Pages

Monday, December 14, 2009

வலைப்பதிவுலகில் என் நான்கு வருஷங்கள்

"திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகிறேன்" என்று சொல்லுவார் முதுபெரும் ஈழத்து எழுத்தாளர் டொமினிக் ஜீவா.

என்னைப் பொறுத்தவரை என்னைப் பாதித்த விஷயங்களை, அவை நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி என் மனதில் பட்டதைப் பகிர்ந்து கொள்ளவே நான் ஊடகத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். இது என் 11 ஆண்டுகால வானொலிப் பணிக்கும் பொருந்தும், இந்த மாதத்தோடு நான்காவது ஆண்டு முடிந்து ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் வலைப்பதிவு ஊடகத்துக்கும் இது பொருந்தும். என்னை நான் சமரசம் செய்து கொள்ளாத எந்த விடயத்திலும் என்னை நான் ஆழம் பார்ப்பதும் இல்லை, மற்றவர்களின் மேல் திணிப்பதும் இல்லை. ஆனால் எனக்குத் தோன்றியதை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதில் நான் எந்த வித சமரசமும் செய்து கொள்வதேயில்லை.


ஒருமுறை சகவலையுலக நண்பர் கேட்டார், எப்படி உங்களால் இவ்வளவு காலமும் சிக்கலுக்குள் மாட்டுப்படாமல் வலையுலகில் இருக்க முடிகின்றது என்று. உண்மையைச் சொல்லப் போனால், அந்த அரசியல் என்னையும் தாக்கியிருக்கின்றது. ஆனால் என்னை நான் சுலபமாக விடுவித்துக் கொண்டேன், கொள்கிறேன், கொள்வேன்.
வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன். ஏனென்றால் அதை நானும் அனுபவித்தவன் தானே. சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் நடிகை ரேவதி அவுஸ்திரேலியா வந்த போது அவரின் வானொலிப் பேட்டி நடக்கிறது. பேட்டியில் நேயர் ஒருவர் வந்து "ஈழப்போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு என்ன?" என்று கேட்கிறார். அன்று வானொலியைக் கேட்டு விலா நோகச் சிரித்த அதே மனநிலையோடு தான் இன்றும் இருக்கின்றேன். சும்மாவா சொன்னான் பாரதி "வாய்ச் சொல்லில் வீரரடி" என்று.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் சிட்னியின் ஒரு பிசியான உணவகத்தில் Take Away
கியூவில் நானும் நிற்கிறேன். எனக்கு முன்னால் "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" நூலைத் தன் முகத்துக்கு நேரே பார்த்த படி ஒருவர்.

சில வாரங்களுக்கு முன் சிட்னி நகரப் புகையிரத நிலையத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப ரயில் பிடிக்கக் காத்திருக்கின்றேன். என்னைக் கடந்து ஒருவர் வேகமாகப் போகிறார், கையில்
"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி".

கழிந்த நான்காவது வருஷ வலையுலகப் பங்களிப்பில் என்னாலும் ஏதோ செய்ய முடிந்ததே என்று சொல்லிக் கொள்ளும் விதமாக அமைந்தது என் கம்போடியப் பயணம் குறித்த வடலி வெளியீடான "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி". மேலே சொன்ன அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் உண்மையிலேயே ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் பேரானாந்தத்தைக் கொண்டு வந்தவை. கம்போடியா நூலை இன்னும் விரிவாக கலர் கலராக பெரும் புத்தகமாக ஆங்கிலப் பயண இலக்கியத்துக்கு நிகராகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது. வெளிநாட்டு வாழ்க்கையில் டொலரில் உழைத்து சொகுசுப் பயணம் என்று யாரோ ஒருவர் சொன்ன ஆற்றாமைப் பின்னூட்டம் எல்லாம் வலிக்கவில்லை, நகைப்பாக இருக்கிறது. ஏனென்றால் என் உலாத்தல்கள் அனைத்துமே தேடல்களாக, தேடல்களைப் பதிப்பித்தல்களாக மட்டுமே இருந்தன, இருக்கின்றன, இருக்கப் போகின்றன.

