Pages

Thursday, October 17, 2019

யாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️


“பொங்கை பார்
வாறான்...வாறான்
குத்துறான்...குத்துறான்....குத்துறான்
குத்தீட்டான்...”
இரண்டு கன்னங்களிலும் கை வைத்துக் கொண்டு தூரத்தே வானத்தைப் பார்த்துப் பேசுவது அப்போதெல்லாம் வழக்கமானதொரு நிகழ்வு. ஏன் நாளாந்த வேலை என்று கூடச் சொல்லலாம்.
“இங்கை தான் வாறன்
ஓடுங்கோ ஓடுங்கோ
பங்கருக்குள்ளை ஓடுங்கோ....”
வீட்டு முற்றத்திலோ அன்றில் பின் வளவிலோ வெட்டி வைத்திருக்கும் பதுங்கு குழிக்குள் ஓடி ஓளிய வேண்டும். காதைப் பொத்திக் கொண்டிருந்தால் அந்த அடைப்பை மீறியும் பேரிரைச்சல் கேட்கும். நிலம் ஒரு தடவை நில நடுக்கம் கண்டது போல அதிர்ந்து விட்டு ஓயும்.
ஊர் நாய்கள் எல்லாம் வாள் வாளென்று கத்தி அழும்.
“உங்காலிப் பக்கம் தான் எங்கேயோ
குண்டைப் பறிச்சிட்டான் போல”
சத்தம் வந்த திக்கைப் பார்த்துப் பேசி விட்டு விமான இரைச்சல் ஓய்ந்த பின்னர் மெல்லப் பதுங்கு குழியை விட்டு வெளியே வருவோம்.
வீதியில் பயணிக்கும் போது தலைக்கு மேலால் ஹெலிகொப்டர் வட்டமடித்தால் சைக்கிளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டு எங்கேனும் மதகுப் பக்கம் போய் ஓடி ஒளிய வேண்டும்.
இப்படித்தான் யாழ்ப்பாணத்துச் சனத்துக்கும் விமானத்துக்குமான தொடர்பு ஆரம்பித்தது.
“பொங்கை பார் பலாலியால போறான்”
என்று மேலே போகும் விமானத்தை ஒரு கொடும் சீவராசி போலவே பார்ப்போம்.
1986 ஆம் ஆண்டு அயலூரான தாவடியில் போட்ட முதல் விமானக் குண்டு வீச்சு அனுபவத்தில் இருந்து பத்தாண்டுகள் இம்மாதிரியான அனுபவங்களை நானும் என் தலைமுறையும் கண்டிருக்கும்.
அப்போதெல்லாம் இன்னொரு வேடிக்கையும் நடக்கும். ஹெலிகொப்டர் வழியாக மேலிருந்து துண்டுப் பிரசுரங்களை வீசுவார்கள்.
“பயங்கரவாதிகளின் இலக்குகளை ஶ்ரீலங்கா விமானப்படை இனம் கண்டுள்ளது. அவற்றின் மீது தாக்குதல் செய்யப் போகிறோம். உங்கள் ஒத்துழைப்பையும், மேலதிக தகவல்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்”
என்ற தொனியில் அந்தச் சிறு துண்டுப் பிரசுரங்கள் எழுதப்பட்டிருக்கும்.
ஹெலி போட்ட அந்தத் துண்டுப் பிரசுரம் வானத்தில் மிதந்து மிதந்து காற்றின் திசையில் அலைக்கழிக்கப்பட்டு நிலத்தில் வந்து சேருமிடத்தை விரட்டிக் கொண்டே போய் அந்த ஒற்றையை (notice) எடுப்பது ஏதோ சாதனை போல எங்களூர்ச் சனங்களுக்கு. அதை வாசித்து முடித்துக் கசக்கி எறிந்து விட்டுப் போவார்கள்.
இந்த மாதிரியானதொரு காலகட்டத்தில் இலங்கை அரசு தரை வழியான இராணுவ நடவடிக்கையை 1987 ஆம் ஆண்டு மே மாதம் ஒபரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் ஆரம்பித்து மெல்ல மெல்ல யாழ்ப்பாணக் குடா நாட்டின் பகுதிகளைப் பிடித்துக் கொண்டே வர மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க, எஞ்சிய சனம் இடம் பெயர்ந்து கொண்டிருந்தது.
