Pages

Monday, March 04, 2019

உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) வென்ற யசோதை செல்வகுமாரனுடன் நேரடிச் சந்திப்பு



 உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக சிட்னியில் வாழும் ஈழத் தமிழ்ப் பெண் திருமதி யசோதை செல்வகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலையகத்துக்கு வந்து நீண்டதொரு பேட்டியை வழங்கிச் சிறப்பித்தார்.
அந்தப் பேட்டியைக் கேட்க
இந்த நேரடிப் பேட்டியின் முடிவில் நமது சமூக வானொலியில் இவ்வாறானதொரு நேர்காணலைக் கொடுக்கத் தனக்களித்த சந்தர்ப்பத்துக்கும் நன்றி பகிர்ந்ததோடு தனது Twitter பக்கத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வானொலிப் பேட்டியை ஒழுங்கு செய்த எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் திரு ஈசன் (செல்லையா கேதீசன்) அவர்களுக்கும் மிக்க நன்றி.
இந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்ட ஆழமான, சிந்திக்கத் தூண்டும் கருத்துகளில் இரண்டு மிக முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டும்.
மாணவருக்கான கல்வியறிவைத் தாண்டி மேலதிக வெளித் தகமைகள் (Extracurricular activities) மற்றும் தலைமைப் பண்பு மிக அவசியமானது என்று வலியுறுத்தினார்.
கூடவே அவுஸ்திரேலியாவில் குறிப்பாக இங்கு குடியேறிய ஆசிய நாட்டவர் பின்பற்றும் பாடசாலைகள் மீதான தரப்படுத்தலை அவர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும், எல்லாப் பாடசாலைகளுமே திறன் மிகு ஆசிரியர் சமூகத்தோடே இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்
மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது அவுஸ்திரேலியாவின் கல்வித் தரம் குன்றியது போன்றதொரு மாயை தவறானது என்றும் அதற்கு முன்னுதாரணமாக கடந்த ஆண்டுகளிலும் இந்த ஆண்டும் உலகின் முதல் பத்து தலை சிறந்த ஆசிரியர்களில் அவுஸ்திரேலியர்கள் இடம் பிடித்ததைச் சுட்டிக் காட்டினார்.
யசோதை அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் ( Rooty Hill High School) வரலாறு, சமூகமும் கலாசாரமும், புவியியல் பாடங்களை கற்பிக்கும் ஓர் ஆசிரியர்.
இக் கல்லூரியில் கல்விகற்கும் 80வீதமான மாணவர்கள் அகதிகளாகவும், புலம்பெயர்வாளர்களாகவுமே உள்ளனர், அகதிகள், புலம்பெயர்வாளர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் சமத்துவமான கல்விக்காக அவர் தினமும் அங்கு போராடுவதுடன் கல்வி தொடர்பாக தனது தனிப்பட்ட செயற்திட்டங்களை போதித்து வருகிறார்.

Varkey Foundation https://www.globalteacherprize.org என்ற அமைப்பின் வழியாக இந்த உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முன்னைய ஆண்டில் உலகின் தலை சிறந்த ஆசிரியர் என்ற ரீதியில் முதல் 50 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இம்முறை
179 நாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமான பரிந்துரைகளிலிருந்து முதல் பத்துப் பேரில் ஒருவராக யசோதை செல்வகுமாரன் தெரிவாகியிருக்கின்றார்.
இதற்கு முன்பதாக அவுஸ்திரேலியாவின் Commonwealth Award ஐயும் இவர் பெற்றுச் சிறப்புச் சேர்த்திருக்கிறார்.
இவரோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் முதன்மை நிலை பெறும் ஆசிரியரை எதிர்வரும் மார்ச் 24 ம் திகதி துபாயில் நடைபெறும் நிகழ்வின் வழியாகத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். அவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசையும் வழங்கவுள்ளனர்.
எந்தவிதமான வாக்களிப்பு முறைமையோ, தரப் பாகுபாடுமோ இல்லாது ஆசிரியர் ஒருவரின் ஆளுமைத் திறன், அவரின் கற்பித்தல் பண்பு இவற்றை அலசி ஆராய்ந்தே இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
திருமதி யசோதை செல்வகுமாரன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் உப அதிபர் மற்றும் பெளதீகவியல் ஆசிரியர் திரு இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்று நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் ஆசிரியை திருமதி யசோதை செல்வகுமாரனைத் தமிழ் சமூகம் சார்பில் நாமும் வாழ்த்துவோம்.


No comments:

Post a Comment