இது நாள் வரை எமது மண்ணின் மைந்தர்களை, அவர்கள் எழுத்தாளர்கள், நாடக, இசைக் கலைஞர்கள் என்று காட்டக் கூடியவர்களைச் சந்தித்த ஒலிப்பகிர்வுகளை நூலாகக் கொண்டு வரவேண்டும், கூடவே அந்த நூலோடு இணைப்பாக குறித்த ஒலி இறுவட்டுக்களை இணைக்க வேண்டும் என்பதே என் அடுத்த முனைப்பு.

என் மண்ணின் பகிர்வுகளுக்கு இன்னொரு களமாக அமைந்தது இந்த ஆண்டு ஆரம்பித்த குழுமப்பதிவு "ஈழத்து முற்றம்". கூடவே ட்விட்டர் என்ற குறும்பதிவிலும் என் நாளாந்த எண்ணங்களைப் பகிர ஆரம்பித்திருக்கிறேன்.

"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது" . என்றோ என் புலம்பெயர் வாழ்வின் தனிமையைப் போக்கிய சுரேஷ் சக்ரவர்த்தி என்ற கலைஞனை இந்த ஆண்டு வானொலிப் பேட்டி மூலம் சந்தித்ததும் என் வாழ்வில் மறக்க முடியாததொன்று.

மடத்துவாசல் பிள்ளையாரடி தவிர்த்து,
என் பயணப் பதிவுகளுக்காக உலாத்தல்
ஒலி மற்றும் இசைக்காக றேடியோஸ்பதி
வீடியோ காட்சித் தொகுப்புக்காக வீடியோஸ்பதி
அவுஸ்திரேலிய நடப்புக்கள் குறித்த கூட்டு வலைப்பதிவு
ஈழத்துப் பிரதேச வழக்குகள் சார்ந்த கூட்டு வலைப்பதிவான ஈழத்து முற்றம்
பாடகி பி.சுசீலாவிற்கான கூட்டு வலைப்பதிவான இசையரசி
என்றும் இன்னும் சில வலைப்பதிவுகளைக் கட்டி மேய்க்கின்றேன் ;-)


எல்லாப் பதிவுகளையும் ஒரே கூரையின் கீழ் திரட்டவெண்ணி "கானா பிரபா பக்கங்கள்" என்ற தனித்தளத்தையும் தொடர்ந்து இயக்கிவருகிறேன். இவையெல்லாவற்றையும் விட எனக்கு இன்னும் பெருமிதத்தைத் தருபவை உங்களைப் போன்ற உறவுகளைச் சம்பாதித்தது. அந்தப் பெருமிதம் தான் என் நாளாந்த வாழ்வின் ஒரு பகுதி சந்தோஷத்தைப் பங்கு போட்டுக் கொள்கின்றது. மறக்க மாட்டேன் உங்களை.

நேசம் கலந்த நட்புடன்
கானா பிரபா


வலைப்பதிவில் ஒரு வருஷம்

2006 ஆம் ஆண்டில் வலைப்பதிவில் என் ஒரு வருடப் பதிவுகளின் தொகுப்பாய்.

வலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று

2007 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் தொகுப்பு

வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்


2008 ஆம் ஆண்டில் எழுதிய என் பதிவுகளின் படையல்

00000000000000000000000000000000000000000000000000

கடந்த 2009 ஆண்டின் என் பதிவுகளின் தொகுப்பு

Madagascar கொணர்ந்த கார்ட்டூன் நினைவுகள்

தொட்டிலில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் போல என் பால்யகாலத்தில் அதிகம் பாதித்த இந்த கார்ட்டூன் படங்கள் இன்று வரை அதே ரசனையுடன் பார்க்க வைக்கின்றன. மனம் ஒடுங்கி கவலை ஆக்கிரமிக்கும் போது இளையராஜாவின் பாட்டுக்கு நிகராக ஒத்தடம் கொடுப்பது கைவசம் இருக்கும் கார்ட்டூன் சரக்குகள் தான்.




ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

தமிழ்த் தேசியத்தை நேசித்த டாக்டர் இந்திரகுமார், உலகத் தமிழ்ப் பேரவையின் செயலாளராகவும் பணியாற்றியவர். மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது மண்ணில் இருந்து விண்ணுக்கு என்ற தொடர் கட்டுரையை வீர கேசரியில் எழுதினார். 1972 ஆம் ஆண்டு மேற்படி தொடர் புத்தகமாக வெளிவந்து இலங்கையின் அரசு மண்டல சாகித்திய பரிசினைப் பெற்றது.








ஈழப்போராட்டம் பேசும் நூல்கள்

இந்தக் காலகட்டத்தில் தாயக விடுதலைப் பயணத்தின் போது தாம் சந்தித்த நேரடியாகச் சந்தித்த அனுபவங்களையும், கண்ட சாட்சியங்கள் மூலம் பலர் இந்த ஈழப்போராட்டத்தினை மையப்படுத்திய நூல்களை எழுதியிருக்கின்றார்கள். இந்த நூற்பட்டியலைத் திரட்ட வேண்டும் என்று முயற்சி எடுத்து இரண்டு நாள் வேலைத் திட்டத்தில் எடுத்துத் திரட்டியவையே இந்த நூற் பட்டியல்.








"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்

ஈழத்தின் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் மிகவும் நம்பிக்கை தரக்கூடிய இளையவர் த.அகிலன். அவரது சீரிய எழுத்துக்கள் கவிதைகள், நனவிடை தோய்தல்கள், சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்களாக அமைந்திருப்பதோடு கட்புல ஊடகம் வழியும் எதிர்காலத்தில் தடம்பதிக்கத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்.







Hunting the Tigers - சிறீலங்கா நடப்பு நிலவரம்

அவுஸ்திரேலிய தேசிய தொலைக்காட்சி SBS இன் Dateline நிகழ்ச்சியில் அதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் Amos Roberts சிறீலங்காவின் நடப்பு நிலவரம் குறித்து நேரடிப் பகிர்வினை Hunting the Tigers என்னும் ஒளியாவணம் மூலம் வழங்கியிருந்தார்.




Death on a Full Moon Day - நாளை வருவான் என் பிள்ளை

வன்னிஹாமி என்று ஒருவரல்ல, பல்லாயிரம் குடும்பங்களின் நிலை இதுதான். இருந்தால் சில ஆயிரங்கள், இறந்தால் ஒரு லட்சம் என்ற விதியோடு வேள்விக்குப் பலிகொடுக்க பலியாடுகள் சிப்பாய்களாக. தம் பிள்ளை மீண்டும் உயிரோடு வருவான் என்ற நினைப்பில் காத்திருக்கின்றார்கள். மிஞ்சுவது வாழைக் குத்திகளை நிரப்பி, சடலம் என்ற போர்வையில் காத்திருக்கும் ஏமாற்றங்கள்.






புகைப்பட அல்பம் கிளப்பிய ஞாபகம்

பிறகு தானே எல்லாம் மாறிப் போச்சு, ஆளாளுக்கு திக்குத் திக்கா தேச எல்லைகளைக் கடந்தவர்கள் ஒரு பக்கம், குண்டுவீச்சில் செத்துப் போனவை ஒருபக்கம், இதுகளை எல்லாம் பார்த்து வருத்தம் வந்து திடீர் திடீரெண்டு மேலை போனவை ஒருபக்கம், இண்டைக்கும் நடைப்பிணமாய் எஞ்சிய வாழ்வை கடனே என்று கழிக்கும் சிலர் ஒருபக்கம் எண்டு அந்தக் கூடு கலைஞ்சு போச்சு.






தமிழகம் - புலம்- சிறீலங்கா: இங்கிருந்து எங்கே?


