Pages

Friday, November 15, 2019

ஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚



“டேய் இணுவில் !
இலாப நட்டக் கணக்கைக் காட்டு பாப்பம்?
பொட்டு, (திருநீற்றுக்) குறியோட வந்துட்டாங்கள் பார்”
“ஹேய் கிளிநொச்சி!
நீ என்ன மாடு பிடிக்கவே யாழ்ப்பாணம் வந்தனீ?”
பெடியள் விழுந்து புரட்டு சிரிப்பார்கள். நீண்ட A5 அளவு கணக்குக் கொப்பி ஶ்ரீ மாஸ்டரின் கையிலிருந்து பறந்து போய் இன்னொருவன் தலையில் விழும். மடத்துவாசல் பிள்ளையார் கோயிலில் கும்பிட்டுட்டு சந்தனப் பொட்டு, திருநீற்றுக் குறியோட நாங்களும், வன்னிப் பக்கமிருந்து இரவோடிரவாகப் பயணித்து வந்து படிக்கும் பெடியளும் என்று எல்லாத் திக்குகளிலிருந்தும் ஶ்ரீ மாஸ்டரின் வகுப்புக்கு வருவார்கள்.
கொடுத்த கணக்கு வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. மரச்சட்ட றூலரால் நல்ல சுவைக்கச் சுவைக்க அடி விழும்.
ஐ நோ ஐ நோ புரியாத புதிர் ரகுவரன் மாதிரி சிரிச்சுச் சிரிச்சுக் கொண்டே அடிப்பார். அந்த அடி நொந்தாலும் அடி விழ முன்னர் ஶ்ரீ மாஸ்டர் அடிச்ச கிண்டலை நினைச்சு அடியை வாங்கிக் கொண்டே சிரிப்போம்.
அதுவரை எங்களூர் இணுவிலில் அருட்செல்வம் மாஸ்டரின் வீட்டில் டியூஷனின் படித்துப் பழகிய கால்கள் பத்தாம் வகுப்பு முடிச்சு அடுத்து பல்கலைக்கழகப் பெரிய வகுப்புப் படிப்புப் படிக்க வேண்டுமென்று யாழ் நகரப் பகுதி டியூட்டறிகளுக்குப் படையெடுத்தன, அதில் என் கால்களும் அடங்கும். அப்படித்தான் ஶ்ரீ மாஸ்டரின் ரியூஷன் சென்டரும் அறிமுகமாயிற்று. படிக்கத் தேர்ந்தெடுத்தது வர்த்தகத் துறை வேறு
“ஶ்ரீ மாஸ்டர் என்று இளம் ஆசிரியர்
இப்போது கணக்கியல் பாடத்தில் கலக்குறாராம். நல்லூரடியில் இருக்கும் அவரின் வீட்டில் ரியூஷன் குடுக்கிறாராம்”
என்று நண்பன் கிரி சொன்னான். அவனே விசாரித்துப் பார்த்து விட்டு வந்து சொன்னான்
“அவரின் வீட்டில இடம் கிடைக்கிறது கஷ்டம்
மட்டுப்படுத்தப்பட்ட ஆட்களைத்தான் எடுப்பாராம் சரி நாங்கள் அவர் ரவுணில நடத்திற ரியூஷன் சென்ரருக்குப் போவம் அப்ப”
ஶ்ரீ மாஸ்டர் வீட்டில் ரியூசன் கொடுக்கும் போது ஒரு விதம் அங்கே வீட்டுக்காரர் இருப்பதால்
நல்ல பிள்ளையாக அடக்கி வாசிப்பார். ஆனால் CCA க்கு வந்து விட்டால் ஒரே கொட்டம் தான். இந்த இரண்டு வித ஶ்ரீ மாஸ்டரின் குணாதிசியத்தை இரண்டு இடத்திலும் படிக்கும் நண்பன் ஒருவன் துப்பறிந்து எங்களுக்குச் சொன்னான். ஆனால் கொடுத்த இலாப நட்டக் கணக்கைச் செய்யாவிட்டால் அடி பொது தான். தங்களுடைய வகுப்புப் பெண் பிள்ளைகளும் அடி வாங்கிய கதையை அந்நாள் ஶ்ரீ மாஸ்டரின் வீடடுக்குச் சென்று படித்த யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி, இந்நாள் என் மனைவி ஊர்மிளா கதை கதையாகச் சொல்லிச் சிரிப்பார்.