அந்தச் சூழலில் ஜூன் 4 ஆம் திகதி, 1987 ஆம் ஆண்டு கார்த்திகேசு மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று காதைக் கிழிக்குமளவுக்குப் பேரொலி. எங்களின் தலைக்கு மிக அண்மித்ததாக கூட்டம் கூட்டமாக் விமானங்களின் அணி வகுப்பு வானத்தில்.
“ஐயோ போச்சு போச்சு”
என்று நடுங்கிக் கொண்டே தரையில் விழுகிறோம். ஆனால் ஒனறும் நடக்கவில்லைப் போல. உடம்பு நடுங்குகிறதே தவிர அப்படியே இருக்கிறது. விமான இரைச்சல் நம்மை விட்டுக் கடந்த சொற்ப நொடிகளில் மெல்ல மேலே பார்க்கிறோம். குட்டிக் குட்டிப் பாரசூட்டுகளாய்
வெள்ளைப் பொட்டலங்களாக ஏதோ போடப்படுகின்றன. சில மணி நேரத்தில் ஊரெல்லாம் கதை பரவி விட்டது இந்திய வானொலி புண்ணியத்தில். அது தான் “ஒபரேஷன் பூமாலை”
எங்கள் பக்கம் இந்திய அரசாங்கம் இருக்கிறது என்று முதலும் கடைசியுமாக மார் தட்டிய நிகழ்வு அது. அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இன்னொரு நாட்டின் பறப்புச் சட்ட விதிகளைப் புறந்தள்ளி மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை அந்த ஒபரேஷன் பூமாலை. விமானத்தில் இருந்து போடப்பட்ட பொட்டலங்களில் இருந்த தகரத்தில் அடைக்கப்பட்ட சமைத்த உணவுகளை அப்போது யாரும் சாப்பிட்டதாகத் தெரியவில்லை. ஆனால் தேடித் தேடிப் பிடித்து ஆசையாக வைத்துக் கொண்டார்கள் அந்த ஒபரேஷன் பூமாலை போட்ட உணவுப் பொதிகளை.
ஆனால் இப்படியெல்லாம் நடக்குமா என்று ஒவ்வொரு அரசியல் காய் நகர்த்தல்களும் தமிழருக்கு எதிராகவே மாறின. வட பகுதியின் தலைப் பட்டினம் யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலி இராணுவத் தளத்தில் இருந்து முன்னர் எப்படி இலங்கை விமானப்படை குண்டு போடும் விமானங்களைக் கிளப்பியதோ அதே விமானப்படைத் தளத்தில் இந்திய இராணுவத்தினர் அமைதிப்படை என்ற பெயரில் நிலை கொண்டு அப்போது என் அண்ணன் உட்பட ஏராளம் இளைஞர்களை அடைத்து வைத்த சித்திரவதை முகாமாக மாறியது. அங்கே போராளிகள் என்ற போர்வையில் பிடித்து அடைக்கப்பட்ட பெண்களுக்கான் வதை முகாமும் பக்கத்திலேயே இருந்த அனுபவங்களை முந்திய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். மூத்த பத்திரிகையாளர் கோபாலரத்தினம் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” நூலிலும் பலாலி இராணுவ முகாமில் தன் கொடிய நாட்களை எழுத்தில் வடித்திருக்கிறார். இவ்வாறு பலாலி விமானப் படைத்தளம் 33 வருடங்களாக (1986 - 2009) தமிழரைப் பொறுத்தவரை காவு எடுக்கும் யமதர்மசாலையாகவே இருந்தது.
அந்தக் காலத்தில் நான் கொழும்புப் பக்கம் வந்தால் மேலே பறக்கும் ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு யுத்த பூமியில் சுற்றிய ஹெலிகொப்டர் நினைவில் தலை முடியெல்லாம் குத்திட்டது போல உணர்வெல்லாம் வந்திருக்கிறது. அந்த் யுத்த பூமியை விட்டுக் கடந்த புலம்பெயர்ந்த குழந்தைகள் சாதாரண பயணிகள் விமானச் சத்தம் கேட்டு மேசைக்கு அடியில் ஓடி ஒளியும் கதையெல்லாம் உண்டு.