இன்றைய சூழ்நிலையில் என் மனதுக்குள் உழன்று கொண்டிருக்கும் விஷயங்களைப் பேசா மடந்தையாக வெறுமனே விட்டுவிடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து சில விஷயங்களைச் சொல்லலாம் என்றிருக்கின்றேன். இந்தக் கருத்துக்கள் என் சுய எண்ணத்தில் தோன்றியவை மட்டுமே ஆய்வு/வாய்வு பகுதியில் அடக்க எனக்கு உடன்பாடில்லை.








என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை

நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன்.






அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்!

"ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி" மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.







புலிகளின் குரல் - "வரலாறு திரும்பும்"

இந்த நேரம் முளைத்தது தான் புலிகளின் குரல். ஆரம்பத்தில் இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பது மணி வரை மட்டுமே தன் இருப்பை வைத்திருந்தது. பிரேமதாசா அரசின் தேனிலவுக்காலத்தில் வாங்கி வைத்து கொஞ்சக் காலம் ஒப்பேற்றிய பற்றறிகளும் தீர்ந்து விட எமக்குக் கிடைத்த அடுத்த மின்சக்தி உபகரணம் கார் பற்றறிகள், அதுவும் எல்லா இடமும் தீர்ந்து விட, அடுத்து வந்தது சைக்கிள் டைனமோ. சைக்கிளைத் தலைகீழாகக் குத்தி விட்டு ஒருவர் சைக்கிள் பெடலைச் சுழற்ற டயரில் மோதும் டைனமோ பிறப்பிக்கும் மின்சாரம் வயர் வழியே பாய்ந்து வானொலியை உயிர்ப்பிக்கும்.



ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை.....

சாதியம் சொல்லி கோயில் கிணற்றிலேயே தண்ணி அள்ள விடாமல் தடுக்கும் சமூகம், ஆராவது கோயில் படி மிதிச்சால் காலை முறிச்சுப் போடுவோம் என்று ஒரு பகுதி மக்களை தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம், மூட நம்பிக்கையிலும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள். இனி மெல்ல மெல்ல எல்லாம் விட்டதில் இருந்து தொடங்கும். சாதீயத்திமிரும், பிற்போக்குத் தனமும் கொண்ட எம் சமூகத்துக்குப் படிப்பினைகள் போதாது போல.



கவிஞர் இ.முருகையன் நினைவில்...!

ஈழத்தின் தமிழ் இலக்கியத்துறையில் நாடறிந்த மூத்த கவிஞரும் நாடக எழுத்துருப் படைப்பாளியுமான கலாநிதி இ.முருகையன் தனது 74 வது வயதில் நேற்று கொழும்பில் காலமானார்.










நடிகமணி வி.வி.வைரமுத்து 20 ஆம் ஆண்டு நினைவு இன்று

நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் மறைந்து இன்றோடு 20 ஆண்டுகள் கடந்திருக்கின்றது.













கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்

கவிஞர் முருகையனின் அஞ்சலி நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேராவையால் கடந்த 06.07.2009 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களும், கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒலி வடிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.









ஒரு குட்டியானையின் டயறிக்குறிப்பு

கழிந்து போன யூலை 7 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான குடும்பங்களில் எதையெல்லாம் மறந்திருப்பார்களோ தெரியாது ஆனால் அந்த நேரம் Channel 7 தொலைக்காட்சியின் The Zoo நிகழ்ச்சியை மட்டும் மறந்து தொலைத்திருக்கமாட்டார்கள். அது வேறொன்றும் இல்லை. அன்று தான் தன் வயிற்றில் 22 மாதங்களாச் சுமந்து வந்த தன் பிள்ளையை Thong Dee ஈன்ற பொழுதைக் காட்டிய விவரண நிகழ்ச்சி அது.




"இன்னமும் வாழும்" மாவை வரோதயன்"

"ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" என்ற ஒலிப்பகிர்வாக கொடுக்க யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று எழில் அண்ணாவிடம் கேட்டபோது அவர் மாவை வரோதயனை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றிலிருந்து வாரா வாரம் மாவை வரோதயனின் "ஈழத்தில் இருந்து ஓர் இலக்கியக் குரல்" இரண்டு ஆண்டுகள் வரை நீடித்தது அந்த நிகழ்ச்சியில்.







"கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள்

"தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. "
( கே டானியல் 15-12-83, "கே.டானியல் கடிதங்கள் )










கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"

கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது.




"தொப்புள் கொடி" தந்து தொலைந்த "நித்தியகீர்த்தி"

தொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.






"வானொலி மாமா" சரவணமுத்து நினைவாக

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான "வானொலி மாமா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.









"16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை" - போக முன்

இது வெறும் கற்பனைக் கதை அல்ல, 16 வருஷங்களுக்கு முன்னர் என்னைச் சுற்றி நடந்த சம்பவங்களோடு பயணிக்கும் ஒரு நனவிடை தோய்தலாக அமைகின்றது. கொஞ்சம் பொறுங்கோ அவசரப்படாமல் கேளுங்கோ. இந்தக் கதையில் வரும் நாயகனோ அல்லது அவனைச் சுற்றி வரும் காதல் சமாச்சாரத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் நானும் இருப்பேன், நாயகனின் தோழர்களில் ஒருவன் வடிவில். எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே ;-)



16 வருஷங்களுக்கு முந்திய காதல் கதை - யாழ்தேவி ரயில் பிடிக்க


"மச்சான்! நான் ஊருக்குப் போறன், வவுனியா வளாகத்திலை இருந்து படிச்சு ஒரு சாதாரணனா வெளியில வாற்தை விட நாட்டுக்காகப் போராடப் போறன், எங்கட சனத்துக்கு விடிவு வேணுமடா" அந்தக் கடைசி இரவில் குருமன் காட்டில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து அந்த இரவில் பேசியது தான் வாசனோடு இருந்த கடைசி நாள்.




தமிழீழ மாணவர் எழுச்சியின் ஆரம்பம் : சில நினைவுகள்

கார்த்திகை 26, 2006 ஆம் வருஷம் மாவீரர் வாரத்தின் வானொலிப் பகிர்வாக ஈழத்தின் மாணவர் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சத்தியசீலன் அவர்களை நேர்காணல் கண்டிருந்தேன்.

36 comments:

  1. வாழ்த்துகள்...உங்கள் பாதை தனித்துவமானது...அதனை தொடருங்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்..

    ஐந்தாவது வருடத்தில் உங்கள் சேவையும் சாதனைகளும் தொடரட்டும்..

    எங்களைப் பொறுத்தவரை வலைப்பதிவது ஒரு பொழுதுபோக்கு, வெளிப்பாடு..
    உங்களுக்கு அது ஒரு தவம்..

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் பாஸ் - தொடரட்டும் பயணம்!

    ReplyDelete
  4. //அந்த நூலோடு இணைப்பாக குறித்த ஒலி இறுவட்டுக்களை இணைக்க வேண்டும் என்பதே என் அடுத்த முனைப்பு.///

    வாவ்!

    கற்பனை செய்து பார்க்கையிலயே ஆனந்தமாக இருக்கிறதே! காத்திருக்கிறோம் ! -முயற்சிகள் தொடரட்டும் வெற்றி பெறட்டும்!

    ReplyDelete
  5. //"எதிர்பாராத வாய்ப்புக்களும்,அதைச் சுற்றிய சம்பவங்களுமே வாழ்க்கையாக இருக்கின்றது" . என்றோ என் புலம்பெயர் வாழ்வின் தனிமையைப் போக்கிய சுரேஷ் சக்ரவர்த்தி என்ற கலைஞனை இந்த ஆண்டு வானொலிப் பேட்டி மூலம் சந்தித்ததும் என் வாழ்வில் மறக்க முடியாததொன்று.//


    என்னால் முழுமையாக ரசித்து கேட்கப்பட்ட - அதன் பாதிப்பில் இருந்த பின் வந்த நாட்களுமே எனக்கும் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கிறது சுரேஷ் சக்ரவர்த்தியின் பேட்டி!

