“என் ஆசானுக்கும் வாசகர்களுக்கும்" என்ற முன்னுரையோடு எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தி பகிர்ந்த விடயங்களில் தன்னுடைய வாசிப்புப் பின்புலம் குறித்துப் பகிர்ந்தவர், தன்னுடைய எழுத்துலக ஆசானாக இருந்த போதிலும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஈழத்து அரசியல் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்றும் நேர்மை தான் இவரை ஒரு சமரசமற்ற படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது. இந்த மாதிரி ஒரு எழுத்தாளர் தன்னையும், தான் மதிப்போரையும் விமர்சனம் செய்து முன்னுரை கொடுப்பது ஒரு புது வாசிப்பனுபவம்.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு அணிந்துரை கொடுத்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்குச் சிறுகதைகள் குறித்த பார்வையை விட எழுத்தாளரின் வாக்குமூலம் தான் பிடித்துப் போகிறது.
“சாக்கொன்றில் கொஞ்சம் இறைச்சி
திண்ணையில் பரப்பி வைத்தனர், போயினர்
காலை பள்ளி போன பையன்"
என்ற ஈழத்துப் போரியல் வாழ்வின் அவலத்தைத் தன் முன்னுரையில் பகிர்ந்த பொ.கருணாமூர்த்தியின் அத்தகு பாங்கில் ஒரு சிறுகதை இந்தத் தொகுப்பில் இல்லையே என்ற ஆதங்கம் கொள்கிறார் இன்குலாப். அவர் வாழ்ந்து மடியும் வரை தன் இனத்துக்காகக் கடல் பிரிக்கா உணர்வு கொண்ட எழுத்துலகப் போராளி. ஆகவே அவரின் எதிர்பார்ப்பிலும் தப்பில்லை.
ஆனாலும் சிறுகதைகள் அனைத்தையும் படித்துத் தெளிந்த விமர்சகர் வழி அணிந்துரை பெற்றிருந்தால் ஒவ்வொரு கதையின் பரிமாணத்தை இன்னும் ஆழ அகலமாக ஒரு விமர்சனக் கண்ணாடி வழி தரிசித்திருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது.
பொ.கருணாகரமூர்த்தி அவர்களைச் சமூக வலைத்தளங்கள் வழி பல்லாண்டுகளாக அறிந்த வகையில் அவர் தன்னுடைய படைப்புகளுக்குச் “சொல் வேட்டையாடும்” பாங்கைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு சிறுகதைகளிலும் ஈழத்தில் பயன்படுத்தப்படும் தனித்துவமான மொழியாடலை அவர் கையாண்டிருக்கிறார்.
ஒரு காலத்தில் நம்மூர்களில் ஆங்காங்கே தெருவோரங்களில் காணப்பட்ட ஆவுரஞ்சிக் கல், மாடுகள் தம் சுனைப்பைக் கட்டுப்படுத்தத் தம் உடம்பைத் தேய்க்கும்.
அந்தக் கல்லைப் பொருத்தமாக ஒரு சிறுகதையின் முக்கிய உவமானமாகக் கொண்டு வருபவர் “ஆவுரஞ்சிகள்” என்ற தலைப்பையும் கச்சிதமாகக் கொடுக்கிறார். கதையைப் படித்து முடித்ததும் எழும் அதிர்வலைக்கு நிகராக நியாயம் கற்பிக்கிறது அந்தத் தலைப்பு.
ஈழத்து வாழ்வியலின் நனைவிடை தோய்தலைப் புலம் பெயர் இலக்கியமாக்கி விட்டார்கள் போன்ற எதிர்வினைகளை மறுதலிக்கும் போக்கில் ஒவ்வொரு சிறுகதைகளின் களமும், புலமும் வேறு. அவற்றில் பேசப்படும் சிக்கல்களும், அனுபவங்களும் பன்முகப்பட்டவை.
“கல் தோன்றி
மண்தோன்றாக் காலத்துக்
கதையெல்லாம் தெரியாது. ஆனால்..!
என் முன் தோன்றிய
மூத்த பழங்குடி
அப்புவும்
ஆச்சியும்
வாழ்ந்த மண். ஏன்
அப்புவின் அப்புவும்
ஆச்சியின் ஆச்சியும் கூட
அங்கேயே வாழ்ந்தனர். அதுக்கு முன்
இன்னும்
ஒன்றிரண்டு தலைமுறை
அப்பு ஆச்சிமார்
கூட
இருந்திருக்கலாம். நான் கூட
பிறந்து வளர்ந்தது
அங்கேதான்
பிறந்த நாடுதான்
பொன்னாடு
என்றெல்லாம் சொன்னேன்
மகனுக்கு. அவனும் மொழிகிறான்.
