Pages

Tuesday, September 30, 2008

அந்த நவராத்திரி நாட்கள்

"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயலட்டை வீடுகளில் சின்னனுகள் கத்திக் கத்திப் பாடமாக்கும் சத்தம் கேட்பது தான் நவராத்திரி வருவதற்கான முன்னோட்டம். ஒவ்வொரு ஆண்டு நவராத்திரிக்கும் முன் சொன்ன அடிகள் மாறாது பேச்சுப் போட்டி மனப்பாடம் இருக்கும் . அந்த சின்னப்பிள்ளைப் பருவத்தில் சுவாமிப் படத்துக்குச் சகலகலாவல்லி மாலை பாடினால் அவல் சுண்டல், கெளபி கிடைக்கும் என்பது தான் நவரத்திரி பற்றித் தெரிந்த ஒரே இலக்கணம் எமக்கு. துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களுக்கான பண்டிகை என்றாலும் "சரஸ்வதி பூசை" என்ற பொதுப் பெயரிலேயே இதனை அழைத்தது எம்மவர்கள் கல்விக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தாலோ என்னவோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது.

சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த அரிச்சுவடி ஏடுகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும். ( இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)
இன்று (02 ஓக்டேபர் 2006) சிட்னி முருகன் கோவிலில் நடந்த ஏடு தொடக்கல் ஒன்று)

ஒரு விஜயதசமி நாளில் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சோமாஸ்கந்தக் குருக்களிடம் என் அப்பாவும் அம்மாவும் அருச்சனை செய்து தம்பி வாத்தியார் என் கை விரலைப் பற்றிப் பரப்பியிருந்த நெற்குவியலைத் துழாவி ஆனா எழுத அடியெடுத்துக்கொடுத்தது சின்னதாக இன்னும் என் ஞாபகத்திரையில். ( குழப்படி செய்யாம ஆனா எழுதினா, கோவால் மாமா கடையில ஸ்ரார் ரொபி வாங்கித்தருவேன் - இது என் அம்மா). பின்னர் தம்பி வாத்தியார் தந்த அந்த ஆனா ஆவன்னா ஏட்டுச் சுவடி எமது சுவாமி அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அச்சு பதியாமல் ஆணியால் எழுதியது போல் அந்த எழுத்துக்கள் இருக்கின்றன.

பாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும். சிட்னி முருகன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மன் சிலை

பள்ளிக்கூடங்கள் தொடங்கி ஊர்க் குறிச்சி வைரவர் கோயில் வரைக்கும் சரஸ்வதி பூசைக் காலத்துக்குத் தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். எங்கள் அயல் வைரவர் கோயிலில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சுற்றுப்பக்க வீடுகளுக்கும், வசதி குறைந்த குடும்பங்களை ஒன்றாக இணைத்து ஒருபூசையுமாக ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொறு நாளும் அவல், சுண்டல் கெளபி என்று விதவிதமான பண்டங்கள், சில குடும்பங்கள் தங்கள் பவிசை (வெளிநாட்டுக் காசு) நைவேத்தியத்தில் காட்டுவார்கள். அவர்களில் படையலில் மோதகத்துக்குள் கற்கண்டும் கடிபடும்.

கார்த்திகேசு அண்ணற்றை பெடிச்சியளும் , அங்கால சிவலிங்க மாமா, திருச்செல்வண்ணையின்ர பெடிச்சியளும் தான் வைரவர் கோயிலின் ஆஸ்தான சகலகலா வல்லி மாலைப் பாட்டுக்காறர். கரும்பே, கலாப மயிலே என்ற வரிகள் வரும் போது முகத்தில் முறுவல் பூக்க "சகலகலா வல்லியே" என்று முந்திக்கொண்டே எல்லோரும் ஒரு சேரப் பாடி வரிகளை முடிப்போம். அவல் தின்னவேண்டும் என்ற அவா வேறு:-)விஜயதசமி நாளான்று நாலு நாலரை மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் பிள்ளையார் கோயிலடிப் பெடியளால் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் சோமஸ்கந்தக் குருக்கள் கையில் நீண்டதொரு வாள் போன்ற கத்தி கைமாறும். ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வாழைக் குத்தியின் நட்ட பாகத்தில் தன்கையில் இருக்கும் குங்குமத்தால் தடவி விடுவார். (மகிடாசுரனின் ரத்தமாம்). (சிட்னி சிறீ துர்க்கா தேவி கோவிலில் வீற்றிருக்கும் லட்சுமி, துர்க்கா, சரஸ்வதி விக்கிரகங்கள்(இடமிருந்து வலம்) )

சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே "வாணி விழா" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். இணுவில் கந்தசுவாமி கோயில் முன் றோட்டில இருந்த வாணி கல்வி நிலையம் என்ற ரியூட்டறி நிர்வாகி பாலா ஒவ்வொரு வாணி விழாவிற்கும் அருணா கோஷ்டி மெல்லிசைக் குழுவைக் கொண்டு வருவார்.
" எட உங்கற்றா பாலசுப்பிறமணியம் போலப் பாடுறான்" என்று அவர்களை வாய்பிளக்கப் பார்த்த காலம் அது. பாலா வெளிநாடு போன கையோட வாணி கல்வி நிலையம் எவரெஸ்ட் என்று மாறவும் அருணா கோஷ்டிக்கும் ஆப்பு.
என்னதான் சொல்லுங்கோ, அருட்செல்வம் மாஸ்டரின் ரியூட்டரியில் கொண்டாடும் வாணி விழா சோக்கானது எண்டு தான் சொல்லவேணும். ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகப் பதிவுகள் மிக அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்துக்கு ஒரு மாதம் முன்பே அருட்செல்வம் மாஸ்டர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார்.

ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. "விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா" என்று அறிவிப்பு அருட்செல்வம் மாஸ்டரின் மைக்கிலிருந்து வருகின்றது. திரண்டிருந்த மாணவத்தலைகளை விலக்கி அவள் போனபோது தான் அவள் அணிந்த ஆடை கண்ணை உறுத்தியது. கைமுட்ட நீட்டு சட்டையும், லோங்க்ஸ் போன்ற ஆடையும் கழுத்தில் சால்வை போன்ற வஸ்திரத்தோடு அவள் கடந்த போது பக்கத்திலிருந்த சிவபாலனை இடித்து "என்னடா உடுப்பிது" என்று அப்பாவி கோவிந்தனாகக் கேட்டதும், பிறகு அதுதான் எங்கள் நாட்டுக்குப் புதிதாய் இறக்குமதியான நாகரீகமான பஞ்சாபி, சுரித்தார் வகையறாக்கள் என்பதும் தெரிந்தது.

அடுத்த ஆண்டு வாணி விழாவில் கணக்கிலோ விஞ்ஞானத்திலோ அதிக புள்ளி பெற்று சுமித்திராவின் கடைக்கண் தரிசனம் தெரியவேண்டும் என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு
படித்ததும் (இதற்கு(ம்) போட்டியாகக் குமரனும் முகுந்தனும் வேறு)ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும் என் விடலைப் பருவத்தின் ஆட்டோகிராப் பக்கங்கள்.

பெரிய வகுப்புப் பெடியள் “போடியார் மாப்பிள்ளை” நாடகத்தின் பிரதியை எடுத்துக் காட்சிகளைக் கத்தரித்து நாடகம் போட்டதும், பாலா மாஸ்டரிடம் இந்து நாகரீகம் படித்த ஒரு கறுத்த அக்கா " எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்" பாடலை அழுதழுது பாடியதும் இன்னும் நினைப்பிருக்கு.

எங்கள் வகுப்புப் பெடியளும் தங்கள் பங்கிற்கு "விதுரன் கதை" நாடகம் போட ஆசைப்பட்டுக் கஷ்டப்பட்டு வளைத்து செய்த வில்லைத் தடியன் ஜெகன் குறும்புக்காக உடைத்துச் சதி செய்ததும் ஒரு சம்பவம்.
பெண்கள் வேலைக்குப் போகவேண்டுமா இல்லையா என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு " அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் " என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.

O/L படிக்கும் போது சகபாடி குபேரனின் குரலை முதலீடாக் வைத்து இசைகச்சேரி வைத்தும் அரவிந்தன் “அதோ மேக ஊர்வலம்” பாடி நான் அறிவிப்புச் செய்ததும் எமது அருட்செல்வம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா.