    ReplyDelete
  6. வாவ் வாழ்த்துகள் கானாஸ்! மிக அருமை! தங்களின் அனைத்து பதிவுகளிலும் என்னை மிகவும் கவர்ந்தது - மடத்துவாசலும், ரேடியோஸ்பதியும், உலாத்தலும் -in that order!! கானாஸ், இன்னும் பல உயரங்களை நீங்கள் தொட வேண்டுமென்பது எங்கள் ஆவல்! ஐந்தாம் வருட வாழ்த்துகள்! :-)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கானா.. மேன்மேலும் தளம் மேன்மை பெறட்டும்..

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அண்ணா!

    தொடரட்டும்...

    ReplyDelete
  9. வாழ்த்துகள் நண்பரே!! உங்கள் பயணம் நீண்ட நாள் தொடரட்டும்!!

    //
    வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன்.
    //
    அப்படியா..இப்பொதுதான் இதை கேள்விபடுகிறேன்..வருந்ததக்க தவறான செயல்..

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் கானா பிரபா! :-)

    உங்களோட கம்போடியா பயணம் என்று நினைக்கிறேன்.... நீங்க அந்த பதிவிட்ட அதே சமயம் நானும் ஒரு பதிவிட்டு இருந்தேன்(அப்ப பதிவுலகிற்கு நான் புதிது).. எனக்கு ஒரு பய பின்னூட்டம் போடல! என்னடா இது இவருக்கு மட்டும் இத்தனை பேர் பின்னூட்டம் போடுறாங்க..நம்மை ஒரு பய கண்டுக்க மாட்டேங்குறாங்களே என்று செம டென்ஷன் ஆகி விட்டது.. :-)))

    இப்ப நினைத்தாலும் எனக்கு சிரிப்பா இருக்கிறது :-)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  12. பிரபா,வாழ்த்துக்கள்.எல்லாவற்றையும் ஏற்று அதேநேரத்தில் அதிலிருந்து கொஞ்சம் விலகியுமிருந்து செயல்படுவது என்பது ஒரு அசாத்தியமான கலை.அந்தச் சாமர்த்தியம் நிறையவே உங்களிடம்.
    அதனால்தாம் எல்லோரிடமும் உறவாடி நிலைக்கமுடிகிறது.நானும் ஓரளவு உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்.நன்றி.

    உங்கள் பதிவுகள் பாடல்களை பின்னூட்டம் இல்லாவிட்டாலும் தொடந்து பார்த்துக்கொள்வேன்.
    இன்னும் இன்னும் எழுத்துலகில் நிலைத்து நிமிர்ந்து நிற்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பிரபா.
    அன்புப் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  13. மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபா.

    ReplyDelete
  14. //வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன். ஏனென்றால் அதை நானும் அனுபவித்தவன் தானே.//

    நான் முதன் முதலில் பதிவு எழுத ஆரம்பித்த போது, எனது இரண்டாவது பதிவுக்கு வந்து, வாங்கோ! வாங்கோ! என்று அழைத்தது நீங்கள்தான்.http://bakeera.blogspot.com/2007/09/blog-post.html நான் தொடர்ந்து எழுத தூண்ட அந்த அழைப்பும் ஒரு காரணம்
    வாழ்த்துக்கள் சகோதரரே.

    ReplyDelete
  15. தொடர்ந்து வலைப்பதிவிலும் வானொலித் துறையிலும் பல சாதனைகள் செய்ய வாழ்த்துக்கள் அண்ணா.
    மடத்துவாசல், றேடியோஸ்பதி, உலாத்தல், வீடியோஸ்பதி , ஈழத்து முற்றம் எல்லாமே நன்றாக உள்ளது.

    உங்களது மடத்துவாசல் பதிவு மூலம் தான் நான் பல ஈழத்து கலைஞர்களை தெரிந்து கொண்டேன்.
    அதற்கும் ந‌ன்றிகள்.


