Pages

Tuesday, February 11, 2020

ஈழத்தின் “கலைவளன்” ‪சிசு நாகேந்திரனுக்குப் பிரியாவிடை‬


அவுஸ்திரேலியாவில் நம்மிடையே வாழ்ந்து வந்த ஈழத்துக் கலைஞர் சிசு நாகேந்திரன் அவர்கள் தனது 99 வது வயதில் நேற்று பெப்ரவரி 10 ஆம் திகதி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். ‬

சிசு நாகேந்திரன் அவர்களது நினைவுப் பகிர்வை வழங்குகிறார் எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள்.

‪அவர் குறித்து எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் எழுதிய கட்டுரையை மீள் பகிர்கின்றேன்.‬

யாழ். நல்லூர் இவரது பூர்வீகம் எனச்சொல்லப்பட்டாலும், பிறந்தது கேகாலையில் 1921 ஆம் ஆண்டில். இவரது தந்தையார் தொழில் நிமித்தம் இப்பிரதேசத்தில் வாழ்ந்த காலத்தில் பிறந்த சிசு. நாகேந்திரன் அவர்களின் வாழ்வில் அவரது ஒன்பதாவது வயதில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
நாகேந்திரனின் தந்தையார் முற்றும் துறந்த துறவியாகி குடும்பத்தையும் உத்தியோகத்தையும் விட்டுவிட்டு, வட இந்தியா நோக்கி ஒரு சந்நியாசிகோலத்துடன் புறப்பட்டுவிட்டார். ஒன்பது வயது நாகேந்திரன், அருமைத்தாயாரினதும் அன்பு அண்ணனினதும் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.
தந்தையார் இந்தியா வடக்கு நோக்கிச்செல்லவும், தாயார் இலங்கை வடக்கு நோக்கி குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். அந்நாளைய அரிவரி தொடக்கம் லண்டன் மற்றிக்குலேஷன் வரையில் யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் ( இன்றைய பல்கலைக்கழகம்) படித்த நாகேந்திரன், பின்னர் யாழ். மத்திய கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவம் கற்று, London Chamber of Commerce உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றினார்.
1944 இல் மன்னார் அரசாங்க அதிபராக கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களிடம் தட்டச்சாளராக பணியாற்றும் அரச நியமனம் கிடைத்தது. பின்னர் கொழும்பில் அரச திணைக்களம் ஒன்றில் பணிபுரியும்போது கணக்காய்வாளராக பதவி உயர்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, 1979 இல் சேவையிலிருந்து ஓய்வுபெறும் வரையில் பல்வேறு திணைக்களங்களில் பணியாற்றியிருக்கிறார்.
நான்கு பிள்ளைகளின் தந்தை. ஒரு சாதாரண எழுதுவினைஞருக்குரிய ஊதியம். எளிமையான வாழ்க்கை. இவற்றுக்கு மத்தியில் பிள்ளைகளை படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு அவர்களை உயர்த்தி விட்டு, தமது தந்தையைப்போன்றே ஒரு துறவுக்கோலம் பூண்டு அமைதியாக தனது பணியைத்தொடருகிறார்.

