Pages

Monday, June 22, 2009

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை.....

எண்பதுகளில் ஒரு சனிக்கிழமை நாள்.
"பூபாலசிங்கம் மாமா வீட்டார் அம்மன் கோயிலடியில் மடை வச்சிருக்கினமாம், போட்டு வெள்ளன வா" அம்மா காலையிலேயே விண்ணப்பம் வைத்தார். கொடியில் காயப்போட்ட காற்சட்டையை மாற்றிவிட்டு தோதாக சேர்ட் ஒண்டையும் மேலே போட்டு, ஒரு காலால் மோட்டச்சைக்கிளை உதைத்து இயக்கும் பாவனை கொடுத்து வாயில் சவுண்ட் விட்டுக் கொண்டே ஓடுகிறேன் சிவகாமி அம்மன் கோயிலடிக்கு. வழமையா கோயில் திருவிழாக் காலத்தில் தானே இவையின்ர பூசை வாறது, இண்டைக்கென்ன புதுசா மடை என்று மேலே கேள்வி ஓடிக்கொண்டிருக்க கால்கள் அம்மன் கோயிலடியை எட்டுகிறது.

அம்மன் கோயிலடிக்கு பின்புறம் இருக்கும் வைரவரடியில் தான் மாமி ஆட்கள் நிக்கினம். நேரே அங்கே ஓடிப் போய் மோட்டாச் சைக்கிளை நிப்பாட்டுமாற் போல நிக்கிறன். வைரவர் கோயிலின் சுற்றிலே ஒரு பிரகார தெய்வத்துக்கு முன்னால் மடை இருக்குது. என்னது மடை எண்டு பேந்தப் பேந்த முழிக்காதேங்கோ, சாமிக்குப் படைக்கும் படையலை மடை எண்டும் சொல்லுவினம்.
இதென்ன கொடுமையடா சுவாமிக்குப் படைச்சிருக்கிற சாமானைப் பாருங்கோ, சக்கரைப் பொங்கல், வடை, முறுக்குக்குப் பதிலா கோழி இறைச்சி சட்டியிலும், ஆட்டுக்கறி இன்னொரு சருவச்சட்டியிலும் இருக்குது, இது போதாதெண்டு மீன் பொரியல் கூட. நடுவில வாழையிலையில் குத்தரிசி அப்பாவியாகக் குவிக்கப்பட்டிருக்குது. கோயிலடிக்கு வழக்கமா வாற ஐயர் வரேல்ல, வேறு ஒரு ஐயர் வந்து தான் மந்திரம் சொல்லி கற்பூரதீபத்தை சுவாமிக்கும் காட்டி, சுத்தவர இருந்த மச்சச் சாப்பாடுகளுக்கும் காட்டினார்.
சுவாமிக்கும் மச்சம் (அசைவம்) ஆராவது படைப்பினமோ? கண்ணப்பன் எண்ட வேடுவன் படைச்ச கதை கேள்விப்பட்டிருக்கிறன் ஆனா நாங்கள் ஒரு வீட்டில செத்தவீடு நடந்தாலோ, பெண்டுகள் பெரிய பிள்ளை ஆனாலோ கூட கோயில் வாசற்படியை மிதிக்க விடமாட்டோம் முப்பது நாளைக்கு, தெரியாமல் முட்டை போட்டுச் செஞ்ச பிஸ்கட்டைச் சாப்பிட்டாலே கோயில் படி ஏற விட மாட்டா எங்கட அம்மா. இதென்னப்பா ஒரே மாமிசப்படையலா இருக்கு என்று எனக்குள் முளைத்த கேள்விகளுக்கு அப்போது பதில் சொல்ல யாரும் இல்லை. அதுதான் நான் முதலும் கடைசியுமாகப் பார்த்த வேள்வி.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது போர்ச்சூழல் ஓரளவு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது. தனியே இனவிடுதலை என்றில்லாமல் சமூக பொருளாதார விடுதலையாக அது மாறி இருபது வருஷத்துக்கு மேலாக நின்று நிலைத்ததைக் கண்ணால் கண்டிருக்கிறேன். செத்த ஓணானைப் போட்டுக் கசிப்புக் காய்ச்சுவதில் இருந்து, வேள்வி என்று சொல்லப்படும் உயிர்களைப் பலியெடுத்தலும் ஓய்ந்து போனதென்று தான் நினைத்திருந்தேன்.


