“அந்தோனி அதுவாகவே அவரை உள்வாங்கிக் கொண்டது"
ஈழத்தவர்களுடன்
இசைஞானி இளையராஜா ❤️❤️❤️
ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் கலைவளரி சக ரமணதாஸ் மற்றும் சுகந்தினி தயாரிப்பில், இசைஞானி இளையராஜா அவர்களுடைய இசையில், மார்ச் மாதம் 13 ஆம் திகதி வெளியீடு காண்கிறது “அந்தோனி” என்ற திரைப்படம். இது தமிழ்,சிங்களம்,மலையாளம் மொழிகளில் வெளியாக இருக்கிறது.
விஜய் பாலசிங்கம் பிலிம்சின் விஜய் சங்கர், டிரீம் லைன் புரொடக்ஷன்சின் ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் கனா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இலங்கைத் திரைப்பட வரலாற்றில் சிங்கள சினிமாக்களை இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்த போதும், இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் தமிழ்ப் படங்கள் உருவான போதும் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் பங்களிப்பு அமைந்திருக்கிறது.
ஆனால் நேரடி இலங்கைத் திரைப்படமொன்று இளையராஜா இசையில் வெளிவருவது என்பது முக்கியமான செய்தி.
இன்று ஐம்பது ஆண்டுகளைத் தொடும் இளையராஜாவின் இசை இயக்கமானது பின்னணி இசையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நிலை நிறுத்தியிருக்கிறது. மூன்றாவது தலைமுறையிலும் அவரது தேவை உணரப்படுகிறது.
சிம்பொனி நாயகன் இளையராஜா இலங்கைத் திரைப்படமொன்றுக்கு இசையால் உணர்வூட்டுவது என்பது மிக முக்கியமான பங்களிப்பு என்பதோடு அவரது இசை வரலாற்றிலும் இப்படம் தனித்துவமாக அடையாளப்பட்டு நிற்கப் போகிறது.
முன்னர் காசி படத்தின் பாடல்களை இளையராஜாவிடம் உரிமை பெற்று சிங்களத்தில் “சூர்யா” என்ற பெயரில் எடுத்தார் நிரஞ்சன். ஆனால் படத் தயாரிப்பில் பலவகையிலும் ஏமாற்றப்பட்டு அந்தப் படம் வெளிவராமலேயே இறந்து போனார்.
இந்த நிலையில் அந்தோனி திரைப்படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகிப் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர்.
ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இரட்டையர்கள் இயக்கத்தைக் கவனித்துக் கொள்ள, “கயல்" திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஈழத்தவர் வின்சென்ட் நாயகனாகவும், TJ பானு நாயகியாகவும் (இவர் வாழ் திரைப்படத்தின் வழியாகக் கவனத்தை ஈர்த்தவர்) மற்றும் சுதர்சன், சவுமி இருவரும் இலங்கை நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்களின் துணையோடு படம் உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் தமிழன் பத்திரிகையின் தமிழ் முரசு வார இதழுக்காக இப்படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் வழங்கிய பேட்டி இது.
அந்தோனி என்பது ஈழத்தில் தனித்துவமான பெயர்ச்சொல் அந்தப் பெயரைச் சூட்டியதற்கு வாழ்த்துகள், ஈழத்தில் வாடைகாற்று என்ற நாவல் கடலோரக் கிராமத்தவரது வாழ்வியலோடு படைக்கப்பட்டுத் திரைப்படமானது. இன்று ஐம்பது வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு படைப்பு வருவதையிட்டு பெருமகிழ்ச்சி
ஈழத்தில் இருந்து இரட்டை இயக்குநர்கள் பெருமையுடன் படைக்கும் “அந்தோனி" என்ற திரைப்படம் இந்திய, இலங்கை ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்போடு பார்க்கப்படுகிறது.
