Pages

Wednesday, March 15, 2006

சினிமா பரடைசோவும் யாழ்ப்பாணத்துத் தியேட்டர்களும்

நல்லதொரு திரைப்படத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அது மனசுக்குள் புகுந்து அப்படத்தின் கதையும் காட்சியமைப்புக்களும் நீண்ட நாளாக அலைக்கழிக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்கவும், பார்க்காதவர்களைப் பார்க்கச் சொல்லவும் அவா எழும். அப்படியான ஒரு மன உணர்வை ஏற்படுத்தும் திரைப்படம் தான் “சினிமாபரடைசோ” (Cinema Paradiso).

இத்தாலி நாட்டுத் திரைப்படமான இப்படம் இத்தாலிய மொழியில் Nuovo Cinema Paradiso ஆக 1989 ஆம் ஆண்டில் வெளியானது. இதன் இயக்குனர் Giuseppe Tornatore. 1990 ஆம் ஆண்டு சிறந்த வேற்றுமொழியில் வெளிவந்த படமாக ஒஸ்கார் விருதும், 11 ஒஸ்கார் விருதுப் பரிந்துரைகளுக்கும் அதே ஆண்டு தெரிவானது.தவிர ஜப்பானிய அக்கடமி விருது, கேன்ஸ் திரைப்படவிருது. ஐரோப்பியத்திரைப்பட விருது உட்படப் பல தொகை விருதுகளை அள்ளிக் குவித்தது இப்படம். பொதுவாகவே இப்படியான விருதை அள்ளிக் குவிக்கும் படங்கள் முழுமையான ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெறுவது கடினம். ஆனால் இப்படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னொருமுறை பார்க்கத்தூண்டுவதும் அப்படி மீண்டும் பார்க்கும் போதும் முதல் முறை பார்க்கும் போது கிடைக்கும் அதே அனுபவத்தை ஏற்படுத்துவதும் தான் இப்பட இயக்குனருக்குக் கிடைக்கும் பெரிய விருது.

