76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோடு பிறந்து வளர்ந்தவர்களோ அல்லது அதற்குச் சில ஆண்டுகள் முந்திப் பிறந்தவர்களோ இன்றும் தமது வாழ்வின் அங்கமாகக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
தன்னுடைய ஒலிபரப்பு நிறுத்தத்துக்குக் காரணமாக பெருகி வரும் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களை ஆதாரம் காட்டினாலும் அவை எந்த வகையில் பதிலீடாக இருக்கப் போகிறது என்ற கேள்விக்கான பதில் வெள்ளிடை மலை.
இன்று பிபிசி தமிழோசை மட்டுமல்ல பொதுவாகவே வானொலி ஊடகத்துறைக்கு இதுவொரு சவால் நிறைந்த காலம். அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு நாட் கணக்கில் திட்டமிடுதல், நாலைந்து மணி நேர ஒலிப் பயிற்சி, ஒத்திகையோடு ஒலிப்பதிவு. இதற்கெல்லாவற்றுக்கும் மேலாகத் தாமே சுய வானொலிப் பிரதியாக்கம் செய்து படைத்தல் இவையெல்லாவெற்றோடும் தான் வளர்த்தெடுக்கப்பட்டது இந்த வானொலிக்கலை.
24 மணி நேர வானொலிகள் ஆக்கம் பெற்ற காலத்தில் கூட இயன்றவரை சமரசமின்றியே இந்த வானொலிப் பண்பு பின்பற்றப்பட்டது.
ஆனால் இன்றுள்ள நிலை என்ன?
YouTube இல் இருந்து பாட்டெடுத்து ஒலிபரப்பினால் போதும் நிகழ்ச்சியை நிரப்பி விடலாம் என்ற நோக்கத்தில் புதியவர்கள் களமிறங்குகிறார்கள்.
என்னதான் மினக்கெட்டு ஒரு வானொலிப் படைப்பைத் தயாரித்தாலும் நேயர்களது ஆதரவு இல்லையே என்ற ஆதங்கத்தோடு பழையவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அல்லது அரைத்த மாவை அரைக்கும் நிலை. இன்று கொட்டிக் கிடக்கும் 24 மணி நேர, பகுதி நேர வானொலிகளில் இயங்கும் மிகச் சிலரே அல்லது மிகச் சில நிகழ்ச்சிகளே வானொலிப் படைப்பாக அரங்கேறுகின்றன.
சிரித்திரனின் முன்னர் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பைக் கிண்டலடித்துச் சொன்னது போல "பல்வேறு பெயர்களில் தமிழ்த் திரையிசைப் பாடல்கள்" என்ற நிலை தான் பெரும்பாலும்.
இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சூடான, உசுப்பேற்றும், எந்த விதமான தரவுப் பிழை உறுதிப்படாத தகவல்களை வைத்து ஒரு வானொலி நிகழ்ச்சியைத் தயாரிக்கலாம் என்று இன்னொரு சாரார்.
ஒரு ஆளுமையைப் பேட்டி எடுப்பதிலேயே முற் தயாரிப்பு ஏதுமின்று தன் பாட்டில் வண்டி கட்டி ஓடும் யுகம் தான் இன்றைய வானொலிப் பண்பில் விரவி நிற்கின்றது.
போதாக்குறைக்கு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் வளர்க்கிறேன் பேர்வழி என்று இரண்டும் கெட்டானாகவும் சில வானொலி முன்னுதாரணங்கள்.
பிபிசி தமிழோசை வழியாகக் கற்க வேண்டிய ஏராளம் வானொலிப் பண்புகள் இருந்திருக்கின்றன.
குறித்த நேரத்துக்குள்ளாக உலகை மேய்ந்து விட்டு வருதல், அந்தச் சில மணித் துளிகளிலேயே சொல்ல வேண்டிய செய்தியைக் கச்சிதமாகவும், தெளிவாகவும் தருதல்,
வானொலி நேயர்களோடு ஒரு உறவுப் பாலம் அமைத்தல்,
அரசியல் மட்டுமன்றி, விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம், சினிமா சார்ந்த பெட்டக நிகழ்ச்சிகள்,
நாடகம் மற்றும் மொழி பெயர்ப்பு வடிவங்கள் என்று பல்துறை சார்ந்த ஊடக வெளிப்பாட்டைக் கொண்டு வந்தது.
பிபிசி தமிழோசை எல்லாத் தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டது அதே வேளை எதிர்க்கருத்துகளையும் சார்பற்றுப் பகிர்ந்தது. அந்த நிலை அல்லது பண்பு இன்றுள்ள வானொலிகள் எவருக்கும் இல்லையெனலாம்.