திரைத்துறையில் உங்கள் பின்புலம் குறித்தும், முன்னர் வழங்கிய படைப்பனுபவம் குறித்தும் பகிர முடியுமா?
அந்தோனி எங்களது கனவுத் திரைப்படம், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் பதினைந்து வருடங்களாகத் திரைத்துறையில் இருக்கிறோம். ஒன்றாகவே பல படைப்புகளில் பணியாற்றியிருக்கிறோம் அதே போலவே நாம் இயக்கும் படத்திலும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். நான் யாழ்ப்பாணத்தில் குருநகர் வாசி பின்னர் இளவாலைக்கு இடம்பெயர்ந்தேன், சுகிர்தனும் குருநகரில் இருந்து அல்லைப்பிட்டிக்கு இடம்பெயர்ந்தவர். இருவருமே யாழ் மத்திய கல்லூரியில் படித்தோம். நான் பின்னர் சென் ஹென்றிஸ் கல்லூரியிலும் படித்திருக்கிறேன். இருவருக்குமான பொது ஒற்றுமை, இருவருமே நாடகமும் அரங்கியலில் தீவிரமாக இயங்கி பாடசாலைக் காலத்தில் இருந்தே நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் எமக்கு சினிமா ஆசை துளிர்விட்டது.
இந்தியாவிலும், இலங்கையிலும் திரைத்துறையில் ஈடுபட்டோம். சினிமாவுக்குள் வந்தவுடனேயே உதவி இயக்குநர் வாய்ப்பு கிடைக்கவில்லை. சினிமாவின் ஒவ்வொரு துறையிலும் கடை நிலை உதவியாளராக இருந்து உதவி இயக்குநர்களாகி, திரைப்படைப்பின் எழுத்தாளர்களாகி என்று ஒரு படி நிலை வளர்ச்சி தான் இதற்குள் இருக்கிறது. இப்படியான படி நிலை வளர்ச்சி ஒரு ப்ரொபெஷனலான சினிமாவாக இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எமக்கு அளித்தது. அந்த வகையில் எம் இலக்கை நிறைவேற்றும் ஒரு பரிபூரண படைப்பாக இப்படத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தப் படத்துக்கு யார் இசையமைக்கலாம் என்று பார்க்கும் போது இந்தப் படத்தை எம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அதை ஒரு கனவு முயற்சியாக இளையராஜா அவர்களின் பெயரை எழுதி வைத்து விட்டுத்தான் எம் முயற்சியை ஆரம்பித்தோம்.
அதற்குப் பின் இந்தப் படைப்பைப் பற்றி அவரிடம் கொண்டு போய்ப் பேசுவதற்கு நிறையத் தடங்கல்கள் இருந்தன. ஆனாலும் நாம் எம் முயற்சியைக் கை விடவில்லை அதன் பெறுபேறாக அவர் படத்தைப் பார்த்து விட்டு இசையமைத்துத் தந்திருக்கிறார்.
இது அந்தோனி தனக்குத் தானே எடுத்துக் கொண்ட பெரும் தாக்கமது.இளையராஜா அவர்களை இந்தப் படத்தில் உள்வாங்கிக் கொண்டது இந்தப் பிரபஞ்சத்தின் ஏற்பாடு தான். அதற்கு நான் இந்தப் பிரபஞ்சத்துக்கும், கடவுளுக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன்.
ஆகவே இந்த அழகான வாழ்வியல் கதைக்கு இளையராஜா தேவை என்பதை அந்தோனி முடிவு பண்ணியது தான்.
அந்தப் படம் அது தன்னைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டது என்பது தான் முற்றிலுமான உண்மை.
அந்தோனி படம் ஒரு மாறுபட்ட சினிமாவாக வரும் என்பதை அதன் நேர்த்தியான முன்னோட்டம் காட்டி நிற்கின்றது. இந்தப் படைப்பு சொல்ல வருவது என்ன?