    //இது நாள் வரை எமது மண்ணின் மைந்தர்களை, அவர்கள் எழுத்தாளர்கள், நாடக, இசைக் கலைஞர்கள் என்று காட்டக் கூடியவர்களைச் சந்தித்த ஒலிப்பகிர்வுகளை நூலாகக் கொண்டு வரவேண்டும், கூடவே அந்த நூலோடு இணைப்பாக குறித்த ஒலி இறுவட்டுக்களை இணைக்க வேண்டும் என்பதே என் அடுத்த முனைப்பு.//
    நல்ல முயற்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நண்பரே.
    உங்கள் வலையுலக நட்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. அடிக்கடி என்னையும் ஊக்குவித்து சில விடயங்களுக்கு ஒரு அண்ணன் போல் அறிவுரை சொன்னதற்க்கு நன்றிகள்.

    ReplyDelete
  17. வருடா வருடம் கொள்கை பிரகடன உரையை ஆற்றிவிடுகிறீர் ஐயா.. வாழ்த்துக்கள்..

    எண்டாலும் ஒரு உண்மையை மறந்திருக்கக் கூடாது.. ஆமா..

    ReplyDelete
  18. ///கம்போடியா நூலை இன்னும் விரிவாக கலர் கலராக பெரும் புத்தகமாக ஆங்கிலப் பயண இலக்கியத்துக்கு நிகராகக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது////
    கொண்டுவாங்கோ கொண்டுவாங்கோ....

    ///வலையுலக மூதாதையர்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் பேர்வழி என்று புதிதாக வலைப்பதிவுக்கு வரும் இளையோரை ராக்கிங் செய்து பார்க்கும் போது வேதனையோடு பார்க்கின்றேன்.///
    நான் ஏதாவது சொல்ல வேண்டுமா????....நன்றி (கூகிள் தடவைகள்) வலையுலகை விட்டே ஓடியிருப்பேன். நீங்களும் வந்தியத்தேவனும் இல்லாவிட்டால்.

    ///எண்டாலும் ஒரு உண்மையை மறந்திருக்கக் கூடாது.. ஆமா..///
    உம்மைத் ரிக்கெட் போட்டுவந்து அடிக்கோணுமய்யா சயந்தன். உம்முடைய பூடகமான கதையளால மண்டையிலை இருக்கிற மயிரெல்லாம் கொட்டிப்போகுது. எங்களுக்கும் விளங்கிறமாதிரிக் கதையுமன் ஐசே:))

    ReplyDelete
  19. வாழ்த்துகள் !

    கடந்த காலம் அனுபவமாக எப்போதும் கூட இருக்கும் என்பது உண்மை உங்கள் பதிவில் உணர்த்தப்படுகிறது.

    ReplyDelete
  20. வாழ்த்துகள் கானா!

    தாங்கள் கடந்து வந்த பாதையை மீட்(டி)டுப் பார்த்தது நன்று!

    தங்களிடம் எனக்கு வியப்பை ஏற்படுத்தும் அம்சம், தங்களின் இயல்பான தன்மைதான்!

    ReplyDelete
  21. இனிய வாழ்த்து(க்)கள் பிரபா.

    எழுத்து ஒரு தவ(மா)ம்!

    தவம் செய்ய விரும்பு.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  22. தொடர்ந்தும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் பிரபா,

    நீங்கள் சொன்னபடியே அந்த நேர்காணல்களின் தொகுப்பு புத்தகமாக வரவும் வாழ்த்துகள். அப்படி வரும் பட்சத்தில் அது நல்லதொரு ஆவணமாக இருக்கும்...

    ReplyDelete
  24. மனம்நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே!

    உங்கள் உள்ளம் போலவே
    படைப்புகளும் இன்னும் இன்னும் உயரம் காணட்டும்...

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் கானா..

    எளிமையாய் பகிர முடியும் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு மத்தியிலான சிறு இடைவெளி போலத்தான் உள்ளது பதிவுலகில் தங்கள் மீதான நட்பின் நெருக்கம். தங்களது பதிவு உலாத்தல்களின் போது கிடைக்கும் பாரமும் வியப்பும் பெருமிதமும் சொல்லில் தீராதவை..