பிபிசி தமிழோசை அகவை எழுபது கண்ட போது நான் எழுதிய பகிர்வு தொடர்ந்து
தம்பி! அந்த பிபிசியைத் திருப்பி விடு" அப்பாசொல்லுறார். மேசையில் படித்துக் கொண்டிருந்த என்னை உசுப்பிவிடப் பக்கத்தில் வெள்ளைவிரிப்பில் உடல் போர்த்தியிருந்த வானொலியின் காதைத் திருகி சிற்றலை வரிசையில் பிபிசியைப் பிடிக்கிறேன். தாயகத்தில் இருந்த காலம் வரைஇது எங்கள் வீட்டின் அறிவிக்கப்படாத கடமைகளில் ஒன்று. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் ஆகாசவாணியையும்அரசியல் தத்தெடுத்துக் கொள்ள லண்டன் பிபிசியும், பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும்தான் எங்களுக்கு அப்போது வானொலிக்காந்திகள். பெரும்பாலான வீடுகளின் திண்ணையில் றேடியோவை இருத்தி வைத்துச் சுற்றும் சூழக்காதைத் தீட்டிக் கொண்டிருக்கும் ஊர்ப்பெருசுகள் லண்டன் தமிழோசையின் முக்கிய தலைப்புச் செய்திகளில் இருந்து அடுத்த அரைமணி நேரம் புகையிலை உணர்த்தலில் இருந்து, வெங்காயநடுகை வரை எல்லா கிராமிய சமாச்சாரங்களையும் ஓரமாகப் போட்டு விட்டு வானொலியின் சொல்லை வேதம் கற்கும் மாணவன் போன்ற சிரத்தையோடுகாது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். தமிழோசை ஒலிபரப்பு முடிந்ததும் செய்தியின்பின்னணியில் தோரணையில் ஆளாளுக்குஅரசியலை அலச ஆரம்பிப்பார்கள். இது எங்களூரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததொன்று.
பிபிசி தமிழோசையின் நிலையக் குறியிசையை மாற்றிய போது கூட அது பொறுக்காது பொங்கினார்கள் நேயர்கள், அவ்வளவுக்கு அன்னியோன்னியம். அத்தோடு புலம்பெயர் 24 மணி நேரத் தமிழ் வானொலி என்றாலும் அதில் பிபிசி தமிழோசை இருக்க வேண்டும் என்பது எழுதி வைக்கப்படாத விதி.
பிபிசி தமிழோசை அகவை 70 கண்ட போது நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக, முன்னாள் இலங்கைஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிகழ்ச்சித்தயாரிப்பாளர்,BBC தமிழோசையின் நிகழ்ச்சிஅறிவிப்பாளர் திரு விமல் சொக்கநாதன் அவர்களை வானலையில் பகிர அழைத்தபோது அவர் வழங்கியசிறப்புப் பகிர்வை மீளப் பகிர்கிறேன் தொடர்ந்து.
வணக்கம், இலண்டனில் இருந்து விமல்சொக்கநாதன் பேசுகிறேன். தமிழ் கூறும் நல்லுலகில் இருந்து புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் மேற்குலக நாடுகளில் குடியேற ஆரம்பித்தகாலப்பகுதி 1980களின் நடுப்பகுதி என்று சொல்லலாம். ஆனாலும் அதற்குப்பலவருடங்களுக்கு முன்னரே உலகில் தமிழ் வானொலிகள் பல, அமெரிக்காவில் இருந்தும் பிலிப்பீன்ஸ் இல் இருந்தும் இங்கு பிரிட்டனில் இருந்தும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன. அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா தமிழ்வானொலி, சீனாவின் பீக்கிங் தமிழ் வானொலி, பிலிப்பீன்ஸின் மணிலா தமிழ் வானொலி ஆகியன இப்போது ஒலிபரப்பைத் தொடராவிட்டாலும் BBC என்ற எழுபது வயதுத் தமிழ் மூதாட்டி மட்டும் 1941 இல் இருந்து இன்றுவரை லண்டனில் இருந்து தமிழ் முழக்கம் செய்துகொண்டிருக்கிறாள். 