இலங்கையில் வெளிவந்த திரைப்படைப்புகளில் இது ஒரு நேர்த்தியான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு படைப்பின் கதை, உருவாக்கம், நடிப்பு எல்லாமே அழகாக இருக்க வேண்டும். இது மாதிரி எல்லாமே முற்றுமுழுதாக நன்றாக இருந்தால் தான் நல்ல படமென்று மக்களால் சொல்லப்படுகிறது. அந்த வகையில் உதாரணத்துக்கு Arri""Alexa""60 கேமராவில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் இதுவொரு புதுமுயற்சி எனலாம். இந்த உயர் தரப் படமாக்கலை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இதுவரை காலமும் இருந்த இந்த மாதிரியான குறைபாட்டை இது நீக்கியிருக்கிறது. இதற்காகவே காத்திருந்தே படத்தை சமரசமின்றி எடுத்தோம்.
இது ஒரு மசாலாப் படமல்ல, கடலோர மக்களில் மீனவரின் வாழ்வியலை, தொழில் முறைக் காதலை மக்களுக்கு இப்படைப்பு சொல்லும் என நான் நம்புகிறேன்.
நடிகர் தேர்வில் ஈழத்து மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பு இருப்பது போலப்படுகிறதே அதுபற்றி?
ஆமாம், ஈழத்தில் பிறந்து தற்போது தமிழ் சினிமாவில் அடையாளப்பட்ட “கயல்” வின்சென்ட் அவர்களோடு தென்னிந்திய நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். பானு அவர்களின் நாயகி பாத்திரத்துக்கு சரியாக யாருமே முன்னர் கிடைக்கவில்லை. அதாவது கடின உழைப்பும், சினிமா மீதான வேட்கையும் கொண்டவர்களை எங்களால் அடையாளப்படுத்த முடியவில்லை. நடிப்பின் உண்மையான ஆர்வத்தையோ, வெளிப்பாட்டையோ கொண்டவரை இலங்கையில் நாங்கள் தேடிய போது கிடைக்கவில்லை என்பது கவலையான விடயம். அப்படி புரிதல் கொண்டோர் எமக்கு அகப்படவில்லை. பின்னர் நம் தேடல் விளைவாகக் கிட்டியவர் தான் TJ பானு, அவர் வாழ் படத்தில் கொடுத்த நடிப்பை பலர் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அவரும் கதை பிடித்து இந்தப் படைப்பில் இணைந்து கொண்டார், ஐரோப்பிய ஈழத்துக் கலைஞர்கள் தயாநிதி, குணபாலன், சீலன் என்று பலரும் நடிகர்களாக இணைந்துள்ளனர். ஆகவே இது ஐரோப்பிய, இலங்கை, இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் அமைந்த படம் தான்.
அப்படியொரு கூட்டு முயற்சி இருக்கவே விரும்பினோம். அதுவே அமைந்து கொண்டது.
இந்தப் படத்துக்கான தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பக் குழுவை எப்படி அமைத்துக் கொண்டீர்கள்?
ஓசை பிலிம்ஸ் “கலைவளரி” ரமணதாஸ் சத்தியநாதன் மற்றும் சுகந்தினி தம்பதியினர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அவர்களுக்கு ஐரோப்பிய நண்பர்கள் முதலீட்டாளர்களாவும் கை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சுரேஷ் A பிரகாஷ் பிரபல படத்தொகுப்பாளர் RRR, சர்கார், பொன்னியின் செல்வன் ஆகிய பல படங்களின் அசோசியேட் எடிட்டர். பிரபல படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் இன் உதவியாளர். கனா புரொடெக்ஷன் சார்பில் விக்கி ஆனந்த் அவர்களும் இணைந்துள்ளார் அவர் ட்ராபிக் ராமசாமி படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் பல வேலைகளை ஒருங்கமைத்து உதவ அவர் பெரும் பலமாக இயங்கினார்.
