Pages

Monday, May 04, 2009

என் கம்போடியப் பயண நூல் பிறந்த கதை


நட்பு, பகைமை, குரோதம், நம்பிக்கைத் துரோகம், ஆட்சிக் கவிழ்ப்பு, நில ஆக்கிரமிப்பு, அரச பயங்கரவாதம். ஒரு யுத்த பூமியில் இவையெல்லாம் சர்வ சாதாரணம். உலகமெங்குமான பொது வழமை.

கம்போடியா மட்டும் விலகியோட முடியுமா? அங்கும் அதுதான் நடந்தது. இரத்தம் தோய்ந்த இம்மண்ணில் எழுதியதற்கான வினையை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கம்போடிய நாணத்தின் பெறுமதி அதள பாதாளத்தில் விழுந்து விட்டது. வாழ்க்கைத் தர படு மோசமாகி விட்டது. கை கால் முடமான சந்ததியும், அப்பா, அம்மா, உற்றார் உறவினர்கள் யாரென்றே தெரியாத பரம்பரையுமாக மக்கள் வாழ்வினை இழந்திருக்கிறார்கள். போரின் வடுக்கள் இன்னமும் முற்றாக அழிந்து விடவில்லை.

பதவி வெறியும், என்னை விட்டால் யாரிங்கே உண்டு என்று எகத்தாளம் இட்ட ஆட்சியாளரும் அவர் தம் அடிப்பொடிகளும் இன்று காணாமல் போனோர் பட்டியலிலும், சிறைக்கதவுகளின் பின்னாலும் இருக்கின்றனர்.

இப்போது தான் அமைதிச் சுவாசத்தை ஏற்றி கொண்டிருக்கிறது அம்மண்.

கம்போடியாவின் யுத்த வரலாறு நீண்டது. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் அது ஆரம்பிக்கிறது. அதுவரையான கம்போடிய மன்னராட்சி இரண்டாம் ஜெயவர்மனின் கைமர் பேரரசுக் காலத்துக்கு மாறியது. அது தான் புள்ளி. அத்தோடு கம்போடியாவின் ஆளுகை வந்தேறி வென்றார்களிடம் கைமாறியது.

கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து மன்னர்கள் அவ்வப்போது படையெடுத்து மதம் பரப்பினார்கள். தேரவாத பெளத்தம் அப்போது தான் ஆரம்பிக்கிறது.

கம்போடியா ஒரு மத்தளம் போல. இரண்டு பக்கமும் அடிவாங்கிக் கொண்டிருந்தது. இந்தப் பக்கம் வியட்னாம். அப்பால் தாய்லாந்து. இரண்டு பேருமே மாறி மாறி படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். கி.பி 19 ஆம் நூற்றாண்டு வரையான இந்தக் காலம் கம்போடியாவின் கறை படிந்த காலம்.

1890 இல் கம்போடியா ஒரு பெரும் போரைச் சந்தித்தது. பெரும் போர். பேரவலத்தைத் தந்த போர். அதுவரை வீரத்தில் வீறு நடை போட்ட கம்போடியாவின் கால்களை முடமாக்கிப் போட்ட போர். கம்போடியாவின் வீரம் இந்தப் போரின் பின் காணாமல் போனது. அரசியல் ஸ்திரம் ஆட்டம் காணத் தொடங்கியது.

பக்கத்து நாடுகள் விட்டுவைப்பார்களா? ஆளுக்காள் நாட்டைக் கூறு போட முனைந்தனர். ஏதாவது செய்தாக வேண்டும். அப்போதைய கம்போடிய மன்னன் Norodom க்கு வேறு வழி தெரியவில்லை. பக்கத்து நாட்டுக்காரர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எங்கோ இருந்த பிரான்ஸ் நாட்டின் காலில் விழுந்தான். காவலன் என்ற பெயரில் பிரான்ஸ் உள் நுழைந்தது.

சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதையென்பார்களே. அதுதான் கம்போடியாவில் நடந்தது. பிரான்ஸ் தொடர்ந்து தொண்ணூறு ஆண்டுகள் கம்போடியாவில் ஆதிக்கம் செலுத்தியது. இல்லையில்லை, கபளீகரம் செய்தது.

கோயில்களில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் குவியல் குவியலாக திருடப் பட்டன. அற்புதமான சிற்ப சிலைகள் உடைத்தும் பெயர்த்தும் எடுக்கப் பட்டன.

1953 ஆம் ஆண்டு பிரான்ஸ் விடை பெற்றது. கொள்ளையடிப்பதற்கு ஏதும் மீதமிருக்கவில்லைப் போலும். அப்போதைய கம்போடிய மன்னன் Sihanouk , People’s Socialist Community (Sangkum Reastr Niyum) என்ற அரசியல் கட்சியையும் ஸ்தாபித்தான். 1955 இல் குடியாட்சி மலர்ந்தது. Sihanouk இவனே நாட்டின் தலைவனும் ஆனான். ஆனால் கோர யுத்தம் கம்போடியாவைத் தன் பிடியில் இருந்து விட்டு விடவில்லை.

1960 களில் நிலவிய வியட்னாமிய யுத்தத்தின் போது கம்போடியா நடுநிலைமையைத் தான் முதலில் பேணியது. சோவியத் நாட்டிற்கோ அல்லது அமெரிக்காவிற்கோ சார்பற்ற நிலை அது. இடையில் என்ன நடந்ததோ. அமெரிக்காவுடனான இராஜ தந்திர உறவினை வெட்டி விட்டு வியட்னாமிய கம்யூனிஸ்ட் போராளிகளுக்குத் தன் ஆதரவுக் கரத்தை நீட்டினார் Sihanouk.

வியட்னாமியப் போராளிகளின் பாசறைகள் கம்போடியாவெங்கும் பரவின. ஆனால் துரதிஸ்டம் மீளவும் அமெரிக்காவோடு கை கோர்த்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தை வழங்கியது. கம்போடிய பொருளாதாரம் மீள முடியாமல் வீழத் தொடங்கியது. வியட்னாம் போராளிகளா? சொந்த நாட்டின் பொருளாதாரமா? வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் கை குலுக்கியே ஆக வேண்டும். பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அப்போதைக்கு அது ஒன்றே தெரிவு.

அமெரிக்காவோடு Sihanouk கூட்டுச் சேர்ந்தார். அமெரிக்காவின் கடைக் கண் பார்வை இப்போது உடனடித் தேவை. என்ன செய்யலாம். இருக்கவே இருக்கிறது கம்போடிய மண்ணில் வியட்னாம் போராளிகளின் பாசறைகள். காட்டிக் கொடுத்து விடலாம்.
"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" நூலிலிருந்து

0000000000000000000000000000000000000000000000000000000


"எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு" என்று என் அம்மா ஊரில் இருக்கும் போது என்னைப் பார்த்துச் சொன்னது போல, ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.

பயணங்களிடையே காணும் வரலாற்றின் எச்சங்கள், விதவிதமான மனிதப் பண்புகள், வாழ்வியல் முறைகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அவதானித்து நெஞ்சில் இருத்தும் பண்பை இன்னும் அதிகம் எனக்கு விளைவித்தது பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் "தேசாந்தரி" என்னும் பயண அனுபவப் படைப்பிலக்கியம்.