பள்ளிக்கூடங்களிப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இறுதியில் பெரிய வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் பங்கு போட்டு விஜயதசமி நாளைக் கொண்டாடுவார்கள். மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் அரைச் சாறி (Half Saree)கட்டுவதும் இந்த நாட்களில் தான். ரவிச்சந்திரனுடன் எமது வகுப்புப் பூசைக்காக ஈச்சம் பத்தை தேடியலைந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு காலம்.

எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது. எமது பாடசாலையின் மூன்றாம் மாடி சரஸ்வதி பூசைக்கான இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மாடிக்குப் போகும் இரண்டாம் மாடிப் படியோரமாக எமது வகுப்பு இருந்தது. காலையில் இரண்டுபாட ஆசிரியர்கள் லீவு. எம்மைத் தட்டிக்கேட்க ஆளில்லை. நானும் மஞ்சவனப்பதி கோயிலடி ராசனும் (இப்ப இவன் கனடாவிலையாம்) , வளர்மதி ரெக்ஸ்ரைல்ஸ் மதியாபரணத்தின்ர பெடியன் விக்கியும் ஒரு வாங்கினைப் ஒரமாகப் போட்டு வாற போற பொம்பிளைப் பிள்ளைகளை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம்.(வயசுக்கோளாறு). வழக்கம் போல ராசனின் வாய் சும்மா இருக்காமல் ஒருத்தியைப் பார்த்துக் கிண்டல் அடித்ததும் அவள் பழிப்புக் காட்டிக்கொண்டே விறுவிறுவென்று மாடிப் படியில் ஏறவும், முதல் நால் மழைவெள்ளம் தேங்கிய படிக்கட்டில் வழுக்கி அவள் விழவும், வெள்ளை சட்டை காக்கிச் சட்டையாகத் தொப்பமானதும், விழுந்தடித்துக்கொண்டே வாங்கினை உள்ளே போட்டு எதுவும் தெரியாதது மாதிரி இருந்ததும் கூட மறக்கமுடியுமா? (இது குறித்துப் புலனாய்ந்த மகேந்திரன் மாஸ்டரிடம் நாம் டோஸ் வாங்கியது மானப் பிரச்சனை கருதித் தணிக்கை செய்யப்படுகின்றது).

அதே ஆண்டு எங்கள் வகுப்பு லோகேந்திரன் ஆட்கள் நாடகம் போட்டார்கள். (சமூக நாடகமாம்) லோகேந்திரன் போட்ட பெண் வேடத்திற்கு எதிராக இதுவரை மானநஷ்டவழக்கு எதுவும் வரவில்லை. அந்த நேரம் சினிமாப் பாட்டுக்கள் பொதுமேடைகளில் ஒதுக்கப்பட்ட காலம் அது. விஜயதசமி மேடையில் "தென்னக்கீற்றில் தென்றல் வந்து மோதும் " என்ற எழுச்சிப் பாடலை ராஜசேகரும் இந்து மகளிர் கல்லூரியில் இருந்து இறக்குமதி செய்த பெண்ணுமாகப் புன்முறுவலோடு பாடவும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த கோகுலகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டுப் பாடல் முடியும் போது மேடையில் ஏறி ராஜசேகருக்கு மாலை போட்டதும் (செட்டப்போ தெரியேல்லை)
"இறங்குங்கடா மேடையை விட்டு" என்று உறுமியவாறே மகேந்திரன் மாஸ்டர் வந்ததும், அந்த விஜயதசமி நாட்களின் இறுதி அத்தியாயமாக அமைந்து விட்டது.


இவ்வாக்கம் Friday, September 29, 2006 அன்று பதியப்பட்டு,இரண்டு வருஷங்களின் பின் இன்று மீள் இடப்படுகின்றது.
மூலவிடுகையைப் பின்னூட்டங்களுடன் காண

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே!

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே!

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே!

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே!

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே!

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே!

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே!

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே!

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே!

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே!

சகலகலாவல்லி மாலை பாடல்கள் உதவி: தமிழ்மொழி.காம்

41 comments:

  1. ம்ம்ம் இப்படியெல்லாம் அனுபவித்துள்ளீர்களே..பொறாமையாக உள்ளது கானாஸ்

    ReplyDelete
  2. நினைவுகள் அழகாக உள்ளன... அப்பமே பள்ளியில் சைட் அடித்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கு பாருங்க...:)

    அரைச் சாறி என்டால் தாவணியைத் தானே சொல்றீயள்?