ஒரு காலத்தில் இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் படங்கள் அமைந்தன இங்கே புதுமையாக சுயாதீனமாகவே நீங்கள் அந்தவொரு முயற்சியை எடுத்தீர்கள் அப்படி ஒரு எண்ணம் எப்படி அமைந்தது?
அது எமது தயாரிப்பாளரின் ஆசை தான், இப்படியொரு ஈழத்துப் படைப்பை உலகம் முழுதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேட்கை இருந்தது.
அவர்கள் கொடுத்த சுதந்திரம் தான் இப்படியானயொரு படைப்பைக் கொண்டு வர முடிந்தது.
இசைஞானி இளையராஜாவைப் பொறுத்தவரை அவர் ஐம்பது வருடங்கள் கடந்து பின்னணி இசை நாயகனாக விளங்குகிறார்.
அவரை எப்படி உள்வாங்கிக் கொண்டீர்கள்?
அவர் ஒரு இசை மேதை, மேஸ்ட்ரோ, சிம்பொனி மன்னன் என்று எவ்வளவோ சொல்லலாம். அவர் அருகில் இருக்கும் போதே அந்த ஆர்மோனியப் பெட்டியில் அவரின் விரல்கள் எப்படி இசையமைக்கிறது, எப்படியெல்லாம் இசைக்குறிப்பை எழுதுகிறார் என்பதை அவரோடு இருந்த அந்த பத்து நாட்களும் ரசித்துக் கொண்டிருந்தோம் நானும் சுகிர்தனும். எங்களை அழைத்து படத்தின் குறித்த காட்சியமைப்பைக் கேட்பார், படத்தைப் போட்டுக் காட்டுமாறு கேட்பார். அதெல்லாம் அற்புதமான நாட்கள். இதெல்லாம் அந்தோனி தான் உள்வாங்கிக் கொண்டது. அந்தோனியார் பக்தர்கள் நாம், அவரே இப்படியொரு இசை மேதையை உள்வாங்கிக் கொண்டது எம் பாக்கியம்.
இளையராஜா இந்தப் படைப்பைப் பார்த்து விட்டுத் தன் கருத்தைப் பகிர்ந்து கொண்டாரா?
நல்ல நாள்யா வாங்க என்று தொடக்க நாளுக்கு அழைத்தார் சின்னச் சின்ன விஷயங்களில் சிரிப்பார், அவரின் முக பாவங்களில் இருந்தே அவருக்குப் பிடித்தது என்றே சொல்வேன். குறிப்பாகக் காட்சிகளுக்கு அவரின் இசை உயிர் கொடுத்தது.
இந்தியக் கலைஞர்கள் என்றாலும் இயல்பான ஈழத்து மொழி நடையை அவர்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். நம் அடையாளத் தமிழைக் காட்ட வேண்டும் என்ற சிந்தனை ஏன் வந்தது?
இந்தக் கதை எமது பிரதேசம் சார்ந்தது, அதனால் எம் அடையாளம் என்ன , உண்மைத்தன்மை என்ன என்பதை மறைத்து எடுக்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் தமிழை சினிமா நடைமுறைகளுக்கு ஏற்பவும், உலகத்தில் இருக்கும் எல்லாத் தமிழருக்கும் புரியும் மாதிரியாகவும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். அவ்வளவு தான். யாரையும் குறைத்து மதிப்பிடாமல் இன்னொரு பேச்சு வழக்கைக் குறைத்து மதிப்பிடாமல் எடுத்திருக்கிறோம். எல்லாப் பிரதேச வழக்கியலையும் நாம் மதிக்கிறோம். எல்லோருக்கும் புரியும் வகையில் கொடுக்க வேண்டும் என்ற எங்கள் எண்ணம் நிறைவேறியதை, இப்பட முன்னோட்டத்தைப் பார்த்த பலர் வழங்கிய பாராட்டில் இருந்து நாம் புரிந்து கொண்டோம்.
பேட்டி கண்டவர் : கானா பிரபா
09.03.2026