வெலிங்டன் தியேட்டர் சந்தி மிதப்பில் லிங்கன் கூல்பார் பக்கத்தில ஜென்டில் மேன், காதலன் படத்தில புதுசா வந்து கலக்கிற பிரபு தேவா எண்ட பெடியன் போடுற ஸ்டைலில் பக்கி ஜீன்ஸ் தைக்கிற விக்ரம் ரெய்லர்ஸ்
வெலிங்டன் சந்தியால் நேரா பிறவுண் றோட் போற அந்த வீதியில் மோட்டார் வாகன உதிரிப் பாகங்கள் விற்கும் கடைகள், மோட்டார் வாகனம் திருத்தும் கடைகளுக்கு மத்தியில் இருந்தது CCA.
யாழ் நகரத்தில் இருக்கும் அந்த ரியூஷன் சென்ரறில் மொத்தமாக அந்த வார இறுதியை அர்ப்பணித்து விட்டால் உலகம் தெரியாது, அந்த ஓலைக்கொட்டில் ரியூஷனில் பொருளியல், கணக்கியல், வர்த்தகம், இந்து நாகரிகம் என்று ஒரு றவுண்டு அடிச்சிட்டு முடிய பின்னேரம் ஏழு மணியாகும் வீடு வந்து சேர.
தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு காலப் பகுதி
மாலை ஆறு மணிக்கெல்லாம் யாழ்ப்பாண நகரப்பகுதி மயான அமைதியில் தன்னைப் போர்த்துக்கொண்டிருந்தது. நகரப்பகுதியில் அமைந்த கடைக்காரர் ஐந்து மணிக்கெல்லாம் பூட்டுப் போட்டு விடுவார்கள்.
இந்த இடத்தில் ஆறுமணிக்கும் சுத்துற கூட்டமென்றால் அது கண்டிப்பாக க.பொ.த உயர்தர பல்கலைக்கழகத் தேர்வுக்கு ரியூஷன் படிக்கிற கூட்டம் தான். ஶ்ரீ மாஸ்டரின் வர்த்தகத்துறைக்கான ரியூசன் வகுப்புகள் ஒரே நேரத்தில் முடிந்து கும்பல் கும்பலாக சைக்கிள் சகிதம் வெளிக்கிளம்பும்.
கணக்கியலுக்கு ஶ்ரீ மாஸ்டர், பொருளியலுக்கு வரதராஜன் சேர், அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் தேவராஜா மாஸ்டரிடம் வர்த்தக பாடம் படிச்சாலும் இங்கேயும் இன்னொரு வகுப்பு ரட்ணம் மாஸ்டரிடம், பிறகு பாலா மாஸ்டரிடம் இந்து நாகரிகம் இங்கேயும் இன்னொருத்தர் (பெயர் மறந்து விட்டது) என்று CCA ரியூசன் சென்டரே அழுகிடையாகக் கிடந்த காலமது.
ஒரு சிறு மனஸ்தாபத்தால் பொருளியல் படிப்பித்த வரதராஜன் மாஸ்டர் அவரின் மனைவியின் சகோதரர்களுடன் சேர்ந்து ஶ்ரீதர் தியேட்டருக்கு முன் பக்கம் பொருளியல் கல்லூரியை ஆரம்பித்தார். வரதராஜன் சேர் பற்றித் தனிப் பதிவே எழுதலாம், எழுதியும் இருக்கிறேன். இங்கே https://www.facebook.com/photo.php?fbid=10204547866481992&set=a.10200950943041154&type=3&sfns=mo
அப்போது வரதராஜன் மாஸ்டரோடு நாமும் பொருளியல் படிக்க முகாம் மாறினாலும் ஶ்ரீ மாஸ்டரின் ரியூஷனில் இருந்த அபிமானத்தால் வரதராஜன் மாஸ்டரின் மாணவன் உதயன் மாஸ்டர் அப்போது CCA இல் புதிய பொருளியல் ஆசிரியராக வந்த போது அவரிடமும் சம காலத்தில் படித்தோம்.