போர் நடந்த காலத்துக்கு முன்னர் Air Ceylon என்ற இலங்கை அரசின் விமான சேவையும் பின்னாளில் உபாலியின் தனியார் விமான சேவையும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக ஞாபகம். போர்க்காலத்திலும் தனியார் விமான சேவைகள் சில இயங்கின. Expo Air மற்றும் Lion Air போன்ற விமான சேவைகள் அப்போது பறப்பில் இருந்தன.
2004 ஆம் ஆண்டில் ஒரு நெருக்கடியான சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருவதற்கு விமானப் போக்குவரத்து ஒன்றையே நாடவேண்டிய சூழலில் முதன் முதலாக அந்த அனுபவத்தைச் சந்தித்தேன். Expo Air விமானம் மூலம் பயணம் செய்ய ஏற்பாடாகி விட்டது. யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில் என்னோடு சக பயணிகளுமாகத் தீவிர இராணுவச் சோதனைக்கு உள்ளாகி இராணுவத்தின் பஸ்ஸிலேயே பலாலி விமானத் தளம் போகிறோம். வழியெங்கும் தடுப்புச் சோதனைச் சாவடிகள். ஒவ்வொன்றாகக் கடந்து செல்லும் போது எங்களுக்கு ஒரு பெரிய சோதனை காத்திருக்கிறது என்று.
பலாலி இராணுவ விமானத் தளத்தை அண்மித்த இன்னொரு தடுப்பு நிலத்துக்குள் நுழைகிறது நாம் பயணித்த பஸ்.
படாரென்று ஒரு சத்தம். பஸ் பாதையை விட்டு விலகிப் போய் கவிழ்ந்து போய் கிடக்க, அந்த அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு
“ஐயோ ஐயோ” என்று பயணிகளின் கூக்குரல்.
நானும் கவிழ்ந்து போன அந்த பஸ்ஸுக்குள் வாயடைத்துப் போய் திக்கித்து இருக்கிறேன்.
பஸ்ஸில் இருந்து குத்தித்த ஒரு இராணுவச் சிப்பாயோடு அண்மித்த பக்கத்தில் கண்காணிப்பில் இருந்த இராணுவமும் வந்து சேர போட்டது போட்டபடி பஸ்ஸைச் சுற்றிச் சோதனையிடுகிறார்கள். புலிகள் தான் கிளைமோர் குண்டைக் கிண்டைப் போட்டிட்டினமோ என்று சனம் அந்தக் குறுகிய நேரத்தில் தீவிரப் புலனாய்வில் இறங்க, இராணுவச் சிப்பாய் ஒருவன் வந்து மெல்ல மெல்ல ஒவ்வொருவராக பஸ்ஸின் பின் பக்கக் கதவை உடைத்து இறங்கச் சொல்ல ஒவ்வொருவராக இறங்கினோம். பிறகு தான் தெரிந்தது தார் போடாத அந்த மண் சாலையில் இருந்து விலகி பஸ் வீதியோர நீண்ட பதுங்கு குழிக்குள் ஐக்கியமாகியிருப்பது.
இந்த அமளிக்குள் ஒரு கூத்து. கனடாவோ எங்கோ இருந்தோ வந்திருந்த ஒரு கிழவி தன்னுடைய கமராவை எடுத்து அந்தக் கவிழ்ந்த பஸ்ஸைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
“ஆச்சி படம் எடுக்கக் கூடாது
அங்கிட்டுப் போங்கோ” என்று ஒரு சிப்பாய் அரைகுறைத் தமிழில் சொன்னதை அசட்டை பண்ணிக் கொண்டே சிரித்துக் கொண்டு படம் எடுத்தார்.
அந்தச் சிப்பாய் முறைத்துப் பார்த்து விட்டுக் கிழவியின் கமராவைப் பறித்துக் கொண்டு போய் விட்டான்.
