்யப்பட்டு அவரின் கல்லறை மேல் அவரால் பாடப்பட்ட

"வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலர் எதுவோ
வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"

என்ற கவிதா வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

"மஹாகவி" உருத்திரமூர்த்தி அவர்கள் தந்த மெய்யான கவிவரிகளை மீள ஒப்பித்து
யூலை 19 அருட்டிரு விபுலானந்த அடிகளாரின் நினைவு நாளில் அவர் தம் சிறப்பைப் போற்றுவோம்.

"ஆங்கி லத்துக் கவிதை பலப்பல
அருமை யாகத் தமிழ்செய்து தந்தனன்;
நாங்கள் மொண்டு பருகி மகிழவும்
நன்று நன்றென உண்டு புகழவும்,
தீங்க னிச்சுவை கொண்டவை தானுமே
தீட்டினான்: தெய்வ யாழினை ஆய்ந்ததால்
ஓங்கி னானின் உயர்வைப் பருகுவோம்!
உண்மை யோடவன் நூலும் பயிலுவோம்"


வரும் யூலை 19 ஆம் திகதி அருட்டிரு விபுலாநந்த அடிகளின் அறுபதாவது நினைவு தினத்தையிட்டு இப்பதிவை வழங்குகின்றேன்.


இந்தத் தொகுப்பிற்கு உசாத்துணை மற்றும் புகைப்பட உதவிகள்:

1. அட்டைப்படக்கட்டுரை, மல்லிகை இதழ் மே 1992

2. த.துரைசிங்கம் எழுதிய "கங்கையில் விடுத்த ஓலை" விளக்கவுரை, அக்டோபர், 1991, வெளியீடு: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை

3. ஈழத்துப் பூராடனார் எழுதிய "விபுலாநந்தர் பிள்ளைத் தமிழ்" மூலமும் உரையும், புதுக்கிய மூன்றாம் பதிப்பு யூலை, 1991, வெளியீடு: நிழல் வெளியீடு கனடா

4. மரகதா சிவலிங்கம் எழுதிய "நாடறிந்த பெரியோர்கள்", ஜனவரி 2002, வெளியீடு: பூபாலசிங்கம் பதிப்பகம்.

5. சுவாமி விபுலாநந்தர், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, கொழும்பு, தந்துதவியவர்: கனக சிறீதரன் அவர்கள்

6. செ.க. சித்தனின் வலைப்பதிவுக் குறிப்புக்கள்


மேலதிக வாசிப்பு மற்றும் கேட்டலுக்கு

சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலர் - PDF வடிவில்
(தந்துதவியவர்: கனக சிறீதரன்)

யாழ் நூல் அரங்கேறிய 60 ஆண்டு நினைவில் பி.பி.சி தமிழோசையின் பெட்டக நிகழ்ச்சி

தமிழ் விக்கிபீடியா கட்டுரை மற்றும் நூலகத் திட்டத்தின் தொகுப்பு இணைப்பு
Posted by கானா பிரபா at 7:38 PM 27 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Monday, July 09, 2007

விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்


"இலகுவா......ய் நில்
க...வ...னம்
செற்
றெடி
கோ"

கையில் மாட்டியிருந்த பலகைச் சட்டம் இரண்டையும் ஒரு சேர அடிக்கின்றார் விளையாட்டுப் பாட மாஸ்டர். ஒவ்வொரு கோட்டு எல்லைக்குள் இருக்கும் வீரர்கள் தொலைவில் தெரியும் கயிற்று முடிவிடத்தையே கண்கள் நோக்க, விர்ரென எழும்பும் அம்பு போலப் பாய்கிறார்கள்.

"நாகலிங்கம்! ஓடு ...... ஓடு"
"செல்லையா! விடாதை முந்து"
"டோய் கார்த்திகேசு! செல்லையாவின்ர கோட்டுக்குள்ளை போகாதை",

ஓடும் வீரர்களைக் கலைத்துக் கொண்டு அதுவரை மைதானத்தின் கரையே நின்ற ஒவ்வொரு போட்டி இல்லத்து மாணவர்களும் ஓடுகின்றார்கள்.
வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் மட்டும் ஓடினால் மானக்கேடு என்று, கையைப் பிசைந்து கொண்டே "கடவுளே....கடவுளே... எங்கட இல்லம் தான் வெல்லவேணும்" என்று ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் மைதானத்துக்கு அழைக்கிறார்கள்.
உணர்ச்சி வசப்பட்டு ஓட்ட மைதானத்தின் கயிற்று எல்லைகளைக் கடப்பவர்களை கணேசலிங்கம் மாஸ்டரின் சவுக்குப் பிரம்பு பதம்பார்க்கின்றது.