கதை இதுதான், ஒரு பிரபல சினிமா இயக்குனராக ரோம் நகரில் இருக்கும் சல்வடோர் (Salvatore) தான் முப்பது வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த இத்தாலிக்கிராமமான சிசிலி(Sicily)யில் சிறு பையனாக இருந்தபோது தன் நண்பனாக வழிகாட்டியாக இருந்தவரின் மரணச் செய்தி கிடைக்கின்றது. முப்பது வருடமாகத் தன் சொந்தக்கிராமத்தையே எட்டிப்பார்க்காத அவர் இந்த மரணச்சடங்கிற்காகச் செல்ல முடிவெடுக்கின்றார். தொடர்ந்துவரும் அவரின் நினைவுச் சுழல்கள் முப்பது வருடங்கள் பின்னோக்கியதாகப் பயணிகின்றது.
இத்தாலிய நாட்டின் நவீனம் புகாத ஒருகிராமம் அது. அங்கே உள்ள "சினிமா பரடைசோ" என்ற ஒரேயொரு தியேட்டர் தான் அவ்வூர் மக்களுக்கு இருக்கும் ஒரே களியாட்டக்களம். ஆடலும் பாடலும் சேட்டைகளும் சில்மிஷங்களுமாகப் படங்களைப் பார்த்து இரசிப்பதற்கும், தங்கள் கனவு நாயகர்கள் திரையில் தோன்றும் போது ஆரவாரிப்பதுக்குமான நிலைக்களன் தான் அந்தத் தியேட்டர்.
அந்த ஊரில் தன் தந்தையைப் போரில் பறிகொடுத்துவிட்டு இளம் தாயுடனும் தன் தங்கையுடனும் இருப்பவன் டோட்டொ என்ற சிறுவன். தன்னுடைய சிறுவயதுக்கே உரிய குறும்புத்தனங்களுடன் வளர்கிறான் டோட்டோ. தாய்க்குத் தெரியாமல் கள்ளமாகத் தியேட்டரில் படம் பார்ப்பதும், திருட்டு தம் அடிப்பதும், ஏன் அந்தத் தியேட்டரே அவன் உலகமாகவும் எண்ணிக்கொள்கின்றான். சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டரில் படம் போடுபவராக (projectionist) இருப்பவர் அல்பிரடோ என்ற முதியவர்.
டோட்டோ தன் குறும்புத்தனங்களையும் படம் பார்க்கும் அவாவயும் தியேட்டருக்குள் மட்டும் நிறுத்திக்கொள்வதில்லை. நேராகப் படம் போடும் அறைக்குள் நுளைவதும் அல்பிரடோவின் ஏச்சுக்களை வாங்கிகட்டுவதும்,
படக்காட்சி பொருந்திய துண்டுகளை அடம்பிடித்து வாங்குவதும் அவன் வழக்கம். தன் பிள்ளை ஒரேயடியாக இப்படியாகத் தியேட்டரில் இருப்பதற்கு அல்பிரடோ தான் காரணம் என்று நினைத்து அவரைக் காணும் போது தன் வயிற்றெரிச்சலைக் கொட்டுவாள் டோட்டோவின் தாய்.
இதனால் மனவருத்தமடையும் அல்பிரடோ, டோட்டோ தன் தியேட்டருக்கு வரும் போதெல்லாம் அவனைத் துரத்துவார். ஆனால் அவனோ இவருக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வருவது போலவும், பரீட்சையில் கேள்விகளுக்குப் பதில் சொல்லி உதவியும் ( அல்பிரடோ தான் வயதாகியும் படிக்க ஆசைப்படுபவர்) தான் நினைப்பதைச் சாதித்துவிடுவான்.
இப்படித் தியேட்டரே தன் உலகமாக இருக்கும் டோட்டோ ஒருமுறை தியேட்டரில் ஏற்படும் தீவிபத்தில் அல்பிரடோவை காப்பற்றுகின்றான். அந்தவிபத்தில் இருந்து அல்பிரடோ இயங்கமுடியாது போனதும் டோட்டோ படம் போடுபவராக (projectionist)த் தேர்ந்தெடுக்கப்படுகின்றான். அல்பிரடோவே இவனின் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் மாறுகின்றார். மிகச்சிறுவயதிலேயே ஆக அமரும் டோட்டோ தன் வாலிபப் பருவத்தைத் தொட்டதும் ஒரு இளம் பெண்ணின் காதலில் வீழ்கின்றான். அந்தக் காதலிலிலும் தடைகள் வருகின்றன. கடமையா? காதலா? என்ற நிலை வரும் போது அவனின் வழிகாட்டி அல்பிரடோ சொல்கின்றார். " நீ இந்த ஊரில் இனி இருக்ககூடாது, திரும்பிப்பார்க்காது முன்னேறிக்கொண்டே போ".
டோட்டோ ரோம் நகருக்குப் பயணமாகின்றான். சல்வடோர் என்ற பிரபல இயக்குனராக மாறுகின்றான். முப்பது வருடங்கள் கழித்துத் தன் வழிகாட்டி அல்பிரடோவின் மரணச்சடங்கிற்கு வருகின்றான்.
சிறுவன் டோட்டோவின் குறும்புச் செயல்கள், அவன் இளைஞனாகும் போது வரும் காதல் உணர்வுகள், முப்பது வருடங்களுக்குப் பின் தன் கிராமத்திற்கு வரும் போது எழும் ஏக்கங்கள் எல்லாமே நம் ஈழத்து, இந்திய சமூகத்திலும் பொருந்திவரக்கூடிய நிகழ்வுகள். சிறுவனாக Salvator Cascio நடித்திருக்கும் தன் பங்கைத் திறம்படவே செய்திருக்கின்றான்.
தன் கிராமத்தின் அடையாளமாக இருந்த சினிமா பரடைசோ என்ற அந்தத் தியேட்டர் காலமாற்றத்தில் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு வெம்புவதும், தன் பழைய காதலியைத் தேடியலைவதும், முன்பு கமராவில் எடுத்த அவளின் காட்சிகளைத் திரும்பப்போட்டுப் பார்ப்பதுமாக இருப்பதுமாக நிறைவான ஒரு பாத்திரத்தில் Jacques Perrin நடித்திருக்கிறார்.
அந்த ஊரில் வரும் முக்கிய கதைமாந்தர்கள், குறிப்பாக முத்தக் காட்சிகளையே தணிக்கை செய்து படம் பார்க்கவைக்கும் பாதிரியார், ஊர்ச் சதுக்கத்தில் நின்று ஆட்களை விரட்டும் பைத்தியக்காரன், படம் போடுபவராக (projectionist) வந்து நிறைவான நடிப்பை வழங்கியிருக்கும் Philippe Noiret என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
டோட்டோவின் வழிகாட்டியாக வரும் அல்பிரடோ சொல்லும் ஒரு பொய்யால் தான் இப்படி முன்னேறியிருக்கிறேன் என்று முப்பது வருடங்கள் கழித்து அவனுக்குத் தெரியவரும் போது எமக்கும் அது சுவாரிஸ்யமான எதிர்பாராத காட்சியாக இருக்கின்றது. அது என்ன என்பதைப் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இப்படி நான் சொல்லாத நல்ல நிறைவான காட்சிகள் ஏராளம்.