கடந்த வருஷம் பத்து நாள் குறுகிய கால விடுமுறையாக ஈஸ்டரை ஒட்டி எனக்கு வாய்த்தது. வெளிநாட்டுப்பயணம் கிளம்பி இரண்டுவருட இடைவெளியாகி விட்டது. வெளிநாடு எங்காவது கிளம்பலாம் என்றால் எனக்கு முதலில் தோன்றியது கேரளாவில் கடந்தமுறை விடுபட்ட பகுதிகள் தான். ஆனால் இருக்கும் பத்து நாளுக்கு இதுவெல்லாம் தேறாதென்று திடீரென்று முடிவு கட்டி கம்போடியாவை மையப்படுத்தி என் விடுமுறையை மாற்றிக் கொண்டேன். ஏற்கனவே கம்போடியாவுக்குச் சென்று திரும்பியவர்களிடமும் சில தகவல்களைப் பெற்றுக் கொண்டேன். கம்போடியா என்றாலே அங்குள்ள பிரமாண்டமான "அங்கோர் வாட்" ஆலயமும் கொடுங்கோலன் பொல் பொட்டின் ஆட்சியுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு, இந்தப் பயணத்தின் முன்னேற்பாடுகளிலும், பின்னர் கம்போடியாவில் வாய்த்த சிறப்பான பயண அனுபவமும் எனக்கு இந்த நாட்டின் முழுமையான பரிமாணத்தை அந்தப் பத்து நாளும் காட்டி விட்டது. இந்தச் சுவை மிகு அனுபவத்தை, ஒரு காலத்தில் ஆண்டு செழித்த இந்திய வரலாற்றுத் தொன்மங்களைப் பலரும் அறிய வேண்டும், கம்போடிய மண் சென்று இவற்றை நேரே காணும் பாக்கியத்தை ஒரு பயண இலக்கியம் மூலம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தோன்றியதை இப்போது பிரசவமாகியிருக்கும் "கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி" என்ற இந்த நூல்.

எனக்கு நடை பழக்கி எங்களூர் குச்சொழுங்கை எல்லாம் கூட்டிக் கொண்டு உலாத்தி இப்போது மேலுலகில் களைப்பாறும் என் அம்மம்மாவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்கியிருக்கின்றேன்.

என் வாழ்வில் மறக்கமுடியாத மனிதரிகளில் ஒருவரான உடன்பிறவாச் சகோதரர், மூத்த ஊடகவியலாளர் எஸ்.எழில்வேந்தன் அண்ணா தந்த நூல் நயவுரை குறித்தும் இங்கே நிச்சயம் சொல்லி வைக்க வேண்டும். ஒரு வாரகாலத்தில் முழுமையான எழுத்துப் பிரதியைக் கொடுத்து எனக்கு உங்கள் நயவுரை வேண்டும் என்று கேட்டபோது "ஓம்/இல்லை சொல்ல மாட்டேன், காரணம் வேலைப்பழு தம்பி" என்று சொன்ன எழில் அண்ணா மூன்றே நாட்களில் கச்சிதமாகத் தன் மனப்பதிவை எழுதி அனுப்பி விட்டார். வெறுமனே நூலில் பொதிந்திருக்கும் விடயதானங்கள் மட்டுமன்றி என்னைச் சந்தித்த நாள் முதல் அவர் மனப்பதிவில் இருந்தவற்றை எழுத்தில் வடித்த போது உண்மையில் எனக்கு கண் கலங்கியது.

எழில் அண்ணா அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 1997 இல் வந்த போது அப்போது மெல்பனில் பல்கலைக்கழகப் படிப்பில் இருந்த என் முகம் காண நட்பில் என்னைச் சந்தித்த அந்த நிகழ்வை இப்படிச் சொல்கின்றார்.
அப்போது முகம் தெரியாதிருந்த அந்த இளைஞர், நான் சிட்னியிலிருந்து நிகழ்ச்சி படைக்கும் வேளைகளில் மெல்பேணிலிருந்து என்னைத் தொடர்புகொள்வார். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துவிட்டாரென்றால் நிகழ்ச்சியின் தரம் உச்சத்தைத் தொடும் அளவிற்கு, நிகழ்ச்சியின் போக்கையே மாற்றிவிடுவார். வெறும் பொழுதுபோக்கிற்காக நடத்தும் அந்த நிகழ்ச்சிகள் இலக்கியத்தரமிக்கதாகவும்,வாழ்வியல்,கலாசார விழுமியம் சார்ந்ததாகவும் புத்துருக்கொண்டு, வானொலியில் பேசாதவர்களையே பேச அழைத்துவந்துவிடும். அதைத்தவிர இடையிடையே அழைத்து “அண்ணா.இப்போ வந்த நேயர் இன்றைய நிகழ்ச்சிக்கு வந்த 100வது நேயர்” ,“இது 125வது நேயர்’ என்று புள்ளிவிபரமும் தந்துவிடுவார்.

