Pages

Wednesday, December 04, 2013

வலைப்பதிவு உலகில் நிறைந்த என் எட்டு ஆண்டுகள்

எட்டு ஆண்டுகளை எட்டிப்பிடித்து விட்டேன் வலைப்பதிவு உலகில். இத்தனை ஆண்டுகளாக எனக்குத் திருப்தியையும் நிறைவையும் மனதில் ஏற்படுத்திய விஷயங்களில், மிக முக்கியமாக வலைப்பதிவு அனுபவங்களைக் கொள்வேன். 

இந்த எட்டு ஆண்டுகளில் எதை எழுத விழைந்தாலும் அதை எழுத வேண்டுமா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நினைத்தே எழுதுவதால் தான் மாதத்துக்கு ஒரு பதிவு என்ற ரீதியில் தேறுகிறது. எந்த வித வலையுலக அரசியலிலும் இறங்கியதில்லை, அதில் நாட்டமும் இல்லை. ஆனாலும் அவ்வப்போது எழுதுவும் கருத்துக்களை வைத்து ஒவ்வொரு முகமாகத் தேடுபவர்களும் இருக்கிறார்கள். நமக்குப் பிடித்தவற்றைப் பேசுவதற்கும் செய்வதற்கும் கூட குழு அமைத்துக் கண்காணிக்கும் சமூக ஊடகப் பரப்பில் இது சவால் நிறைந்த விடயமும் கூட. ஆனால் எனக்குத் தெரியும், என் ஒத்த சிந்தனையுள்ள ஒரு வாசக நண்பர் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து எனக்கான ஆதரவுக்குரலாக இயங்கி வருவார் என்று.  அந்த நம்பிக்கையே என்னை இத்தனை ஆண்டு கால வலைப்பதிவு வாழ்க்கையில் நீடித்து நிலைக்க வைத்திருக்கிறது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வலைப்பதிவு உலகில் நான் காலடி எடுத்து வைக்கும் போது இருந்த சக வலைப்பதிவர்கள் ஏறக்குறையக் காணாமல் போய் விட்டார்கள். இன்னும் சிலர் கால மாற்றத்துக்கேற்ப ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று தாவிவிட்டார்கள். அங்கெல்லாம் நான் இருந்தாலும் என் தாய் வீடு இந்த வலைப்பதிவு உலகம் தான். அதனால் தான் என் மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற மூல வலைப்பதிவில் மாதாந்தம் ஒரு இடுகையேனும் இட்டு என் இருப்பைக் காட்டி வருகின்றேன். இந்த ஆண்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஒரு இடைவெளி இருந்த என் சக வலைப்பதிவான உலாத்தல் பதிவில் அதிக முனைப்போடு எழுதி வருகின்றேன்.  அத்தோடு கூடவே இருக்கு என் இசைச்சிலாகிப்புக்கும்,ஒலிப்பகிர்வுகளுக்குமென றேடியோஸ்பதி

எட்டு ஆண்டுகள் வெறும் ஆண்டுக் கணக்குத்தான் இதையும் விட இன்னும் நிறையப் பகிர வேண்டும் அது ஏதோவொரு வகையில் இன்னொருவருக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என்ற முனைப்பை அடுத்த சுற்றிலும் வைத்துக் கொள்வேன்.

நேசம் கலந்த நட்புடன்
அன்பன்
கானா பிரபா
http://www.kanapraba.com/



2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.
2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு
2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2009 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்
2010 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

 2011 ஆம்  ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

வலைப்பதிவு உலகில் என் ஏழு ஆண்டுகள் இருப்பு

 2012 ஆம்  ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

 2013 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகள் இவை


மின்சாரக் கனவுகள்


90 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளின் இரவுகள் குப்பி விளக்கிலும், பகலில் சூரிய விளக்கிலும் கழிந்த நாட்கள் அவை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சை எல்லாமே குப்பி விளக்கில் தான் படித்து முடித்தோம். ஆபிரகாம் லிங்கன் தெரு விளக்கில் படித்துப் பட்டம் பெற்றதற்கு நிகரான பெருமை அது. இன்றைக்குப் புலம்பெயர்ந்த சூழலில் மின்சாரம் ஒரு நிமிடம் நின்றாலே அதிசயமாக இருக்கும் சூழலிலும், என் வீட்டில் தேவையில்லாமல் மின் விளக்குகள் எரியாது, இந்த ஜாம்போத்தல் விளக்கு போதித்த பாடம் அது.