    அடுத்த கட்ட நகர்விலும் எல்லா விதமான நன்மைகளும் தங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் கானா.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்! உங்கள் பதிவுகளை படிப்பதை விட வாரமிருமுறை உங்கள் குரலை கேட்டுவிடுவதாலும், ட்விட்டரில் கலந்துவிடுவதாலும். பதிவுகளை விட மற்ற இடங்கள் என்னை கானாவை நன்றாக அறிமுகப்’படுத்தி’ இருக்கிறது. வாழ்த்துக்கள்! ரேடியோஸ்பதியில் நிறைய பதிவுகள் போடுங்க..

    ReplyDelete
  27. மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;))

    ReplyDelete
  28. எனது அன்பு நண்பருக்கு,
    எனது அன்பான வாழ்த்துக்கள்.
    தொடருங்கள் நண்பரே :)

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் தல....

    முதலில் ஆர்வத்தில் பதிவுலகுக்கு வந்துவிட்டு பிறகு காணாமல் போகிற கூட்டத்துக்கு நடுவே உங்களுடைய தொடைச்சியான் நான்கு வருட வலைப்பதிவு ஒரு சாதனை தான்...

    பாராட்டுக்கள்... இந்த வலைப்பதிவுகளின் மூலமாக உங்களைப் போல ஒரு நல்ல மனிதரின் அறிமுகம், நட்பு கிடைத்ததில் மிகவும் சந்தோசம்... தொடரட்டும் உங்கள் தேடல்...

    ReplyDelete
  30. அண்ணன் உங்கள் பல பதிவுகளை என்னோடு பொருத்திப்பார்த்து நனவிடைத்தோய்கிற அதேநேரம் இத்தனைக்கும் இவர் எங்கிருந்து நேரமெடக்கிறார் என்று உங்களிடம் அடிக்கடி கேட்கிற கேள்வியை இப்பொழுதும் நினைத்துக்கொள்கிறேன்.
    உங்களுக்கென ஒரு இடத்தை வைத்திருக்கிற உங்கள் பயணம் மேலும் பல படிகளை கடக்க வாழ்த்துக்கள்.

    பேச நிறைய இருந்தும் எதுவும் பேசாமல் இருக்கிற எனக்கு உங்களையெல்லாம் நேரில் பார்க்க சந்தர்ப்பம் அமையும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    வாழ்த்துக்கள் அண்ணன்.

    ReplyDelete
  31. என்னை நான் சமரசம் செய்து கொள்ளாத எந்த விடயத்திலும் என்னை நான் ஆழம் பார்ப்பதும் இல்லை, மற்றவர்களின் மேல் திணிப்பதும் இல்லை. ஆனால் எனக்குத் தோன்றியதை ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்து கொள்வதில் நான் எந்த வித சமரசமும் செய்து கொள்வதேயில்லை

    உண்மையான வரிகள்...

    நல்வாழ்த்துக்கள் நண்பரே,,

    ReplyDelete
  32. பிரபா! தொடர்ந்து உங்களுடன் பயணித்து வரும் சக பயணியின் வாழ்த்துக்கள் (அதே நாலு வருஷம்)

    ReplyDelete
  33. கரவெட்டியான்December 20, 2009 6:43 PM

    தொடரட்டும் பிரபாவின் பகிர்வுகள்!
    வலைப்பதிவுகள் மீதான ஆர்வத்தைத் தூண்டியவை பிரபாவின் பதிவுகள்தாம்.
    மடத்து வாசலுக்கு என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது தமிழ்நாதம் என்பதனையும் நினைவு கூருகின்றேன். சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்வோருளர்; சுவையாகச் சொல்வோருளர்; தெளிவாகவும் சுவையாகவும் துணைத் தகவல்களோடும் சொல்லும் ஆற்றல் கைவரப் பெற்றிருக்கும் பிரபாவுக்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் பிரபா!

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் பிரபாண்ணா..!!

    தங்களது சீரிய வலையுலகப்பணி தொடரட்டும்.

    கம்போடியாவை புத்தகமாக்கியது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

    அன்பு நிறைந்த கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  36. வாழ்த்துக்கள்!

    ReplyDelete