ஆனால் "அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்" என்று காத்திருந்த தம்பிகள் ஆரம்பித்து விட்டார்கள் தங்கள் பிற்போக்குத் தனத்தை. அண்மையில் யாழ்ப்பாணம் கீரிமலைக்குப் போகும் வழியில் இருக்கும் காட்டு வைரவர் கோயிலான கவுனாவத்தை வைரவர் கோயிலில் அமர்க்களமாக நடந்தேறியிருக்கிறது ஆடுகளைக் கூட்டி வந்து உயிரோடு பலியெடுக்கும் நிகழ்வு.

சாதியம் சொல்லி கோயில் கிணற்றிலேயே தண்ணி அள்ள விடாமல் தடுக்கும் சமூகம், ஆராவது கோயில் படி மிதிச்சால் காலை முறிச்சுப் போடுவோம் என்று ஒரு பகுதி மக்களை தீட்டு என்று ஒதுக்கி வைத்த சமூகம், மூட நம்பிக்கையிலும் தாம் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கின்றார்கள். இனி மெல்ல மெல்ல எல்லாம் விட்டதில் இருந்து தொடங்கும். சாதீயத்திமிரும், பிற்போக்குத் தனமும் கொண்ட எம் சமூகத்துக்குப் படிப்பினைகள் போதாது போல.

சைவபோசணியாக இருப்பதோ, அல்லது அசைவ போசணியாக இருப்பதோ அவரவர் உரிமை, அதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இதெல்லாம் தெய்வத்துக்குச் செய்யும் காரியங்கள், இதை எதிர்த்தால் சாமி கண்ணைக் குத்திப் போடும் என்றெல்லாம் வறட்டு சாக்குகளைச் சொல்லும் சமூகமும் இருக்கத் தான் செய்கின்றது. சாவகச்சேரியிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் ஐடிபி தடுப்பு முகாம்களில் அடைபட்டிருக்கும் லட்சக்கணக்கான எம் உறவுகள் தான் இந்தப் பலியாடுகளின் உருவில் தெரிகின்றார்கள். இப்படியான பிற்போக்குத் தனமான சமூகத்துக்கா இத்தனை ஆயிரம் இளைஞர்கள் தம்மைக் காவு கொடுத்து விடுதலை பெறத் தம்மை மாய்த்தார்கள்?

முருகனுக்கு ரெண்டு வைப் என்று சொல்லி இரண்டு தேடுபவர்களுக்கும், கண்ணனுக்கு நிறைய என்று நிறைய தேடுபவர்களுக்கும், கண்ணப்பனும் மாமிசம் தானே படைத்தான் என்பவர்களுக்கும் செய்யும் பாவங்களுக்கு நிறைய ஜாமீன்கள் இருக்கின்றன.
என்னவோ போங்கள் ஆயிரம் பெரியார்/பிரபாகரன் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாதுடா.

படங்கள் நன்றி: யாழில் இருந்து நண்பர்

24 comments:

  1. //சாவகச்சேரியிலும், வவுனியாவிலும், மன்னாரிலும் ஐடிபி தடுப்பு முகாம்களில் அடைபட்டிருக்கும் லட்சக்கணக்கான எம் உறவுகள் தான் இந்தப் பலியாடுகளின் உருவில் தெரிகின்றார்கள்.//

    உறவுகள் தங்கள் மற்ற உறவுகளின் நிலை, பிரிவுகள் என எதையுமே சிந்திக்காது நிகழ்த்தும் இது போன்ற காரியங்களை இறை பெயரில் செய்வதை ஒரு போதும் இறைவன் ஏற்றுக்கொள்வது் இல்லை !

    அவலமான செய்தி :(

    ReplyDelete
  2. "ஒரு காலால் மோட்டச்சைக்கிளை உதைத்து இயக்கும் பாவனை கொடுத்து வாயில் சவுண்ட் விட்டுக் கொண்டே ஓடுகிறேன்"

    கண்ணில் விரியுது காட்சி. நாங்கெல்லாம் கார்,கப்பல்,பிளேனுன்னு என்னெல்லாமோ ஓட்டியிருக்கோம்.