கம்போடியா அல்லது கம்பூச்சியா என்ற பெயரோடு எங்களுக்கு மிகப் பரீட்சயமாக இருந்தவை, ‘கெமரூச்’ தீவிரவாத இயக்கமும், பெல் பொட்டும், அவன் செய்த படுகொலைகளும் , அவன் அடுக்கிவிட்டுப்போன மனித எலும்புகளும் கபாலங்களுந்தான். குறிப்பாக செய்தி வாசிப்பாளனாக இருந்த எமக்கு கெமரூச் என்ற பெயர் எப்படி உச்சரிக்கப்படவேண்டுமெனச் சொல்லித்தந்தது நினைவுண்டு.

ஆனால் தம்பி கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். அதுவும் கம்போடியாவின், தென்னிந்தியத்தொடர்புகள், மதங்கள் மற்றும் ஆட்சி அரசுகள் எனத் தான் பார்த்து ரசித்தவற்றை மட்டும் அப்படியே எழுதாமல், பார்த்தவற்றைக் கொண்டு பார்க்க முடியாமற்போனவற்றை நுட்பமாக ஆய்ந்து அறிந்து எழுதியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன.! காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவிவிட்டிருக்கிறார். “நீயும் போய்ப் பார் இந்த இடங்களை” எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள். குறிப்பாக, சிதைந்து போயிருக்கும் ஆலயங்கள் குறிப்பாக சைவ ,வைஷ்ணவ ஆலயங்கள் தொடர்பான எழுத்துகள் நெருடுகின்றன. உலகெங்கும், பெளத்த சிலைகள் என்பவை, புதிதாக முளைப்பதற்கென்றே உருவாகின்றனவோ என என்ணத் தோன்றுகிறது.

இப்படியே தொடர்கின்றது எழில் அண்ணாவின் மனப்பதிவு.

கம்போடிய நூல் வரவேண்டும், அதுவும் வடலி வெளியீடாக இருக்க வேண்டும் என்ற முனைப்போடு நின்றவர் நண்பர் சயந்தன். இணையத்தில் பதிவு போடுவது என்பது மேடை நாடகம் நடத்துவது மாதிரி, அவ்வப்போது குறை நிறைகளைப் பகிரும் வாசகர்களின் கருத்துக்களால் அவற்றை அடிக்கடி செம்மையாக்கும் வசதி உண்டு. ஆனால் இதை நூலில் கொண்டு வருவது என்பது திரைப்படம் எடுப்பது மாதிரி. பலர் கைக்கும் போய்ச் சேரும் விஷயம். கூடவே வரலாற்றுப் பகிர்வுகளைத் தரும் போது உச்சபச்ச அவதானிப்பும், கவனமும், முறையான உசாத்துணையும் இருக்கவேண்டும். இந்த முயற்சியில் என் கம்போடியப் பயணப் பதிவுகளை கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு மேல் நேரம் எடுத்துப் பதிவாக்கினேன். அங்கிருந்து ஆரம்பிக்கின்றது சயந்தனின் பணி.

ஒரு நல்ல நூல் வருவதற்கு முறையான பதிப்பாசிரியர் பணி இன்றியமையாதது. பயண நூலில் சுவாரஸ்யம் குன்றும் இடங்களில் இன்னொரு அத்தியாயத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவது, ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கச்சிதமான தலைப்பு வைப்பது, zip file ஆக நான் அனுப்பிய 2000 இற்கும் மேற்பட்ட படங்களை அந்தந்த இடத்தில் வருமாறு பார்த்துக் கொள்வது, எந்தப் படத்தைக் கலரில் இட்டால் சிறப்பாக இருக்கும் என்று தீர்மானிப்பது என்று சயந்தனின் உழைப்பு இந்த நூலில் விரவியிருக்கின்றது. அத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை :)