1985 இற்குப் பிறகு தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து மேற்குநாடுகளுக்கும் அவுஸ்திரேலியா போன்றநாடுகளுக்கும் இலட்சக்கணக்கில் குடியேறஆரம்பித்தார்கள். குடியேறிய நாடுகளில் எல்லாம் ஆலயங்களும் தமிழ்க்கடைகளும் நிறுவப்பட்டமை போல புதிய பல வானொலி நிலையங்களும்புலம்பெயர் தமிழர்களால் நிறுவப்பட்டன. இத்தனை புதிய தமிழ் வானொலிகளின் இளம் ஒலிபரப்பாளர்களும் இலண்டன் BBC தமிழோசையின் மீது வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் தமிழோசையின் தனித்துவத்திற்கு ஒரு சான்று என்று சொல்லலாம். இரண்டாவது உலகப்போர் காலத்தில் தனது காலணித்துவ நாடுகளுக்கு அவரவர் மொழியிலேயே உலகச்செய்திகளை வழங்க வேண்டும், நாடு நாட்டுடன் நல்லுறவு பேசட்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுபிரிட்டிஷ் அரசாங்கம் 1940 களில் ஆரம்பித்தது BBC World Service பன்மொழி உலக ஒலிபரப்புச் சேவை. இதில் ஒன்றான தமிழ்மொழி ஒலிபரப்பு 1941 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்தது. வாரம் ஒரு தடவை வியாழக்கிழமைகளில் மட்டும் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த தமிழோசை தினசரி ஒலிபரப்பாகவிரிவுபடுத்தப்பட்ட போது நிரந்தரத் தயாரிப்பாளர் பதவிக்கு சங்கர் சங்கரமூர்த்தி என்ற ஒரு துடிப்பான அறிவிப்பாளர் தமிழ் நாடு அகில இந்திய வானொலியில் இருந்து கொண்டுவரப்பட்டுப் பதவியில் அமர்த்தப்பட்டார். ஆங்கிலத்தில் எழுதப்படும் BBC செய்திப்பிரதிகளை தமிழில் மொழிபெயர்க்கும் போது அவர் பயன்படுத்திய அழகு தமிழ்ச் சொற்கள் அவற்றை வான் அலைகளில் படிக்கும் போது கேட்கும் அவர் காட்டும் நெளிவு சுழிவுகள் செய்திகள் ஒரு திரைப்படத்தைப் போலகேட்போர் மனதைப் பதிய வைத்தன. இதனால் தமிழோசையை விரும்பிக் கேட்போர் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தது. பிரித்தானிய வெளியுறவு அமைச்சின் நிதியுதவியோடு நடத்தப்படும் BBC பன்மொழிச் சேவையில் ஒன்றான தமிழோசையை நேயர்கள் தெளிவாகக் கேட்கிறார்களா, அந்த நிகழ்ச்சியில் எவற்றையெல்லாம் ரசிக்கிறார்கள் போன்ற தகவல்களை BBC நிர்வாக அதிகாரிகள் நேயர்கள் அனுப்பும் கடிதங்களின் வாயிலாகஅறிந்துகொள்கிறார்கள். தமிழ்க்கடிதங்களை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்து அச்சிட்டுக் கொடுப்பதற்கு Listener research department என்ற ஒரு பிரிவு இயங்கி வந்தது. சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைமேதைகள் லண்டனுக்கு வரும்போது அவர்களை வெறுமனேபேட்டி மட்டும் கண்டு அனுப்பிவிடாமல் தானே சில பாடல்களை எழுதி அவர்களைக் கொண்டு பாடவைத்து ஒலிபரப்புவார் கவிஞரான சங்கர்சங்கரமூர்த்தி அவர்கள். "தேம்ஸ் நதிக்கரையில்இருந்து தேடிவரும் ஓசை தமிழோசை", "மகாராணி மெச்சும் ஒரு மாட்டுப்பொண்ணு டயானாக்கண்ணு" போன்ற பாடல்களை இவர் எழுதி சீர்காழிகோவிந்தராஜனும் அவர் புதல்வர் சிவசிதம்பரமும் எங்கள் BBC கலையகத்தில் பாடி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடல்கள். தமிழோசைத் தலைவர் சங்கர் சங்கரமூர்த்தி அவர்கள் தமிழோசைத் தலைவர் , தயாரிப்பாளர் என்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு.மகாதேவன், திருமதிஆனந்தி.சூரியப்பிரகாசம், திரு சம்பத் குமார்ஆகியோரும் தமிழோசையின் தலைமைப்பதவியில்பணியாற்றினார்கள். இப்போது இந்தப்பதவியில்இருப்பவர் திருமலை மணிவண்ணன் அவர்கள். செய்திகளை முந்தித் தருவது, செய்திகளைநடுநிலையாக வழங்குவது , உறுதிப்படுத்தப்படாதசெய்திகளை வழங்க மறுப்பது இவை BBC தமிழோசையின் அசைக்க முடியாத தூண்கள். உலகத்தமிழ் ஒலிபரப்புக்களில் BBC தமிழோசைஒரு சிகரம் என்று மதிக்கப்படுவதற்கும் எழுபதுஆண்டுகளாக அது வானலைகளில் நிலைத்துநிற்பதற்குமான ரகசியம் இது ஒன்று தான். BBC தமிழோசை வழங்கிய சிறப்புப் பெட்டகப்பகிர்வுதமிழோசைக்கு வயது 70 BBC தமிழோசையில் நிகழ்ச்சி அறிவிப்பாளராக இருந்தஅமரர் சுந்தா வீ.