எல்லா மனிதருமே சராசரி வாழ்வியலோடு ஓடிக்கொண்டு போகும் போது தம்வாழ்க்கைப் பாதையில் மாறுபட்ட அனுபவங்களோ அல்லது நிகழ்வுகளோ வந்து சந்திக்கின்றன. நின்று நிதானித்து அந்த அனுபவங்களை உள்வாங்கி நடப்பவர்கள் தம் சராசரி வாழ்விலிருந்து விலகி முன்னேற்றப்பாதையில் செல்லத்தலைப்படுகின்றார்கள், அதோடு தமக்குரிய வழிகாட்டியையும் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றார்கள். முன்னேறிய மனிதர்கள் வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன. இப்படத்தைப் பார்க்கும் போதும் அதே உணர்வுதான் எனக்கு எற்பட்டது. வாழ்க்கையின் முக்கியமான தருணத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் தான் எமது நீண்ட வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கின்றன.


என்னைப் பொறுத்தவரையில் சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையோடு ஊறிவிட்ட ஒரு அம்சம். அதற்காக ரம்பா எத்தனை நாய் வளர்க்கின்றார், கமலஹாசன் யாரோடு புதிதாக dating போகிறார் போன்ற அதிதீவிர சினிமாப் பக்கம் நான் போவதேயில்லை.
என் வாழ்க்கையில் சந்தித்துப் போன சில தியேட்டர் சம்பந்தமான அனுபவங்களும் நினைவுக்கு வருகுது. இப்பவும் நினைவிருக்கு, கோபாலபிள்ளை மாமாவின்ர சைக்கிள் வெள்ளிக்கிழமை பின்னேரம் சித்தப்பாவீட்டிலை நிண்டா அதின்ர அர்த்தம் எங்கட சித்தப்பாவும், கோபாலபிள்ளை மாமாவும் ரீகல் தியேட்டருக்கு இங்கிலீஷ் படம் பார்க்கப்போட்டார்கள் எண்டு. பெரும்பாலான வெள்ளிக்கிழமைகளில இதை அவர்கள் ஒரு வாடிக்கையா வச்சிருந்தினம். எண்பதுகளின்ர இறுதியிலயே போரால அந்தத் ரீகல் தியேட்டர் அழிஞ்சு போச்சுது. யாழ்ப்பாணம் கோட்டை ராணுவமுகாமுக்குப் பக்கத்தில அது இருந்தது தான் காரணம்.

படம் பார்க்கிறதில விண்ணர் விஷ்ணு அண்ணா தான். அப்போது அவருக்கு பதினேழு பதினெட்டுவயசு அப்பிடித்தான் இருக்கும், கமல் ரஜனி காலத்து மனுஷனுக்கு மாறாக எம்.ஜி.ஆர் படங்கள் எண்டால் தான் உயிர். டீவி, வீடியோ பெரிசா வராத காலம் அது. அவர் யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் படங்களைப் பார்த்துவிட்டு வரும் வரைக்கும் அவையின்ர முற்றத்தில நான் நிற்பன். அவரின்ர ஏஷியாச்சைக்கிளைக் கண்டதும் தான் தாமதம் துள்ளிக்குதித்து சைக்கிள் முன் பாறிலை ஏறி "படக் கதை சொல்லுங்கோ விஷ்ணு அண்ணா" எண்டு ஆவலா நான் அவரின்ர வாயைப் பார்ப்பேன். ரவுணில இருந்து சைக்கிளில வந்த களைப்பைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விட்டு படக்கதை சொல்ல ஆரம்பிப்பார்.
தேவர் பிலிம்ஸ் படங்கள் என்றால் எழுத்தோட்டத்திற்கு (titles) முதல் வரும் தேவர் பிலிம்ஸ் யானையின் பிளிறலையும் செய்து விட்டு " டண்டான் டாங், டண்டான் டாங்" என்று சங்கர் கணேஷின்ர இசையமைப்பையும் செய்துகொண்டே கதை சொல்ல ஆரம்பிப்பார். நான் ஆவெண்டு வாயைப் பிளந்த வண்ணம் அவர் சொல்லும் கதையக்கேட்டுக்கொண்டே இருப்பன்.