    ReplyDelete
  3. சிவா சின்னப்பொடி அண்ணருக்கு

    வெகு நாட்களாக உங்களோடு தனிமடலிலாவது பேசவேண்டும் என்றிருந்தேன். உங்கள் இணைப்புக்கு நன்றி. உங்கள் மின்னஞ்சலுக்கும் விபரமான மடல் ஒன்று இடுகின்றேன்.

    ReplyDelete
  4. //Thooya said...
    ம்ம்ம் இப்படியெல்லாம் அனுபவித்துள்ளீர்களே..பொறாமையாக உள்ளது கானாஸ்//

    தூய்ஸ்

    அதெல்லாம் ஒரு அழகிய காலம், மீண்டு(ம்) வருமா :(

    ReplyDelete
  5. // தமிழ் பிரியன் said...
    நினைவுகள் அழகாக உள்ளன... அப்பமே பள்ளியில் சைட் அடித்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கு பாருங்க...:)

    அரைச் சாறி என்டால் தாவணியைத் தானே சொல்றீயள்?//

    தல

    விளையும் பயிரை முளையில் தெரியும் ;)
    அரைச்சாறி தான் தாவணி, நம்மூரில் ஆரம்பத்தில் அரைச்சாறி என்று வழக்கில் இருந்து இப்போ ஹால்ப் சாறி ஆகிட்டுது.

    ReplyDelete
  6. வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும்//

    வேறை என்ன காரணம் ?
    உங்கட ஆக்கினை தாங்காமல்த் தான் எண்டு சொல்லுங்கப்பா.. :)

    ReplyDelete
  7. பிரபா,
    உங்க ஊர்கள் இணுவில், கொக்குவில் என்று "வில்" லில் முடிகிறதே அதன் பொருள் என்ன?
    பி.கு இது முன்னடியே படிச்சது. அதனால் நோ பின்னுட்டம் :-)

    ReplyDelete
  8. // கொழுவி said...
    வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும்//

    வேறை என்ன காரணம் ?
    உங்கட ஆக்கினை தாங்காமல்த் தான் எண்டு சொல்லுங்கப்பா.. :)//

    கொழுவி

    சில விஷயங்களைப் பட்டும் படாமலும் தான் சொல்லவேணும் கண்டியளோ ;)

    ReplyDelete
  9. பதிவு ஏற்கனவே படிச்சிருந்தாலும் திரும்ப படிக்கும் பொழுதும் மனதுக்குள்ள எங்கடை கூத்துகள் நினைவுக்கு வாறதால சுவாரஸ்யமாத்தான் இருக்கு....

    ReplyDelete
  10. அந்த நாளைல கடும் ஆள்தான் நீங்கள்...:)

    ReplyDelete
  11. மறக்க முடியுமா அண்ணன் நவராத்திரி நாட்களை...

    ReplyDelete
  12. \\
    "சரஸ்வதி பூசை" என்ற பொதுப் பெயரிலேயே இதனை அழைத்தது எம்மவர்கள் கல்விக்குக் கொடுத்த அதீத முக்கியத்துவத்தாலோ என்னவோ என்று இப்போது எண்ணத் தோன்றுகின்றது
    \\

    இருக்கலாம்...

    ReplyDelete
  13. \\
    சரஸ்வதி பூசைக்காலத்துக்குச் சில வாரம் முன்பே பள்ளிக்கூடங்களுக்கு மில்க்வைற் சோப் கனகராசாவின் கைங்கரியத்தால் அச்சடிக்கப்பட்ட சகலகலாவல்லி மாலைப் புத்தகங்களும் (பின் அட்டையில் நீம் சோப் விளம்பரம்), ஆனா ஆவன்னா அச்சடித்த அரிச்சுவடி ஏடுகளும் கட்டுக்கட்டாய் வந்துவிடும்.
    \\

    பிறகு பிறகு கிடைக்காமல் போய்விட்டது...

    ReplyDelete
  14. அதென்ன சிட்னி ஐயர் மாரெல்லாம் 'சைஸ்' பெரிசா இருக்கினம்...;)

    (எட்டு முழ வேட்டி காணாது போலகிடக்கு...)