உதயன் மாஸ்டர் நடிகர் பிரசாந்தின் முக பாவம் முக்கால் பங்கு தோற்றம் இருப்பார். மேவி இழுத்த தலையோடு பகி ஜீன்ஸ் ஸ்டைல் மன்னன் ஆனால் சேர்ட் இவரைப் போட்டிருக்கிறதா இல்லை இவர் சேர்ட்டைப் போட்டிருக்கிறாரா என்னுமளவுக்கு அநியாயத்துக்கும் ஒல்லி. அந்த இருநூறு, முன்னூறு பேர் கொண்ட ரியூசனில் கத்திக் கத்தி நோட்ஸ் சொல்லுவார். அழுத்தம் திருத்தமாக எல்லோருக்கும்
கேட்க வேண்டும் என்று உச்சமாக இவர் கத்தும் போது இரண்டு கைகளின் விரல்களையும் இறுக மடக்கிக் கொண்டே எழும்பி இறங்குவார்.
“டேய் மனுசன் மாரித்தவக்கை மாதிரி கத்திக் கத்தியே வெடிக்கப் போகுது” எண்டு ராஜன் கிண்டலடிப்பான்.
அப்போது உதயன் மாஸ்டரின் பிள்ளையின் முதலாவது பிறந்த நாள் கொண்டாட்டம் பிகில் பட முதல் நாள் கொண்டாட்டம் போல அவர் வீடெல்ல ஒரே மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
சுருள் முடி கேசமும் பாதி நரைத்த மீசையுமாக கொமோர்ஸ் படிப்பிச்ச ரட்ணம் மாஸ்டர். CCA முகப்பில் ஒரு காகிதாதிகள் கடையும் வைத்திருந்தார். ரட்ணம் மாஸ்டரின் வர்த்தக பாட நோட்ஸ் முந்தின கிழமை தேவா மாஸ்டரிடம் படிச்சது அச்சுப் பிசகாமல் இருக்கும். ஏனென்றால் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அந்த நோட்ஸ் ஐ வாங்கி இவர் பகிர்வார் 😀
இவர்களுக்குள் கணக்கியல் ஶ்ரீ மாஸ்டர் ஏன் வித்தியாசம் என்றால் முன் சொன்னவர்களின் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியருக்குண்டான மரியாதை. இங்கோ தலை கீழ் கூடப் படிக்கும் ஒரு கெட்டிக்காரப் பெடியன் தோற்றத்தில் தான் இவரின் குணாதிசியம். சிங்கார வேலன் படத்தில் வந்த மீசை இல்லா பாடகர் மனோ போல இருப்பார். நடு வகிடு எடுத்த தலை முடி.
ஆளின் கண்ணைப் பார்த்தாலே குறும்பு கொப்பளிக்கும். ‪மரியாதையாகக் கதிரையில் இராமல் தொங்கி ஏறி வாங்கில் உட்கார்ந்து காலாட்டுவார்.‬ ஶ்ரீ மாஸ்டர் போலவே அவரின் அண்ணரின் முக ஜாடை. நல்லூர்த் திருவிழா நேரம் அவரை இவராக நினைத்து பல்பு வாங்கியிருக்கிறோம்.
ஶ்ரீ மாஸ்டரின் வகுப்பில் நிறையக் காதல்கள் ஓடிக் கொண்டிருந்தன. காதல்கள் என்றால் இங்கே கூடப் படித்த பெடியளைப் பெண்கள் காதலித்த கதைகள் தான்.
அப்போது நண்பன் பேரின்பனை அத்தியடிப் பெட்டை விழுந்து விழுந்து லவ் பண்ணினாள். வாசனை ஒருத்தி அவன் போகும் ரியூசன் கிளாஸ் எல்லாம் போய் தேடித் தேடிக் காதலித்தாள். இதெல்லாம் ஶ்ரீ மாஸ்டருக்குத் தெரியும். ஏனென்றால் மாணவர்களுக்குள் ஒரு ஒற்றர் படையையே வைத்திருந்தார். வகுப்புகள் முடிந்ததும் அவர்களோடு தான் கும்மாளம், கச்சேரி.
“கம்பசுக்குப் போக முன்னமே
நாண் பூட்டத் திரியுதுகள்”
கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே முணுமுணுத்தவாறு அந்த முன்னூறு பேர் கொண்ட வகுப்பில் இலாப நட்டக் கணக்கு, சமப்படுத்தல் கணக்கு, தொங்கல் கணக்கு எல்லாவற்றையும் எழுமாற்றாக மேய்ந்து கொண்டே
“என்ன வாசன் எப்பிடி இருக்கிறியள்”
என்ற கிண்டலோடு அங்கால் பக்கம் வாசனை சைற் அடித்துக் கொண்டிருக்கும் அவள் பக்கம் ஶ்ரீ மாஸ்டரின் கண் போகும்.
