Pages

Monday, August 20, 2007

நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா


யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. இது தமிழகத்திலுள்ள இடமொன்றின் பெயராகும். தமிழகத்திலே ஆதிச்ச நல்லூர், சக்கரவர்த்தி நல்லூர், வெண்ணை நல்லூர், சேய் நல்லூர், வீரா நல்லூர், சிறுத்தொண்டர் நல்லூர், கடைய நல்லூர், சிங்க நல்லூர் முதலிய பல இடங்களுண்டு. இத்தகைய இடமொன்றிலிருந்து இங்கு வந்தோர் தமது தாயகப் பெயரை இப்புதிய இடத்திற்குச் சூடியிருப்பர். யாழ்ப்பாணத்திற்கு தெற்கே பூநகிரி, திருகோணமலை முதலிய இடங்களிலும் நல்லூர் என்ற பெயர் தாங்கிய ஊர் உண்டு.நல்லூரிலே உள்ள பழைய பிரதான சிவாலயங்களிலொன்று சட்டநாதர் ஆலயமாகும். தமிழகத்திலே திருஞான சம்பந்தர், முத்துத் தாண்டவர் முதலியோர் பிறந்த சீர்காழியிலும் சட்டநாதர் ஆலயமுண்டு என்பதும் இங்கு ஒப்பிட்டு நோக்கற்பாலது.

இவ்வாறு பலதிறப்பட்ட மூலாதாரங்களைப் பயன்படுத்தியே யாழ்ப்பாண அரசு குறிப்பாக அதன் தலைநகர் நல்லூர் பற்றி ஓரளவாவது அறியக்கூடியதாகவுள்ளது. ஏற்கனவே முக்கியத்துவம் வாய்ந்த ஒருபகுதியாயிருந்து சோழப் பேரரசு தொடர்ந்து ஏற்பட்ட பாண்டியப் பேரரசு ஆட்சிக் காலங்களிலே முக்கியத்துவம் பெற்ற நல்லூர், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் உதயம் பெற்ற தமிழரசின் தலைநகராகச் சுமார் நான்கு
நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது. இவ்வரசு இலங்கையிலுள்ள வட பிராந்தியத்திலுள்ள அரசு போலக் காணப்படினும், இதிலிருந்து ஆட்சி புரிந்த அரசர்கள் முழு இலங்கையிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்று வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்விராசதானி அமைந்திருந்த உண்மையான இடத்தையோ அல்லது அதன் விஸ்தீரணத்தையோ பூரணமாக அறியக் கூடிய அளவிற்குத் தொல்லியற் சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்த சான்றுகளை வைத்துக் கொண்டு நோக்கும் போது இவ்விராசதானி தற்போதய நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள மூன்று மைல் சுற்றுவட்டத்தினுள் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. இதன் எல்லைக்குள் வரலாற்றுப் பழமை வாய்ந்த கொழும்புத் துறையும், பண்ணைத் துறையும் அடங்குகின்றன.
இதை யாழ்ப்பாண வைபவமாலையில் வரும் ஆதாரங்களும் போர்த்துக்கீச ஆசிரியர்களின் குறிப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன.

இவ்விராசதானியின் அமைப்புப் பற்றி யாழ்ப்பாண வைபவ மாலையில் வரும் வர்ணனை இப்படிச் சொல்கின்றது.

"நாலு மதிலும் எழுப்பி வாசலும் ஒழுங்கா விடு
வித்து மாடமாளிகையும் , கூட கோபுரங்களையும்,
பூங்காவையும் பூங்காவன நடுவிலே
ஸ்நான மண்டபமும், முப்படைக் கூபமும் உண்
டாக்கி அக்கூபத்தில் ஜமுனா நதித் தீர்த்தமும்
அழைப்பித்துக் கலந்து விட்டு நீதி மண்டபம்
யானைப் பந்தி , குதிரை லயம், சேனா வீரரிருப்பிடம்
முதலியன கட்டுவித்து - கீழ் திசை வெயிலுகந்த
பிள்ளையார் கோயிலையும் தென் திசைக்குக்
கயிலாய பிள்ளையார் கோயிலையும், வட திசைக்குச்
சட்ட நாதர் கோயில் தையல் நாயகி
அம்மன் கோயில் சாலை விநாயகர் கோயிலையும்
அமைப்பித்தனர்"

நல்லூர் இராசதானி குறித்த சுருக்கமான அறிமுகமாக இப்பதிவு விளங்குகின்றது. தொடர்ந்து வரும் பிந்திய பகுதிகள் ஆழ அகலமாக இது பற்றி நோக்கவிருக்கின்றன.

மூலக்குறிப்புக்கள் உதவி: "யாழ்ப்பாண இராச்சியம்", தை 1992 - பதிப்பாசிரியர் கலாநிதி சி.க.சிற்றம்பலம்
புகைப்படம்: 2005 ஆம் ஆண்டு யாழ் சென்றிருந்த போது என்னால் எடுக்கப்பட்டது.

26 comments:

  1. பிரபா. இது காது வழி செய்தி தான்.. உந்த நல்லூர் கோயில் இருக்கிற இடத்தில் இஸ்லாமிய பெரியாரின் சமாதி இருந்ததாக கருத்தும் நிலவியது. எனக்கு தெரிய இஸ்லாமிய நண்பர்கள் வந்து உந்த கோயிலை தரிசித்து செல்ல கண்டிருக்கிறன்

    ReplyDelete
  2. சின்னக்குட்டியர்

    காது வழி வந்த செய்தி முறையான வரலாற்றாதாரங்களோடு மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

    அது குறித்த பதிவும் வரவிருக்கின்றது.

    ReplyDelete
  3. யாழ் கோட்டையை , நல்லூர்;மற்றும் பல சுற்றுவட்டாரக் கோவில்கள் உடைத்தே; போத்துக்கீசர் கட்டியதாகப் படித்தேன். இந்த இஸ்லாமிய விடயம் காதில் விழுந்த போதும் கட்டுக்கதையாக இருக்கலாம்
    என நினைத்தேன்.
    ஆதாரங்கள் உள்ள தெனில் அறிய ஆவல்.

    ReplyDelete
  4. வணக்கம் பிரபா அண்ணா!

    நல்லூரின் தொன்மை யாவரும் அறிந்ததே.
    நல்லூர் உற்சவத்தில் கலந்து கொள்ள முடியாவிடினும், 25 தினங்களும் விரதம் இருக்கும் எனது குடாநாட்டு நண்பர்கள், தாங்கள் கொழும்பிலிருந்தாலும் கந்தனை மறக்கவில்லை என்பதை காட்டும் போது பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  5. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ஆதாரங்கள் உள்ள தெனில் அறிய ஆவல். //

    யோகன் அண்ணா

    இன்னும் 22 தினங்களுக்குப் பதிவிடப் பல்வேறு வரலாற்று நூல்களை நுகர்ந்து பகுதி பகுதியாகத் தருப்போது இவை குறித்த விடயங்களை ஆழ அகலமாகத் தரவிருக்கின்றேன். நன்றி

    ReplyDelete
  6. //கோவையூரான் said...
    வணக்கம் பிரபா அண்ணா!

    எனது குடாநாட்டு நண்பர்கள், தாங்கள் கொழும்பிலிருந்தாலும் கந்தனை மறக்கவில்லை என்பதை காட்டும் போது பெருமையாக இருக்கிறது. //

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் கோவையூரான்.
    நான் தற்போது இருப்பது என் வாடகை தேசமான அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில்.

    ReplyDelete
  7. சட்டநாதர் கோயில் தான் நல்லூர் இராசதானியின் பிரதான கோவிலாய் இருந்ததென்றும் அப்போது அதன் பெயர் ஜனனாதஈஸ்வரம் என்றும் எங்கோ வாசித்த ஞாபகம். புத்தகங்களை கிளறி முடிஞ்சா எங்க வாசிச்னான் எண்டு பிறகு சொல்லுறன்.

    அதுபற்றியும் பதிவொண்டு போடுங்கோ.

    ஊரோடி

    ReplyDelete
  8. வணக்கம் பகீ

    22 தினங்களுக்குள்ளை சட்டநாதரையும் இயன்றளவில் தேடிப்பிடித்து கொண்டு வருவேன்.

    ReplyDelete
  9. நல்லூர் இராசதானியைப் பற்றி எழுதுவதற்கு நன்றி பிரபா. ஈழத்தின் வரலாற்றில் ஒரு பகுதியினை இதன் மூலம் அறியலாம் என்று எண்ணுகிறேன்.

    ஈழத்தின் வரலாற்றை அறிய எந்த வலைத்தளத்திற்குச் சென்றால் நல்லது என்று ஈழ நண்பர்கள் சொன்னால் மகிழ்வேன்.

    ReplyDelete
  10. உங்கள் பதிவின் மூலம் பல தகவல்கள் கிடைக்கிறது.

    நன்றி ;)

    ReplyDelete
  11. மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற எமது வரலாறுச்சின்னங்கள் பழுதடைந்துள்ளது.இதனை பாதுகாக்க யாழ் மக்கள் முன்வரவேண்டும்.
    கானா பிரபா அண்ணா! உங்கள் நல்லூர் பதிவை தொடர்ந்து எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. நன்றி அண்ணா . . .

    ReplyDelete
  13. // குமரன் (Kumaran) said...
    ஈழத்தின் வரலாற்றை அறிய எந்த வலைத்தளத்திற்குச் சென்றால் நல்லது என்று ஈழ நண்பர்கள் சொன்னால் மகிழ்வேன். //

    வணக்கம் குமரன்

    நான் ஈழ வரலாறு தொடர்பில் நூல்களையே பெரிதும் நம்பியிருக்கின்றேன். வலைத்தளங்கள் எல்லாவற்றையும் நம்பகரமானவை என்று பரிந்துரைக்கமுடியவில்லை. தகுந்த தளத்தை நான் கண்ணுற்றாலோ அல்லது வலைப்பதிவில் வரும் சகோதரர்கள் கண்ணுற்றாலோ அறியத் தருவோம். மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.

    //கோபிநாத் said...
    உங்கள் பதிவின் மூலம் பல தகவல்கள் கிடைக்கிறது. //

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பனே ;-)

    ReplyDelete
  14. //காண்டீபன் said...
    மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, இராசாவின் தோட்டம், பண்டார மாளிகை, பண்டாரக் குளம் போன்ற எமது வரலாறுச்சின்னங்கள் பழுதடைந்துள்ளது.//


    வணக்கம் காண்டீபன்

    என் அடிமனதில் தோன்றிய கவலையும் அதுதான். நம் வரலாற்றுச் சின்னங்கள் அதிக சிரத்தையோடு பாதுகாக்கப்படவில்லை என்பது கவலை.


    //மாயா said...
    நன்றி அண்ணா . . . //

    வருகைக்கு நன்றிகள் மாயா

    ReplyDelete
  15. நல்ல முயற்சி. பலர்ருக்கும் தகவல்களை கொடுக்கும் பதிவுகள் இவை.

    ReplyDelete
  16. மிக்க நன்றி விஜே, முடிந்தளவுக்கு எழுதுகின்றேன்

    ReplyDelete
  17. அண்ணை இந்த இணைப்பில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு உதவக்கூடும்

    http://www.geotamil.com/pathivukal/VNG_Nalluur_Rajadhani_2.htm

    நல்லைக் கந்தன் பற்றிய வரலாற்று நூலில் நான் வாசித்தபடி ஜமுனா எரிக்கு அண்மையில் தான் முன்னைய கோயில் இருந்தது என்றும்.தற்போதைய இடம் முஸ்லிம்கள் குடியிருந்த இடமென்றும் ஞாபகமிருக்கிறது.தவிர நல்லூர் கோவில் ஞானியொருவரின் சமாதி மேல் கட்டப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் மடாலயம் என்றே அழைக்கப்பட்டது

    இதே நேரம் நல்லூரோடு யாழ்ப்பாணச் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நூலகத்திலிருந்து தொடர்புடைய நூல்களுக்கான சுட்டிகள்

    http://noolaham.net/library/books/03/258/258.pdf

    http://noolaham.net/library/books/03/256/256.pdf

    ReplyDelete
  18. I have been to Nallur Kandasamy Kovil in 1976, when in school. I am from upcountry.

    Thanks for writing.

    ReplyDelete
  19. //alien_sl said...
    I have been to Nallur Kandasamy Kovil in 1976, when in school. I am from upcountry.
    //

    வருகைக்கு நன்றி நண்பரே

    உங்களைப் போன்ற வாசகர்களுக்கு இவை போய்ச் சேர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

    ReplyDelete
  20. கா.பி,
    நல்ல பதிவு. பதிவுக்கு மிக்க நன்றி.

    /* நல்லூர் (நல்ல ஊர்) என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடற்பாலது. */


    அறிய வேணும் எனும் ஆவலில் ஒரு சின்னக் கேள்வி. நல்லூரை எப்படிப் பிரித்து எழுதுவது?

    நீங்கள் நல்லூரை = நல்ல + ஊர் எனச் சொல்லியுள்ளீர்கள்.

    தமிழ் இலக்கண வகுப்பில்
    நல்லூர் = நன்மை + ஊர் எனச் சொல்லித் தந்த ஞாபகம். அதனால்தான் கேட்கிறேன். இரண்டு மாதிரியும் சொல்லலாமோ?!

    பூ எண்டும் சொல்லலாம் தம்பி சொன்ன மாதிரியும் சொல்லலாம் எண்ட மாதிரி:-))

    ReplyDelete
  21. வெற்றியண்ணை

    என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தமிழ் இலக்கணப்படி ல்+ஊ = லூ எனவே நல்லூர் தான் வரும், இலக்கணம் படிச்சவை வருகினமோ எண்டு பார்ப்பம்,

    ReplyDelete
  22. /* இலக்கணம் படிச்சவை வருகினமோ எண்டு பார்ப்பம், */

    இராம.கி ஐயாவுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். அவர் என்ன சொல்கிறார் எண்டு பார்ப்போம்.

    ReplyDelete
  23. இஈ ஐவழி யவ்வும் ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
    உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும்.

    என்று நன்னூல் சொல்கிறது. இதன்படி பார்த்தால் நன்மை + ஊர் என்பது ஒரு போதும் நல்லூர் என்று வருவதற்கு வாய்ப்பில்லை. நன்மையூர் என்றே வரவேண்டும். அதே போல நல்ல + ஊர் என்பதும் நல்லவூர் என்றே வரவேண்டும். நல்லவூர் திரிந்து நல்லூராயிருக்க வாய்ப்புண்டு. எனவே இல்க்கண ரீதியாக பார்த்தால் நல் + ஊர் என்பதே நல்லூர் என்பது சரியாகும்.

    ReplyDelete
  24. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னர், கலாநிதி முருகன் அவர்கள் ஒரு உரையாடலின்போது தெரிவித்தார் (www.tamilnatham.com இல் அவருடைய உரை போடப்பட்டிருந்தது); யாழில் 80 பிற்பகுதிகளில் தாம் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின்போது ஒரு தமிழ் அரசனுடைய (சரியான விபரங்களை மறந்துவிட்டேன்)உடலம் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவும், ஆனால் இலங்கை அரச தரப்பினர் அந்த அகழ்வினைத் தொடர்ந்து நடாத்த விடாது செய்துவிட்டதாகவும், அவ்விடத்திற்கு காவல்துறையினரையும் இராணுவத்தினரையும் அனுப்பி தம்மை அவ்விடத்திலிருந்து வற்புறுத்தலின் பேரில் அகற்றியதாகவும் தெரிவித்தார்... ஆயினும் அங்கு அன்று எடுத்த உடலத்தை யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்திருந்ததாகவும் ஆனால் இந்திய இராணுவத்தினர் அந்த உடலத்தை 'திலீபன்' அண்ணாவுடைய உடலம் எனத் தவறாகப் புரிந்துகொண்டு அழித்துவிட்டதாகவும் அவர் தனது உரையின்போது மேலும் தெரிவித்தார்.

    தமிழர் பகுதிகளில் சிறீலங்கா அரசால் எதுவித அகழ்வாய்வுகளுமே நடத்தப்படவில்லை என்றே கூற வேண்டும், மீறி யாரும் அகழ்வாய்வை நடாத்தினால் அதனையும் வற்புறுத்தலின்பேரில் நிறுத்தி விடுகின்றனர்.

    ReplyDelete
  25. வணக்கம் ஹரன்

    தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  26. ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியின்போது பெருங்கற்கால பொதுமக்கள் தாழியொன்று கண்டெடுக்கப்பட்டது. அதனுள்ளிருந்த பதப்படுத்தப்பட்ட பெண்ணொரவரின் சடலமே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் அமைந்திருந்த காட்சியறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்திய இராணுவம் யாழ்.பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்திருந்த வேளையில் இந்த உடலத்தையே திலீபனின் உடலம் எனத்தவறாகக் கணித்து உருக்குலைத்திருந்தனர். ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி கலாநிதி ஜேம்ஸ் தே.இரத்தினம் அவர்களதும் தனியார்களினதும் நிதி ஆதரவுடன் பேராசிரியர் இந்திரபாலாஇ பொ.இரகுபதி புஷ்பரத்தினம் போன்றோர் உள்ளிட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் ஆனைக்ட்டைகோ முள்ளிப் பகுதியில் மேற்கொண்டிருந்தனர். நிதிவசதியின்மையால் இத்திட்டம் தொடரப்படவில்லை.
    இந்தச் செய்தி ஹரன் அவர்களது பின்னூட்டத்தின் பாதிப்பினால்பதிவிடப்பட்டுள்ளது.

    ReplyDelete