    ReplyDelete
  15. // ramachandranusha(உஷா) said...

    பிரபா,
    உங்க ஊர்கள் இணுவில், கொக்குவில் என்று "வில்" லில் முடிகிறதே அதன் பொருள் என்ன?
    பி.கு இது முன்னடியே படிச்சது. அதனால் நோ பின்னுட்டம் :-)//

    உஷாக்கா

    வில் என்றால் சிறு குளம், முன்னே இங்கெல்லாம் குளங்கள் இருந்ததாகப் பேச்சு. இப்போது ஒரு குளமும் இந்த வில் என்று முடியும் ஊர்களில் இல்லை. ஆமா இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே உள்ளேன் போட்டுட்டீங்களே ;-)

    ReplyDelete
  16. இதற்கு முந்தய பின்னூட்டத்துக்கு பதிலாக...அதனை நீக்கிக விடவும் பிழைகள்இருக்கும் என்று நினைக்கிறேன்...

    \\
    சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே "வாணி விழா" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள்
    \\
    ரியூசன்களிலை நடக்கிற கொண்டாட்டங்களேதனி அண்ணன் பல நினைவுகளைகிளறி விட்டிருக்கிறியள்...

    ReplyDelete
  17. அழகிய புகைப்படங்க்ளோடு அருமையானதொரு நினைவுக்கால ஞாபகங்கள் பதிவு!

    நல்லா இருக்கு!

    எங்க இடங்களில் பள்ளிகளில் அட்மிஷன் போடுவதுதான் பெரும்பாலும் வழக்கம்! கோவில்கள் தாங்கள் சென்று வழிபட்டு அ ஆ இடும் வழக்க நான் கேள்விப்படாத ஒன்று

    அருமையான பதிவு!

    ReplyDelete
  18. //பாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும்//


    நானெல்லாம் சில டென்ஷன் சப்ஜெக்ட் புக்கெல்லாம் முதல் நாளே வைச்சிடுவேனாக்கும்! ( கணக்கு & அறிவியல்)

    ReplyDelete
  19. \\
    ஆனால் அவள் வாணி விழா வருமுன்பே வேறு காரணங்களுக்காக நிரு டியூசன் மாறியதும்
    \\

    நானே கேக்க வேணும் எண்டு இருந்தன் கொழுவி அண்ணன் கேட்டுட்டார்...:)

    ReplyDelete
  20. //ஆறாம் ஆண்டு வகுப்புப் படித்த காலம் அது. வாணி விழாவும் வந்தது. "விஞ்ஞானப் பாடம் அதிக புள்ளிகள் சுமித்திரா"///

    அதானே பார்த்தேன் பயபுள்ள அந்த வயசுலேயே நொம்ப ஆர்வமா பங்க்‌ஷனெல்லாம் பர்ஸ்ட் நிக்கிதுதேன்னு நினைச்சேன் :)))))))))

    ReplyDelete
  21. \\
    அந்த நேரம் சினிமாப் பாட்டுக்கள் பொதுமேடைகளில் ஒதுக்கப்பட்ட காலம் அது.
    \\

    அப்ப இது எந்த வருசங்கள், அண்ணன் எப்ப A/L எடுத்தனியள்...

    ReplyDelete
  22. //இது குறித்துப் புலனாய்ந்த மகேந்திரன் மாஸ்டரிடம் நாம் டோஸ் வாங்கியது மானப் பிரச்சனை கருதித் தணிக்கை செய்யப்படுகின்றது). //


    ஐ வாண்ட் டூ நோ திஸ் பார்ட் இன் டீடெயில்ல்ல்லு (ரகசியமா சொல்லியிருக்கேனே!)

    ReplyDelete
  23. \\என்ற பட்டிமன்றம் ஆரம்பித்துச் சூடு பிடித்த தறுவாயில் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு " அந்த உந்த கதையில்லை பெண்கள் வேலைக்குப் போககூடாது எண்டு தான் நான் சொல்லுவன் " என்று எதிர்த்தரப்பு வாதி குஞ்சன் தன் வாதத்திறமை(?)யைக் காட்டியதும் ஒரு வாணிவிழாவில் தான்.
    \\

    :)

    சூப்பரு...