    ReplyDelete
  3. பலிகொடுத்தல் பற்றி புத்தகங்களில் படித்திருக்கிறேனே தவிர நேரில் கண்டது இல்லை.
    இப்போதும் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்
    என்ற தகவல் எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
    நாம் எவ்வளவு படித்தாலும் திருந்த மாட்டோம் போல.

    // போர்ச்சூழல் ஓரளவு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டது. //
    இவ்வளவு காலமும் பயத்தில் அடங்கி இருந்திருப்பார்கள்.
    இப்ப கிளம்பிட்டாங்க.

    //இப்படியான பிற்போக்குத் தனமான சமூகத்துக்கா இத்தனை ஆயிரம் இளைஞர்கள் தம்மைக் காவு கொடுத்து விடுதலை பெறத் தம்மை மாய்த்தார்கள்?//
    நானும் பல தடவை இப்படி நினைத்திருக்கிறேன்.
    பிற்போக்குத்தனம் மட்டுமல்ல இன்னும் நிறைய.

    :((((((

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ஆயில்யன் மற்றும், நிஜமா நல்லவன்

    ReplyDelete
  5. துபாய் ராஜா said...
    கண்ணில் விரியுது காட்சி. நாங்கெல்லாம் கார்,கப்பல்,பிளேனுன்னு என்னெல்லாமோ ஓட்டியிருக்கோம்//

    அதையும் ஓட்டியிருக்கோமே பாஸ் :)

    ReplyDelete
  6. உங்கள் விமர்சனம் ஆடு பலியிடுதலுக்கு மட்டும் தானா அல்லது கடவுள்-மதம் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான சடங்குகளுக்கும் சேர்த்தா?

    ReplyDelete
  7. இந்த மாதிரி படையல் சின்ன வயசுல சொந்த ஊரில் கண்டது உண்டு.

    போன வருடம் ஊருக்கு சொன்ற போது குலதெய்வம் கோவிலுக்கு சொன்றேன் அங்க அப்போது யாரோ ஒரு குடும்பம் இந்த மாதிரி படையல் போட்டுக்கிட்டு இருந்தாங்க....இன்னும் அதெல்லாம் இருக்கு.

    ReplyDelete
  8. தற்போதைய நிகழ்வுகள் உங்களை எந்தளவிற்கு நோகவைத்துள்ளது, என்பதை தெளிவுப்படுத்துகிறது உங்கள் பதிவு.

    விரக்தியுடன் கோபமும் வெளிப்படுகின்றது.

    என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    ReplyDelete
  9. :)

    பிரபா நல்ல இருக்கு 'பலி' விமர்சனம்.

    அவங்க ஆட்டை யாருன்னு நெனச்சு வெட்டுறாகளோ அவங்களுக்குத் தான் தெரியும்.

    ReplyDelete
  10. 50களின் ஆரம்பத்தில் வதிரி என்னும் கிராமத்திலுள்ள அண்ணமார் கோவிலில் நடைபெற்ற ஆடு பலியிடுதலை அவ்வூரைச் சேர்ந்த சைவப்பெரியார் சூரன் என்பவர் பலிபீடத்தில் தன் தலையை வைத்து ஆட்டை வெட்டுவதற்க்கு முன்னர் தன் தலையை வெட்டுங்கள் எனக் குரல் கொடுத்து அந்த ஊரில் பலியிடுதலை நிறுத்திவைத்தார், அதன் பின்னர் அந்த அண்ணமார் கோவில் பிள்ளையார் கோவிலாக மாறியது.

    இந்த நிகழ்வுகள் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி பல இடங்களில் எழுதியிருக்கிறார்.

    நம்ம ஈழத்து முற்றத்தில் வேள்வி/மடை பற்றி ஒரு சிறப்பு பதிவு போடலாமே!!

    ReplyDelete
  11. நடுவில வாழையிலையில் குத்தரிசி அப்பாவியாகக் குவிக்கப்பட்டிருக்குது.

    :-) Wonderful wordings

    ReplyDelete
  12. அறியாமையால் நடக்கும் கொடூரம்.