தமது துறவு வாழ்க்கையை சமூகத்திற்கு பலவழிகளிலும் பயன்படும்விதமாக இவர் அமைத்துக்கொண்டிருப்பதுதான் அவரது சிறப்பு. அத்துடன் மற்றவர்களுக்கு முன்மாதிரியானதாகவும் திகழுகிறது.
அதனாலும் அவர் எமது நெஞ்சத்துக்கு நெருக்கமானவராகின்றார்.
இளமைக்காலத்தில் படிப்பில் படு சுட்டி எனப்பெயரெடுத்த இவர், மாணவர் தலைவராகவும் பல்துறை விளையாட்டு வீரராகவும் திகழ்ந்திருக்கிறார். உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், டெனிஸ், டேபிள் டெனிஸ் முதலானவற்றிலும் வல்லவராகியிருக்கிறார். அயராது இயங்கும் இவரது சூட்சுமும் இந்தப்பின்னணிகள்தான் என்பது எமக்குப்புரிகிறது.
இந்த முதிய வயதிலும் தினமும் காலையில் உடற்பயிற்சி தொடக்கம் யோகாசனம் வரையில் செய்வதை அவதானித்திருக்கின்றேன்.
இவரது கலை உலக வாழ்க்கையும் ஆரோக்கியமானது. தேடல் நிரம்பியது. கொழும்பில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலத்தில், ‘ராஜ் நகைச்சுவை நாடக மன்றம்’ இவரை உள்வாங்கியிருந்தமையால் இம்மன்றம் மேடையேற்றிய பல நாடகங்களில் தோன்றினார். யாழ்ப்பாணம் திரும்பியதும் அச்சுவேலி ராஜரட்ணத்துடன் இணைந்து அந்நாட்களில் பிரபல்யமாகியிருந்த ‘சக்கடத்தார்’ என்னும் நாடகத்தில் ஒரு பாத்திரமானார்.
1960 களில் நீர்கொழும்பில் வானொலிக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு வந்த ‘சாணா’ சண்முகநாதன், மத்தாப்பு, குதூகலம் முதலான வானொலி நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவுசெய்ய வந்தபோது சிசு. நாகேந்திரன் இணைந்து நடித்த சக்கடத்தார் நிகழ்வை பார்த்து ரசித்திருக்கின்றேன். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் வானொலிப்பெட்டி இல்லாவிட்டாலும் சக்கடத்தார் ஒலிபரப்பாகும் நேரம் அயல்வீட்டுக்குச் சென்றாவது கேட்டு ரசிப்பது எனது வழக்கம். இலங்கையில் ஒரு காலத்தில் சக்கடத்தார் தமிழ் நேயர்களிடம் நன்கு பிரபல்யம் பெற்றிருந்தார்.
இந்நாடகம் ஆயிரம் தடவைகளுக்கு மேல் மேடையேறியிருக்கும் என்பது நாகேந்திரனின் அபிப்பிராயம். யாழ்ப்பாணத்தில் கலைஞர்கள் தாசீசியஸ், குழந்தை சண்முகலிங்கம், திருநாவுக்கரசு (மருத்துவர். நந்தியின் சகோதரர்) ஆகியோருடனும் இணைந்து இயங்கியிருக்கிறார். ரகுநாதனின் நிர்மலா, வி. எஸ். துரைராஜா தயாரித்த குத்துவிளக்கு முதலான திரைப்படங்களிலும் தோன்றியிருக்கிறார்.
ஆச்சிக்குச்சொல்லாதை, வா கோட்டடிக்கு, கவலைப்படாதே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல, தொடாதே, அவமானம், ஊர் சிரிக்குது, அது அப்ப... இது இப்ப... முதலான பல நகைச்சுவை நாடகங்களிலும் நடித்திருக்கும் நாகேந்திரன், யாழ். திருநெல்வேலி நாடக அரங்கக்கல்லூரியினால் தயாரிக்கப்பட்ட வையத்துள் தெய்வம், கந்தன் கருணை, அன்னத்துக்கு அரோஹரா, கூடி விளையாடு பாப்பா, இனி என்ன கலியாணம், கவிஞர் அம்பியின் வேதாளம் சொன்ன கதை முதலானவற்றிலும் நடித்திருப்பதுடன், பொறுத்தது போதும், கோடை ஆகியவற்றின் மேடையேற்றத்தின்போது அரங்க நிர்மாணப்பணியையும் திறம்பட மேற்கொண்டிருக்கிறார்.
அந்நாட்களில் தமிழ் வானொலி நேயர்களின் விருப்பத்துக்குரிய நாடகங்களாகத் திகழ்ந்த சிறாப்பர் குடும்பம், லண்டன் கந்தையா முதலானவற்றிலும் நடித்திருக்கிறார்.
இங்கிலாந்திலும் சிறிது காலம் வாழ்ந்திருக்கும் இவர், அங்கு ‘களரி’ நாடகப்பள்ளியின் சார்பாக மேடையேறிய புதியதொரு வீடு, அபசுரம், எந்தையும் தாயும் முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கிறார்.
1994 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து விடைபெற்று அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த தருணத்தில் கலைஞர் தாசீசியஸ் உட்பட பலர் இவருக்கு அளித்த பிரிவுபசார வைபவத்தில் ‘கலைவளன்’ என்ற பட்டமளிக்கப்பட்டார்.
இவ்வாறு ஒரு நாடகக் கலைஞனாக தமது இருப்பை வெளிப்படுத்திக்கொண்டவர், அவுஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்த பின்னர் தன்னை ஒரு எழுத்தாளனாகவும் நிலைநிறுத்திக்கொண்டார்.