    ReplyDelete
  24. //ஒரு வாங்கினைப் ஒரமாகப் போட்டு வாற போற பொம்பிளைப் பிள்ளைகளை விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தோம்.(//


    குட் !

    வெரிகுட்!

    ReplyDelete
  25. அழகான நினைவுகள் அண்ணன் இந்த நேரத்துல ஒரு விசயம் நான் பதிவு எழுத தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகிட்டுது...
    போன நவராத்திரி நாட்களில்தான் ஆரம்பித்திருந்தேன் அப்பவே மனசுக்குள்ள இருந்த எல்லாத்தையும் எழுதிவிட வேண்டும் என்கிற வெறில மனதுக்குள்ள இருந்த பலதை எழுதி வச்சிருந்தன் ஆனா அப்ப இருந்த சூழ்நிலையில பதிவாக்க முடியாமல் போட்டுது, திரும்ப பதிவாக்கலாம் எண்டு நினைச்சிருந்தன் எழுதி வச்ச பேப்பர்கள் இருக்கோ எண்டு பாக்க வேணும்...
    இருந்தால் பல விசயங்கள் நினைவுக்கு வரலாம் இல்லையெண்டால் பார்ப்போம்...

    ReplyDelete
  26. பகிர்வுக்கும் ஞாபகங்களை மீட்டதற்கும் நன்றிகள்...

    ReplyDelete
  27. உங்க ஊர்கள் இணுவில், கொக்குவில் என்று "வில்" லில் முடிகிறதே அதன் பொருள் என்ன//

    அங்கை இருக்கிற எல்லாரும் விஜய் ரசிகர்களாம் :)

    ReplyDelete
  28. தமிழன்

    இதெல்லாம் எண்பதுகளின் இறுதியும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் நடந்த நினைவுகள். உங்கட காலம் அடுத்த காலம் அதையும் சொல்லுங்கோவன். ஆவலோடு இருக்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)

    ReplyDelete
  29. கொழுவி

    இப்ப எதுக்கு விஜய்யை வம்புக்கு இழுக்கிறியள்?

    ReplyDelete
  30. ஆயில்ஸ்

    உங்க அனுபவம் மாதிரியே இருந்திருக்கும் இல்ல ;-)

    ரகசியமா ஒண்ணும் சொல்லமுடியாதுப்பா

    ReplyDelete
  31. இங்க ஒரு பின்னூட்டம் போட்டதா நினைச்சு அதுக்கு பதில் தேடி வந்தேன்.. அட அதை கூகிள் சேட்டில் இல்ல பதிஞ்சேன்னு இப்பத்தான் ஞாபகம் வருது :))

    ReplyDelete
  32. பிரபா, இந்த காலகட்டத்தில் நானும் யாழ்ப்பாணத்தில் இதே நாட்களை ரசித்தவன். யாழ் இந்துக்கல்லூரியிலும் இது மிக விமர்சனமாக நடைபெறும். ஆனால் அதைவிட ட்யூஷனில் நடைபெறும் கொண்டாட்டங்களில் தான் எமக்கு ஆர்வம் அதிகம்.

    நவாலியில் கொமர்ஸ் படிக்க சென்ற இடத்தில் அதே ஊரில் இருந்த ஒரு ஆசிரியரை கிண்டலடித்து தெய்வீகன் தலைமையில் நாம் போட்ட நாடகம் கடைசி நேரத்தில் த்டை செய்யப்பட்டது எம்மால் மறக்கமுடியாத ஒரு நினைவு

    அது சரி, போன கிழமை எம்மை ரேடியோஸ்பதியில் ஏமாற்றிவிட்டீர்களே????

    ReplyDelete
  33. ஆஹா என்ன அருமையான நினைவுகள். 88ஓ அல்லது 89ஓ தெரியவில்லை ஒரு சரஸ்வதிபூசை நாளன்று வடமராட்சியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்த்து ஞாபகம் இருக்கின்றது. ஒரு மாதம் சென்றபின்னர் மீண்டும் வீட்டுக்குவந்த போது ஊறப்போட்ட கடலை செடியாக முளைத்து நின்றது.