மைதானம் எங்கும் வெற்றி, தோல்வி, முதலாம் இடம், இரண்டாம் இடம், இதுவே பேச்சு. மைதானத்தின் கரையெங்கும் அந்தந்த விளையாட்டு இல்லங்களுக்கான கொட்டகை போடப்பட்டு அந்தந்த இல்ல பாட்ச்களைச் சட்டையில் அணிந்த மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஒரு போட்டியில் வென்றால் என்ன தேற்றால் என்ன திரும்ப வரும் வீரனுக்கு குளுக்கோஸ் கொடுக்கவென ஒரு பகுதி மாணவியர் நிற்பார்கள். போர்க்களம் சென்று திரும்பும் வீரன் போல பெனியன் தொப்பமாக நனைய நனைய வீரரும் குளுக்கோஸ் தேடி வருவார். கூடவே வென்றாலும் தோற்றாலும் துணை வரும் இல்லக் கொடியுடன் ஒருவர்.




"உங்கட பள்ளிக்காலத்தில் மறக்கமுடியாத நாட்கள் எவை? "
என்று யாராவது என்னைப் பேட்டியெடுத்தால் நான் விழுந்தடிச்சுச் சொல்வேன்,
"விளையாட்டுப் போட்டி நடக்கிற நாட்கள் தான்" என்று.
வருடத்தின் பெரும்பாலான நாட்கள் வெறும் பீ.ரி ( physical training) வகுப்புக்குத்தான் எட்டிப் பார்க்கும் மைதானம் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் என்றால் தான் முழு நேர ஊழியனாக மாறிவிடுகின்றது.
அதுவரை காலமும் தலைகுனிந்து நாணிக் கோணியிருந்த மைதானம் தலை நிமிர்ந்து நிற்க வழி சமைப்பது இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலம்.

முதல் வாங்கில் இருந்து படிப்பில் முதலாம் இடம் பெறத்துடிக்கும் மாணவர்களைப் புறந்தள்ளிக் கடைசி வாங்கிலிருந்து வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து வெற்றிக்கோப்பையைப் பறிக்கும் மாணவனை இனங்காட்டுவதும் இந்த விளையாட்டுப் போட்டிகள் தான்.

ஆறாம் வகுப்பிலிருந்து கொக்குவில் இந்துக் கல்லூரியில் தான் என் படிப்பு தொடர்ந்தது. செல்லையா, நாகலிங்கம், கார்த்திகேசு, சபாரத்தினம், என்று கல்லூரியின் பழைய அதிபர்களின் பெயரே விளையாட்டு இல்லங்களுக்கும் இருந்தது. பாவியர் போகும் பாதை பள்ளமும் திட்டியும் என்பது போல நான் சேர்ந்த நாகலிங்கத்தின் நிலை தேர்தலில் நிற்கும் சுப்பிரமணியசாமி போல கவலைக்கிடமானது. என்னைப் போல ஆட்கள் நாகலிங்கம் இல்லத்தின் அணித் தேர்விலேயே நாலாம் ஐந்தாம் இடம் எடுக்கக்கூடிய வல்லமை மிக்கவர்கள்.



செல்லையா இல்லக்காரங்கள் தான் தொடர்ந்து பெரும்பாலான ஆண்டுகளின் விளையாட்டுப் போட்டிகளில் முதலாம் இடம் வருவார்கள். தாங்கள் ஏதோ அவுஸ்திரேலிய கிறிக்கற் அணி என்ற தோரணையில் போட்டி ஆரம்பமாக முதலேயே வீறாப்புடன் வளைய வருவார்கள். அக்னி நட்சத்திரம் பிரபு - கார்த்திக் போல ஆளை ஆளை முறைச்சுப் பார்த்துக்கொண்டே தம் பயிற்சிகளை எடுப்பார்கள். விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு ஒரு மாதம் முன்பே மதிய நேர வகுப்புக்கள் காலி. விளையாட்டு மைதானத்தில் வந்தும் ஒரமாக இருக்கும் மர நிழலில் இருந்து விளையாட்டு நேரத்திலும் புத்தகமும் கையுமாக இருந்து படிக்கிறவையும் இருக்கினம்.