உண்மைதான் அப்பா
பிறந்த நாடுதான்
பொன்னாடு
பிறந்த நாட்டை விட்டு
வரமாட்டேன் இலங்கைக்கு”
இப்படி என் அன்பு நண்பர், கவிஞர் ஈழநாதன் எழுதிய கவிதை தான் நினைப்புக்கு வந்தது “ஒரு கிண்டர் கார்டன் குழந்தையின் ஆத்ம விசாரங்கள்" கதை படித்த போது.
புலம்பெயர் வாழ்வில் தலைமுறை இடைவெளி கொண்டு வரும் சவால்கள் என்பது அடுத்த தலைமுறையின் தொட்டிலில் தொடங்குகிறது. அது முதலில் கை வைப்பது நமது ஆன்மிக நம்பிக்கைகளைத் தான். இந்தக் கதை அனுபவத்தைப் புலம்பெயர் வாழ் பெற்றோர் கடப்பது அரிது.
இந்த மாதிரியான போக்கில் கர்மாவைப் பற்றிய சிந்தனையோட்டத்தில் இன்னொரு கதையான “அது வேறு சமூகம்" எழுதப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு சிறுகதைகளின் போக்கு ஒரு நடைச்சித்திரமாக எழுதப்பட்டிருக்கின்றது, அது சிறுகதை மரபிலிருந்து விலகியதான நிகழ்வின் பரிமாறலும் எழுத்தாளரின் எண்ணவோட்டமுமாக அமைந்திருக்கிறது.
“கடைசி பஸ்" இந்தச் சிறுகதையின் ஓட்டம், கதைமாந்தர்களது அவதியை அப்படியே நம்முள் ஏற்றுகிறது. அதே பெண்ணைக் காதலிக்கும் காலத்தில் பழகிய விதமும், அவள் வேறிடத்தில் மண முடித்த பின் சந்திக்கும் போதும் உரு மாறும் மனவியலை வெகு அழகாக எழுத்தாளர் சித்தரிக்கிறார்.
அந்த நாயகன் தன்னைத் தானே ஆற்றுப்படுத்தல் என்பதும் வெகு
சிறப்பாக கதை முடிவோட்டத்தில் நிகழ்த்தப்படுகிறது.
ஈழத்தமிழர் கனடாவிலோ, ஐரோப்பாவிலோ அன்றி அவுஸ்திரேலியாவிலோ வாழ்ந்தாலென்ன அவர்களது வேலைப் பண்பு என்பது மிகவும் பொதுமையாக இருக்கும்.
குறிப்பாக வேலைத்தளத்தில் night shift எனும் நள்ளிரவு தாண்டிய வேலையை நம்மவர் அதிகம் தேர்ந்தெடுப்பர். அதுவும் தனி ஆளாக ஒரு கடையை நிர்வகிக்கும் சூழலில் அந்த உலகமே வேறு. அந்த ஏகாந்தத்தில் தமிழ் சினிமாப் பாடல்களை உரக்க ஒலிபரப்பிக் கொண்டு வேலைப் பொழுதைக் கடத்துவர்.
எழுத்தாளர் அடிப்படையில் ஒரு சாஸ்திரிய சங்கீத ரசிகர், தன்னுடைய இசை ரசனையைச் சிறுகதைகளில் கையாள்வதைப் படிக்கும் போதே சபாஷ் போட வைக்கிறது.
அதுவும் இரு வேறு தளங்களில் எழுந்த சிறுகதைகள்.
ஒன்று “நிதிசால சுகமா” . இந்தக் கதையின் களம் ஈழத்து வாழ்வியலை மிகவும் யதார்த்தபூர்வமான எழுத்து நடையில் கண் முன்னே வைக்கிறது.
அத்தாங்கு, வலைவெடி போன்ற கலைச்சொற்களைத் திரட்டி அவற்றை இந்தச் சிறுகதையிலும் பொருத்தமாகப் புகுத்துகிறார்.
“தரையில் ஒரு நட்சத்திரம்" என்ற கதையில் இந்திய சாஸ்திரிய சங்கீதத்தை ரசிக்கும் ஒரு ஜெர்மன் வழிப்போக்கனின் பின்னணியில் அவன் ஒரு மகா கலைஞன் என்று அறிந்து கொள்ளும் தருணமாக அமைகிறது.
இதுவோர் உலகத்தரமான கதை, எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் எழுத்தாளர் கொடுத்த கதையின் ஜீவன் அப்படியே இருக்கும் உன்னதம் நிறைந்தது.
கீழைத்தேய ஆன்மிக நாட்டமும், மேலைத்தேய நாகரிக வாழ்வியலுமாக மிதக்கும் வாழ்வோட்டத்தைக் காட்டுகிறது கிழக்கு நோக்கி சில மேகங்கள் கதை.