அவர் இன்னொரு விளையாட்டையும் செய்வார், இணுவில் காலிங்கன் தியேட்டர் பக்கம் போய் அறுந்து போய் எறிப்பட்டிருக்கும் படச்சுருள்களை எடுதுது வந்து கையால இயக்கக்கூடிய ஒரு மரப்பலகை மெஷினைச் செய்து பூதக்கண்ணாடி பொருத்தி அந்தப் படச்சுருளை இணைத்து விடுவார். எங்கள மாதிரிச் சின்னப் பெடியளைக் கொண்டு போய் ஒரு அறைக்குள் கொண்டுபோய் இருத்திவிட்டு அறைச்சுவரில வெள்ளை வேட்டியைக் கட்டிவிட்டு அறையை இருட்டாக்கி விடுவார். பிறகு அந்த மெஷினுக்கு ஒராள் டோச்லைற் அடிக்க இவர் லாவகமா அந்தப் படச்சுருள் வளையத்தைச் சுற்றுவார். சுவரில இருக்கிற வெள்ளை வேட்டியில படச்சுருள் ஓடும். சப்பாணி கட்டிக்கொண்டு திரையைப் பார்க்கும் நாங்கள் " உங்க பாரடா சிவாஜி கதைக்கிறான், ஆனா வடிவாக் கேட்குதில்லை" என்போம். அந்தச் சத்தம் எமது யாழ்ப்பாணத்துத் தோமஸ் அல்வா எடிசன் விஷ்ணு அண்ணரின் அந்தச் சினிமா மெஷின் எழுப்பும் ஈனஒலி எண்டது இப்பதான் விளங்குது.

ரமணா அண்ணாவும் சளைத்தவரில்லை. சினிமாப் போட்டி வைக்கிறேன் பேர்வழி எண்டு, ஒரு கொப்பியில சினிமாப் படம் ஒண்டின்ர முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதிவிட்டு இடையில இருக்கிற எழுத்துக்களின்ர எண்ணிக்கைக்கு ஏற்பப் புள்ளட்டி போடுவார். நாங்கள் என்ன படம் அது எண்டு கண்டுபிடிக்கவேணும். ( உதாரணம்: அன்பே சிவம் எண்டால் அXX XXம்). கனகாலமாக் அவர் எழுதி நாங்கள் கண்டுபிடிக்காத படம் " புதுச்செருப்புக் கடிக்கும்".


நீயா படம் வின்ஸர் தியேட்டரில முந்தி ஓடேக்க நான், சித்தியாக்களோட போனனான். இந்தப்படம் " வயது வந்தவர்களுக்கு மட்டும்" (பாம்புக் காட்சி உள்ளதால்) நான் சின்னப் பெடியன் எண்டு உள்ள போகவிடயில்ல. பிறகு ஒரு மாதிரி படம் பார்த்தோம், இல்லாவிட்டால் நான் தனியே வெளியே நிண்டிருக்க வேணும்.

தொண்ணூறாம் ஆண்டு நான் ஓ எல் படிக்கேக்க கூட்டளிமார் குமரேந்திரனும், ராஜசேகரும் களவா பள்ளிக்கூடக் கிறவுண்ட் மதில் பாய்ஞ்சு போய் மனோகராத்தியேட்டரில "அக்னி நட்சத்திரம்" படம் பார்த்துவிட்டு வந்து கிறவுண்டுக்குள்ள நிண்டு அந்தப் படத்தில நீச்சல் உடையில வந்த நிரோஷாவைப் பற்றிக் கதைச்சது ஞாபகம் இருக்கு.