விஸ்வரூபமும் என் ரிஷிமூலமும்

"டீச்சர் இவன் ஒரு பயங்கரவாதி, எங்கள் நாட்டில் இருக்கும் எல்லோரையும் இவனின் சகோதரர்கள் அழிக்கிறார்கள்" குரல் வந்த திசையைப் பார்க்கிறேன், எங்களோடு கூட வந்த சிங்களப் பையன் லக்மால் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிச் சொல்லிகொண்டிருக்கிறான். எனக்கு அந்த இடத்தில் மரத்தில் கட்டிவிட்டுக் கட்டெறும்புகளை உடம்பெல்லாம் பரப்பிவிட்டது போல குறுகி நிற்கிறேன்.


டோண்டு சார்

ஏழு வருடங்களுக்கு முன்னர் வலைப்பதிவு உலகத்துக்கு வந்தபோது டோண்டு ராகவன் சார் மூலம்தான் இந்த இணையச்சூழலின் இன்னொரு பக்கத்தை அறிந்துகொண்டேன் அது மிக அதிர்ச்சிகரமானதும் படிப்பினையையும் என் வலைப்பதிவு உலகின் ஆரம்பகாலத்தியே கொடுத்தது என்றவகையில் அவரை என்னால் மறக்கமுடியாது. என்னுடைய ஆரம்பப்பதிவுகளில் ஒன்றில் தன் பின்னூட்டம் வழியாக அறிமுகமானார் கூடவே "உங்கள் படத்தை பார்த்தால் ஹிந்தி நடிகரும் நடிகை நூதன் அவர்களின் மகன் மோனிஷ் பெஹல் அவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்" என்று அவர் சொல்லவும் 







உதிரம் குடிக்கும் தேயிலைத் தோட்டம் (பரதேசியை முன்வைத்து)

  பிரிட்டிஷாரைக் கடந்து இன்று தனியார் மயமாக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்து வாழ்வியலும் ஒரே மாதிரித்தான். மலையகத்தமிழரைப் பொறுத்தவரை அவர்களுக்கான உறுதியான தலைமைத்துவம் இல்லாமை, சோரம் போகும் பிரதிநிதித்துவம் இவற்றால் ஆண்டாண்டுகாலமாக அவர்களின் நியாயமான வாழ்வுரிமையைத் தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். இன்றைக்குக்கு ஈழத்தின் மற்றைய பாகங்களில் இருக்கும் தமிழனும் இதே நிலையை நோக்கி மெல்ல மெல்ல நகர்கின்றான்.




வருசப்பிறப்பு வந்திட்டுது

புதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார்.


சித்தெறும்பு என்னை கடிக்குது



 "அண்ணை பொக்கற் பக்கம் நாலு கீறு டிசைன் போட்டு, கால் பக்கம் தொள தெளவெண்டு இருக்கோணும் என்ன" என்று ஊரிலுள்ள தையல்கடைக்காரருக்கும் நவ நாகரிகம் கற்றுக் கொடுத்தாச்சு. கோயில் திருவிழாவில் நாதஸ்வரக்காரரும் வடக்கு வீதிக்கு சுவாமி உலா வரும் போது ராகமிழுக்கிறார் அட அவர் வாசிக்கிறதும் "சின்ன ராசாவே சித்தெறும்பு என்னை கடிக்குது". கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே பாடலை ரசிக்கிறோம்.


யாழ்ப்பாண யாத்திரை

 வவுனியா பஸ் நிலையத்துக்கு வந்தாச்சு அங்கே வலப்பக்கமாக லைன் கட்டியிருக்கும் சிவப்புக் கலர் பஸ்கள் அரச பஸ்கள், இடப்பக்கம் இருப்பவை தனியார் பஸ்கள் என்று கைகாட்டிவிட்டு ஆட்டோக்காரர் சென்றுவிட்டார். வவுனியாச் சூரியன் விட்டேனா பார் என்று தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள் தொடர்ச்சியான பயணம், பசிக்களை வேறு.






ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி

 எங்கள் வீட்டில் மட்டுமல்ல அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பத்தலைவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது ஆகாசவாணி தான்.  "திருச்சீல விடு திருச்சீல விடு எண்டோண்ணை அவன் றேடியோவுக்குள்ளை திரிச்சீலையை (விளக்கு எரிக்கப்பயன்படும் துணி) விட்டுட்டான்" என்று அந்தக்கால அங்கதம் ஒன்று புழங்கியிருக்கிறது.



ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை

வகுப்பறையில் வட்ட வடிமாகக் கதிரைகளை அடுக்கிவிட்டு நடுவில் நின்று ஆசிரியை ஒவ்வொரு அடியாகப் பாட,  சுற்றிவர நின்று சொல்லிவைத்தாற்போல மாணவர் கூட்டம் பலமாக ஒலியெழுப்பிப் பாடும் சின்ன வகுப்புக் காலம் நினைவுக்கு வருகிறது. ஆடி மாதம் முதலாம் நாள் பிறக்கும் தமிழ் ஆடி மாதப்பிறப்பினை வரவேற்றுப் பாடுவோம் அப்போது.




தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்

தனிநாயகம் அடிகளாரது வாழ்க்கை என்பது அவர் சார்ந்த சமயப்பணியாகக் குறுகிய வட்டத்தோடு நின்றுவிடாது, தான் சார்ந்த தமிழ்மொழி சார்ந்த சமூகப் பணி கடந்து விரவியிருந்ததை அவரது வாழ்நாளில் எமக்களித்துவிட்டுப் போன சான்றுகள் மூலம் ஆதாரம் பகிர்கின்றன. தமிழாராய்ச்சி மாநாட்டை உலகளாவிய ரீதியிலே நடத்துவதற்கு முன்னோடியாக அமைந்து அதைச் செயற்படுத்தியவர். மேலைத்தேய, கீழைத் தேய நாடுகளுக்கெல்லாம் சென்று, தேடித் தேடி கடந்த நூற்றாண்டுகளில்  பதிந்த தமிழரது சுவடுகளை வெளிக்கொணர்ந்தார்.


கதிர்காமக் கந்தனிடம் போன கதை


கதிர்காமம் கோயிலுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை நிறைவேற்றிய திருப்தி மட்டும் மனதில் இருந்தது. எங்கள் அப்பாவின் சந்ததியுடன் "இப்படியெல்லாம் கதிர்காமம் இருந்ததாமே" என்ற செவிவழிச் செய்தியும் கூட மறந்து போய்விடுமோ. இருந்த இடங்கள் மட்டுமல்ல மட்டுமல்ல நினைவுகளின் சுவடுகளும் தொலைந்து போவதும் பெருங்கொடுமைதான்.






இடப்பெயர்வுகள் முற்றுப்புள்ளியல்ல,

 அப்போது வானொலிக் கலையகத்தில் இருந்து தாயக நடப்புகளை எடுத்து வரும்போது முதல் நாள் பேசியவர் காணாமல் போயிருப்பார், பின்னர்  அவர் இறந்த செய்தியை இன்னொருவர் எடுத்து வருவார். உடமைகளோடு இடம்பெயர்ந்த காலம் போய், ஒவ்வொரு ஷெல் அடிக்கும், விமானக் குண்டுவீச்சுக்கும் காணும் பக்கமெல்லாம் ஓடித் தப்ப முடிந்தோர் தப்பினார்கள். அந்த நேரத்தில் இடப்பெயர்வு என்பது நிமிடத்துளிக் கணக்கிலும் மாறிக் கொண்டிருந்தது.



செல்போன் கணக்கு

 Cisco networking முதல் வகுப்பில் பாடமெடுத்து விட்டு செயன்முறைக்கு ஆசிரியர் பணிக்கிறார். ஒவ்வொருத்தரும் Router ஐ நீண்ட நேரமாகக் கிண்டிக் கொண்டிருக்கிறோம். 
"அதிருக்கட்டும் முதலில் ஸ்விட்ச் ஐ போட்டீர்களா" என்று கேட்டார் ஆசிரியர்.

பிரச்சனையை பெரிதாகவே சிந்திக்கப் பழகிவிட்டோம் இப்போதெல்லாம்.
  