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் நிகழும் கலாசார அதிர்வலைகளை, கிடுகுவேலிகளுக்குப் பின்னால் இருக்கும் அந்தரங்கங்களைப் பறை சாற்றும் கதை வடிவங்களில், ஆவுரஞ்சிகள் கதையைப் படிக்கும் போதே ஒரு கிலேசம் எழுகிறது. இப்படியும் நடக்குமா என்ற கேள்வியைக் கடந்து, நடைமுறைச் செய்திகளின் வழியே பாலியல் சீண்டல்களின் விபரீதங்களை அறியும் போது இந்தக் கதையின் மெய்த்தன்மை புலப்படுகிறது.
இன்னொரு பக்கம் ஒரு பெண்ணின் ஆழ்மன ஆசையை ஈழத்துப் பெண்ணிய எழுத்தாளர்களே கை வைக்காத ஒரு கதையோட்டத்தில் கொடுக்கிறார் “ஒரு தனித்த வனத்தில்” சிறுகதையில்.
“பர்வதங்களும் பாதாளங்களும்” கதை கூட தனித்த பெண்ணின் எண்ணவோட்டங்களும், அவளின் எதிர்காலம் நோக்கிய முடிவுமாகப் பயணிக்கிறது.
“பேதையல்ல பெண்” என்ற சிறுகதை கூட பெண்ணிய சிந்தனை கொண்டவர்கள் கைக் கொள்ளும் கரு. ஈழத்தமிழ்ச் சமூகத்தில், ஈழத்து வாழ்வியலோட்டத்தில் பாலியல் சீண்டலை ஆவுரஞ்சிகள் சிறுகதை காட்டும் பாங்கும், மறுபுறத்தில் புலம்பெயர் தேசத்தில் ஒரு பெண் அதை எதிர் நோக்கும் போது கொடுக்கும் எதிர்வினையாக “பேதையல்ல பெண்” சிறுகதை விளங்குகிறது,
பொ.கருணாகரமூர்த்தியின் புலம்பெயர் வாசமென்றாலென்ன, ஊர்வாசமென்றாலென்ன அந்தந்தக் களங்களில் பிறக்கும் உவமையும் வெகு அற்புதம். உதாரணத்துக்கு ‘கலைஞன்" சிறுகதையில்
“வானம் சிவந்துள்ள அந்திக் கருக்கலில் அல்லது நிலவின் பின்னணியில் வட்ட வடிவமாக அமைந்த ஸ்டேசனின் பாரிய கோபுரத்தைப் பார்த்தால், ஒரே நாளில் கிரீடமும், குடியுரிமையும் பறிக்கப்பட்டு வீதியில் விடப்பட்ட ஒரு மகாராணியைப் பார்ப்பது போல் மனது சோகம் கொள்ளும்".
என்று பகிர்வார்.
அதே கதையில் அப்படியே தாயகத்தைத் தொட்டு
“ஊரிலும் இப்படித்தான் ஒரு மிருதங்க வித்துவான், அடுப்புக்கால்களை நாய் நகர்த்துமளவு வறுமை”
இப்படியாகத் தருவார்.
பெண்களை ஏமாற்றிப் பாலியல் அடிமைகளாக வைத்திருக்கும் புலம்பெயர் வாழ்வின் இருண்ட பக்கத்தையும் பேசும்
“ஸ்பொன்சர் தாத்தாக்களும் ஏற்பாட்டு மாமாக்களும்" கதையை ஜீரணிக்கவே கஷ்டமாக இருக்கும். உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் அந்தக் கதையில், இந்த உள் நாட்டு யுத்தம் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களது வாழ்வியல் கோலத்தையும் சீரழித்து விட்டது என்ற நோக்கில் தன் ஆதங்கத்தையும் பதிந்து விடுகிறார் எழுத்தாளர்.
பொ.கருணாகரமூர்த்தியின் எழுத்தில் தீவிரமான கதைக் களத்தைக் காட்ட முடியும், அதே சமயம் நகைச்சுவையான எழுத்தோட்டமும் கொடுக்க முடியும் என்பதற்குக் கச்சிதமான உதாரணம் பறைகிறது “காலத்தில் காதல் செய்து" நகைச்சுவைப் படம் பார்த்தது போலவொரு உணர்வு.
பொ.கருணாகரமூர்த்தியின் “கிழக்கு நோக்கி சில மேகங்கள்' சிறுகதைத் தொகுதி படித்து முடித்த பின்னர், ஒரு தலைசிறந்த வாசகர், எழுத்தாளராகப் பிறப்பெடுக்கும் போது அவரின் எல்லை கடந்த சிந்தையும் களமும், ரசனையும், வர்ணணைகளுமாக வியாபித்துத் தமிழ் இலக்கியச் சூழலில் மிக முக்கியமானதோர் படைப்பாளியாக அடையாளப்படுத்துகிறது.
கானா பிரபா


0 comments:
Post a Comment