பிறகு ஓ எல் எக்ஸாம் எடுத்துவிட்டு ராஜாத் தியேட்டரில " ராஜாதி ராஜா"வும், லிடோவில " பூப்ப்பூவாப் பூத்திருக்கு" படமும், வெலிங்டனில "வருஷம் 16 " படமும் பார்த்து எங்கட ஆசையை நிறைவேற்றிக்கொண்டோம், பரமகதி அடைந்தோம்.
வருஷம் 16 படம் இறுதிக்காட்சியில நாயகி குஷ்பு சாவதைக் கண்டு, கூடவே வந்த நண்பன் காந்தன் மூட்டைப் பூச்சியையும் பொருட்படுத்தாது அதிர்ச்சியில் கதிரையை விட்டு எழும்பவேயில்லை. பின்னால இருந்த தாய்க்குலங்கள் விசும்பி அழுவதும் கேட்டது.
ராஜாதி ராஜா படம் பார்த்து விட்டு வரேக்க மீண்டும் யுத்தம் ஆரம்பமாகி கோட்டைப்பக்கம் பங்கர் வெட்ட இளைஞர்கள் அப்படியே அழைத்துபோனார்கள்.
வருஷம் 16 படத்தைத் திரும்பவும் பார்ப்பமெண்டால் அடுத்த படமாக சம்சாரம் அது மின்சாரம் போடுவதற்கு வெலிங்டன் தியேட்டரில் நோட்டீஸ் ஒட்டிகொண்டிருந்தினம். ஆனால் போர் தொடங்கி மின்சாரம் போய், வெலிங்டன் தியேட்டரில "சம்சாரம் அது மின்சாரம்" ஒரு காட்சி கூட ஓடவில்லை.

யுத்தகாலங்களில மின்சாரமும் இல்லை. யாழ்ப்பாணம் சிறீதர் தியேட்டரைத் திருத்தி விடுதலைப் புலிகள் ஜெனறேற்றர் மூலம் போர் சம்பந்தப்பட்ட ஆங்கிலப்படங்களைத் தமிழில் டப்பிங் செய்து போட்டார்கள். என்.ஜி ஆரின் படங்களும் வருவதுண்டு. அப்பிடி " மதுரை வீரன்" என்ற படத்தைப் போய்ப் பார்த்தேன்.

யாழ்ப்பாணத்தின் அழகான பெரிய தியேட்டர் வின்ஸர் தியேட்டர் 87 இல இந்தியன் ஆமி வந்த போதே இயக்கத்தை நிறுத்தியிருந்தது. கடைசியாக " இது நம்ம ஆளு" படம் அதில வந்தது.


போனவருஷம் ஊருக்குப் போனபோது பார்த்தேன்.
சிறீதர் தியேட்டர் ஈபிடீபி கட்சியின் அலுவலகமாக மண்மூட்டை அரணுடன் இருக்குது. முந்தி அகதி முகாமா இருந்த காலிங்கன் தியேட்டரும்,
களஞ்சியமாக இருந்த மனோகராத் தியேட்டரும் வெள்ளையடிக்கப்பட்டுப் படம் போடுகினம்(புகைப்படம் பக்கத்தில்). ராஜாத்தியேட்டரும் மீண்டும் உயிர்த்திருக்கிறது. வின்ஸர் தியேட்டர் இப்ப கூட்டுறவுப் பண்டகசாலைக் களஞ்சியமாக இருக்குது. சாந்தித்தியேட்டர் இப்ப நாதன்ஸ் தியேட்டரா மாறியிருக்குது. வெலிங்டன் தியேட்டர் வெல்டிங் பட்டறை போல உருக்குலைந்து அதியுயர் இராணுவக் கட்டுப்பாட்டு முள்வேலிக்குள் சிறைப்பட்டிருக்கின்றது. லிடோ சினிமா தான் தியேட்டராகவே இருந்ததில்லை என்பதுபோல அமைதியாக நிற்கின்றது.ராணித்தியேட்டர் இப்ப சைக்கிள் பார்க்.
ரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட, புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது.