“எருமை இதென்ன கவிதை எல்லாம்
கணக்குக் கொப்பியில எழுதியிருக்கிறாய்” இதயம் முரளி வேஷம் போட்ட மாணவன் ஶ்ரீ மாஸ்டரிடம் வேண்டிக் கட்டுவான்.
ஆரிய குளம் சந்தியில் அருள் நங்கை ரீச்சரின் உயர் கலைக் கல்லூரியில் ஆர்ட்ஸ் படிக்கிற பிள்ளையள், நியூ மாஸ்டர்ஸ் இன்ஸ்ரிரியூட் இல்
மத்ஸ் படிக்கிறவை, இங்கால நியூ விக்டேர்ஸ் பக்கம் சயன்ஸ் படிக்கிற வேம்படி, லேடீஸ் கொலிஜ், ‪சுண்டுக்குளி, கொன்வென்ற்‬ பிள்ளையள் என்று எத்தனை சுற்றல், சுழட்டல், எறிதல் வேலை சைக்கிளில் உலா வரும் என் சகபாடிப் பெடியளுக்கு ஹிஹி எனக்கும். வணிக பாடம் படிக்கிற பெடியிடம்
சத்தீஸ் மாஸ்டரின் இரசாயனவியல் பாட வகுப்பு நேரம் இருக்கும். தவிர CCA இல் அடுக்கி வைக்கப்பட்ட சைக்கிள் கூட்டத்தில் ஒரு மூலையில் சைக்கிளைப் பாதி கிடத்தி விட்டுக் கூட்டமாக நின்று வாற போற ஹம்சாக்கள், ஆனந்திகளைப் பார்க்க வேணும்.
ஆனாலும் அந்த இக்கட்டான சூழலிலும் கல்வி ஒன்றே மூலதனம் என்று குப்பி விளக்கில் படித்துக் கொண்டிருப்போம்.
வாழ்ந்து கெட்ட அரண்மனை மாதிரி அந்தக் காலத்தில் பொருளியல் கிருஷ்ணானந்தன் சேர், ‪கணக்கியல்‬ வன்னியசிங்கம் சேர், இந்து நாகரிகம் காரை செ சுந்தரம்பிள்ளை சேர், தமிழ் குழந்தை சேர் என்று மூத்த அண்ணன்கள் படித்த அரண்மனை விக்னா ரியூசன் சென்ரர் (ஶ்ரீதர் தியேட்டர் கழிந்து ரயில்வே கடவை கடந்தால் வரும்) அதில் பிரபாகரன் சேர், கலாதரன் சேர் பிரபல ஆசிரியர்கள். அங்கும்
எட்டிப் பார்த்து விட்டு வந்த காலம் உண்டு.
CCA இல கொசப்புப் பெடியள் எல்லாம் வருவாங்கள் என்று விக்னா ரியூட்டறிப் பெடியள் கிண்டலடித்த காலம் போய் அந்தக் கொசப்புப் பெடியள் கம்பஸ் கிடைத்துப் போகும் போது ஆவென்று வாய் பிளந்து பார்த்த காலமது. சகபாடி அன்ரனி செய்யாத குழப்படி இல்லை அவனுக்கும் யாழ் பல்கலைக் கழகக் கதவு திறந்தது அவனுக்குக் கிடைத்தது உயர் புள்ளிங்கோ.
கடும் யுத்த காலமது. புதுவை இரத்தினதுரை, வாஞ்சிநாதன் என்று விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவினர் கல்லூரிகள், ரியூசன் சென்ரர் எல்லாம் வந்து போருக்கு வா என்று பிரச்சாரம் செய்வார்கள். அப்போது கூடப் போனவர்களும் உண்டு.
கேணல் கிட்டு இறந்த அன்று ரியூசனுக்குக்குப் போனால் வாசலில் வைத்துத் தான் செய்தி பறைகிறார்கள். அப்போது ஒரு சிறு நீளக் கரும்பலகை ஒன்றை எடுத்து வந்து வெளியில் வைத்து சோக்கட்டியால் கேணல் கிட்டுவுக்கு வீர வணக்க அஞ்சலியை நான் எழுதியது எப்பவும் மறக்காது.