சயந்தனின் பணி அகிலனுக்கு மாறியது, குறித்த நேரத்தில் அச்சுப் பணிக்கு நூலைத் தயார்படுத்தி அனுப்பி வைப்பதில் இருந்து முறையாக அவற்றை விநியோக வழங்கலை ஏற்படுத்துவது வரை அகிலனின் பங்கு இருந்தது. இவற்றினிடையே அகிலன் இன்னொரு நூலுக்கு பதிப்பாசிரியராக இருக்க வேண்டிய பொறுப்பும் வேறு.

சயந்தன், அகிலன் ஆகிய இருவரும் வடலி என்ற பதிப்பகத்தை எவ்வளவு நேசிக்கின்றார்கள் என்பதற்கு மேலே நான் சொன்னது சின்ன சாம்பிள் மட்டுமே. வடலியின் பயணம் சீரானதும் , நெடுந்தூரமும் இருக்கும், இருக்க வேண்டும் என்று இருவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த வேளை சொல்லிக் கொள்கின்றேன்.

இணையத்தில் பதிவாக வந்தபோதும், நூலாக வரப்போவது தெரிந்தும் ஆனந்தத்தோடு வாழ்த்துக்களைப் பரிமாறிய அன்பு உள்ளங்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்தக் கம்போடிய நூல் வெளிவருவது வரை கிடைத்த அனுபவங்கள் பல. ஆனால் இந்த நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.

கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி இணையத்தில் பெற

36 comments:

  1. வாழ்த்துகள் கானாஸ்! மேலும் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துகள்! உங்கள் அம்மம்மா நிச்சயம் பெருமைக் கொள்வார்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பிரபு!

    மூக்கோடு மூக்கு தொட்டிருக்கும் அட்டைப்படம் அருமை!

    ReplyDelete
  3. மனம் மகிழ வாழ்த்துகிறேன் சகோதரா...!

    வடலி பதிப்பகத்திற்கும் என் வாழ்த்துக்கள்!

    :)

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் பிரபா..!

    ReplyDelete
  5. பெருமிதப்படுகிறேன் நண்பா!

    உனது கிரீடத்தில் இன்னொரு வெற்றிச்சிறகு இந்த பயண அனுபவம் புத்தகமாக்கியது.

    மேன்மேலும் வெற்றிகள் குவிக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்து வெளிக்கொணர்ந்த வடலி பதிப்பகத்தினருக்கும், நண்பர் சயந்தன், அகிலனுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  7. //மூக்கோடு மூக்கு தொட்டிருக்கும் அட்டைப்படம் அருமை!//


    நான் நினைச்சேன் வெய்யிலான் சொல்லிட்டாரு சூப்பரேய்ய்ய்! :))

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அண்ணே..

    நல்ல எழுத்துக்கள் எல்லாரிடமும் போய் சேர வேண்டுமெனில் புத்தகமாக அச்சிடுவது சிறந்த ஒரு வழிதான். வெற்றிப்பெற வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  9. வாழ்த்துகள்...:-)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் கானா..
    பல வெற்றிகள் இதுபோல காணக்கிடைக்கட்டும்..

    ReplyDelete
  11. வாழ்த்துகள் !மிக்க மகிழ்ச்சி!

    கம்போடியாவில் மாதக்கணக்கில் களித்தவன் என்ற முறையில் புத்தகத்தை படிக்க ஆவலாயிருக்கிறேன்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் பிரபா..!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் அண்ணா.
    அட்டை வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.

    //மூக்கோடு மூக்கு தொட்டிருக்கும் அட்டைப்படம் //
    அட எப்படி இப்பிடியெல்லாம் படம் எடுக்கிறீங்க.

    வடலி பதிப்பகம் மேலும் வளர பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  14. நிறைய சந்தோசமும் வாழ்த்துக்களும்!

    நான் அடிக்கடி ஆச்சரியப்படுற விசயம் உங்களிட்டையும் சொல்லி இருப்பேன் எப்படி எல்லாத்துக்கும் நேரம் ஒதுக்குறியள்...

    வாழ்த்துக்கள் அண்ணன்..!

    முக்கியமாய் வடலி குழுவினருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகளும்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் பிரபு



    rajendrann

    ReplyDelete
  16. அத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை :)//

    அதுக்குபிறகும் புறங்கையால் ஒதுக்கி ஒதுக்கி விட்டால்.. போங்கய்யா.. நீங்களும் உங்கட கம்போடியாவும்.. எனச் சொல்லும் கடுப்பில் இருந்தேன் என்பதை இங்கே தாழ்மையுடனும் அன்புடனும் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  17. மிக்க நன்றி சந்தனமுல்லை, வெயிலான், ஆயில்யன், டக்ளஸ் மற்றும் சென்ஷி

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் தல ;))

    \\இந்தக் கம்போடிய நூல் வெளிவருவது வரை கிடைத்த அனுபவங்கள் பல. ஆனால் இந்த நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.\\

    உண்மை....;))

    ReplyDelete
  19. கரவெட்டியான்May 05, 2009 12:52 AM

    வாழ்த்துக்கள் பிரபா !
    தமிழில் மணியனின் பயணக்கதைகளுக்குப் பிறகு நானும் சுவைத்துப் படித்தது எஸ்.ராமகிருஷ்ணனின்
    'தேசாந்திரி'தான்.
    இப்போது, 'கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி'.
    மணியன் - எஸ்.ராமகிருஷ்ணன் - கானா பிரபா. இது காலஒழுங்கில் என்னுடைய வரிசை.
    கனடாவில் நூல் கிடைக்குமா ?

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  21. ///நூல் இவையெல்லாம் கடந்து கைக்குக் கிடைத்த போது வரும் ஆனந்தம் இருக்கிறதே அது முதல் குழந்தை பெறும் சுகத்துக்கு ஈடானது.///

    நிறைய சந்தோசமும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  22. My god. this was my dream. u did it. hope u attached photos. I was enjoying these temples in google Earth. Have u visited the sivan temple next to angorwat. Simply awsome. I visited through Google earth. lol.

    ReplyDelete
  23. உங்களுடைய இந்த புத்தகமும், அகிலனின் மரணத்தின் வாசனையும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட முயற்சி செய்யுங்கள், நம்முடைய துயரமும் , மகிழ்ச்சியும் அடையாதவரையும் அடைய வேண்டும்.

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அண்ணா!

    ReplyDelete
  25. மைபிரண்ட், டொன் லீ, கயல்விழி முத்துலெட்சுமி, ஜோ, புதுவை சிவா

    மிக்க நன்றி

    ஜோ

    நியாயமாகப் பார்த்தால் நீங்கள் உங்கள் அனுபவங்களைக் கோர்த்து ஒரு புத்தகம் தந்திருந்தால் இந்த நூல் வரவேண்டிய அவசியம் இருக்காது.

    ReplyDelete
  26. மிக்க நன்றி புதுவை சிவா

    வாங்கோ வாசுகி

    கூட இருந்த வழிகாட்டியும் நல்ல ஆளா அமைஞ்சார் அதுவும் ஒரு காரணம், இப்படிப் பொருத்தமான இடங்களைத் தேடிப் பிடித்து எடுக்க.


    தமிழன் கறுப்பி

    அடிக்கடி நேரத்தைக் கேட்டு உசுப்பேத்தாதேங்கோ :)


    மிக்க நன்றி ராஜேந்திரன்

    ReplyDelete
  27. //அத்தோடு நூலின் அட்டையை ஓவ்வொன்றாக அனுப்பிக் காட்ட நானும் புறங்கையால் ஒதுக்கித் தள்ள என்று கடைசியில் 12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை :)//

    12வது முறை தேர்வா!அழகிய அட்டை அலங்கார வேலை.வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
  28. சயந்தன்

    குறும்பு :)

    தல கோபி,

    மிக்க நன்றி

    கரவெட்டியான்

    அன்புக்கு நன்றி, கனடாவில் வருவதற்கான ஒழுங்குகளை செய்கிறோம், தற்சமயம் இணையம் ஊடாகத் தான் நடக்கிறது

    மிக்க நன்றி ஆதிரை

    ஜீவராஜா, நன்றிகள்

    குடுகுடுப்பை

    அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்தால் நிச்சயம் மகிழ்ச்சியே, அகிலனுடையதை முதலில் முன்னெடுப்போம்.