29 comments:

  1. பிரபா, அருமையானதொரு பதிவு. கனக்க பழைய நினைவுகளை மீளக்கொண்டு வருகிறது. 'எம்மண்ணும் போயிற்று செம்மண்ணும் போயிற்று போ' என்ற ஓளவையின் கவிதையொன்றின் பகுதிதான் இதை வாசிக்கும்போது நினைவுக்கு வருகின்றது.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி டிசே தமிழன்

    இப்போது எஞ்சியிருப்பவை எம்மண்ணின் ஈர நினைவுகள் மட்டும் தான்.

    ReplyDelete
  3. keep up the good work anna its really touching hood for the small age memories & the movie view.

    ReplyDelete
  4. நல்லதொரு பதிவு...காலத்தின் கோலங்கள் மனிதர்களின் முகத்திலும் தொலியிலும் மட்டுமல்ல..திரையரங்குகளிலும் அவைகளின் வெள்ளித் திரைகளிலும் நரைகளைக் கொண்டு வரும் என்ற கோர உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள். அந்த ரீகல் திரையரங்கைப் பார்க்கையிலேயே ஒரு சோகம் பெரிய பருந்து எலியைக் கவ்வுவது போல கவ்விக் கொள்கிறது...ம்ம்ம்ம்...

    ReplyDelete
  5. எங்கட அம்மா அப்பா காலத்து ஆக்களுக்கு றீகலும், முனியப்பர் கோயிலும் யாழ் நூல்நிலையமும் தான் சொர்க்கம்.
    நான் 1995 வரை யாழ்ப்பாணத்தில் திரைப்படம் பார்த்த ஒரே தியேட்டர் சிறீதர்தான். (அகலத்திரையிலில்லை).

    நல்ல பட விமர்சனம்.

    ReplyDelete
  6. I saw the Directors cut of Nuovo Cinema Paradiso. Its truly a classic.

    Another movie from the same Director is Malena. happens again in Sicily around the end of second world war. He has a love for his home.

    ReplyDelete
  7. பிரபா!
    உங்கள் பதிவு எந்தன் நினைவுகளையும் மீட்டிவிட்டது. எந்த மனிதனுக்கும், தன் சொந்த மண்ணின் நினைவுகள் , சோகமாயினும் சுகமானதே.
    பாராட்டுக்கள்

    ReplyDelete
  8. DO you think that we will be able to have that life back soon.

    ReplyDelete
  9. please don't align=justify when you post your post text. The letters appear broken in Firefox.

    ReplyDelete
  10. கானா பிரபா, மற்றுமொரு முத்தான பதிவு!

    //ரீகல் தியேட்டர் இருபது வருஷத்துக்கு முந்திப் போட்ட இங்கிலீஸ் படத்தின்ர சாயம் போன போஸ்டரோட புதர் மண்டிய காட்டுக்குள்ள இருக்குது//

    இந்தப் பென்னாம் பெரிய போஸ்டர்களை எப்படி அங்கு யாழ்ப்பாணத்தில் தயாரிக்கிறார்கள் என்பதை போன வாரம் இங்கு நான் சந்தித்த ஒரு முதியவர் விளக்கினார். (இவர் முந்தி யாழ் ரீகல் தியேட்டரில் பணி புரிந்தவர்). சுவரில் பெரிய வெள்ளைத்தாளை ஒட்டி ப்ரொஜெக்டரில் தேவையான படத்தைப் போட்டு அதன் மேல் விழச் செய்து sketch பண்ணி பிறகு வர்ணம் பூசுவார்களாம்.

    ரீகலில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மூட்டைப்பூச்சிகள் என்னவாயினவோ தெரியாது. பாவங்கள்:)

    ReplyDelete
  11. பதிவுகளை இட்ட அநாமோதய நண்பர், ராகவன், வசந்தன், கிறுக்கன், மலைநாடான், கந்தசாமி, மற்றும் சிறீஅண்ணாவிற்கு என் நன்றிகள்.

    ராகவன்,
    நீங்கள் மேற்கோளிட்டது போல இப்படியான அழிந்துபோன நம் நிலைக்களன்களைப் பார்க்கும் போது நெஞ்சம் இலேசாக வலிக்கும்.

    வசந்தன்,
    உங்களின் வாலிப வயதில் இந்தத்தியேட்டர்களுடைய நிலை என் பதிவின் கடைசிப்பந்தி போலத்தான்.