“விசர்க் கிழவி இடம் வலம் தெரியாமல் படமெடுக்குது” என்று சனம் திட்டித் தீர்த்தது.
இன்னொரு பஸ் வர பலாலி விமானத்தளத்துக்குப் போய் இன்னொரு சோதனைச் சாவடி கண்டு இன்னொரு சோதனையோடு விமானத்துக்குள் ஏறினோம்.
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமான அந்தக் குட்டி விமானப் பயணம் தட்டி வானில் பாழடைந்த தார் றோட்டில் யாழ் ரவுணுக்குப் போகும் அனுபவம் போல, காற்றடிக்கும் திசையெல்லாம் சுற்றிச் சுற்றிப் பெருங்குடல் சிறுகுடல் எல்லாம் ஆட ஆட திருகோணமலை கண்டு (திருக்கணாமலை என்று சிங்களத்தில் வேறு அறிவிப்பு) கொழும்பு வந்திறங்கினோம். அப்பாடா என்றது மனது.
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கும் தமிழகத்துக்குமான பயணம் ஏதோ பக்கத்து ஊருக்குப் போய் வருவது போலக் கடல் வழிப் பாதையால் சுலபப்பட்டது. புதுப்படங்கள் அப்போது இலங்கையில் சுடச் சுடத் திரையிடப்பட மாட்டாது என்பதால் படம் பார்க்க வல்வெட்டித்துறையில் இருந்து தமிழகத்தின் தூத்துக்குடி, இராமநாதபுரம் கடலோரப் பகுதிகளுக்கும் திருச்சிக்குமாக வெள்ளிக்கிழமை பயணித்து இரவுக் காட்சி படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு அடுத்த நாள் காலை மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பதுவது எண்பதுகளுக்கு முந்திய காலத்தில் சர்வ சாதாரணம். இங்கிருந்து லக்ஸ் சோப், ராணி சந்தன சோப், மற்றும் ஜப்பான் ரேடியோ போன்ற அப்போது இந்தியாவில் கிடைக்காத பொருட்களை வியாபார நிமித்தம் கொண்டு போவதும் அங்கிருந்து சேலை உள்ளிட்ட பொருட்களை யாழ்ப்பாணத்துக்குல் கொண்டு வருவதுமான கடல் வழி வர்த்தகப் போல்குவரத்தும் இருந்தது.
இம்முறை தாயகப் பயணத்தில் அண்ணாவுடன் இந்த விமானப் போக்குவரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அந்தக் காலத்தில் பலாலி விமான நிலையத்தினூடாக தந்தை செல்வாவின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த அரசியல் தலைவர்களைச் சந்தித்த அனுபவங்களைப் பேசினார். கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட கலையுலக நட்சத்திரங்கள், அறிஞர்கள் கூட இவ்வழியே வந்திருக்கிறார்கள் யாழ்ப்பாணத்துக்கு. அப்போது அம்மாவின் சிறிய தந்தை வீடடில் அவர்களின் சந்திப்புகளின் புகைப்படங்களை ஆவணமாக எடுத்து வந்திருக்கிறேன்.
இன்று ஒக்டோபர் 17, 2019 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்தின் பெயர் யாழ்ப்பாண நிலையமாகப் பெயர் மாற்றம் கண்டு இந்திய நகரங்களுக்கான போக்குவரத்து நடக்கப் போகிறது. இந்த விமானப் போக்குவரத்தின் மீதான விமர்சனங்களை ஒரு பக்கம் ஒதுக்கி விட்டுத் தாய்த் தமிழகத்துக்கும் நமக்குமான இடைவெளி சுருங்க வேண்டும், ‪விட்டுப் போன அந்த அழகிய பழைய பந்தம் இறுக வேண்டும்‬ என்பதே என் ஆதங்கம்.
கானா பிரபா
17.10.2019
மேலதிக வாசிப்புக்கு
Operation Poomalai
என் பழைய இடுகைகள்
இரை தேடும் இயந்திரக் கழுகுகள்
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை

No comments:

Post a Comment