இன்னொரு பக்கம் ஏப்ரல் ஃபூல் தினத்துக்கு,
ஶ்ரீ மாஸ்டரின் வகுப்பில் பெடியள் எல்லாம் கும்பல்ல கோவிந்தாவாக மை அடிச்சு ஆரோ ஒருத்தன் அதைப் போட்டுக் குடுத்து தமிழீழக் காவல்துறையிடம் அம்பிட்ட கதையும் இருக்கு.
விடியச் சாப்பாட்டோடு யாழ் நகருக்குள் அந்த ரியூசன் கொட்டிலே அடைக்கலம். இடையில் பக்கத்தில் இருக்கும் லிங்கன் கூல் பாரில் இரண்டு ரோல்ஸ், சர்பத் அல்லது நெல்லி கிறஸ்.
கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்து கிராமத்து ரியூசனில் படித்து வளர்ந்து பின் யாழ் நகரத்து ரியூசனில் அதுவரை அறிமுகமில்லாத யாழ் இந்து, சென் ஜோன்ஸ், சென்றல், வேம்படி, இந்து மகளிர், திருக்குடும்பக் கன்னியர் மடம் எல்லாம் புடை சூழப் படித்த காலமெல்லாம் ஏதோ நேரடியாகவே பல்கலைக்கழகத்தில் இருந்த உணர்வு.
அப்போது மின்சாரம் இல்லை, எப்ப ஷெல் வரும், தலைக்கு மேலால் பொம்மர் விமானம் வந்து குண்டு போடும் என்று நிச்சயமில்லாத நொடிகளுக்குள் தான் இந்த ரியூஷன் படிப்பு.
கத்திக் கத்தி நோட்ஸ் சொல்ல வேணும், ஒற்றி ஒற்றி அதை நாங்கள் எழுதிப் படிக்க வேணும்.
அப்போது நாம் கொடுக்கும் நூறு ரூபாவைத் தான் நாலாகப் பங்கிட வேண்டும். என்னதான் கேலி, கிண்டல் இருந்தாலும் படிப்புச் சொல்லிக் கொடுப்பதில் ஶ்ரீ மாஸ்டர் அந்தக் கண்ணியத்தைத் தவறவில்லை.
‪ரியூசன் வகுப்பின் கடைசி நாளன்று கண் கலங்கியவாறே, நா தழுதழுக்க ஶ்ரீ மாஸ்டர் எம்மை வாழ்த்தியதும் ஈரம் காயாமல் இருக்கின்றது.‬
‪இன்றைக்கு வாழ்க்கையை இவ்வளவு ஈசியாக, இயல்பாக வாழ ஶ்ரீ மாஸ்டரும் ஒரு காரணி.‬
தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அங்கு எஞ்சி நிற்கும் நண்பர்களிடம் ஶ்ரீ மாஸ்டரைப் பற்றிக் கேட்பேன்.
வெளிநாடு போய் விட்டாராம் என்ற வதந்தியில் இருந்து கொழும்பில் எங்கோ படிப்பிகிறாராம் என்றெல்லாம் சொல்வார்கள்.
நான் தான் இன்னமும் 25 வருடங்கள் பின் தங்கி இருக்கிறேனோ என்று நினைப்பதுண்டு.
இம்முறை தாயகத்துக்குப் போன போது என் வீட்டாரின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களுக்குள் ஶ்ரீ மாஸ்டரிடம் படித்த கணக்கியல் கொப்பியும் இருந்து பத்திரப்படுத்திக் கொண்டேன்.
யாழ் நகரப் பக்கம் போகும் போது அந்த CCA ரியூசன் சென்டர் இருந்த இடம் போய்ப் பார்த்து விட்டு ஒரு பெருமூச்சோடு கடப்பேன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று ஒரு நிலைத் தகவலைக் கண்டேன். நண்பர் தபேந்திரன் ஶ்ரீ மாஸ்டரைப் பற்றி குறிப்பிட்டு அவர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குத் தன் சொந்த நிலத்துக்கு இடம் மாறுகிறார் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் ஶ்ரீ மாஸ்டரை நிழல் படத்தில் பார்க்கிறேன்.
அடுத்த முறை யாழ்ப்பாணம் போகும் போது அவரைச் சந்திக்க வேணும். அப்போது நினைப்பிருந்தால் சொல்லுவார்
“டேய் இணுவில் !
பொட்டுக் குறியோட வந்துட்டாய் என்ன?”
கானா பிரபா
14.11.2019

No comments:

Post a Comment