    கிறுக்கன்,
    நீங்கள் குறிப்பிட்ட Malena படத்தைத் தேடி எடுத்துப் பார்க்கின்றேன், நன்றி

    மலைநாடான்,

    சுகமான சோகங்களை இப்படிப் பதிவில் பகிர்ந்து கொள்வதால் தான் எம்மை ஓரளவாவது ஆற்றுப்படுத்த முடியும்.

    கந்தசாமி,
    நம்பிக்கையோடு எம் எஞ்சிய வாழ்வைக் கழிப்போம்.

    அநாமோதய நண்பரே,
    தாங்கள் குறிபிட்டது போல இனிமேல் align=justify பண்ணாமல் பதிகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

    சிறீ அண்ணா
    மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள். மூட்டைப் பூச்சிகளும் தென்னிலங்கை போயிருக்கும்:

    ReplyDelete
  12. //தாங்கள் குறிபிட்டது போல இனிமேல் align=justify பண்ணாமல் பதிகின்றேன்//
    உங்கள் பல பதிவுகள் firefoxஇல் படிக்க முடியவில்லை. இப்போதுதான் சென்று பார்த்தேன். அனைத்துப் பதிவுகளையும் justify பண்ணாமல் மீண்டும் பிரசுரிப்பது நல்லது.

    ReplyDelete
  13. Excellent! i can't say anything more. After a long gap, i found a good post mixed with sweet memories. Keep it up!

    ReplyDelete
  14. Kanags said...
    உங்கள் பல பதிவுகள் firefoxஇல் படிக்க முடியவில்லை. இப்போதுதான் சென்று பார்த்தேன். அனைத்துப் பதிவுகளையும் justify பண்ணாமல் மீண்டும் பிரசுரிப்பது நல்லது.

    இப்பொழுது சரி செய்துவிட்டேன் என்று நினைக்கின்றேன்:-)

    ReplyDelete
  15. 'ரஜினி' ராம்கி said...
    "Excellent! i can't say anything more. After a long gap, i found a good post mixed with sweet memories. Keep it up! "

    ரஜனி ராம்கி
    தங்களின் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றிகள்.

    ReplyDelete
  16. அன்புடன் பிரபாவுக்கு!
    அழகான "அன்றும் இன்றும்" பதிவு;கட்டுரையை இத்தாலியில் தொடக்கி ஈழத்திற்க்கு வெகு லாவகமாகக், கொண்டு சென்றுள்ளீர்கள்.இந்த றீகல் திரையரங்கும்,ஏனையவும் ஈழத்தமிழருக்கு ஏதேதோ கதை சொல்லும், எனக்கும் என் தாயார் நினைவூட்டும்;அவர் வாழ்வில் பார்த்த ஒரே திரைப்படம், ஔவையார்,இவ்வரங்கில் கூட்டிச் சென்று காட்டியதாக தந்தையார் கூறுவார். நீங்கள் குறிப்பிடும் இத்தாலியத் திரைப்படத்தில் நடித்த "யக் பெரன்,பிலிப் நொரே" இருவரும் பிரான்சியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது; நமது தென்னிந்திய ரங்கராவ்,சுந்தரராசன்,டில்லி கணேஷ் போன்றவர்கள். நிறைய நடிக்காவிடிலும்,நடிப்பதை நிறைவாக நடிப்பவர்கள்.நான் பாரிசில் இருப்பதால்,பார்க்கக்கிடைத்தது.உங்கள் எனைய பதிவுகளையும்,படித்தபின் ,பின்னூட்டுகிறேன்.
    காலம் ஒரு நாள் மாறும்; நம் கவலைகள் யாவும் தீரும்!
    நன்றி
    யோகன்
    பாரிஸ்

    ReplyDelete
  17. வணக்கம் யோகன்

    உங்களின் நெஞ்சார்ந்த மடலுக்கு நன்றிகள்.
    ஆம், நீங்கள் குறிப்பிட்டது போல யக் பெரன்,பிலிப் நொரே இருவரைப் பற்றிய மேலதிக தகவல்களையும் தேடி அறிந்து அவர்களின் கலைத்திறனைக் கண்டு வியப்படைந்தேன்.