கொக்குவில் இந்து கலவன் பாடசாலை என்பதால் விளையாட்டுப் போட்டி நடக்கும் நாட்களில் பொம்பிளைப்பிள்ளையள் விளையாடுற கூத்தைப் பார்க்க யாழ் இந்து, சென் ஜோன்ஸ், சென்றல் பள்ளிக்கூடப் பெடியளும் வந்து மதிலில் இருந்து வேடிக்கை பார்ப்பினம். வழக்கமாக கண்டிப்புடன் இருக்கும் மகேந்திரன் மாஸ்டரும் இவர்களைக் கண்டும் காணாமல் கருணை காட்டுவார். இவ்வளவு நாளும் லேடீஸ் கொலிச், வேம்படிப் பிள்ளையளை சைற் அடிச்சுப் போட்டு இப்ப எங்கட பள்ளிக்கூடப்பிள்ளையளையும் பார்க்க வந்திட்டாங்கள் என்று உயர்தர வகுப்பு அண்ணாமார் பெருமுவார்கள்.

என்னைப் போல ஆட்கள் விளையாட்டுப் போட்டி முடிஞ்ச அடுத்த நாள் தான் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளை அறிவிக்கும் பெட்டியில் ஆசை தீர ஏறிப் பார்க்கலாம்.
நாங்கள் உயர்தர வகுப்பில் காலடி எடுக்கவும் அவ்ரோ, புகாரா, சியாமாசெற்றி என்று இலங்கை அரசாங்கம் வானத்தில் வாண வேடிக்கை காட்டவும் சரியாக இருந்தது. இலங்கை விமானப்படையின் விளையாட்டுப் போட்டிக்கு இடம் கொடுத்து கல்லூரி விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திப் போடப்பட்டன.



என் ஆரம்பப் பாடசாலை வாழ்க்கை ஐந்தாம் வகுப்பு வரை இணுவில் அமெரிக்கன் மிசனில் வாய்த்தது. இணுவில் என்றாலே சமயப்பற்றுக்கு கேட்கவே வேண்டியதில்லை. அதனாலோ என்னவோ எங்கட பள்ளிக்கூடத்தின் விளையாட்டு இல்லங்களுக்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்று நாலு திருமூர்த்திகளின் பெயரை வைத்துவிட்டார்கள்.
"அப்பர் ஓடு",
"சம்பந்தர் விடாதை"
என்று சிவனே என்று இருந்த நாயன்மார்களை மைதானத்துக்கு இழுத்து வேடிக்கை நடக்கும் காலம் இந்த விளையாட்டுப் போட்டிகளில் தான் நடக்கும்.
பாடசாலைப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு விளையாட்டு இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கே தான் எனக்கு ஏழரைச் சனி தொட்டது. அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த என் அம்மாவோ சுந்தரர் இல்லத்துக்கு பொறுப்பாசிரியை. நானோ சம்பந்தர் இல்லம். ஒரு வீட்டுக்குள்ளேயே எதிரியை வைத்துக்கொண்டிருந்தேன். விளையாட்டுப் போட்டி நடக்கும் நாள் என் அம்மாவுடன் போகும் போது வழியில் இருக்கும் ஞான வைரவர் ஆலயத்தில், ஏற்கனவே கடையில் வாங்கி வைத்த கற்பூரத்தைக் கொழுத்தி தேங்காயை உடைத்து விட்டு மனமுருகப் பிரார்த்தனை செய்வார் எங்கட அம்மா.
"எனக்கு தெரியும், தன்ர சுந்தரர் இல்லம் வெல்லவேணும், மற்ற இல்லம் தோக்கவேணும் எண்டு தானே நீங்கள் இப்ப கும்பிட்டனீங்கள் " என்று சிணுங்கியவாறே அம்மாவின் கையைப் பிடித்து வலிக்கும் போல கிள்ளுவேன்.
அம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே " அப்பிடியில்லை, பேசாம வாங்கோ" எண்டு கொற இழுவையில் பள்ளிக்கூடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடுவார்.
அம்மாவின் பிரார்த்தனை தான் பெரும்பாலான ஆண்டுப் போட்டிகளில் வெல்லும். "எனக்குச் சம்பந்தர் இல்லம் எண்டு சொல்லவே வெக்கமா இருக்கு " என்று மனதுக்குள் புழுங்குவேன்.