A Gun and A Ring - எங்கட கதை சொல்லும் சினிமா 

 யுத்தக்களங்களில் சுடுகுழல்கள் அணைந்திருக்கலாம், ஆனால் அவை நேரடியாகவும், உள ரீதியாகவும் ஏற்படுத்தி விட்ட வடுக்களைச் சுமந்து கொண்டுதான் இந்தத் தலைமுறை பயணப்படுகின்றது. இந்தப் படத்தில் சொன்ன ஆறு கதைகளைத் தாண்டி சொல்லப்படாத கதைகள் ஏராளம். அந்தக் கதைகளைச் சுமந்து திரிவோர் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். அந்தப் பதிவுகள் படமாக்கப்படும் போது நல்ல சினிமா மட்டுமல்ல போர் தின்ற சமூகத்தின் அவலத்தை உலக அரங்கில் கொண்டுவர ஏதுவாக இருக்கும். அதை லெனின் எம்.சிவம் குழுவினர் கச்சிதமாகச் செய்து காட்டிய அளவில், இதே தளத்தில் இயங்கும் படைப்பாளிகளும் கவனத்தில் கொள்ளவேண்டும். இன்னும் மிக முக்கியமாக, இந்தப் படத்தை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டாடவேண்டிய படைப்பும் கூட.

14 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துகள் பிரபா. எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதா! அடேங்கப்பா!

    இந்த வலைப்பயணத்தில் உங்களோடு நட்புணர்வில் கைகோர்த்து வருவது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பிரபா. நான் உங்களை என் குடும்பத்துள் ஒருவராகத் தான் உங்களை பாலோ பண்ணிய சமயத்தில் இருந்தே நினைக்கிறேன். பூர்வ ஜென்ம பந்தமோ என்னவோ. இன்னும் நிறைய எழுதி posterityக்கு புரிய வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது - திறமையும் நேர்சிந்தனையும் இருப்பதால்!

    amas32

    ReplyDelete
  3. வாங்க ராகவன்

    இன்னும் தொடர்வோம் ;-)

    ReplyDelete
  4. amas அம்மா உங்களைப் போன்ற நல்லுள்ளங்களைச் சம்பாதித்தது பெருமகிழ்ச்சி

    ReplyDelete
  5. தம்பி பிரபா!
    நேற்று, இலங்கை வைத்தியர் பதிவர் முருகானந்தன் அவர்கள் தன் தினக்குரல் பேட்டியில் தங்கள் பதிவுகள் பற்றி சிறப்பாகக் கூறியிருந்தார். எங்கள் ஈழப் பதிவர்களில் நளினமான எழுத்து உமது.
    இப்போ நீங்கள் அதிகம் எழுதுவதில்லை.நான் படித்தாலும் பின்னூட்டம் சிலவற்றிற்கு இடுவதில்லை.
    இனி நம் திண்டுக்கல் தனபாலண்ணர் போல் ஒரு குறிப்பிடுவது பற்றி யோசிக்கிறேன். 8 வருடம் ஒரு அக்கப்போருமின்றி பதிவுலகில் இருப்பது சாதனையே!
    தொடர்ந்து , ஊர் பற்றி எழுதுங்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கானா .. பல ஆண்டுகளாக உங்கட வாசகன் நான்!

    ReplyDelete
  7. வணக்கம்
    பிரபா (அண்ணா)

    வலையுலகில் கால்பதித்து இன்றுடன் 8ஆண்டுள் ஆகிவிட்டது உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்... மேலும் சிறப்பாக எழுத்துப்பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அடேயப்பா எட்டுவருடம் கடந்து இன்னும் தொடர்ந்து வருகிறீர்கள் என்பது மிக பெரிய சாதனைதான். வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

    ReplyDelete
  9. ம்னம் நிறைந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்துகளும் பிரபா!

    ReplyDelete
  10. யோகன் அண்ணா

    இனிமேல் அதிகம் எழுதுவேன் மிக்க நன்றி கூடவே வாருங்கள்

    ReplyDelete
  11. ஜே.கே

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  12. ரூபன்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. Avargal Unmaigal மிக்க நன்றி

    ReplyDelete
  14. நண்பரே, எமது சிறப்பான வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்களது எழுத்து பயணம்.உங்களின் மிக பெரிய வாசகன் - கணேஷ்

    ReplyDelete