சுந்தரலிங்கம் அவர்கள் BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வி இருந்துஒலிப்பகிர்வாக வானொலி நிகழ்ச்சித்தயாரிப்பாளர், அறிவிப்பாளர் அமரர் "சுந்தா" வீ.சுந்தரலிங்கம் அவர்களின் மன ஓசையில் இருந்து லண்டனில் West Minister பாராளுமன்றத்திலேசில மாதங்கள் பயிற்சி பெறுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது தமிழோசையுடன் தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நிகழ்ச்சித்தயாரிப்பாளர் சங்கரண்ணாவைச் சந்தித்தபோது "நீங்கள் ஒலிபரப்பாளராக இருந்தீர்கள் எவ்வளவோ நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கின்றீர்கள். ஆகவே நான் இங்கு இரண்டு மூன்று நாடகங்களை வானொலிக்குத் தயாரிக்க ஏற்பாடு செய்திருக்கின்றேன். நீங்கள் அதில் பங்குகொண்டால் உதவியாக இருக்கும் வருவீர்களா" என்று கேட்டார். அதனை நான் ஏற்றுக் கொண்டு BBC தமிழோசையில் பங்குகொண்டேன். King Lear என்னும் ஷேக்ஸ்பியரின் நாடகத்தையும் Tempest என்ற நாடகத்தையும் சங்கர் தமிழில்தயாரித்தார், அதுவும் கவிதையாக. அதிலே முக்கியபாத்திரங்களைக் கொடுத்து என்னைக்கெளரவப்படுத்தினார். BBC தமிழோசையின் சங்கர்சங்கரமூர்த்தி அவர்கள் ஒத்தல்லோ நாடகத்தைத் தமிழில் தயாரித்து அதை சென்னையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதில் முக்கிய பாத்திரம் ஏற்றவர்களில் ஒருவர் பிரபல நாடக, திரைப்படக் கலைஞர் பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்துவிலகி நான் சென்னை சென்று தங்கியிருந்த காலத்தில் அப்போது BBC நிகழ்ச்சித்தயாரிப்பாளராக இருந்த சங்கரமூர்த்திஅவர்கள் கண்ணிலே சத்திரசிகிச்சை செய்ய வேண்டி விடுமுறையில் சென்ற போது BBC தமிழோசையில் ஒரு வருடமோ ஒன்றரை வருடமோ நிகழ்ச்சித்தயாரிப்பாளராக வரவேண்டும் என்ற அழைப்பின் பேரில் நான் லண்டன் சென்றேன். அப்பொழுது தமிழோசை நேயர்களை நேரடியாகச்சந்திக்க வேண்டும் என்று விரும்பி BBC ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. Meet the listeners என்பதே அதன் பெயர். சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருச்சி போன்ற முக்கிய நகரங்களிலெல்லாம் தமிழோசை நேயர்களைச் சந்திப்பதற்காகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தோம். சங்கரும் நானும் BBCஐச்சேர்ந்த Judy Marshall, Heather Bond, Kailash Pudhwar போன்றோரும் ஒவ்வொரு ஊராகச் சென்று தமிழோசை நேயர்களைச் சந்தித்தோம். நேயர்களின் அன்பு வெள்ளத்தில் BBC குடும்பமே திக்குமுக்காடிப் போனோம். BBC அதிகாரிகளுக்கு இதன் பின்னர் தான் தமிழோசை நேயர்களின்ஊக்கமும் உற்சாகமும் புரிந்தது. இதன் பயனாக நிகழ்ச்சி நேரம் 15 நிமிடத்திலிருந்து அரைமணிநேரமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்த தமிழோசை நிகழ்ச்சிவாரம் 5 நாட்களுக்கு மாற்றப்பட்டது. "தமிழோசை"என்ற தலைப்பைக் கேட்கும் பொழுதெல்லாம் தமிழ் ஒலிபரப்புக்கு இந்தப் பெயரைச் சூட்டிய சோ.சிவபாதசுந்தரனாரை வியக்காமல் இருக்க முடியாது. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்" என்று பாரதி எப்படித் தீர்க்க தரிசனத்துடன் பாடினானோ என்று நினைத்துக்கொள்வேன்! இப்படியாகத் தன் மன ஓசையில்பகிர்ந்து கொண்டார் அமரர் சுந்தா.வீ.சுந்தரலிங்கம் அவர்கள்.
எத்தனையோ ஜாம்பவான்களால் கட்டியிழுத்த இந்தத் தமிழோசை என்னும் தேர் இன்று தரிப்பிடத்தில் நிற்கிறது அது தந்த சேவையை மறவோம்.
0 comments:
Post a Comment