தான் இந்த கங்காருநாட்டில் ஒரு எழுத்தாளனாக மாறியதும் விந்தையான நிகழ்வுதான் என்று குறிப்பிட்டார். தமது பேத்திக்கு அந்தக்கால யாழ்ப்பாணம் எப்படி இருந்தது...? எனச்சொல்லிக்கொடுப்பதற்காக எழுதிய கட்டுரைகளே பின்னர் சிட்னியிலிருந்து வெளியாகும் கலப்பை இதழில் பிரசுரமானது என்றார். (கலப்பை இதழின் ஆசிரியர் - மருத்துவர் கேதீஸ்வரன்) குறிப்பிட்ட கட்டுரைகளே பின்னர் அதே பெயரில் தமிழகத்தில் நூலுருவாகி பலரதும் பாராட்டையும் விமர்சனங்களையும் பெற்றது.
இந்நூலுக்கு கிடைத்த வரவேற்பினால் உற்சாகமடைந்த சிசு. நாகேந்திரன், பிறந்த மண்ணும் புகலிடமும் என்னும் மற்றுமொரு கட்டுரைத் தொகுதியையும் வரவாக்கினார். இந்நூலை எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வெளியிட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த எட்டாவது எழுத்தாளர் விழாவிலும் பின்னர் மெல்பனில் நடந்த இலக்கிய ஒன்று கூடலிலும் விமர்சன அரங்கில் இந்நூல் இடம்பெற்றது.
நாடகக்கலைஞனாக அறிமுகமாகி எழுத்தாளனாக தன்னை வளர்த்துக் கொண்ட சிசு. நகேந்திரன், சிறந்த ஒளிப்படக்லைஞருமாவார். எமது சங்கத்தின் ஆஸ்தான ஒளிப்படக்கலைஞர் பதவியும் இவருக்குத்தரப்பட்டிருந்தது.
சில வருடங்களுக்கு முன்னர் ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய சில உடற்பயிற்சிகள் பற்றிய இவரது பயிற்சியும் காட்சியும் இடம்பெற்ற இறுவட்டையும் வெளியிட்டார்.
அவுஸ்திரேலியாவில் எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தில் மட்டுமல்ல, விக்ரோரியா ஈழத் தமிழ்ச்சங்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றிலும் சாக்குப்போக்குச் சொல்லாத அர்ப்பணிப்புணர்வுடன் இதயசுத்தியோடு இயங்கும் இந்த உலகம் சுற்றிய இளைஞர், தற்பொழுது முதுமை தரும் சில உபாதைகளினால் மெல்பனில் ஒரு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பராமரிக்கப்படுகிறார்.
அவர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை எமது இலக்கிய நண்பர் எழுத்தாளர் ஆவூரான் சந்திரன் மூலம் கேட்டறிந்து , எமது சங்கத்தின் உறுப்பினர்கள் சிலரும் கலை இலக்கியவாதிகளும் சென்று பார்த்தோம்.
எழுந்து நடமாடிக்கொண்டே எமது சங்கத்தின் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என்ற தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார். அவருடைய நீண்ட நாள் உழைப்பில் தயாரான ஒரு தமிழ் அகராதி கொழும்பில் அச்சாகிறது.
அதன் இரண்டாம் பாகத்தையும் மருத்துவமனையிலிருந்து அவர் எழுதிக்கொண்டிருக்கிறார்.
கடந்த (2014) ஆண்டு அவரது மனைவி சிட்னியில் காலமாகிவிட்டார். ஆனால், அவரை அங்கு பயணிக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை. அவரது உடல்நிலைதான் அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
எனினும் இன்றைய நவீன உலகம் அவரை மனைவியின் இறுதிச்சடங்குகளை ஸ்கைப் வழியாக பார்ப்பதற்கு வசதி செய்துகொடுத்தது.
வாழ்க்கையில் நாம் கடக்கவேண்டிய காலத்தை கலைவளன் சிசு. நாகேந்திரன் கடந்து செல்கிறார். ஆனால், சோம்பிக்கிடக்காமல் இயங்கிக்கொண்டே அவர் கடப்பதுதான் எமக்கெல்லாம் முன்மாதிரியானது.
எனக்கு அவரைப்பார்க்கும்தோறும் மகாகவி பாரதியின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வரும்.
" தேடிச்சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள்பேசி - மனம்
வாடித்துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ "
அவுஸ்திரேலியா ஏழாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் (2007 இல்) இவரது சேவைகளை பாராட்டி கௌரவித்து விருது வழங்கினோம். ஞானம் இதழ் இவரை அட்டைப்பட அதிதியாக கௌரவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டில் சிட்னியில் அவுஸ்திரேலியா கம்பன் கழகம் இவரது சேவைகளைப்பாராட்டி மாருதி விருது வழங்கி கௌரவித்து தன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டது.
கலை, இலக்கியம் மற்றும் சமூகப்பணிகளில் சகலராலும் நேசிக்கப்படும் கலைவளன் சிசு. நாகேந்திரன் விதந்து போற்றுதலுக்குரிய பண்பாளர். முன்மாதிரியானவர்.

No comments:

Post a Comment