Pages

Saturday, June 27, 2026

எழுத்தாளர் செங்கை ஆழியான் புதல்வி, கவிதாயினி Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசா விண்ணேகினார்


ஈழத்தின் மூத்த எழுத்தாளர், என் எழுத்துலக ஆசான் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் மூத்த புதல்வி Dr. ரேணுகா பிரதீப்குமார் அவர்களின் பிரிவுச் செய்தி அறிந்து பெருந்துயர் கொள்கிறேன்.

செங்கை ஆழியான் அவர்களின் எழுத்து வழி ப்ரிய ரேக்கா என்ற ரேணுகா குறித்து அறிந்தவன், புலம் பெயர் சூழலில் அவரின் நேசத்துக்குரிய நட்புக் கிடைத்தது.

பல்லாண்டு இணைய நட்பு மறக்க முடியாத பல நினைவுகள்.


“தென்றல் வந்து என்னைத் தொடும்” பாடல் சிலாகிப்பை எழுதிய போது அவர் தன் ரசனையைப் பகிர்ந்ததை அடிக்கடி நினப்பூட்டுவேன்.

அவரின் “காத்திருக்கும் வண்ண மயில்” கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துப் பகிர்வு இப்படியாகப் பகிர்ந்திருந்தேன்.

கலைத்துறை போன்று இலக்கிய உலகில் நேரடி வாரிசுகள் களமிறங்கும் பண்பு நம் தமிழ்ச் சூழலில் அதிகம் நிகழ்ந்ததில்லை. அதுவும் ஈழத்து இலக்கியச் சூழலில் இத்தகைய போக்கை விரல் விட்டு எண்ணி விடலாம்.

பெருமதிப்புக்குரிய எங்கள் எழுத்துலக ஆசான் என்று போற்றக்கூடிய செங்கை ஆழியான் அவர்களது மூத்த புதல்வி “ரேக்கா” என்ற Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்களது கவிதைப்படைப்பான 

“காத்திருக்கும் வண்ண மயில்” அச்சு வாகனமேறுவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

இங்கே அவரை “ரேக்கா” என்று அடையாளப்படுத்துவதற்குக் காரணம் அவரின் தந்தையார் குணராசா அவர்கள் செல்லமாகத் தன் மகளை அழைப்பதைஅந்தக் காலத்து எழுத்துகளில் கூடப் படித்த ஞாபகம் மனதில் ஊறியிருக்கிறது.

ஈழத்தில் பிறந்த நம் காலத்துத் தலைமுறைக்கு இலக்கிய அரிச்சுவடியைக் கொடுத்தவர் செங்கை ஆழியான். அவர் எழுதி எழுதிச் சுடச்சுடப் பதிப்பில் வரும் சிறுகதைகள், நாவல்களைப் படித்த காலம் கடந்து அவரின் ஆரம்ப கால எழுத்துகளையும் மிச்சம் மீதி விடாமல் படித்து ரசித்தது ஒரு காலம். இன்று சம காலத்தில் அவரின் வாரிசின் கவிதைப் படைப்புகளை வாசிப்பதென்பது செங்கையாழியானின் இலக்கியப் பாரம்பரியத்தின் நீட்சியோடு நாமும் தொடரும் பாங்கைக் காட்டுகின்றது.

“காத்திருக்கும் வண்ண மயில்” அந்தக் கவித்துவமான தலைப்பே ஒரு அழகுணர்ச்சியை உண்டு பண்ணிவிடுகின்றது.

தான் எடுத்துக்கொண்ட கவிதைப் பணியிலும் சமூக நோக்கிலான சிந்தனைகளை நறுக்கென்று காட்டி நிற்கும் வகையில் முழுமையானதொரு கவிதாயினியாக அடையாளப்படுகிறார் ரேணுகா.

இன்மையின் இரு பக்கங்களைச் சிறப்பாக அடையாளப்படுத்தும்

“கதை சொல்லிப் பாட்டிகள் 

காணவில்லை இன்று

கதை கேட்காச் சந்ததிகள்

காலத்தின் பரிதாபம்”

வழியே நிஜத்தின் இரு பரிமாணங்களை நுட்பமாகக் காட்டுவது ஒரு சோறு பதமாக.

ஈழத்துச் சிறுகதை, நாவல் இலக்கியம் மற்றும் வரலாற்றுத் தேடலில் தடம் பதித்த மூத்த ஆளுமை செங்கை ஆழியான் அவர்களது மகள் Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசா கவிதைப் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணிப்பது அவரின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றது. 

“ரேக்கா” என்ற Dr. ரேணுகா பிரதீப்குமார் குணராசாவின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன் 🙏

கானா பிரபா

27.06.2026

No comments:

Post a Comment