    பலிகொடுத்தல் கேள்விப்பட்டதுண்டு. பார்ப்பதற்கு துணிவு இல்லை.

    ReplyDelete
  13. ஆயிரம் கருத்துகள் சொன்னாலும், எனக்கும் உங்களோடு உடன்பாடே. இறைச்சி உண்ணலாம். அதுக்கு இப்படி செய்து உண்ண வேண்டும் என்று இல்லை; கடைசி வருடம் இவ்வளவு நெருக்கடிக்குள்ளும் கவுணாவத்தை வேள்வியில் காலை வெட்டிய ஆட்டு இறைச்சி மாலை எவ்வளவோ காசு செல்வளித்து கொழும்பு கொண்டு வந்து இரவு உண்டு மகிழ்ந்தார்கள். இதில் என்ன சொல்வதே என்றே தெரியவில்லை...! ஆனால் நான் உங்களுடன் உடன்படுகிறேன்...!

    ReplyDelete
  14. வணக்கம் வாசுகி

    இனி மெல்ல மெல்ல எல்லாப் பிற்போக்குகளும் முன்னால் வரப்போகுது போல

    //Anonymous said...

    உங்கள் விமர்சனம் ஆடு பலியிடுதலுக்கு மட்டும் தானா அல்லது கடவுள்-மதம் சம்பந்தப்பட்ட எல்லாவிதமான சடங்குகளுக்கும் சேர்த்தா?//

    ஆடு பலியிடுதல் மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பசியால் வெந்து கொண்டிருக்கையில் ஆயிரம் லீட்டர் பாலாபிஷேகம் செய்வதிலும் உடன்பாடில்லை நண்பா


    //கோபிநாத் said...

    இந்த மாதிரி படையல் சின்ன வயசுல சொந்த ஊரில் கண்டது உண்டு. //

    வருகைக்கு நன்றி தல

    ReplyDelete
  15. தமது வளத்திற்கு உட்பட்டவகையில் தமது விருப்பிற்கு உட்பட்ட கடவுளோடு நெருங்கும் செயற்பாடாக இது பார்க்கப்படுகிறது. கடவுளை இப்படி வணங்கென யார் அதிகாரம் இடமுடியும்? ஆதித்தமிழனின் வழிபாடு இதுதானே.. பின்பன்றோ வழிபடுமுறைகளை மாற்றினார்கள் பின்வந்த ஆரியர்?

    பொங்கலையும் மனுசன் தின்றான். ஆட்டு இறைச்சியையும் மனுசன் தின்றான். பொங்களை இறைக்கு படைக்கலாம். ஆட்டு இறைச்சியை படைக்க கூடாதென்பது என்ன வாதம்?

    விளிம்பு மனிதர்களின் விருப்புக்களில் செல்வாக்குச் செலுத்த நினைக்கிற உயர்குடி எண்ணப்பாடாக உங்கள் கருத்து நோக்கப்படலாம்.

    ReplyDelete
  16. //மொழிவளன் said...

    தற்போதைய நிகழ்வுகள் உங்களை எந்தளவிற்கு நோகவைத்துள்ளது, என்பதை தெளிவுப்படுத்துகிறது உங்கள் பதிவு.//

    வணக்கம் நண்பா

    இந்த மாற்றங்கள் மூலம் எப்படியானதொரு மோசமான உலகுக்கு நம் சமுதாயம் போகின்றது என்ற கவலையும் வருகின்றதல்லவா.

    //கோவி.கண்ணன் said...


    அவங்க ஆட்டை யாருன்னு நெனச்சு வெட்டுறாகளோ அவங்களுக்குத் தான் தெரியும்.//

    வாங்க கோவிக்கண்ணன்

    ஆட்டை வீட்டை கூட்டிப்போய் வெட்டலாமே :)


    வணக்கம் வந்தி

    பலியிடுதல் ஆரம்பத்தில் இருந்த சடங்கு என்றாலும், காலமாற்றங்களுக்கு ஏற்ப இவை ஒதுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு உண்டு. பதிவு போடுவோம்.