    அன்புக்கு நன்றி மாயா

    ராஜ நடராஜன்

    மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  29. வாழ்த்துக்க‌ள் பிர‌பா.

    ReplyDelete
  30. வாழ்த்துகள் ஆசிரியர் பிரபா

    புத்தகத்தை வெளிக்கொணர்ந்த வடலி பதிப்பகத்தினருக்கும், நண்பர் சயந்தன், அகிலனுக்கும் பாராட்டுக்கள். நண்பர் குடுகுடுப்பை சொன்னது போல பிற மொழிகளில் மொழி பெயர்ச்சி செய்ய முயற்சிகலாமே.


    அடுத்து ஆஸ்திரேலியா பற்றிய நூலா
    :)


    அருண்

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் பிரபா...
    தொடர்ந்து எழுதுங்கள் ...... காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  32. அன்பின் பிரபா

    நூல் வெளி வர இருந்ததைப் பற்றியும் பின்னர் வெளிவந்து விட்டதான தகவலையும் அறிந்தேன்.உடனே நூலின் அட்டைப் படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் உங்கள் வலைப்பக்கம் வந்து பார்த்தபோது நூல் பற்றிய தகவலைக் காணக்கிடைக்கவில்லை.இன்று தான் மீண்டும் இந்தப் பக்கம் வரக் கிடைத்தது.
    அட்டைப் படம் நேர்த்தியாக உள்ளது. முன்னட்டையை விடவும் பின்னட்டை வசீகரமாக உள்ளது.
    "12 வது அட்டையில் தான் ஒரு முடிவுக்கு வந்தது எங்கள் அட்டை அலங்கார வேலை"
    12 அட்டைப் படடங்கள் வரை வடிவமைத்த பதிப்பகத்தாரின் பொறுமையை பாராட்டத்தான் வேண்டும்.

    "எனக்கு நடை பழக்கி எங்களூர் குச்சொழுங்கை எல்லாம் கூட்டிக் கொண்டு உலாத்தி இப்போது மேலுலகில் களைப்பாறும் என் அம்மம்மாவுக்கு இந்த நூலைக் காணிக்கையாக்கியிருக்கின்றேன்"

    இந்த அம்மம்மாக்களின் அன்புக் கைகளில் அவர்களுக்குக் காணிக்கையாக்கிய நூலைக் கொடுத்து அவர்கள் அடையும் ஆனந்தத்தைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு வாய்த்திருக்குமானால்......

    ReplyDelete
  33. வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  34. மிக்க நன்றி டிஜே

    வாங்க அருண்

    ஆஸ்திரேலியா குறித்து ஒரு நூல் எல்லாம் போதாது :0

    மிக்க நன்றி சக்தி

    வணக்கம் சகோதரி பஹீமாஜஹான்

    நீங்கள் சொன்ன அந்த நிகழ்வு மட்டும் நடந்திருந்தால் அது என் வாழ்நாளின் பேறாக இருந்திருக்கும்.

    மிக்க நன்றி மது

    ReplyDelete
  35. அன்பின் நண்பருக்கு...

    மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். ஈன்றெடுத்த குழந்தையை முதன்முதலாகக் கைகளில் ஏந்தும் தாயின் மனநிலையைப் பெற்றிருப்பீர்கள்.

    பாராட்டுக்கள் !!
    தொடரட்டும் !!!

    ReplyDelete
  36. மிக்க நன்றி ரிஷான்

    ReplyDelete