    ReplyDelete
  18. நல்ல விமர்சனம்.எனக்கு ஈழத்து தியேட்டர்களைப் பற்றி
    தெரியாது.:(.மகாத்மா தியேட்டர் என்று ஒன்று இருக்கு ஆனால் அதில படம் போட்டு அறியேன்.தற்போதுள்ள நிலமையும் தெரியாது.ஊருக்குப் போகும்போது ஒருமுறையாவது ஈழத்துத் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும்:-)

    ReplyDelete
  19. வணக்கம் சினேகிதி

    தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்.
    மகாத்மா என்று ஏழாலையிலும் ஒரு தியேட்டர் இருந்தது என்று நினைக்கிறேன்.
    நீங்கள் ஈழம் போய் மூட்டைப் பூச்சிக்கதிரையில் இருந்து படம் பார்க்கக்கடவது:-)

    ReplyDelete
  20. மகாபாரதம் மாதிரி நீளமா இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு. எனக்கு Reading Cinemasல தான் படம் பார்த்து பழக்கம். அத பற்றியும் கொஞ்சம் எழுதுங்களன். இவ்வளவு நீளமா இருக்கிறதால வாசிக்க கஸ்ரமா இருக்கு, பேசாமா புத்தகம் அடிச்சு அனுப்பிவிடுங்க. Trainக்க படிக்க உதவும்.

    ReplyDelete
  21. வணக்கம் செந்தூரன் தம்பி,

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு என் நன்றிகள், புத்தகம் அடிக்கேக்க சொல்லி அனுப்புறன், அதுவரைக்கும் றெயினுக்க மகாபாரத்தையே திருப்பிப்படியுங்கோவன் :-)

    ReplyDelete
  22. Kana Praba,
    You got excellent views/ Write about 'Pulam Peyar Vaal Thamilarkal'(Tamil diaspora)- their struggles, life style, sacrifices and future.

    ReplyDelete
  23. வணக்கம் சேயோன்

    என் பதிவை வாசிப்பது மட்டுமன்றித் தங்கள் பின்னூட்டல் மூலம் அதை வெளிப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். நன்றிகள்.

    ReplyDelete
  24. செந்தூரன்,
    உமக்கும் நீளத்துக்கும் என்ன பிரச்சினையோ தெரியேல? எல்லா இடத்திலயும் புலம்பிக்கொண்டு திரியிறீர்.
    பிரபா, நீர் புத்தகம் போடுறதைப்பற்றிக் கதைக்கேக்க, ரவிதமிழ்வாணனோட "ஒப்பந்தம்" வச்சாச்சுப் போல கிடக்கு.
    செவ்வியெடுத்த கையோட இதையும் செய்துபோட்டீரோ?

    ReplyDelete
  25. வசந்தன்,

    செந்தூரன் சின்னப்பெடியன் தானே வாசிக்கக்கஷ்டமாக இருக்கும், வலையர்கள் எல்லாருமாகச் சேர்ந்து அவருக்கு ஒரு Printer ஐ வாங்கிக் கொடுப்பம்.

    ரவி தமிழ்வாணனோட ஒரு ஒப்பந்தமும் கிடையாது, மெல்பன்காரங்கள் அறிஞ்சால் பேப்பரிலை வந்துடும் :-)

    ReplyDelete
  26. கானா பிரபா
    நல்ல பதிவு.
    பல பழைய நினைவுகளை மீட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  27. வணக்கம் சகோதரி சந்திரவதனா

    தங்களின் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றிகள்.

    ReplyDelete
  28. //ரவி தமிழ்வாணனோட ஒரு ஒப்பந்தமும் கிடையாது, மெல்பன்காரங்கள் அறிஞ்சால் பேப்பரிலை வந்துடும் :-) //

    யோவ்,
    நானும் மெல்பேர்ண் தானே?;-)
    உங்கட செவ்வியைத்தான் கேட்க ஏலாமப்போச்சு.

    ReplyDelete
  29. வசந்தன்

    எனக்குத் தெரியும் நீங்கள் அப்பிடிப் பேப்பரில எழுத மாட்டீர்கள் என்று.
    செவ்வியை நீங்கள் கேட்காததும் ஒருவழிக்கு நல்லது தான்:-)

    ReplyDelete