    ReplyDelete
  17. இதை எதுக்கு பண்றாங்கன்னு புரியவே மாட்டேங்குது. எடுத்துச் சொன்ன புத்தரையும் சாமியாக்கிடற ஊரு, வெளக்குன பெரியாரை திட்டற ஊரு, என்ன பண்றது?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

    ReplyDelete
  18. இதெல்லாம் பெரியாரின் சீட கோடிகளிடம் கேட்டுப் பாருங்கள். பார்ப்பான் செய்த சதி என்று சாதிப்பார்கள்.

    ReplyDelete
  19. வருகைக்கு நன்றி சந்தனமுல்லை, அனாமோதய நண்பர், மாதேவி, கதியால் மற்றும் ராப்

    ஒத்த சிந்தனையோடு நீங்கள் இருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

    // Anonymous said...

    தமது வளத்திற்கு உட்பட்டவகையில் தமது விருப்பிற்கு உட்பட்ட கடவுளோடு நெருங்கும் செயற்பாடாக இது பார்க்கப்படுகிறது. கடவுளை இப்படி வணங்கென யார் அதிகாரம் இடமுடியும்? ஆதித்தமிழனின் வழிபாடு இதுதானே.. //

    வணக்கம் நண்பரே

    இன்றைய காலகட்டத்தில் பொங்கல் பொங்கி மடை வைப்பதை விட 800 ஆடுகளைப் பலியிடுவது வளத்துக்குட்பட்ட விடயமா?

    ஆதியில் காளிக்குப் பச்சிளம் பாலகனையோ, கன்னிப்பெண்ணையோ பலிகொடுத்ததைக் கூட ஆதி வழக்கம் என்று தொடரலாமா என்பதே என் கேள்வி. அசைவ பட்சணிகளாக யாரும் இருக்கலாம் அது அவரவர் உரிமை, ஆனால் கோயிலை வைத்துக் கொண்டு இப்படியான மூடச் சம்பிரதாயங்களை இன்னும் தொடரவேண்டுமா.

    ReplyDelete
  20. Your view on our cultural idiotic tradition is appreciated. However, during the so called last war of Tamil Eelam, I phoned my family and wanted to know how the situation is in Jaffna; because our heros and vanni people are beeing battered; The answer was "oh yeh, there are many weddings to attend and our inuvil kanthan's festival is comming along too;
    What can I say!

    Regards,

    Pissed off Tamilan

    ReplyDelete
  21. கரவெட்டியான்,கனடாJuly 16, 2009 12:32 PM

    இந்த வேள்வியின் குருதிமயமான படங்களைப்பார்த்து உறைந்துபோனேன்.'80களின் தொடக்கத்தில் வேள்விக்குத் தயாராக நின்ற ஆடுகளை பருத்தித்துறை- தம்பசிட்டியில் ஒரு கோயில் முன்றலிற் பார்த்திருக்கின்றேன்.

    சில நூற்றாண்டுகளுக்கு முன வட ஐரோப்பிய Viking பூர்வகுடிகள் கப்பல் வெள்ளோட்டத்தின்போது மனிதனையே பலிகொடுத்துவந்தன்ர். கால ஓட்டத்தில் இணைந்து அந்தச் சடங்கு இப்போது ஒரு Champagne/Sparkling Wine போத்தல் உடைத்தலோடு முடிந்துவிடுகின்றது. பெரும்பாலான பூர்வ குடிகள் நரபலியில் ஈடுபட்டவைதாம்.
    (பிரபா,Mel Gibsonஇன் Apocalypto பார்த்திருப்பீர்கள்)
    இன்னமும் ஆதிகாலத்துச் சடங்குகளைக் கட்டியழுதுகொண்டிருக்கவில்லை அவர்கள். நியாயப்படுத்தமுடியாத கொடூரச்செயலிந்த வேள்வி.

    தமிழ்நாட்டிற்கூட விலங்குகள் பலியிடப்படுவது தடைசெய்யப்பட்டபோது வரிந்துகட்டிகொண்டு எதிர்த்தவர்களிற் பலர் முற்போக்குவாதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்வோர்.

    பெரியார் சூரன் அவர்களை நினவுகூர்ந்தமைக்கு நன்றி வந்தியத்தேவன்.

    ReplyDelete
  22. Namathangam has left a new comment

    Savam thinnum Savamkal.

    ReplyDelete