    ஆண்கள் பாடசாலையில் படித்தபடியால் சரஸ்வதிபூசை நிகழ்ச்சிகளில் அவ்வளவு சுவாரசியம் இல்லை. ரியூசனில் ஒரே ரணகளம் தான் அதிலும் அன்றைக்கென்று நம்ம வகுப்புப் பெண்கள் தாவணிபோட்ட தீபாவளிகளாக வருவார்கள். பார்க்க ரொம்ப அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள். கோஷ்டிகானமாக பக்திப்பாட்டுப்பாடி நம்மை அதிரவைப்பார்கள். மிருதங்கம் தபேலா வாசிக்கத் தெரிந்த பொடியள் பாடு கொண்டாட்டம்தான். அதெல்லாம் அழகிய பழைய காலங்கள் மீண்டும் வராது.

    ReplyDelete
  34. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இங்க ஒரு பின்னூட்டம் போட்டதா நினைச்சு அதுக்கு பதில் தேடி வந்தேன்.. அட அதை கூகிள் சேட்டில் இல்ல பதிஞ்சேன்னு இப்பத்தான் ஞாபகம் வருது :))//

    வாங்க முத்துலெட்சுமி

    ஆகா பின்னூட்டம்னு சாட்டிலேயே சொல்லீட்டீங்களா பலே பலே ;-)

    ReplyDelete
  35. //வந்தியத்தேவன் said...
    ஆஹா என்ன அருமையான நினைவுகள். //

    மிக்க நன்றி வந்தியத்தேவன், அதெல்லாம் ஒரு கலக்கல் காலமெல்லோ? பெரிய வசதிகளோ மின்சாரமோ இல்லாவிட்டாலும் சிறப்பாக இருந்தவை இந்த நாட்கள் இல்லையா?

    ReplyDelete
  36. //அருண்மொழிவர்மன் said...
    பிரபா, இந்த காலகட்டத்தில் நானும் யாழ்ப்பாணத்தில் இதே நாட்களை ரசித்தவன்.//

    வாருங்கள் அருண்மொழிவர்மன்

    உங்கள் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கும் நன்றி. பதிவிலும் ஒன்று தாருங்களேன்.

    றேடியோஸ்பதி ஒரு நாள் முன்னதாகவே இம்முறை வந்துவிட்டது ;-)

    ReplyDelete
  37. தல நீங்க ஒரு "ஜகதலப்பிரதாபன்" தெரியும் ஆனா இப்படி ஒரு "ஜகதலப்பிரதாபன்" இப்பதான் தெரியும் ;))

    \\பாடப்புத்தகங்களும் அப்பியாசக்கொப்பிகளும் முகப்பில் சந்தனக் குறி தடவி ஒன்பதாம் நாள் வீட்டு பூசையில் சாமியறையில் தவமிருக்கும்\\

    ;-))) நமக்கு சரியாக வராத பாடத்தை தான் அம்மாக்கிட்ட கொடுப்பேன்.

    அப்புறம் பதிவுல நிறைய டவுட்டு இருக்கு. மீண்டும் வரேன் ;)

    ReplyDelete
  38. வாங்க தல வாங்க

    எல்லாம் உங்க ராசி தான் ;-)

    ReplyDelete
  39. அழகிய மொழி நடை, அனைவைரையும் எளிதில் கவர்ந்திழுக்கும் சொல் ஓவியங்கள். எங்கள் ஊர் மண் வாசனை மாறாது வடித்திருக்கிறீர்கள். மிகவும் இனிமை. வாழ்க தமிழ். வளர்க உங்கள் பணி.

    ஒரு வேண்டுகோள்: அண்ணா: ''லவ் லேன்'' பற்றி ஏதாவது பதிவுகள் இருத்தால் பகிர முடியுமா?
    அன்புடன் கமல்.............

    ReplyDelete
  40. வணக்கம் கமல்

    மெல்பனில் இருந்து வந்திருக்கிறியள், சந்தோஷமா இருக்கு, மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

    லவ் லேன் எங்கட ஏரியா இல்லை
    ;-) பக்கத்து ஊர் தான்,

    ReplyDelete
  41. அழகான மறுபதிவு.. நன்றாக அசைபோட்டிருக்கிறிங்கள்..

    போகிறபோக்கில் 'தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்..' பாடலை ஞாபகப்படுத்தியதற்கும் நன்றிகள்..

    அந்தக்காலத்தையும்.. இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கிறேன்... ம்ஹீம்.. :(

    ReplyDelete