Pages

Monday, April 24, 2023

ஈழத்து மூத்த படைப்பாளி குப்பிழான் ஐ.சண்முகன் விடை பெற்றார்


எங்கள் ஈழத்துச் சமூகத்தின் முது பெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்த செய்தி அறிந்து பேரதிர்ச்சியும், கவலையும் கொள்கிறோம். 

ஆகஸ்ட் 1, 1946 ஆம் ஆண்டு ஈழத்தின் குப்பிழான், சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த இவர் தன் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா வித்தியாசாலை, புன்னாலைக்கட்டுவன் மெ.மி.ஆங்கிலப்பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்று இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும் ஆளானார்.

உயர்தர வகுப்புகளில் பொருளியல், தமிழ் ஆகிய பாடங்களிலும், இடை நிலை வகுப்புகளில் சமூகக் கல்வி, சமய நெறி ஆகிய பாடங்களிலும் சேவையாற்றியவர்.

கலாபூஷணம் விருது, ஆளுநர் விருது, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சங்கச் சான்றோன் விருது உள்ளிட்ட விருது அங்கீகாரங்களைக் கொண்டவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும், பிரபஞ்ச சுருதி என்ற கவிதைத் தொகுதியையும், அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள் என்ற பத்தி எழுத்து நூலையும் வெளியிட்டுள்ளார். (ஜீவநதி பெப்ரவரி 2019)

இவரது சாதாரணங்களும் அசாதாரணங்களும் சிறுகதைத் தொகுப்பில் இவர் குறித்து எழுத்தாளர் சிலரது குறிப்புகள் குப்பிழான் ஐ.சண்முகனின் எழுத்தின் வீச்சின் பரிமாணத்தைக் காட்டும் கோடுகளாக,

எழுத்தாளர் குந்தவை 

இளைஞர்களின் மன அவசங்கள், அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக் காட்ட முடியாத சோகங்கள், எதிர்பார்ப்புகள் இவற்றில் அவர்களிடையே எழும் நடைமுறைக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை, இவற்றை அழகுணர்ச்சியுடன் சித்தரிக்கும்

கலைஞர்.

எழுத்தாளர் அ.யேசுராசா

இவரது பாத்திரங்கள் எழுத்தாளனின் எவ்வித தலையீடுமின்றி தங்களைத் தாங்களே இயக்க வைக்கின்றன.

கலையுலகின் நவீன திரைப்படங்களின் தாக்கத்தை சண்முகனின் பிற்பட்ட காலக் கதைகளில் காணலாம். 'பளிச்', பளிச்சென

சண்முகன் கதையை கடத்திச் செல்லும் பாணி அலாதியானது.

எழுத்தாளர் மு. புஸ்பராஜன்

சண்முகன் என்ற பெயர் குறிப்பிடப்படும் போதெல்லாம் இவரது அழகிய, அலாதியான அந்த நடை கூடவே எழுவதைத் தவிர்க்க முடியாது. இவர் கதைகளில் சங்கீதத்தின் இனிய ஓசை பல்வேறு விதங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் அசோகமித்திரன்

இன்ப வேதனையின் இழையொன்று எல்லாக் கதைகளிலும் தென்படுகிறது.

குப்பிழான் ஐ.சண்முகன் பேட்டி (பேட்டி கண்டவர் வெற்றி துஷ்யந்தன்) 

ஜீவநதி பெப்ரவரி 2019 (பக்கம் 59)

 https://noolaham.net/project/718/71733/71733.pdf

ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, பத்தி எழுத்துகள் என்று பன்முகப்பட்ட தளத்தில் தன் எழுத்துகளைத் தொடர்ந்து வந்தவர்.

வீடியோஸ்பதி வழியாக குப்பிழான் ஐ.சண்முகன் குறித்த குறு அறிமுகப் பகிர்வு

https://www.youtube.com/watch?v=y6OEZUWsYjs

No comments:

Post a Comment