இணுவில் அமெரிக்கன் மிசன் ஒரு சிறு பாடசாலை என்பதால் பெரிய மைதானம் கிடையாது. அயலில் உள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு மைதானம் தான் ஆபத்துக்கு கை கொடுக்கும். எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டியென்றால் எங்களை விட சைவப்பிரகாச வித்தியாசாலைப் பெடியளுக்குத் தான் சந்தோசம். ஏனெண்டால் பள்ளிக்கூடம் வெள்ளென விட்டால் தானே விளையாட்டுப் போட்டி நடக்கும். அவங்களுக்கும் அரை நாள் பாடசாலை.


ஆரம்பப் பாடசாலைக்கு உரித்தான நூறு மீற்றர் , இரு நூறு மீற்றர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம் போன்ற சில்லறை விளையாட்டுக்கள் தான் வழக்கமாக இருக்கும். கூடவே வினோத உடைப் போட்டி என்ற ஒரு கூத்தும் நடக்கும்.
ஓவ்வொரு விளையாட்டு இல்லத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகள் புராண அல்லது நடைமுறைப் பாத்திரத்துக்கு உருமாற்றி விளையாட்டுப் போட்டியின் இடைவேளை நேரத்தில் உலா வருவார்கள். சிறந்த நடிப்பை வழங்கிய நடிகருடைய இல்லத்துக்கு விசேட புள்ளி கிடைக்குமாம்.
நாலாம் வகுப்பு படிக்கும் போது என் கனவுப் பாத்திரமான (?) குடிகாரன் பாத்திரத்தில் நடிக்க எனக்கு ஆசை வந்தது. வாழ்வே மாயம் கமல் மாதிரி நடிக்கலாம் என்று கற்பனையெல்லாம் பண்ணி வைத்திருந்தேன். யானை மார்க் சோடாப் போத்தலில் சவர்க்காரத் தண்ணீரை நிரப்பினால் கள்ளு மாதிரி இருக்கும் என்று சிவாஜி பட கலை இயக்குனர் தோட்டாத்தரணி ரேஞ்சுக்கு பிளான் பண்ணினேன்.

என்னுடைய விளையாட்டு இல்லத்தின் பொறுப்பாசிரியையிடம் என் கனவுப் பாத்திரத்தைச் சொல்லி அனுமதி கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே எட்டி நடந்து அம்மாவின் வகுப்புப் போய்
"இஞ்சை ரீச்சர், உங்கட மகன் வினோத உடைப்போட்டிக்கு என்னசெய்யப்போறார் எண்டு கேளுங்கோ"
என்றவாறே எல்லாத்தையும் சொல்லிப் போட்டார்.
" வீட்டை வாரும், உமக்கு இருக்கு"
என்று எட்டிய தூரத்தில் என்ன நடக்கின்றது என்று உளவு பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து கைவிரலால் உறுக்கினார் அம்மா. ஒரு எதிர்கால நடிகனின் கனவுக் கோட்டை அன்றே தகர்ந்தது. அதற்கு பிறகு அந்த வருஷ விளையாட்டுப் போட்டியில் என் சம்பந்தர் இல்லத்தை ஒத்துழையாமை இயக்கம் போல் இருந்துகொண்டே கலந்துகொண்டேன்.

ஐந்தாம் வகுப்பில் தடை தாண்டி ஓட்டத்தில் எனக்கும் இடம் கிடைத்தது.
முதலில் ஓட்ட வரிசையில் நின்று வேகமாய் ஓடிப்போய் ஓட்டப்பாதையின் நடுவே கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் பணிசை கையை பின்புறம் கட்டிக் கொண்டே சாப்பிட்டு விட்டு ஒடவேண்டும். இன்னும் கொஞ்சத்தூரம் போனால் மேசைகளில் தோடம்பழ இனிப்புத் துண்டங்கள் மாவில் கரைத்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றையும் கைகளால் தொடாமல் நக்கி நக்கிச் சாப்பிட்டு விட்டு முடிவிடத்தை நோக்கி ஓடவேண்டும். என் வாழ்க்கையிலேயே ஒரு விளையாட்டுப் போட்டியில் பரிசு கிடைத்தது இந்தத் தடை தாண்டி ஓட்டத்தில் தான். கிடைத்த அதுவும் மூன்றாம் பரிசு.
Posted by கானா பிரபா at 7:43 PM 28 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ▼  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ▼  July 2007 (2)
      • விபுலாநந்த விலாசம்
      • விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes