Pages

Monday, June 25, 2007

கல்லடி



வழக்கமான மாலைப் பொழுதுகளில் ஒன்று அது, ஊர் மேச்சலுக்குப் போய்விட்டு நடு நிசிக்குச் சில மணி நேரம்தான் இருக்கும் நேரத்தில் வீடு வந்து சைக்கிளை ஸ்ராண்டில் நிறுத்திவிட்டு வாசலில் நிற்கும் அம்மாவின் முகத்தைப் பார்க்கின்றேன்.

"இண்டைக்கென்ன சாப்பாடு?" ராஜ்கிரண் தனமான என் வழக்கமான சுதியோடு கேட்கின்றேன்.
அம்மாவிற்கோ, இது தினத்திற்கும் நடக்கும் கூத்து என்பதை நல்லாவே தெரிஞ்ச ஆள் என்பதால், கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு
"பிற்று...! பிற்று..!. " என்கிறார்.

இரவுணவாகப் பிட்டுச் செயததைத் தான் அப்படி வேடிக்கையாகச் சொல்லி என் கோபத்தைச் சீண்டுகின்றார்.

"ஏனம்மா, உங்களுக்குப் புட்டு மட்டும் தானே செய்யத்தெரியும், வேற ஒண்டும் தெரியாதே? ஆத்திரத்தில் ஏசுகின்றேன்.

"எட தம்பி! உனக்கு இதொரு வாய்ப்பாடமாப் போச்சு, கோவிக்காமைச் சாப்பிடு, ஒரு பலகாரச் சாமான் வச்சிருக்கிறன், சாப்பிட்ட பிறகு தருவன்" என்று சமாதானப்படுத்துகின்றார்.

"ஐம்புலனையும் அடக்கப் பழக வேணும்" சாமி அறைக்குள் இருந்து யோகர் சுவாமியின் நற்சிந்தனையும் கையுமாக இருந்து சுவாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் என் அப்பாவின் அந்தக் குரல் இன்னும் வெறுப்பேற்றுகின்றது.

சாப்பிட்டு முடித்ததும், கள்ளப் பணியாரமாக சுவாமி அறைக்குள் பனையோலைப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த ஏதோ ஒரு பலகாரத்தை லஞ்சமாகத் தருகிறார் என் அம்மா. அது சிலவேளை அவரின் பள்ளியில் யாராவது ஒரு பிள்ளையின் பிறந்த நாள் கேக், அல்லது அரியதரமாகக் கூட இருக்கலாம். எல்லாம் சாப்பிட்டு முடிந்த பின் அம்மாவின் உபதேசம் தொடங்கும்.

" தம்பி! சாப்பாட்டுக்குச் சனம் அந்தரிக்கிற காலம் இது, கூப்பன் கடைப்பக்கம் போய்ப்பார், சனம் எவ்வளவு கஷ்டப்படுகிது, நாவை அடக்கவேணும், தினத்துக்கும் புதுச் சாப்பாடு என்னால செய்ய ஏலாது"

அதைக் காதில் வாங்காமல் ஏதாவது ஒரு ராணி காமிஸ்சை வாசித்துக்கொண்டிருப்பேன். சிலவேளை தனச்சித்தியோ, முத்துலிங்கமாமாவின் மனைவியோ, இரவு ஷ்பெஷலாகச் செய்த மஞ்சள் நிறத் தோசை, அல்லது அப்பம் கொண்டு வந்து"பிரபுவுக்கு குடுங்கோ, ஆசைப்பட்டுச் சாப்பிடுவான்" என்று அம்மாவின் ஆபத்பாந்தவர்களாகி விடுவார்கள். வார இறுதி நாட்களில், பள்ளிக்கூட விடுமுறைகளில் அம்மாவின் வித விதமான கைப்பக்குவம் கிட்டும்.

என்னுடைய அந்தப் பால்ய காலத்தில், அம்மா ரீச்சர், களைச்சுப் போய் வந்திருப்பா, கஷ்டப்படுத்தக் கூடாது என்ற நினைப்பெல்லாம் இருக்காது. ஒவ்வொரு நாளும் வித விதமான உணவு என் வாய்க்கு வந்தால் போதும். அம்மாவை அப்படிக் கஷ்டப்படுத்தியதன் பலனைத் தொடர்ந்த பத்துவருடங்களுக்குள்ளாகவே யுத்தம் சூடு பிடித்து, உணவு நெருக்கடியாக உருவெடுத்து அனுபவித்த கதையைச் சொல்ல இன்னொரு சந்தர்ப்பம் தேவை.
சரி இனி விஷயத்துக்கு வருகின்றேன்.
என்னுடைய பால்ய திருவிளையாடல்களைக் குறிப்பால் உணர்ந்தோ என்னவோ, மூன்று ஆண்டுகளுக்கு முன் தமீழீழ மகளிர் அமைப்பு நடாத்திய நூல் வெளியீட்டு விழாவில் முதற் பிரதி பெறும் இளைஞர்களில் ஒருவராக என்னையும் அழைத்திருந்தார்கள்.மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு பொறி தட்டியது. வேறொன்றுமில்லை, குறித்த அந்த நூலைப் பற்றிய ஒரு பார்வையாக இந்தப் பதிவை எழுதவேண்டும் என்ற ஆசையை இப்போது நிறைவேற்றுகின்றேன்.

"Recipes of the JAFFNA TAMILS" இதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர். புதுதில்லியில் உள்ள Orient Longman பதிப்பகத்தில்
பதிப்பிக்கப்பட்டு 148 பக்கங்களோடு 2003 ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கின்றது இந்நூல். அவுஸ்திரேலியாவில் வாழும்
ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் பேர்த்தி திருமதி ராணி தங்கராஜா திரட்டிய யாழ்ப்பாணத்து உணவுச் சமையல் விபரங்களை, மாமனிதர் எலியேஸரின் மருமகள் திருமதி நேசா எலியேஸர் தொகுத்திருக்கின்றார். இது முழுமையான ஆங்கில நூல் என்பதால்
பலரும் பயனடையும் விதத்தில் உதவிக் கையேடாக இருக்கும். ஆனால் இதில் இருக்கும் உணவுப் பதார்த்தங்களின் பட்டியலைப் பார்த்தால் தமிழில் கூட வந்தால், சுவைத்துப் பார்த்திராத பல உணவுப் பதார்த்தங்களை நம் தமிழர் பலரும் செய்து பார்க்க உதவியாக இருக்கும்.


திருமதி ராணி தங்கராஜா

திருமதி இராணி தங்கராஜா ஒரு இலக்கியப் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து இன்றும் நம் கலாசார விழுமியங்களை இறுகப் பற்றி வாழும் பெண் கவிஞர்.


















திருமதி நேசா எலியேசர்


















"I hope that this book recalls some of those memories, especially of the Jaffna Peninsula, ina meaningful way for the millions of Jaffana Tamils Flung all over the globe. The mention of "Karupani", or "Susiyam" or "pori Arisi Maa" brings a delighted twinkle to the eys of Tamils in faraway lands. " Ah, yes I remember my amma used to ...." and off they go into warm, enchanting tales of a Jaffna Childhood." இப்படியாகத் தன் முகவுரையின் ஒரு பகுதியில் குறிப்பிடுகின்றார் திருமதி நேசா எலியேஸர்.
திருமதி நேசா எலியேசர் பலவிதமான ஆங்கில சஞ்சிகைகளுக்கும் எழுதிவருபவர். அடக்கப்பட்ட பெண்ணிய சமூகத்துக்கான தன் குரலைப் பேனாவில் மட்டுமல்ல, செயலிலும் காட்டுபவர். "A Tale of Two journeys" என்ற சிறுவர் நவீனத்தையும் The Clever Woman's Companion" என்ற நூலையும் ஆக்கியிருக்கின்றார் திருமதி நேசா.


சமையற் குறிப்புக்கள் மட்டுமல்ல, பொருத்தமான படங்களும் பல இருப்பதனால், பெயர் மறந்து போன உணவுப் பதார்த்தங்களை நினைப்பூட்டிக் கொள்ள அவை உதவுகின்றன.



இந்த நூல் ஒன்பது பாகங்களாகப் பின்வருமாறு பிரிக்கப்பட்டு உணவுக் குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

1. Breakfast Dishes -

String Hoppers, Tomato Sothi, String Hopper Biriyani, Rice Flour Puttu, Raagi Flour, Semolina Puttu, Aalanggai Puttu, Sugar Puttu, Black Gram Puttu, Spinich Puttu, Tapioca Puttu,
Adai, Dosa, Ghee Thosai, Egg Thosai, Masala Thosai, Semolina Dosa, Wholemeal Flour Dosa,
Idli, Coconut Milk Porridge, Upma, Vegetable Masala Upma, Hoppers, Sugar Hoppers,

Egg Hoppers

2. Rice Dishes -
Yellow Rice, Sesame and Coconut Rice, Tamarind Rice, Tomato Rice, Curd Rice 1, Curd Rice 2, Brown sugar Rice, Mango Rice, Salted Rice porridge water, Tamarind porridge

3. Pachadis, Chambals and Chutneys -
Green Banana Flower Pachadi, Green Banana Pachadi, Green Banana skin Pachadi, Hibiscus Flower and Yoghut Pachadi, Giner Pachadi, Tomato Pachadi, Bitter Gourd and Yoghut Pachadi, Potato Pachadi, Mango and Yoghut Pachadi Cucumber and Yoghut Pachadi, Cucumber and Coconut milk Pachadi, Snake Gourd and Yoghut Pachadi, Okra Pachadi, Jackfruit Pachadi,
Indian Pennywort Leaves Pachadi, Indian Pennywort Chambal, Giner Chambal, Coconut Chambal, Green Chilli Chambal, Sesame Chambal, Hot Coconut Chambal, Onion Chutney, Pumpkin Chutney, Tomato Chutney, Date and Tomato Chutney, Chutney Podi, Thosai Podi

4. Vegetables -
Bitter Gourd curry, Drumstick curry, Long beans curry, Green Banana (Ash Plantain) white curry, Snake gourd white curry, Fried brinjal curry, Coconut milk brinjal curry, Green banana (ash Plantain) skin curry, Fried dal curry, Dry potato curry, Potato white curry, Okra (Ladies fingers) curry, Pumpkin curry, Yam curry, Bottle gourd white curry, Jackfruit curry, Long Beans and Jackfruit seeds curry, Beetroot curry, Breadfruit dry curry, Sundanggaai curry, Vegetarian Charakku curry, Mango curry, Garlic curry, Fenugreek seeds curry, Aviyal,
Mixed vegetable korma, Mashed Spinich, Hibiscus leaf varai, carrot varai, Potato fry, Jackfruit seed fry, Brinjal/Aybergine fry, Green banana (Ash Plantain) fry Tapiova fry, Plantain flower cutlets, Potato cutlets, Vegetable cutlers, Jackfruit seed cutlets.

5. Meat Chicken and Seafood -

Mutton Pirattal, Mutton fry, Dried Mutton slices, Chicken curry, Chicken pathiya curry, Chicken bones rasam, Crab curry, Crab varai, Crab chambal, Shark varai, Prawn varai, Fried squid, Dried fish chambal, Dried prawn savoury chambal, Prawn and tomato chutney,
fish curry, Fried fish, Sprats Theeyal

6. Achars, Pickles, and Vadahams
Mixed vegetable achar, Long bean achar, Bitter gourd achar, Aubergine/Brinjal achar, Jackfruit achar, Date achar, Kadambam achar, Lime pickle, Mango pickle, Bitter gourd vadaham, Margossa flower vadaham, Rice vadaham, Rice flakes vadaham, Butter milk chillies, Dried mango slices

7. Gifts of the Palmyra Palm
Palmyra root, Karupani kool, Palmyra root flour puttu, Spinach odiyal puttu, Sprats (nethali) odiyal puttu, Dried prawn odiyal puttu, Palmyra fruit drink, Pananggai paniyaaram, Pinaatu, Paani Pinaatu, Odiyal Dosa, Panangkilangu Thuvayal, Pulukodiyal laddu, Savoury Pulukkodiyal balls, Pulukkodiyal semolina laddu, Pulukkodiyal vadai, Palmyra plup thosai, Palmyra fruit payasam, Vatalappam, Pulukkodiyal alwa, Pulukkodiyal flour cookies, Palmyra fruit dodol, Palmyra fruit cake, Pulukkodiyal flour butter cake.

8. Palakarams and other Tea-time Treats
Black gram vadai, Spinach vadai, Bengal gram vadai, Potato bonda, Pal roti, Kolukkattai,
Mothagam, String hopper kolukattai, Pidi kolukkattai, Ariyatharam, Murukku, Chippi, Sitrundi, Paitham-urundai, Pahoda, Omapodi, Kaaraampuundhi, Miture, Semolina laddu, Rice flakes laddu, Black gram and rice flour porridge, Sesame seed sweet, Swwet sesames balls, Porivilaanggaai, Uudumaa Kool, Fried Sesame seed flour snack, Black gram and rice fried flour snack, Green gram and rice flour snack, Egg uluthamaa varuval, Bengal gram susiyam,
Potato alwa, Tapioca Thuvayal, Dodol, Coconut rock

9. Sweets and Desserts
Tapiova kool, Aadi kool, Kesari, Sago Payasam, Rice payasam, Vermicelli payasam, Green gram payasam, Fried string hoppers in syrup, Jaggery pudding, Purple yam pudding, Rock Sugar kool, Wood-apple cream


இப்படியாக ஒன்பது வகுப்புக்குள் இந்த உணவுகுறிப்புக்கள் பதியப்பட்டுள்ளன. வாசிக்கவே மூச்சு முட்டுது அல்லவா.
இவை தவிர மிளகாய்த்தூள் வகைகள், மற்றும் ஈழத்து உணவுப் பாவனைச் சொற்களின் விளக்கம், உட்படப் பல பகுதிகளோடு
விரிகின்றது.


ஒரு இலங்கை உணவகத்துள் நுளைந்து அங்கேயிருக்கும் உணவுப்பட்டியலைப் பிரித்தால் பாதிக்கு மேல் வட இந்திய தந்தூரி உணவு வகைகள் தான் இருக்கும். மேலே நான் குறிப்பிட்ட பட்டியலில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பதார்த்தங்கள் தான் இலங்கை உணவகம் என்று அடையாளப்படுத்தும் உணவகங்களிலேயே இருக்கும். எனவே இந்த நூல் எமது ஈழத்து உணவுக்கலாசாரத்தை மீள நிறுவதற்கான
அல்லது புலம் பெயர் வாழ்வில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு படிக்கல் என்றே கூறலாம்.

இந்த நூலை விரித்துப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் போது இன்னொரு இன்பமான அனுபவமும் கிட்டுகின்றது. நான் இதுவரை மேய்ந்த சமையற் குறிப்புப் புத்தகங்கள் வெறுமனே ஒப்புக்குச் உணவுப் பதார்த்தம் தயாரிக்கும் முறை பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கும்.
ஆனால் இந்த "Recipes of the JAFFNA TAMILS" என்ற நூலிலே ஆங்காங்கே பெட்டிச்செய்திகளில் நமது யாழ்ப்பாணத்துப் பாரம்பரியத்தில் குறித்த சில உணவுப் பதார்த்தங்களின் ஆளுமையை பழைய வரலாற்று, சம்பவச் செய்திகளோடு "S.Arumugam: Letters from Jaffna" என்ற பாங்கில் இடையிடையே சம்பவத் துணுக்குகள் பரவியிருப்பது இந்த நூல் வெறும் சமையற் குறிப்போடு நின்றுவிடாது நம் முன்னோர்களின் உணவுப்பழக்கம் பற்றியும் அறிந்துகொள்ள முடிகின்றது.

உதாரணத்திற்கு ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை தன் வசாவிளான் கிராமத்திலிருந்து, இலங்கையின் அடுத்த மூலையில் உள்ள ரத்தினபுரியில் உள்ள நிவிற்றிகொல பகுதியில் உள்ள சுப்பையா என்ற நண்பரைச் சந்திக்கச் சென்று களைப்பு நீங்க கூழுண்டு மகிழ்ந்த செய்தி ஒரு உதாரணம்.

ஆக மொத்தத்தில் Recipes of the JAFFNA TAMILS என்ற இந்த நூல், நம் தமிழரின் உணவுப்பழக்கம் குறித்த ஈடுபாடு உடையவர்களுக்கும், சமையற்கலை வல்லுனர்களுக்கும் ஓர் வரப்பிரசாதம் என்பதில் ஐயமில்லை.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே

குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

என்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பாடல், வரப்போகும் ஆடி மாதத்தைக் கட்டியம் கூறி வரவேற்பது என் நினைவுக்கு வருகின்றது.

2006, ஏப்ரலில் ஒரு நாட் காலை பலாலியில் இருந்து விமானமூலம் இறங்கி என் ஊருக்குப் போகின்றேன். எங்கள் வீட்டு வாசலில் அம்மா வழி மேல் விழி வைத்து என்னை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றார். என்னைக் கண்டதும்

"தம்பி! குளிச்சிட்டு வா, இண்டைக்கு பிரதோசம், நான் மச்சம் காய்ச்சக்கூடாது, இருந்தாலும் உனக்கு விருப்பமா இருக்கும் எண்டு சுரேசின்ர பெஞ்சாதியிட்ட சொல்லி இறால் பொரிச்சு வச்சிருக்கிறன்"

குளித்து முடித்துக் குசினிக்குள் போகின்றேன், சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன. சோற்றுடன் கொஞ்சமாக மட்டும் இறாலைப் போட்டுச் சாப்பிடுகின்றேன்.

"ஏன் தம்பி வடிவாப் போட்டுச் சாப்பிடன், நீ ஆசைப்படுவாய் எண்டு பெரிய இறாலாப் பார்த்து வாங்கினது" இது என் அம்மா.

"என்னவோ தெரியேல்லை அம்மா, இப்ப எனக்கு கனக்கப் பசிக்கிறேல்லை".

32 comments:

  1. வணக்கம் பிரபா .... அருமையான பதிவு.. நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை உணவகம் என்று பெயர் வைத்து இருக்கிறாங்கள் ஒழிய பராம்பரிய உணவு குறைவது தான்

    ReplyDelete
  2. பாரம்பரிய உணவுகள் எமது உணவகங்களில் இல்லை என்ற ஆதங்கம் சரி. ஆனால் பாதி உணவக காறருக்கு பாரம்பரிய உணவுகளில் பாதியை தெரியாது.
    அடுத்த பிரச்சனை வாடிக்கையாளர்.


    ஆடி பிறப்பு பட்டு எழுதி இருக்கிறீங்க. சரி ஆடி கூழுடைய படம் இங்க இருக்கு.
    http://viriyumsirakukal.blogspot.com/2007/06/blog-post_277.html

    ReplyDelete
  3. //சின்னக்குட்டி said...
    வணக்கம் பிரபா .... அருமையான பதிவு.. நீங்கள் சொன்ன மாதிரி இலங்கை உணவகம் என்று பெயர் வைத்து இருக்கிறாங்கள் ஒழிய பராம்பரிய உணவு குறைவது தான் //

    சின்னக்குட்டியர்

    நான் இங்கு பட்டியல் போட்ட பெரும்பான்மையான உணவு வகைகள் அடுத்த தலைமுறைக்கே தெரியாமல் போய்விடும். இதை நிவர்த்தி செய்ய உணவகங்கள் முன் வராவிட்டாலும் ஆசிய உணவுக்கண்காட்சி போன்று நமது பாரம்பரிய உணவுப் பதார்த்தங்களுக்கும் இருந்தால் நல்லது.

    ReplyDelete
  4. மட்டக்களப்பைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாழ்ப்பாணச் சமையல் மணத்தோட வந்திருக்கிறியள். நல்ல பதிவு.
    //ஒரு இலங்கை உணவகத்துள் நுளைந்து அங்கேயிருக்கும் உணவுப்பட்டியலைப் பிரித்தால் பாதிக்கு மேல் வட இந்திய தந்தூரி உணவு வகைகள் தான் இருக்கும்.// அவர்கள் என்ன செய்வது? அப்படி வட இந்தியர்கள் இங்கு வந்ந்து குவிகிறார்கள். இப்ப எங்கட சாப்பாட்டுக் கடைக்குப்போனால் தொண்ணூறு வீதமும் அவர்கள் தானே.

    ReplyDelete
  5. //வி. ஜெ. சந்திரன் said...
    ஆடி பிறப்பு பட்டு எழுதி இருக்கிறீங்க. சரி ஆடி கூழுடைய படம் இங்க இருக்கு//

    என்ன கொடுமை சார் இது,
    நீங்கள் காலையில கூழ்ப்பதிவு , நான் மாலையில கூழ்ப்பாட்டு (அவுஸ்திரேலிய நேரம்). படம் அருமை, ஆடிக்கு முந்தியே இரண்டு பேரும் முந்தீட்டம்

    ReplyDelete
  6. வெறும் றெசிப்பி மட்டும்தானா?

    ReplyDelete
  7. மத்த உணவு எல்லாம் இருக்கட்டும். பனங்காய், நுங்கு படம் போட்டு வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொள்கிறீர்களே. அவைகளைப் பார்த்தே எவ்வளவு நாட்களாயிற்று.

    இந்தப் புத்தகத்தை எங்கே எப்படி வாங்குவது என்று தேடினேன். Amazonலயே கிடைக்கிறதாம்.

    ReplyDelete
  8. //Kanags said...
    மட்டக்களப்பைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாழ்ப்பாணச் சமையல் மணத்தோட வந்திருக்கிறியள். நல்ல பதிவு.//


    வணக்கம் அண்ணா

    இது பிரதேசவாதப் பதிவல்ல ;-)
    நூலின் பெயரை ஒட்டிய தலைப்பு.

    இனிமேல் வட இந்திய உணவகங்களில் எங்கட சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்யவேணும். அங்கு தான் எங்கட ஆட்கள் அதிகம்
    ;-)

    ReplyDelete
  9. /ஒரு இலங்கை உணவகத்துள் நுழைந்து அங்கேயிருக்கும் உணவுப்பட்டியலைப் பிரித்தால் பாதிக்கு மேல் வட இந்திய தந்தூரி உணவு வகைகள் தான் இருக்கும்./

    இத்தொல்லை அமெரிக்காவிலும் உண்டு தொலைக்கும் இலங்கை இடங்களிலும் உண்டு (என்று கேள்வி)

    /ஒரு இலக்கியப் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து இன்றும் நம் கலாசார விழுமியங்களை இறுகப் பற்றி வாழும்/

    ஆஹாஹா!! :-)

    குறைந்தது ஈழத்துச்சமையல் என்று ஒரு புத்தகம், பதிவு இணையத்திலேறினால் சமைப்பவர்களுக்கு வசதி. (தூயாவின் கிச்சனை அவர் பெருப்பிச்சாலும் நல்லது)

    ReplyDelete
  10. வணக்கம் என் இனிய நண்பரே,

    நீங்கள் தேடித் தேடிப் பிடித்து, பின் சுவைத்து பின் அதே சுவை குறையாது எங்களுக்கும் உங்கள் பதிவுகளைத் தருவதில் நான் மகிழ்வடைகிறேன்.

    பிரபா அன்பான வேண்டுகோள் உங்களுடைய வலைப்பூவின் வடிவமைப்பை கொஞ்சம் மாற்றி பந்திகளை சீர் செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
    படங்களைக் கொஞ்சம் சிறிய அளவில் பிரசுரித்தால் என்ன..?

    இது என்னுடைய அன்புக் கோரிக்கை...கட்டளையல்ல:)

    அன்புடன்
    வசீகரன்

    ReplyDelete
  11. உங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்.. கொஞ்சம் கோச்சிகாம ஒரு எட்டு
    எட்டிட்டு போயிடுங்க. இங்க என்னோட ஏரியாவுல கூப்பிட்டு இருக்கேன் உங்களை.

    ReplyDelete
  12. பிரபா!
    என் தாய்க்கு புத்தகச் சமையல் தெரியாது.
    அரைச்ச குழம்பு, பால்கறி,சுண்டல், சொதி, பொரியல் இவ்வளவுதான்
    அறிவு தெரிந்ததில் இருந்து,30 வயதுவரை ஒரு நாளும் அலுத்ததில்லை.
    உணவகங்கள் இதைத் தரமுடியாது. குறிப்பிட்ட நேரத்தில் ,லாபமும் பார்ப்பதென்பது சிரமம்.
    மற்றும் சமையல் பொருட்கள் முன்பு போல் அல்ல!
    உருவமும் நிறமுமுண்டே தவிர, சுவை மணம் இல்லை.
    இக்குறிப்புகள் சேகரித்து வைத்தது.
    நன்று

    ReplyDelete
  13. கா.பி,
    நல்ல பதிவு. யாழ்ப்பாணத் தமிழில் எழுதியிருப்பதால் பதிவைப் படிக்கச் சுவைக்கிறது. கன பேச்சுவழக்குச் சொற்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    பதிவைப் படிக்கும் போதே வாயூறுது.

    /* The mention of "Karupani", or "Susiyam" or "pori Arisi Maa" brings a delighted twinkle to the eys of Tamils in faraway lands. " */

    ஆகா! ஐயோ, பொரி அரிசு மா, கருப்பனிக் கூழ்... ம்ம்ம்... நினைத்தாலே வாயூறுது...

    பி.கு:-
    ஆபத்பாந்தவர்களாகி = ??

    இச் சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே! என்ன பொருள்? எங்கள் ஊரில் இச் சொல் புழக்கத்தில் இல்லையோ தெரியாது. எதற்கும் எனது ஊர் தமிழ் பண்டிதரும் பிரபல தமிழ்மணப் பதிவருமாகிய வசந்தன் அவர்களைத்தான் கேக்கவேணும்.-:))

    ReplyDelete
  14. //சினேகிதி said...
    வெறும் றெசிப்பி மட்டும்தானா?//


    தங்கச்சி

    விட்டா சமைச்சுத் தரக் கேட்பியள் போல


    //நாகு (Nagu) said...
    இந்தப் புத்தகத்தை எங்கே எப்படி வாங்குவது என்று தேடினேன். Amazonலயே கிடைக்கிறதாம். //


    வணக்கம் நாகு

    நான் கடந்த ஆண்டு ஊருக்குப் போயிருந்தாலும் நுங்கைத் தவறவிட்டுவிட்டேன் ;-)

    அமேசனில் கிடைப்பது குறித்து அறியத்தந்தமைக்கு நன்றி, இந்தப் பதிப்பகத்தார் உலக அளவில் அறியப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  15. //பூச்சிமருந்தும் பொலிடோலும் said...
    இத்தொல்லை அமெரிக்காவிலும் உண்டு தொலைக்கும் இலங்கை இடங்களிலும் உண்டு (என்று கேள்வி)//
    வணக்கம் பூ.ம & பொ

    இலங்கைக்கும் இந்த வியாதி போயிட்டுது, Pizza வும் சைனீசும் தான் களை கட்டுது.


    தூயா பபாவின் சமையற் கட்டை ஒரு பல்தேசியக் கம்பனி மாதிரி நாங்கள் எல்லாரும் வாங்கி சமையல் கட்டை விருத்திசெய்வதும் நல்லது தான் ;-)

    ReplyDelete
  16. இடுகையும், பதார்த்தங்களும், பாடலும் மிக அருமை! பாடலை ரசித்துப் படித்தேன். இந்நாளின் அவசர கதியில் பழைய பலகாரங்கள் வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் இருக்கிறது.

    இப்படிப் படங்களைப் போட்டுக் காலை வேளையில் பசியை வேறு கிளறிவிட்டீர்கள். ஹ்ம்ம்...

    ReplyDelete
  17. //வணக்கம் வாருங்கள் :) said...
    உங்களுடைய வலைப்பூவின் வடிவமைப்பை கொஞ்சம் மாற்றி பந்திகளை சீர் செய்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.
    படங்களைக் கொஞ்சம் சிறிய அளவில் பிரசுரித்தால் என்ன..?

    இது என்னுடைய அன்புக் கோரிக்கை...கட்டளையல்ல:)//

    வனக்கம் வசீ

    விஜய் மாதிரி பஞ்ச் வசனமெல்லாம் பேசுறியள் ;-) வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றிகள். புது வீடு கட்டியதும் இந்த புளக்கரின் வடிவமைப்பு போல் தொல்லை இராத பதிவாகத் தருகின்றேன். நான் பாவிக்கும் கணினித் திரை அளவு பெரிது என்பதால் சில சிக்கல்கள் இருக்கின்றன.


    //சந்தோஷ் said...
    உங்ககிட்ட கேக்காம கொள்ளாம உங்களையும் எட்டு போட கூப்புட்டுடேன்..//

    என்னங்க சந்தோஷ்

    இப்பிடி ஒரு இடியைத் தூக்கிப் பேட்டுட்டீங்க, சரி, முயற்சி பண்றேன் ;-)

    ReplyDelete
  18. பிரபா
    நல்ல பதிவு

    ReplyDelete
  19. யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    //பிரபா!
    என் தாய்க்கு புத்தகச் சமையல் தெரியாது.
    அரைச்ச குழம்பு, பால்கறி,சுண்டல், சொதி, பொரியல் இவ்வளவுதான்
    அறிவு தெரிந்ததில் இருந்து,30 வயதுவரை ஒரு நாளும் அலுத்ததில்லை.//


    வணக்கம் அண்ணா

    செல்லப்பிள்ளையாக வளர்ந்ததால் அம்மாவின் கைப்பக்குவம் அப்போது உணரவில்லை, இப்பொது உணர்கின்றேன். சாப்பாடே இல்லாத காலம் பற்றி இன்னுமொரு பதிவில் தான் சொல்லவேணும்.

    இங்கே பட்டியலிட்ட பல பதார்த்தங்கள் உணவகங்களின் துரித சமையலுக்கு ஏற்றவை அல்ல என்ற கருத்தையும் ஏற்கின்றேன்.

    ReplyDelete
  20. Hi,
    Its very good.Please give the metod of making Sothi in tamil.

    ----Kannan

    ReplyDelete
  21. //ஒவ்வொரு நாளும் வித விதமான உணவு என் வாய்க்கு வந்தால் போதும். அம்மாவை அப்படிக் கஷ்டப்படுத்தியதன் பலனைத்//
    I also feel guilty.

    ReplyDelete
  22. //வெற்றி said...
    பி.கு:-
    ஆபத்பாந்தவர்களாகி = ??

    இச் சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே! என்ன பொருள்? //

    வாங்கோ வெற்றி கனகாலத்துக்குப் பிறகு சந்திக்கிறம். கருத்துக்களுக்கு நன்றி, கனடாவிலும் இந்தச் சாப்பாட்டு வகை கிடைக்காது போல. ஆபத்பாந்தவர் - ஆபத்து நேரத்தில் கைகொடுப்பவர்.

    //Chandravathanaa said...
    பிரபா
    நல்ல பதிவு //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அக்கா.

    ReplyDelete
  23. பார்த்தவுடன் வாயில் எச்சில் ஊறுகின்றது.இந்த மாதிரி சமையல் குறிப்பு கொடுக்கமால் எனக்கு சமைத்த உணவை கொடுக்க மாட்டீர்களா?ஹிஹி.
    இரசித்து படித்த பதிவு அண்ணா.

    ReplyDelete
  24. வணக்கம் பிரபா..
    தனாசித்தியின் கையால் சுட்ட அந்த மஞ்சள் தோசையை நீங்களும் சாப்பிட்டனிங்களோ? ஒவ்வொரு நாளும் புது புது சாப்பாட்டிற்கு சண்டை போடும் விசயம் உங்கள் ஊருக்கே தெரியாட்டியும் ஆயலாவர்களுக்கு நல்லாய் தெரிந்திருக்கு.
    மிகவும் பயனுள்ள பதிவு.
    ஊருக்கு சென்ற நேரம் நெங்கு கிடைக்கலையா? அது சரி பக்கத்து காணிக்கை நின்ற பணை எல்லாம் வெட்டி போட்டார்களே:(
    தாயகத்தில் எதை சாப்பிட்டாலும் ஒரு வித்தியாசமான சுவை இருக்கின்றது எல்லோ..
    பதிவுக்கு நன்றி பிரபா

    ReplyDelete
  25. //Anonymous said...
    Hi,
    Its very good.Please give the metod of making Sothi in tamil.//


    கண்ணன்

    எனக்கு வாசிக்கத்தான் தெரியும் செய்யத் தெரியாது, தூயா போல வல்லுனர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது

    //துர்கா|†hµrgåh said...
    பார்த்தவுடன் வாயில் எச்சில் ஊறுகின்றது.இந்த மாதிரி சமையல் குறிப்பு கொடுக்கமால் எனக்கு சமைத்த உணவை கொடுக்க மாட்டீர்களா?ஹிஹி.
    இரசித்து படித்த பதிவு அண்ணா. //

    பார்த்தும்மா பக்கத்தில இருக்கிறவங்க பயந்துடப்போறாங்க ;-)

    சாப்பாட்டின் தலைநகரில் இருந்து என்னிடமே சாப்பாடு கேட்கிறீங்களே?

    ReplyDelete
  26. //சாப்பாட்டுத் தட்டுக்கு மேல் உதயன் பேப்பர் விரிப்பில் பொன்னிறத்தில் பொரிக்கப்பட்ட இறால் துண்டுகள் குவிந்திருக்கின்றன.//

    UTHAYAN NEWS PAPER ITHUKA USE PANNIRINKA?

    ReplyDelete
  27. //நந்தியா said...
    வணக்கம் பிரபா..
    தனாசித்தியின் கையால் சுட்ட அந்த மஞ்சள் தோசையை நீங்களும் சாப்பிட்டனிங்களோ? //
    நந்தியா

    மஞ்சள் தோசை, பலகாரங்கள் எண்டு பலதும் பத்தும் இருக்கும்.
    வீட்டுக்கு வீடு வாசல் படி எண்டு வச்சுக்கொள்ளுவமன் ;-)

    //Anonymous said...
    UTHAYAN NEWS PAPER ITHUKA USE PANNIRINKA? //

    அண்ணை

    பழைய, வாசிச்ச உதயன் பேப்பரை எண்ணை சுவறுவதற்குப் பாவிக்கலாம் தானே? பிழையே?

    ReplyDelete
  28. //பழைய, வாசிச்ச உதயன் பேப்பரை எண்ணை சுவறுவதற்குப் பாவிக்கலாம் தானே? பிழையே?//

    palaiya NEWS paper endal ok thane. neer UTHAYAN Endu poddathala. Uthayan Paperrai Avamathithu vidir. Ummudaya Valipathivu mela MAANA NASDA VALAKKU podappadum.:-))

    ReplyDelete
  29. எனக்கும் ஒரு ஆசை. யாழ்பாணத்துக்குப் போய்....அங்கே சந்தோஷமா மக்களோட மக்களா சுத்திப் பழகி...அங்கவுள்ள சமையலைச் சாப்பிட்டுக் கொண்டாடனும்னு. வருவேன். கண்டிப்பா வருவேன்.

    இந்தப் புத்தகமும் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. சென்னை செல்கையில் வாங்க வேண்டும்.

    ReplyDelete
  30. //ஒரு இலக்கியப் பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து இன்றும் நம் கலாசார விழுமியங்களை இறுகப் பற்றி வாழும்//

    எனக்கும் உந்த விழுமியங்கள் விளங்கேல.
    என்ன சாமானெண்டு சொன்னா நாங்களும் கலைச்சுப்பிடிச்சு.. சே! கடைப்பிடிச்சுப் பாக்கலாமெல்லோ?;-)

    வெற்றி,
    எனக்கும் உந்தச்சொல் இணையத்தொடர்புக்கு முன் அறிந்ததா ஞாபகமில்லை. அறிஞ்சிருந்தாலும் பாவிச்சிருக்க மாட்டன் எண்டுதான் நினைக்கிறன். அந்தளவுக்கு இச்சொல் மங்கலாத்தான் கிடக்கு.
    ஆனா யாழ்ப்பாண்த்தில புழக்கத்தில இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கு. இல்லையெண்டு சொல் முடியாது. எங்கயாவது பழைய செபப்புத்தகங்களில கிடைக்கக்கூடும்.

    உப்பி பட்டம் குடுக்கிற விளையாட்டுக்களை நிப்பாட்டுங்கோ. வலைப்பதிவுக்குப் புதுசா வாறவையள் உண்மையிலயே என்னை அப்பிடித்தான் நினைக்கப்போகினம்.

    ReplyDelete
  31. வசந்தன்

    கலாசார விழுமியங்கள் என்பதைப் புதினமாப் பார்க்கத் தேவையில்லை, தொடர்ந்து காலம் காலமாக நமது பாரம்பரிய விடயங்கள் பலவற்றை தானும் கடைப்பிடித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் சொல்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவரோடு பழகியவர்களுக்குப் புரியும். அதன் ஒரு பகுதி தான் இந்தப் புத்தகமே.

    ஆபத்பாந்தவன் என்ற சொல் தெரியாமலே இது நாள் வரைக்கும் இருந்திருக்கிறியள்? இது சாதாரண புழக்கத்தில் ஈழத்திலும் வெளியேயும் உண்டு.
    பழைய புத்தகங்களைத் தேடத் தேவையில்லை.

    ReplyDelete
  32. // G.Ragavan said...
    எனக்கும் ஒரு ஆசை. யாழ்பாணத்துக்குப் போய்....அங்கே சந்தோஷமா மக்களோட மக்களா சுத்திப் பழகி...அங்கவுள்ள சமையலைச் சாப்பிட்டுக் கொண்டாடனும்னு. வருவேன். கண்டிப்பா வருவேன்.//


    வணக்கம் ராகவன்

    நீங்கள் எம் உறவுகளையும் , தாயகத்தையும் காணும் உரிய காலம் வரும் போது நானோ அழைத்துச் செல்ல ஆசை. புத்தகத்தை வாங்கிப் பாருங்கள் மிகவும் எளியமுறைப்படி விளக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete